​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 28 November 2019

சித்தன் அருள் - 828 - அகத்தியரின் அனந்தசயனம்!


விடை தேடி முக்கண்ணனிடம் செல்லலாம் என்றவுடன், பத்மநாபர் கோவிலின் ஒருவிஷயம் அடியேன் கவனத்துக்கு வந்தது. அடியேன் கேள்விப்பட்டவரை, இங்கு போல் எங்குமே இல்லையே என்று உணர்ந்தேன்.

பெருமாள் கோவில் இருக்கும் எந்த ஊரிலும், சிவபெருமான் கோவில் இருக்கும். சிவபெருமான்தான், பெருமாள் கோவிலின் ஷேத்ரபாலகர். பெருமாள் கோவிலின் மொத்த உரிமையும், நடக்கிற விஷயங்களை கட்டுப்படுத்துவதும், காவல் காப்பதும், ஒரு க்ஷேத்ர பாலகரின் கடமை. இது இறை விதி.

பத்மநாபா சுவாமி கோயிலின் நான்கு திசைகளிலும், சிவபெருமான் கோவில்கொண்டு அமர்ந்திருப்பது, யோசிக்க வேண்டிய விஷயம். இதை யாரும் கவனிப்பதில்லை என்பதே உண்மை.

மறுபடியும், எங்கு செல்வது, எங்கு தொடங்குவது  என்கிற கேள்வி சுழன்றது.

ஒருநாள்,

மாலையில், தெற்கு வாசலில் உறையும் சிவன் கோவிலுக்கு சென்றேன். நான்கு கோவில்களில், தெற்கு வாசல் கோவிலே அருகில் என்பதால், அடிக்கடி செல்கிற பழக்கம் உண்டு. கேள்வி கேட்டால், பதில் கிடைக்கும். அதுவும் எதிர்பாராத நேரத்தில், ஆச்சரியப்படும் விதமாக இருக்கும்.

உள்ளே பூசாரியும், கோவிலின் நிர்வாக ஊழியரும் இருந்தனர். மாலை தீபாராதனை முடிந்துவிட்டபடியால், யாரும் இல்லை. உள்ளே சென்று இறைவன் முன் நின்று அடியேனின் வேண்டுதலை கொடுத்தேன்.

பிரசாதம் வழங்கப்பட்டது. பெற்றுக்கொண்டு திரும்பும் பொழுது, ஒரு எண்ணம் உதித்தது. சிறிது நேரம் கோவிலுக்குள் அமர்ந்து செல்லலாமே என்று. ப்ரதக்ஷிணம் செய்து முன் புறம் வந்து இறைவனின் இடது புறம் தரையில் அமர்ந்தேன். அமர்ந்த இடத்திலிருந்து  இறைவனின் லிங்கத்திருமேனி தெளிவான காட்சி. அப்படியே அதை கண்மூடி உள்வாங்கிட, ஓம் நமசிவாய என்கிற ஜபம் உள்ளில் உதித்தது.

எவ்வளவு நேரம் த்யான ஜெபத்திலேயே இருந்தேன் என தெரியவில்லை. யாரோ கடந்து உள்செல்வதும், சற்று நேரத்தில் வெளியே செல்வதும் உணரப்பட்டது.

மனதுக்கு திருப்தி வந்ததும், த்யானம் கலைந்தது. எழுந்து வணக்கம் கூறிவிட்டு கோவிலுக்கு வெளியே வந்தேன்.

மனம் ஒன்றி நடக்கத் தொடங்கியவுடன், "திருச்சிற்றம்பலம்" என்ற சப்தம் கேட்டது.

நிமிர்ந்து பார்க்க வயதான ஒருவர் நின்று கொண்டிருந்தார். மார்பில் கை விரல்களை வைத்து, தலை தாழ்த்தி "சிவசிதம்பரம்" என்றேன்.

"இப்ப போனா பத்மநாபரை தரிசனம் செய்ய முடியுமா?" என்றார் கோவில் தெற்கு வாசலை சுட்டி காட்டியபடி.

"ஹ்ம்ம்! இப்ப போனா தரிசனம் கிடைக்கும்" என்றேன்.

வெள்ளை வேஷ்டி, வெள்ளை அங்கவஸ்திரம் அணிந்திருந்தார். நீண்ட நரைத்த தாடி. வாசியோகியாக இருக்கவேண்டும் எனத்தோன்றியது.

"கேள்விக்கான பதில் கிடைத்ததா?" என்றார்.

"இல்லை!" என்றேன்.

"ஏன் ரொம்ப அலையணும்! சிவபுராணம், குறிப்பாக சிவபெருமான்-பார்வதியம்மை திருமண கட்டத்துக்கு முன் பாருங்க. பதில் கிடைக்கும். சிவசிந்தனை என்னவென்று புரியும்!" என பதில் கூறி, வேகமாக கோவிலை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

தலையசைத்து நன்றி கூறி, அவர் போவதை பார்த்து நின்றேன்.

