​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 25 February 2016

சித்தன் அருள் - 274 - "பெருமாளும் அடியேனும்" - 42 - மலைக்கு கருடாழ்வாரின் பெயர்சூட்டு விழா!


அகத்தியப் பெருமான் அங்கு குழுமியிருந்த அனைவரையும் நோக்கி பேசத்தொடங்கினார். அத்தனை பேரும் பெருமாளுக்கும், அகத்தியப் பெருமானுக்கும் இடையில் நடந்த சம்பாஷணையின் சாராம்சம் என்ன? என்று அறிந்துகொள்ளும் ஆவலில் படபடப்புடன் இருந்தனர்.

"மாமுனியே சித்தர்களுக்கெல்லாம் தலையாய சித்தரே! இந்த விஷயத்தை தாங்கள், தங்கள்  திருவாய் மலர்ந்து இந்த தெய்வக் கூட்டத்தில் சொல்லிவிடுங்கள்" என்று அகஸ்தியருக்கு திருமால் அன்பு வேண்டுகோள் விட்டார்.

அகஸ்த்தியப் பெருமான் கூறத் தொடங்கினார்.

"திருமலையில் குடியிருக்கும் திருமாலின் அருளால், அவரது உத்தரவின் பேரில் இங்கு உடனேயே சில நிகழ்ச்சிகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த கோனேரிக்கரை புண்ணிய ஸ்தலத்தில் கலிபுருஷனின் கொட்டத்தை அடக்கி ஜனங்களைக் காப்பாற்ற கல்தெய்வமாக அவதாரம் எடுத்த திருபாற்கடலில் பள்ளி கொண்டிருந்த திருமால், பல யுகங்களாகத் தனக்கு பக்க பலமாக இருந்து வரும் "கருடாழ்வாரை"க் கெளரவப்படுத்துவதற்காக, நாரதர், முக்கண்ணன், பிரம்மாவின் விருப்பத்திற்கேற்ப இந்த ஏழுமலையின் ஒரு மலைக்கு "கருடகிரி" என்று பெயர் சூட்டி வாழ்த்துகிறார். இனி, இந்த மலைக்கு "கருடாத்திரி" என்ற பெயரே காலகாலமாக நிலவும். அந்த சிறப்புமிகும் நிகழ்ச்சி இன்னும் சில வினாடிகளில் இங்கு நடக்கும். அதைக் கண்டுகளிக்கவே திருமால் உங்களை எல்லாம் இங்கு வரவழைத்திருக்கிறார். மேலும் இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக திருமலையில் அனைத்து நிகழ்ச்சிகளும் பத்து நாட்களுக்கு மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். இங்கு குழுமியிருக்கும் உங்களுக்கும், இனி வந்து பத்து நாட்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கும் வேங்கடவரின் அருளும், ஆசிர்வாதமும் கிடைக்கும் என்று, திருமாலின் உத்தரவின் பேரில் அடியேன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

அந்த சபையில் அகஸ்த்தியர் பெருமாளின் விருப்பத்தை அறிவித்த பொழுது கரகோஷம் தாங்க முடியவில்லை. அத்தனை பேரும் பெருமாளை வணங்கி, அவர் அருள் பெற்றனர்.

மேலும் அகஸ்தியப்பெருமான் பேசலானார்.

"இன்னொரு செய்தி தெரியுமா? திருமலை வேங்கடநாதன் யாருடைய மனதையும் புண்படுத்த மாட்டார். வாழ்க்கை என்பது நல்லதும் கெட்டதும் கலந்தது. சோதனையும், சந்தோஷமும் கலந்தது. எத்தனை சோதனை வரினும், அவரை நம்பி அடைக்கலம் புகுந்துவிட்டால், நிச்சயம் அந்த ஒருவரின் வாழ்க்கையை இன்பமயமாக்கிவிடுவார். இங்கு குழுமியிருக்கும் அனைவரும் இந்த பெயர் சூட்டல் படலம் நிறைவு பெற்றதும், இந்த செய்தியை, திருமாலின் தூதுவராக சுமந்து சென்று எங்கெங்கோ வாழ்ந்து கொண்டிருக்கும், தவசிகள், முனிவர்கள், முனி புங்கவர்கள், பக்தர்கள், சித்தர்கள் அனைவருக்கும், தெரிவித்து இந்த பத்து நாட்களுக்குள் திருமால் பாதம் பணிந்து அவர் அருள் பெற்று செல்ல, அழைப்பிதழாக ஏற்றுக் கொள்ளும்படி, கூறிட வேண்டுகிறேன்."

இதை கூறி முடித்ததும் தான் தாமதம், மறுபடியும் மிகுந்த கரகோஷ ஒலி அந்த மலை எங்கும் எதிரொலித்தது.

அகத்தியப் பெருமான், திருமாலை நோக்கி வணங்கி,  "அடியேன், எனக்கிட்ட பணியை செவ்வனவே செய்து முடிக்க ஆசிர்வதித்ததற்கு மிக்க நன்றி" எனக் கூறி சிரம் தாழ்த்தி நின்றார்.

