​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 21 March 2019

சித்தன் அருள் - 801 - அகத்தியர் அருள் வாக்கும், அவர் திருவிழாவும்!

[ ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகதியப்பெருமான், பாலராமபுரம்]

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

கடந்த திங்கட்கிழமை [18/03/2019] என்பது மிக புண்ணியமான நாள். இதை, போனவாரம் வியாழக்கிழமை அகத்தியர் கோவில் செல்லும் முன் கவனித்ததால், அங்கு சென்றவுடன், நம் குருநாதரிடம் ஒரு வேண்டுகோளை சமர்ப்பித்தேன். கவனத்தில் பட்டு அடியேனை தூண்டிவிட்டு வேண்டுதலை சமர்ப்பிக்க வைத்த விஷயங்களை இங்கே தருகிறேன்.
  1. திங்கட்கிழமை - சிவனுக்கு உகந்த நாள்.
  2. திதி பிரதோஷம் (வளர்பிறை திரயோதசி) - நந்தியம் பெருமான், சிவனுக்கு உகந்த நாள்.
  3. நட்சத்திரம் - ஆயில்யம் - அகத்தியப்பெருமானின் அவதார நட்சத்திரம் - விஷம் என்கிற கெடுதல் கட்டுப்படுகிற நேரம்).
  4. பங்குனி மாதம் - சூரிய பகவான் தன் சஞ்சாரத்தை முடித்துக் கொள்கிற மாதம்.
இத்தனை விஷயங்கள் அவர் முன் நிற்கும் பொழுது அடியேன் மனதுள் மின்னலென புகுந்ததால் அப்படியே ஒரு சிறிய வேண்டுதலை அவர் முன் வைத்தேன்.

"அய்யனே! இத்தனை சிறப்பு பெற்ற அந்த நாளின் விளக்கத்தை தங்கள் திரு வாக்கால் அருள வேண்டும். உங்கள் சேய்கள் அதை உணரவேண்டும்! தயை கூர்ந்து அருளுங்கள்" என மனதுள் கூறி சமர்ப்பித்து, விடை பெற்றேன்.

உண்மையான பிரார்த்தனைக்கு நம் குருநாதர் அருள் வாக்கு தருவார் என்ற நம்பிக்கை இருந்தது. இருந்தாலும், அடுத்த தினமே, பிரார்த்தனையும் மறந்து போனது.

திங்கள் கிழமை அன்று, காலை பூஜை பிரார்த்தனை செய்த பொழுது, மறுபடியும் வேண்டுதல் மனதுள் நுழைந்தது.

"என்ன அய்யனே! என்ன தீர்மானம் பண்ணியிருக்கிறீர்? உங்கள் அடியவர்களுக்கு உண்மையை தெரிந்து கொள்கிற பாக்கியம் உண்டா?" என்கிற கேள்வியைத்தான் அவரிடம் வைக்க முடிந்தது.

உண்மையிலேயே, அன்றைய தினம் ப்ரம்ம முகூர்த்தத்தில், நாடியில் வந்து அகத்தியர் அன்றைய தினத்தை மிக சிறப்பாக விளக்கியிருக்கிறார்.

மதியம் சரியாக 12 மணிக்கு ஏதேனும் செய்தி உண்டா, என்று யோசனையுடன், மொபைல் போனை தடவி பார்க்க, ஒரு அகத்தியர் அடியவர் (அவருக்கு மிக்க நன்றியை கூறிக்கொள்கிறேன்) அந்த "ப்ரம்ம முகூர்த்த அருள் வாக்கை" பதிவு செய்து அனுப்பியிருந்தார். அதை கேட்ட மாத்திரத்தில், மிகவும் சந்தோஷமடைந்து, அகத்திய பெருமானுக்கு அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கத்தையும், நன்றியையும் கூறினேன்.

யாம் பெற்ற இன்பம் இவ்வையகத்து வாழ் அகத்தியர் அடியவர்கள் பெறுக என்கிற எண்ணத்தில், அந்த பதிவை, கீழே உள்ள லிங்கில் தருகிறேன். எல்லோரும் அதை கேட்டு, உணருங்கள். 

​அகஸ்தியர் அருள்வாக்கு!
[அடுத்த பக்கத்தில் பதிவிறக்கம்/டவுன்லோட் செய்து கேளுங்கள்]

அடியேன் செல்லும் பலராமபுரம், ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் கோவிலில், இந்த வருட அகஸ்தியர் பூஜை திருவிழா, அடுத்த மாதம் 6ம் தியதி தொடங்கி 15ம் தியதி வரை மிக சிறப்பாக நடை பெற உள்ளது. அதற்கான அழைப்பிதழையும் உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். விருப்பமுள்ள அகத்தியர் அடியவர்கள் பங்கு பெறலாம். ஆலய தொடர்பு எண் 0471-2401222. கூப்பிட்டு பேசினால், விரிவான விளக்கத்தை தருவார்கள். அடியேன் எல்லா வருடமும் பங்கு கொண்டு, அவர் அருள் பெற்று வருவதனால், இந்த வருடம், உங்களுக்கும் ஏதேனும் ஒரு விதத்தில் அந்த வாய்ப்பை பெற்று தரலாம் என்கிற எண்ணத்தில் மட்டும்.

