​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 31 January 2019

சித்தன் அருள் - 792 - ஓதியப்பர்-அகத்தியருடன், ஒரு சிறு அனுபவம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப்பெருமானின் அந்தநாள் இந்த வருட 2018 பூஜை (கோடகநல்லூர்) தொடர் நிறைவு பெற்றபின் ஒரு சில ஆன்மீக அனுபவங்களை, உங்கள் முன் சமர்ப்பிக்கலாம் என்ற எண்ணம் வரவே, இந்த வாரத் தொகுப்பு.

ஓதியப்பர் மீது அபரிதமான நம்பிக்கையும், அன்பும் இயல்பாகவே அடியேனுள் அமைந்தது, ஒரு விதத்தில் நல்ல அனுபவங்களை வழங்கியுள்ளது. இறைவனாக, குருவாக, நண்பனாக, வழிகாட்டியாக, வேலைக்காரனாக இப்படி எத்தனையோ எண்ணக்கலப்பில், அவருடன் மனம் விட்டு எண்ணங்களை பகிர்ந்து கொண்டு, வரும் உத்தரவுகளை, சிரம் மேற்கொண்டு செய்து முடிப்பதில், ஒரு அலாதி இன்பம். நாள் செல்லச் செல்ல, அவரை தரிசித்து,  அருள் பெற நிறையவே அலய  வேண்டி வந்தது. பல முறை உடல் ஒத்துழைக்காத பொழுது, "உனக்கு வேணும்னா, இங்க வீட்டில் வந்து பாரு!" என்கிற நிலைக்கு வார்த்தைகள் பகிந்து கொண்ட பொழுது, சட்டென உரைத்து, நாக்கை கடித்துக் கொண்டேன். "அகங்காரத்தில் கூறவில்லை. எதுவுமே என்னுடையதில்லை. இது உன் இடம். எப்போது வேண்டுமானாலும் நீ வரலாம். என் உடலோ யாத்திரைக்கு ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது. இங்கு வாயேன்!" என்று மாற்றி விளம்பினேன். அதன் பின்னர் ஒரு சுகமான உறவு முறை அவருடன் வளர்ந்தது, என்பதுதான் உண்மை.

நிறைய அலைந்து, தரிசித்து, வந்த பின், ஒரு யோசனை வந்தது. அடியேன் அமர்ந்திருக்கும் அறையிலேயே, கம்பீரமாக அவர் நின்று கொண்டிருக்கிற ஒரு உருவச்சிலை கிடைத்தால், நேரம் காலம், சூழ்நிலை பார்க்காமல், அவரிடம், நம் மனஎண்ணங்களை சமர்பிக்கலாமே, என்ற யோசனை தோன்றியது. அதுவும் ஒரு ஆறு மாதத்துக்குள், 2 1/2 அடி உயர சிலையாகா வந்து அமர்ந்தது. (இது வந்த கதை, அதுவும் சுவாரசியமானது. அது பின்னர் உரைக்கிறேன்).

அப்படிப்பட்ட ஓதியப்பர் முன் அமர்ந்து, மனதில் தோன்றியதை எல்லாம் கூறிவிட்டு, இரவு உறங்கும் முன் பிரார்த்தனை செய்து, எல்லாம் உனக்கே சமர்ப்பணம், நல்லதே நடக்கட்டும், இங்கே இருந்து பார்த்துக்கொள், என கூறுவது, நித்தம் ஆனது. சும்மா சொல்லக்கூடாது, அவரும் விடிய விடிய, கண் இமைக்காமல் காத்து அருளுவார்.

ஒரு நாள், அடியேனுக்கு, ருத்ராக்க்ஷ மாலையில், ஸ்படிகத்தில் சிவலிங்கம் வைத்து அணிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. வேண்டிக்கொண்ட பொழுது, 108 ருத்ராக்ஷத்தை திருச்செந்தூரிலிருந்து கொடுத்துவிட்டு, ஒரு ஸ்படிக லிங்கத்தை, காசியிலிருந்து கொடுத்து விட்டார். இரண்டும் வந்து சேர்ந்ததும், அசந்து போனேன். சும்மா ஒரு ஆசைக்காக கேட்டது, இத்தனை வேகத்தில் நடக்குமா? இவரிடம் மிக கவனமாக இருக்க வேண்டுமே. கூடவே, ஏதேனும் ஒரு "ஆப்பை" வைத்து விடுவாரோ என்று எண்ணினேன். இருப்பினும், வந்து சேர்ந்த சந்தோஷத்தில், உடனேயே மாலைகட்டி சிவலிங்கத்தை மாட்டி, சிவபெருமான் சன்னதியில் [ஒரு கோவிலில்] அவர் கழுத்தில் அணிவித்து, வீட்டுக்கு பத்திரமாக கொண்டுவந்தேன்.

வரும் வழியில், ஒரே யோசனை. என்னவோ சரியில்லையே. இது நமக்கென ஓதியப்பர் கொடுத்ததுதானா? மிக மிகச் சூடாக இருக்கிறதே. இதை அணிந்து கொண்டால், நம் உடல் மிக சூடாகிவிடுமே, என்றெல்லாம் தோன்றியது.

