​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 30 January 2014

சித்தன் அருள் - 161 - நம்பிமலை - புளியமரம்!

அப்படிப்பட்ட சித்தத்தன்மை அடைகின்ற பாக்கியம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. இந்த சித்தத் தன்மை இதுவரை சதுரகிரியில் கிடைத்ததில்லை. அதுதான் ஆச்சரியம். சதுரகிரியில் எத்தனையோ ஆச்சரியங்கள் நடக்கிறது, நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் நடக்கப் போகிறது. ஆனால் சித்தத்தன்மை அடையவேண்டும் என்று எல்லொருக்குமே ஆசை. எல்லோருக்குமே, உடனே சித்தனாக வேண்டும், நினைத்ததை சாதிக்கவேண்டும், தன்னை எல்லோருமே மதிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அது இயல்பு. தப்பில்லை. உயர்ந்த நிலைக்கு ஆசைப்படுவது தவறே கிடையாது. ஆசைப்பட்டால் தான் வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியும். ஆசை படாமல் இருந்தால் வாழ்க்கை வீணாகிவிடும். அதில் எப்படி என்றால், பாம்பு சீறவேண்டும் ஆனால் கடிக்ககூடாது. அது போல் ஆசை படவேண்டும், ஆனால் அதற்காக, மற்றவர்களை மன வருத்தப் படச் செய்யவோ, துன்புறுத்தவோ, அதையும் உடலாலோ, உள்ளத்தாலோ ஏற்படுத்தக் கூடாது. பிறர் சொத்தை அபகரிக்கக் கூடாது. பிறர் மனைவியைவஞ்சிக்ககூடாது. குழந்தைகளை திட்டக்கூடாது. யாரையும், எவரோ என்று தவறாக எண்ணிக்கொண்டு பேசக்கூடாது. அவர்கள், எல்லோருக்குமே சித்தத்தன்மை இருக்கும் என்று புரிந்து கொள்ளவேண்டும். அந்த தன்மையை உண்டாக்குகிற புனிதமான இடம், இந்த இடம் தான்., இதே நேரத்தில் தான்.

சற்று முன் சொன்னேனே, ஆங்கோர் புளியமரத்துக்கு அடியில், ஒரு 414 சித்தர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னேனே, அத்தனை சித்தர்களும் இங்கு வந்து நம்பியை தொழுதுவிட்டு, நம்பிமலையை விட்டுச் செல்லாமல், ஆசையோடு, முக்கண்ணனையும் தரிசிக்கவேண்டும் என்று காத்திருப்பார்கள். ஆகவே சித்தர்கள் ஏன் தங்குகிறார்கள் தெரியுமா? அடிக்கடி முக்கண்ணன் இங்கு வந்து அளவளாவிவிட்டுச் செல்வதால், இங்கு வந்து முக்கண்ணனை தரிசித்துவிட்டுச் செல்லலாமே என்று தான், அந்த சித்தன் இட்டு, நட்ட மரம் தான் அந்த புளியமரமடா. சித்தன் அந்த மரத்துக்குள் இருக்கிறான். அந்த மரத்துக்குள் உயிராக இருக்கிறான், வேராக இருக்கிறான், ஆணிவேராக இருக்கிறான். அந்த புளிய மரமே சித்தனடா!

[நம்பிமலை - புளியமரம்]

அந்த விநாயக சித்தனுக்கும் அந்த புளிய மரத்துக்கும் சம்பந்தம் உண்டு. விநாயகன் என்பது கேது என்று ஏற்கனவே சொன்னேன். அவனிடம் படிக்க முடியாது என்பதால், அவன் சொன்னான். "ஏகுக இந்த மலையில். தங்குக இரவில்" என்று அசரீரி வாக்காக சொன்னான். அதுவரை அகத்தியன் கூட அவனை பார்த்து வியந்துகொண்டிருந்தேன். எத்தனை மலைகளை சுற்றி வந்திருக்கிறான் எத்தனை கட்டங்களை தாண்டி வந்திருக்கிறான். அத்தனையும் தாங்கும் இந்த தைரியத்தோடு அவன் அமர்ந்திருக்கிறான் என்று சொன்னால், முன் ஜென்மத்தில், மிகப் பெரிய சித்தனாக இருந்து, சிறந்த வழிகாட்டியாக இருந்து, தோளாக இருந்தவன் தான் இந்த தங்கராசு என்பவன். முன் ஜென்ம தொடர்பு இருந்ததால் தான் அவன் பக்கத்தில் அமர்ந்திருக்கிறான். அவனுடைய பரிவு பெற்றுவிட்டால், கேதுவினுடைய பரிபூரண ஞானம் கிடைத்துவிடுகிறது. கேது என்பது ஞானகாரகன் என்று பெயர். அந்த ஞானம் அவனுக்கு இயல்பாகவே வந்துவிட்டது. வந்திருக்கிறான். அல்ல, குருவே அவனை நாடி வந்திருக்கிறான். அதுதாண்டா ஆச்சரியம். இப்படிப்பட்ட புனிதமான சம்பவங்கள் உங்கள் ஒவ்வொருவருக்கும் நடக்கத்தான் போகிறது. நான் சொன்னேனே, புளிய மரத்துக்கு கீழே இருக்கிற சித்தர்கள் எல்லாம் இப்பொழுது ஒவ்வொன்றாக வெளியே கிளம்புகிறார்கள் என்று. எதற்காக? உன்னை பயமுறுத்துவதற்காக அல்ல, சித்த லீலைகளை காட்டுவதற்காக அல்ல. இந்த மலையை சுற்றி ஒரு முறை வந்து சுவாசித்துவிட்டு இறங்கி விடுவார்கள். அந்த புனிதமான நாள் தான் இந்த நாள். அதை அன்றைக்கே, அப்பொழுதே சொல்லியிருக்க வேண்டும். ஏதோ ஞாபகத்தில், அகத்தியன் எங்கெங்கோ சென்றோ, உலகத்தை நோக்கியோ, கரும்குளத்தை நோக்கி சென்று விட்டேன் பார். அதுதான். அப்பொழுதுதான் சித்தர்கள் ஞாபகம் சற்று குறைந்துவிட்டது. இவர்கள் எல்லோருமே, அகத்தியனை வணங்குபவர்கள் தான். அவர்களும் இப்பொழுது வலம் வந்து இந்த நம்பியை தரிசனம் செய்துவிட்டு, ஆனந்தமாக செல்வார்கள். அவர்கள் தரிசனம் செய்து மூச்சு விடுவார்கள். அந்த மூச்சு விடுகின்ற தன்மை இங்கு பன்னீர் போலவே தெளிக்கும். அதில் பன்னீர் வாசனை அடிக்கும். அந்த வாசனைகள் மிக அற்புதமானவை. அதை யார் ஒருவன் உடல் தேகத்தில் பட்டு விட்டாலோ, அவனுக்கு எந்தவித குட்ட நோயோ கடைசி வரை, அவன் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கோ வராது. இதெல்லாம் தெய்வ ரகசியங்களடா. அகத்தியனுக்கு என்னவோ மனதில் தோன்றிற்று, இன்று தான் சொல்லவேண்டும் என்று.