ஓம் ஸ்ரீ லோபா முத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில், இந்த தொகுப்பு சமர்ப்பணம்!


சித்தன் அருள்................ தொடரும்!

Sunday 10 March 2019

சித்தன் அருள் - 800 - அந்தநாள் >> இந்த வருடம் [2019-20]

​​
அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா "சமேத" அகத்தீசாய நமஹ!

அகத்தியப் பெருமானின் "சித்தன் அருளை" வாசித்து வரும் அடியவர்கள், அகத்தியப் பெருமான் குறிப்பிட்ட தினங்களில், நாடி வாசித்த மைந்தனை, கோடகநல்லூர், நம்பிமலை, பாபநாசம், கரும்குளம், திருச்செந்தூர் என்று பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, இறை, சித்த அனுபவங்களையும், ஆசிர்வாதங்களையும் பெற்றுக் கொடுத்ததை, நாம் அனைவரும் அறிவோம். அதில் மறைமுகமாக "அந்த நாள்/இந்தநாள்" என்று அகத்தியப் பெருமான் பல இடங்களில், குறிப்பிட்டதை கவனித்திருக்கலாம். 2018ம் ஆண்டு பல அகத்தியர் அடியவர்களும், அந்தப் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று அருள் பெற்றது நினைவிருக்கும்.

நம் அனைவருக்குமே, "அந்த நாள்" இந்த வருடம், எப்போது வருகிறதோ, அன்று, அங்கு சென்று இருந்து அவர்களின் அருள், ஆசிர்வாதம், செம்மையான வாழ்க்கைக்காக பெற்றுக்கொள்ள வேண்டும், என்கிற எண்ணம் ஒவ்வொரு அகத்தியர் அடியவரின் மனதுள் இருக்கும். உங்களின் அந்த இனிய எண்ணைத்தை பூர்த்தி செய்வதற்காக, இந்த வருடம் "அந்த நாட்களை" தெரிவு செய்து இங்கே தருகிறேன். குறித்து வைத்துக்கொண்டு, அங்கெல்லாம் சென்று, அவர் அருள் பெற்று வருமாறு, வேண்டிக் கொள்கிறேன்.

ஸ்ரீ போகர் திருநட்சத்திரம்:- 01/06/2019 - சனிக்கிழமை வைகாசி மாதம் - பரணி நட்சத்திரம் - திரயோதசி திதி. பழனியில் போகர் சமாதியில் மிகச்சிறப்பாக அபிஷேக ஆராதனை நடைபெறும்.

நம்பிமலை:- (இறைவனும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருக்க, அகத்தியப் பெருமான் நம்பிமலை பெருமாளுக்கு 200 வருடங்களுக்கு ஒருமுறை செய்கிற பூசையை செய்த நாள்)

09/08/2019 - ஆடி மாதம் - வெள்ளிக் கிழமை  - சுக்லபக்ஷ நவமி/தசமி திதி, அனுஷம் நக்ஷத்திரம்.

பாபநாசம்:- (நதிகள் எல்லாம் அகத்தியப் பெருமானுடன் இருந்து அன்று தீர்த்தமாடியவர்கள் அனைவருக்கும், அவர்கள் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் புண்ணியம் கொடுத்த நாள். நவகிரக தம்பதிகள் ஆசிர்வதித்த நாள்)

10/08/2019 - ஆடி மாதம் - சனிக்கிழமை - சுக்லபக்ஷ தசமி/ஏகாதசி திதி, கேட்டை  நக்ஷத்திரம்.

திருச்செந்தூர்:- (ஓதியப்பர், அகத்தியர், அனுமன் ஆகிய மூவரும் சேர்ந்து இருந்த நாள். அதில், முருகர் அனுமனுக்கு அன்று அனுமனின் நட்சத்திரம் ஆனதால், அவரை ஆரத்தழுவி, நல்வாழ்த்து தெரிவித்த நாள். இன்றும் எல்லா மாதமும் அனுமன், அவரது நட்சத்திரத்தன்று திருசெந்தூரில் அன்று மாலை வந்து முருகரின் அருள் பெற்று செல்கிறாராம்.)

11/08/2019 - ஆடி மாதம் - ஞாயிற்று கிழமை - சுக்லபக்ஷ ஏகாதசி திதி, மூலம் நட்சத்திரம்.