சரி! ஓதியப்பர் இருக்கிறார். அவரிடமே சில நாட்களுக்கு இருக்கட்டும், பின்னர் ஒரு முடிவெடுப்போம் எனத் தோன்றவே, அந்த மாலையை, ஓதியப்பர் கழுத்திலேயே மாட்டி விட்டேன். மிக மிக அழகாக இருந்தது.

"இது சரி, ஓதியப்பா! கொஞ்ச நாட்களுக்கு உன்னிடமே இருக்கட்டும்" எனக் கூறி மறந்துவிட்டேன். வியாழக்கிழமை, அகத்தியர் கோவிலில் உள்ள கிருஷ்ணர், அவர் பூ மாலையை தருவார். அதை கொண்டு வந்து, ஓதியப்பருக்கு சார்த்திவிடுவேன். கூடவே :இந்த மாலை உன் மாமன் கொடுத்துவிட்டார்! உனக்கு அணிவித்துவிட்டேன். இனி அடுத்த வாரம்தான் புது மாலை வரும். அதுவரை, இதைத்தான் நீ அணிந்து கொள்ளவேண்டும்" எனக் கூறிவிடுவேன்.

ருத்ராட்ச மாலை, இந்த மாலைக்கு அடியில் அவர் கழுத்தில் கிடக்கும். ஆனால், நினைவுக்கு வராது, வெளியேயும் தெரியாது. சில நாட்களில், ஓதியப்பரின் கழுத்தில் ருத்ராட்ச மாலை இருக்கிறது என்ற எண்ணம் அடியேனுள் இல்லாமல் போனது.

ஒரு முறை, வியாழக்கிழமை, பழைய மாலையை கழட்டிவிட்டு, புது மாலையை போடப் போன பொழுது, ருத்ராட்சமாலை சற்று வெளியே முகம் காட்டியது.

அதை எடுக்காமல் "எதுக்கு இப்ப இத ஞாபகப்படுத்துகிறாய்! அது உன்கிட்டேயே இருக்கட்டும். நேரம் வரும் பொழுது பார்க்கலாம்" என்று புது மாலையை போட்டுவிட்டேன்.

"அந்த மாலையில் இருக்கும் சிவலிங்கம் உன் பாதத்தை தொட்டபடி இருக்கிறது. அது சரியா இல்லையானு தெரியலை. இருந்தாலும், உனக்கு எல்லாமே சம்மதம்தான் என புரிகிறது. அது உன் கழுத்திலேயே இருக்கட்டுமே!  நீ என்ன நினைக்கிறாய் என புரியவில்லை. நீயே தெளிவாக காட்டிவிடு!" என உரைத்தபின், அமைதியாகிவிட்டேன்.

அவர் என்ன காட்டினார், என்பது, அடியேனுக்கும் அவருக்கும் மட்டும்தான் தெரியும். வேறு யாரும் அருகில் இல்லை, யாரிடமும் இதை பற்றி கூறவில்லை.

போன வாரம், இரு வாரமாக அகத்தியரை தரிசிக்க முடியவில்லை என்ற மனக்குறையுடன், அகத்தியப் பெருமானை தரிசிக்க பாலராமபுரம் கோவிலுக்கு சென்றேன். கூடவே, மனதுள், பொதிகையில் இப்போதைய நிலை வருத்தமாக அமர்ந்திருந்தது. குருவை கண்டதும், வணக்கம் கூறிவிட்டு, நேராக "ஆதித்ய ஹ்ருதயம்" கூறி தக்ஷிணையாக அவருக்கு வாசியோக முறைப்படி கொடுத்தபின், மனதில் இருந்த பொதிகை வேதனைகளை, அவர் பாதங்களில் சமர்ப்பித்தேன்.

வழக்கம் போல், பூசாரி பிரசாதம் தந்தார். அதை வாங்கி பையில் வைத்துக்கொள்ள, பை இருக்கும் இடம் நோக்கி நடந்தேன். மனதுள் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. பைக்குள் பிரசாதத்தை வைத்தபின், விடை பெற வேண்டி அகத்தியப் பெருமானை நிமிர்ந்து பார்த்தேன். ஸ்ரீ லோபாமுத்திரை, அகத்தியர் சன்னதியில் இருந்த பூஜாரி ஓடி வெளியே வந்து, அடியேனை நோக்கி,

"சாமி! இங்க வாங்க!" என்றழைத்தார்.

இளம் வயது பூஜாரி, மிகுந்த அகத்தியர் பக்தர், அடியேனுக்கும் அவரிடம் அபரிதமான அன்பு உண்டு.

அவர் கூப்பிட்ட குரலுக்கு செவி சாய்த்து, அகத்தியர் சன்னதியின் முன் போய் நின்ற அடியேனிடம்,

"ஒரு விஷயம் உங்களிடம் கேட்கட்டுமா!" என்றார்.

