​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 26 December 2018

சித்தன் அருள் - 784 - இன்றைய அகத்தியர் திருநட்சத்திர பூஜை!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

இன்றைய அகத்தியப் பெருமானின் திரு நட்சத்திர பூஜை படங்களை, உங்கள் பார்வைக்காக கீழே தருகிறேன்.

[ ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசர் கோவில், பாலராமபுரம் ]

அகத்தியர் இல்லம், பாண்டிச்சேரி








அகத்தியர் கோவில், பாபநாசம்


[கல்யாண தீர்த்தம் ]





[பொதிகையில் இன்று ]
[ஸ்ரீ அகஸ்தியர் கோவில், திருச்செந்தூர்]







-- * --






சித்தன் அருள்........... தொடரும்!

Thursday 20 December 2018

சித்தன் அருள் - 783 - அகத்தியப் பெருமானின், திருநட்சத்திரம்!


வணக்கம் அடியவர்களே!

இந்த மாதம் 26ம் தேதி (மார்கழி மாதம்) அகத்தியப் பெருமானின் ஆயில்ய திரு நட்சத்திரம் வருகிறது. அகத்தியப் பெருமானின் கோவில்களிலும், வேறு பல புண்ணியத் தலங்களிலும் அவருக்கான அபிஷேக பூஜைகள் மிகச் சிறப்பாக நடக்கவுள்ளது. வலைப்பூவில் தேடிப்பார்த்தால், எங்கெல்லாம் பூசை நடக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

அகத்தியர் அடியவர்கள் அனைவரும், அருகில் எங்கேனும் அகத்தியருக்கு பூஜை நடந்தால், சென்று பங்கு பெற்று, உங்களால் முடிந்த உதவிகளை, உழவாரப் பணிகளை செய்யுமாறு, தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். காலம் சற்று சுகவீனம் அடைந்துள்ளதால், தர்மமும், புண்ணிய கர்மாவும் குறைந்துவிட்டதாக தகவல். அகத்தியரின் அடியவர்களாகிய நாம் அதை மெருகுபடுத்த, அவரின் உத்தரவின் பேரில், அன்றைய தினம், குறைந்தது நல்ல வேண்டுதல்களை வைக்க வேண்டும், லோகம் க்ஷேமமாக இருக்க வேண்டும் என பிரார்த்திப்போம்.

மேலும், அந்த நாள் இந்த வருடத்தில் கூறப்பட்ட, பாபநாச ஸ்நான காலம் மார்கழி மாதத்தில், தொடங்கிவிட்டது. உங்கள் வசதிக்கு ஏற்றபடி, என்றேனும் ஒருநாள், சென்று, ஸ்நானம் செய்து, இறைவனை தரிசித்து வாருங்கள், என வேண்டிக்கொள்கிறேன்.

பாபநாச ஸ்நானம்:- தாமிரபரணி புராணத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சிவபெருமானை லிங்க ரூபத்தில் பிரதிஷ்டை செய்து, தாமிரபரணி தேவியானவள், அகத்திய பெருமான் முன்னிலையில் தவமிருந்து, இறைவனிடமிருந்து நம் மனித குலத்திற்காக ஒரு வரத்தை பெற்றாள். எவர் இந்த இடத்தில், மார்கழி மாதத்தில் எம் தீர்த்தத்தில் நீராடி, உம்மை கண்டு வணங்குகின்றனரோ, அவர்களுக்கு இந்த பூமியில் இனிமேல் பிறவி என்பதே இருக்கக்கூடாது, என. சிவபெருமானும் தாமிரபரணியின் பூசை, தவத்தில் உளம் மகிழ்ந்து "அப்படியே ஆகட்டும்" என்று கூறி பாபநாத சுவாமி கோவில் லிங்கத்தினுள் மறைந்தார். அந்த நாட்கள் இந்த வருடம் 16/12/2018 முதல் 14/01/2019க்குள் வருகிறது. 