வட்டப் பாறையில் அமர்ந்து கொண்டு அன்றொருநாள், இதை எல்லாம் விளக்கலாம் என்று எண்ணியிருந்தேன். இதையே, வட்டப்பாறையாக மாற்றிக் கொண்டேன். ஏன் என்றால், இந்த வட்டப்பாறைக்கு அங்குள்ள தங்கராசு அழகான விளக்கம் அதை சொன்னான். வட்டப்பாறையில் கடா வெட்டுவதாகச சொன்னான். அகத்தியன் கேட்டுக் கொண்டிருந்தேன். நான் சொன்னேனே, ஞாபகம் இருக்கிறதா? வட்டப்பாறை என்பது பலிகளை கொடுக்கிற இடம்தான். அந்த வட்டப்பாறையில் பக்கத்தில் அமர்ந்து கொண்டு, வானில் வெண்ணிலா வட்டமாக சுற்றி வரும்பொழுதுதான் தென்றல் காற்றோடு அழகாக அமர்ந்து கொண்டு நானும் 17 சித்தர்களும் அமர்ந்திருக்க, மனித சித்தர்கள் எல்லாம் நேர் எதிரில் அமர்ந்திருக்க, நிறைய கேள்விகளை எல்லாம் உங்களுக்குள் பரிமாறிக் கொள்ளலாம். இந்த மாதிரி அதிசய நிகழ்ச்சி 1540 ஆண்டுகளுக்கு முன் தான் நடக்கும் என்று சொன்னேன். அதற்கு முன்னோட்டமாக ஒத்திகை பார்க்கத்தான் உங்களை எல்லாம் வரவழைத்திருக்கிறேன். இது பற்றிய விவரம் பின்னால் நான் உரைப்பேன். அந்த வட்டப்பாறையை சொன்னது உண்மை. வட்டப் பாறையில் பலி கொடுப்பதெல்லாம் உண்மை. அங்கொரு மகா பத்திரகாளி இருந்தது உண்மை. அதயெல்லாம் கண்டு ஆனந்தப்பட்ட போதுதான், இங்குள்ள முக்கண்ணனும், நம்பி நாயகனும், மற்றவர்களும் சேர்ந்து, பொது மக்களை பயமுறுத்துவதற்காக இப்படி வேஷம் போடக்கூடாது. கொடிய வேஷம் போடக்கூடாது, சாந்தி, சாந்தி, சாந்தி என்று, அங்கு அற்புதமான ஒரு சந்தனத்தை, இந்திரனால் கொடுக்கப்பட்ட சந்தனத்தை, மூன்று நாட்கள் விடாமல் அரைத்து, அந்த இடத்தில் ஒட்டி வைத்த பிறகு, அந்த பத்திரகாளி சாந்தியானாள். இன்றைக்கும் அந்த பத்திரகாளிதான், இந்த காட்டிலே, அவ்வப்போது எந்த கெடுதலும் ஏற்படாமல், உலா வந்து கொண்டிருக்கிறாள். அவள் உலா வரும் போது, யாருமே, அவள் எதிரில் இருக்ககூடாது. யார் எந்த மனித உடலும் படக்கூடாது. அந்த நாளில், நான் சத்தியம் வாங்கியிருக்கிறேன். இங்கு எந்த மனிதர்களும் அங்கு தங்க மாட்டார்கள். யாருமே இங்கு தங்கமாட்டார்கள். எந்த மனித உயிர் பலிகளும் இங்கு கிடையாது.  ஆனாலும் மனிதர்கள் செய்கின்ற பலி உண்டடா. தாங்கள் செய்த தவறை மறைப்பதற்காக, சில தேவை இல்லாத தவறுகளை எல்லாம் செய்து வருகிறார்கள். அதனால் எல்லாம் புனிதம் கெட்டுப் போகும் என்று எண்ணியிருந்தேன். எத்தனையோ முறை, பல முகமாக எச்சரிக்கை செய்தும் கூட, தன்னை புனிதமானவன் என்று எண்ணிக் கொண்டு வந்த ஒருவன், இங்கே 22 வயது பெண்ணை கீழே தள்ளிவிட்டு கொலை செய்ய வில்லையா? அது யார் என்று உங்களுக்குத் தெரியாது. அதனால் இந்த மலை சற்று விசனம் அடைந்து புனிதம் எல்லாம் கெட்டுவிட்டது. அந்த புனிதத்தை தருவிப்பதற்காக அகத்தியன் கங்கையை வேண்டினேன். கங்கை இங்கு வந்து, சற்று முன் சொன்னேனே, அக்னி தீர்த்தம் என்று, அதற்குப் பக்கத்தில் கங்கை அமர்ந்த நேரம், தாமிரபரணியும், கங்கையும் ஒன்று சேர்ந்து, அந்த இடத்தை தண்ணீரை தெளித்து, புனிதமாக்கிவிட்டார்கள். ஆக சில கொலைகள் நடந்திருக்கிறது, சில உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதயெல்லாம், தாமிரபரணியும், கங்கையும், புண்ணிய நதிகளான அவர்கள், தன் பொன்கரத்தால் புண்ணியாவாசனம் செய்து, இந்த இடத்தை புனிதப்படித்தியிருக்கிறார்கள். ஆகவே, இந்த இடம், மிக, மிக, மிக, எத்தனை "மிக" வேண்டுமானாலும் போட்டுக்கொள், அத்தனை மிகப் புண்ணியமான ஸ்தலம். இங்கு ஒருமுறை வருவதற்கே இத்தனை சௌகரியம் கிடக்கும் என்றால், இந்த கோவிலை நோக்கி வருகின்ற இவர்களுக்கெல்லாம், எத்தனை புண்ணியம் கிடைத்திருக்கும் என்று எண்ணிப்பார். ஆகவே எல்லாருமே புண்ணியசாலிகள். ஆத்மா, மிக சுத்தமான ஆத்மா. ஆகவே அவர்கள் வரலாம்.

இனி அகத்தியன், சதுரகிரியில் அமர்ந்து, சுந்தர மகாலிங்கத்துக்கு அருகில் அமர்ந்து, என்னப்பன், முக்கண்ணன் அழைப்பதால், அவனருகில் அமர்ந்து, அவன் பொற்பாதத்தை பிடித்து விடவேண்டிய ஒரு பொறுப்பு இருக்கிறது. இல்லை என்றால் அவன் சயனம் கொள்ள மாட்டான். அந்த முக்கண்ணனின் பொற்பாதத்தை பிடித்து அமுக்குவதற்காக, அகத்தியன் உள்ளே செல்லுகிறேன். அதுவரை என் சித்தர்கள் உன்னை காப்பார்களாக என்று அருளாசி.

சித்தன் அருள் ................. தொடரும்!

Saturday 25 January 2014

பொதிகை மலை சென்று அகத்தியர் அருள் பெற!



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

"சித்தன் அருளை" வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் பொதிகை (அகத்தியர் கூடம்) சென்று அவரை தரிசித்து அவர் அருள் பெற்று வர விருப்பம் இருக்கும். தமிழக வனத்துறை வழி செல்ல தடை விதித்துள்ள போதும், கேரள மாநில வனத்துறை அங்கு சென்று வர அனுமதி அளிக்கிறது.  அதற்கு முன் பதிவு செய்ய வேண்டும். கேரள வனத்துறையின் வலைப்பூ தகவல் தொடர்பை கீழே தந்துள்ளேன். விருப்பமுள்ளவர்கள் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.

Thursday 23 January 2014

சித்தன் அருள் - 160 - சித்தர்கள் பார்வையின் தன்மை, சித்தத்தனமை கைவல்யமாக!

ஏன் என்றால் இவர்கள் இருவருக்குமே பிற்காலத்தில் சித்தநிலை வரப் போகிறது. சித்தநிலை என்பது பற்றற்ற நிலை மட்டுமல்ல, இவர்கள் எதை வேணுமானாலும் செய்யலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எந்த தப்பும் செய்யலாம், ஆனால் அவர்களுக்கு மனிப்பு உடனே கிடைக்கும். வார்த்தைகளை கொட்டலாம், கோபப்படலாம், ஆத்திரப் படலாம், மன்னிப்பு உடனே கிடைக்கும். அவர்கள் கோபப்பட்டு பேசமாட்டார்கள், ஏன் என்றால், அவர்கள் செய்கின்ற சரியான பணிவிடை எல்லாரையுமே மயக்க வைக்கிறது. ஒருவன் அன்னதானம் ஒருநாள் செய்தால் போதும். ஓராண்டு காலம் அதிகமாக வாழ்வான் என்பது முறை. இவர்களோ, எதையும் எதிர்பார்க்காமல், கடுமையான உழைப்பினால் அன்னதானம் செய்துகொண்டு வருகிறார்கள். ஆங்கொரு விநாயக சித்தனுக்கே இவர்கள் அடி பணிந்திருக்கிறார்கள். விநாயகன் என்பது யார்? கேது தானே. கேது தானே ஞானகாரகன். ஞானத்தின் அடியில் இருப்பவனுக்கு ஞானம் கிடைக்காமல் போகுமா? ஆகவே பற்றற்ற நிலையில் கொண்டு விடுவதற்கல்ல. ஞானத்தை உண்டு பண்ணப் போவதால் தான், இன்னும் மூன்று ஆண்டுகளில் இவர்கள் நிலை மாறப்போகிறது. மிக உயர்ந்த உச்சாணிக் கொம்பிலே இருக்கப் போகிறார்கள். இன்றைக்கு பார்க்கின்ற இவர்கள் நிலைக்கும், இன்னும் மூன்று ஆண்டுகள் கழிந்து பார்க்கின்ற நிலைக்கும் வித்யாசம் இருக்குமடா! அற்புதமான மாற்றங்கள் மனதிலே ஏற்படப்போகிறது. இன்னும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அருமையான சேவை செய்து, உலகத்தில் யாருக்கும் கிடைக்காத சில புண்ணியங்களை எல்லாம் இவர்கள் பெறப் போகிறார்கள். அந்த நல்லதொரு செய்தியையும் இவர்களுக்கு சொல்லவேண்டும் என்று சொல்லி;

இப்பொழுது புளியமரத்துக்குப் பக்கத்திலிருந்து சித்தர்கள் விலகிக் கொண்டிருக்கிறாற்களடா! இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பார்த்தால், பூச்சி சத்தம் போடுவது போல் கேட்க்கும். சித்தர்கள் அங்கே நடமாடுவதையும், அவர்கள் குரல் எழுப்புவதையும் இவர்கள் கேட்கலாம். சற்று கூர்ந்து கவனித்தால் தெரியும், பக்கத்தில் நின்று பார்க்கவேண்டாம். அவர்களை சுந்தந்திரமாக விட்டுவிடவேண்டும். இங்கிருந்து பார்த்தாலே தெரியும். அவர்கள் சப்தம் காதிலே கேட்கும். பட்சிகள் சப்தம் போல கேட்கும். அவர்கள் மொழியே அப்படிப்பட்டதுதான். ஆகவே சித்தர்கள் இங்கு நடமாடிக் கொண்டிருப்பது மட்டுமல்ல, சித்தர்கள் காக்கிறார்கள், ஒருவேளை சித்தர்கள் தரிசனம் கூட, இன்றைக்கு முழித்திருந்தால், மூன்றாவது ஜாமத்திலே கிடைக்கலாம்.

