​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 31 May 2017

சித்தன் அருள் - 684 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால், இஃதொப்ப பாவவினைகள் முற்றாக ஒழிந்தால் ஒழிய ஒரு மனிதனால் கூடுமானவரை பக்குவமும், நல்ல தெய்வீகம் சார்ந்த புரிதலும் அடைவது என்பது கடினம். என்றாலும் இறைவனை வணங்கி இயம்புவது யாதென்றால், அங்ஙனம் புரிதல் வரவில்லை என்பதற்காகவே மனிதர்கள் செய்கின்ற அத்தனையையும் ஏற்றுக்கொள்வது என்பது இயலாதது. புரிதல் வரவில்லை என்பதல்ல பிரச்சினை. புரிந்துகொள்ள மறுப்பதுதான் பிரச்சினையாக இருக்கிறது. இறைவன் அருளாலே ஒரு மனிதன் வினைகளுக்கு கட்டுப்பட்டு, கண்ணுக்குத் தெரியாத விதியின்பிடியில் சிக்கி அந்த விதியின் பின்னால் சென்று கடைவரையில் பாவ, புண்ணியங்களுக்கு ஆட்பட்டு அதன் பின்னாலேயே செல்வதற்குண்டான நிலைதான் பெரும்பாலும் இருக்கிறது. இந்தப் பாவங்கள் அறியாமையை தோற்றுவிக்கிறது. மாயையிலே மனிதன் சிக்கித்தவிக்க வழி செய்கிறது. பாசத்திலும், பந்தத்திலும் சிக்கித்தவிக்க வழிகாட்டுகிறது. பொய்யை மெய் போலும், மெய்யை பொய்போலும் காட்டுகிறது. இதிலிருந்து ஆத்மாவை கரையேற்றத்தான் ஞானிகளும், மகான்களும் இறைவனின் கருணையைக்கொண்டு காலகாலம் முயற்சி செய்து வருகிறார்கள். ஆயினும் கூட லகரத்தில் ஒரு ஆத்மா மேலேறி வருவதே கடினமாகத்தான் இருக்கிறது. காரணம் என்ன? பரிபூரண சரணாகதி என்பது இல்லாத நிலை. எதையும் மனிதன் தன் அறிவோடு பொருத்திப்பார்ப்பது. தன் அறிவிற்கு விளங்கவில்லையென்பதால் அனைத்தும் ஏற்புடையது அல்ல என்று ஒதுக்கி வைப்பது. எனவேதான் இறைவன் அருளாலே ஜீவ அருள் ஒலையிலே சில ஆத்மாக்களுக்கு நல்ல வழி காட்டலாம் என்று இறைவன் கருணைகொண்டு இஃதொப்ப, எம்போன்ற மகான்கள் வாயிலாக சில ஆத்மாக்களுக்கு வழிகாட்டுகின்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறார். அந்த நிலையை தொடர்ந்து நாங்கள் கடைபிடிக்கும் வண்ணம் அருளாணையிட்டாலும் கூட, ஆன்மீகம் அறியாத மனிதனை விட ஆன்மீகவாதி என்று சொல்லிக்கொண்டு இங்கு வரக்கூடிய பலரும் பக்குவமில்லாமல் இருப்பதும், புரிதல் இல்லாமல் இருப்பதும், மிக,மிக,மிக முட்டாள்தனமாக நடந்துகொண்டு, தன்னுடைய முட்டாள்தனத்தின் உச்சக்கட்டத்தால் துன்பத்திலே மாட்டிக்கொண்டு "சித்தர்கள் எஃதும் செய்யவில்லை, கைவிட்டுவிட்டார்கள்" என்று கூறுவது ஒரு விதத்திலே மனித நிலையிலே பார்த்தால் மனிதனுக்கு நியாயமாகத் தெரிந்தாலும் மகான் பார்வையில் பார்க்கும்பொழுது நகைப்புக்குரியதாகவே தோன்றுகிறது. முட்டாளை திருத்துவது கடினம். மூடனுக்கு அறிவுரை பகர்வது கடினம் என்று எமக்கும் தெரியும், இறைவனுக்கும் தெரியும். ஒரு மகானின் இனிமையான உபதேசத்தைவிட, பாவ வினையின் வழிகாட்டுதலுக்கு அதிக மதிப்பு இருக்கிறது மனிதனிடம். அதனால்தான் நல்லவை எந்த மனித மனதிலும், எக்காலத்திலும் ஏறுவதில்லை.

Tuesday 30 May 2017

சித்தன் அருள் - 683 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஜனகன் மன்னனாகி அரசாண்டாலும் கூட, அவனுடைய சிந்தனையானது இறைவனின் திருவடிகளில் இருந்தது. மன்னன் என்பது ஒரு வேடம், ஒரு நாடகம் என்பதை அவன் அறிந்திருந்தான். அதற்குள் அவன் லயித்துப் போய்விடவில்லை. அதைப்போல ஒரு மனிதன் இந்த உலகிலே எதை செய்தாலும், எந்த சூழலில் இருந்தாலும் "இவையனைத்தும் ஒரு நாடகம், ஒரு சொப்பனம்" என்று எடுத்துக்கொண்டு "மெய் என்பது இறைவனின் திருவடியே" என்பதை புரிந்துகொண்டு, எதைப் பேசினாலும், எதைச்  செய்தாலும் ஆழ்மனதிலே ஒரு தீவிர வைராக்யம், இறைவனின் திருவடியை நோக்கி இருந்து கொண்டேயிருந்தால், அர்ஜுனனின் குறி போல அது தவறாது இருந்தால், எந்த சூழலையும் தாண்டி சென்று வெற்றி காண இயலும். ஆனால் தடைகளும், குழப்பங்களும், மன சஞ்சலங்களும் இல்லாத நிலையில் ஒருவன் தவம் செய்யலாம் என்றாலும், அது யாருக்கும், இந்த உலகில் மட்டுமல்ல, எந்த உலகிலும் சாத்தியமில்லை. ஒன்று இறை சிந்தனைக்கு மாற்றாக வந்து ஒருவனின் கவனத்தை திசை திருப்புகிறது என்றால் என்ன பொருள்? இறைவனின் சிந்தனையை விட அதிலே அவன் மனம் ஒரு ஈடுபாட்டை, ஒரு சுகத்தை உணர விரும்புகிறது என்றுதான் பொருள். எனவே அதனையும் தாண்டி இறைவனின் திருவடிகளில் ஒரு சுவையை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதுதான் நாங்கள் எப்பொழுதுமே கூறவருவது.

Monday 29 May 2017

சித்தன் அருள் - 682 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஞானம் பெற வேண்டும், தவம் செய்ய வேண்டும், இறை வழியில் செல்ல வேண்டும், நேர்மையாக வாழ வேண்டும், பக்தி வழியில் செல்ல வேண்டும். ஆனால் பல்வேறு தடைகள் வருகிறது. மனதிலே தேவையில்லாத எண்ணங்கள் வருகிறது என்று பல மனிதர்கள் வருத்தப்படுகிறார்கள். இவையெல்லாம் இல்லையென்றால் நன்றாக வெற்றி பெறலாம் என்றால் இவைகளைத் தாண்டி செல்வதற்குண்டான வைராக்யத்தை ஒரு மனிதன் பெற வேண்டும். உலகியல் ரீதியான வெற்றியைப் பெற வேண்டுமென்றால் எத்தனை தடையென்றாலும் அதனைத் தாண்டி செல்கிறான். தனக்குப் பிரியமான காதலியை ஒரு இடத்தில் சந்திக்க வேண்டுமென்றால் எப்படியெல்லாம் சிந்தித்து அந்த சந்திப்புக்கு எத்தனை தடை வந்தாலும் அதனைத் தாண்டி அங்கே செல்கிறான் அல்லவா? என்ன காரணம்? அந்த நோக்கத்தில் அவனுக்கு உறுதி இருக்கிறது. அதைப்போல இறைவனை உணர வேண்டும். மெய்ஞானத்தை கண்டிப்பாக இந்தப் பிறவியில் உணர்ந்துவிட வேண்டும். இறையருளை பரிபூரணமாகப் பெற்றுவிட வேண்டும் என்கிற உறுதி அணுவளவும் தளராமல் மனித மனதிலே வந்துவிட்டால் மற்ற விஷயங்கள் குறித்து அவனுக்கு எந்தவிதமான குழப்பமும் தேவையில்லை. எதை செய்தாலும், எப்படி செய்தாலும் நோக்கம் இறைவனிடம் இருந்தால் ஒரு மனிதன் எது குறித்தும் அஞ்சத் தேவையில்லை.

Sunday 28 May 2017

சித்தன் அருள் - 681 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

சுருக்கமாக நாங்கள் கூறவருவது என்னவென்றால் மனித உடம்பெடுத்த ஆத்மா, தன்னை ஆத்மா என்று உணராத வரையில் ஒரு மனிதன் எதைப் பெற்றாலும், எத்தனை உயர்வை உலகியல் ரீதியாகப் பெற்றாலும், அதனால் யாதொரு பலனுமில்லை. தன்னைத்தான் உணருகின்ற வகையில் எவனொருவனுக்கு ஒரு பிறவி அமைகிறதோ, "இது பாவம், இது புண்ணியம், இதை செய்யலாம், இதை செய்யக்கூடாது" என்ற தெய்வீக அறிவு கடுகளவேனும் எந்தப் பிறவியில் ஒருவனுக்கு உதயமாகிறதோ, நவக்ரகங்கள், ஞானியர்கள், பிறவி – இது போன்ற விஷயங்களில் ஓரளவேனும் ஈடுபாடு ஒருவனுக்கு எந்தப் பிறவியில் ஏற்படுகிறதோ அந்தப் பிறவிதான், மெல்ல, மெல்ல இறைவனை நோக்கி அழைத்து செல்லக்கூடிய முதல் படிகட்டு என்பதை புரிந்து கொண்டிட வேண்டும். ஆனால் அப்படி உணர்ந்த மனிதர்கள் கூட பல்வேறு தருணங்களில் மனசோர்வை அடைந்து "இப்படியெல்லாம் இது போன்ற விஷயத்தை பேசிப்பேசி உலகியல் ரீதியாக தோற்று விட்டோமே? இதெல்லாம் தெரியாத ஒரு மனிதன் நல்ல முறையில் வெற்றி பெற்று உயர்ந்த பதவியில் இருக்கிறானே? எல்லா சுகங்களையும் நுகர்கிறானே?" என்று மற்ற மனிதர்களோடு தம்மை ஒப்பிட்டுப் பார்த்து, தான் பின்பற்றி வரும் கொள்கை தவறு எனவும், தான் நடந்து வரும் பாதை தவறு எனவும் எண்ண வேண்டிய நிலைமைக்கு ஆட்பட்டு குழப்பத்தில் வாழத்துவங்குகிறான்.