ஒதிமலை ஓதியப்பர் பிறந்த நாள்:- (போகர் கூற்றின் படி, ஓதியப்பர் ஆவணி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். ஓதியப்பரின் பிறந்த நாளை அபிஷேக ஆராதனைகளுடன் கொண்டாடுகிற நாள். சித்தர்கள் அனைவரும் அன்று அங்கே ஒன்று கூடி, ஓதியப்பரை தரிசனம் செய்து, பின்னர் 90 நாட்களுக்கு அங்கேயே தங்கி இருக்க தொடங்குகிற நாள்.) 

28/08/2019 -ஆவணி மாதம் - புதன் கிழமை - திரயோதசி திதி பூசம் நட்சத்திரம்

கோடகநல்லூர்:- (எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள். தாமிர பரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள். அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள்.)

10/11/2019 - ஞாயிற்று கிழமை - ஐப்பசி மாதம் சுக்லபக்ஷ த்ரயோதசி திதி - ரேவதி நட்சத்திரம். 

பாபநாச ஸ்நானம்:- தாமிரபரணி புராணத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சிவபெருமானை லிங்க ரூபத்தில் பிரதிஷ்டை செய்து, தாமிரபரணி தேவியானவள், அகத்திய பெருமான் முன்னிலையில் தவமிருந்து, இறைவனிடமிருந்து நம் மனித குலத்திற்காக ஒரு வரத்தை பெற்றாள். எவர் இந்த இடத்தில், மார்கழி மாதத்தில் எம் தீர்த்தத்தில் நீராடி, உம்மை கண்டு வணங்குகின்றனரோ, அவர்களுக்கு இந்த பூமியில் இனிமேல் பிறவி என்பதே இருக்கக்கூடாது. சிவபெருமானும் தாமிரபரணியின் பூசை, தவத்தில் மகிழ்ந்து "அப்படியே ஆகட்டும்" என்று கூறி பாபநாச சுவாமி கோவில் லிங்கத்தினுள் மறைந்தார். அந்த நாட்கள் இந்த வருடம் 17/12/2019 முதல் 14/01/2020க்குள் வருகிறது. 

அகத்தியப் பெருமானின் திரு நட்சத்திரம்:- 13/01/2020 - திங்கட்கிழமை - மார்கழி மாதம், த்ரிதியை திதி - ஆயில்யம் நட்சத்திரம். எங்கும் சிறப்பாக கொண்டாடப்படுகிற நாள்.

அகத்தியர் அடியவர்களே! மேல் சொன்ன இந்த நாட்களை குறித்து வைத்துக் கொண்டு, இங்கு தெரிவிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று, இறை அருள், அகத்தியர் அருள் பெற்று நலமாக வாழ்ந்திட வேண்டிக் கொள்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகதீசாய நமஹ!

சித்தன் அருள் ................. தொடரும்!

Friday 8 March 2019

சித்தன் அருள் - 799 - அடியவர்கள் பிரார்த்தனையை அகத்தியர் நிறைவேற்றினார்!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்று அகத்தியர் அடியவர்கள் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான நாள் என்பதை மறுக்கவே முடியாது.

ஆம்! கல்யாண தீர்த்தம், பாபநாசத்தில், அம்மா லோபாமுத்திரை தாய் வந்து அகத்தியப் பெருமான் அருகில் நின்றுவிட்டார். அம்மாவின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, அபிஷேகமும் ஆகிவிட்டது.

முன் இருந்த சிலை பின்னமானது என்று அறிந்தது முதலே, ஒரு தாங்கமுடியாத வருத்தம் மனதுள் இருந்தது என்பது உண்மை. கடைசியாக ஒருமுறை அங்கு சென்று தரிசனம் செய்த பொழுது, அகத்தியப் பெருமானிடம் , "இனி என்று அம்மா உங்கள் அருகில் வந்து நிற்கிறார்களோ, அதற்குப் பிறகுதான் உங்களுக்கு, இங்கு வந்து பூஜை செய்வேன்" என்று கூறிவிட்டு வந்துவிட்டேன்.

இன்று அதற்கான நேரம் வந்துவிட்டது. ஒரு வாரத்திற்கு முன்னரே, நாடியில் அகத்தியரிடம் சிலை பிரதிஷ்டை பற்றி யாரோ கேட்க, வந்த பதிலின் புகைப்படத்தை இங்கு தருகிறேன். வாசித்துப் பாருங்கள்.



இன்று அதிகாலை ப்ரம்ம முகூர்த்தத்தில், இதை பற்றி வினவ, இன்று பிரதிஷ்டை நடக்கும் என்றும், ஆனால் 10.30க்குப்பின் கல்யாண தீர்த்தத்தில் அவர் வந்து அமர்ந்தபின் தான் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இன்று காலை 10.33க்கு அவர் உத்தரவுப்படி சிலா ஸ்தாபனம் நடைப்பெற்றது.