எல்லோரையும் நோக்கி எழுந்து வந்த பெருமாள், "கருடாழ்வாரை" அழைத்து ஆரத்தழுவி, ஒரு அரியாசனத்தில் அமர்த்தி, அங்கு குழுமியிருந்த முனிவர்களை நோக்கி புன்னகைக்க, வேத மந்திர கோஷம் முழங்க, கருடாழ்வாரின் திரு நாமத்தை, அந்த மலைக்கு சூட்டினார். பின்னர் அனைவருக்கும், தன் கரம் உயர்த்தி ஆசிர்வாதத்தை வழங்கினார். அது ஒரு கண் கொள்ளாக் காட்சி. பிறகு, அகஸ்தியப் பெருமானை நோக்கி தலை அசைக்க, அவர் கை கூப்பி வணங்கிய பின், அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் "பத்துநாள் கருடோத்சவம் திருமலையில்  நடக்கப்போகிறது" என்ற செய்தியை கொடுத்து அனைவருக்கும் சொல்லச் சொன்னார்.

அனைவரும் அகஸ்தியப் பெருமானின் உத்தரவை சிரம் மேற்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

அகத்தியரின் இந்த செய்தி, ஆதிசேஷனுக்கும் வந்து சேர்ந்தது.

"கருடாழ்வாருக்குப் பாராட்டு விழாவா? அதுவும் பத்து நாளைக்கு திருமலையில் வெகு விமரிசையாகக் கொண்டாடப் போகிறார்களாம். இந்திரலோகத்தைச் சேர்ந்தவர்களும், பூலோகத்து மகரிஷிகளும், முனி புங்கவர்களும் சேர்ந்து கொண்டாடப் போகிறார்களாம்" என்ற செய்தியைக் கேட்டதும், ஆதிசேஷன் அரண்டு போனார்.

செய்யாத தவறேதும் செய்துவிட்டோமோ என்று சஞ்சலப்படவும் செய்தார். சனீஸ்வரன் தன்னை தவறான வழிக்குக் கொண்டு செல்கிறாரோ என்ற பயமும் ஏற்ப்பட்டது. இதனால் வார்த்தைகள் வெளிவரவில்லை.

ஆனால், சனீஸ்வரனுக்கு உள்ளூர பயம்தான். எங்கே ஆதிசேஷனும் தன்னை விட்டு விலகிப் போய்விடுவாரோ என்று நினைத்ததால், ஆதிசேஷனை நெருக்கி அணைத்துக் கொண்டார்.

பின்னர், பேசத் தொடங்கினார்.

சித்தன் அருள்................. தொடரும்!

Thursday 18 February 2016

சித்தன் அருள் - 273 - "பெருமாளும் அடியேனும்" - 41 - பெருமாளின் அதிரடி நடவடிக்கை!


​"அது எப்படி சனீச்வர அண்ணா?" என்றார் ஆதிசேஷன்.

"பொறுமையாக கேள் தம்பி ஆதிசேஷா! நீ இப்பொழுது மனதளவில் என்னோடு இணைந்து விடுகிறாய். ஆனால் உடல் அளவில் திருமலையில் எழுமலையாக கோகர்ணம் முதல் ஸ்ரீசைலம் வரை விரிந்து அமர்ந்து, உன் நடுப்பகுதியில் திருமலை வேங்கடவன் உருவத்தை தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறாய்" என்றார் சனீச்வரன்.

"ஆமாம் அப்போது இதை நானே விரும்பி ஏற்றுக் கொண்டதுதானே? அதனால் எந்த பாதிப்பு வந்துவிடப் போகிறது?"

"இல்லை. இங்கேதான் ஒரு சூட்சுமத்தை திருமால் செய்துவிட்டார். இதில் நீயும் ஏமாந்து விட்டாய். பரவாயில்லை. இனி அந்த ஏழு மலையாக இருக்கும் நீ அந்த மலையைச் சுருக்கிக் கொண்டு சட்டென்று அந்த இடத்தை விட்டு வெளியே வந்துவிடு."

"வந்துவிட்டால்?"

"திருமால் பொத்தென்று ஏழாவது மலையிலிருந்து கீழே விழுவார். கோனேரி நதிக்கரையில் தான் அவர் பள்ளி கொள்ள வேண்டியிருக்கும். எப்படி என் யோசனை?" என்றார் சனீச்வரன்.

இதைக் கேட்டதும் ஆதிசேஷன் மௌனமானார்.

"என்ன ஆதிசேஷா? இது உனக்குப் பிடிக்கவில்லை என்றால் விட்டு விடு. உன்னை அடிமையாக்கி, கருடாழ்வாரைத் தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகிறாரே, அந்தத் திருமலைவாசன், அவன் ஒரு நயவஞ்சகன். என் தம்பி ஆதிசேஷன் இனியும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக இதைச் சொன்னேன்" என்று ஓரக்கண்ணால் ஆதிசேஷனைப் பார்த்தபடி சனீச்வரன் சொன்னார்,

"நீங்கள் சொல்வதில் தவறே இல்லை. இத்தனை நாள்களாகத் தாங்கிக் கொண்டிருந்த திருமாலை சட்டென்று உதறிவிட்டு வரச் சொல்கிறீர்களே, அதை நினைக்கும் போது சங்கடமாக இருந்தது. உடளவில் அங்கு இருந்து விட்டுப் போகிறேன். மனதளவில் உங்களோடு இருந்துவிடுகிறேனே" என்றார் ஆதிசேஷன்.

"பார்த்தாயா, பார்த்தாயா என்னுடன் வந்து சேர்ந்த சில வினாடிக்குள்ளேயே பேச்சில் வாக்கில் தடம் புரளுகிறாயே, உன்னை எப்படித் திருத்துவது என்றே புரியவில்லை. ம்ம்...ம்ம்ம். உன் தலையெழுத்து. காலாகாலமும் திருமாலுக்கு அடிபணிந்து கருடாழ்வாருக்குக் கட்டுப்பட்டுக் கிடக்க வேண்டும் என்றிருந்தால் அதற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது" என சனீச்வரன் பொய் கோபத்தோடு பேசினார்.

