​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 25 April 2019

சித்தன் அருள் - 807 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!


"சுத்தம் என்பது உடல் சார்ந்ததா? மனம் சார்ந்ததா?"

"முதல் நிலையில் இரண்டும் சார்ந்தது. பிறகு, எவன் ஒருவன் மனதை சுத்தமாக வைத்துக்கொள்கிறானோ, இரு நிலை ஒன்றாகி, அவன் மனமே சுத்தமாகிவிடுவதினால், அதுவே பௌதீக உடலை சுத்தமாக வைத்துக்கொள்ளும். அந்த சுத்த நிலையில், அவனுக்கு வாக்கு வன்மை வந்துவிடும். அவன் சொல்வது, வேண்டுவது அனைத்தும் உடனேயே நடக்கும், அதுவும், இறை அருளினால். இவ்வுலகில், பலதரப்பட்ட நிலையில் "சுத்தமான ஆத்மாக்கள்" உள்ளனர். வாக்கு சுத்தம், அமைதி சுத்தம், எண்ணம் சுத்தம், அருளும் சுத்தம், செயல் சுத்தம். இவர்கள் ஒவ்வொருவரும், அவரவர் வழியில், இறைவன் உத்தரவை நிறைவேற்றுகிறார்கள். அனைத்து பெருமைகளையும், இறைவன் காலடியில் சமர்ப்பிக்கிறார்கள். அதனால்தான், இன்றும் பாரத பூமி கர்மா பூமியாயினும், தர்ம பூமியாக திகழ்கிறது." என்றார்.

"தர்ம பூமியில், இத்தனை அதர்மமும் கூட வாழ்கிறதே?" என்று கேள்வியை மாற்றிப்போட்டேன்.

"தர்மத்தின் வாழ்வு தன்னை, சூது கவ்வும், தர்மம் வெல்லும் என்ற இறை வாக்கியம் வழிதான், தர்மத்தின் மதிப்பு, கலியுகத்தில் மனிதருக்கு உணர்த்துவதற்காக, இறைவன் நடத்தும் நாடகம். என் முன்னே அமர்ந்திருக்கிறான், அனைத்திற்கும் சாட்சியாக இருக்கிறான் என்பதற்காக, நந்திகேஸ்வரர், சிவபெருமானிடம், பூமியில் அவரை நினைத்து தவமிருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்ட பொழுது, உடனேயே அருளினாலும், அவருக்கு அத்தனை பிரச்சினைகளையும், தவத்திற்கு இடையூராக இருக்க, சிவபெருமான் செய்ய வில்லையா? இதன் அர்த்தம் என்ன? உயர்ந்த எதுவும் எளிதாக அடைய முடியாது. அத்தனை சோதனைகளையும் கடந்து வந்துதான் ஆகவேண்டும் என்று மனிதருக்கு உணர்த்தவே. சோதனைகள் ஒருவனை புடம் போடுகிறது. அவனுள் இருக்கும் கசடுகளை வெளியேற்றுகிறது. அந்த சுத்தமான நிலையில்தான் ஒருவன் இறையை உணர தகுதியானவனாக ஆகிறான். உலகியல் வாழ்க்கையில் இருக்கும் உன்னையும் சேர்த்து பலரும் இங்கு வந்து அமர்ந்து பேசும் பொழுது, அவர்கள் கர்மாவுடன் நாங்களும் கலந்து அசுத்தமாகிறோம். ஆனால், பிறகு, எங்களை எப்படி சுத்தம் செய்து கொள்வதென்பது, எங்களுக்கு தெரியும். உங்களை போன்றவர்களின் தவறென்று நங்கள் கருதுவதில்லை. ஒரு நதி போல நாங்களும், மனிதர்களை சுத்தம் செய்கிற வேலையை பார்க்கிறோம், அவ்வளவுதான்." என்றார்.

இந்த தகவல் சற்று அதிர்ச்சியாக இருந்ததால், சற்று நேரம் அமைதியாக இருந்தேன். என்ன கேட்பது என்று தெரியவில்லை. அதை புரிந்து கொண்ட பெரியவர் சூழ்நிலையின் இறுக்கத்தை தணிக்க,

"நான் கூறியது உண்மை. இதை உண்மையாக எடுத்துக்கொள்ளுங்கள். முடிந்தால், எங்கேனும் ஒரு பெரியவரை காண நேரின், அவரை அருகில் சென்று தொந்தரவு செய்யாமல், விலகி நின்று, கும்பிட்டுவிட்டு போய்விடுங்கள். அது போதும். அப்படிப்பட்டவர்கள், பொதுவானவர்கள். அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வேலைக்கு நீங்கள் யாரும் தடங்கலாக இருக்கவேண்டாம், என்பதற்காக இதை கூறுகிறேன். அவர்கள் வேகத்தை குறைத்துவிடாதீர்கள். இந்த கர்ம பூமிக்கு நீங்கள் செய்யும் உயர்ந்த சேவை, அதுதான்." என்றார்.