பின்னர் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அப்பொழுது எடுக்கப்பட்ட ஒரு சில படங்களை உங்கள் பார்வைக்காக தருகிறேன்.








அடியேனின் வேண்டுகோளுக்கிணங்க பிரார்த்தனை செய்த அடியவர்களுக்கும், அதை அருளிய அகத்தியப் பெருமானுக்கும், வந்து அமர இசைந்த ஸ்ரீ லோபாமுத்திரா தாய்க்கும், உங்கள் அனைவரின் சார்பாகவும், சித்தன் அருள் சார்பாகவும், சிரம் தாழ்ந்த நன்றி வணக்கங்களை, நமஸ்காரத்துடன் சமர்ப்பிக்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா "சமேத" அகத்தீஸ்வராய நமஹ!

சித்தன் அருள்................... தொடரும்!

Thursday 7 March 2019

சித்தன் அருள் - 798 - ஒரு விண்ணப்பம்!

[கல்யாண தீர்த்தத்தில் குருநாதர், அம்மா, - பழைய படம்]

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

ஒரு விண்ணப்பத்தை உங்கள் முன் வைக்கலாம் என்கிற எண்ணத்தில் இதை தெரிவிக்கிறேன்!

கல்யாண தீர்த்தம், பாபநாசத்தில், லோபாமுத்திரை அம்மாவின் சிலாரூபத்தை மாற்றி நிறுவ வேண்டிய சூழல் இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இன்றைய தினம், அல்லது இந்த தொகுப்பை வாசிக்கும் அந்த நொடியில், ஒரு நிமிடம் மௌனமாக அகத்தியப்பெருமானிடம், அம்மாவின் சிலையை நிறுவ எல்லா அருளையும் வழங்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள். உண்மையான பிரார்த்தனையை விட உயர்ந்தது இவ்வுலகில் எதுவும் இல்லை என்று நமக்கு அருள்வாக்கு தந்த அகத்தியப் பெருமானிடமே நம் பிரார்த்தனையை சமர்ப்பிப்போம்!

வாருங்கள்! பிரார்த்தனையில் நம் அனைவரும் ஒன்று சேர்வோம்! விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அடியேன்!

சித்தன் அருள்.............. தொடரும்!

Sunday 3 March 2019

சித்தன் அருள் - 797 - அகத்தியப் பெருமான் அருளிய திருவடி பாதுகை!



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

796வது தொகுப்பில் அகத்தியரின் பாதுகையை தரிசித்திருப்பீர்கள். இதுவும், சென்ற ஒரு சில பதிவுகளில் கூறப்பட்ட "ருத்ராக்ஷ ஸ்படிக லிங்க" மாலையின் தொடர் நிகழ்ச்சியாக நடந்த விஷயம். அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

ருத்திராக்ஷ மாலைக்கு உத்தரவு வாங்கித் தந்த பூஜாரி, அன்றைய தினம் இல்லாமல் போகவே, வேறு ஒருவர் வாங்கி அகத்தியரிடம் சேர்த்தார் என்று கூறியிருந்தேன். ஓரிரு நாளில் திரும்பி வந்த அவர் (உத்தரவு வாங்கித்தந்த பூஜாரி) அடியேனை தொடர்பு கொண்டார்.

"இதை இந்த முறையில் தரக்கூடாது. வரக்கூடிய வியாழக்கிழமை கோவிலுக்கு வரும் பொழுது, அதை தருகிறேன். நீங்கள் உங்கள் கையால் அவர் திருநடை [திருச்சன்னதி] முன் சமர்ப்பிக்க வேண்டும். அதை அணிவித்து பூஜை தீபாராதனை செய்ய வேண்டும். அதற்கு முன், அகத்தியருக்கு சமர்ப்பிப்பதாக கோவில் நிர்வாகத்திடம் கூறி, அதற்கான ரசீதை வாங்கிக் கொள்ள வேண்டும். இது உங்கள் பெயரால் கொடுப்பதாக இருக்கவேண்டும். ஆதலால், இந்த வாரம் வியாழக்கிழமை வாருங்கள். முறையாக செய்துவிடலாம்" என்றார்.

இது தான் அடியேனை சோதனைக்குள்ளாக்கிற்று. ஏன் என்றால், அந்த வியாழக்கிழமைதான், உறவில் ஒரு திருமணத்திற்காக வெளியூர் செல்ல எல்லா ஏற்பாடும் செய்தாகிவிட்டது. கோவிலுக்கு செல்ல முடியாது. என்ன செய்வது? என யோசித்தவுடன், நண்பர்கள் செல்வார்களே, என்ற யோசனை வந்தது.