யார் இவர் என்று கூட யோசிக்க தோன்றவில்லை. "கேள்விக்கான பதிலை இறை தரவேண்டும் என நினைத்தால், ஏதேனும் ஒரு வழியை திறக்கும்" என்ற அகத்தியரின் வாக்குதான் நினைவுக்கு வந்தது.

அடுத்தவாரம், நண்பரின் உதவியுடன், சிவபுராணம், பெரியபுராணம், சிவமஞ்சரி, ருத்ரப்ரச்னம் போன்ற நூல்களில் ஆராய்ச்சி தொடர்ந்தது. நிறைய உண்மைகள் புரியத்தொடங்கியது. அவற்றை சுருக்கி அடியேனுக்கு தெரிந்த எளிய மொழியில் கீழே தருகிறேன்.

பாரத கண்டத்தை "கர்மா பூமியாக" விவரித்து தீர்மானம் நிறைவேற்றியதே சிவபெருமான்தான். கைலாசத்தில், பாரதத்தின் வடகிழக்கு என்கிற "ஈசானத்தில்" தான் அமர்ந்தார். தனக்கு சரி நிகரான ஒருவர் பாரதத்தின் தென்மேற்கு பகுதியான கன்னிமூலையில் அமர வேண்டும் என விரும்பினார். கர்மபூமி, வளர்ச்சியை கர்மம் வழியாகத்தான், மெதுவாக அடையும். அப்படிப் பட்ட நிலையில், எதிர் வினையாற்றும் சக்திகள், ஈசான மூலை வழியாகவும், கன்னிமூலை வழியாகவும் உள்புகுந்து அழிக்க நினைக்கும். அந்த முயற்சியை தடுத்து நிறுத்த சிவபெருமான் எடுத்த தீர்மானத்துக்கு, நாராயணன் தான் அமர்ந்தார். கைலாசத்திலிருந்து அகத்தியப் பெருமான், நிறய வேலைகளுடன் தென்புலம் நோக்கி அனுப்பி வைக்கப்பட்டார். நாராயணனுக்கு அனந்தன்காட்டில் கோவில் கட்டுவது, தாமிரபரணி நதியை உருவாக்குவது, இறைவன் அமர நினைத்த இடங்களில் எல்லாம் கல்யாணக்கோலத்தை காட்டி கோவில் கட்டி அமர்ந்தது, விந்திய மலை தடங்கலை விலக்கியது, என பலவிஷயங்களும் அதில் அடங்கும். பஞ்சேஷ்டி வந்து ஐந்து விதமான யாகங்களை செய்து இறைவன், இறைவியின் ஆசிர்வாதத்துடன் பொதிகை வந்தடைந்தார்.

திருவட்டாறில் ஆதிகேசவப் பெருமாளை ஆராதனை செய்து, பத்மநாபபுரத்தில் இருந்து சேர நாட்டை ஆண்டு வந்த மன்னருக்கு இறைவனின் தீர்மானத்தை எடுத்துரைத்து, அனந்தன் காட்டில் கோவில்கட்ட வைத்ததே அகத்தியர்தான். அனந்தன்காட்டில் பத்மநாபர் வந்துறைந்த பொழுது, கலியுகமும் ஆரம்பமானதாக புராணங்கள் கூறுகிறது. இறைவனின் மிக உன்னதமான தீர்மானத்தை நிறைவேற்றும் பொழுது, தங்கத்தால் ஸ்ரீசக்ரமும், சுதர்சன சக்கரமும் செய்து, அகத்தியப்பெருமான் தன் தவவலிமையை  பெருக்கி அந்த சக்கரங்களில் பகிர்ந்து, பத்மநாபாருக்கு கீழே பதித்து, தன் சமாதியாக்கினார். அன்று அகத்தியர் பகிர்ந்து கொண்ட தவவலிமையும், இறைவனின் தீர்மானமும் இன்றுவரை  பாரத கண்டத்துக்கு அரணாக நின்று காத்து வருகிறது.



சித்தன் அருள்...................... தொடரும்!

Saturday 23 November 2019

சித்தன் அருள் - 827 - அகத்தியரின் அனந்தசயனம்!


மறுபடியும் ப்ரச்னம் பார்ப்பவருக்கு எதிர் பக்கமாக வந்து நின்று சிறுவன், பிரார்த்தனை செய்துவிட்டு களத்தை பார்த்தான். இடது பக்கம் இருந்த ஒரு கட்டத்தை தெரிவுசெய்து, சோழியை வைக்கப்போகிற கடைசி நேரத்தில், வலது கையிலிருந்து, இடது கைக்கு சோழிகளை மாற்றி, இடது கையால் வைத்தான். இதை கண்டு பிரச்னர் குறிப்பெடுத்துக் கொண்டார்.