அவர் சொல்வதிலும் உண்மை இருக்கிறது என்று உணர்ந்தேன். ஆம்! நானே மிக கவனத்துடன் ஒரு வேலையை செய்யும் பொழுது, குறுக்கீடுகள் வந்தால், எரிச்சலடைவேன். நான் பார்க்கும் வேலை, ஒரு குடும்பத்தை நிலை நிறுத்துவதற்காக. அதற்கே இப்படி என்றால், இவ்வுலக மனிதர்கள் அனைவருக்காக வேலை பார்க்கும் ஒருவர் எத்தனை பாரத்தை சுமந்து திரிவார். அவருக்கு, நம் குறுக்கீடுகள், எத்தனை தடங்கல்களாகி, அவர் வேகத்தை குறைக்கும்?" என்று யோசித்தேன்.

"கர்மா, தர்மம், பெரியவர்கள் வழியாக, இவ்வுலகம் இந்த அளவுக்காவது இன்று சிறந்து விளங்குகிறது என்று உணர்கிறேன் அய்யா! ஒரு மனிதன், முதலில் தன் உடலை ஆரோக்கியமாக, சுத்தமாக வைத்துக்கொண்டு வாழ்க்கை பாதையில் நடந்து சென்றால், இந்த சித்த மார்க்கத்தின் எந்த எல்லை வரை செல்ல முடியும்? ஆரோக்கியத்தை மேம்படுத்த சில வழிகளையும்  கூறுங்களேன்!" என்றேன்.

"தின வாழ்க்கையில் எத்தனையோ வழிகளை, நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி தந்து சென்றிருக்கிறார்கள். அதை தொடர்ந்து பின்பற்றி வந்தாலே, ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழலாம். ஆனால், வாழ்க்கையின் தேவைகளுக்கான தேடல்களுக்கு தன் முழு நேரத்தையும் செலவிடும் மனிதனுக்கு, தன்னை அறிய, தன் கடமைகள் என்ன என்று தேடுவதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. இதுதான் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம். எத்தனைநாள், கட்டு சோறும், கொம்புப்புல்லும், சாப்பாடு போடும் என்று யோசிப்பதில்லை. இருந்தாலும், கேட்டதற்காக சொல்கிறேன். ஒரு மனிதனுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்தால் தான், மன ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஏன் என்றால் இந்த உடலைதானே "நான்" என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். ஆகவே உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள என்னவெல்லாம் தினமும் செய்யலாம் என்று கூறுகிறேன்." என்றார்.

"கண் பார்வை" ஒரு மனிதனுக்கு மிக மிக முக்கியமானது. பார்வை இழந்த ஒருவனால், இவ்வுலகில் எதையும் உணர முடியாது. கேள்வி ஞானம் மட்டும்தான் அவன் வாழ்க்கையை நடத்த உதவி புரியும். மேலும் கடைசி வரை தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முழுமையாக, அவன் பிறரை சார்ந்தே இருக்கவேண்டி வரும். "பார்வை குறைவு" என்கிற நிலை இந்த சமூகத்தில் 90 சதவிகிதம் மனிதர்களை பாதித்துள்ளது. முன் காலத்தில், 90 வயசான பெரியவர் கூட, கண்ணாடி அணியாமல் வாழ்ந்து, தினசரி கடமைகளை தானே நிறைவேற்றி வந்ததை பார்த்திருக்கலாம். இன்றைய காலகட்டத்தில் அப்படி பார்ப்பதே மிக மிக அரிது. பிறந்து 3 வயதிற்குள்ளேயே, கண் குறைபாட்டை அடைந்து, கண்ணாடியுடன் வளரும் குழந்தைகள் ஏராளம். இது ஏன் என்று ஒருவரும் கேட்பதில்லை, கவனிப்பதில்லை. வருடம் செல்லும்தோறும், கண்ணாடியின் அளவு தடிமனாகி, ஒரு நிலையில், அது இல்லை என்றால், ஒன்றுமே தெரிவதில்லை என்கிற நிலைக்கு கொண்டு சென்றுவிடுகிறது. நேற்றுவரை, நன்றாக இருந்த கண் பார்வை, இன்று ஏன் குறைந்துபோனது, என்று கூடவா யோசிக்கத் தெரியாது. நீங்கள் தினமும் வாழும் முறையில் செய்கிற தவறுகள்தான், இதற்கு காரணம் என்று கூடவா புரியவில்லை?" என்று நிறுத்தினார்.

சித்தன் அருள்....................... தொடரும்!