வானத்தை நோக்கி பார்த்தான் அகத்தியன் மைந்தன். மின்மினிப் பூச்சிபோல் ஒரு நட்சத்திரமும் தெரியவில்லையே, ஏனடா ஒரு காட்சி கூட கொடுக்கவில்லை என்று அகத்தியனை கடிந்துகொண்டே வந்தான். அவனுக்கும் சொல்லுகிறேன், நீ அவசரப்படுகிறாய், நினைத்தபோது காட்சி கொடுப்பதற்கு, நீ மகானாவதர்க்கு, இன்னும் தகுதி வேண்டும். அகத்தியனோடு 50 ஆண்டுகாலமாக இருந்தால் மட்டும் நீ பெரியவனாகிவிட மாட்டாய். நிந்தன் நாவில் நான் இருக்கிறேன். கூறு போட்டு பார் என்று சொன்னேன். அது மற்றவர்களுக்கு. நீயே இங்கு வந்து ரெண்டு தவறு செய்துவிட்டாய், காலையிலும், மாலையிலும். நீ அப்படி எண்ணாதே. உனக்கு காட்சி கிடைக்கவில்லை என்றால் அகத்தியனை ஏன் பழி சுமத்துகிறாய்? அகத்தியன் கையில் இருப்பதாலோ, போகன் பையில் இருப்பதாலோ, சித்தர்கள் வானிலே தோன்ற மாட்டார்கள். அதே சமயத்தில் இந்த கேள்வியை எதிர் பார்ப்பாயோ? சதுரகிரி மலையில் நின்று கேட்டிருந்தால், இன்றைக்கு ஏறத்தாழ ஒரு லட்சம் சித்தர்களை உனக்கு அடையாளம் காட்டியிருப்பேன். உன் கண் முன்னால் நிமிர்ந்து பார்த்தால், வானத்தில் நட்சத்திரக் கூட்டம் அங்கே தொங்கிக் கொண்டு இருக்கிறதடா! எல்லா சித்தர்களும் இன்றைக்கு சதுரகிரியில் கூடியிருக்கிறார்கள். ஏன் என்றால், அகத்தியன் நான் அங்கிருந்து தானே இப்பொழுது பேசுகிறேன். இங்கிருந்து பேசவில்லையே. நான் உலா வருவேன் என்று சொன்னேன். இப்பொழுது சதுரகிரியிலிருந்து பேசுகிறேன். ஆகவே நட்ச்சத்திரக் கூட்டம் அங்கே இருக்கிறது. இன்றைக்கு நட்ச்சத்திர கூட்டம் இங்கு வராது. ஆகவே, இது கால சூழ்நிலை. வருண பகவானின் காலம் இது. அவன் எப்பொழுது வேண்டுமானாலும் தன் ஆட்சியை நிலை நிறுத்துவதற்காகவோ, இந்த பூமி செழிப்பதற்காகவோ, இந்த மலையும், மலையை சார்ந்த இடங்கள் நல்லபடியாக இருப்பதற்காகவோ, இந்த மலையை சூழ்ந்திருக்கும் நல்ல உள்ளங்கள், நீண்ட காலமாய் வாழ வேண்டும் என்பதற்காகவோ, அவர் வருண பகவான், அப்பொழுது ஒன்றிரண்டு துளியை தெளிக்கத்தான் செய்வார். அதை பன்னீராக எடுத்துக் கொள். மறந்து விடாதே. ஆகவே இந்த மலையில் அந்த அதிசயம் நடக்கும். ஆகவே முடிந்தால் பாருங்கள். முடியவில்லை என்றால் அகத்தியனை பழிக்காதீர்கள். இது சித்தர்கள் வெளியே வருகிற நேரம். அந்த புளிய மரத்துக்குக் கீழே, 422 அடிக்குக் கீழே, 16 சித்தர்கள் அமர்ந்திருக்கிறார்கள் இன்றைக்கு. அந்த 16 சித்தர்களும் வருவார்களா? என்று தெரியாது. ஆனால் சில குறிப்பிட்ட சித்தர்கள் வந்து எட்டிப் பார்ப்பார்கள். ஏன் என்றால், அகத்தியனே இங்கு வந்து அபிஷேகம் செய்துவிட்டு போனதால், அகமகிழ்ந்து போன அவர்கள், இரவு நேரத்தில் வந்து எட்டிப் பார்க்க கூடும். ஆக வழிப் பாதையில், படிக்கட்டில் யாரும் படுக்க வேண்டாம். ஓரத்திலே சென்று ஒதுங்கி அமர்ந்து படுங்கள். அவர்கள் வந்து போவது கூட அருமையான வாசனையாகத் தெரியும். ஆக உணவில் கூட, இப்பொழுது சாப்பிடுகின்ற உணவில் மீதம் இருந்தால், அதில் கூட அந்த சுவை கிடைக்கும். ஆகவே, அவர்கள் எங்கு வேண்டுமானாலும் வந்து எட்டிப் பார்க்கலாம். தண்ணீர் இருந்தால் கூட அதுவே சுவையாக மாறும். ஏதோ ஒன்றை தொட்டு ஆசிர்வாதம் பண்ணலாம். அல்லது அவர்களே, வாய் வைத்து அருந்திவிட்டு, மீதம் வைத்து விட்டுப் போகலாம். ஆகவே குடிக்கின்ற நீரில் கூட சில சுவை இருக்கும். ஏதேனும் உணவுப் பொருள் மிச்சம் மீதி இருந்தால், அதை இப்பொழுது சாப்பிடுவதற்கும், இன்னும் மூன்று நாழிகை கழித்து, மூன்றாவது ஜாமத்துக்குப் பிறகு, நான்காவது ஜாமத்தில் தொட்டுப் பார்த்தால், அந்த வாசனை தெரியும். தெரியாவிட்டால் அகத்தியனை பழிக்காதே. அவர்கள் வருவார்கள் என்று சமிக்ச்சை தெரிந்தது. சமிக்சையின் அடிப்படையில் தான் இதைச் சொல்லுகிறேன். 

​​
அருமையான இடம். ஆனந்தமான இடம், யாருக்கும் கிடைக்காத பாக்கியம்.  ஆகவே, இங்குள்ள அத்தனை பேர்களுமே, ஒரு காலத்தில் அண்ணன் தம்பியாக இருந்தவர்கள் தான். விட்டுவிட்டு போகவில்லை, இல்லை என்றால் ஒன்று சேர மாட்டார்கள். ஒவ்வொரு ஜென்மத்திலும் அண்ணன் தம்பி தொடர்பு உண்டு. ஒருவருக்கொருவர் குடுத்து வாங்கியது உண்டு. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, கை கோர்த்து இந்த மலையை சுற்றி வந்ததெல்லாம் உண்டு. ஏன் என்றால் இவர்கள் அத்தனை பேர்களுமே, சித்தத்தன்மை அடைந்தவர்கள். சித்தத்தன்மை என்றால் என்ன என்று கேட்காதே. உன் நிலையை தாண்டிவிட்டு உயர்ந்த நிலையில் இருக்கலாம். தியானம் செய்துதான் ஒருவன் சித்தத்தன்மை அடையவேண்டும் என்று கட்டாயம் இல்லை. எவன் ஒருவன் மானசீகமாக எந்த கடவுளை நோக்கியோ, அல்லது எந்த சித்தனை நோக்கி வணங்கினாலே, அவன் சித்தத்தன்மை பெற்று விடுவான். இந்த மலைக்கு மட்டும் அந்த சிறப்பு. வேறு எந்த மலைக்கும் அந்த சிறப்பு கிடையாது. இல்லை என்றால், வைணவக் கோவிலிலே, சித்தன் தரிசனம் கிடைக்குமா? யோசித்துப் பார்த்தால், எத்தனையோ உண்மைகள் இருக்கிறது. அதைப் பற்றி ஒரு புராணமே எழுதலாம். எப்படி சித்தர்கள் இங்கு வந்து தங்கினார்கள், வைணவத்துக்கும், சித்தத்தன்மைக்கும் என்ன தொடர்பு? சித்தன் என்றால் முக்கண்ணனுக்கு சேர்ந்தவர்கள் தானே, எப்படி வந்தார்கள் என்று கேட்கலாம். அதற்கு ஒரு விடையை, காலையிலேயே, சற்று முன் சொன்னேன். அகத்தியன் ஆங்கொரு நம்பி பெருமானுக்கு அபிஷேகம் செய்து கொண்டிருக்கும் போது, அங்கு முக்கண்ணன் வந்தான் என்று சொன்னேன். முக்கண்ணன் வர வேண்டிய இடம் என்பதால், முக்கண்ணன் வந்தால் சித்தர்களும் வர வேண்டியது தானே. முக்கண்ணன் அடிக்கடி வந்து போய கொண்டிருக்கிறான் என்பது யாருக்கும் தெரியாது. ஒவ்வொரு வைகாசி விசாகத்திலும், ஆடி கிருத்திகையிலும், அமாவாசை நேரத்திலும், இரவு நேரத்தில், அண்ணன் தம்பி போல ஒருவருக்கொருவர் கை கொடுத்துப் போவதுண்டு. அச்சமயத்தில் தான் ஆச்சரியமான சம்பவம் நடக்கும். திடீரென்று மிருங்கங்கள் பிளிரும். வானத்தில் திடீரென்று மின்னல் வீசும். திடீர் ஒளி ஒன்று தோன்றி மறையும். திடீரென்று, நீங்கள் பார்க்கின்ற அனைவருக்குமே, உடம்பில் ஒளி புகுந்தது போல் தோன்றும். இது ப்ரம்மையினாலோ, பிரமிப்பினாலோ அல்லது ஏதோ அதிர்ச்சியினாலோ தோன்றுவது அல்ல. நின்று கொண்டிருக்கிற உங்கள் உடம்பிலேயே, ஏதோ ஒளி வந்து பாய்ந்து தடவிக் கொடுத்துவிட்டு செல்வது போல் தோன்றும். அது இன்றைக்கு கூட நடக்கலாம். எப்பொழுது வேண்டுமானாலும் நடக்கலாம். எந்த நேரத்திலும் நடக்கலாம். எல்லோருக்கும் நடந்திருக்கலாம். அவர்கள் எல்லாம் அருள் வாக்கு பெற்றவர்கள். அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாக சித்தத்தன்மை அடைந்தவர்கள். அதற்குத்தான் சொன்னேன். சித்தன் என்பது கண்ணை மூடிக்கொண்டு, தவம் புரிந்து, காலாகாலமாக உடம்பை வருத்திக் கொண்டு அடைவதல்ல சித்தநிலைமை. சித்தன் என்பது, எவன் ஒருவன் ஆத்மார்த்தமாக, எந்த தெய்வத்தை நோக்கியோ, எந்த சித்தனை நோக்கியோ, எந்த மாமுனியை நோக்கியோ, எந்த நேரத்திலும், இரவானாலும், பகலானாலும், உடல் சுத்தம் இல்லாவிட்டாலும், மன சுத்தத்தோடு வணங்கினால், அவன் சித்தத் தன்மை அடைந்து விடுவான். 

சித்தன் அருள்............ தொடரும்!

Thursday 16 January 2014

சித்தன் அருள் - 159 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!