அகத்தியர் அடியவர்களே! மேல் சொன்ன இந்த நாட்களை குறித்து வைத்துக் கொண்டு, இங்கு தெரிவிக்கப்பட்ட இடத்திற்கு சென்று, இறை அருள், அகத்தியர் அருள் பெற்று நலமாக வாழ்ந்திட வேண்டிக் கொள்கிறேன்

கோடகநல்லூர் தொகுப்பை, தனியாக விரைவில் தருகிறேன்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் நமஸ்காரம்!

சித்தன் அருள்........................ தொடரும்!

Thursday 13 December 2018

சித்தன் அருள் - 782 - கோடகநல்லூர் - அந்தநாள்>>இந்த வருட நிகழ்ச்சிகள் - 7

[ கலச பூஜை ]
[அகத்தியர் அடியவர்கள் ]


[ பூஜைக்காக காத்திருக்கும் அகத்தியர் அடியவர்கள் ]

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

தாமிரபரணி நதிக்குள் இறங்கி செல்லும் பொழுதுதான் ஞாபகம் வந்தது, தாமிரபரணி தாய்க்கும், அகத்தியர் லோபாமுத்திரை பெற்றோருக்கும், நெற்றி மண்ணில் பட்டு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யவில்லை என்று. எப்பொழுது, தாமிரபரணியில் ஸ்நானம் செய்தாலும், மூச்சடக்கி, நீரின் அடியில் சென்று,  இரு கரம் முன் நீட்டி, உடல் மண்ணில் பட பல முறை நமஸ்காரம் செய்கிற பழக்கம் உண்டு. சிலவேளைகளில், தாமிரபரணித்தாயே, வேகத்தில் செல்கிற பொழுது, எத்தனை முறை முயற்சி செய்தாலும், நெற்றி மட்டும் பூமியில் படும் அன்றி, நீரின் வேகம், உடலை மேல்பரப்பை நோக்கி தள்ளிவிடும். இம்முறை, நீர் ஓட்டம் அதிகமாக இருந்தாலும், நீரின் அடியில் சென்ற பொழுது, இதமான வேகமாக இருந்ததை உணர்ந்து, இது தான் தருணம் என பலமுறை சாஷ்டாங்கமாக நெற்றி பட நமஸ்காரம் செய்தேன். மனதுள் ஒரு சில எண்ணங்கள் தோன்றியது. அவற்றை கோர்த்து, மந்திர ஜபம் செய்து தாமிரபரணி தாய்க்கு காணிக்கையாக்கினேன்.

"உன் குழந்தைகள், எத்தனையோ பிரச்சினைகளுக்கிடையில், உனக்கான புஷ்கர பூசையை, எங்கிருந்து எல்லாமோ வந்து நடத்துகிறார்கள். அதை ஏற்றுக்கொண்டு, அத்தனை பேரின் வாழ்விலும், இன்பத்தை அளித்திடு. இன்றைய தினம், புஷ்கரத்தினூடேயே அகத்தியப்பெருமான் பெருமாளுக்கு நடத்துகிற பூசையும் நடக்கப்போகிறது. எல்லாம் சிறப்பாக அமைய, நீ அருள வேண்டும். உன் ஆசிர்வாதம் வேண்டும்!" என பிரார்த்தித்தேன்.

நீண்ட நேரம் நீருக்கடியில் இருந்ததால் மூச்செடுப்பதற்காக நீரின் மேல் பரப்பிற்கு வந்து கண் மூடி த்யானம் செய்து நின்றேன். நின்ற இடத்தில் மார்பு வரை நீர் ஓடிக்கொண்டிருந்தது. வேறு யாரும் அருகில் இல்லை. தியானத்தை கலைத்தபடி, ஏதோ ஒன்று மார்பில் முட்டியது. கண் விழித்து பார்க்க, ஒரு அரை முழம் பூ மார்பில் தட்டி மேலும் முன்னுக்கு போக முடியாமல் தவித்தது. இரு கரங்களினால் அதை கையில் எடுத்துப்பார்க்க, அப்பொழுது பூசை செய்ய உபயோகப்படுத்திய பூ போல் தோன்றியது. சரி! தாய் அனைத்திற்கும் பதில் கொடுத்துவிட்டாள்! இனி பூசைக்கு செல்வோம் என் தீர்மானித்து, கரை ஏறும் பொழுது "இந்தா! தாமிரபரணித்தாய் கொடுத்த பூ! தலையில் சூடிக்கொள்!" என மனைவியிடம் கொடுத்துவிட்டு, கரை ஏறினேன்.