Friday 19 April 2019

சித்தன் அருள் - 806 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!


பூணூலை பற்றி பேசினாலே, பொதுவாக இவ்வுலகில் பிரச்சினைதான் வரும். இருப்பினும், என் கேள்விக்கு உனக்கு தெரிந்த விடையை கூறு. பூணூல் போடுகிற நிகழ்ச்சியை என்னவென்று கூறுவார்கள்?

"உபநயனம் என்பார்கள்" என்றேன்.

அந்த வார்த்தையின் அர்த்தம்?

"ஒருவனை இறையிடம் அழைத்துச்செல்வது" என்று கூறுவார்கள்!

'சரியான பதில். இதை நாங்கள் "ஒருவனுக்கு" "அவனை" அறிமுகப்படுத்துவது, என்று கூறுவோம்" என்றார். இங்கு அவன் என்பது இறைவன் அல்லது அந்த மனிதனின் உண்மை சொரூபம் எனக் கொள்ளலாம். பிரளயகாலம் முடிந்து யுகம் தொடங்கும் நேரத்தில், மஹாவிஷ்ணுவுடன், பூணூல் தோன்றியது என்று புராணங்கள் கூறுகிறது.

சிவபெருமான் கையிலிருக்கும் சூலம், பூணூல், முருகரின் கையிலிருக்கும் வேல், போன்றவை, ஒரு மனிதனுக்குள் ஓடும் வாயுவை குறிக்கும். இடைகலை, பிங்களை, நடுமத்தியாக சுழுமுனையை குறிக்கும். எந்த ஒரு மனிதனும், தன்னை அறிய, இறை நிலையை உணரவேண்டுமானால், உள்ளே மூன்றாக ஓடும், பிராண வாயுவின் காலை பிடிக்க வேண்டும், என்பதை உணர்த்தவே, இறையே இறங்கி வந்து, இந்த சின்னங்களை நமக்கு காட்டி, சூக்க்ஷுமமாக உணர்த்துகிறது. நீயே உணர்ந்திருக்கலாம், ஒருவனுக்கு பூணூல் போட்டபின், வீட்டில் இருக்கும் பெரியவர்கள், அவன் குறைந்தது இரண்டு நேரம், பிராணாயாமம், சந்தியாவந்தனம் பண்ணுகிறானா என மேற்பார்வை செய்வார்கள். அவனுக்கு உரைக்கப்பட்டது மிகப்பெரிய பொக்கிஷம். அதை அவன் பத்திரமாக பயிற்சி செய்து பாதுக்காக்கிறானா? மேலும் முன்னேறுகிறானா  என்று சோதிப்பார்கள்.  மூன்று நூல்கள் - பிரம்மச்சரியம், ஆறு நூல்கள் - மணமாகிய குடும்பநிலை, ஒன்பது நூல்கள் - பிதுர்கர்மா என நூல்களின் எண்ணிக்கை, ஒருவன் வளர்ச்சியை குறிக்கும். எவனொருவன் பிராணாயாமத்தை சரியாக செய்து வருகிறானோ, அவன் ஒன்பதை அடையும் பொழுது, உடல் மெலிந்து, தேஜஸ் நிறைந்து வழிய, எங்கும் ஒரு நல்ல தன்மையை பரப்புபவனாக மாறுவான். இது கூட, குடும்ப சூழ்நிலையில் இருந்தாலும், சித்த மார்க்கத்தின் முக்கிய குறிக்கோளை, தன் கடமைகளை குடும்பத்துக்கு சரிவர செய்வதினால், எளிதாக அடைந்துவிடலாம், என மனிதனுக்கு உணர்த்துவதே, இறையின் விருப்பமாகும்.

நெடு நேரம் பேசிக்கொண்டிருந்தால், சற்று தாகம் எடுக்கவே, பெரியவர், இளையவரை அழைத்து "நீர் கொண்டுவா!" என்றார்.

இளயவரோ, போகும்முன் "உங்களுக்கு ஏதேனும்  வேண்டுமா?" என்றார்.

"ஒரு காப்பி கிடைக்குமா?" என்றுவிட்டேன்.

சிரித்துக்கொண்டே உள்சென்றவர், பெரியவருக்கு நீரையும், அடியேனுக்கு காப்பியையும் கொண்டு தந்துவிட்டு, "நேற்று நீங்கள் என்னிடம் கேட்ட கேள்வியை இப்பொழுது பெரியவரிடம் கேளுங்களேன்" என்று சொன்னார்.

"என்ன கேள்வி?" என்பதுபோல் பெரியவர் அடியேனை பார்த்தார்.