எதிர்காலத்தில், எந்தன் கை பிடிக்க ஒரு நாயகி வரவில்லையே என்ற கவலையும் உண்டு. இன்னவன் குடும்பத்திலே, ஒரு மிகப் பெரிய பிரம்மஹத்தி தோஷம் உண்டு. அதுமட்டுமல்ல, அன்னவன் குடும்பத்தை சேர்ந்த பலர் என்ன பண்ணியிருக்கிறார்கள் என்றால்,  முன் ஜென்மத்தில் ஜமீன்தாராக இருந்தவர்கள் என்று ஏற்கனவே சொன்னேன். ஜமீந்தார் காலத்துக்கு முற்காலத்தில், ஏறத்தாழ 333 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த மலையும், மலையை சார்ந்து இருந்த இடங்களையும் ஆண்டுகொண்டிருந்த காலத்திலே, தெரிந்தோ, தெரியாமலோ செய்த பிழை ஒன்று உண்டு. ஐந்து சிறுவர்களை, கண்ணை கட்டிவிட்டு, மலையிலே இருந்து கீழே தள்ளி, கருவேலங் குச்சியால், அவர்கள் கண்ணை குத்தி வேடிக்கை பார்த்த நிகழ்ச்சி ஒன்று உண்டு. அப்பொழுதே அகத்தியன் நினைத்தேன், இன்னவனுக்கு தந்தைக்கு, தந்தைக்கு, தந்தை; அன்னவன் அகத்தியன் நாடியை நாடி வந்த பொழுது, அப்பொழுது சொன்னேன் "உன் குடும்பத்தில் ஆங்கொரு பிரம்மஹத்தி தோஷம் இருக்கிறது. அந்த தோஷத்தை நிவர்த்திக்க, நீ ஏகுக ராமேஸ்வரம் என்று சொன்னேன். ராமேஸ்வரம் சென்று அன்றைக்கே ஒரு தில தர்ப்பணம் செய்துவிட்டு வந்திருந்தால், இவன் குடும்பத்தில் நேத்ர தோஷம் ஏற்பட்டிருக்காது. நேத்ரம் என்றால் கண், தோஷம் என்றால் கண் பார்வை இல்லாத நிலமை. ஆனால், இதற்கு அவன் காரணமல்ல, அவன் தந்தைக்கு, தந்தைக்கு, தந்தை செய்துவிட்ட மிகப் பெரிய குற்றமே காரணமாகும். இப்பொழுதும் பழுது ஒன்றுமில்லை, அதற்கான மூலிகை ஒன்று இங்கே இருக்கிறது. நேத்ரா தோஷ நிவாரணி என்று ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டேன். அதை விட பன்மடங்கு உள்ள செடி, இப்பொழுது தான் முளைத்திருக்கிறது. அதையும் பார்த்துவிட்டுத்தான், அதையும் உனக்கு சொல்லவேண்டும் என்பதற்காகத்தான், அகத்தியன் உன்னை இங்கு அழைத்தேன்.  இல்லை என்றால், அகத்தியன் இந்நேரம் மலையை சுற்றி வந்து கொண்டிருக்கிற நேரம். யாருக்கும் வாக்குரைக்க மாட்டேன் என்று சொன்ன நேரம். ராகுவின் நேரமானதால், நல்லது வேண்டாம் என, மங்களமான விஷயம் வேண்டாம் என்று சொன்னேன். இப்பொழுது ராகுவே மனமுகுந்து போனதால், அன்னவன் துணை கொண்டுதான் அகத்தியன் நான் இதை செப்புகிறேன். ஆகவே அன்னவன் ஒன்று செய்யட்டும். இங்கிருந்து, ஏற்கனவே சொன்னேனே, 42 காத தூரத்தில், ஒரு அருமையான செடி ஒன்று பூத்திருக்கிறது. அதற்கு, நேத்ர தோஷ நிவாரணி என்று பெயர். சிவபெருமானின் முக்கண்ணை போலவே அந்த செடி இருக்கும். மொத்தமே 9 செடிகள், 9 இலைகள் இருக்கும். அதன் அடியிலே, வேரிலிருந்து ஒரு ஒளி வட்டம் கீழிருந்து மேலே சென்று கொண்டிருக்கும். நள்ளிரவு நேரத்தில் தான் பறிக்க முடியும், ஆனால் தக்க பாதுகாப்புடன் தான் செல்ல வேண்டும். அந்த நேத்ர தோஷ நிவாரணி என்று சொல்லுகின்ற அந்தச் செடி, மற்ற செடிகளுக்கு வெளிச்சத்தை காட்டுவது போல் இருக்கும். எந்த வித கருவியும் கொண்டு செல்லாமல், எந்த வித ஒளி உமிழும் கருவியும் கொண்டு செல்லாமல், நடை பாதையிலிருந்து அங்கிருந்து 12 காத தூரம் சென்றால், நடு மட்டத்தில், நந்தவனத்தில், கரும் துளசிக்கு பக்கத்தில் அந்த ஒளி படரும் செடி முளைத்திருக்கிறது. அது ஒரு மூலிகை செடி. தள்ளி நின்று கண்டால் தெரியும். பூமியிலிருந்து ஒளிவட்டம் அதன் இலைக்கும் செடிக்கும் போய் கொண்டிருக்கும். அது பின்னால் 12 ஆண்டுகள் கழித்து மாமரமாக மாறும். ஆனால் அது மாமரமாக மாறும் வரை அந்த செடியை வைத்திருப்பார்களோ, வெட்டிவிடுவார்களோ, அகத்தியன் யாம் அறியேன். ஆனால் இன்றைய தினம் அந்த செடி பூத்திருக்கிறது. அங்கு சென்று அந்த செடி இலையை, தைரியமாக பறித்து வரலாம். 

அதை பறித்து விளக்கெண்ணையை வைத்து, ஆமணக்கு எண்ணை என்று அதற்கு பெயர், ஆமணக்கு எண்ணயில் அந்த செடியின் சாற்றை பிழிந்து வேப்பமர பொந்திலே அதை வைத்து, அடைகாத்து, 32 நாள் கழித்து, அந்த சாற்றை எடுத்து, ஒளி இழந்த அந்த குழந்தை, நபர்களுக்கெல்லாம் இரவில் நடுநிசி நேரத்தில், 12 மணியிலிருந்து 2 மணிக்குள் அந்த காலம் மூன்றாம் ஜாமத்தில், ஒரு சொட்டு, 2 சொட்டு என்று ரெண்டு பக்கம் விட்டு வந்தால், எந்த மருத்துவரினாலும் சாதிக்க முடியாத அந்த சாதனையை, அந்த மூலிகை செடி சாதிக்கும். அந்த செடியை நட்டவர் "போகனடா". ஆகவே, போகன் நட்ட முதல் செடி அது தான். அவன் உச்சந்தலயிலிருந்து உள்ளங்கால் வரை என்றுதான் எழுதியிருக்கிறான். அதை இப்பொழுது சற்று புரட்டிப் பார்த்தேன். போகனிடம் ஏற்கனவே அனுமதி வாங்கிவிட்டதால், அகத்தியனே போகன் சார்பாக பேசுகிறேன். போகன் நட்ட முதல் செடி அதுதான். ஆனால் 24 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் அந்த செடி பூக்கும், காய்க்கும். அதன் பூவுக்கு வாசனை இருக்காது. நெருங்கி போனால், சந்தன வாசனையும், மகிழம்பூ வாசனையும் அடிக்கும். மகிழம் பூ இருந்தாலே, அங்கே பாம்புகள் அதிகம் வரக்கூடிய இடமடா. அந்த வாசனைக்கு ஆசைப்பட்டு வரும். ஆகவே, அங்கு சில அற்புதமான நாகங்களை பார்க்கலாம். அது எதுவும் செய்யாது, யாரையும் கடிக்காது. அந்த அற்புதமான நாகத்தை பார்த்துவிட்டால், ஆதி சேஷனை நேரடியாக பார்த்த புண்ணியம் கிடைக்கும். எந்த வித தொல்லையும் இல்லாமல்  சுருண்டு ஓரத்தில் படுத்துக் கிடக்கும். ஆனால் அதிலும் ஒரு ஒளி இருக்கும். அதன் பின் புறத்தில் நாமங்களில் பார்த்திருப்பாய், மூன்று வகை நாமங்கள் வரிசையாக இருக்கும். மேலே நடுவே, கீழே என்று மூன்று வகை நாமங்கள் அந்த பாம்புக்கு உண்டு. இதை எதற்கு சொல்லுகிறேன் என்றால், அப்படிப்பட்ட பாம்புகள், ஒருவேளை, நடமாடி, நம்பி கோவிலுக்கு வரலாம். தரிசனம் செய்வதற்காக. யாரையும் கடிக்காது. ஆனால் கடுமையான விஷம் கொண்டவை. அந்த நாகப் பாம்புகள், அந்த மரத்தை சுற்றி இருப்பதால், அந்த இலையின் ஒளிவட்டம் கூட அந்தக் கண்ணுக்கு தெரியும். அந்த செடியின் இலையை பறித்து, விளக்கெண்ணை, ஆமணக்கெண்ணையில் ஊறப்போட்டு, சாறு பிழிந்து வேப்ப  மரத்துப் பொந்துக்குள் வைத்துவிட்டு, 32 நாட்கள் கழித்து எடுத்து வந்து, அதை ரெண்டு சொட்டு கண்ணிலே விட்டால், இழந்த பார்வை பெறலாம் என்று சற்று முன் சொன்னேன். அது எந்த மருத்துவத்திலும், தற்கால மருத்துவர்கள் அல்ல, எக்கால மருத்துவனாலும் சாதிக்க முடியாத சாதனயடா. அதையும் முடிந்தால், ஏன் என்றால் சற்றுமுன் அகத்தியன் இங்கு வந்து அமர்ந்த பொழுது, பழைய ஓலைச் சுவடியை புரட்டிப் பார்த்து, நல்லதொரு ஜமீந்தார் குடும்பத்தை சேர்ந்தவன், நாலு திக்கும் கொடி கட்டி பறந்தவன், மலை பாங்கு அரசனாக வாழ்ந்தவன், ஏகப்பட்ட மூலிகைகளை பயிரிட்டு அப்பொழுதே நிறைய கொடுத்தவன். அந்த குடும்பத்தை சேர்ந்தவன் என்பதாலும், இவன் மூதாதையர்கள் செய்த தவறால் தான் அங்கு நான்கு பேர்கள் விழியை இழந்து நிற்கின்ற காட்ச்சியை அகத்தியன் யான் கண்டேன். அவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவ வேண்டும் என்றுதான் அகத்தியன் விரும்பினேன்.

