வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
"சித்தன் அருள் - 2212 - நந்தியார் வட்டை பூ" தொகுப்பில் அந்த பூவின் மகத்துவத்தை பற்றி அகத்தியப்பெருமான் அருளியதை வெளியிட்டிருந்தோம். ஒரு அடியவர், தான் வெளிநாட்டில் வசிப்பதாகவும், இந்த பூ அங்கு கிடைப்பதில்லை எனவும், அவர் குழந்தைக்கு இப்பொழுது 6 புள்ளியில் சக்தி நிறைந்த கண்ணாடியை உபயோகிக்கிறார் எனவும் கூறியிருந்தார். ஆகவே, அகத்தியப்பெருமான் அருளிய வேறு ஏதேனும் மாற்று வழி உள்ளதா?" என கேட்டிருந்தார்.
சில விஷயங்களை கூறுகிறேன். பெரியவர்களும், குழந்தைகளும், நம் முன்னோர்கள் சொல்லி சென்ற, ஒரு சில நல்ல விஷயங்களை, அவரவர் வாழ்க்கையில் தினமும் நடைமுறைப்படுத்தி வந்தாலே, நல்ல பலன் கிடைக்கும்.
கண் பார்வை பாதிப்புக்கு காரணம், உடலுக்குள் மேல்நோக்கி செல்லும் அக்னி அல்லது சூடுதான். மேலும் குளிக்கும் பொழுது செய்கிற தவறுதான் முதன்மையான காரணம்! ஒருசில பேர் தவிர அனைவரும் முதலில் தலையில் நீர் ஊற்றுவார்கள். அது தவறு. சாதம் கொதிக்கவைக்கிற பானையில் மேலாக கஞ்சியும் அரிசியும் கொதிப்பது போல் தலையில் அக்னி கொதித்துக் கொண்டிருக்கும். நீர் தலையில் விழுந்ததும் அந்த அக்னி அங்கிருந்து விரட்டப்பட்டு கீழ் நோக்கி அழுத்தப்படும், அது நம் உடலில் கண்ணில் உள்ள மிக மென்மையான லென்ஸசை தாக்கும். எந்த பக்கம் லென்ஸ் வளைகிறதோ அதற்கு ஏற்ப பார்வை சரி செய்ய கண்ணாடி போடுகிறார்கள். அப்படியானால் சரியான முறை என்னவென்றால்,
குளிக்க தொடங்கும் முன், குளிர்ந்த நீரை ஒரு கை நிறைய எடுத்து வாய்க்குள் வைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் முதலில் காலில் நீர் ஊற்றி மேல் நோக்கி நீர் ஊற்றி வரவேண்டும். உடலுக்குள் இருக்கும் சூட்டை நீரானது மேல் நோக்கி விரட்டி வரும். தொண்டை பக்கம் நீர் வந்தவுடன் வாயிலிருக்கும் நீர் ஓடி வந்த அக்னியை வாங்கி கொள்ளும். பின்னர்தான் தலையில், முகத்தில் நீர் ஊற்றும் பொழுது மேலிருந்து அக்னி கீழ் இறங்கும், அதையும் வாயிலிருக்கும் நீர் உள்வாங்கும். கண்ணை தாக்க அக்னியே இருக்காது. கண் உள்ளிருந்து குளிர்ந்து விடும்.
மேலும் குழந்தைகள் உறங்கும் முன் அவர்கள் தலை உச்சியில், தொப்பிளில் சிறிது விளக்கெண்ணெய் தடவினால் இரவு முழுவதும் அவர்கள் தலைக்கு வரும் சூட்டை அது தணித்து விடும்.
வாரத்தில் ஒரு நாள் குழந்தைகளை உடல் முழுதும் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். வெளிநாட்டில் இருப்பவர்கள் இது சாத்தியம் இல்லை என்று சொன்னாலும், மனம் இருந்தால் மார்க்கமுண்டு.
உண்ணும் உணவில் காரத்தை தவிர்ப்பது அல்லது நிறையவே குறைத்துக் கொள்வது நல்லது. குடல் சூடாவதை தவிர்க்கலாம். குடல் சூடுதான் மேல் நோக்கி வேகமாக போகும்.
இவை அனைத்தும் பரீட்ச்சித்து பார்க்கப்பட்டு இங்கு கூறப்பட்டுள்ளது, மேலும் பல சித்தர்கள் வாழும் முறையில் சொல்லிப்போன விஷயங்கள் இவை.
அகத்தியப்பெருமானுக்குத்தான் நாம் அனைவரும் நன்றி சொல்ல வேண்டும்.
ஓம் ஸ்ரீ லோபா முத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
