​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 17 August 2026

சித்தன் அருள் - 2280 - சித்தர் புலம்பல்கள் - 4 !


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

"சித்த மார்கத்தில்" நுழைந்து கவனித்த பொழுது, பல நேரங்களில் சித்தர்கள் உதிர்த்த அறிவுரைகள், உங்கள் அனைவருக்காக! 
  1. விதி விலகி வழிவிட திடமாக தர்ம பாதையில் நடந்து கொண்டே இரு.
  2. இவ்யுகத்தில் எண்ணங்களே கர்மாவை கூட்டுகிறது. பிரணவத்தில் இரு.
  3. மருத்துவம், பிரம்ம ஹத்தி தோஷத்தை கொண்டு தரும்.
  4. கொன்ற பாபம், நின்று தின்னும்.
  5. மூலஸ்தான அக்னி யாகம் பார்க்கும், ஒளபாஸனா அக்னி (சுடு)காட்டுக்கு போகும்.
  6. தர்மத்தின் வழி செல்லச் செல்ல, கர்மத்தின் வலி குறையும்.
  7. அறிவும் புத்திசாலித்தனமும் எங்கு தோற்கிறதோ அங்கு ஞானம் பிறக்கும்.
  8. மனிதன் நல்லதை எண்ணி, நல்லதை உரைத்து, நல்லதை செய்யும்பொழுது உண்மையான தெய்வீக ஞானம் பிறக்கும்.
  9. பற்று விடுதல் ஞானமாம்.
  10. அத்தனை பித்ரு தோஷங்களுக்கும் விலக - பசு மாட்டிற்கு உணவு, ஆலய குளத்து மீன்களுக்கு உணவு, ராமேஸ்வரத்தில் தில யாகம், சிறந்த வழி.
  11. வினைப்பயனை அனுபவித்து தீர்க்கலாம், தர்மத்தால் தீர்க்கலாம், அல்லது இறை வழிபாட்டால் தீர்க்கலாம்.
  12. நல் மன தன்மை கொண்டவனே, எதிரியின் நற்குணங்களை அறிவான்.
  13. ஏமாறுகிறவன், யாரையோ முன் ஜென்மத்தில் ஏமாற்றியிருக்கிறான் என்று பொருள்.
  14. ஏமாற்றுபவர்கள் - அவர்கள் பூர்வ ஜென்ம வினைகளால், பிறர் கர்ம கழிவுக்கு, உலக இயக்கத்திற்கு, கர்ம பரிவர்த்தனைக்கு என படைக்கப்பட்டவர்கள்.
  15. கால் நனைத்து உண்டு, உலர்ந்ததும் உணவை நிறுத்தி, உண்டெழுந்த பின் கால் கழுவுகிறவன், ஆரோக்கியவான்.
  16. கனவு ஒரு கர்மக்கழிவு.
  17. அடக்கத்துடன் செய்யும் தர்மம் பலமடங்கு ஒருவனை உயர்த்தும்.
  18. குண்டலினி என நமது சித்தர்களால் கூறப்பட்ட  இந்த பொருளுக்கு பல்வேறு பரிபாசை  பெயர்கள் உண்டு. அவைகள்; திருவடி, வன்னி, வாலை, வாசி, அகர உகரங்கள், லிங்கம், மயிர் பாலம், வெட்டாத சக்கரம், திருவாடுதுறை, புருவநடு, இரவு பகல் அற்ற இடம், இரவு பகல் தோன்றும்  இடம், சிற்சபை, ஓம், மூலாதாரம், மூல  துவாரம், துவாரகை, ஹரி துவார், ஈசன் நுழை  வாசல்,  ஊசி முனை வாசல், நெற்றிக்கண், முப்பு, நடராஜர், திருசிற்றம்பலம், சுழுமுனை, கரிமுகன், இன்னும் பல பெயர்கள் உள்ளன.
  19. நமது உடம்பில் சூரிய மண்டலம், சந்திரமண்டலம், அக்னி மண்டலம் என மூன்று மண்டலங்கள் உள்ளன. இவை முறையே பிங்கலை, இடகலை, சுழுமுனை ஆகிய நாடிகளால் குறிக்க படுகின்றன.
  20. உதயம், அஸ்தமனம், அமாவாசை, பௌர்ணமி, கிரகணம் ஆகிய நிகழ்ச்சிகள். அண்டத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சிகளை பிண்டத்திலும் செயல் படுத்துவதே நாம் செய்ய கூடிய ஆன்மிக பயிற்சிகளின் நோக்கம்.
  21. மனமனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு. மனமனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை.
  22. சக்தி(பார்வதி) என்பது குண்டலினி (மூலாதாரம்) வழியாக, ஆறு சக்கரங்களையும் கடந்து மேலே சிவத்துடன் கலப்பதே (அர்த்தநாரி) ஞான நிலை. ஜீவாத்மாவானது பரமாத்மாவுடன் கலப்பது (அத்வைதம்). இதையும் சிவலிங்கம் உணர்த்துகிறது.
  23. உடலுக்கு சிரசே பிரதானம் அதனால் தான் லிங்கத்தின் தலைக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.
  24. ஒரு வார்த்தை இவன் பேச மாட்டானா என அடுத்தவர் நினைக்க வாழ்பவனே சிறந்த வித்யார்த்தி!
  25. தர்ம சிந்தனை வந்திட பூர்வ புண்ணியம் வேண்டும்.
  26. தர்ம சிந்தனை பிறப்பிலே வர, அவன் முன்னோர்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
  27. சத்தியத்தையும் தர்மத்தையும் எவன் ஒருவன் விடாப்பிடியாக பிடித்துக் கொள்கிறானோ, அவனை தேடி இறை வரும்.
  28. சுவாசிப்பதுபோல், அன்னம் உண்பதுபோல், செயல்படுவது போல், தர்மம் இயல்பாக இருக்க வேண்டும்.
  29. நூறு மனிதர்களுக்கு நீ உதவினால், பத்தில் ஒரு பங்கு உண்மையாக இருக்கும், இது சித்தனுக்கும் தெரியும். ஆயினும் அந்த பத்தை பிடிப்பதற்கு, இந்த நூறை செய்ய வேண்டி உள்ளது.
  30. கொடுத்துக் கொண்டே போ. அதில் நல்லவை, தீயவை, நன்மை, தீமைகளை ஆராய வேண்டாம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!