"பால் என்பது பசுவின் ரத்தத்திலிருந்துதானே கிடைக்கிறது. பின்னர் எப்படி அது சாத்வீகமாகும், சைவமாகும்? இதற்கு சித்தமார்கம் என்ன விடையளிக்கிறது?" என்றேன்.

"ஹ்ம்ம்  நல்ல கேள்வி! ஒருவனின் உடலில் ஓடும் ரத்தம், உள்ளிருக்கும் இருக்கும் எலும்பு, சதை, நரம்பு போன்றவை அவன் பெற்றோர்களால் பகிரப்பட்டு, அவன் பிறந்த பொழுது தாயிடமிருந்து பால் குடித்து வளர்கிறானே, அப்படிப்பட்ட நிலையில் அந்த குழந்தை வளர்வது சைவமா? அசைவமா? " என்று நிறுத்தினார்.

"என்னிடம் பதில் இல்லை" என்றேன்.

"உன்னிடம் ஒரு நூறு ரூபாய் இருக்கிறது. எனக்கு அது தேவை. உனக்கு தெரியாமல் அதை நான் எடுத்துக் கொண்டுவிட்டால், என்னை என்னவென்று அழைப்பாய்?" என்றார்.

"திருடன் என்றழைப்பேன்"

"அதே ரூபாயை, நான் கேட்க, நீயாக எனக்கு தந்தால்?"

"தானம் வாங்கியவர் என்றாகின்றீர்"

"அதெப்படி ஒரு விஷயமே, இரண்டு வித சூழ்நிலையை உருவாக்குகிறதோ, அதுதான் பால் விஷயத்திலும். ஒரு தாய் தன் குழந்தைக்கு விரும்பி பால் கொடுக்கிற நிலையில் இருக்கிற மனநிலையில் அது தோஷத்தை சுமப்பதில்லை. அது போல் விரும்பி பாலை தருகிற பசுவின் நிலையில் தோஷம் இல்லை. இருந்தாலும், உலகில் மனிதனுக்கு என்று படைக்கப்பட்ட விஷயங்கள் அனைத்திலும் தோஷம் உண்டு. அதனால்தான், ரிஷிகளும், முனிவர்களும், சித்தர்களும், பிறவியே வேண்டாம் இறைவா என்று வேண்டுகிறார்கள். ஒரு உயிரை அழித்து உயிர் வாழும் பொழுது, மன்னிக்க முடியாத குற்றம் உருவாகிறது. அதே நேரத்தில், பிற உயிரை வாழவைத்து, தானும் வாழும் பொழுது, மன்னிக்கக்கூடிய குற்றம் உருவாகிறது. எனவேதான், சித்தர்கள், பெரியவர்கள் அனைவரும் சர்வம் இறைவனுக்கு அர்ப்பணம் என்று வாழ்கிறார்கள். நம்மை, எந்த புகழுக்கும், பெருமைக்கும் அடிபணியாமல் இருக்க சொல்கிறார்கள்!" என்றார்!

"ஹ்ம்ம்! இருந்தும் மனிதர்கள் புரிந்து வாழ்கிறார்களா?"

"ஆம், இல்லை போதாது என்பதே பதில்" என்றார்.

"இன்றும் சித்தர்களை வருத்தப் படவைப்பது மனிதனின் அசைவம் உண்ணும் ஆசை, பிற மனிதர்கள்/பொருட்கள் மீதான பொறாமை/எண்ணம், தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்கிற மனிதனின் மன நிலை, தன் அகம்பாவத்தால், யோசிக்க முனையாத மனத்தால், தன் வாழ்க்கையை மிக மிக சிக்கலாகிக்கொண்ட நடவடிக்கைகள். இவை அத்தனையும் மிக கொடுமையான கர்மாவை சேர்க்கும் என்று தெரிந்தும், தொடர்ந்து செய்கிறார்கள். என்று ஒருவன் தன் வலியை உணர்கிறானோ, அன்று முதல் அவன் திருந்துவதற்கு வாய்ப்பிருக்கிறது. சரியாக புரிந்து கொள், வாய்ப்பிருக்கிறது. எளிய வாழ்க்கையை போதிப்பதே சித்த மார்க்கம். அப்படி வாழத்தொடங்கிவிட்டால். இருப்பதெல்லாம் அதிகமாக தோன்றத் தொடங்கும். அப்பொழுது பிறரை பற்றிய எண்ணம் வந்தால், கர்மா நன்றாக இருந்தால், அதிகமானதை தானம் செய்ய முடியும். அங்கு, புண்ணிய கார்யம் தொடங்குகிறது. நல்ல எண்ணம் எங்கும் பரவ அவன் காரணமாகிறான். அதனால் தான் திருந்துவதும், தொடங்குவதும் ஒருவன் உள்ளிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்கிறோம். அப்படி ஆரம்பித்துவிட்டால், அவன் மனம், எண்ணங்கள், செயல்கள், உடல் எல்லாம் ஆரோக்கியமாக இருக்கும். பஞ்ச பூதங்களின் எந்த பாதிப்பும், அவன் உடல் அளவில் தாங்குவது எப்படி என்று படிக்கத் தொடங்கிவிடுவான். பின்னர் அவன் வாழ்க்கையே, இயற்கையாகிவிடும். இந்த இயற்க்கை தன்மையே அவனுக்கு, அவனுள் இருக்கும் இறைவனை அறிமுகப்படுத்தி வைக்கும். அதன் பின்னர் அவன் சுத்தமாகிவிடுவதால், யாருக்காக அவன் வேண்டிக்கொண்டாலும், அது உடனேயே அவர்களுக்கு கைவல்யமாகிவிடும்" என்று ஒரு பேருண்மையை போட்டு உடைத்தார்.