"கோபப்படாதீர்கள் சனீஸ்வர அண்ணா! இதெல்லாம் நான் எல்லாவரையும் அழைத்து என் நிலையைச் சொன்ன பிறகுதானே? அதை அப்புறம், பார்த்துக் கொள்ளலாம். ஆனால் ஒன்று. ஒருவேளை நான் திருமாலை விட்டு விலகி, கருடாழ்வாருக்கு எதிராக எதுவும் வெளியிடாமல் இருந்து திருமால் யாரையும் தூதுவராக என்னிடம் அனுப்பி வைக்கவில்லை என்றால், என் கதி என்னவாவது?" என்றார் ஆதிசேஷன்.

"அப்பாடி! இப்போதாவது புத்திசாலித்தனமாக ஒரு கேள்வி கேட்டாயே! அதுவே எனக்குப் போதும். அப்படியேதும் நாம் திட்டமிட்டபடி எதுவும் நடக்காவிட்டால் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை நானும் கலிபுருஷனும் திட்டம் தீட்டி உனக்கு எந்த விதச் சேதாரமும் இல்லாமல் காப்பாற்றுவோம். கவலைப்படாதே!" என்று ஆத்சேஷனுக்கு தைரியத்தை ஊட்டினார் சனீச்வரன்.

இந்த அத்தனை சம்பாஷணைகளையும் தன் ஞானக் கண்ணால் அறிந்து, மௌனமாக,  ஆனால் பதற்றமில்லாமல் திருமலைவாசன் கேட்டுக் கொண்டிருந்தார்.

"கலிபுருஷன் எவ்வளவு திறமையாகத் திட்டம் தீட்டி சனீச்வரன் துணை கொண்டு செயல்பட்டுவருகிறான். உண்மையில் இந்த கலிபுருஷனை இப்படியே விட்டுக் கொண்டிருந்தால் இது எங்கு போய் முடியும்? அத்தனை ஜீவ ராசிகளின் மனதிலும் விஷத்தை ஊன்றி, கலிகாலத்தை இப்பொழுதே பலம் பெற செய்துவிடுவான். இதை சற்றேனும் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கென நடவடிக்கை எடுத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தால் தான் சரிப்படும்" என்று யோசித்தவர், பின்னர் கருடாழ்வாரை அழைத்து 

"அகத்தியனை உடனடியாக அழைத்து வா!" என்றார்.

கருடாழ்வாரும், அகத்தியர் எங்கிருக்கிறார் என்று விசாரித்து தேடி வந்தார்.

அகத்தியப் பெருமானோ, ஒரு காட்டிற்குள் அமைந்த ஒரு தடாகத்தின் அருகே அமர்ந்து நாராயணனை நினைத்து பூசை செய்து கொண்டிருந்தார்.

சன்னமாக வீசிய தென்றலால், ஏதோ உணர்ந்து திரும்பி பார்க்க, அங்கே கருடாழ்வார் நின்றுகொண்டிருந்தார்.

"வாருங்கள் கருடாழ்வாரே! வந்தனம். நலம் தானே. எங்கே இவ்வளவு தூரம்! என்னை தேடியா? சொல்லிவிட்டிருந்தால், அடியேனே உங்களை தேடி வந்திருப்பேனே? உங்கள் முகத்தை பார்த்தால், வேங்கடவன் உத்தரவால், ஏதோ சேதி சொல்ல வந்தது போல் உள்ளது. அடியேனுக்கு உத்தரவிட்டால், உடனேயே சிரம் மேற்கொண்டு அதை செய்கிறேன்!" என்றார்.

"அகத்தியப் பெருமானே! அடியேன் நலம். ஏழுமலையில் தான் எதுவும் எப்பொழுது எப்படி நடக்கும் என்று தெரியவில்லை. வேங்கடவனின் உத்தரவை தங்களிடம் கூற வந்திருக்கிறேன். வேறு விஷயங்கள் ஒன்றும் இல்லை. வேங்கடவர் உங்களை உடனேயே அழைத்து வரச் சொன்னார். வாருங்கள் போகலாம்" என்று கைகூப்பிய படி கருடாழ்வார் தெரிவித்தார்.

"அடடா! வேங்கடவன் அழைத்து வரச்சொன்னாரா? இப்பொழுதே புறப்படுகிறேன். சற்று முன் வரை அவருக்குத்தான் பூசை செய்துகொண்டிருந்தேன். எப்படிப் பட்ட பெரும் பாக்கியம். வாருங்கள் கருடாழ்வாரே! இப்பொழுதே செல்லலாம்" என்று கூறி நாராயணனுக்கு செய்து கொண்டிருந்த பூசை நிறைவு செய்தபின், புறப்பட்டார்.

இருவரும், மலையில் நடக்கும் விஷயங்களை அளவளாவி பேசிக் கொண்டே செல்லவும், தூரத்தில் கலிபுருஷன் மறைந்திருந்து கவனித்துக்கொண்டிருந்தான்.

திருமாலின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று தெரிந்து கொள்ள அவ்வளவு ஆசை.

கருடாழ்வாரைத்தான் பிரிக்க முடியவில்லை. ஆதிசேஷனை சனீச்வரன் துணையுடன் வேங்கடவனிடமிருந்து பிரித்தாகிவிட்டது என்ற சந்தோஷம்.

வேக வேகமாக வந்து பெருமாள் முன் கை கூப்பி, சிரம் தாழ்த்தி, தன் வந்தனத்தை தெரிவித்தார், அகத்தியப் பெருமான்.