Saturday 27 May 2017

சித்தன் அருள் - 680 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால், காலகாலம் மனிதர்கள் வாழ்வியல் சிக்கல்களை தீர்க்கும் விதத்திலே எத்தனையோ முயற்சிகள் எடுப்பதில் ஒன்றுதான், தெய்வீக வழியில் தீர்வைக் காண எண்ணுவது. இஃதொப்ப முறையிலே மகான்களை, ஞானிகளை நாடுவதும் அதில் ஒன்றாக, இஃது போன்ற நாடிகளை நாடுவதும் காலகாலம் நடந்துகொண்டே இருக்கக்கூடிய நிகழ்வுதான். ஆனால் இயம்புங்கால், நாடிகளை பார்ப்பது என்பது வேறு. நாடிகளை வாசிக்கக் கேட்பது என்பது வேறு. நாடிகளை முழுமையாக உணர்ந்து கொள்வது என்பது வேறு. நாடிகளை பார்ப்பதும், கேட்பதும் ஒரு மேலெழுந்தவாரியான சிந்தனை. நாடிகளை முழுமையாக ஞானக்கண்ணோட்டத்தோடு உணர்ந்து கொள்ள முயற்சி செய்யாவிட்டால், நாடியில் பலாபலன்கள் பலியாதது போலும், நாடிகள் அனைத்தும் பொய் போலவும் மனிதனுக்குத் தோற்றமளிக்கும். இஃதொப்ப நிலையிலே ஞானிகளும், மகான்களும், மனிதனின் விதியும் இஃதொப்ப அந்த ஞானிகளின் கருணையால், இறைவனின் அருளால் அந்த மனிதனின் விதியில் சேர, இஃதொப்ப நாடிகளின் மூலம் எம்போன்ற மகான்கள்  வாக்கை இறைவனருளால் அருளிக்கொண்டே வருகிறார்கள்.  இஃதொப்ப நிலையிலே நாங்கள் மீண்டும், மீண்டும் கூற வருவது என்னவென்றால் ஒரு மனிதன் இதுவரை எடுத்த பிறவிகளில் சேர்த்த பாவங்களின் மற்றும் புண்ணியங்களின் நிலை. இப்பொழுது நடப்பு பிறவியில் அவன் சிந்தனை, அவன் செயல். இஃதொப்ப ஒரு ஆலயத்தில் இருக்கும்பொழுது மட்டுமாவது ஒருவன் நல்லவனாக இருந்துவிட்டுப் போகட்டுமே! இது போன்ற நாடிகளைக் கேட்கும்பொழுதாவது ஒருவன் நல்லவனாக இருந்துவிட்டுப் போகட்டுமே! என்பது ஒரு மாறாத உண்மையாக இருந்தாலும் எம்மைப் பொருத்தவரை இறைவன் இல்லாத இடம் ஏதுமில்லை. எனவே ஒரு மனிதன் வாழ்க்கை முழுவதும் எல்லா நிலையிலும் பரிபூரணமான நல்லறிவைப் பெறுவதோடு, நல்ல குணத்தை வளர்த்துக் கொண்டிட வேண்டும். ஒரு மனிதன் தனக்கு தேவையான விஷயங்களை அல்லது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள தவறான வழியைத் தேர்ந்தெடுப்பதின் காரணமே, அவனுக்கு சரியான வழிமுறையில் வெற்றி கிடைக்கவில்லை என்பதாலும், சரியான வழிமுறையில் சென்றால் வெற்றி கிடைக்க நீண்ட காலம் ஆகிறது, என்பதற்காகவும், அஃது மட்டுமல்லாமல் குறுக்கு வழியிலே சென்றால் விரைவில் வெற்றி பெறலாம், பலரும் அவ்வாறு பெற்றிருக்கிறார்கள் என்பதே காரணம்.  இவையனைத்துமே மனிதன் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளக்கூடிய நிலையாகும்.

Friday 26 May 2017

சித்தன் அருள் - 679 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

தன் முனைப்பு இருக்கிறது என்பதை எப்படி தெரிந்து கொள்வது ?

மற்றவர்களுக்கு இருக்கிறது என்று சொல்வதே தன்முனைப்பின் அடையாளம்தான். உலகிலே மிகவும் தீயவர் யார் ? மிகவும் நல்லவர் யார்? என்ற தேர்வு பஞ்ச பாண்டவர்களில் தர்மருக்கும், கௌரவர்களில் துரியோதனனுக்கும் வைத்தபொழுது, துரியோதனன் சென்று வந்து முனிபுங்கவர்களிடம் ‘ யாரைப் பார்த்தாலும் எனக்கு கெட்டவனாகத்தான் தெரிகிறார்கள். எல்லோரும் தீயவர்கள்தான். இந்த உலகம் தீயவர்களால்தான் நிரம்பப்பட்டிருக்கிறது ‘ என்று கூறினானாம். தர்மர் வந்து கூறும்பொழுது ‘இந்த உலகில் எல்லோரும் நல்லவர்களே. இருக்கின்ற ஒரே தீயவன் நான்தான்' என்று கூறினானாம். இந்த சம்பவத்திலிருந்து புரிந்துகொள்ள வேண்டியது என்ன? தன்னுடைய பார்வையில் எல்லாம் நல்லவைகளாகத் தெரியவே தன்னுடைய மனதையும், சிந்தனையையும், கருத்தையும் அனுமதித்தால் அதுவே சிறப்பாகும். ஒரு மகா பெரிய தீயவனிடமும் ஏதாவது ஒரு நல்ல குணம் இருக்கும். எத்தனை பெரிய நல்லவனிடமும் எஃதாவது ஒரு தீய குணம் இருக்கும். நல்லவனிடம் இருக்கின்ற தீய குணத்தை சீர்தூக்கிப் பார்த்து அவன் திருத்திக் கொண்டிய வேண்டும். தீயவனிடம் இருக்கக்கூடிய நல்ல குணத்தை அவன் மேலும் வளர்த்துக்கொண்டு அதன் மூலம் மற்ற தீய குணங்களை விட அவன் முயற்சி செய்ய வேண்டும்.

Thursday 25 May 2017

சித்தன் அருள் - 678 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இஃதொப்ப நிலையிலே ஒரு மனிதன் முழுக்க, முழுக்க ஞானியாகவோ, சித்தனாகவோ மாறிவிட வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. அது அவன் எண்ணினாலும் நடக்காது என்பது வேறு விஷயம். ஆனால் நாங்கள் கூற வருவது கூடுமானவரை தன்னலத்தைக் குறைத்து பொதுநலமான எண்ணங்களோடு வாழ்தல், பிறருக்கு முடிந்தவரை நன்மைகளை செய்தல், நன்மைகளை செய்ய முடியாவிட்டாலும் தீமைகளை செய்யாதிருத்தல், சூழ்ச்சி, வஞ்சனை இவற்றை பின்பற்றாமல், வளர்த்துக் கொள்ளாமல் இருத்தல், தம், தம் கடமைகளை நேர்மையாக ஆற்றுதல், கடமைகளை நேர்மையாக செய்ய முடியாத நெருக்கடி வரும் தருணம் அந்தப் பணியையே புறக்கணித்தல். ஏனென்றால் நேர்மையற்று ஒருவன் எதைபெற்றாலும் அதனால் அவன் பெறுவதல்ல, அனைத்தையும் இழக்கிறான் என்பதே சித்தர்கள் பார்வையில் உண்மையாகும். எனவே நேர்மையான எண்ணம், உபகாரமான எண்ணம், சதா தர்ம சிந்தனை, பரிபூரண சரணாகதி, பக்தி – இவையெல்லாம் ஒரு மனிதன் வளர்த்துக் கொண்டால் இறை வழி என்பது அவனுக்கு மிக எளிதாக இருக்கும். ஆனால் முழுக்க, முழுக்க, முழுக்க இறைவனுக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டாலும் இறைவன் சோதனைக்கு ஆட்பட்டே ஒருவன் மேலேறி வரவேண்டும். நாங்கள் அடிக்கடி கூறுவதை மீண்டும் நினைவூட்டுகிறோம்.

Wednesday 24 May 2017

சித்தன் அருள் - 677 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவனின் கருணையைகொண்டு இயம்புவது யாதென்றால் இஃதொப்ப உலக வாழ்வினிலே பல்வேறு மனிதர்களுக்கு காலகாலம் பல்வேறு பிரச்சினைகள் வந்து கொண்டேயிருக்கின்றன. இவைகளையெல்லாம் விலக்கி வைத்து பிரச்சினைகளே இல்லாத வாழ்க்கையைதான் பெரும்பாலான மனிதர்கள் விரும்புகிறார்கள். இஃதொப்ப நிலையை பார்க்கும்பொழுது அஃதொப்ப ஒரு அமைதியான வாழ்வு என்பது பெரும்பாலும் சராசரி வாழ்வில் கிட்டுவது கடினமே. இவைபோக வினைகளின் எதிரொலி அதன் வழியில் வாழ்க்கையில் பல்வேறுவிதமான அனுபவங்களைக் கொண்டுவந்து சேர்ப்பதால் மனித வாழ்வு என்பது பல கோணங்களில் பார்க்கும்பொழுது அமைதியைத் தராத நிலையிலும், சந்தோஷத்தை தராத நிலையிலும் இருப்பதுபோல் தோன்றுகிறது. ஆனாலும் கூட மனதை தளரவிடாமல் வாழ்க்கையை எதிர்கொள்வதும் இறை நம்பிக்கையோடு வாழ்வதுமாக வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள கட்டாயம் மெல்ல, மெல்ல மாற்றங்கள் ஏற்படும்.

Tuesday 23 May 2017

சித்தன் அருள் - 676 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

பாவத்தின் தண்டனையாக தீய எண்ணங்கள் தோன்றாமலிருக்க வரம் தர வேண்டும்!