சித்தன் அருள்.............. தொடரும்!

Sunday 14 April 2019

சித்தன் அருள் - 805 - ஓதியப்பரும், அகத்தியரும், புத்தாண்டும்!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்று தொடங்கும் "விகாரி" வருட புத்தாண்டு, உங்கள் அனைவருக்கும், இறைவன், அகத்தியப்பெருமான் அருளுடன் நிறைவான, நிம்மதியான வாழ்வை அருளட்டும், என அகத்தியப்பெருமானின் "சித்தன் அருள்" வலைப்பூ சார்பாக வாழ்த்துகிறோம்!

பாலாராமபுரம் அகத்தியர் கோவில் திருவிழா மிகச்சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. நேற்றைய தினம், எரித்தாவூர் என்கிற மலைக்கோவிலிலிருந்து முருகர் இறங்கி வரவே, அகத்தியப்பெருமான் அவரை எதிர் கொண்டு மரியாதை செய்து, அவர் கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் இருவரும் கோவில் முன் அமர்ந்தபின், கிராமத்தின் அனைத்து தெரு வழியாகவும் சென்று அனைத்து மக்களையும் ஆசிர்வதிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

அப்பொழுது எடுக்கப்பட்ட இரண்டு வீடியோக்களையும் ஒரு சில படங்களையும், நீங்கள் கண்டு இன்புற கீழே தருகிறேன்.

[எரித்தாவூர் முருகர் மலையிலிருந்து இறங்கி வரும் காட்சி]


[முருகருக்கும் அகத்தியப்பெருமானுக்கும் அடியவர்கள் சார்பாக புஷ்பாபிஷேகம்]


அகத்தியப்பெருமானுக்கு சித்தராக அலங்காரம்!


முருகரும், அகத்தியப்பெருமானும் கோவில் முன் அமர்ந்திருக்கும் காட்சி!



ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்................. தொடரும்!

Saturday 13 April 2019

சித்தன் அருள் - 804 - பாலராமபுரம் லோபாமுத்திரா சமேத அகத்தியர் கோவில் திருவிழா!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

பாலராமபுரத்தில் உள்ள அகத்தியர் கோவிலில் நம் குருநாதர், லோபா முத்திரா தாய்க்கான இந்த வருட திருவிழா, மிகச்சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நாட்களில், புஷ்பாபிஷேகம், பூஜைகள் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை, உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்.









ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள் ........................ தொடரும்!

Thursday 11 April 2019

சித்தன் அருள் - 803 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

"நிமித்தம்" என்கிற தலைப்பில் நிறுத்தி வைக்கப்பட்ட, "சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்" தொடர்கிறது.

"நிமித்தம்" என்கிற வார்த்தையின் அர்த்தமே, இந்த நேரம். அது நிகழ்காலம். அங்கிருந்து உடனடியான எதிர்காலத்தை ஒருவர் சரியாக கணிக்கலாம். அதற்கென நிறைய சாதனை செய்ய வேண்டும். சிலருக்கு அந்த சாதனை, எளிய மூச்சு பயிற்சி எப்பொழுதும் செய்வதனால், எளிதாக கைவல்யமாகும். இங்கு கவனிக்கப் படவேண்டியது ஒன்று தான். அந்த பயிற்சியை சாதனை செய்பவர், தன் சித்தத்தை ஒரு பொழுதும் கலய விடுவதில்லை. தேவை இல்லாத அதிர்வுகளை, தன்னுள் புக விடுவதில்லை. சித்தம் நிலைத்தவருக்கு, எந்த வித பெரிய இரைச்சலான சூழ்நிலையும், இயல்பானதாக மாறிவிடும். எதுவும் அவரை பாதிப்பதில்லை. எனவே, தன் முழு கவனத்தையும் பஞ்ச பூதங்களின் தனிப்பட்ட சைகைகளின் மீதும், அல்லது பஞ்ச பூதகலவைகளின்  சலனங்கள் மீதும் செலுத்தி, அவைகள் உரைக்கும் பதிலை உணர்ந்து, உரைக்க முடியும். உதாரணமாக, ஒரு சித்த வித்யார்த்தியை அல்லது சித்த மார்கத்தில் ஓரளவு முன்னேறிவிட்டவரிடம், ஒருவர் தனக்கு ஒரு வீடு அமையுமா? என்று கேட்கிற நேரத்தில், தன் சுற்றுப்புற சூழ்நிலையில் இயற்கை தெளிவுபடுத்துகிற சமிக்சைகளை உற்று பார்த்து, அவருக்கான பதிலை "ஆம் அல்லது இல்லை" என்று கூற முடியும். அது சரியாகவும் இருக்கும்.