"வாருங்கள் அகத்தியரே! நலம் உண்டாகட்டும். தங்களால் ஒரு முக்கியமான வேலை ஒன்று நிறைவேற வேண்டியுள்ளது. அதனால் தான், விஷயத்தை சொல்லாமல் தங்களை இங்கு வரவழைத்தேன்" என்றார் பெருமாள் புன்னகை பூத்தபடி.

"உத்தரவிடுங்கள் வேங்கடவரே! தங்கள் அனுக்ரகத்தால் சிரம் மேற்கொண்டு செய்கிறேன்." என பவ்யமாக கை கூப்பியபடி நின்றார் அகத்தியர்.

எல்லோரும் பெருமாள் என்ன உத்தரவிடப் போகிறார் என்று கேட்பதற்காக ஆவலுடன் காத்திருந்தனர்.

பெருமாளோ, மௌனமாக அகத்தியரை பார்த்துக் கொண்டிருந்தார். மௌனத்தின் அர்த்தத்தை புரிந்து கொண்ட அகத்தியர், கை கூப்பி கண் மூடி மிகுந்த ஸ்ரத்தையுடன் நின்றார்.

இருவருக்கும் இடையில் எந்த சம்பாஷணையும் நடை பெறவில்லை.

சற்று நேர அமைதிக்குப் பின் வேங்கடவர்,

"இதுதான் எமக்கு நீர் செய்ய வேண்டிய வேலை. உடனேயே அதற்கான நடவடிக்கைகளை தொடங்கிவிடும்" என்று உத்தரவிட்டார்.

சுற்றி இருந்த அனைவருக்கும், நாரதரையும் சேர்த்து, ஒன்றும் விளங்கவில்லை.

எல்லோரும் அகத்தியர் என்ன பேசப்போகிறார் என்று காத்திருந்தனர்.

"தன்யனானேன் அடியேன்! இதோ இப்பொழுதே அதற்கான வேலைகளை தொடங்கிவிடுகிறேன்" என்று உரைத்தார்.

சித்தன் அருள்.............. தொடரும்!

Sunday 14 February 2016

அந்த நாள் >> இந்த வருடம் (2016)


அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அகத்தியப் பெருமானின் "சித்தன் அருளை" வாசித்து வரும் அடியவர்கள், அகத்தியப் பெருமான் குறிப்பிட்ட தினங்களில், நாடி வாசித்த மைந்தனை, கோடகநல்லூர், நம்பிமலை, பாபநாசம், கரும்குளம், திருச்செந்தூர் என்று பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, இறை, சித்த அனுபவங்களையும், ஆசிர்வாதங்களையும் பெற்றுக் கொடுத்ததை, நாம் அனைவரும் அறிவோம். அதில் மறைமுகமாக "அந்த நாள், இந்தநாள்" என்று அகத்தியப் பெருமான் பல இடங்களில், குறிப்பிட்டதை கவனித்திருக்கலாம். 2015ம் ஆண்டு பல அகத்தியர் அடியவர்களும், அந்தப் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று அருள் பெற்றது நினைவிருக்கலாம்.

நம் அனைவருக்குமே, "அந்த நாள்" இந்த வருடம், எப்போது வருகிறதோ, அன்று, அங்கு சென்று இருந்து அவர்களின் ஆசிர்வாதம், செம்மையான வாழ்க்கைக்காக பெற்றுக்கொள்ள வேண்டும், என்கிற எண்ணம் இருக்கும். உங்களின் அந்த இனிய எண்ணைத்தை பூர்த்தி செய்வதற்காக, இந்த வருடம் "அந்த நாட்களை" தெரிவு செய்து இங்கே தருகிறேன். குறித்து வைத்துக்கொண்டு, அங்கெல்லாம் சென்று, அவர் அருள் பெற்று வருமாறு, வேண்டிக்கொள்கிறேன்.

நம்பிமலை:- (இறைவனும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருக்க, அகத்தியப் பெருமான் நம்பிமலை பெருமாளுக்கு 200 வருடங்களுக்கு ஒருமுறை செய்கிற பூசையை செய்த நாள்)

12/08/2016 - வெள்ளிக்கிழமை - சுக்லபக்ஷ தசமி திதி மதியம் 02.02 முதல், அனுஷம் நக்ஷத்திரம் அன்று இரவு 08.03 வரை

பாபநாசம்:- (நதிகள் எல்லாம் அகத்தியப் பெருமானுடன் இருந்து அன்று தீர்த்தமாடியவர்கள் அனைவருக்கும், அவர்கள் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் புண்ணியம் கொடுத்த நாள். நவக்ரக தம்பதிகள் ஆசிர்வதித்த நாள்)

13/08/2016 - சனிக்கிழமை - சுக்லபக்ஷ ஏகாதசி திதி மதியம் 03.31 முதல், கேட்டை நக்ஷத்திரம் இரவு 10.03 வரை.

திருச்செந்தூர்:- (ஓதியப்பர், அகத்தியர், அனுமன் ஆகிய மூவரும் சேர்ந்து இருந்த நாள். அதில், முருகர் அனுமனுக்கு அன்று அனுமனின் நட்சத்திரம் ஆனதால், அவரை ஆரத்தழுவி, நல்வாழ்த்து தெரிவித்த நாள். இன்றும் எல்லா மாதமும் அனுமன், அவரது நட்சத்திரத்தன்று திருசெந்தூரில் அன்று மாலை வந்து முருகரின் அருள் பெற்று செல்கிறாராம்.)