அகத்தியர் லோபாமுத்திரை தாயின் விக்கிரகங்களை சுமந்த படி தங்கியிருந்த வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.பொதுவான விஷயங்கள் அனைத்தும் அதனதன் நேரத்தில் நடப்பதை கண்டு, அகத்தியரும், பெருமாளும், எல்லா விஷயங்களையும் அதனதன் நேரத்துக்கு கொண்டு தருகிறார்கள், பூசை விஷயத்தை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என அமைதியானேன்.

கோவிலுக்கு வந்த பொழுது, நான்கு விக்கிரகங்களும் மண்டபத்தில் தூணுக்கு அருகில் அமர்ந்திருந்தது. விக்கிரகங்களை கீழே தரையில் வைக்கக்கூடாது என்று தீர்மானித்து, அடியேனுக்கு ராமானுஜரிடமிருந்து கிடைத்த காவித்துண்டை, விரித்து அதன் மீது வைக்கச் சொன்னேன்.

அகத்தியர் அடியவர்களுக்காக, தயார் செய்யப்பட்ட பொங்கல், பெருமாளின் நிவேதனத்துக்குப் பின் கோவில் வாசலில் வைத்து கொடுக்கப்பட்ட்டது. வந்திருந்த நிறைய பேருக்கு பெருமாளின் பிரசாதம் பெரும் பாக்கியம் கிடைத்தது. கோவிலில் நல்ல கூட்டம் இருந்ததால், பூசை தொடங்க நிறைய நேரம் ஆகும் எனது தோன்றியது.

இதற்கிடையில், அர்ச்சகரை கண்டு, ஐந்து குடங்களையும், மூன்று அண்டாக்களையும் கடன் வாங்கினேன்.

ஒரு குழுவை உள்ளே அனுப்பி, பெருமாளின், தேசிகர் மேடையை தூக்கி வரச்செய்து, வெளியே மண்டபத்தில் போட்டு, சுத்தம் செய்ய வேண்டினேன். ஒரு சிறு குழு மின்னல் வேகத்தில் அந்த வேலையை முடித்தது. அபிஷேக தீர்த்தம் வெளியே செல்ல வேண்டிய குழாய்களை போட்டு, மேடைகளுக்கு நான்கு புறமும் சுத்தம் செய்து மாக்கோலம் போடப்பட்டது.

வந்திருந்த நிறைய அகத்தியர் அடியவர்கள் ஒன்று சேர்ந்து, பஞ்சாமிர்தம் செய்வதற்காக அமர்ந்தனர். அதில் பலரும், ஞாபகம் வைத்திருந்து, கனியை நறுக்குவதற்கு, கத்தி வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்தது, ஆச்சர்யமாக இருந்தது.

குடத்தை முதலில் அங்கு வந்திருந்த அகத்தியர் அடியவர்களில் ஐந்து பேரிடம் கொடுத்து, நதிவரை சென்று பெருமாளுக்கு அபிஷேக தீர்த்தம் எடுத்து கொண்டு வந்து, இந்த மூன்று அண்டாக்களில் நிரப்ப முடியுமா! என்று வினவ, உடனே முன் வந்தனர். ஒரு குடம் நீர் விட்டதும், குடத்தை அடுத்த அகத்தியர் அடியவருக்கு கொடுக்க வேண்டும். இதனால் நிறைய பேருக்கு, அபிஷேக தீர்த்தம் கொண்டு விடுகிற வாய்ப்பு அமையும், என கூறி நதிக்கரைக்கு செல்லச்சொன்னேன்.