எப்படி? என்று எதிர் கேள்வி கேட்டேன்.

அந்த கேள்வியை உள்வாங்கி, உணர்ந்து, ஒரு நிமிடம் கண் மூடி திறக்கும் பொழுது, அவர் ஒரு பூ, செடியிலிருந்து விழுவதை கண்டால், " ஆம்" என்பார். அல்லேல், அக்னியை கண்டால் "இல்லை" என்பார். "மண்" விழுந்தால் நஷ்டம் வரும், பசு நடந்தால், "இறை அருளினால்" உடன் அமையும், என்றெல்லாம் அர்த்தம் உண்டு. இப்படி, பஞ்ச பூதங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகிற, சமிக்சைகளை, விரிவாக பார்த்து பழக வேண்டும். கேள்வி கேட்கும் நேரம் யார் ஆட்சி, வந்தவரின் கர்மா, என்றெல்லாம் உணர வேண்டும். அப்படி பார்ப்பவர் கூட என்னதான் பெரியவராக இருந்தாலும், மனித ஜென்மம் எடுத்து நிற்பதினால், அருகில் உள்ள கேட்டவரின் எதிர் காலத்தை பார்த்துவிட்டபடியால், சாட்சி பூதமாக இருக்கும் "காலம்" நடக்க வேண்டியதை மாற்ற நினைக்கும். அதனால் தான், நிமித்தம், ப்ரச்னம், ஜோதிடம் போன்றவற்றை உபயோகித்து பலன் சொல்பவர்கள், பலன் கூறியவுடன்,  ஒரு சில பரிகாரங்களை தொடர்ந்து செய்யச் சொல்வார்கள். இதன் தாத்பர்யம் என்ன வென்றால், சாட்சி பூதமான நாராயணன் (காலம்), அந்த பலனை மாற்றிவிடக்கூடாது எனவும், மேலும் கேட்டவர் ஒரு நல்ல கர்மாவினால் (பரிகாரம்) ஒரு புண்ணியத்தை சேர்த்துக்கொண்டு, அந்த பலனை அடையட்டுமே என்கிற நல்ல எண்ணத்தாலும் தான். ஆனால் மனிதன் என்ன செய்கிறான்? பூமி காரகனான செவ்வாயின் அதி தேவதையான சுப்ரமண்யனுக்கு அபிஷேகம் செய் என்றால், முருகருக்கும் வீட்டுக்கும் என்ன சம்பந்தம், என்று யோசித்துவிட்டு, சொன்னார் செய்கிறேன் என்று ஏனோ தானோ என்று செய்கிறான். அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், "ஒருவன் மிக கவனமாக ஒவ்வொன்றையும் பார்த்து, பார்த்து, உத்தமமான பொருட்களை வாங்கி சொன்ன பரிகாரத்தை செய்ய வேண்டும்", என்று யோசிப்பதில்லை.  இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனின் எண்ணங்களுக்கும் பின்னால் எந்த கர்மா தடையாக நின்று, அவன் அடைய வேண்டியதை தடுக்கிறது, என்று எளிதாக காண முடியும். தவிர்க்கிற வழியையும், நிமித்த சாஸ்த்திரத்தினால் சரியா கணிக்கவும் முடியும்" என்றார்.

உண்மையிலேயே ஆச்சர்யமாக இருக்கிறது! காலமாக இருப்பது சாட்சி பூத நாராயணன் என்றீர்களே! அதை சற்று விளக்க முடியுமா?