தீயது என்று தெரிந்தும் மனிதன் ஒன்றை செய்கிறான் என்றால் என்ன பொருள்?. ஒன்று உடனடியாக அதனால் லாபம் கிடைப்பதால். அடுத்தது உடனடியாக சுகம் கிடைப்பதால். இது யாருக்கு தெரியப்போகிறது? யார் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்?. அல்லது யார் யோக்யன்? என்னை விட அதிக பாவம் செய்பவர் நன்றாகத்தானே இருக்கிறார்?.  என்றெல்லாம் தன்னை சமாதானம் செய்து கொண்டுதான் ஒரு மனிதன் தீயது என்று தெரிந்தும் ஒன்றைத் தொடர்கிறான். எப்பொழுதும் இறைவன் தன்னை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணம் ஒரு மனிதனுக்கு உறுதியாக வந்துவிட்டால், அவன் தீயதை எண்ண மாட்டான், பார்க்க மாட்டான், பேச மாட்டான், செய்ய மாட்டான். தீ அது சுடும் என்பதால் அதைத் தீண்டவும் மாட்டான்

Monday 22 May 2017

சித்தன் அருள் - 675 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் இஃதொப்ப நலமான வாழ்வும், நலத்தோடு நலமான பொருளாதார நிலைமையும், நலமும், நலத்தோடு நலமான எண்ணங்களும், நலமான உறவுகளும் நலமான சகல சூழலும் நாள் நாளும் நலமாய் மாந்தர்களை தேடி வரவேண்டும் என்றுதான் நாள் நாளும்  மாந்தர்கள் எண்ணுகிறார்கள். இறைவனை நோக்கி வேண்டுகிறார்கள். ஆயினும் கூட ஒவ்வொரு மனிதனையும் "நீ நலமா ?, அது குறித்து  மெய்யாக, மெய்யாக, மெய்யாகக் கூறு"  என்று கூறினால் ‘நலமில்லை. எனக்கு இஃது, இஃது பிரச்சினை. வாழ்க்கையில் இஃது, இஃது உளைச்சல்' என்றெல்லாம் கூறுகிறான். இறைவனின் கருணையாலே இஃதொப்ப முன்னர் உரைத்தது போல் ‘ நலமா? ‘ என்று யாரை வினவினாலும் ‘ நலமில்லை ‘ என்று கூறுவதின் உட்பொருளை ஆய்ந்து பார்த்தால் பல்வேறு தருணங்களில் ஒவ்வொரு மனிதனின் விதி அவ்வாறு இருப்பது புரியும். ‘விதியைக் காரணம் காட்டியே வாழ்ந்து கொண்டிருந்தால் மனித அறிவுக்கு ஆங்கு என்ன வேலை ? ‘ என்று அடுத்த ஒரு வினா வரும். யாங்கள் விதி என்று ஏன் கூறுகிறோம் என்றால், விதியைப் புறக்கணித்து விட்டு ஒரு மனித வாழ்க்கையில் எதனையும் கூற இயலாது என்பது மெய்தான் என்றாலும் கூட அந்த விதி ஒரு மனிதனுக்கு அவ்வாறு ஏற்படுவது அந்த மனிதனின் முந்தைய, முந்தைய, முந்தைய பிறவிகளின் செயல்பாடுகள். அதனால் ஏற்படக்கூடிய பாவ, புண்ணிய விளைவுகள். இவற்றால் அவன் அடுத்தடுத்து பிறவிகள் எடுக்க வேண்டிய நிலை. அந்தப் பிறவி எங்கு?, எப்பொழுது?, எவ்வாறாக?, எந்த சூழலில்?, எந்த வகையாக? என்றெல்லாம் முந்தைய வினைகள் தீர்மானிக்கப்பட்டு அதன் மூலம் அடுத்தடுத்த பிறவிகள் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் தரப்படுகின்றன. இங்கே மனிதன் கூர்ந்து கவனிக்க வேண்டியது யாதென்றால், இயம்பிடுவோம், ஒரு மனிதனுக்கு திடகாத்திரமான தேகம், தேவையான பொருளாதாரம், நல்ல கல்வி, உயர் பதவி, இன்னும் இஃது போன்று இந்த உலக வாழ்விற்கு தேவையான அனைத்தும் தரப்பட்டாலும், ஏதோ ஒன்று அவன் மனதிற்கு நிம்மதியைத் தராமல் வேதனையைத் தந்து கொண்டிருக்கிறது. பொதுவாக பலருக்கும் இஃதே நிலைமை. மிகக் கடுமையான வறுமையில் வாடும் மனிதனுக்கு அதிகபட்சம் அடிப்படைப் பொருளாதாரம் இருந்தால் போதும் என்று எண்ணுகிறான். அடிப்படை பொருளாதாரம் கிடைத்து விட்டாலோ அல்லது ஏற்கனவே கிடைத்தவனோ இன்னும் அடுத்த நிலை பொருளாதாரம் வேண்டும் என்று எண்ணுகிறான். இன்னும் அடுத்த நிலை வந்த பிறகு, நிறை செல்வம் இஃது அல்ல, இன்னும் செல்வம் வேண்டும் என்று எண்ணுகிறான். இவையெல்லாம் பிறவியிலே கொடுக்கப்பட்ட ஒரு மனிதன் இந்த செல்வம் தன்னை விட்டு சென்றுவிடக் கூடாது. நாள், நாளும் பெருக வேண்டும் என்று போராடுகிறான். இஃதொப்ப வேறு வகையில் நல்ல பதவி, நல்ல நிலைமை இருக்கின்ற மனிதனுக்கு, நல்ல கல்வி இருக்கின்ற மனிதனுக்கு அஃது நிறைவைத் தராமல் வேறு, வேறு (அவனுடைய) எண்ணங்களும், ஆசைகளும் நிறைவேறாமல் போகிறதே?' என்று அஃதொப்ப ஒரு உளைச்சலாக, வேதனையாக அவன் மனதிற்கு தோன்றுகிறது. இதிலிருந்து மனிதன் புரிந்து கொள்ள வேண்டியது, ஒரு மனிதனுக்கு எவையெல்லாம் கிடைத்திருக்கிறதோ, எவையெல்லாம் இயல்பாக அமைந்திருக்கிறதோ, எவையெல்லாம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அவற்றில் நிறைவும், நிம்மதியும் காண இயலவில்லையென்றால் அங்கேயும் விதி விளையாடுகிறது என்பதே பொருள். எஃது கிடைக்காமல் கையைவிட்டு நழுவுவது போல் தோன்றுகிறதோ, அதன் மீது ஆசையும், ஈர்ப்பும் மனிதனுக்கு அதிகமாகிவிடுகிறது. ஒட்டுமொத்தமாக மனித ஆத்மாக்களுக்கு எம் போன்ற ஞானிகள் கூற வருவது,  இந்த உலக வாழ்விலே நீ வெற்றி பெறு அல்லது உலகியல் ரீதியாக நீ தோல்வியை அடைந்து கொள். அஃதல்ல. மறந்தும் பாவங்களை எந்த வகையிலும் சேர்த்துக் கொள்ளாமல் விழிப்புணர்வோடு வாழ்வதே வாழ்வாகும். அதற்கு வழிகாட்டுவதே ஜீவ அருள் நாடியில் யாங்கள் கூறும் வாக்காகும். ஆனாலும் கூட, இதனை மட்டும் யாங்கள் இயம்பிக் கொண்டே இருந்தால் கேட்கின்ற மனிதர்களுக்கு பக்குவம் இல்லாததால், சலிப்பும், அயர்வும் தோன்றிவிடுகிறது. எனவே அவ்வப்பொழுது வாழ்வியல் என்று எதையாவது நாங்கள் கூற வேண்டியிருக்கிறது. அதனையும் இறைவனின் அருள் அனுமதியை வைத்தே, விதியின் அமைப்பை வைத்தே கூற வேண்டியிருக்கிறது. இஃதொப்ப நிலையிலே இதழ் ஓதுகின்ற இன்னவன் எம்மிடம் முன்னரே அருள் அனுமதியைப் பெறாமலும், இவனாகவே ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட்டதும் இஃதொப்ப விதியின் போக்கில் நடந்திட்டாலும் கூட இஃதொப்ப அட்டமி கலையும், உகந்ததில்லாத ஒரு நிலைமையும், பல்வேறு தடைகளை இன்னும் இந்த வாக்கினை கேட்கின்ற இன்னவனுக்கு வருவதை விதி வழியாக சுட்டிக்காட்டுவதையே குறிக்கிறது. இஃதொப்ப நிலையிலே மனிதர்களுக்கு புரிவதற்காக சுபதினம் என்று கூறுகிறோம். எம்மைப் பொறுத்தவரை எல்லா தினமும் சுபதினம்தான். பொது நலமும், சத்தியமும், இறை சிந்தனையும் கொண்டு வாழ்கின்ற மனிதனுக்கு எல்லா நாழிகையும் சுப நாழிகைதான். அந்த வகையிலே திட்டமிட்டு ஒரு சுப தினத்தைத் தேர்ந்தெடுத்து வாசித்திருந்தால் ஒரு வேளை உகந்த வாக்கை இன்னவனுக்கு கூறியிருக்கலாம் என்று எண்ணலாம். அப்படியும் கூறுவதற்கில்லை. ஏனெனில் அவனுடைய விதி அமைப்பு எந்த நாழிகையில் இதனை கேட்க வேண்டும்? எந்த தினத்தில் கேட்க வேண்டும்? எவ்வாறு, எந்த அளவு கேட்க வேண்டும்? என்றெல்லாம் இருக்கிறதோ, அவ்வாறுதான் இஃதொப்ப  விதி ஒரு அமைப்பைக் கூட்டுவிக்கிறது.

Sunday 21 May 2017

சித்தன் அருள் - 674 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

உலக வாழ்விலே பல்வேறுவிதமான வேதனைகள், சோதனைகள் அல்லது சங்கடங்கள், துன்பங்கள் ( எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம் ), அவமானத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். இவையனைத்துமே சராசரி மனிதப் பார்வையில் தாங்கிக்கொள்ள பழக வேண்டும். இதனைத் தாண்டப் பழக வேண்டும். இவைகளைத் தாண்டி, தாண்டிப் பழகுவதும் ஒரு வகையான இறை உணர்தல் பயிற்சியாகும். அஃதாவது மனம் எனப்படுவது என்ன ? என்று ஆய்ந்து பார்த்தால் தொடர்ந்த எண்ணங்களின் ஓட்டம். எண்ணங்களின் தொகுப்பு. கண்ணை மூடி தனிமையில் அமர்ந்து சிந்தித்துப் பார்த்தால் கடந்த கால அனுபவங்கள் நிழலாடும் அல்லது எதிர்காலம் குறித்த ஆசையோ, அச்சமோ நிழலாடும் அல்லது நடைமுறையில் உள்ள சிக்கல்கள் எதிர்படும். இதுதான் தானா ? இதுதான் நம் வாழ்வா? இப்படி கவலைப்படுவதற்குதான் வாழ்க்கையா ? என்றெல்லாம் சிந்தித்துப் பார்த்தால் உண்மையில் மனிதன் கானல் நீர்போல் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது அப்பொழுது புரிய வரும். சற்றே உலகியல் வெற்றி வந்துவிட்டால் பெரும்பாலான மனிதர்கள் இறை விலகி வெறும் இரை தேடி செல்வதிலேயே குறியாக இருப்பார்கள். மாயை அப்படி ஆழ்த்திவிடும். எனவே மாயையை புரிந்து கொள்வதும், மாயையிலே மூழ்கிவிடாமல் இருப்பதும் கடினம்தான். எல்லா மனிதர்களுக்கும் அது சாத்தியமில்லைதான். அதைப் போல் தெய்வீகத்தை சரியான முறையில் உணர்ந்துகொள்வதும் கடினம்தான். இருந்தாலும் இதற்கெல்லாம் சேர்த்து வைத்துதான் எளிமையான முறையிலே நாங்கள் தவத்தையோ, யோக மார்க்கத்தையோ கூறாமல் தர்மத்தையும் அஃதொப்ப பக்தி மார்க்கத்தையும் போதிக்கின்றோம்.காரணம் என்ன ?