அடுத்ததாக, யாரெல்லாம் சுற்று விளக்கு போட வருகிறீர்கள், என வினவ, ஒரு ஆறு பேர் வந்தனர். அவர்களிடம், சுற்று விளக்கை காண்பித்துவிட்டு, பெருமாளின் மண்டபத்தை காண்பித்து, அங்கும் விளக்கு போடவேண்டும் எனக்கூறி, அதற்கான சாமான்களை அவர்களிடம் கொடுத்தோம். மிகச்சிறப்பாக, விளக்கு போட்டனர். யாரெல்லாம் என்று தெரியவில்லை, ஆனால் அன்று விளக்கு போட்டவர்களுக்கு, பெருமாள் மிகச்சிறப்பான ஆசிர்வாதத்தை அளித்தார் என்பதை உணர முடிந்தது.

உள்ளே சன்னிதானத்தில், கூட்டத்தை ஒரு வழியாக சமாளித்து அனுப்பிவிட்டு 11 மணிக்கு அர்ச்சகர், பெருமாள், தாயார், தேசிகர் விக்கிரகங்களை அதனதன் இடத்தில் கொண்டு வந்து வைத்தார். எதேச்சையாக ஒரு சில விஷயங்களை அர்ச்சகரிடம் கொடுத்து பெருமாள் பாதத்தில் வைக்க வேண்டி சென்ற அடியவன், பெருமாள் இருந்த நிலையை கண்டு ஆனந்தத்தில் அசந்து போனேன்.  அகத்தியர் அடியவர்கள் கொண்டு வந்த மலை, பூ போன்றவற்றை தரித்து, அவர் முகம் பூரித்து போய், நின்றிருந்தார். அடடா! அகத்தியர் பூஜை செய்கிறார், என்றால், இப்படித்தான் தடாலடி போல. எல்லாம் மிகச்சிறப்பான நேரத்தில், சரியாக வந்து சேரும் போல. என்ன கேட்டாலும், பெருமாள் அப்பொழுதே கொடுத்துவிடுவார் என்று உள்மனம் கூறியது.

"ஏதாவது ஒன்று வேண்டுமானால் கேட்டு வாங்கிக்கொள்!" என்று கூறினாலே, நூறு விண்ணப்பத்தை கொடுத்துவிடும் பழக்கம், அடியேனுடையது. ஆனால் அந்த நேரத்தில் ஒரு விண்ணப்பம்தான் வந்தது.

"வந்திருக்கும் அகத்தியர் அடியவர்கள் சமர்ப்பிக்கிற வேண்டுதல்களை உடனேயே நிறைவேற்றி கொடுத்து, பத்திரமாக அவர்களை வீடு கொண்டு சேர்த்துவிடு!" என விண்ணப்பித்தேன்.  இதுவன்றி, வேறெதுவும், அடியேன் மனதில் தோன்றவில்லை.

திரு காளிமுத்து என்கிற ஒரு அகத்தியர் அய்யனின் அடியவர், சுத்தமான விரளி மஞ்சள் வாங்கி, நன்றதாக சுத்தம் செய்து, பொடியாக்கி கொண்டு வந்திருந்தார். அதை அர்ச்சகரிடம் கொடுத்து, பெருமாள் பாதம், மார்பு, கைகளில், தாயார் கைகளிலும், பாதத்திலும் சார்த்தி வைக்க கொடுத்தேன். அதையும், பெருமாள் மிக கனிவுடன் வாங்கி வைத்துக் கொண்ட காட்சியை மறக்கவே முடியாது.

பெருமாளிடம், நன்றி கூறி வெளியே வந்து பார்த்த பொழுது, மூன்று பாத்திரங்களிலும், தாமிரபரணி தீர்த்தம் நிரப்பப்பட்டுவிட்டது. கடைசியாக, ஐந்தாவது குடமும் நீருடன் வந்து சேர்ந்தது. நிமிர்ந்து பார்த்த பொழுது, அடியேனுக்கு வெகு பரிச்சயமான முகம்.

"என்ன? எத்தனை குடம் சுமந்தீர்கள்!" என்றேன்.

"ஒன்று தான்! அதற்கு மேல் வாய்ப்பில்லை. இந்த வாய்ப்பு கிடைக்க நிறையவே முயற்சி செய்ய வேண்டி வந்தது. அவ்வளவு பேர்கள் வரிசையில் நின்றார்கள். இதுவே பெரும் பாக்கியம்" என்றார்.