அனைத்து சாஸ்த்திரங்களும், நாராயணனை காக்கும் கடவுள் என்கிறது. காக்கும் சக்தி, அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கும். கவனிப்பது என்பதே சாட்சியாக மாறுகிறது. அதனால்தான் நாராயணன் அந்த வேலையை சிறப்பாக செய்வதினால், அவருக்கு (சாட்சி) பூத நாராயணன் என பெயர் வைத்தனர். பஞ்ச பூதமாக இருந்து அனைத்தையும் கவனித்து, சாட்சியாக இருக்கிறார், என்பதை மனிதருக்கு உணர்த்தவே, கோவில்களில் பூத நாராயணரின் சிற்பத்தில், அவர் கண்ணை முழுவதுமாக திறந்து பார்த்துக் கொண்டிருப்பது போல் வடிவமைத்தனர். அது ஒரு உவமை. உண்மையில், அவர் பார்வையிலிருந்து எதுவுமே தப்பிக்க முடியாது என்பதே உண்மை.

அனைத்து தெய்வ திருமேனியிலும், பூணூல் அணிந்திருப்பதுபோல் வடிவமைத்துள்ளனரே! சித்த மார்க்கம், இதற்கு என்ன விளக்கம் கூறுகிறது? என்றேன்.

உனக்கு என்ன விளக்கம் தேவை? சாஸ்த்திரப்படி அமையும் விளக்கமா? அல்லது அது சுட்டிக் காட்டும் விளக்கமா? என்றார்.

சித்தர்களின் எளிய சுட்டிக்காட்டுதல் என்ன? என்று சற்று அழுத்தமாக கேள்வியை கேட்டேன்.

பூணூலை பற்றி மட்டும் கூறாமல், வேறு சில விஷயங்களையும் பற்றி கூறினால், அவை அனைத்தின் தாத்பர்யம், உனக்கு ஒரு விரிவான பார்வையை தருவிக்கும். கூறுகிறேன், என்றார்.

மிக கவனமாக அவர் கூற வருவதை கவனிக்க தயாரானேன்.

சித்தன் அருள்...................... தொடரும்!

Sunday 7 April 2019

சித்தன் அருள் - 802 - அகத்தியரும் ஹனுமந்ததாசன் ஸ்வாமியும்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

வேலை பளு காரணமாக, நிறைய இடங்களுக்கு அலைய வேண்டி வந்ததால் சரியான நாளில், சித்தன் அருளில், தொகுப்பை தர முடியவில்லை.

என்னதான், அகத்தியர் பார்வை நம்மீதெல்லாம் இருக்கிறது என்று திடமாக நம்பினாலும், அடிக்கடி அதை சோதித்து பார்க்கிற புத்தி, பழக்கம் அடியேனுக்கு உண்டு. ஒரு சிலவேளை, இது ரொம்ப அதிகமோ என்று கூட தோன்றும். இருந்தாலும், தகப்பனிடம்தானே கேட்கிறோம். ஒன்றில் சரி, அல்லது இல்லை என்று வரும். பார்த்துவிடலாம், எது வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்று, தீர்மானிப்பேன்.

4/4/2019, வியாழக்கிழமை. அகத்தியர்மைந்தன் என்றழைக்கப்பட்ட திரு.ஹனுமந்ததாசன் (அகத்தியர் ஜீவ நாடி வைத்திருந்து, அகத்தியர் அருளால் நிறைய பேர் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்தவர்) அவர்களின் பிறந்த நாள். அடியேன் அவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டவன். அன்றைய தினம் அவருக்கு ஏதேனும் ஒருவிதத்தில் மரியாதை செய்ய வேண்டும் என ஆசைப்பட்டேன்.

என்ன செய்வது? யாரிடம் கேட்பது? என்ற யோசனை வந்ததும், முதலில் நம் குருநாதர் அகத்தியப்பெருமான் தான் ஞாபகத்துக்கு வந்தார்.

"அய்யனே! உங்கள் அபிமான மைந்தனின் பிறந்தநாள் அன்று, அவருக்கு ஏதேனும் ஒரு மரியாதை செய்ய அடியேன் விழைகிறேன். தாங்கள் மனம் கனிந்து அருளவேண்டும். தங்கள் திருமேனியில் அணிந்த ஒரு பூவை தந்தாலும் போதும். அதை அவருக்கு அணிவித்து மகிழ்வேன். ஆனால், இப்பொழுது உள்ள சூழ்நிலையில், அடியேனுக்கு தங்கள் திருக்கோவிலுக்கு வந்து உங்களை தரிசிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஒரு வேளை வியாழக்கிழமை தரிசனம் கூட நடக்குமா என்று தெரியவில்லை. தயை கூர்ந்து, அடியேன் வராவிட்டாலும், யார் மூலமாவது கொடுத்துவிட்டால், மிக்க நன்றி உரைப்பவனாவேன்" என புதன் இரவு அவரிடம் விண்ணப்பித்தேன்.

வியாழனன்று முடிந்தால் விடியற்காலையில் அவரை சென்று தரிசனம் செய்து வரலாம், என நினைத்தேன்.