ஏற்கனவே, முன்பு உரைத்தேன். யாருக்காவது, எதற்காவது அகத்தியன் மேல் பற்று கொண்ட அனைவருக்கும் ஏதேனும் ஒரு நன்றி கடன் செய்யவேண்டும் என்று அகத்தியன் ஆசைப் பட்டேன் என்று சொன்னேன் அல்லவா! அப்பொழுது இது ஒன்று விட்டுவிட்டது. ஏன் என்றால் இது மிக மிக முக்கியம். வாழ்க்கையிலே ஒளி ஏற்றிய புண்ணியம் என்று இதைத்தான் சொல்லுவார்கள். விளக்கு வைத்து ஒளி ஏற்றுவது என்பது ஒரு பக்கம். வாழ்க்கையில் ஒளி ஏற்றுவது என்பது மறுபக்கம். ஆனால் இவர்களுக்கு கண்ணிலே ஒளி இல்லை, வாழ்க்கை இல்லை. கண்ணிலாமல் வாழ்க்கை இருந்து விட்டால், மிகப் பெரிய கொடுமை. அந்த கொடுமையை அனுபவித்த எத்தனையோ பேர்களை காப்பாற்றி இருக்கிறேன்.

எனக்கொரு யோசனை சற்று முன் தான் தோன்றிற்று. இல்லை என்றால் அகத்தியன் இத்தனை தூரம் வாய் திறந்து பேசியிருக்க மாட்டேன். மௌனமாக் உலா வந்து கொண்டிருப்பேன். 9 சித்தர்களை வைத்து உங்களை காக்க வைத்துவிட்டேன். ஆகவே அஞ்சிட வேண்டாம்.

சற்று முன் சொன்னேனே, ஆங்கொரு தங்கத்துக்கு மன்னனாக இருக்கிறவன், நீ இருக்கிறாய், அகத்தியன் இருக்கிறாய் என்று, அந்த வார்த்தை அகத்தியனுக்கு புளங்காகிதமாயிற்றடா. என்ன நம்பிக்கை உனக்கு அகத்தியன் மேல்? எப்படிப்பட்ட நம்பிக்கையை அசையாமல் வைத்திருக்கிறான். எத்தனை காரியங்களை படிப்படியாக செய்கிறான் என்பதை எல்லாம் பார்க்கும் போது இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களை அகத்தியன் வைத்திருக்கிறேன் என்று அகத்தியனே ஒருமுறை மாரை தட்டிக் கொள்கிறேனடா. அகத்தியன் தன் நிலை விட்டு இறங்கக் கூடாது. அவன் 4000 ஆண்டு முனிவன், அவன் பற்று பாசம் எல்லாம் தாண்டி நிற்கிறவன் என்றாலும் கூட, லோபா முத்திரையை பக்கத்தில் வைத்துக்கொண்டு அகத்தியன் பற்று பாசம் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என்று கேட்கலாம். லோபாமுத்திரை என்பது காவிரி தான். காவிரிதான் என்னிடம் 6 மாதம் காவிரியாகவும், 6 மாதம் லோபா முத்திரையாகவும் இருக்கிறாள். 6 மாதம் தாமிர பரணி நதியாகவே இருக்கிறாள். ஆக, தாமிரபரணி நதியைத்தான் அகத்தியன் அருகிலே வைத்துக் கொண்டு இருக்கிறேனடா! இல்லை என்றால், எந்த மாநிலத்துக்கும், எந்த ஊருக்கும் கிடைக்காத சிறப்பு, தாமிரபரணிக்கு கிடைக்குமா? ஆகவே, லோபா முத்திரையை வணங்கினால், தாமிரபரணியை வணங்கியது போல் ஆகும். லோபமுத்திரையை நான் நினைத்தால், தாமிர பரணியே உனக்கு வந்து அபிஷேகம் செய்தது போல் ஆகும்.  லோபமுத்திரையை வணங்கினால், காவிரி நதியே வந்து உன்னை கட்டியணைத்து, தாயாக முத்தமிட்டு, நெஞ்சில் தடவி கொடுத்து, பூ வாரி பொட்டுவைத்து, உன்னை கை தூக்கி அணைத்து செல்வதைப் போலவே எண்ணலாம். அத்தனை பாசமும், பண்பும் அகத்தியன் வைத்திருக்கிறேனடா! அகத்தியன் ஒரு பிரம்மச்சாரி, அகத்தியனுக்கு மனைவி என்பது கிடையாது. ஆனால் தனிப்பட்ட ஒரு முனிவன் ஒரு வீட்டில் இருந்துவிட்டால், அதை தோஷம் என்று சொல்வார்களே என்பதற்காகத்தான், இதையெல்லாம் மானிடர்கள் பிற்காலத்தில் ஏற்படுத்துவார்கள், அதில் அகத்தியன் பெயரும் கெட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் ,அகத்தியனே லோபாமுத்திரை என்கிற பெயரை உண்டாக்கி, அதில் காவிரியையும், தாமிர பரணியையும் கலக்கச் செய்திருக்கிறேன்.

இப்போது கூட, இந்த நதி நீரை ஒரு வாரம் என்ன, ஒரு மாதம் வைத்திருந்தால் கூட கெட்டுவிடாது. அப்படிப்பட்ட புண்ணியநதி அது. அப்படிப்பட்ட தாமிரபரணி, தன்  நீரிலேயே தானே குளிக்க ஆசைப்பட்டாள். அப்படி ஆசைப்பட்ட அவள், ஆனந்தமாக மலை உச்சியிலிருந்து இறங்கி, ஆனந்தமாக நீச்சல் அடித்துக் கொண்டு வருகிறாள். அப்படி வருகின்ற நேரத்தில் தான், என் எதிரே, இடது பக்கத்தில் இருக்கின்ற அந்த தங்கராசும் அவன் நண்பர்களும் நீராடி விட்டு வந்திருக்கிறார்கள். ஆகவே, தாமிரபரணியே, இவனை வாழ்த்தி நீராடிவிட்டு சென்று இருக்கிறது. அது என்பது மிகப் பெரிய புண்ணியம். அந்த புண்ணியத்தை சற்று முன்புதான் பெற்றார்கள் என்பதால், அதை சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் அவனையும் வரச்சொன்னேன். ஏன் என்றால், இவர்கள் நீராடியது வெறும் நீர் வீழ்ச்சி அல்ல. அவசரப் பட்டு குளித்ததாக எண்ண வேண்டாம். இந்த நேரத்தில் தான் தாமிரபரணி, மலை உச்சியிலிருந்து மெதுவாக, அமைதியாக இறங்கி வந்து, இரு பக்கமும் அக்கம் பக்கம் பார்த்துவிட்டு, தன் இருகையால் தண்ணீரை எடுத்து தெளித்துவிட்டு வந்த நேரம். அப்படி தெளிக்கும் போதுதான் இவர்கள் இருவரும் நீராடினார்கள். ஆகவே, அந்த நீராடிய தன்மை, தாமிரபரணியே இவர்களுக்கு நீராடி வைத்திருக்கிறது என்பது மிகப் பெரிய புண்ணியம். இனி இவர்கள் எத்தனை காலம், ஆண்டுகள், இந்த மலையில் நடந்தாலும், இத்தகு அதிசயங்களைப் பெறப் போகிறார்கள். இங்கு அகத்தியன் சொன்னது கூட, சற்றுமுன் நடந்த அதிசயத்தைத்தான் சொல்லியிருக்கிறேன். இன்னும் பல அதிசயங்கள், அவர்கள் காணப் போகிறார்கள்.

சித்தன் அருள்.......... தொடரும்

Wednesday 15 January 2014

அனந்தசயனத்தில் லட்ச தீபம்!

திருவனந்தபுரத்தில் பத்மநாப சுவாமி கோவிலில்  14/01/2014 அன்று நடந்த லட்ச தீப திருவிழாவின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை உங்கள் அனைவருக்காகவும் தருகிறேன்.

லட்ச தீபம் மிகச் சிறப்பாக நடந்தேறியது. லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வந்திருந்த அனைவருக்கும் கோவிலினுள் சென்று தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை என்பதே உண்மை.  வந்த கூட்டத்தை பார்த்த பொழுது ஒரு உண்மை புரிந்தது.

"சாமி கூட பணக்காரரா இருந்தா தான், இந்த மனிதர்கள் வந்து பார்ப்பார்கள் போல"







Tuesday 14 January 2014

பொங்கல் வாழ்த்துக்களுடன் அனந்தசயன லட்ச தீப திருவிழா!


அகத்தியர் அடியவர் அனைவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்கள், உண்மையான நண்பர்களுக்கும் இனிய, தெய்வீகமான பொங்கல் அகத்தியரின் சித்தன் அருள் நல் வாழ்த்துக்கள்!

இன்றைய தினம் நம் பொங்கல் திருவிழாவின் அன்று திருவனந்தபுரத்தில் அனனதசயன பத்மநாபர் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடுகிற "லட்ச தீப திருவிழா" நடைபெறுகிறது. இன்று இரவு 8 மணிக்கு அனந்த பத்மனாபருக்கு லட்ச தீப திருவிழா, தீபாராதனை, போன்றவை நடை பெற உள்ளது. அனைத்தும் அகத்தியரின் பாதங்களில் போய் சேரும். அனைவரும் அந்த நேரத்தில் அவரிடம் "எல்லோரும், எல்லாமும் வரும் காலங்களில் நலமாக விளங்கிட" பிரார்த்தித்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

கோவில் கோபுரத்தின் எளிய தோற்றமும், அலங்கார தோற்றமும், எல்லா அகத்தியர் அடியவர்களும் கண்டு மகிழ கீழே தருகிறேன்.