அர்ச்சகர் வந்து, அபிஷேக பூஜையை தொடங்குவதற்காக, அகத்தியர் அடியவர்கள், மிக அமைதியாக, த்யானம் செய்தபடி, ஜெபித்தபடி, மெதுவாக மந்திரம் கூறியபடி அமர்ந்திருந்தனர்.

ஒன்பது குடங்களில், கலச தீர்த்தம் வைத்து முதல் பூசையை அர்ச்சகர் தொடங்கிய பொழுது மணி 11.30.

தாமிர பரணி தீர்த்தமே, குடத்தினுள் விடப்பட்டது.

முதல் பூசையை ஆவாகனம், மந்திர ஜெபம் செய்து முடித்தவர்,  அடியேனை பார்த்து, தொடங்குகிறேன், என கண்களால் கூறினார்.

அபிஷேகத்துக்கு, அகத்தியர் அடியவர்கள் கொண்டு வந்த சாமான்களை பிரித்து அடுக்கி, ஒரு அகத்தியர் அடியவர், எடுத்து கொடுக்க தயாராக நின்றார்.

சுற்று விளக்கு போட்டுவிட்டு அந்தக் குழு வந்து அமர்ந்தது.

எல்லோரும் வந்துவிட்டார்களா? என ஒரு முறை சுற்று முற்றும் பார்த்துவிட்டு, அர்ச்சகரை நோக்கி "சரி" என தலையாட்டினேன்.

அகத்தியப் பெருமானின், அந்தநாள் >> இந்தவருட பூஜை தொடங்கியது.

சித்தன் அருள்................. தொடரும்!

Sunday 9 December 2018

சித்தன் அருள் - 781 - கோடகநல்லூர் - அந்தநாள்>>இந்த வருட நிகழ்ச்சிகள் - 6


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

[கடந்த வியாழக்கிழமை, காலையிலேயே தொகுப்பை வழங்க முடியவில்லை. மாலை அகத்தியர் கோவில் சென்று குருநாதரிடம் முறையிட்டேன். "சரி! போனால் போகிறது நேரம் கிடைக்கும் பொழுது சித்தன் அருளை வெளியிடு" என்று அருள் புரிந்தார். வீடு வந்து சேர்ந்து, அவர் அருளியது உண்மை தானா என்ற சந்தேகம் வரவே (சாதாரண மனுஷனாயிட்டேன்) சோதித்து பார்க்கலாம் என்று ஒரு எண்ணம் வரவே (திருந்தவே மாட்டேன் போல) கோடகநல்லூர் நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்க்க, மடை திறந்த வெள்ளமென சிந்தனை உருண்டோடியது. ஓ! நடந்ததை சொல்ல வேண்டுமென்றாலும், அவர் அருளினால்தான் உண்டு. அடியேன் கையில் எதுவுமே இல்லை.

"ஓதியப்பரின் பால் கட்டி பிரசாதம்", முகவரி தந்தவர்களுக்கெல்லாம் அனுப்பியாகிவிட்டது. இன்னும் ஒரு 40 பேர் இருக்கிறார்கள். இந்த வாரம், அல்லது அடுத்த வாரம், அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். கையில் பிரசாத இருப்பு தீர்ந்துவிட்டபடியால், இந்த 40 பேருடன், பிரசாத விநியோகம் நிறைவு பெறுகிறது. அடுத்த முறை கிடைக்கிற பொழுது அனுப்பி வைக்கிறேன் என்று உறுதி கூறுகிறேன். 

மேலும் ஒரு விஷயம். தயவுசெய்து யாரும், மொபைல் எண், சுய விலாசத்தை சித்தன் அருள் தொகுப்பில் போடாதீர்கள். உங்களுக்கு தொடர்பு கொள்ள ஏற்கனவே agnilingamarunachalam@gmail.com தந்திருக்கிறேன். இதுவரை வெளியிட்ட அடியவர்கள் தொடர்பை, எடுத்துவிட்டேன்  இனி, கோடகநல்லூர் நிகழ்ச்சிகளுக்கு செல்வோம்.]

