வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
"சித்த மார்கத்தில்" நுழைந்து கவனித்த பொழுது, பல நேரங்களில் சித்தர்கள் உதிர்த்த அறிவுரைகள், உங்கள் அனைவருக்காக!
- அடுத்த தலைமுறைக்கு சேர்த்து வைப்பது மனித எண்ணம்; யாங்கள், அடுத்த பிறவிக்கு சேர்க்க சொல்கிறோம்.
- இளமையில் மனதை அடக்கி வாழ்ந்தால், பிற்காலத்தில் யோகநிலையில் உள்ள சந்ததி பிறக்கும்.
- வாழ்க்கை தோறும் தவறாகவே வாழ்ந்துவிட்டு, பிறவி தோறும் பாபங்களையே செய்துவிட்டு, குறுகிய காலம் நல்லதை செய்தால், இறை எவ்வாறு அருளும்.
- சித்தனை நாடினால், நன்மை உண்டு, ஆனால் எப்போது என்பது மறைபொருள்தான். மெல்ல மெல்லத்தான் நிம்மதி, சுகம், தனம், தேடி வரும்.
- விதியை மாற்றுவதற்கு எளிய வழி, தர்மம் ஒன்றுதான்.
- ஒருவனுக்கு, தர்ம சிந்தனை இருந்தால், அந்த தர்மமே அவன் எதிர்காலத்தை பார்த்துக் கொள்ளும்.
- ஒரு மனிதன் என்ன பிரார்த்தனை செய்தாலும், எத்தனை மந்திரங்கள் உரு ஏற்றினாலும், எத்தனை அபிஷேகங்கள், யாகங்கள் செய்தாலும் கூட, அவனிடம் உதவும் குணம் இல்லை என்றால், இறை அருளை பெற முடியாது.
- இறை நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும், உதவும் குணமும், தர்மமும் ஒரு மனிதனிடம் இருந்தால், அவன் இறையை தேட வேண்டியதில்லை, இறையே அவனை தேடி வரும்.
- எவனொருவன் ஆவினங்களை காத்து, கடைவரை குறையின்றி பராமரிக்கிறானோ, அவனுக்கு இதுவே கடைப்பிறவி.
- ஆவினங்களை பராமரித்து கரை சேர்த்தால், அவன் பன்னிரண்டு சிவாலயங்களை கட்டி, கலச விழா செய்த பலனை அடைவான்.
- பாவத்தில் உச்சகட்ட பாவம், கன்றை பால் குடிக்க விடாமல் செய்வது. இதற்கு பரிகாரமே கிடையாது.
- பல பசுக்கள், முனிவர்களின் அவதாரம்.
- கோடீஸ்வரனும், தரித்திரனும் சிவமே!
- மனை அமையா தோஷம் விலக, செவ்வாய்க்கிழமை, முருகனை அடை.
- தீவினை மட்டுமல்ல நல்வினைகளாலும் ஒரு ஆத்மா பிறவி எடுத்துக்கொண்டே இருக்கும். வட்டத்தை விட்டு வெளி வர, முக்தி அடைய, ஒவ்வொரு நொடியும் அனைத்தையும் இறைவனுக்கு சமர்ப்பித்து விடு.
- புண்ணியத்தை சேர்த்துக்கொண்டே இரு; பாபங்களை அனுபவித்து கழிக்க இறை உதவும்.
- இறை ஆசியுடன் துக்கத்தை களைந்து, மனிதன் ஞான தூக்கத்தை அடைய வேண்டும்.
- வயிற்று சூடு, முகத்தில் அணை கட்டும். (சைனஸ்)
- நல்ல நோக்கிலே செய்தாலும் கூட வசியம் எனப்படுவது ஒரு வகையான பாவப்பதிவை ஏற்படுத்திவிடும்.
- அறங்களில் மிக சிறந்த அறம், கொல்லாமையே.
- பலகோடி புண்ணியத்தை சேர்த்துக் கொண்டாலும், உயிர்க்கொலை பாவங்கள் நீர்த்துப் போகாது.
- பக்தியோடு ஒருவன் தன் இல்லத்திலிருந்து வழிபட்டாலும் சித்தர்கள் அங்கே வந்து காட்சி தருவார்கள்.
- ஒவ்வாமை நோய் கொண்ட ஏழை நோயாளிகளுக்கு அதிக மருத்துவ உதவிகளை செய்தால் கட்டாயம் அது உண்மையான சர்ப்பசாந்தி பூஜையாகும்.
- அமாவாசை தோறும் அன்னை காளிக்கு பூஜை செய்திட, குழந்தைகள் தீய வழியில் செல்லாமல் இருப்பார்கள்.
- கால பைரவர் வழிபாடு சந்ததி வாழ்வை சீர்படுத்தும்.
- காசி எனும் புருவ மத்தியில் மனதை நிலைநிறுத்தி இருந்தால் முக்தி; காசியில் இறந்தால் முக்தி என்பது தவறான சொல்லாடல்.
- செய்கின்ற தர்மங்கள் எல்லாம் மேலும் இறைவனருளைக் கூட்டி வைக்கும், முன்ஜென்ம பாவத்தை கழித்து வைக்கும், புண்ணியத்தை பெருக்கி வைக்கும், தேவையற்றதை எல்லாம் அது வகுத்து வைக்கும்.
- இது கடினம், இது கடினமல்ல. இது துன்பம், இது துன்பமல்ல. இது தேவை, இது தேவையல்ல என்ற நிலையையெல்லாம் தாண்டிய பிறகுதான் சித்தன் என்ற நிலை வாய்க்கும்.
- ‘நான்‘ என்ற தனித்தன்மை இல்லாது ஒழிந்துபோன பிறகுதான் அங்கே சித்தன் முளைக்கிறான்
- உலகத்தில் தோன்றிய முதல் மொழி, குழந்தையின் அழுகுரல்தானப்பா.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