நம்மால் ஆசைப்படத்தான் முடியும். ஆசை நிறைவேற வேண்டுமானால், அவர் அருள வேண்டும். புதன் அன்று வேலை முடித்து வீடு வந்த பொழுது இரவு 10 மணி ஆகிவிட்டது. மிகுந்த அசதியில், உறங்கிப்போனேன். வியாழக்கிழமை காலை கண் விழித்ததும் வெகு நேரமாகிவிட்டது. சரி! முதல் வழி அடைந்துவிட்டது. மாலை தரிசனத்துக்கு செல்வோம் என மாற்றிவைத்தேன்.

அன்று மாலை நாலு மணிக்கு தொடங்கிய ஒரு வேலை, முடித்த பொழுது 8 மணி ஆகிவிட்டது. ஹ்ம்ம்! இரண்டாவது வழியையும் அடைத்துவிட்டார், என புரிந்தது.

மிகுந்த யோசனைக்குப்பின் அகத்தியப்பெருமானிடம், அடியேன் நிலையை தெரிவித்து வேறு ஒரு நாள், பாலராமபுரம் கோவிலுக்கு வந்து தங்களை தரிசிக்கிறேன், என வேண்டிக்கொண்டேன்.

அலுவலகத்திலிருந்து, நேராக வீட்டுக்கு வராமல், ஒரு நண்பரை பார்க்க அவர் நடத்தும் கடைக்கு சென்றேன். மணி 9 ஆகிவிட்டது. இனி யார் கொண்டுவருவார்கள்! சரி! இன்று இல்லை போலும். அடியேன் இன்னும் நிறைய, முன் செல்ல வேண்டியதுள்ளது போலும், என்றெல்லாம் யோசனை எங்கோ சென்றது.

​நண்பர் கடையில் ஒரு காப்பி போடச்சொல்லி, அதை அருந்தியபடியே என்னவோ யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது,

"நமஸ்காரம்!" என்ற சப்தம் கேட்டு திரும்பி பார்க்க, வேறொரு நண்பர் நின்று கொண்டிருந்தார்.

"நமஸ்காரம்! என்ன விஷயம்!" என்றேன்.

"இன்று அகத்தியர் கோவிலுக்கு சென்றிருந்தேன். பிரசாதம் கிடைத்தது. அதை இந்த பையில் வைத்திருக்கிறேன். இதை எடுத்துக்கொள்ளுங்கள்" என்றார்.

ஒரு நிமிடம் அவரையும், அவர் கையிலிருந்த நீலநிறப் பையையும் யோசித்தபடி பார்த்து நின்றேன்.

மனம் நெகிழ்ந்து போனது. கண்களில் நீர் அரும்பத் தொங்கியது. இமைகளை தாழ்த்திக் கொண்டேன்.

அடியேன் அமைதியாக இருப்பதை கண்டு, அவரே, "இன்று தரிசனத்துக்கு சென்ற பொழுது, ஒரு நாளும் இல்லாதது போல், அகத்தியப்பெருமானும், தாயாரும் மிக எளிமையாக இரு துளசி மாலை மட்டும் அணிந்து நின்றனர். அது ஆச்சரியமாக இருந்தது. துளசி மாலையை அகத்தியர் கழுத்தில் பார்த்ததும், அது கிடைத்தால் பரவாயில்லையே! என்று நினைத்தேன். பூஜை முடிந்த பின் பூஜாரி இருவர் கழுத்திலுமிருந்த துளசி மாலையை எடுத்து தந்து, உங்களிடம் கொடுக்கச்சொன்னார். உங்களை இங்கு கண்டவுடன், இதை சேர்ப்பித்து விடலாம் என்று கொண்டு வந்தேன்" என்றார்.

வலது கரம் நீட்டி, அந்த பையை வாங்கினேன்.

"ஹ்ம்ம்! நல்ல நாடகம் நடக்கிறது. சும்மா யோசித்தாலே குருநாதருக்கு கேட்கிறது. அதிலும் விண்ணப்பித்தால், உடனேயே அருளுகிறார், குருநாதர். கூடவே அம்மையும் அருள்வதில் குறைவைக்கவில்லை" என்று புன்னகைத்தபடியே, நன்றி கூறினேன் அகத்தியப்பெருமானுக்கு.

வீடு வந்து சேர்ந்ததும், திரு ஹனுமந்ததாசன் அவர்களின் புகைப்படத்தை, அகத்தியப் பெருமான் படத்திற்கு கீழ் மாட்டி, மாலையை அவர் படத்தில் மாட்டினாள், அடியேன் மனைவி.

இந்த முறை அனுபவம், மிக எளிதாக, இனிமையாக அமைந்தது. 

ஓம் ஸ்ரீலோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் இவ்வனுபவம் சமர்ப்பணம்!

சித்தன் அருள் ............. தொடரும்!