இரு நண்பர்களை அழைத்து, விஷயத்தை கூறி, கண்டிப்பாக அன்று மாலை கோவிலுக்கு சென்று அடியேனுக்கு பதிலாக, செய்ய வேண்டியதை செய்து விடுங்கள் என்று கூறினேன். அகத்தியரின் திருஆபரணமாக மாற்ற ரசீது போடும் பொழுது அதில் நம் யார் பெயரும் இருக்கக்கூடாது. அதற்கு பதிலாக "ஓதியப்பர், பூசம்" என போட்டுவிடுங்கள், என கூறிவிட்டேன்.

பின்னர், அடியேன் ஊருக்கு கிளம்பி சென்று விட்டேன்.

மிகச்சிறப்பான முறையில், அகத்தியப் பெருமான், அந்த நாள் விஷயத்தை நடத்திக்கொடுத்து தன் கழுத்தில் மீண்டும் அணிந்து கொண்டார்.

அந்த கோவிலில் "தேவனின்" திருஆபரணமாக ஒரு பொருளை சமர்ப்பித்துவிட்டால், அது தனியாக வைக்கப்பட்டு, பின்னர் முக்கியமான தினங்களில், வெள்ளி கவசம் சார்த்துகிற பொழுது மட்டும் அணிவிக்கப்படும். முக்கியமான தினங்கள் மட்டும்தான் இது நடக்கும். ஒரு மாதத்தில் வரும் பௌர்ணமி, மாத பிறப்பு, அமாவாசை, ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று மட்டும்.

ஊருக்கு போய்விட்டு வந்த அடியேனுக்கு, எங்கோ சாப்பிட்ட உணவானது, விஷமாக மாறிப்போய், வாந்தி, பேதி என உடலை வருத்தியது. இரண்டு நாட்கள் பொறுத்துப் பார்த்தேன். அடங்குவதாக தெரியவில்லை. மூன்றாவது நாள் (புதன் கிழமை) காலை எழுந்தவுடன் தள்ளாடியது. மூச்சு விடமுடியவில்லை, பேச முடியவில்லை. உடல் உருகி உள்ளுக்குள்ளே செல்வது போல் ஒரு உணர்வு. அன்றைய தினம் காலையில் அடியேனை பார்க்க வந்த நண்பரிடம், எல்லாம் நல்லபடியாக, அகத்தியர் விருப்பப்படி நடந்ததா? என விசாரித்து முடிக்கும் முன் தலை சுற்றி, கீழே அமர்ந்தேன்.

என் நிலை மோசமாவதை கண்ட நண்பர், உடனேயே, அவர் வாகனத்தில் அடியேனை அழைத்துக் கொண்டு போய். ஒரு மருத்துவமனையில் அனுமதித்தார்.

அடியேன் உடலை பரிசோதித்த மருத்துவர், உடனேயே படுக்கப்போட்டு, உடலில் நீர் சத்து, உப்பு சத்து குறைந்து விட்டது என கண்டு பிடித்து, அதற்கான சிகிர்சை முறையை தொடங்கினார்.

மருந்து உள்ளே செல்லத் தொடங்கியதும் சுய நினைவு மங்கத் தொடங்கியது.

எதையுமே கவனிக்காமல் வாழ்ந்து வந்தேன் என தோன்றியதால், உடனேயே "என்ன நடக்கிறது? எது நடக்கக்கூடாது என்று நினைத்தேனோ, அந்த சூழ்நிலையில் மாட்டிவிட்டீர்களே! அடியேன் என்ன தவறு செய்தேன். சற்று தெளிவு படுத்துங்களேன், அகத்தியப் பெருமானே!" என வேண்டிக்கொண்டேன்.

உடன் பதில் கூறினார், குருநாதர்.

"கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, யாம் உன்னை காப்பாற்றிக் கொண்டு வந்திருக்கிறோம். கர்மாவை மொத்தமாக அறுக்க முடியாது. ஓரளவிற்கு முடிகிற வரை அனுபவித்தும் தீர்க்க வேண்டும். ஆதலால், கர்மா வினையின் வீரியத்தை குறைத்து, அனுபவித்து விடு என விட்டுவிட்டேன். இருப்பினும், யாம் துணைக்கு உள்ளோம். கலக்கம் வேண்டாம். முடிந்தால், இன்றைய தினம் என்ன நடக்கிறது என்று பின்னர் பார்த்து தெரிந்துகொள்!" என்று பதில் வந்தது.

பதிலை கேட்டு முடித்ததும், உள் சென்ற மருந்தின் வீரியத்தால், முழு நினைவும் அடியேனை விட்டு போனது.

இரண்டு மணி நேரத்துக்குப்பின், தானாகவே நினைவு வந்ததும், முதலில் நினைவுக்கு வந்தது அகத்தியப் பெருமானின் வார்த்தைகள் "முடிந்தால், இன்றைய தினம் என்ன நடக்கிறது என்று பின்னர் பார்த்து தெரிந்துகொள்!"