ஒரு மனிதனை இறைவனை நோக்கி திசை திருப்ப விடாமல் தடுப்பது எது? இறைவன் எப்பொழுதும், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பது கருத்து அளவில் எல்லோருக்கும் தெரிகிறது. ஆனால் முழுமையாக அந்தப் பரம்பொருளை ஒரு சராசரி நிலையில் யாராலும் உணர முடிவதில்லை. இறைவன் என்கிற அந்த மாபெரும் ஆற்றலை வரைகலையில் உள்ளது போலவோ, சிற்பத்தில் உள்ளது போலவோ ஆலயத்தில் காண்பது போலவோ தனியாக ஒரு நண்பனை பார்ப்பது போல, ஒரு உறவை பார்ப்பது போல பார்த்தால்தான் இறை என்று மனித மனதிற்கு போதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அப்படி பார்ப்பது, உணர்வது மட்டும் இறையல்ல. அதனையும் தாண்டி அந்த இறைவன் எந்தெந்த வடிவத்தில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார் ? சம்பவங்கள் மூலம், நல்ல நிகழ்வுகள் மூலம், தன்னை சுற்றி வாழ்கின்ற நல்ல மனிதர்கள் மூலம் அந்த இறைத்தன்மை என்பது வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது என்பதை அறிவுபூர்வமாக புரிந்துகொள்ள முயல வேண்டும். அஃதாவது ஆறு, நதி என்றால் என்ன ? என்று கேட்டால் ஒரு மனிதன் எதைக் கூறுவான் ?. நீர் நிரம்பிய ஒரு இடமா? அல்லது நீர் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு இடமா ? நீர் ஓடிக்கொண்டேயிருப்பது ஆறு என்றால் நீர் வற்றிய பிறகு அதனை என்னவென்று அழைப்பது? ஒரு நீண்ட பள்ளமான பகுதியிலே மணல் இருக்கிறது. அங்கங்கே திட்டு,திட்டாக நீர் தேங்கியிருக்கிறது. இதனையும் நதி என்று கூறலாமா? அல்லது கரைபுரண்டோடும் வெள்ளத்திலே சிக்கிக்கொண்ட மனிதன் அதனையும் நதியென்று கூறுவானா? எல்லாம் ஒரு வகையில் நதியென்றாலும் நதி வெளிப்படுகின்ற விதம் மாறுபடுகிறது. ஒரு இடத்தில் அகலமாக, ஆழமாக, நீண்டும் இன்னொரு இடத்தில் குறுகியும் செல்கிறது.

அதைப்போல அந்த இறைவன் என்கிற மாபெரும் ஆற்றல் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் புதைந்து கிடக்கிறது. ஒவ்வொரு பூக்களிலும், விதைகளிலும், விருக்ஷங்களிலும், காற்றிலும், சுற்றியுள்ள அனைத்து இயற்கைத் தன்மையிலும் இருக்கிறது. ஆனால் இதனை சரியாகப் புரிந்து கொள்வது என்பதுதான் மனிதனுக்கு கைவராத கலையாக இருக்கிறது. ஏனென்றால் மனிதனுக்கு அறியாமையும், பாசமும், ஆசையும், தன்னலமும் மிகப்பெரிய எதிரியாக இருக்கிறது. இவற்றையெல்லாம் விட்டுவிட்டு ஒட்டுமொத்த உலகம் ஒரு குடும்பம். இறைவன் குடும்பத்தலைவன். எல்லோரும் பிள்ளைகள் என்று பார்த்துவிட்டு அமைதியாக தன் கடமையை செய்துவிட்டு ஒரு மூன்றாவது மனிதனின் பார்வையோடு தன் வாழ்க்கை நிகழ்ச்சிகளையும், தன்னை சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் பார்க்கப் பழகினால் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள இறைத்தன்மையை நன்றாகவே புரிந்து கொள்ளலாம். புரிந்து கொள்ளத் தடையாக இருப்பது பாவங்கள். பாவங்களைப் போக்க தர்மங்கள், பிராயச்சித்தங்கள், ஸ்தல வழிபாடுகள் – இவைகளெல்லாம் இருக்கின்றன. இந்த பக்தி மார்க்கத்திலும், தர்ம மார்க்கத்திலும் சென்றாலே யாரும் போதிக்காமலேயே ஆன்மீகம் குறித்த பல சந்தேகங்கள் இறைவனருளால் உள்ளே உள்ளுணர்வாக தோன்றி நீங்கி விடும். இறை ஞானம் மெல்ல,மெல்ல துளிர்க்கும்.

Saturday 20 May 2017

சித்தன் அருள் - 673 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

பிறர்பொருட்டு ஒவ்வொரு மனிதனும் பிரார்த்தனை செய்ய வேண்டும், பிறர் நலம் குறித்து எண்ண வேண்டும் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் ஜீவ அருள் ஒலையிலே வாக்கு என்று வரும்பொழுது ஒவ்வொரு மனிதனும் அந்தந்த குறிப்பிட்ட ஆத்மாவும் அதற்கேற்ற கிரகநிலையைப்பெற்று முழு சரணாகதியோடு இன்னும் சரியாகக் கூறப்போனால் ஒரு கிரக நிலை இருக்கும்பொழுது இந்த ஜீவ அருள் ஒலையை ஒரு மனிதன் ஏற்பான், நம்புவான். ‘ இதுதான் எனது வாழ்க்கையின் லட்சியம், உயிர்மூச்சு ‘ என்று கூட கருதுவான். சில சமயம் அவனது ஊழ்வினையால், பாவ வினையால் கிரக நிலைகள் மாறும்பொழுது இந்த வாக்குகளையே புறக்கணிப்பான், நம்ப மறுப்பான். பிறகு மீண்டும் நம்புவான், பிறகு புறக்கணிப்பான். சராசரி மனிதனின் நிலை இவ்வாறு இருக்க பிறர் பொருட்டு நீ பிரார்த்தனை செய்யலாம். ஆலயம் செல்லுமாறு அறிவுரை கூறலாம். ஆனால் ‘ சித்தர்கள் ஒரு ஒலையிலே வந்து வாக்கைக் கூறுகிறார்கள். அங்கே சென்று உனக்காக வாக்கினைக் கேட்டேன். இவ்வாறு பரிகாரம் வந்திருக்கிறது ‘ என்று சொன்னால் அதனை 100 – க்கு 99 விழுக்காடு மனிதர்கள் ஏற்க மாட்டார்கள், நம்ப மாட்டார்கள். உன்னையும் ஏளனம் செய்வார்கள். பொதுவாக உனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இது பொருந்தும். எனவே பிறர் பொருட்டு பிரார்த்தனை செய்வது ஏற்புடையது.

Friday 19 May 2017

சித்தன் அருள் - 672 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஐயனே! மகாபாரதத்தை எழுதுவதற்காக விநாயகப் பெருமான் தன் தந்தத்தையே முறித்ததாக புராணத்தில் கேட்டிருக்கிறேன். இதன் காரண, காரியத்தை விளக்குங்கள்!

வியாஸ பகவான், ஞான திருஷ்டியிலே அருளிய மகாபாரதத்தை, வியாஸரின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப, விரைவாக பதிவு செய்ய வேண்டுமென்றால், அத்தகைய ஆற்றல் இறைவனுக்குதான் உண்டு. அந்த இறைவன், அந்த பரம்பொருள், விநாயக வடிவமெடுத்து எழுதியது என்பது உண்மை மட்டுமல்ல, அப்பொழுது எழுதப்பட்ட அஃதொப்ப சுவடி இன்றும் பூமியிலே, இமயமலை சாரலிலே இருக்கிறது என்பது உண்மையோ உண்மை. வால்மீகி எழுதிய அஃதொப்ப மூல நூலும், இன்னும் இருக்கிறதப்பா. இவைகள் ஒருபுறம் இருக்கட்டும். 

ஆற்றல் மிக்க வியாஸ பகவான் எண்ணினால் “அந்த எண்ணங்கள் அப்படியே அந்த ஒலையில் பதியட்டும்" என்றால் பதிவு செய்யப்பட்டிருக்கும். அல்லது “வியாஸ பகவான் என்ன எண்ணுகிறாரோ அவையெல்லாம் இந்த ஒலையிலே பதியட்டும்" என்று விநாயகப் பெருமான் எண்ணியிருந்தாலும் அது பதிந்திருக்கும். இருந்தாலும் மனிதரீதியாக ஒரு மனிதன் எப்படி செயல்பட வேண்டும்? ஒரு செயல் என்று வந்துவிட்டால் எல்லாவற்றிலும் இறையாற்றலை பயன்படுத்த தேவையில்லை. தன்னிடம் ஆற்றல் இருக்கிறது என்பதற்காக எல்லா செயலையும் அந்த ஆற்றலைக் கொண்டுதான் செய்ய வேண்டும் என்பதில்லை, என்பதை மனிதனுக்குப் புரிய வைக்க வேண்டும் என்பதற்காக இறைவன் நடத்திய நாடகம்.

Wednesday 17 May 2017

சித்தன் அருள் - 671 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

தியானம் செய்யும்பொழுது மனம் அலைபாய்கிறது. இஃது இயல்புதான். உன்னுடைய எண்ண ஓட்டத்தைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டேயிரு. எண்ணங்களை அடக்க முயன்றால் அது திமிறிக்கொண்டு எழும். எண்ணங்களை கவனிக்கப் பழகு. தானாகவே அனைத்தும் உன்னை விட்டு மெல்ல, மெல்ல சென்றுவிடும். அதற்குதான் யாங்கள் எடுத்த எடுப்பிலேயே தியானம் குறித்து உபதேசம் செய்யாமல் ஸ்தல யாத்திரை, தர்மம், தொண்டு என்று கூறி அதன் மூலம் பாவங்களைக் குறைத்து, பாவங்கள் குறைந்த நிலையில் ஒருவன் தியானத்தை செய்ய அமர்ந்தால், அந்த தியானம் சற்று, சற்று எளிதாக வசப்படும்.