சித்தன் அருள்!



Thursday 9 January 2014

சித்தன் அருள் - 158 -நம்பிமலை - பொதிகை பயணம், 3 சித்தர்கள் வாக்கு, 9 சித்தர் ஆசி!


அங்கிருந்து 58வது காத தூரத்தில் ஒரு மலை உச்சியின் மேல் ஏறி அமர்ந்து தியானம் செய்தால் போதும். அன்றொரு நாள் தவசி பாறையில் (சதுரகிரியில்) ஒரு பாறையில் அமர்ந்து கொண்டு தன் எதிர்காலத்தையும், நிகழ்காலத்தையும், இறந்தகாலத்தையும் பற்றிக் கேட்டான். தானாக அந்த பாறையில் இருந்து ஒரு ஒலி, அசரீரி கேட்க்கும். அந்த அசரீரி அவன் கடந்தகால வாழ்க்கை, நிகழ்கால வாழ்க்கை, எதிர்கால வாழ்க்கை பற்றி அத்தனையும் சொல்வதை சதுரகிரி மலையிலே கேட்கலாம். அதே போல இங்கே மலையின் உச்சியிலே, ஒரு பாறையில், தென்கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டால், ஆங்கொரு சித்தர்கள் மூன்று பேர்கள் அமர்ந்து கொண்டு, ஒருவன் நிகழ்காலத்தையும், ஒருவர் கடந்தகாலத்தையும், ஒருவர் எதிர்காலத்தையும் பற்றி கூறுவர். அந்த காட்ச்சியும், இங்கிருந்து 42 காத தூரத்தில் இருக்கிறது. புலிகளும், இன்னும் காட்டுப் பன்றிகளும், இன்னும் பல யானைக் கூட்டங்களும், மான்கள் கூட்டங்களும் நிறைய அங்கு உண்டடா. அவைகள் எல்லாம் அன்றாடம், எதிர்காலத்தைப் பற்றிக் கேட்டு, அவர்களே பல சித்தர்களாக மாறியிருப்பதெல்லாம் காணலாம்.

இன்னொரு அதிசயமான செய்தி, இங்கிருந்து பொதிகைக்கு செல்லுகின்ற நேரத்தில் ரெண்டு நாள் கழித்து, ஆங்கொரு தேன் கூடு இருக்கிறது. அந்த தேன் கூட்டுக்கு கீழே ஒரு சிறு பள்ளம் போகும். அந்த பள்ளத்தில் இறங்கிக் கொண்டால் அங்கு ஒரு குகை தெரியும். அந்த குகைக்கு தெற்குப் பக்கத்தில் திரும்பினால், ஒரு தீபம் மட்டும் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும். யார் அந்த தீபத்தை ஏற்றினார், எப்பொழுது ஏற்றினார் என்று தெரியாது. ஆண்டாண்டுகாலமாக, ஆண்டு 1000 ஆண்டுகளாகவே, அந்த தீபம் எரிந்துகொண்டு இருக்கிறது. அப்படிப்பட்ட தீபத்தை வணங்கி வந்தால், அது தான் அகினியே. அக்னி தேவனே, தனக்குத்தானே, அங்கு வருபவர்களுக்கு எல்லாம் வழிகாட்டவும், யாருக்கு எந்த இடையூறும் இல்லாமல், நல்லதொரு வழியை காட்டவும், அந்த தீபம் எரிந்து கொண்டிருக்குமாம், பகல் நேரத்தில். இரவு நேரத்தில் அந்த வழியாக சென்றால், மின்மினிப் பூச்சிகள் போலவே, ஒரு 108 மின்மினிப் பூச்சிகள் இரவு, இருபக்கமும் சாரையாக நின்று, உங்களுக்கு நல்லதொரு வெளிச்சத்தைக் காட்டும். நல்லபடியாக பொதிகைக்கு செல்ல வைக்கும். இவ்வளவு அதிசயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது. ஆக, அந்த மலை வழி செல்லுபவர்க்கெல்லாம் இந்த ஒரு காட்சி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான், அகத்தியன் நான் இந்த வார்த்தைகளைச் சொல்லுகிறேன். நடந்ததை சொல்லுகிறேன். 

அது மட்டுமல்ல, இங்கிருந்து செல்பவர்கள், மிக மிகக் குறைவு. என்றாவது ஒருநாள், ஏதாவது ஒரு காரியத்துக்காக, விசேஷத்துக்காகத்தான் செல்வது வழக்கம். அப்பொழுது, இதுவரை யாருமே, அந்த மலையிலிருந்து உருண்டு விழுந்ததாகவோ, தவறி விழுந்ததாகவோ, அகால மரணமுற்றதாகவோ இல்லை. அதுமட்டுமல்ல, அந்த அக்னி தீர்த்தத்தைச் சொன்னேனே, அக்னி தீர்த்தத்தை வணங்கிவிட்டு, அங்கிருக்கும் சித்தர்களை பட்டாம்பூச்சியாக ரசித்துவிட்டு, பிறகு, அக்னிதேவன் அங்கொரு நெய் விளக்காக எரிந்துகொண்டிருக்கிறானே, அங்கும் தரிசனம் செய்து வந்தால், அவருக்கு, உடலில் உள்ள நோய்கள் அத்தனையுமே, அந்த ஷணமே விலகிவிடும். அது மட்டுமல்ல, இதய நோய் உள்ளவர்களும், உதிரத்தில் அங்கொரு விஷத்தை கலந்தவர்களும், என்னென்ன உயிர் கொல்லி நோயால் அவதிப் படுபவர்களும், அவர்கள் உயிர் காப்பாற்றப்படும். இப்பொழுது சந்தேகம் எழலாம். உயிர் கொல்லி நோய்கள் வருபவர்கள், எப்படி அந்த மலையில் ஏற முடியும்? அவர்கள் ஏறினால்தானே, உயிர் பிழைக்க முடியும் என்று கேட்கலாம். நீங்கள் தான் பகுத்தறிவுவாதிகள் ஆயிற்றே. இப்படி எண்ணங்கள் வரத்தான் செய்யும். அதற்கும் விடை வைத்திருக்கிறேன். உண்மை. எவன் ஒருவன் அந்த தாய் பாதம் வழியாக, பொதிகை மலைக்கு செல்வதாக எண்ணிக் கொண்டால் அவனுக்கு பரிபூரண சுதந்திரத்தையும், எந்த வித ஆபத்தில்லாத, தோஷம் இல்லாத வாழ்க்கையை, அகத்தியன் யாம் தருவேன். யாமே முன் இருந்து அவரை கை பிடித்து, பக்க பலத்தோடு யாம் அனுப்பி வைக்கிறேன். இனிமேல் அந்த வழியாக செல்பவர்களுக்கு இந்த தரிசனங்கள், நிறைய கிடைக்கும். அது மட்டுமல்ல, அவர் குடும்பத்தில், யார யார், என்றைக்காவது, ஏதோ தவறு செய்திருந்தாலும் சொத்தை இழந்திருந்தாலோ, அதை மீண்டும் பெற்றுக் கொடுக்கும். யார் யார் இவருக்கு விஷம் ஊட்டி கொல்ல நினைத்தார்களோ, யார் யார் இவனுக்கு ஒதுக்குப் புறம் வேண்டும் என்று ஒதுக்கி வைத்தார்களோ, யார் யார் இவர் வாழ்க்கையில் முன்னேறக்கூடாது என்று தடை விதித்தார்களோ, யார் யார் அதர்வண வேதத்தை சேர்ந்து யக்ஷிணி என்ற தேவதையை ஏவிவிட்டு குடும்பத்தை கெடுக்க நினைத்தார்களோ, அவர்கள் அத்தனை பேர்களும், தவிடுபொடியாவார்கள்.  யாரும் அவரை எதுவும், ஒன்றும் செய்ய முடியாது. அவ்வளவு பலம் வாய்ந்த, சக்தி வாய்ந்த சித்தர்கள் நடமாடுகின்ற அற்புதமான பூமியடா இது. இப்பொழுது எதற்காக இதைச் சொன்னேன் என்றால், நம்பி கோவிலிலே அப்பொழுதுதான் சில காரியங்கள் சொன்னேன். சிலவற்றை சொல்ல மறந்துவிட்டேன்.