மருத்துவமனையில் படுத்திருக்கும் அடியேனுக்கு எப்படி இதை இப்பொழுதே பார்க்க முடியும்? என்ற உணர்வுடன், மொபைல் போனை துழாவினேன். அதில் நாள்காட்டி பார்க்கும் சாப்ட்வேர் இருந்தது. அதை முடுக்கி பார்த்தால் "இன்று மதியம் -- மணிக்கு, ராகு, கேது பெயர்ச்சி!" என்றிருந்தது.

அதை பார்த்த அந்த நொடியில், அனைத்தும் புரிந்து போனது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே, "அடியேன் உடலில் விஷம் உள்ளே செல்ல வேண்டுமே, அது எப்பொழுது நடக்கப்போகிறது" என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வந்தேன். இருப்பினும், ஓதியப்பரிடமும், அகத்தியப் பெருமானிடமும் மட்டும், நீங்கள் கவனித்துக்கொள்ளுங்கள் என்று கூறி வந்திருந்தேன். கடைசி நிலையில், மூன்று நாட்களுக்கு அனுபவிக்க விட்டு கர்மாவை கரைய வைத்து விட்டார்கள், என்று உணர்ந்தேன்.

"அகத்தியப் பெருமானின் கோவிலுக்கு சென்று நன்றி கூற வேண்டும்!" என தீர்மானித்தேன்.

எழுந்திருக்க முயல, முடியவில்லை. அப்படியே கட்டிலில் கிடந்து அகத்தியரிடம் ஒரு பிரார்த்தனையை வைத்தேன்.

"அய்யனே! எழுந்து அமர்ந்து கொள்கிற அளவுக்கு உதவி செய்தால் போதும்! உங்களை தேடி ஓடி வந்துவிடுகிறேன். நாளை, வியாழக்கிழமை உங்கள் தரிசனம் கிடைக்க வேண்டும்" என்றேன்.

மருத்துவருக்கு என்ன தோன்றியதோ, அல்லது நம் குருநாதர் என்ன தோன்ற வைத்தாரோ தெரியவில்லை. மருத்துவர் அடியேனை பரிசோதிக்காமலேயே, வீட்டுக்கு போய் விடு. எழுதி தந்த மருந்துகளை சாப்பிட்டுக்கொள், எனக் கூறினார்.

"அடடா! இது தானே வேண்டும்" என்று நினைத்து, அவருக்கு நன்றி கூறிவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.

மறுநாள், வியாழக்கிழமை, காலையில் ஒரு நண்பர் பார்க்க வந்தார்.

"உடல் இருக்கிற நிலைக்கு, அடியேனால் இன்று கோவிலுக்கு வர முடியுமா என்று தெரியவில்லை. எதற்கும், நீ சென்று வர தயாராக இரு" என்று கூறி அனுப்பிவைத்தேன்.

அன்றைய தினம் தர வேண்டிய "சித்தன் அருள் தொகுப்பை" மாலை நன்கு மணிக்கு தட்டச்சு செய்ய தொடங்கினேன். நேரம் சென்று கொண்டே இருந்தது. மணி ஐந்து ஆகியும் பாதி தொகுப்பு கூட முடியவில்லை.

தட்டச்சை நிறுத்திவிட்டு அகத்தியப் பெருமானை நிமிர்ந்து பார்த்தேன்.

"அய்யா! தொகுப்பை வேகமாக முடித்து கொடுக்க உதவி செய்யுங்கள். ஆறு மணிக்கு முன் முடித்துவிட்டேனால், உங்களை வந்து சரணடைகிறேன்!" என வேண்டிக்கொண்டேன்.

அதற்குப்பின் ராக்கெட் வேகத்தில் தட்டச்சு சென்றது. எல்லாம் முடித்து, தொகுத்து வழங்கிய பொழுது மணி 5.58 என்று காட்டியது.

நேராக சென்று குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். உடலுக்குள் ஏதோ ஒரு புது சக்தி இருந்து உந்திக் கொண்டிருந்தது. கவனித்தேன்.

அகத்தியர் கோவிலை அடைந்தவுடன், மணி 7.30. உடனேயே தீபாராதனை நடந்தது.

தீர்த்தம் தெளிக்கப்பட்டது. ஆனந்தமாக இருந்தது. கண் மூடி பரவசமாக நிற்க, "தீர்த்தத்தை கேட்டு வாங்கிக்கொள். தருவான். அது உனக்கு உள்மருந்தாக மாறும்" என அகத்தியர் உரைத்தார்.

உள்ளே திரும்பி செல்ல இருந்த பூஜாரியிடம் கைநீட்டி, "அந்த தீர்த்தத்தை கொடுங்கள்" என்றேன்.