14/08/2016 - ஞாயிற்று கிழமை - சுக்லபக்ஷ த்வாதசி திதி மதியம் 04.43 முதல், மூலம் நட்சத்திரம் பகல் 11.38 வரை.

ஒதிமலை ஓதியப்பர் பிறந்த நாள்:- (போகர் கூற்றின் படி, ஓதியப்பர் ஆவணி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். ஓதியப்பரின் பிறந்த நாளை அபிஷேக ஆராதனைகளுடன் கொண்டாடுகிற நாள். சித்தர்கள் அனைவரும் அன்று அங்கே ஒன்று கூடி, ஓதியப்பரை தரிசனம் செய்து, பின்னர் 90 நாட்களுக்கு அங்கேயே தங்கி இருக்க தொடங்குகிற நாள்.) 

29/08/2016 - திங்கள் கிழமை - த்வாதசி திதி மதியம் 04.02 வரை, பூசம் நட்சத்திரம் பகல் 11.17 முதல் மறுநாள் பகல் 11.06 வரை.

கோடகநல்லூர்:- (எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள். தாமிர பரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள். அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள்.)

12/11/2016 - சனிக்கிழமை - ஐப்பசி மாதம் சுக்லபக்ஷ த்ரயோதசி திதி அன்று இரவு 12.33 வரை, ரேவதி நட்சத்திரம் அன்று இரவு 08.28 வரை. (உத்திரட்டாதி நட்சத்திரம் முதல் நாள் இரவு 9.52க்கு, த்வாதசி திதியில் முடிந்துவிடுவதாலும் "த்ரயோதசி" திதிக்கு முக்கியத்துவம் கொடுத்து ரேவதி நட்சத்திரமாயினும் "சனிக்கிழமை" தெரிவிக்கப்பட்டுள்ளது. தெய்வீக விஷயங்களுக்கு திதிக்குத்தான் முக்கியத்துவம்.) 

அகத்தியர் அடியவர்களே! மேல் சொன்ன இந்த நாட்களை குறித்து வைத்துக் கொண்டு, இங்கு தெரிவிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று, இறை அருள், அகத்தியர் அருள் பெற்று நலமாக வாழ்ந்திட வேண்டிக் கொள்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகதீசாய நமஹ!

Thursday 11 February 2016

சித்தன் அருள் - 272 - "பெருமாளும் அடியேனும்" - 40 - ஆதிசேஷனுக்கு சனீஸ்வரனின் உத்தரவு!


​"விதி" என்பது வலிது.  அது யாரையும் விட்டுவிடாது. இறைவனுக்கு மாத்திரம் அது விதிவிலக்கு என்பதெல்லாம் உண்மையல்ல. என்பதை எத்தனையோ புராணங்கள் எடுத்துக் காட்டியிருகின்றன.

நமக்கெல்லாம் ராகு-கேதுக்களால் பிரச்சினை என்று வந்தால், உடனே நாகலிங்கத்திற்கு அர்ச்சனை செய்து வழிபடுவோம்.  பிரார்த்தனை செய்வோம்.

ராகு-கேதுவுக்கு அதிபதியாகிய ஆதிசேஷனுக்கே பிரச்சினை வந்தால்? இப்போது சனீச்வரன் தூண்டுதலின் பேரில் ஆதிசேஷனும் தன் புத்தியை கொஞ்சம் இழந்து கொண்டிருந்தான் என்று சொல்வதை விட, முற்றிலும் தன்னை இழந்துவிட்டான் என்று தைரியமாகச் சொல்லலாம்.

சனீஸ்வரனுக்கு மிகப்பெரும் மகிழ்ச்சி.

கருடனைத்தான் பெருமாளிடமிருந்து பிரிக்க முடியாமல் போயிற்று. குறைந்த பட்சம் ஆதிசேஷனையாவது திருமாலிடமிருந்து பிரித்து வைக்க முடிந்ததே என்ற சந்தோஷம் இருந்தது.

"சனீச்வர அண்ணா! நான் இப்போது என்ன செய்ய வேண்டும்? உடனடியாகச் செய்கிறேன்" என்று உணர்ச்சி பொங்கக் கேட்டார் ஆதிசேஷன்.

"நிறைய காரியங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால்..........." என்று இழுத்தார் சனீச்வரன்.

"என்ன ஆனால்?"

"ஒன்றுமில்லை, கருடாழ்வாரும் முதலில் இப்படித்தான் சொன்னார். ஆனால் சட்டென்று மாறி, திருமால் பக்கம் சென்று விட்டார். அதே போல் ஆதிசேஷனாகிய நீயும் ஏன் குணம் மாறிவிடமாட்டாய் என்ற சந்தேகம் வந்தது" என்றார்.

சனி பகவான் சொல்லி முடிப்பதற்குள் ஆதிசேஷனுக்கு வந்ததே கோபம். "உஷ்! உஷ்!" என்று சீறினார்.

"என்னை மிகத் தவறாக எண்ணிவிட்டீர்கள். நான் தன்மானத்தை மிகவும் நேசிப்பவன். என்னையும் கருடாழ்வாரையும் ஒன்றாக எண்ணி ஒப்பிட்டுப் பார்த்ததற்காக மிகவும் வருந்துகிறேன்" என்று உணர்ச்சி போங்க ஆதிசேஷன் சொன்னார்.