ந்த வேஷ்டியை தெரிவு செய்வது என்பதை பெருமாளிடம் வேண்டி நின்ற அர்ச்சகருக்கு, பெருமாளிடம் இருந்து உத்தரவு வந்தது.

"என் குழந்தைகள் ஒன்று சேர்ந்து, அபிஷேக ஆராதனைகளை நடத்தி இன்றைய தினம், கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். ஆனால், இந்த தினம் எனதருமை கருடாழ்வாருக்கு உரியது. அவன் விஸ்வரூபம் எடுத்த ஒரே நிகழ்ச்சி நடந்த நாளில், அவனுக்கு மரியாதை செய்ய நான் விரும்புகிறேன். ஆதலால், என் பக்தனை யாமே தூண்டிவிட்டு வரவழைத்தோம். அவன் கொண்டு வந்ததை எனக்கு சார்த்து. எனக்கென என் குழந்தைகள் வாங்கிக்கொண்டு வந்த உடையை, கருடாழ்வானுக்கு சார்ந்து. அவன் அலங்காரம் தரித்து நிற்பதை நான் இங்கிருந்து கண்டு களிக்க விரும்புகிறேன்." என்றார்.

அடுத்த நொடியில், பக்தனின் வேஷ்டி பெருமாளிடமும், ஜரிகை போட்டு, சங்கு, சக்கரம், திருமண் போட்ட பெரிய வேஷ்டி, கருடர் விக்கிரகத்தையும் அலங்கரித்தது.

இப்படிப்பட்ட நிகழ்ச்சி, ஒரு கவனக்குறைவு அடியேன் பக்கம் மறுபடியும் வரக்கூடாது என்பதற்காக, இந்த முறை, பெருமாளுக்கும், கருடாழ்வாருக்கும் ஒரே போன்ற வஸ்திரங்களை வாங்கியிருந்தேன்.

இதில் புரிந்த ஒரு விஷயம் என்னவென்றால், அகத்தியப் பெருமான் பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகளை செய்தாலும், பெருமாளோ, அத்தனை பெருமைகளையும், கருடாழ்வாரை சிறப்பிக்க கொடுக்கிறார் என்பதே உண்மை.

கோவிலை விட்டு வெளியே வரவும், நான்கு பேர்கள் ஒரு ஆட்டோவில் வந்து இறங்கினார்கள். அவைகளில் ஒருவர், சமையல்காரர்.

அடியேனை கண்டதும், ஓடி வந்து "அடியேன், வந்துட்டேன்!" என்று கை கூப்பி நின்றார்.

அடியேனும் கைகூப்பி வணக்கம் சொல்லிவிட்டு "இப்ப உடம்பு எப்படி இருக்கு!" என்று அர்த்தத்துடன் சிரித்த படி கேட்டேன்.

"இப்பொழுது பரவாயில்லை! நேற்று இரவு 11 மணி வரை உறங்கவே இல்லை! பின்னர் தான் உறங்கினேன். விடியற்காலை 4.30க்குத்தான் நினைவு வந்தது. உடல் பாதிப்புகள் எல்லாம் சரியாகிவிட்டது. அதான் ஓடி வந்திருக்கிறேன்!" என்றார்.

"ஹ்ம்ம்! சரி உங்கள் வேலையை தொடங்குங்கள்! அதற்கு முன், 9 மணிக்கு எல்லோருக்கும் பிரசாதமாக பொங்கல் போட்டுவிடுங்கள். பெருமாளுக்கு நிவேதனம் பண்ணிவிட்டு, பிறகு, வந்திருக்கும் அடியவர்களுக்கு காலை சிற்றுண்டியாக கொடுக்க வேண்டும்!" என்றேன்.

"சரி!" என்றபடி தன் பரிவாரத்துடன் கோவில் உள்ளே சென்றார்.

சக நண்பர்களுடன், தாமிரபரணிக் கரை அடைந்தோம். ஒரு நண்பரிடம், "நாம் இருவரும் ஒருமுறை நன்றாக முங்கி குளித்தபின், கரையேறி, வீட்டுக்கு சென்று லோபாமுத்திரை சமேத அகத்தியர் விக்கிரகத்தை கொண்டு வந்து படித்துறையில் வைத்து அபிஷேக ஆராதனைகளை செய்துவிடலாம்" என்றேன்.