உங்கள் கணக்குப்படி, கடிகார முள்ளில் 9.30ஐ தாண்டின பிறகு அந்த காட்சி இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. அந்த திசை நோக்கி கண் மூடி ஒருமுறை த்யாநித்தாலே போதும். 9 சித்தர்கள் அருள் வாக்கும் பெற்று, அவர்கள் ஆசியும் பெற்று, இவர்கள் அத்தனை பேர்களுடைய எதிர்கால வாழ்க்கையையும் செம்மையாக மாற்றிவிட முடியும். சித்தர்கள் இங்கு நடமாடுவதால், இவர்களுக்கெல்லாம், மிகப் பெரிய குடுப்பினை இருக்கிறது. யாருக்கும் கிடைக்காத பலன்கள் வரும், பலவீனங்கள் ஒழியும். எண்ணற்ற, நல்ல எண்ணத்தோடு, மற்றவருக்கு உதவி செய்யும் எண்ணத்தோடு, பரிபூரணமாக இங்கு வருகின்ற அத்தனை உள்ளங்களுக்கு எல்லாம், இந்த அகத்தியன் கணக்குப்படி, அவர்களுக்கு, சொர்க்கத்தில் இடம் நிச்சயிக்கப் பட்டிருக்கிறது என்று தான் அகத்தியன் சொல்வேன். ஏன் சொர்கத்தில் இடம் என்று சொல்கிறேன் என்றால், வாழ்க்கையே நரகமாகிவிட்டது. சொர்க்கம் எங்கடா கிடைக்கப் போகிறது, என்றெல்லாம் வேதனைப்படலாம், நொந்து போகலாம். சின்னச் சின்ன ஆசைகளைத்தானே எதிர் பார்த்தேன், அது கூட நடக்கவில்லை என்று அகத்தியனை மட்டுமல்ல, விதியை கூட நொந்து விடலாம். ஏன் சிலர், தெய்வ பக்தியிலிருந்து மாறி, வேறு எதிர் பாராத மூட நம்பிக்கைகளின் பக்கத்தில் கால் வைக்கலாம். பதவி சுகம், பண சுகம், குடும்ப சுகம், வாழ்க்கை சுகம், நில சுகம், மனை சுகம், இன்னும் தோட்ட துரவங்கள் சுகம், அத்தனையும் தாண்டி, சந்தோஷமான சூழ்நிலையில் தான் அகத்தியன் இங்கு உட்கார்ந்து பேசும் பொழுது, இவர்கள் அத்தனை பேர்களுக்கும் அந்த பாக்கியம் கிடைக்கப் போகிறது. பதவி இழந்தவர்களுக்கெல்லாம் மீண்டும் பதவியை கொடுக்கலாம். அதற்கு, அகத்தியன் இப்பொழுதே பச்சை கொடி காட்டிவிட்டேன். யார் யாரிடம், எவரவர், எத்தனை தூரம் ஏமாந்திருக்கிறார்களோ, அதை கூட மீண்டும் திரும்பி, அவர்களை கொடுக்க வைக்கிறேன். அந்த பாக்கியமும் நடக்கும்.

இதோ 9 சித்தர்களும் சுற்றி வருகிறார்கள். 9 சித்தர்களும், அகத்தியனை வணங்கிவிட்டு செல்லுகின்ற காட்ச்சியைத்தான் காண்கிறேன். அந்த 9 சித்தர்களும் இவர்களை வாழ்த்துவார்கள். அதனால், எதை எதனை இழந்தனையோ, அதையெல்லாம், மீண்டும் பெறப்போகிறாய். கலைத்துறையை சேர்ந்தவர்களானாலும் சரி, அரசியல் துறையை சேர்ந்தவர்களானாலும் சரி, தொழிற்துறையை சேர்ந்தவர்களானாலும் சரி, பணியாளர்கள் ஆனாலும் சரி, எதுவுமே பற்றற்ற நிலையில் வாழ்ந்து கொண்டு, வாழ்க்கை என்பதே இவ்வளவுதான் என்று விரக்தியின் உச்சத்திலே, மனித ஜடம் போல் நடமாடிக் கொண்டிருக்கும் அத்தனை பேர்களுக்குமே, அகத்தியன் மட்டுமல்ல, இங்குள்ள 9 சித்தர்கள் சார்பிலும், அவர்களுக்கு எந்த வித குறையும் இல்லாமல், அவர்கள் நினைத்ததை சாதிக்கவும், இழந்ததை மீண்டும் பெறவும், அது எந்த பதவி சுகமாகவும் இருக்கலாம், பண சுகம் இருக்கலாம். அவர்கள் அதை மீண்டும் பெற வைக்கிறேன்.

யார் யாரும் இங்கிருந்து ஒரு பொருளை கூட எடுத்திருக்கக்கூடாது. பிறர் பொருளை அபகரித்திருக்கக் கூடாது. அப்படி அபகரித்திருந்தாலோ, எமாற்றினாலோ, அல்லது அவர்களை வஞ்சகம் செய்து கீழே தள்ளிவிட்டார்களோ, அவர்கள் அத்தனை பேர்களும், இன்றைய தினம் மெய் உணர்ந்து, தான் செய்த தவறை உணர்ந்து, அவர்கள் அத்தனை பேர்களையும், மன்றாடி மன்னிப்புக் கேட்க்க வைக்கப் போகிறேன். அந்த காரியம் வெகு சீக்கிரத்தில் நடக்கப் போகிறது. அப்பொழுதுதான், மனித நேயம் என்பது மட்டுமல்ல, தெய்வ நேயம் என்பது மட்டுமல்ல, அகத்தியன் போல சித்தர்கள் எல்லாம் இந்த அரும்பணி ஆற்றி வருகிறோமே, அதற்கெல்லாம் ஒரு உதாரண புருஷனாக, ஒரு உதாரண சம்பவமாக, இந்தக் காட்சி இன்னும் நடக்கப் போகிறது. அதைத்தான் குறிப்பிட்டு சொன்னேன், ஒரு நண்பர் ஒருவருக்கு. இன்றிலிருந்து 13 நாட்களுக்குப் பின் நல்லதொரு காரியம் நடக்கும் என்று சொன்னேன். 13வது நாள் அன்று கதவை திறந்து பார்த்துவிட்டு, நல்லது நடக்கவில்லை என்று அகத்தியனை பழிக்கக் கூடாது. ஏன் என்றால், அன்றைக்குத்தான், உன் தலை எழுத்தே, உன் விதியே மாறப் போகிறது.

சித்தன் அருள் .............. தொடரும்!

Thursday 2 January 2014

சித்தன் அருள் - 157 - நம்பிமலை - தாய் பாதம்!

[நம்பிமலை பாதை]


நண்பரின் அரசியல் சம்பந்தப்பட்ட கேள்வியால் சற்றே கோபப்பட்ட அகத்தியர் உடனேயே கோபம் தணிந்து ஒரு புது அத்யாயத்தை கூறத்தொடங்கினார். வந்த செய்திகள் அனைத்தும் எங்கள் அனைவரையும் மலைக்க வைத்தது.

"உணவருந்த சென்ற அன்னவனும் வரட்டுமே. பிறகு சில விஷயங்களை உரைக்கிறேன். அங்கும் சில விஷயங்கள் உண்டடா" என்று வந்தது.

அப்போது பார்த்த போது, குழுவில் ஒருவர் சாப்பிடப் போய்விட்டு வந்து கொண்டிருந்தார். மற்றவர்கள் அவரை அவசரப்படுத்தி வேகமாக வரச்சொன்னார்கள். எல்லோருக்கும் அடுத்தது அகத்தியப் பெருமான் என்ன சொல்ல போகிறார் என்பதில் அறிந்து கொள்வதில் "த்ரில்" இருந்ததில் ஆச்சரியமில்லை.

அவரும் வந்து அமர்ந்ததும், நாடியை புரட்டினேன். அகத்தியரும் கூறலானார்.

"இன்று வரையில் எண்ணற்றச் செய்திகள் இந்த மலைக்கு உண்டாம். இந்த மலைக்குப் பக்கத்தில் இருக்கிற, ஆங்கொரு "தாய் வழிப்பாதை" என்று, ஆண்டு 1246 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாம். பெரும்பாலும் தெய்வங்கள் எல்லாம் இக்கோயிலில் தங்குவதை விட, "தாய் பாதத்தில்" தங்கிவிட்டு, அங்கிருந்து பூமிக்கு அடியில் சுரக்கின்ற ஒரு சுனையில் அங்கு தீர்த்தமாடி, அந்த சுனை நீரால், தேவர்கள் கொண்டுவரும் அமுதத்தைப் படைத்து, உண்டு, பிறகு இங்கு உலா வருவது வழக்கம். இன்றைக்கும் அந்த பாதம் அங்கு இருக்கிறது. அதற்கு பக்கத்திலே, 12 காத தூரம், (ஒரு காதம் என்றால் ஒரு கிலோ மீட்டர் என்று சொல்லலாம்) இடது பக்கம் திரும்பினால், மிகப் பெரிய ஒரு குகை ஒன்று உண்டு. அந்த குகையில் இன்றைக்கு, ஏறத்தாழ, 4214 ஆண்டுகளாக, தவம் செய்கின்ற முனிவர் இன்றைக்கும் அங்கு இருக்கிறார். பெயர் ஏதும் சொல்லவேண்டாமா என்று கேட்கலாம். "பெயரில்லா முனிவர் என்று அவருக்குப் பெயர்". அவர் எப்படி வந்தார், ஏன் வந்தார் என்பதெல்லாம், மிகப் பெரிய ஆராய்ச்சியடா! அன்னவன், இன்றுவரை, அந்தக் கோயிலில், அந்த குகையின் நடு வழியில், அமர்ந்திருப்பது வழக்கம். கோவிலுக்கு நடுவிலே அவன் அமர்ந்திருக்கின்ற பாறைக்குப் பக்கத்தில், அமுதமான நதி ஒன்று அதுவழி செல்லும். அந்த நதியிலுள்ள நீரை எடுத்துக் குடித்தே அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆகவே, நீர் குடித்து வாழுகின்ற அந்த சித்தனுக்கு, "நீர்குடி சித்தன்" என்று பெயர். இன்றைக்கும், ஒரு அளவு, ஒரு பகுதி, ஒரு சொட்டே நாக்கில் விட்டுக் கொண்டால் போதும். அவனுக்கு ஆண்டு ஒன்றுக்கு பசி இருக்காது. அன்றைக்கே, அந்த மகான் சித்தன் அருகிலேயே அந்த குகை இருக்கிறது. தாய் பாதத்திலிருந்து நேரே 12 காத தூரம் சென்றால், ஒரு பாறைக்கு நடுவிலே, அங்கே, "நாராயணா, நாராயணா" என்று சத்தம் கேட்கத்தான் செய்யும். குனிந்து செல்பவர்கள் அதை கேட்டால், அங்கு தெய்வத்தையே காணலாம். அன்னவன் செய்கின்ற தவத்தை ஒட்டி, எம் பெருமான் நம்பி பெருமானும், மற்றவர்களும், அகத்தியன் உள்பட, அனைவரும், அங்கு சென்று அவனை வழிபடுவது வழக்கம். ஏனடா! பார்ப்பதற்கு ஒரு மகான். என்னைவிட ஏறத்தாழ, 123 ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருக்கிற அதிசயம் அங்கு நடந்து கொண்டிருக்கிறது. அவன் வெளியே வர மாட்டான். வேறு எந்த சித்த செயல்களும் செய்ததாக தெரியவில்லை. ஆனால் நீர் குடித்தே வாழ்கின்ற மகான் ஒருவன் இன்றைக்கும் தாய் பாதத்தில் பக்கத்தில் இருப்பது ஆச்சரியம் தான். முடிந்தால், சென்றால் அங்கு கண்டு கொள்ளலாம். ஆனால், சற்று எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். பொல்லாத பூச்சிகளும், மற்ற மிருகங்களும், அங்கு சுற்றி வாழ்ந்து கொண்டிருப்பதால், அவைகள்தான் அவனை காவல் தெய்வமாக நின்று பாது காக்கிறது. 
 [நம்பிமலை - தாய் பாதம்]
  [நம்பிமலை - தாய் பாதம்]
  [நம்பிமலை - தாய் பாதம்]
 [நம்பிமலை - தாய் பாதம்]
[நன்றி: நந்தி வலைபூ]
சற்று முன் ஆங்கோர் தகவல் கூட அகத்தியனுக்கு கிடைத்தது. இன்றைய தினம் இந்த நம்பி மலையில் 9 சித்தர்கள் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த 9 சித்தர்களும், இவர்கள் அனைவருக்கும் பக்க பலமாய் இருப்பதை அகத்தியன் யான் அறிவேன். தனிமையில் மாட்டிக் கொண்டிருக்கிறோமே, எப்படியடா? என்ற ஒரு கேள்வி, ஒரு சிலருக்கு, அடிவயிற்றில், லேசாக நரம்பு தெரித்ததெல்லாம் அகத்தியன் யாம் அறிவேன். ஆக எந்த வித பயமும் இல்லாமல் இந்த நம்பி மலையில் இன்றைய தினம் 9 சித்தர்களும் சுற்றி வந்து காப்பதை அகத்தியன் யாம் சொல்லுகிறேன். சித்தர்கள் காப்பது மட்டுமல்ல, அவர்கள் கருணையும் உங்களுக்கு கிடைக்கும். ஆக, எந்த வித தீங்கும் நடக்காமல், நல்ல வித பொழுதாக நாளை விடியும்.