Tuesday 16 May 2017

சித்தன் அருள் - 670 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவனின் கருணையைக்கொண்டு, இயம்புவது யாதென்றால், இஃதொப்ப இறை வழியில் தன்னை, முழுமையாக தன்னை ஒப்புவித்து செல்வதற்கு அதிக, அதிக மனோதிடமும், வைராக்யமும் ஒவ்வொரு மனிதனும் பெற வேண்டும். இஃதொப்ப இத்தருணம், இங்கு எம்முன் அமர்ந்துள்ள சேய்கள் அஃதொப்ப வைராக்யம் பெற்று  இறை வழியில் சற்றும் கலங்காமல் தடுமாற்றம் அடையாமல் செல்ல இறைவன் அருளைக்கொண்டு நல்லாசிகளை இயம்புகின்றோம். இறை வழி, இறை வழி என்றால் எங்ஙனம் பொருளை புரிந்து கொள்வது? ஆலயம் செல்கின்றோம், மந்திரங்களை உச்சரிக்கின்றோம், இறைவன் என்று ஒரு மகாசக்தி இருப்பதாக நம்புகிறோம். மனித சக்தியால் தீர்க்க முடியாத துன்பங்களை, பிரச்சினைகளை அந்த மகாசக்தி தீர்த்து வைக்கும் என்று நம்புகிறோம். இதைத்தாண்டி இறைவழி, இறைவழி என்றால் என்ன? என்பது பெரும்பாலும் மனிதர்கள் எண்ணுகின்ற எண்ணங்களாகும். இறைவனின் கருணையாலே, அஃது, புரிகின்ற ஆத்மாவிற்கு, புரிகின்ற காலத்தில், எந்தப் பிறவியில், எத்தருணம் புரிய வேண்டுமோ அஃது புரியும் என்றாலும், இறைவன் எம்போன்ற மகான்களுக்கு இட்ட அருட்கட்டளையால் அவ்வப்பொழுது வாய்ப்புகளை விதிவழியாகவோ, விதியைத்தாண்டி இறைவனின் கருணையாலோ பெறுகின்ற சில மாந்தர்களுக்கு யாமும் இறைவன் அருளாலே உபதேசம் செய்வதும் உண்டு. இஃதொப்ப சராசரியான மன நிலையைவிட்டு மெல்ல, மெல்ல மேலே உயர்வதே இறைவழியாகும். இஃதொப்ப மேலும் ஆய்ந்து நோக்கின் வாழ்கின்ற வாழ்வினிலே ஏற்றமும், இறக்கமும், உயர்வும், தாழ்வும், இன்பமும், துன்பமும், போற்றுதலும், தூற்றுதலும் என்று இரு எதிர் நிலைகள் எந்த சூழலில் ஒரு மனிதன் எதிர்கொண்டாலும், அதற்காக மனசோர்வு அடையாமல் மனதை பக்குவப்படுத்தி வாழ்வதே இறைவழியில் செல்வதற்கு ஏற்ற மன நிலையாகும். வேறு வழியில் கூறப்போனால் எஃது நடந்தாலும், என்னதான் நடந்தாலும், வாழ்க்கையில் எப்படி நடந்தாலும், விதி, எப்படி அழைத்து சென்றாலும் மனம் தடுமாற்றம் அடையாமல் சினமோ, அதீத பற்றோ கொண்டிடாமல் அமைதியாய் வாழ்வியல் கடமைகளை நேர்மையாய் ஆற்றுவதோடு விருப்பு, வெறுப்புகளுக்கு இடமளிக்காமல் ‘இவன் நல்லவன், ஏனென்றால் எனக்கு உதவி செய்து கொண்டேயிருக்கிறான். இவன் தீயவன். ஏனென்றால் எனக்கு எப்பொழுதும் தீங்கு செய்துகொண்டே இருக்கிறான் என்று பேதம் பார்க்காமல் நல்லவனை மதிக்க எப்படி ஒரு மனிதன் எண்ணுகிறானோ அதைப்போல தனக்கு தீங்கை செய்கின்ற மனிதனையும் மதித்து அவனும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்ற உயர்ந்த மனதை வளர்த்துக் கொள்ள வேண்டும். அது எப்படி சாத்தியம்? என்றால் வெளிப்படையான நன்மைகளை செய்கின்றவன் பொதுவாக நல்லவன், நண்பன்  என்று கூறலாம். ஆனால் மறைமுகமாக உதவி செய்கின்ற ஒருவனை நாம் மறக்காமல் இருக்கவேண்டுமல்லவா? அப்படித்தான் எந்த மனிதன் தீங்கை செய்கிறானோ அவன் தீங்கு செய்ய வேண்டும். அதன் மூலம் துன்பத்தை அனுபவிக்க வேண்டும். அதை அனுபவித்து பாவம் தீர வேண்டும் என்ற விதி இருப்பதால், நம் பாவத்தைக் கழிப்பதற்கென்று ஒரு ஆத்மா நம் வாழ்க்கையில் வந்திருக்கிறதே என்று எண்ணி அவனையும் மதித்து போற்றி வாழ்த்த கற்றுக்கொள்ள வேண்டும். இவையெல்லாம் சராசரியான பார்வையில் ஏற்புடைய கருத்தாக தெரியாது என்றாலும் கூட இப்படி எல்லா நிலையிலும் உச்சநிலை கருத்தோடு வாழ முயற்சி எடுத்திட வேண்டும். எல்லா உயர்ந்த எண்ணங்களும் ஒரு தினத்தில் கைவரப்பெறாது என்றாலும் கூட இந்த உயர்ந்த எண்ணங்களையெல்லாம் அசைபோட்டு, அசைபோட்டு, அசைபோட்டு அன்றாடம் தன்னைத்தான் ஆய்வு செய்து பிறர் குற்றங்களை பாராமல் பிறரிடம் இருக்கக்கூடிய உயர்ந்த குணங்களைப் பார்த்து தன்னிடம் இருக்கக்கூடிய குற்றங்களை பொதுவில் எடுத்துரைத்து தன் குற்றத்தைக் குறைத்து பிறரிடம் இருந்து நல்லவற்றை கற்க முயல்வதே இறைவழியாகும். இப்படி எல்லாவகையிலும் மிக, மிக கீழான நிலையில் சராசரி சிந்தனையாக இல்லாமல் மிக உயர்வாக ஒரு ஞானி அந்த இடத்தில் இருந்தால் என்ன முடிவு எடுப்பான்? ஒரு சித்தன் இப்படியொரு சம்பவத்தை எதிர்கொண்டால் அவன் அதனை எப்படி எடுத்துக்கொள்வான்? என்று சிந்தித்துப் பார்த்து மிக, மிக உயர்வாக, பெருந்தன்மையாக எல்லா நிலைகளிலும், எல்லா சூழலிலும், எல்லா மனிதர்களிடமும் நடந்துகொள்ள, அவ்வாறு நடப்பதால் ஏற்படும் கசப்பான அனுபவங்களையும் ஜீரணித்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும். இஃது கடினம்தான். பசுக்களையும், அஃது போன்ற சாதுவான விலங்குகளையும் எதிர்கொள்வது எளிது. ஆனால் நஞ்சுள்ள பாம்பை அன்பாக அரவணைக்க முடியுமா?  என்றால் முடியாதுதான். ஆனால் சரியான முறையிலே ஒரு கடுகளவு கூட வெறுப்பின்றி நஞ்சுள்ள பாம்பை போன்ற மனிதனையும் பார்க்க, பழக எண்ணிவிட்டால் அந்த நஞ்சு கூட மாணிக்கமாக மாறி நன்மை செய்யும் என்பதை மனிதர்கள் மறந்துவிடக்கூடாது. இந்த உயர்ந்த கருத்துக்களை முடிந்தவரை பின்பற்ற இச்சேய்களுக்கு இறைவனருளால் யாங்கள் இத்தருணம் நல்லாசி கூறுவதோடு இஃதொப்ப ஸ்தல யாத்திரை அல்லது திருத்தலப் பயணம் என்பதை யாங்கள் ஒருபொழுதும் மறுக்கவில்லை. எல்லா மனிதர்களும் அவ்வாறு செல்வதும், காலத்தை அதற்காக வியம் செய்வதும், தனத்தை வியம் செய்வதும் பாவங்களை குறைப்பதற்கு ஏற்ற வழியாகும்.  ஆனால் என்ன முறையில் செல்ல வேண்டும்? சித்தர்கள் கூறுகின்ற முறையில் செல்கிறார்களா? என்பதில்தான் அதன் நல்ல பலன்கள் அடங்கியிருக்கிறது. ஸ்தல பயணம் என்ற நிலையிலே மனம் குழப்பமில்லாமல், தடுமாற்றமில்லாமல் இறை சிந்தனையோடு சத்சங்கமாக செல்வது ஏற்புடையது. கூடுமானவரை அங்கு சந்திக்கின்ற வறுமையால் வாடும் ஏழைகளுக்கு இயன்ற உதவிகளை செய்வதும் நல்லதொரு நிலையை அடைவதற்கு ஏற்றதாக இருக்கும். இஃதொப்ப நல்விதமாய் முற்காலம் போல் இல்லாமல் இக்காலத்திலே இறைவனருளால் மாந்தர்களுக்கு பல்வேறுவிதமான பயண வசதிகள் கிடைத்துள்ளன. விதவிதமான வாகனங்கள் கிடைத்துள்ளன. இவற்றைப் பயன்படுத்தி செல்வது தவறு என்று கூறவில்லை. வாகனமே இல்லாத காலத்தில் வேறு வழியில்லாமல் நடந்துபோவதை சாதனையாக யாரும் எண்ணியதில்லை. எண்ணுவதுமில்லை. ஆனால் இத்தருணம் விதவிதமான வாகன வசதிகள் இருந்தும் திருப்பதி போன்ற ஸ்தலங்களுக்கும் இன்னும் பல்வேறு ஸ்தலங்களுக்கும் பாதயாத்திரையாக பலர் செல்கிறார்கள். அவ்வாறு செல்வது கூட ஒரு வகையில் எளிதில் பாவ கர்மாவை குறைப்பதற்குண்டான வழியாகும். அது எப்படி? இப்படியெல்லாம் உடலை வருத்திக்கொண்டு இறைவனை வணங்க வேண்டுமா? என்றால் இறைவன் ஒருபொழுதும் அதனை எதிர்நோக்கவில்லை. ஆயினும் கூட கர்மவினைகளால் உடலை விதவிதமான நோய்கள் வாட்டலாம். சிறுசிறு விபத்துகள் ஏற்படலாம். அதனால் உடல் வேதனைப்பட வேண்டும் என்ற விதியிருக்கும் பட்சத்தில் முன்னதாக இறைவனுக்காக அந்த உடலை வருத்திக்கொண்டால், வேதனைப்படுத்தி விட்டால் கர்மவினையால் வருகின்ற உடல் சார்ந்த துன்பங்கள் குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது. அந்த நோக்கிலே உடலை வருத்தி ஸ்தல யாத்திரை செய்வதை யாங்கள் வரவேற்கிறோம். அதே சமயம் எல்லா மனிதர்களுக்கும் அஃது ஏற்றதல்ல என்பதும் யாங்கள் அறிந்ததுதான்.