அந்த சிறுவன் தெரிவுசெய்து வைத்தது லக்கினத்துக்கு நான்காம் பாவமான கும்பராசி (சுக ஸ்தானம்).

அடுத்ததாக, 6ம் பாவமான மேஷ ராசி, பின்னர் 8ம் பாவமான மிதுன ராசி, 9வது வீடு கடக ராசி, என ப்ரச்னம் வளர்ந்து கொண்டே சென்றது.

எதுவுமே, மனதுக்கு திருப்தி அளிப்பதாக அமையவில்லை. ப்ரசனம் பார்ப்பவரும் தன் பொறுமையை இழந்து கொண்டிருந்தார் என்றுதான் கூற வேண்டும். ஒவ்வொரு முறை சோழியை கொடுக்கிற போதும், "பத்மநாபா,அமரப்ரபோ" என வாய்விட்டு கூறியே அந்த சிறுவனிடம் கொடுத்தார்.

கடைசி முறையாக நான்கு சோழிகளை, சிறுவனிடம் கொடுத்து அவன் விருப்பப்படியே களத்தில் வைக்கச் சொல்ல, அவன் அவற்றை ஒரு கட்டத்தில் வைத்தான். அது விருச்சிக ராசிக்கு 12ம் இடமான துலா ராசியாக அமைந்தது.

அனைவரும் அமைதியாக இருக்க, அவரது சிஷ்யர்கள் குறிப்பெடுத்துக் கொண்டனர். அனைவரும் எழுதி முடிக்கும் வரை காத்திருந்த பிரச்னர், மகாராஜாவை அர்த்தத்துடன் பார்க்க, அவரும் அனுமதிப்பதுபோல் தலையசைத்தார்.

உடனேயே, களத்துக்கு, அனைத்து தேவதைகளுக்கும் நிவேதனம் காண்பிக்கப்பட்டு, தீபாராதனை நடந்தேறியது. ப்ரச்னம் நிறைவுக்கு வந்தது, ப்ரஸ்ன விதி அறிவிக்கப்படாமலேயே!

ப்ரச்னம் பார்ப்பவர், தன் அனுமானத்தை 22 சிஷ்யர்களின் முடிவுகளுடன் சரிபார்த்துவிட்டு, மறுநாள் அறிவிப்பதாக கூறி பிரஸ்னத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். அனைவரும், அவரவர் இருப்பிடம் ஏகினர்.

மறுநாள், அதே நேரத்துக்கு, அனைவரும் ஒன்று கூடி இருக்க, மகாராஜாவின் உத்தரவுடன், ப்ரஸ்ன விதி வாசிக்கப்பட்டது. [ப்ரஸ்ன விதியின் முக்கிய உரை மட்டும் இங்கு கூறப்பட்டுள்ளது].

"இறை அருளால், அவர் அனுமதியுடன் ப்ரஸ்ன விதி மஹாராஜாவால் வேண்டிக்கொள்ளப்பட்டது. கோவிலின் பூஜை முறைகளில் ஏதேனும் குறை ஏற்பட்டுள்ளதா? எந்த விதத்தில் பூசை செய்து அதை மாற்றவேண்டும் என்பதே முக்கிய விஷயமாக இருந்தது. பூஜை முறைகளில் எந்த வித தவறும் நடக்கவில்லை, எந்த வித மாற்றமும் தேவை இல்லை என்பதே விதியின் முடிவு.

இங்கு நடந்த மனிதத் தவறுகள் தான் பிரச்சினைகளை உருவாக்கும் என்பது ப்ரஸ்ன லக்கினத்தின் தோற்றம் உரைக்கிறது. அத்தனை நிதியும் இங்கு அமர்ந்த இறைக்கு உரிமையுடையதாயினும், மனித வாசம் பட்டதும், பார்வை பட்டதும், கலைக்கப்பட்டதும், இறையின் எண்ணத்துக்கு எதிரானது. அத்தனை நிதியும் முக்கண்ணனின் எண்ணப்படியே இங்கமர்ந்தது. அதுவும் ஒரு பொதுநல நோக்குடன், எது எதை செய்யும் என அறிந்து வைக்கப்பட்டது.

இதுவரை நிதியை தொட்டதின் பின் நடந்த நிகழ்ச்சிகளே, இறை அளித்த தண்டனையை உணர்த்துவதாகும். உணர்ந்து திருந்துவதே மனிதருக்கு அழகு. மேலும் நிதியை நெருங்கிட, தொடர்பான அனைத்து மனிதர்களின் குடும்பத்திலும், விஷம் எப்படி உள்ளே சென்றது, என அறியாமலேயே அழிவு ஏற்படும். ஆதிசேஷனும், அனுமனும், நரசிங்கமும் மிகுந்த கோபத்தில் உருமாறியுள்ளனர். அமைதியாய், விலகி நிற்பதே மனிதர்க்கு அழகு" என கூறி முடித்தார்.