சொன்னது போலவே, ஒரு முறை தாமிரபரணியில் மூழ்கி கரை ஏறி, அகத்தியர், லோபாமுத்திரை விக்கிரகங்களை கொண்டு வந்து ஒரு காவி துண்டை நீரில் நனைத்து, பின் படித்துறையில் விரித்து, அதன் மீது வைத்தோம்.

அபிஷேகத்துக்கான சாமான்கள் எதையும் கொண்டு வரவில்லை என்று அப்பொழுது புரிந்தது.

அப்பொழுது ஒரு ஆச்சரியமான நிகழ்ச்சி நடந்தது.

என்ன செய்வது, வெறும் தாமிரபரணி தீர்த்தத்தை  விட்டு அபிஷகம் செய்து பூஜையை முடித்துக் கொள்ளலாமா என்று யோசிக்கும் பொழுது,

"அய்யா! என்று ஒரு குரல் கேட்டது.

நிமிர்ந்து பார்க்க, சென்னையிலிருந்து வந்த ஒரு அகத்தியர் அடியவர் தன் கரத்தில், ஒரு பீடத்தில், அகத்தியர், லோபாமுத்திரையின் விக்ரகங்களை சுமந்தபடி நின்றிருந்தார்.

"அய்யா! நீங்கள் அந்த விக்கிரகங்களுக்கு அபிஷேக பூசை செய்கிற பொழுது, இந்த விக்கிரகங்களையும் வைத்து செய்து விடுங்களேன்!" என்றார்.

"எந்தவிதமான அபிஷேக சாமான்களும் எங்களிடம் இல்லை. வெறும் தாமிரபரணி நீரைத்தான் உபயோகிக்கப்போகிறோம்." என்றேன்.

"அய்யா! அபிஷேக பொருட்கள் என்னிடம் உள்ளது! எடுத்துக்கொள்ளுங்கள்" என்றார்.

அவர் கொண்டு வந்த விக்கிரகங்களை முதலில் வந்த விக்கிரகங்கள் அருகில் வைத்து, அபிஷேகத்தை யார் செய்வது என்று யோசிக்கும் பொழுது, "நீங்களே, உங்கள் முறைப்படி அபிஷேக பூஜையை செய்து விடுங்கள்" என்றார் அவர்.

அவர் கொண்டு வந்த பால், மஞ்சள் பொடி போன்றவற்றை, தாமிரபரணி தீர்த்தத்துடன் மந்திர ஜபம் கலந்து,  அகத்தியப் பெருமானுக்கும், லோபாமுத்திரை தாய்க்கும், அபிஷேகம் செய்து பின்னர் ஒவ்வொரு விக்கிரகத்தையும் ஒருவர் சுமந்து நதியின் உள்ளே சென்று ஸ்நானம் செய்தோம். யாருக்கெல்லாம், விக்கிரகங்களை சுமக்கும், அவைகளுடன் நதியில் மூழ்கும் வாய்ப்பு கொடுக்க முடியுமோ, அத்தனை பேருக்கும் வாய்ப்பை கொடுத்தார் அகத்தியர்.

அகத்தியர் விக்கிரகத்தை மார்பில் சுமந்தபடி, நீரினுள் மூழ்கிய பொழுது, "என் திருவடி உன் தலையில் படவேண்டும் என்று ஆசைப்பட்டாயே! அதை நிறைவேற்றிக்கொள்வதுதானே" என்று மிகத் தெளிவாக அவர் கூறியது அடியேனுக்கு கேட்டது! உணர்ந்தேன்!

அவ்வளவுதான், அடுத்த நிமிடம், அகத்தியர் விக்கிரகத்தை, தலையில், சஹஸ்ராரத்தில் இருத்தி, நீரில் மூழ்கினேன்.

மனம் "ஓம் அகத்தீசாய நமஹ!" என்று ஜெபித்துக்கொண்டிருக்க, எத்தனை முறை மூழ்கி எழுந்தேன் என தெரியவில்லை. அடியேனின் தீராத அவா, அன்று தீர்ந்தது.