மாலை நேர பூசையின் பொழுது, தீர்த்தம் யாருக்கும் வழங்கப்படமாட்டாது. அடியேனும் அதை கேட்பதில்லை. சற்றே அதிசயித்துப்போன பூஜாரி, ஏதோ இங்கு நடக்கிறது என்று உணர்ந்து சிரித்தபடியே தீர்த்தத்தை, நீட்டிய கைகளில் விட்டார். அகத்தியப்பெருமானை ஒருமுறை கூர்ந்து பார்த்து, மனதுள் நன்றி கூறிவிட்டு, தீர்த்தத்தை அருந்தினேன்.

உள்ளேபோய் தீர்த்த சங்கை அவர் பாதத்தில் வைத்துவிட்டு வந்த பூசாரியிடம், "இந்த விபூதி வாசனாதி திரவியத்தை குருநாதருக்கும், லோபாமுத்திரை தாய்க்கும் பூசிவிடுங்கள். நாளை காலை வரை அவர் விபூதியின் மணத்தில் திளைக்கவேண்டும். முடிந்தால் ஒரு சிறிதளவு அவருக்கு சார்த்தியத்திலிருந்து பிரசாதமாக கொடுங்கள்" என்று கூறிவிட்டு விநாயகர், கிருஷ்ணர், ஓதியப்பர் சன்னதிக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு மறுபடியும் குருநாதர் சன்னதி முன் வந்தேன்.

வாசனாதி திரவியத்தை இருவருக்கும் சார்த்திய பின் சிறு துளியை அடியேனுக்கு பிரசாதமாக திருப்பி தந்தார்.

"நடந்ததெல்லாம் திருப்தி தானே. பெரியவர் என்ன சொன்னார்" என்று பேச்சை தொடங்கினேன், பூஜாரியிடம்.

நடந்த நிகழ்ச்சிகளை அவர் கூறிவிட்டு "இத்தனை வேகமாக அவருக்கு இது நடக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. அவர் எங்கேயோ எல்லாவற்றையும் முன்னரே ஏற்பாடு செய்துவிட்டுத்தான், இங்கு உத்தரவை தருகிறார்" என்றார்.

அடியேன் சுருட்டப்பள்ளி சென்று இறைவனை தரிசித்துவிட்டு வந்ததையும், "கண் திறந்த பெருமாள்" கோவிலையும் பற்றி அவருக்கு கூறிவிட்டு, "ஒருமுறை நீங்கள் அங்கு சென்று நிச்சயமாக தரிசனம் செய்ய வேண்டும்" என்றேன்.

"கண் திறந்த பெருமாள்" கோவிலை பற்றி விரிவாக கேட்டார்.

"அன்று வீட்டிலிருந்து தரிசனத்துக்கு செல்லும் பொழுது, பெருமாளிடம், "எனக்கு எதுவும் வேண்டாம். உங்கள் தரிசனம், அதன் பின் உங்கள் திருவடி அடியேன் தலையில் படவேண்டும் என வேண்டிச் சென்றேன். தீபாராதனையின் பொழுது, பெருமாள் கண்திறந்த பொழுதும் எதுவும் கேட்கவில்லை. அந்த நேரத்தில் வேண்டிக்கொண்டால், வேண்டுதல் நிறைவேறும் என்பார்கள். தீபாராதனை முடித்த பின் அர்ச்சகர், ஒரு சிறு தவழ்ந்த கிருஷ்ணர் விக்கிரகத்தை கையில் தந்து, தாலாட்டிவிட்டு கொடுங்கள் என்றார். எனக்கு தாலாட்டத் தெரியாது. ஆனால் ஒன்று செய்கிறேன். இன்று இங்கு வரும் முன் இறைவனிடம் உங்கள் திருவடி அடியேன் சிரசில் படவேண்டும் என வேண்டிக்கொண்டேன். ஆதலால், அவரை தலையில் வைத்து கண்மூடி அவர் திருப்பாதம் அடியேன் தலையில் பதிந்ததை ஆத்மார்த்தமாக உணர்ந்தேன். இப்படிப்பட்ட அதிசய கோவிலை நீங்கள் பார்க்க வேண்டும்" என்றேன்.

கேட்டுக்கொண்டிருந்த பூஜாரி, சற்றே அதிசயத்துடன் சிரித்தபடி, "பிரசாதம் தருகிறேன்" என்று அகத்தியர் சன்னதிக்குள் சென்றார்.

இரு நிமிடம் ஆகியும் அவர் உள்ளே இருந்து வரவில்லை. அகத்தியர் முன் த்யானத்தில் அமர்ந்திருந்தார்.

"இன்று இவருக்கு என்ன ஆயிற்று? பிரசாதம் தருகிறேன் என்று உள்ளே சென்றவர், ஏதோ உத்தரவு கேட்கிற மாதிரி த்யானத்தில் அமர்ந்து இருக்கிறாரே" என்று யோசித்தபடி அகத்தியரை பார்த்தபடி நின்றிருந்தேன்.

மேலும் ஒரு நிமிடம் சென்றதும், பூஜாரி எழுந்தார்.