பல இடங்களிலும், நாடியில் தோன்றிய சித்தர்கள் உரைத்த ஒரு சில வாக்குகளையும் கீழே தருகிறேன்.

இலுப்பையடி யோகா நித்திரை கொள்ளும் அனந்த பத்மனாபனடி ஆஸ்தி கண்டார் வியக்கவே; இது தனை கண்டு ரிஷியரெல்லாம் நோவ, சித்தருஞ் சினம் கொண்டனரே -

காவலாய் இருக்கும் சிங்க முக ஈசனும் (நரசிங்கர்) பசுபதிநாதனொரு (பசுபதிநாதர், நேபாளம்), காடுறை நாகராஜனும், மங்களப் பேய்ச்சி முலையுண்டானும், கொடனந்த  புரமய்யனுமாதி கேசவனும் வாடி நிற்ப...........  

பொக்கிஷத்தை கையாண்டதால் நரசிங்க பெருமாளும், அனந்தன்காடு நாகராஜா ஸ்வாமியும், வில்வமங்கலத்திலிருக்கும் கிருஷ்ண பரமாத்மாவும், காசர்கோட்டில் கோயில் கொண்டிருக்கும் அனந்தபுரத்து பெருமாளும், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாளும், நேபாளத்திலிருக்கும் பசுபதிநாதரும் வருத்தம் கொண்டனர்.

தவறு நடந்த்துவிட்டது என்பது தெளிவாயினும், ப்ரஸ்ன விதியில் வந்த ஒரு குறிப்பிட்ட உத்தரவு அடியேனின் மனதுள் பதிந்து உறுத்திக்கொண்டே இருந்தது.

அது என்ன?  

"முக்கண்ணனின் எண்ணப்படியே இங்கமர்ந்தது. அதுவும் ஒரு பொதுநல நோக்குடன்" என்பதின் அர்த்தம் என்ன என்பதே!

முக்கண்ணனை நோக்கி நடக்கலாமா? என்று யோசிக்க தொடங்கினேன்!

சித்தன் அருள்............... தொடரும்!

Thursday 21 November 2019

சித்தன் அருள் - 826 - அனந்தசயனத்தில் லக்ஷதீப திருவிழாவின் தொடக்கம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

15/01/2020 அன்று திருவனந்தபுரத்திலுள்ள அனந்தபத்மநாப சுவாமி கோவிலில் லக்ஷ தீபம் என்கிற திருவிழா நடக்க உள்ளது. அன்றைய தினம், மொத்த கோவிலுமே, தீபத்தினால் அலங்கரிக்கப்படும். இறைவனுக்கு சிறப்பு பூசைகள் நடை பெரும்.

அப்படிப்பட்ட திருவிழாவுக்கு தொடக்கமாக, 56 நாட்கள் தொடந்து நடக்கிற "முறை ஜபம்" என்கிற மந்திர உச்சாடனம் இன்று தொடங்கியது. மந்திர உச்சாடனத்திற்கென தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், பத்மதீர்த்த குளத்தில், முட்டளவு நீரில் நின்று மந்திர உச்சாடனம் செய்வார்கள். இன்று முதல் 56 நாட்களுக்கு மாலை 6 மணிக்கு இது நடக்கும்.

இன்று ஜபம் நடந்த பொழுது எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு தருகிறேன். ஒரு விஷயம் --> இங்கு நடக்கிற விஷயங்கள் எல்லாம், பெருமாளுக்கும், அகத்தியருக்கும், என்பதே உண்மை.





சித்தன் அருள் ................... தொடரும்!

Saturday 16 November 2019

சித்தன் அருள் - 825 - அகத்தியரின் அனந்தசயனம்!


நித்ய அனுஷ்டானங்கள் பூஜைகளை பத்மநாபாருக்கு செய்துவிட்டு, மஹாராஜா, ப்ரச்னம் பார்ப்பவர், கோவில் பூஜாரி, அதிகாரிகள், கோவிலில் வேலை பாப்பவர்கள், ஊர் மக்கள் என அனைவரும், ஆவலுடன் காத்திருந்தனர், கிழக்கு வாசலை நோக்கியபடி. 

வெளியூரிலிருந்து, பத்மநாபரை தரிசிக்க வருபவர்கள், பொதுவாக, கிழக்கு வாசல் வழியாகத்தான் உள்ளே வருவார்கள்.

சரியாக, 8.30 மணிக்கு ஒரு சிறுவனுடன், நடுத்தர வயதை எட்டிய ஒருவர் கோவிலுக்குள் நுழைந்தார்.

அவர்கள் வருவதை கவனித்த மகாராஜா, கோவிலின் உயர் அதிகாரியை நோக்கி தலையசைத்தார்.