பின்னர், இரு விக்கிரகங்களையும், கரையில் இருத்தி, மாலை சார்த்தி, பூக்களை சார்த்தி, திலகமிட்டு, சிறு நிவேதனத்தை அளித்து, தீபம் காட்டி பூசையை நிறைவு செய்தபின், அகத்தியர் அமர்ந்திருந்த காவி துணியில் சிந்தியிருந்த விபூதியை, அவர் பிரசாதமாக நெற்றிக்கு இட்டுக்கொள்ளவும், நிறைய அகத்திய அடியவர்கள் வந்து "எனக்கும் அந்த விபூதி வேண்டுமென" கேட்டு வாங்கிக்கொண்டனர்.

கூட வந்திருந்த நண்பரிடம் சைகை காட்டி "தாமிரபரணி தாய்க்கான" பூசை சாமான்களை கொண்டு வரச்சொன்னேன்.

அகத்தியர் அனுமதியுடன், தாமிரபரணி தாய்க்கு பூசை செய்து, நதியின் நடுவரை சென்று பிரார்த்தனையுடன் பூஜை தட்டை நீர் ஓட்டத்தில் சேர்த்தோம். அது ஆடி அசைந்து செல்வதை மனதாரக் கண்டுகளித்தபின், கரைக்கு திரும்பும் முன், "அம்மா! தாமிரபரணித்தாயே! எதோ தெரிந்தவரையில், அகத்தியர் அனுமதியுடன், உனக்கு தாம்பூலம் சமர்ப்பித்துவிட்டோம்! அதை ஏற்றுக்கொள். ஏற்றுக்கொண்டாய் என்பதற்கு ஏதேனும் ஒரு அறிகுறி கொடுக்க வேண்டும்" என மனதுள் வேண்டிக்கொண்டேன்.

நான் நின்றிருந்த இடத்தில் நதி நீரானது கழுத்துவரை சென்றது. அருகில் யாரும் இல்லை என்று சொல்லலாம்.

யாரோ ஒரு பூவை வீசி எரிந்து, நம் மீது பட்டால் வரும் உணர்வு வரவே, இடது பக்கம் திரும்பி பார்க்க, ஒரு ரோஜா பூ, அடியேன் முகத்தில் பட்டு தெறித்து நீரில் வீழ்ந்து, ஓட்டத்தில், அடியேனை நோக்கி வந்தது.

இரு கரம் சேர்த்து அதை நீரிலிருந்து எடுத்து, கரையை நோக்கி சந்தோஷமாக வர, இதை ஒன்றிரண்டு அகத்தியர் அடியவர்கள் பார்த்துவிட்டனர்.

ரோஜா பூவுடன் கரைக்கு அருகில் வர "என்ன! அம்மா பூ கொடுத்துவிட்டாளா! எனக்கு கொடுங்களேன் அதை" என இருகை நீட்டி நீரில் நின்று கொண்டிருந்தாள் என் மனைவி.

கரையில் நின்றிருந்த ஒரு அகத்தியர் அடியவரும் (பெண்மணி) முன்னரே கவனித்து விட்டிருந்ததால், அந்த பூவை வேண்டி கைநீட்டி நின்றிருந்தார்.

அவர் கையில் அதை கொடுக்கும் முன், திரும்பி மனைவியிடம் "உனக்கு அம்மாவிடம் கேட்டு வேறு பூ வாங்கித்தருகிறேன்" என்றுவிட்டு, கரையில் நின்ற அகத்தியர் அடியவர் கைகளில், அந்த பூவை கொடுத்தேன்.

மட்டற்ற மகிழ்ச்சியுடன், பூவை வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டு, அந்த பெண்மணி தலையில் சூடிக்கொண்டார்.

அடியேன் மறுபடியும் நதிக்குள் இறங்கி சென்றேன், "ஒரு துண்டு பூ குடும்மா, தாமிரபரணித்தாயே!" என்று வேண்டியபடி.

சித்தன் அருள்.................... தொடரும்!