இதைக் கேட்டதும் "பரவாயில்லை! ஆதிசேஷன் கோபத்தின் உச்சகட்டத்தில் இருக்கிறார். நிச்சயம் பெருமாளை விட்டு வெளியே வந்துவிடுவார். பின்னர் திருமாலின் கதி அதோ கதிதான்" என்று எண்ணி மனதிற்குள் சந்தோஷப் பட்டுக் கொண்டார் சனிபகவான். பிறகு மெல்ல ஆதிசேஷனை சமாதானப் படுத்தினார்.

"தம்பி ஆதிசேஷா! எனக்கேற்பட்ட அனுபவம்தான் இப்படிப் பேசவைத்தது. போனது போகட்டும். எதையும் மனதில் வைத்துக் கொண்டு வருந்தாதே! அடிக்கடி உணர்ச்சி வயப்படுவது நல்லதல்ல. முடிந்தால் என்னைப் போல் மௌனமாக இருக்க முயற்சி செய்" என்று ஆதிசேஷன் முதுகைத் தட்டிக் கொடுத்து அவரைக் குளிர்ச்சியாக மாற்றினார்.

சனீஸ்வரனின் இந்த அரவணைப்பு அதிசேஷனுக்கு மிகவும் இதமாக இருந்தது. தங்கக் கிண்ணத்தில் பாலை அருந்திக் கொண்டே ஆதிசேஷன் சனீச்வரன் சொல்வதைக் கேட்டார்.

"நீ இன்று முதல் திருமாலை விட்டுவிட்டதாகவும், இனிமேல் திருவேங்கடவனுக்கு சேவை சாதிக்கப்போவதில்லை என்றும், எல்லாத் தேவர்களுக்கும், கந்தர்வர்களுக்கும், முனிபுங்கவர்களுக்கும் தெரியப் படுத்து" என்றார் சனீச்வரன்.

"அப்படியே ஆகட்டும் அண்ணா!" என்றார் ஆதிசேஷன்.

"இந்த தகவலைக் கேட்டதும் திருமலை வேங்கடவன் அதிர்ச்சி அடைவார். பின்னர் உன்னைச் சமாதானப்படுத்த பலரை தூது அனுப்புவார், வருகின்ற தூதுவர்கள் உன்னிடம் தேனொழுகப் பேசி உன் எண்ணத்தை அடியோடு மாற்றவும் கூடும்."

"அதுதான் என்கிட்டே நடக்காது. நான் முடிவெடுத்தது, முடிவெடுத்ததுதான். என்னை யாராலும் மாற்ற முடியாது" என்று கர்ஜித்தார் ஆதிசேஷன்.

"சரி! சரி! அப்படி திருமாலால்  அனுப்பப்பட்ட தேவதூதர்களிடம் ஒரு கோரிக்கையை விடு" என்றார் சனீச்வரன்.

"என்ன கோரிக்கை அண்ணா?"

"நான் மறுபடியும் திருமலையில் குடியிருக்கும் வேங்கடவனுக்கு தொடர்ந்து பணிவிடை செய்ய வேண்டுமென்றால் முதலில் கருடாழ்வார், திருமாலை விட்டு நிரந்தரமாக விலகவேண்டும் என்று கூறு" என்றார்.

"நல்ல கோரிக்கை அண்ணா. அந்த கருடாழ்வார் திருமாலை விட்டு விலகினால்தான் நான் நிம்மதியாக இருக்க முடியும். இதை அப்படியே திருமால் தூதுவர்களிடம் சொல்லிவிடுவேன். பிறகு?"

"இன்னும் இருக்கிறது ஆதிசேஷா! ஏதோ திருமால் உன்னிடம் உயர்ந்த பற்று கொண்டு திருமலையில் உன்னையே ஏழுமலையாக மாற்றி உன்மீது ஆனந்தமாக அமர்ந்து கொண்டு இருக்கிறாரே, இது ஓர் அடிமைத் தொழில் போல் இல்லையா? எத்தனை காலம் தான் நீ இதை தாங்குவாய்? எனவே இன்று முதல் திருமலையில் மலையாகத் தோற்றமளிக்கும் நீ அந்த இடத்தைவிட்டு சட்டென்று அகன்றுவிடவேண்டும்" என மிகப் பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார் சனீச்வரன்.

சித்தன் அருள்.................... தொடரும்!

Tuesday 9 February 2016

அகத்தியப் பெருமானின் "ப்ராஜெக்ட்" - வாருங்கள், ஒன்று சேருவோம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சில தினங்களுக்கு முன் ஒரு அகத்தியர் உத்தரவை கூறி, அதில் எல்லோரும் பங்குகொள்ள வாருங்கள் என்று "சித்தன் அருளில்" அழைப்பு வந்தது நினைவிருக்கும்.

ஏராளமான அகத்தியர் அடியவர்கள் அதில் பங்கு கொள்ள விரும்பி தங்கள் முகவரியை அனுப்பியிருந்தனர். இதை நடைமுறைபடுத்துகிற அடியவர்கள் இருவரும் அனைவருக்கும் "மந்திரம் DVD"ஐ அனுப்பிக் கொண்டிருகின்றனர். கூடிய விரைவில் உங்களுக்கு வந்து சேரும். சற்று தாமதித்தாலும் நிச்சயமாக அது உங்களை வந்து சேரும்.

முதலில் இதை சென்னையில் மட்டும் நடைமுறைபடுத்தி பார்த்து, பின்னர் மற்ற மாவட்டங்களுக்கும்/மாநிலங்களுக்கும் விரிவு படுத்தலாம் என்று நினைத்து, சென்னையில் உள்ளவர்கள் முதலில் விருப்பத்தை தெரிவியுங்கள். மற்ற அகத்தியர் அடியவர்களுக்கு பின்னர் வாய்ப்பு அளிக்கப் படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அகத்தியர் அடியவர்கள் இருவரின் விருப்பத்தின் பேரில், இன்று உங்களுக்கு மற்றுமோர் செய்தி.