உயர் அதிகாரி, உடனேயே முன் சென்று, சிறுவனுடன் வந்த பெரியவரிடம், "சற்று நில்லுங்கள், எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று வினவினார்.

"ஹைதராபாத், ஆந்திரா மாநிலத்திலிருந்து பத்மநாபரை தரிசிக்க வந்திருக்கிறோம்" என்றார், அவர்.

பதிலை கேட்ட அதிகாரி, மகாராஜாவை நோக்கி "ஆம்!" என்பது போல் தலையசைத்தார்.

அவர்களை அழைத்து வருமாறு மகாராஜா சைகையால்,உத்தரவிட்டார்.

அருகில் வந்த பெரியவரையும், சிறுவனையும் உற்று பார்த்த மகாராஜா, மீண்டும் ஒரு முறை "எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று கேட்டார்.

முன்னர் கூறிய அதே பதிலை வந்தவர் கூறினார்.

பதிலை கேட்ட, மகாராஜா, அர்த்தத்துடன், ப்ரச்னம் பார்ப்பவரை நோக்க, அவரும் கை கூப்பி  "எல்லாம் பத்மநாபர் விருப்பம் போல்" என்றார்.

உடனே மகாராஜா, அந்த பெரியவரை நோக்கி, "உங்கள் மகனை ப்ரச்னம் பார்க்க உதவிக்கு எடுத்துக் கொள்ள சொல்லி, இறைவன் உத்தரவிட்டிருக்கிறார். உங்களுக்கு சம்மதம்தானே?" என்றார்.

இறைவன் உத்தரவிருந்தும், கேட்பவர் மகாராஜாவாக இருந்தாலும், இறைவன் வேலைக்கு உதவி கேட்கும் பொழுது, அவர்கள் சம்மதத்தை கேட்டுத்தான் செய்யவேண்டும். அப்படி எஜமானன் நடந்து கொண்டால்தான் ப்ரச்னம் உண்மையை தெளிவாகக் காட்டும். இதெல்லாம் ப்ரஸ்ன விதியில் உள்ள கட்டுப்பாடுகள்.

ஆச்சரியத்துடன் உண்மையை உணர்ந்த, சிறுவனின் தகப்பனார், மகன் சார்பாக சம்மதம் தெரிவித்தார்.

"உங்கள் மகன் குளித்து புது ஆடை அணிய வேண்டும். வாருங்கள்!" எனக்கூறி இருவரையும் உயர் அதிகாரி, மகாராஜா அனுமதியுடன், கோவிலினுள் தனி இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

அனைவரும் அரை மணி நேரம் காத்திருந்தனர்.

சிறுவன் தயாராகி வந்ததும், ப்ரஸ்னர் மஹாராஜாவிடம் உத்தரவு கேட்டார்.

அவர் அனுமதி கொடுத்ததும், ப்ரஸ்ன விதிகளின்படி மந்திரோச்சாடனம் நடந்தது.

விக்னேஸ்வரர், கோவில் காவல் தெய்வங்கள், அஷ்டதிக் பாலகர்கள்,ப்ரஸ்ன தேவதை, இறைவன் ஆகியோருக்கு பூசை செய்து அனுமதி பெற்றுக்கொண்டபின், ப்ரச்னம் பார்ப்பவர், அந்த சிறுவனை அழைத்தார்.

அந்த சிறுவனின் கைகளில் நான்கு சோழிகளை கொடுத்து, "உன் மனத்தால் பிரார்த்தித்து, உனக்கு இந்த 12 கட்டங்களில் எந்த கட்டத்தில் வேண்டுமானாலும் வைக்கலாம். அது உன் விருப்பம்!"என்றார்.

அவர் கொடுத்ததை பெற்றுக்கொண்டு, தரையில் வரையப்பட்டுள்ள களத்தை [ஜாதக கட்டம்] உற்று நோக்கியபடி, அவருக்கு எதிர்புறம் வந்து நின்றான், அந்த சிறுவன்.

கண்மூடி தியானித்து, கையிலிருந்த சோழிகளை, தன் இடது கால் பக்கத்தில் இருந்த ஒரு கட்டத்தில் வைத்தான். நான்கு சோழியில் ஒன்று விலகி ஓடியது. அதை உடனேயே பிடித்து மற்ற மூன்றுடன் சேர்த்து வைத்தான்.

நடந்தவைகளை உற்று நோக்கியபடி இருந்த ப்ரச்னம் பார்ப்பவர், மிகுந்த கவலையுற்று, மகாராஜாவை நிமிர்ந்து பார்த்தார்.

மகாராஜா "பரவாயில்லை! தொடருங்கள்!" என சைகையால் உணர்த்தினார்.