Monday 15 May 2017

சித்தன் அருள் - 669 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

தினசரி கடமையாக, குறைந்த பட்சம் எஃதாவது ஒரு ஆலயம் சென்று மனமொன்றி வழிபடுவது நன்மையைத் தரும்.  அப்படியும் இல்லாதவர்கள் குறைந்தபட்சம், இரண்டு நாழிகையாவது காலையிலோ, மாலையிலோ இல்லத்தில் அமைதியாக நெய் தீபம் ஏற்றி, உயர்வான முறையிலே வாசனாதி திரவியங்களையெல்லாம் இட்டு, எஃதாவது இறை நாமாவளியை (சொல்லி) மனதிற்கு பிடித்த எந்த இறைவனின் வடிவத்தையாவது வணங்கி வருவது நன்மையைத் தரும். குறைந்த பட்சம் ஒரு மனிதனுக்காவது அவனுக்கு வேண்டிய நியாயமான உதவிகளை செய்வது இறைவனின் அருளை விரைவில் பெற்றுத்தரும். அடுத்ததாக தன் கடமைகளை மறக்காமல் நேர்மையாக ஆற்றுவது என்ற உறுதியை எடுத்துக்கொண்டு அதற்கேற்ற வகையில் செயல்பட வேண்டும். மனைவியாகப்பட்டவள் இல்லறக் கடமைகளை ஆற்றுவதும், கணவனாகப்பட்டவன் பணியில் உள்ள கடமைகளை ஆற்றுவதும், பிள்ளைகள் கல்வி கற்க வேண்டிய கடமைகளை ஆற்றுவதும், எதையும் ஒத்தி வைக்காமல் நேர்மையான முறையில் உடனுக்குடன் செய்கின்ற ஒரு பழக்கத்தை கடைபிடித்துக்கொண்டே இறை வழிபாடு, தர்மகாரியங்கள் செய்வது கட்டாயம் இறைவனை நோக்கி செல்வதற்கு மிக எளிய வழியாகும்.

Saturday 13 May 2017

சித்தன் அருள் - 668 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

பொதுவாக மனிதர்கள் அறிந்திட வேண்டும். நாங்கள் இப்படி கூறுவதால் மனித விஞ்ஞானம் இதனை ஏற்றுக்கொள்ளாது என்றாலும் கூட ஓரளவு புற விஞ்ஞான அறிவும், அக மெய்ஞான அறிவும் ஓரளவு புரிந்த மனிதன் புரிந்து கொள்வான். ஏனைய மனிதர்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்வது ஏற்புடையது. அஃதாவது எத்தனையோ விஷய ஞானங்களை ஆய்வு செய்து இறைவன் அருளால் புறத்தே தன்னை வளர்த்துக்கொண்ட மனித குலம், இந்த பிரபஞ்சம் அனைத்துமே சில விதிகளுக்கு உட்பட்டு இயங்குகிறது என்பதை அடிக்கடி மறந்து விடுகிறது. பிரபஞ்சம் மட்டுமல்லாது இந்த அண்ட சராசரங்களும் பல்வேறு விதிகளுக்கு உட்பட்டே இயங்குகிறது. இந்த விதிகளை மீறி மனிதன் எதையாவது செய்ய வேண்டுமென்றால் அதற்கும், அந்த விதிமுறைகளுக்கும் ஒரு தொடர்பும், ஒரு எதிர்சக்தியும் இருக்க வேண்டும். அந்த வகையிலே ஒரு வாகனம் சீராக ஓடவேண்டும் என்றால் அந்த வாகனம் எல்லா வகையிலும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். வாயு உருளைகள் வடிவம் மிகவும் சிறப்பான முறையிலும் நல்ல முறையிலும் இருக்க வேண்டும். வேகமாக செல்வதற்கென்று வாகனம் வடிவமைக்கப்பட்டால் அதற்குரிய வாயு உருளை அகலமில்லாமல் இருக்க வேண்டும். உதாரணமாக அதிக வேகம் என்றால் வாகனத்தின் எடை குறைவாக இருக்க வேண்டும். அதே சமயம் அந்த வாகனம் எந்தளவிற்கு விரைவாக செல்கிறதோ அந்தளவிற்கு செல்லுகின்ற பாதையிலே வாயு உருளையால் உராய்வுத் தன்மை ஏற்படும். இந்த உராய்வு எதிர்விசையை ஏற்படுத்தி வேகத்தை மட்டுப்படுத்தும். அந்த உராய்கின்ற தன்மையை குறைப்பதற்கென்று அந்த வாயு உருளைகள் வடிவமைக்கப்பட்டிருந்தால் அது எதிர்விளைவை குறைவாகத் தரும். அப்படி குறைக்கப்பட வேண்டுமென்றால் அதன் ஒட்டுமொத்த பாகத்திலே, ஓடுகின்ற தளத்திலே மிக, மிக, மிக குறைவான பகுதியே அந்த வாயு உருளை படவேண்டும். அந்த அளவிற்கு அது குறைவாக படும்பொழுதுதான் குறைவான எதிர்விளைவுகள் ஏற்படும். வேகம் மட்டுப்படாது. இதையெல்லாம் தாண்டி ஓடுகின்ற ஓடுதளம் என்பது சமச்சீராக இருந்தால் நன்றாக இருக்கும் என்பது பொதுவிதி. அதே சமயம் வேகம் எந்தளவிற்கு முக்கியமோ அந்த வாகனத்தை சட்டென்று நிறுத்த வேண்டுமென்ற நிலை வந்தால் அந்த சமச்சீரான தளம் அதற்கு பாதகத்தை தந்துவிடும். அதற்காக சற்றே சீரற்ற ஓடுதளத்தை உருவாக்கினால் அது ஓரளவு பாதுகாப்பைத் தந்தாலும் வேகத்தை மட்டுப்படுத்தும். இப்படி எல்லாவகையிலும் பார்த்து அதிவிரைவாக ஓடுவதற்கென்று ஒருவகையான ஓடுதளமும், அதற்கேற்ற வாகனமும் அதில் செல்ல வேண்டும். மற்றபடி சராசரியாக மாந்தர்கள் பயணம் செல்கின்ற அந்த பயண ஓடுதளமானது அதிக விரைவை ஏற்க வல்லாத நிலையில்தான் இருக்க வேண்டும். ஒரு வாகனம் அதன் உச்சகட்ட வேகத்தில் செல்கிறதென்றால் என்ன பொருள்? வாகனம் மட்டும் செல்லவில்லை. வாகனத்தில் செல்கின்ற மனிதர்களும் அதே வேகத்தில்தான் செல்கிறார்கள் என்று பொருள். சட்டென்று வாகனத்தை எஃதாவது ஒரு காரணத்திற்காக நிறுத்தவேண்டிய தருணம் வந்துவிட்டால் வாகனத்தின் உள்ளே இருக்கின்ற தடையமைப்பு உள்ளேயிருக்கின்ற மனிதர்களை தடை செய்வதில்லை என்பதால்தான் சிறு விபத்துகளும், பெருவிபத்துகளும் ஏற்படுகின்றன. எப்படிப் பார்த்தாலும் தெளிவற்ற மனிதர்கள், குழப்பமான மனிதர்கள் மூடத்தனமான மனிதர்கள் இருக்கின்ற இஃதொப்ப இந்த பரந்த பகுதியிலே அதிக வேகம் என்பது ஏற்புடையதல்ல. எதிர்நோக்கின்ற வேகத்தை விடவே 60 கல் வேகம் என்பதே அதிகம்தான். இப்படி குறைவாக செல்வதால் என்ன லாபம் வந்துவிடும்? என்றெல்லாம் பாராமல் பாதுகாப்பை மட்டும் கருதி வாகனத்தை இயக்குவதே இஃதொப்ப எம்வழி வரும் சேய்களுக்கு ஏற்புடையதாகும். ஏனென்றால் வாகனத்தின் பாகங்கள் பல்வேறு விதமான முறையிலே ஆய்வு செய்யப்பட்டு வருவதாக மனிதர்கள் எண்ணிக்கொண்டாலும் கூட அதிக அனலும், அதிக உராய்வும் கண்பார்வைக்குத் தெரியாத வெடிப்புகளையெல்லாம் ஏற்படுத்தி திடீர் அழுத்தத்தால் அவைகள் விலகவும், சுயகட்டுப்பாட்டை இழக்கவும் ஏற்புடையதான ஒரு சூழலில்தான் இருக்கிறது. இறைவன் கருணையும் ஒருவனின் ஜாதகப்பலனும் நன்றாக இருக்கும்வரையில் நலமே நடக்கும். எப்பொழுது ஒருவனுக்கும் பாவ வினை குறுக்கே வரும்? என்பதை மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாது. எனவே இறைவனை வணங்கி அமைதியான முறையில், சாந்தமான முறையில் குறைந்த வேகத்தில் வாகனத்தை இயக்குதலே பொதுவாக அனைவருக்கும் ஏற்புடையதாகும். ஆனால் மனித மனம் இதை எந்தளவு ஏற்கும், எந்தளவு ஏற்காது என்பது எமக்குத் தெரியும்.

Thursday 11 May 2017

சித்தன் அருள் - 667 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஒவ்வொரு சிறு பயணமோ, பெரு பயணமோ மூத்தோனை வணங்கி செல்வதும் அருகில் உள்ள ஆலயத்தில் எஃது தெய்வ வடிவம் இருந்தாலும் வணங்கி செல்வதும் குறிப்பாக காவல் தெய்வங்களை வணங்கி செல்வதும் சாலையோரத்திலே விதவிதமான ஆலயங்களைக் கட்டுவதில் எமக்கு உடன்பாடில்லை என்றாலும் கூட பல்வேறு எல்லை தெய்வங்கள் பல்வேறு எல்லைகளிலே அமர்ந்து ஆட்சி செய்வதால் குறிப்பிட்ட எல்லைகளிலே செல்லும்பொழுது இடைக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட ஆலயமாக இல்லாமல் பழங்கால ஆலயமாக இருக்கும் பட்சத்தில் அங்கும் சென்று வழிபாடு செய்வது ஏற்புடையதாகும். பலமுறை யாங்கள் பலருக்குக் கூறியதுதான். அல்பொழுது பயணத்தை முற்றிலும் தவிர்ப்பதும், தவிர்க்க முடியாத நிலையில் மட்டும் இரவுப்பயணத்தை வைத்துக்கொள்வதும் ஏற்புடையதாகும். இறைவன் அருளாலே இஃதொப்ப மன உணர்வுக்கும், சுய சிந்தனைக்கும் பிற இறை சார்ந்த தூண்டுதலுக்கும் வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் சராசரியான மனித வாழ்வை விட்டுவிட்டு அமைதியான முறையிலே, சாத்வீகமான முறையிலே ஆழ்ந்த தியானத்தில் அஃது கைவரப்பெறுகிறதோ இல்லையோ அன்றாடம் சில நாழிகையாவது முயற்சி செய்ய வேண்டும். இஃதொப்ப யாங்கள் மனித நோக்கிலே எதனையும் பார்ப்பதில்லை. ஒரு பணிக்கு ஒரு மனிதனை வைக்க வேண்டுமென்றால் அனுபவம் இருக்கிறாதா? திறன் பெற்றவனா? என்று பார்க்கின்ற நிலை இருக்கிறது. அதனை குறை என்று நாங்கள் கூறவில்லை. இருப்பினும் கூட இறைவன் அருளாலே ஒருவரின் ஜாதக நிலை, ஆத்ம நிலை, மனோ நிலை, சந்திர பலம், இன்னும் ஜாதகத்தில் சந்திரன் நின்ற இடத்திலிருந்து நான்காமிடத்தின் நிலை, லக்னத்திலிருந்து நான்காமிடத்தின் நிலை, அஃதொப்ப ஆறாம் இடத்திலிருந்து, எட்டாம் இடத்திலிருந்து நான்காம் இடத்தின் நிலை – இவற்றையெல்லாம் கருத்தில் கொள்வதோடு இறையின் அருளாணையையும் கருத்தில் கொண்டே சிலவற்றை உணர்த்துகிறோம். அவ்வாறு உணர்த்தும்பொழுதோ, உரைக்கும்பொழுதோ வேடிக்கையாக இருக்கலாம் அல்லது இதனை ஏற்க இயலாது, இப்படியெல்லாம் பார்த்தால் வாழ இயலாது என்று தோன்றலாம். அதுதான் விதியென்பது. விதி அத்தனை விரைவாக நல்விஷயங்களை மதியில் ஏற்றவிடாது.