ஒரு நுனி இலையில் பிரசாதத்தை ஏந்தி, வலது கையில் பாதுகைகளை சுமந்து வெளியே வந்தார். இந்தாருங்கள் என்றார்.

நான் வெலவெலத்துப் போனேன்.

"என்ன இது! இது எனக்கெதற்கு? ஓ! பெருமாள் திருவடி சிரசில் பட்ட நிகழ்ச்சியை கூறியதால், அகத்தியர் பாதுகையை தருகிறீர்களா? சரி! தலையில் வைத்துவிட்டு, திருப்பி தருகிறேன்" என்று கூறி, கண் மூடி தலையில் வைத்துக்கொண்டேன்.

"திருப்பி எல்லாம் தரவேண்டாம்! அது உங்களுக்கு கொடுக்கச் சொன்னார். ஏன் எதற்கு என்று கேள்வி கேட்காமல், அப்படியே அவர் உத்தரவை சிரமேற்கொண்டு, உங்களிடம் சேர்ப்பித்து விட்டேன்" என்றாரே பார்க்கலாம்.

"இல்லேங்க! இங்க என்ன நடக்கிறது? எதுவுமே புரியவில்லையே. அடியேனுக்கு இதை பூஜை பண்ணத்தெரியாது. நான் இதை வைத்து என்ன செய்ய? இல்லை தெரியாமத்தான் கேட்கிறேன், ஒரு ருத்ராக்ஷ மாலையை கொடுத்துவிட்டு, ஊர் முழுக்க கொட்டடம் அடிச்சிண்டிருக்கான், இதை குடுத்து அவன் வாயை மூடுன்னு சொன்னாரா? இல்ல, சித்த மார்கத்துக்குள் நுழைனோ, சன்யாசியா போகச்சொல்லுனு, சொன்னாரா?" என்றேன்.

இந்த கேள்வியை அவர் எதிர் பார்க்கவில்லை போலும்.

சிரித்தபடியே "அதெல்லாம் இல்லீங்க! இந்த பாதுகை ஒரு வருடத்துக்கு முன்னரே அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இங்குள்ள அனைவரும், அதை எனக்கு கொடுத்து விட்டேன் என்றனர். அவரோ "அது அங்கேயே இருக்கட்டும். நேரம் வரும் பொழுது சொல்கிறேன். அது வரை என் பாதத்தில் பூசையில் வைத்துவிடு என்றார். இன்று உங்களுக்கு பிரசாதம் எடுக்க உள்ளே சென்றதும், என்னை அழைத்து "இந்த பாதுகையை அவனுக்கு கொடு. கொண்டு செல்லட்டும்" என்றார். அதான் உங்களிடம் சேர்ப்பித்து விட்டேன்" என்றார் பூஜாரி.

அந்த பாதுகைக்காக ஆசைப்பட்டவர்கள் அதிசயமாக கோவிலுக்குள் வந்து பார்த்துக் கொண்டிருக்க, அதை அடியேன் கொண்டு சென்ற பையில் பூவுடன் வைத்தேன்.

பூஜாரி கூறியது அனைத்தையும் கேட்டுவிட்டு, அமைதியாக அகத்தியரை பார்த்தபடி நின்றிருந்தேன். இரு நிமிட அமைதிக்குப்பின், அகத்தியருக்கு நன்றி கூறிவிட்டு, உத்தரவு வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். வரும் வழியில் நண்பர்களும், வீட்டில் குடும்பத்தார்களும், பின்னர் வீட்டுக்கு வந்த அகத்தியர் அடியவர்களும், அந்த பாதுகையை விரும்பிக்கேட்டு, அவர்கள் தலையிலும் வைத்து அகத்தியர் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர்.

பின்னர் அந்த பாதுகை, பூசை அறையில் அகத்தியர் முன் வைக்கப்பட்டது.

அடியேனின் மனைவி அதற்கு சந்தானம், குங்குமம் வைத்து விளக்கேற்றுகிறாள். ஒரு பூவும் வைக்கிறாள். 

இதற்குப்பின், அடியேனின் வாயையும், மனதையும் அகத்தியப்பெருமான் கட்டிப்போட்டுவிட்டார். எதற்காக பாதுகையை கொடுத்தார் என இன்றுவரை தெளிவாகவில்லை. 

கேள்வியை கேட்பது நம் கடமை. பதில் கூறுவது அவர் உரிமை. ஆதலால், பதிலுக்காக காத்திருப்போம். வரும்பொழுது வரட்டும்!

ருத்திராக்ஷ ஸ்படிகலிங்க மாலையின் தொடர் நிகழ்ச்சிகளை, அகத்தியப் பெருமான் இத்துடன் நிறைவு செய்தார் என அடியேன் நம்புகிறேன்.

அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.

சித்தன் அருள்...................... தொடரும்!