"இங்கிருந்து 32 காத தூரம் சென்றால், வடபுலத்தில் ஆங்கோர் சிறு மலை இருக்கிறது. மலைக்கு அருகிலே சிறு குன்று ஒன்று உண்டு. அந்தக் குன்றுக்கு தென்கிழக்கு திசையில், அக்னி தீர்த்தம் போல் ஒரு ஊற்று வந்து கொண்டிருக்கிறது. அந்த தீர்த்தம் ஆச்சரியப் படும்படியான தீர்த்தம். அது குளிர்ந்த நீரல்ல, கொதிக்கின்ற நீராம். அக்னி என்று கொதிக்க வைத்த நீர் போல, அது இன்றைக்கும் ஆவி பறக்கிற தீர்த்தம். இந்த மாதிரி தீர்த்தத்தை, ஒன்று வடபுலத்தில் கங்கை நதிக்கரையில் தான் காண முடியும். ஆக, அதயெல்லாம் தாண்டி, மலையிலே "அக்னி தீர்த்தம்" இருக்குமாடா என்று கேட்கலாம். அக்னி என்பது கொதிப்பது மட்டுமல்ல.அந்த தீர்த்தத்தை ஒரு முறை உண்டுவிட்டால், ஆண்டு 30க்கு "ஜுரம்" என்பதே வராது. கடும் ஜுரம் வராது, எந்தெந்த பெயரை வைத்து எந்தெந்த உஷ்ண தேவதையை அழைத்தாலும், நெருங்கி வர மாட்டாள், எந்த தொல்லையும் தராது. ஜுரத்துக்காக "ஜுரேஸ்வரர்" என்று ஒரு கோயில் உண்டு. அந்த கோயிலுக்கு சென்றால், இன்றைக்கு யார் வேண்டுமானாலும், ஜுரமடிக்கிற குழந்தைகளை, அந்த கோயில் வாசலிலே போட்டுவிட்டு, ஜுரேஸ்வரருக்கு, வெந்நீரும், மிளகு கஷாயமும் அபிஷேகம் செய்வதை இன்றைக்கும் பார்க்கலாம். ஒரு முறை இந்த வெந்நீரை அபிஷேகம் செய்து, மிளகு கஷாயத்தையும் நிவேதனமாக காட்டிவிட்டால், அந்தக் குழந்தைக்கு, எப்பேர்ப்பட்ட ஜுரமானாலும் விலகிவிடும். அந்த மாதிரி கோயில் உண்டு, தஞ்சை மாநகரிலே. தனியாக ஒதுக்குப் புறத்தில் இருக்கிறது. அதைத்தான் எல்லோருமே, கேள்விப்பட்டிருப்பார். எதற்காக, இந்த தகவலை சொல்லுகிறேன் என்றால், தங்கத்தின் பெயர் கொண்ட மன்னனுக்கு (தங்கராசன்) அன்னவனுக்கு, நல்லதொரு செய்திகளை சொல்லவேண்டும். அவன் அடிக்கடி இங்கிருந்து மலை ஏறி, எவ்வித பயமும் இன்றி அப்படியே வலம் வந்து சித்தர்கள் தரிசனமும் பெற்று, அப்படியே பொதிகை மலை வந்து, உலா வந்து, பின்னர் வருவது வழக்கம். அன்னவன் அடுத்தமுறை செல்லும் போதெல்லாம், இங்கிருந்து 30 காததூரம் சென்றால், அந்த மலையில் அக்னி தீர்த்தத்துக்கு அருகில் ஒரு சிறு குகை வரும். மலையை தொட்டால், சற்று உஷ்ணமாக இருக்கும். அந்த மலையை சற்று எட்டிப் பார்த்தால், கரடு முரடாக இருக்கும், சற்று பாசி படிந்திருக்கும். சாதாரணமாக ஏதோ துர்நாற்றம் வீசுவது போல கெட்ட நாற்றம் கூட வீசலாம், பயப்படக் கூடாது. அங்கு, அழுகுணி சித்தர் என்பவர் அமைதியாக அமர்ந்து, அக்னி தீர்த்தத்தில் அன்றாடம் குளித்துவிட்டு செல்வது வழக்கம். அந்த அக்னி தீர்த்தத்தை, ஒருவன், ஒருமுறை வெளியே கொண்டுவந்துவிட்டு, அதில் சிறிது மிளகு கஷாயத்தை கலந்து குடித்தால், ஆண்டு 42 ஆண்டுகளுக்கு, அந்த நபருக்கு எந்தவித உஷ்ணம் சம்பந்தமான நோயோ, பித்த நோயோ, கபாலத்தில் ஏற்படும் நோயோ, ஞாபக மறதியோ, அல்லது மூளைச் சிதைவோ, எதுவுமே ஏற்படாது. அத்தனை மருத்துவம் வாய்ந்த அக்னி தீர்த்தம், இங்கிருந்து 32 காத தூரத்தில் இருக்கிறது. அங்கிருந்து 48 காத தூரம் சென்றால், மற்றொரு அருமையான குகை ஒன்று வரும். நீர்வீழ்ச்சி போல தானே அருமையாக கொட்டிக் கொண்டிருக்கும். அதை பருகுவதற்காக, பல்வேறு சித்தர்கள் எல்லாம், வண்டு போல, பட்டாம் பூச்சி போல பறந்து கொண்டு அதை குடிப்பது வழக்கம். எங்கேயாவது கேட்டிருக்கிறாயா இந்த அதிசயத்தை. பட்டாம் பூச்சிகள் வந்து பூவில் உள்ள தேனைத்தான் எடுக்கும். ஆனால் இந்த மலையின் 42 காத தூரம் இருக்கின்ற மலை மேலே, அந்த குன்றிலிருந்து வருகின்ற நீரிலே, பட்டாம் பூச்சிகள் தும்பிக்கையை நீட்டி அங்கிருந்து வருகின்ற நீரை குடித்து மகிழும். எந்தெந்த நீரில் அது தும்பிக்கை நீட்டுகிறதோ, அதன் தும்பிக்கையில் தேன் ஒட்டிக்கொள்ளும். தேன் கலந்து வருகின்ற ஒரு தீர்த்தமும் அங்கு இருக்கிறது. அக்னி தீர்த்தமும் இருக்கிறது,  ஆம்! தேன் கலந்த தீர்த்தமும் இருக்கிறது. 42 காத தூரத்தில் இந்த அதிசய காட்ச்சியை காணலாம். எதற்காக சொல்லுகின்றேன் என்றால், யாரும் செல்ல முடியாத இடம் அது. பயங்கரமான, கால் வைக்க முடியாத, சற்று சறுக்கலான பாறைகள் உள்ள இடம். அந்த பாறைகளில் ஒரு கை வைத்தால், நடுங்கி, உருண்டு விழுந்து 2000 அடி கீழேதான் விழவேண்டி இருக்கும். எந்த வித பாதுகாப்பும் இல்லை.

ஆனால், யார் யார், அந்த வழி செல்கிறார்களோ, அங்கெல்லாம் அழுகுணி சித்தரும், இடைக்காட்டு சித்தரும், அங்கு அமர்ந்து, பக்க பலமாய், இரு பக்கமும் நின்று கொண்டு, வருகிற போகிறவர்களை எல்லாம் பாதுகாத்து, பக்குவமாக கரை ஏற்றி விடுகிறார்கள். அது மட்டுமல்ல. இன்னும் சொல்லப்போனால், ஆச்சரியமான சம்பவம், இன்னொன்றும் நடக்குமடா!

சித்தன் அருள்.................. தொடரும்!