Wednesday 10 May 2017

சித்தன் அருள் - 666 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

பிறர்பொருட்டு ஒவ்வொரு மனிதனும் பிரார்த்தனை செய்ய வேண்டும், பிறர் நலம் குறித்து எண்ண வேண்டும் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் ஜீவ அருள் ஒலையிலே வாக்கு என்று வரும்பொழுது ஒவ்வொரு மனிதனும் அந்தந்த குறிப்பிட்ட ஆத்மாவும் அதற்கேற்ற கிரகநிலையைப்பெற்று முழு சரணாகதியோடு இன்னும் சரியாகக் கூறப்போனால் ஒரு கிரக நிலை இருக்கும்பொழுது இந்த ஜீவ அருள் ஒலையை ஒரு மனிதன் ஏற்பான், நம்புவான். ‘ இதுதான் எனது வாழ்க்கையின் லட்சியம், உயிர்மூச்சு ‘ என்று கூட கருதுவான். சில சமயம் அவனது ஊழ்வினையால், பாவ வினையால் கிரக நிலைகள் மாறும்பொழுது இந்த வாக்குகளையே புறக்கணிப்பான், நம்ப மறுப்பான். பிறகு மீண்டும் நம்புவான், பிறகு புறக்கணிப்பான். சராசரி மனிதனின் நிலை இவ்வாறு இருக்க பிறர் பொருட்டு நீ பிரார்த்தனை செய்யலாம். ஆலயம் செல்லுமாறு அறிவுரை கூறலாம். ஆனால் ‘ சித்தர்கள் ஒரு ஒலையிலே வந்து வாக்கைக் கூறுகிறார்கள். அங்கே சென்று உனக்காக வாக்கினைக் கேட்டேன். இவ்வாறு பரிகாரம் வந்திருக்கிறது ‘ என்று சொன்னால் அதனை 100 – க்கு 99 விழுக்காடு மனிதர்கள் ஏற்க மாட்டார்கள், நம்ப மாட்டார்கள். உன்னையும் ஏளனம் செய்வார்கள். பொதுவாக உனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இது பொருந்தும். எனவே பிறர் பொருட்டு பிரார்த்தனை செய்வது ஏற்புடையது. 

Tuesday 9 May 2017

சித்தன் அருள் - 665 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவனின் கருணையைக்கொண்டு வாழ்த்துகளும், வாக்குகளும் மகான்களின் மூலம் வரும்பொழுது அது அப்படியே 100 –க்கு 100 பலிதமாக வேண்டுமென்றே மனிதர்கள் எதிர்பார்க்கிறார்கள். மெய்தான். அப்படியே நடந்தால் எமக்கும் மனமகிழ்வே. ஆயினும் பாவகர்மங்கள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல்வேறுவிதமான குழப்பங்களையும், எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தி விதவிதமான சிந்தனைகளைத் தந்து அவனவன் நிம்மதியை கெடுப்பதோடு அவனை சார்ந்தோரின் நிம்மதியையும், சார்ந்தோரின் பாவ கர்மாவை பொருத்து கெடுத்து விடுகிறது. எனவே சுற்றி, சுற்றி, சுற்றி எங்கு வந்தாலும் பாவங்கள் மனிதனை நிம்மதியாக வாழ விடுவதில்லை. பாவங்களை விதியின் வாயிலாக பிறவியெடுத்து, பிறவியெடுத்து அந்தப் பிறவிகளில் ஏற்படும் அனுபவங்களை மனிதன் நுகர்ந்தே ஆகவேண்டும் என்பது விதியாகவே இருக்கிறது. ஆயினும் தன்னலமற்ற தியாகங்களும், கடுகளவு துவேஷம் இல்லாத மனமும், அகங்காரமில்லாத மனமும், சிந்தனையில் சாத்வீகமும், அந்த சாத்வீகத்தில் உறுதியும், செயலிலும், வாக்கிலும், எண்ணத்திலும் நேர்மையும், பிறர் செய்கின்ற அபவாதங்களையும், துன்பங்களையும் பொறுத்துக்கொண்டு அப்படி துன்பங்கள் எப்பொழுதெல்லாம் யார் கொடுக்கிறார்களோ அவர்களை நிந்திக்காமல், அவர்களை தரக்குறைவாக பேசாமல், ‘ இந்த மனிதன் துன்பத்தைத் தருவதுபோல் தோன்றினாலும் நாம் செய்த பாவங்கள்தான் இவன் மூலம் துன்பங்களாக வருகிறது ‘ என்று எடுத்துக்கொண்டு சமாதானம் அடைவதும், ஒரு காலத்தில் தன்னை மதிக்காமலும், ஏளனமாகவும், அவமானப்படுத்தியும் பல்வேறு கெடுதல்களையும் செய்த மனிதன் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் உதவிக்காக வரும்பொழுது முன்னர் நடந்ததையெல்லாம் எண்ணி பழிவாங்கும் உணர்வோடு செயல்படாமல் அவனை மன்னித்து பெருந்தன்மையாக நடத்துவதே ‘சித்தர்கள் வழி, சித்தர்கள் வழி‘ என்றெல்லாம் பலர் கூறுகிறார்களே ? அந்த வழியில் பிரதான வழியாகும். ‘சித்தர்களை வணங்குவேன், ஸ்தலயாத்திரைகளும் செய்வேன், மந்திரங்களை உருவேற்றுவேன். ஆனால் பெருந்தன்மையோ, பொறுமையோ இல்லாது நடந்துகொள்வேன் ‘ என்றால் பலனேதுமில்லை. எனவே தளராத பக்தி, தடைபடாத தர்மம், உறுதியான சத்தியம், பெருந்தன்மை – இதுபோன்ற குணங்களை வளர்த்துக்கொண்டால் பெரும்பாலும் பாவங்கள் மனிதனை அதிகளவு தாக்காமலும், தாக்கினாலும் அதனைத் தாங்கிக்கொள்ளக்கூடிய  ஒரு மனோபாவமும் ஏற்படும்.

Sunday 7 May 2017

சித்தன் அருள் - 664 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஒரு மரத்தை தவிர்க்க முடியாமல் அழிக்க நேரிட்டால் மிக, மிக குறைந்தபட்சம் ஒரு மனிதன் 1008 மரங்களையாவது நட வேண்டும். இதுதான் இதற்கு தகுந்த மாற்றாகும்.


Saturday 6 May 2017

சித்தன் அருள் - 663 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

தீட்டு என்பது மனதைப் பொருத்தவிஷயம் என்று கூறியிருக்கிறீர்கள் இருந்தாலும் தீட்டை எந்த கால கட்டத்தில் பார்க்க வேண்டும் அப்படிஎதாவது இருக்கிறதா உதாரணமாக மாதவிலக்கு, மரண வீட்டுத் தீட்டு ... ?

உள்ளம் சுத்தமாக இருப்பதைதான் நாங்கள் பார்க்கிறோம். அதற்காக் உடல் அசுத்தமாக இருக்க வேண்டும் என்று பொருளல்ல. உடலும், உள்ளமும் சுத்தமாக இருக்க வேண்டும். இப்பொழுது நீ கூறிய பெண்களுக்கு உண்டான மாதாந்திர விலக்கு என்பது ஒருவகையான உடல் சார்ந்த நிகழ்வு. இது போன்ற தருணங்களிலே உடல் சோர்ந்து இருக்கும். எனவே அவர்கள் அயர்வாக, ஓய்வாக இருப்பது அவசியம். அதைக் கருதிதான் அவர்கள் விலக்கி வைக்கப்படுகிறார்கள். எனவே தோஷம் காரணமாக விலக்கி வைக்கப்படுகிறார்கள் என்று கருதத் தேவையில்லை. இல்லை, ‘என் உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கிறது ‘ என்றால் தாராளமாக இயங்கட்டும். ஆனால் சித்தர்களைப் பொருத்தவரை இதுபோன்ற தருணங்களில் பெண்கள் முழுக்க, முழுக்க ஓய்வாக இருப்பது அவர்களின் பிற்கால உடல் நிலைக்கு ஏற்புடையதாக இருக்கும். அனைத்து இல்லக்கடமைகளில் இருந்தும் ஒதுங்கி இருப்பதே ஏற்புடையது. ஆனால் நடைமுறையில் இது சாத்தியமில்லையே என்று மனிதன் எண்ணலாம். மனிதன் ஏதாவது ஒன்றை இழந்துதான் ஆக வேண்டும். எனவே இது போன்ற தருணங்களில் ஒன்றல்ல, இரண்டல்ல, குறைந்த பட்சம் ஏழு நாட்கள் இல்லையென்றால் ஐந்து நாட்கள் அமைதியாக இருப்பதும், உடலை அதிகமாக வருத்தக்கூடிய எந்த செயலையும் செய்யாமல் இருப்பதும் பெண்களுக்கு ஏற்புடையது. இது போன்ற தருணங்களில் ஆலயம் சென்றால் தோஷம், இறைவன் சினந்து விடுவார் என்று நாங்கள் கூறவில்லை. இது போன்ற தருணங்களில் எங்கும் செல்லாமல் இருப்பது ஒரு பாதுகாப்பான நிலையைத் தரும். அது மட்டுமல்ல, இது போன்ற தருணங்களிலே நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவதால், நோய்கள் தாக்கக்கூடிய நிலைமை ஏற்படும். சில எதிர்மறை ஆற்றல்கள், எதிர்மறை சக்திகள் பெண்களை பீடிக்க வாய்ப்பு இருப்பதால் அமைதியாக இல்லத்தில் ஒரு பகுதியில் அமர்ந்து மனதிற்குள் இறை நாமத்தை ஜெபித்துக் கொண்டு இருக்கலாம். இந்த அளவில் இதை எடுத்துக் கொள்ளலாமே தவிர, மனிதர்கள் எண்ணுவது போல் ஏதோ மூலையில் முடங்கிக் கிடக்க வேண்டும், கடுமையான தோஷம், ஏதோ குற்றவாளி போல் நடத்த வேண்டும் என்றெல்லாம் நாங்கள் கூறவில்லை. அதைப்போல் இறப்பு குறித்து நாங்கள் முன்னர் கூறியதுதான். மன உளைச்சலை ஏற்படுத்தாத எந்த இறப்பும் பெரிய தோஷத்தை ஏற்படுத்தாது.