அவரது சிஷ்யர்கள் 22 பேரும் களத்தை அமைதியாக உற்று நோக்கியபின், தங்கள் ப்ரஸ்ன விதியை ஒரு காகிதத்தில் வேகமாக எழுதினர்.

அந்த சிறுவன் சோழிகளை வைத்த முதல் களம், கோவிலின் ப்ரஸ்ன விதி ஜாதகத்தின் லக்னம் எனப்படும். அதுவே ஜீவன்.

நடந்தது என்ன? நிலைமை எப்படி உள்ளது என்பதை அறிய, நுழைய வேண்டிய, நுழைவு வாசல்.

சிஷ்யர்கள் எழுதி முடிக்கும் வரை எங்கும் அமைதி நிலவியது.

மகாராஜாவும், ப்ரச்னம் பார்ப்பவரும் சற்று தளர்ந்து போயினர்.

ஏன் என்றால், ப்ரஸ்ன விதிக்கு லக்கினமாக அந்த சிறுவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட களம் - "விருச்சிக ராசி". இந்த ராசியை ஜோதிட விதிப்படி "யுத்த ராசி" என்பார்கள். உருவாகப் போகிற ப்ரஸ்ன புருஷனுக்கு, தலையாக, ஆத்மாவாக, விருச்சிக ராசி அமைவது, நல்ல சகுனமல்ல.

ப்ரச்னம் பார்ப்பவர், சிறுவனை இரண்டாவது முறையாக அருகில் அழைத்து, நான்கு சோழிகளை கையில் கொடுத்து, மௌனமாக சைகை காட்டினார்.

சிறுவன் களத்தை சுற்றி நடக்கத் தொடங்கினான்!

சித்தன் அருள்............... தொடரும்!

Thursday 7 November 2019

சித்தன் அருள் - 824 - அகத்தியரின் அனந்தசயனம்!


"அனந்தசயனம்" மனதுள் சுழன்று கொண்டே இருந்தது.  எங்கு தொடங்குவது என்று பிடிபடவில்லை. கோவில் அதிகாரிகளிடம் கேட்கலாம் என்றால், ஏற்கனெவே அவர்கள், உள்ளிருக்கும் விஷயம் வெளியே தெரிந்துவிட்டபடியால், நிறைய கட்டுப்பாடுகளை விதித்து, பிரச்சினைகளை எதிர் கொண்டிருந்த நேரம்.

அடியேன் ஒரு முடிவுக்கு வந்தேன். குருநாதரிடம் வழி கேட்டு தெளிவு பெறலாம் என்று தோன்றியது. ஒரு வியாழக்கிழமை, குருவின் தரிசனத்துக்காக பாலராமபுரம் அகஸ்தியப் பெருமான் கோவிலுக்கு சென்ற பொழுது  மனதார வேண்டிக்கொண்டேன்.

"அய்யனே! அனந்த பத்மநாபா சுவாமி கோவிலின், உங்கள் வரையில் உள்ள தொடக்கத்தை காட்டியருளுங்கள். அங்கிருக்கும் எந்த பொருளிலும், இன்றைய சாதாரண மனிதனுக்கு இருக்கும் ஆசை அல்லது எண்ணம், அடியேனுக்கு இல்லை. திருவட்டாறில் இறை இருக்கும் பொழுது, இங்கு ஏன் குடி கொண்டது? என அறிந்துகொள்ள ஆவல். தயை கூர்ந்து அருளுங்கள்" என கூறிவிட்டு, ப்ரதக்ஷிணம் செய்யத் தொடங்கினேன். ஆறு ப்ரதக்ஷிணம் முடிந்து ஏழாவது சுற்றில், அகத்தியப் பெருமானின் சன்னதிக்கு பின்புறம் நடக்கும் பொழுது, மிகத் தெளிவாக, வலது காதில் கேட்டது.

"யாம் யாகம் வளர்த்த பஞ்சேஷ்டிக்கு வா! தெளிவாக்குகிறேன்" என்று.

அன்றுதான், அந்த ஊரின் பெயரை முதன் முறையாக கேட்கிறேன். எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை. ஒரு வேளை வட இந்தியாவில் இருக்குமோ. அப்படியாயின், மிகுந்த சிரமமாக இருக்குமே என்றெல்லாம் மனம் யோசித்தது. எதற்கும், பூசாரியிடம், இப்படி ஒரு இடம் தெரியுமா" என்று கேட்டுவிடலாம் என்று, விசாரித்தேன்.

அவருக்கு அப்படி ஒரு இடம் எங்கிருக்கிறது என்று தெரியாது என்பது, உடன் புரிந்தது. கூடவே, எதற்க்காக கேட்கிறீர்கள்? என்று வினவினார்.

"அகத்தியப் பெருமானிடம் ஒரு வேண்டுதலை இன்று வைத்தேன். அங்கு வரச்சொல்லி உத்தரவு கொடுத்துள்ளார். ஆதலால், உங்களுக்கு அந்த இடம் எங்கிருக்கிறது என்று தெரியுமோ? என்று வினவினேன்" என்றேன்.