  1. மற்ற மாவட்டங்கள், மற்ற மாநிலங்கள், வெளிநாட்டில் உள்ள அகத்தியர் அடியவர்களும் இப்பொழுது விண்ணப்பிக்கலாம். பாரதத்திற்குள் மட்டும் "மந்திரம் DVD" அனுப்பி வைக்கப்படும்.
  2. வெளிநாட்டில் வசிப்பவர்கள் விண்ணப்பித்தால் கூகிள் "டிரைவில்" சேமித்துவைக்கப்பட்ட தொடர்பு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து டவுன்லோட் பண்ணிக்கொள்ளலாம்.
அதே போல் மந்திரம் DVD கிடைத்தவுடன் ஒரு மெயில், DVD கிடைத்தது என தெரிவித்தால் நல்லது. இவர்கள் அனுப்பிவைத்துவிட்டு உங்களுக்கு கிடைத்திருக்கும் என்று இருப்பார்கள். அது உங்களை வந்து சேராமல் இருந்தால், தகவல் தெரிந்தால்தான், அவர்களால் விசாரிக்க முடியும்.

அதே போல், மந்திரம் அடங்கிய DVD கிடைத்தவுடன் அதை எத்தனை பதிவுகள் வேண்டுமானாலும் எடுத்து நீங்கள் விரும்பும்  கோவில்களுக்கும், உங்கள் வீட்டிற்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பயன்படுத்தக் கொடுக்கலாம். அதில் எந்த கட்டுப்பாடும் இல்லை. அப்படி கொடுப்பது ஒரு இலவச முயற்சியாக மட்டும் இருக்க பார்த்துக் கொள்ளுங்கள்.

எங்கும், அகத்தியர் உத்தரவின் பேரில், அந்த மந்திரங்கள் முழங்கி இந்த உலகம் சுத்தப்படுத்த படவேண்டும் என்பதே இந்த முயற்சியின் விருப்பம்.

மேலும், DVDஐ கொண்டு சேர்த்து, இதன் தாத்பர்யத்தை அது சேரும் இடத்தில் தெரிவிப்பதே நமக்கு இடப்பட்ட வேலை. அதை ஒலிக்கச் செய்வது அகத்தியப் பெருமானின் அருளில் உள்ளது.  ஆகவே, பெருமாள் கோவிலில், சிவபெருமான் மந்திரங்கள் போடமாட்டார்களே என்கிற கேள்விகள் நமக்குள் வேண்டாம். அதை அகத்தியப் பெருமானிடம் விட்டுவிடுவோம். 

வாருங்கள், அகத்தியரின் உத்தரவை, அவர் அருளுடன் எல்லோரும் ஒன்று சேர்ந்து செயல்படுத்துவோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

Thursday 4 February 2016

சித்தன் அருள் - 271 - "பெருமாளும் அடியேனும்" - 39 - ஆதிசேஷன் தவறாக உணருதல்!


"ஆதிசேஷா! பூலோகத்திலுள்ள மனிதர்கள்தான் நன்றியில்லாமல் இருக்கிறார்கள் என்று எண்ணிவிடவேண்டாம். தேவலோகத்திலும் அப்படிப்பட்ட சூழ்நிலை வந்து வெகு நாள்களாயிற்று. இதை இன்னும் ஆதிசேஷன் புரிந்து கொள்ளவில்லை என்று எண்ணும் பொழுது எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை" என்று சனீச்வரன் தன் வாய் எண்ணத்தை ஆதிசேஷன் மீது செலுத்தினார்.

"தாங்கள் சொல்வது எனக்கு எதுவும் விளங்கவில்லை" என்றார் ஆதிசேஷன்.

"ஆதிசேஷா! நீ சதாசர்வகாலமும் திருமால், திருமால் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாயே, அந்தத் திருமால் உன்னை இருட்டறையில் தள்ளிக் கொண்டிருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் உன்னை ஒரு நாகரீக அடிமையாக வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் உண்மை" என்றார் சனீச்வரன்.

சனீச்வரன் ஆதிசேஷனுக்கு மேலும் தூபமிட்டார். அதுமட்டுமல்ல, இதுவரை "தாங்கள்-நீங்கள்" என்று அழைத்த சனீச்வரன் இப்போது ஆதிசேஷனை ஒருமையாகவே பேச ஆரம்பித்தார்.

சாதாரணமாக இருந்தால் ஆதிசேஷன் சீறிப் பாய்ந்திருப்பார். ஆனால் அப்போதுள்ள சூழ்நிலையில் ஆதிசேஷன் பெட்டிப் பாம்பாக அடங்கி விட்டார். காரணம் அஷ்டமச்சனி ஆரம்பித்துவிட்டது என்பதுதான் உண்மை.

"திருமால் அப்படி செய்வார் என்று நம்பவில்லை சனீஸ்வரரே"

"ஆதிசேஷா! உன்னையும் திருமாலையும் பிரிப்பதற்கா நான் இதைச் சொன்னேன்? எனக்கு வேறு வேலை இல்லையா? இப்பொழுது ஒன்று சொல்கிறேன் கேள். நானோ சனீச்வரன். நீயோ ராகு-கேது அம்சம். நம் இருவர் எண்ணமும் செயலும் எப்போதும் ஒன்று போல்தான் இருக்கும் இல்லையா?"