Friday 5 May 2017

சித்தன் அருள் - 662 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

மனதிற்கும், ஆன்மாவிற்கும் உள்ள வேறுபாடு என்ன? மனம்தான் ஆத்ம ஸ்வரூபமா? இதில் புத்தி என்பது எங்கே வருகிறது?

இதை வேறு விதமாகக் கூறலாம். ஒரு மின் சக்தியை எடுத்துக் கொண்டால், மின் சக்தி என்பது இதுதான், இங்குதான் இருக்கிறது என்று கூற இயலுமா? காற்றின் ஆற்றல் இங்குதான் இருக்கிறது என்று கூற இயலுமா?. இயலாது. ஆத்மா என்பது நீக்கமற நிறைந்துள்ள ஒரு சக்தி என்று வைத்துக்கொள். அது அறியாமையிலே, பாவ மாயையிலே சிக்கி இந்த உடலுக்குள் சிறைபட்டிருக்கிறது. சிறைபட்டிருக்கிறது என்றால் கண்ணிலே மட்டும் இருக்கிறதா? கையிலே மட்டும் இருக்கிறதா? அல்லது வயிற்றிலே மட்டும் இருக்கிறதா ? என்றால், இல்லை. அப்படி எடுத்துக்கொள்ளக் கூடாது. உடல் எனப்படும் ஒரு கூடு. அந்தக் கூடு இயங்குவதற்கு வேண்டிய ஆற்றலை ஆத்மாவிடமிருந்துதான் இந்தக் கூடு பெறுகிறது. இந்த ஆத்மாவானது  தன்னை உணராமல் தன் உடலை ‘ தான் ‘ என்று எண்ணிக்கொண்டிருக்கிறது. அதாவது ஒரு மனிதன் தன் உடலின் மானத்தை மறைக்க ஆடை அணிகிறான். அந்த ஆடை கிழிந்து விட்டால் ‘ நான் கிழிந்து விட்டேன் ‘ என்று அந்த மனிதன் கூறமாட்டான். ‘ என் ஆடை கிழிந்து விட்டது. என் ஆடை அழுக்காகி விட்டது. என் ஆடை பழுதடைந்து விட்டது ‘ என்று வேறு ஆடை மாற்றிக்கொள்வான். மனிதன் தன் உடலுக்கு ஆடை போடுகிறான். ஆன்மாவிற்கு போடப்பட்ட ஆடைதான் இந்த உடல். விதவிதமான ஆடைகள். சிங்கம், புலி, ஆடு, மாடு என்று விதவிதமான ஆடைகளை ஆத்மாவிற்கு போட்டு இறைவன் அனுப்புகிறான். இந்த உடல் வேறு, இந்த  உடலுக்குள் இருக்கின்ற ஆத்மா வேறு என்பதை புரிந்து கொள்வதற்கு ஒரு மனிதன் பல நூறு, பல கோடி பிறவிகளை எடுக்க வேண்டும். நிறைய புண்ணியங்களை, பிரார்த்தனகளை செய்ய வேண்டும். அப்படி செய்யும்பொழுதுதான் நீ கூறிய ஆத்மா என்பது என்ன ? என்பது உன் உள்ளத்திற்கு தெரிய வரும். மனம் என்றால் என்ன ? மனம் என்பது ஒரு தனியான ஒரு பொருள் அல்ல. ஹ்ருதயம் என்பது இயங்குகின்ற ஒரு தன்மை. அதை குறிப்பாக ஹ்ருதயம் இருக்கிறதா ? என்று மனிதர்கள் கேட்கிறார்கள். ஆனால் இங்கே உள்ளே இயங்குகின்ற ஹ்ருதயத்திற்கும், இதயம் இருக்கிறத? என்று மனிதன் கேட்பதற்கும் வேறுபாடு உண்டு. இரண்டும் ஒரு பொருளல்ல. உனக்கு நல்ல மனம் இருக்கிறதா? என்பதைத்தான் மனிதன் இதயம் இருக்கிறதா? என்று கேட்கிறான். தொடர்ந்த எண்ண ஓட்டங்களின் தொகுப்புதான் மனம். அந்த மனம் எங்கே விழிப்பு நிலை பெறுகிறதோ, அப்பொழுது நீ ஆத்மாவை உணரலாம்.

Tuesday 2 May 2017

சித்தன் அருள் - 661 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

பாரத பூமியில் கடைபிறவியெடுக்கும் ஆத்மாக்கள் தென்னகத்தில்தான் பிறப்பெடுக்கும் என்று கூறியிருந்தீர்கள். ஆனால் இப்பொழுது லௌகீகத்திலும், ஆன்மீகத்திலும் தென்னகம் பின்னடைந்து இருப்பதாகத் தோன்றுகிறது!

இறைவன் அருளால் அதை ஒரு குறிப்பாகக் கூறினோமே தவிர அஃதே 100/100 உண்மை என்று எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அதற்காக வடகோடியில் பிறக்கின்ற ஒரு ஆத்மா, புண்ணிய ஆத்மா அல்ல, கடைப் பிறவி ஆத்மா அல்ல என்பதல்ல. உலகியல் ரீதியாக வளர்ச்சியடைந்த நாடுகளில் பிறக்கின்ற மனிதர்கள், கடை ஊழில் தன்னை ஆட்படுத்தக்கூடிய ஆத்மாக்கள் அல்ல என்றும் கூற இயலாது. பெரும்பாலான ஆத்மாக்கள் அது போன்ற நிலையில் இங்கு பிறவியெடுத்து லௌகீகமாக பல இடர்களை அனுபவித்து அதன் மூலம் தன் பாவங்களைக் கழித்து விரைவில் இறைவன் திருவடியை சேர்கிறார்கள் என்பதை ஒரு உதாரணத்திற்காக, ஒரு குறிப்புக்காக கூறினோம்.

Monday 1 May 2017

சித்தன் அருள் - 660 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

விருக்ஷங்களிலும் ஆன்மா இருக்கிறது. புட்களிலும் ஆன்மா இருக்கிறது. நுண்ணிய கிருமிகளிலும் ஆன்மா இருக்கிறது. அனைத்து ஆன்மாக்களுமே மேன்மையடைந்து முக்தியடைய வேண்டும் என்று முன்னர் கூறியிருந்தீர்கள். இந்த அறையிலேயே கோடானு கோடி கிருமிகள் இருக்கக்கூடும். இந்த நுண்ணிய கிருமிகளாய் பிறப்பெடுக்க வேண்டுமென்றால் அது என்ன கர்ம வினை ?

ஒரு சில பாவங்கள் என்பதல்ல. எத்தனையோ வகையான பாவங்களின் தொகுப்புதான் நாங்கள் முன்னரே கூறியதுபோல் ஆன்மாவின் சட்டையாக மாறுகிறது. ஒரு ஆன்மாவின் சட்டையைப் பொறுத்து அதன் பாவத்தைப் புரிந்து கொள்ளலாம். அதாவது ஒரு ஆன்மாவிற்கு பெரும்பாலும் மனித சட்டை கொடுக்கப்படுகிறதென்றால் பெரும்பாலும் புண்ணிய பலன் இருக்கிறது என்று பொருள். அதற்காக விலங்குகளாகப் பிறந்த அனைத்து ஆத்மாக்களும் முழுக்க, முழுக்க பாவிகள் என்று நாங்கள் கூறவில்லை. அதிலும் விதி விலக்குகள் உண்டு. சில புண்ணிய ஆத்மாக்கள் கூட சில காரணங்களுக்காக விலங்குகளாக பிறவியெடுப்பதும் உண்டு. மிகப்பெரிய மகான்கள் கூட பசுக்களாக தாங்கள் பிறக்க வேண்டும் என்று வரம் கேட்டு, தம் பால் முழுவதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்பட வேண்டும் என்று வரம் கேட்டு வாங்கி வருவதும் உண்டு. அவற்றையெல்லாம் விலங்குகள் என்ற வரிசையில் சேர்க்கக்கூடாது. ஆனால் பொதுவாக விலங்குகள் என்று பார்க்கும்பொழுது அறியாமையிலே பிறவிகள் எடுக்கக்கூடிய உயிர்கள் அனைத்துமே கோடானுகோடி பாவங்களை நுகர்ந்து தீர்ப்பதற்காக இது போன்ற விலங்குகள் பிறவியைப் பெறுகின்றன. விலங்குகளுக்கு அதன் செயல்களுக்கு முழுக்க, முழுக்க அதன் பாவங்களைக் கழிப்பதற்குண்டான நிலைதான் இருக்கிறது. புதிதாக புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள இயலாது. புதிதாக பாவத்தையும் சேர்த்துக் கொள்ள இயலாது. உதாரணமாக ஒரு நூறு பிறவி ஆடாகப் பிறந்து அது தன் உயிரை மனிதனின் அசுரத்தனத்தால், தன்னைக் கொன்று உண்ணக்கூடிய மனிதனுக்கு தன் உடல் பயன்படவேண்டும் என்ற விதி பெற்று அந்த ஆடு பிறக்கும்பொழுது, அதனுடைய கர்மாவானது அதன் கழுத்தில் இருக்கிறது. நாங்கள் அடிக்கடி கூறுவது போல அதனை வெட்டுகின்ற கத்தியானது அதன் கர்மாவைக் குறைக்கிறது. ஆடு ‘ கத்திக் ‘ குறைக்கிறது. எனவே இப்படி பிறவியெடுத்து, பிறவியெடுத்து அதன் பாவங்கள் தீர்ந்த பிறகு அடுத்த தேகத்தை நோக்கி செல்கிறது. இப்படி மேலேறி, மேலேறி ஒரு தினம் அல்லது ஏதாவது ஒரு பிறவியிலே அது மனிதனாக அல்லது மனித சட்டை கொடுக்கப்பட்டு சற்றே சிந்தனையாற்றலும் கொடுக்கப்படுகிறது. ஆனால் எதற்காக கொடுக்கப்படுகிறது ? இன்னும் மேலேறி செல்ல வேண்டும். மனிதனாக, புனிதனாக, மாமனிதனாக, மகானாக, ஞானியாக, முனிவனாக, சித்தனாக அல்லது தேவனாக, கந்தர்வனாக. ஆனால் இந்த இடத்திற்கு வந்த பிறகு மனிதன் தன் செயலால் மீண்டும் கீழ் நோக்கியும் செல்கிறான் அல்லது மேல் நோக்கியும் செல்கிறான். கீழ் நோக்கி செல்லாதே என்று வழிகாட்டத்தான் எம் போன்ற மகான்களை இறைவன் படைத்து அருளாணை இட்டிருக்கிறார்.