சரி! இனி நாமாகத்தான், தேடித் தெளிய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். பின்னர் இதை பற்றி மறந்தே போனேன்.

ஒரு வாரம் சென்றிருக்கும். உறவினர் ஒருவர், வீட்டுக்கு வந்த பொழுது, நிறய விஷயங்களை பற்றி பேசும் பொழுது, வந்த உத்தரவை கூறாமல், இப்படி ஒரு இடம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என்று வினவினேன்.

அந்த இடம் தமிழ்நாட்டிலேயே, சென்னைக்கு 25 கீ.மீ தொலைவில் இருப்பதாகவும், தான் சென்றுள்ளதாகவும் கூறினார். மேலும் அந்த கோவில் பற்றிய சில விஷயங்களை கூறினார். அதில் அகத்தியப் பெருமான், அங்கு ஐந்து யாகங்கள் செய்ததாக கூறினார். இந்த "யாகம்" வார்த்தை உத்தரவில் வந்த வார்த்தையுடன் பொருந்திப் போனதை கவனித்தேன்.

"அடியேன் சென்னைக்கு வருகிறேன். அந்த கோவிலுக்கு அழைத்து செல்லுங்கள்" எனக் கூறினேன். அவரும் சம்மதித்தார்.

இரண்டாவது வாரம் சென்னை சென்று, அங்கிருந்து உறவினருடன் பஞ்சேஷ்டி கோவில் முன் நின்றேன்.


கோவில் முகப்பில் ஒரு நிமிடம் நின்ற பொழுது, உடல் சிலிர்த்தது. மனம் நெகிழ்ந்தது.

"தாங்கள் உத்தரவின்படி இது வந்துவிட்டது அய்யனே! இனி உங்கள் அருள் வேண்டும்!" என மட்டும் வேண்டிக்கொண்டேன். 

மாலை வேளை. பூசைக்கான மணி அடித்தது, சூழ்நிலையை மேலும் மெருகேற்றியது.

உள்சென்று இறைவனை தரிசித்து, பிரசாதம் பெற்றுக்கொண்டு, மெதுவாக வெளியே வந்து ப்ரதக்ஷிணம் செய்தேன்.

அகத்தியப் பெருமான் சந்நதி முன் நின்ற பொழுது, என்னவோ மனதுள் ஒரு எண்ணம் வலுத்தது. தேடிவந்ததின் சில விடைகள் இங்கு கிடைக்கும், நிச்சயம் அவர் அருளுவார், என்று.

அதிக நேரம், அந்த சன்னதியிலேயே, கண் மூடி த்யானத்தில் அமர்ந்தேன்.

"அனந்தசயனத்துக்கு செல்லும் முன் இங்குதான் ஐந்து யாகங்களை யாம் செய்தோம். மிக புண்ணியமான இடம் இது. இங்குதான் முதன் முறையாக சிவபெருமான் அவர் தீர்மானத்தை உத்தரவாக்கினார். யாம் அதை சிரம் மேற்கொண்டு பணிந்தோம். அனைத்து இறை ரகசியங்களையும் இப்பொழுது கூற தகுந்த நேரமல்ல. சூரியன் அஸ்தமித்துவிட்டான். தேடு! வேட்கையுடன், நேர்மையாக தேடு. சரியான நேரத்தில், தெரிந்து கொள்ள வேண்டியதை யாம் தெரிவிப்போம்" என வாக்கு வந்தது.

"சரிதான்! நம்மை விரட்டி விரட்டி ஓடவைத்துத்தான், கேட்டது இவர் கொடுக்கப்போகிறார்" என்று மனதுள் நினைத்தேன். என்னதான் அடியவராக பணிந்து சென்றாலும், சில வேளைகளில் சாதாரண மனித சிந்தனைக்கு நாம் வந்துவிடுவோம்.

ஒரே அமைதி எங்கும் நிலவியது. வேறு எந்த பதிலும் வரவில்லை. சரி, இன்று இவ்வளவுதான் போல, என்று நினைத்து, குருநாதருக்கு நமஸ்காரம் செய்துவிட்டு, கோபுர வாசலை நோக்கி நடக்கும் பொழுது, பூசாரி எங்களுடன் நடந்து வந்தார்.