"ஆமாம்"

"இதுவரை நமக்குள் ஏதாவது சண்டை சச்சரவு வந்திருக்கிறதா? சொல் பார்க்கலாம்?"

"இல்லை! சனீஸ்வரரே! இல்லை!"

"நாம், பூலோக மனிதர்களை ஞான வழிக்கும் தெய்வீக வழிக்கும் கொண்டு வரத்தான் பிரம்மாவின் கட்டளைப்படி அவர்களுக்கு அவ்வப்போது துன்பம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இல்லையா?"

"ஆமாம். இதில் என்ன சந்தேகம்?"

"அப்படியிருக்க நாம் இருவரும் சகோதரர் போல்தானே? இதை ஏற்றுக் கொள்கிறாயா?"

"நிச்சயமாக ஏற்றுக் கொள்கிறேன் சனீஸ்வரரே!"

:"சனீஸ்வரரே என்று சொல்ல வேண்டாம். "சனீச்வர அண்ணா" என்று கூறு!"

"அப்படியே ஆகட்டும்"

"மிக்க மகிழ்ச்சி! ஆதிசேஷா! என்னை என் உடன் பிறந்த சகோதரனாக ஏற்றுக் கொண்டாயே, அதுவே எனக்குப் போதும். இதை விட எனக்கு வேறு என்ன பாக்கியம் வேண்டும்?" என்று சனீச்வரன், ஆதிசேஷனைக் கட்டிப் பிடித்து கண்ணீர் விட்டார்.

இது அன்பின் அடையாளம், ஆனந்தக் கண்ணீர்தான் என்று ஆதிசேஷன் எண்ணினார். இதன் மூலம் அவருக்கு அஷ்டமச்சனி மிக நன்றாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது என்று திருமால் ஞானதிருஷ்டியால் எண்ணிக் கொண்டார்.

"ஆதிசேஷா! இப்போது நான் சொல்வதை மிக நன்றாக எண்ணிப்பார். என் சகோதரன் கஷ்டப்படுவதை நான் விரும்பவில்லை. திருமால் உன்னை ஓர் அடிமையாகத்தான் எண்ணிக் கொண்டிருக்கிறார். கருடன் மீது அமர்ந்து அவனுக்கு உயர்பதவி கொடுத்த திருமால், அந்தக் கருடன் காலில் உன்னைக் கட்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார். உன்னை இதைவிடக் கேவலப்படுத்த வேறு யாரால் முடியும்?"

"சனீஸ்வரரே! அவருக்குக் குடையாகப் பல யுகங்கள் நான் தலை தூக்கி நிற்கிறேனே"

"உண்மை! காலடியில் மிதிக்கின்ற திருமால், உன் மடியில் தலைவைத்து படுக்கையாக வைத்து, வெயில் படாமல், மழைபடாமல், உன் தலையைப் பாதுகாப்பாக மாற்றி சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் இல்லையா?"

ஆதிசேஷன் மௌனமாக நின்றார்.

"இல்லையா என்பதைவிட அடிமையாக நசுக்குகிறார் என்பதுதான் உண்மை. இதை இனிமேலாவது பகுத்தறிவுச் சிந்தனையோடு நீ உணர வேண்டாமா?" என்று ஒரு கொடிய விஷத்தை ஆதிசேஷனுக்கே ஊட்டினார், சனீச்வரன்.

ஆதிசேஷன் இதை யோசிக்கலானார்.

"இப்போது புரிகிறதா ஆதிசேஷா! திருமால் உன்னைத் தலை தூக்கவிடவில்லை. அது மட்டுமா? உனக்குப் பரம விரோதி யார்? கருடன்தானே! கருடனை துணைக்கு வைத்து, உன்னை இங்கும், அங்கும் நகரவிடாமல் பயமுறுத்துகிறார். நீ என்றைக்காவது தலை தூக்கி சுதந்திரமாக ஓட முடிய நேரிட்டால், அன்றே உன்னை, கருடனைக் கொண்டு கொத்திப் போடவும் திட்டமிட்டிருக்கிறார். இதை எல்லாம் நீ என்றைக்காவது உணர்ந்து பார்த்திருக்கிறாயா?" என்று மேலும் ஆதிசேஷனைத் தூண்டிவிட்டார், சனீச்வரன்.

சற்று நின்று யோசித்துப் பார்த்த ஆதிசேஷனுக்கு, சனீச்வரன் சொன்னது எல்லாம் முற்றிலும் உண்மை என்றுதான் தோன்றிற்று.

"இப்போது நான் என்ன செய்யவேண்டும் சனீச்வர அண்ணா?" என்று சனீஸ்வரனின் கையைப் பிடித்துக் கொண்டு நன்றி உணர்வோடு கண்கலங்கக் கேட்டார் ஆதிசேஷன்.

"ஒன்றும் செய்ய வேண்டாம். எப்போது உன் மீது திருமால் சந்தேகப்பட்டு, அவதூறாகப் பேசிவிட்டாரோ, இனிமேல் நீ திருமாலைவிட்டு, குறிப்பாக திருமலையை விட்டு முற்றிலுமாக வெளியே வந்துவிடு" என்று சனீச்வரன் சொன்னான்.

ஆதிசேஷனுக்கும் அது நியாயம் எனப்பட்டது.

பெருமாள் தூரத்திலிருந்து, நடக்கிற அத்தனை விஷயங்களையும் கவனித்துக் கொண்டிருந்தார்.

சித்தன் அருள்............. தொடரும்!