"அகஸ்தியருக்கு, எல்லா மாதமும் சதயம் நட்சத்திரத்தன்று, இங்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது. பல இடங்களிலிருந்தும் அகத்தியர் அடியவர்கள் இங்கு வந்து சிறப்பாக நடத்துகின்றனர். அந்த பூஜை கூட, நாடியில் வந்த அகத்தியர் உத்தரவின் பேரில்தான் செய்வதாக கூறுகிறார்கள். அகத்தியர் எத்தனையோ காலங்களுக்கு முன் இங்கு இருந்து ஐந்து விதமான யாகங்களை செய்துள்ளார். பின்னார்தான் அவர் மலை கடந்து மலையாள தேசத்துக்கு சென்றதாக கூறுகிறார்கள். இங்கு வந்து பூசையில் கலந்து கொண்டு சமர்ப்பிக்கப்படுகிற வேண்டுதல்கள், உடனடியாக நிறைவேறுவதாக, பக்தர்கள் கூறுகின்றனர்" என பல விஷயங்களை கூறினார், பூசாரி.

அனைத்தையும் உள்வாங்கி, பாதுகாத்த பொழுது மனதுள் ஒரு எண்ணம் உதித்தது.

"குருநாதா! ஏதேனும் ஒரு தடயம் தரக்கூடாதா?" என்றேன் மனதுள்.

எங்களை வழியனுப்ப வந்த பூசாரி, கோபுர வாசல் படி மேல் நின்று பேசத் தொடங்கினா. அவர் முகத்தையே கவனித்துக் கொண்டிருந்த அடியேனின் பார்வை, கோபுர சுவரில் பதிந்தது.

அங்கு,

பத்மநாபரின் அனந்தசயன உருவம், அவர் வலது கைக்கு கீழே ஒரு சித்தர் த்யானத்தில் அமர்ந்திருப்பது போல் பொறிக்கப்பட்டிருந்தது. பொதுவாக, பத்மனாபாரின் வலது கைக்கு கீழே, ஒரு சிவலிங்கம் தான் இருக்கும். ஆனால் இங்கோ, ஒரு சித்தர் அமர்ந்திருந்தார்.


மிகுந்த சந்தோஷம் அடைந்து, பூசாரியை அங்கிருந்து சற்று விலகச்சொல்லி, அந்த ரூபத்தைக் காட்டி, "அடியேன் தேடி வந்தது கிடைத்த்துவிட்டது. இது போதும். அகத்தியரின் அருள் மிகப்பெரியது." என்றேன்.

பின்னர் அந்த சிற்பத்தை, புகைப்படம் எடுத்துக்கொண்டு, விடை பெற்றோம். அன்றிலிருந்து, அடியேனின் கேள்விக்கான பதில்களை, அகத்தியப்பெருமான், எதிர்பார்க்காத சூழ்நிலைகள் வழி, மனிதர்கள் வழி தரத்தொடங்கினார்.

இதற்குள், கோவிலை சுற்றி கட்டுப்பாடுகள் இறுகத்தொடங்கியது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், துப்பாக்கி ஏந்திய கருப்பு பூனைப்படை காவலுக்கு இறங்கியது. கோவிலுக்குள் யாரும் அதிக நேரம் இருக்க முடியாது என்ற சூழ்நிலை உருவானது.

கோவிலின் பத்து நாட்கள் உற்சவத்தின் பொழுது,  பத்தாவது நாள் ஆராட்டின் (தீர்த்தவாரி) பொழுது  வேறு ஒரு கோவிலிலிருந்து வந்த யானைக்கு மதம் பிடிக்க, ஆபத்தான கலவர சூழ்நிலை உருவானது. இதனுடன், மஹாராஜா கையில் அணிந்திருந்த நவரத்ன மோதிரம், சில நாட்களில் தொலைந்து போனது.

நிமித்தம் சரியாக இல்லாமல், கெடுதல் நடக்கிறதே, என்று கவனித்த மஹாராஜா, கோவிலுக்குள் பூஜையில் ஏதேனும் தவறு நடந்துவிட்டதோ? என்றறிய, அனைவராலும் மதிக்கப்படுகிற ப்ரச்னம் பார்க்கிற ஒருவரை வரவழைத்தார்.

வந்தவர், முதல் நாள் த்யானத்தில் அமர்ந்து பத்மனாபாரிடம் உத்தரவு வாங்கினார்.

உத்தரவு கிடைத்தது, ஆயின் மறுநாள், வரை காத்திருக்க வேண்டி வந்தது.

"நாளை காலை தெலுங்கு தேசத்திலிருந்து ஒரு சிறுவன் தன் தகப்பனுடன் எம்மை தரிசிக்க வருவான். அவனை கொண்டு ப்ரச்னம் பார்க்கவும். வரும் அருளை சோதித்து பார்த்து, தெரிவி!" என பத்மனாபாரிடமிருந்து அவருக்கு உத்தரவு வந்தது.  

ப்ரச்னம் பார்ப்பவரும், அவரது 22 சிஷ்யர்களும், இந்த நிகழ்ச்சிக்காக, மறுநாளுக்கு காத்திருந்தனர்.

நாமும் அடுத்தவாரம் வரை காத்திருப்போம்!

சித்தன் அருள்...................... தொடரும்!