"சொல்லுங்க!" என்றேன், அமைதியாக.

"என்றேனும், என்றேனும் ஒருநாள், கோவிலுக்கு வரும் பொழுது, குருநாதருக்கு 108 ருத்ராக்ஷம் பதித்த மாலையில், ஒரு ஸ்படிக லிங்கம் கட்டி, கொண்டு தாருங்களேன். அவர் எனக்கு போட்டுக்க வேண்டும், என உங்களிடம் கேட்கச் சொன்னார்" என்றார்.

ஒரு வினாடி அசந்து போனாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், "அவ்வளவுதானா! இல்லை வேறு ஏதேனும் கூறினாரா?" என்றேன்.

"நீங்க வீட்டுக்கு போக இறங்கிட்டீங்க. நான் உள்ளே அமர்ந்திருந்தேன். "பிடிடா அவனை. விட்டா ஓடிப்போயிடுவான். அப்புறம் பிடிக்க முடியாது. நான் கூறியதாகச்சொல்! எனக்கூறி ருத்ராக்க்ஷ மாலையை கேட்டார்" என்றார்.

இரு கைகளால், முகம் பொத்தி, நெற்றியை தாங்கிக்கொண்டு, கண் மூடி அகத்தியரிடம் மானசீகமாக விண்ணப்பித்தேன். "எங்க ஓடிப் போய்விடப் போகிறேன்! உங்களை விட்டு. அடியேனும், ஓதியப்பரும் பேசியதை ஒட்டுக் கேட்டீர்களா? சரி, நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து எதோ ஒரு நாடகத்தை நடத்துகிறீர்கள். ஓதியப்பர் உங்களுக்கு அந்த மாலையை கொடுக்க சொல்கிறார் என நம்புகிறேன்!" என்றேன்.

பின்னர் பூசாரியை பார்த்து, "சரி!" என ஒரு வார்த்தையை மட்டும் உதிர்த்துவிட்டு, சில தீர்மானங்களை எடுத்தேன்.

"நீங்க ரெண்டு பெரும் சேர்ந்து மிகப் பெரிய பாக்கியத்தை அடியேனுக்கு கொடுக்க விரும்புகிறீர்கள். உங்கள் விருப்பப்படியே நடக்கட்டும். அடுத்த வாரம் வியாழக்கிழமை உங்கள் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன். அந்த சமர்ப்பணம் "அகத்தியப்பெருமானின் சித்தன் அருள்" சார்பாகவும், அனைத்து வாசகர்கள் சார்பாகவும், அனைத்து அகத்தியர் அடியவர்கள் சார்பாகவும், உங்கள் கழுத்தில் பரிமளிக்க வேண்டும்! இதுவே அடியேனின் வேண்டுதல்" என அவரை வணங்கி விடைபெற்றேன்.

அகத்தியர் அடியவர்களே, அகத்தியப்பெருமானின் கழுத்தில், ஓதியப்பர் அணிந்த அந்த ருத்ராக்க்ஷ மாலை அலங்கரிக்கப்போகிற, அந்த வியாழக்கிழமை, இன்று தான்- [31/01/2019].

எல்லோருக்காகவும் வேண்டிக்கொள்கிறேன், கூடவே, நீங்களும், பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

சித்தன் அருள்......................... தொடரும்!  

Thursday 24 January 2019

சித்தன் அருள் - 791 - பொதிகையில் அகத்தியர்!


[பொதிகை செல்லும் வழியில், வழுக்குப்பாறை என்கிற இடத்தில் அகத்தியர். இவருக்குத்தான் இப்பொழுது பூஜை போடமுடியும்! பொதிகையில் அகத்தியருக்கு, ஒன்றும் செய்ய முடியாது. ஏன்? கீழுள்ள படத்தை பாருங்கள்.]




[கேரள வனத்துறை ஏற்பாட்டின் பேரில், மூலஸ்தானத்தில், அவரை சுற்றி கயிற்றினால் வேலி கட்டி, விடியற்காலை 5 மணிக்கே வனத்துறை அதிகாரிகள் வந்து யாராவது உள்ளே செல்கிறார்களா, அந்த கயிற்றை தொடுகிறார்களா என்று கவனித்து, செய்தால் அந்த இடத்திலேயே, குறைந்தது 2000 ரூபாய் அபராதம் விதிக்கிறார்கள். இவருக்கு அபிஷேகம் அலங்காரம், எதுவும் செய்ய முடியாது.

அகத்தியர் அடியவர்களுக்கு, ஏன் இந்த சோதனை? 
உண்மையான அடியவர்கள் வருத்தத்துடன் மலை இறங்குகின்றனர். நிறைய பேர்கள், பூஜை சாமான்களை, கொண்டுவந்து, பலராமபுரம் அகத்தியர் கோவிலில் கொடுத்துவிட்டு செல்கின்றனர்.
அகத்தியரை பார்த்துவிட்ட முற்போக்குவாதிகள் சந்தோஷமாக சிரித்தபடி, எதையோ கீழடக்கிவிட்டோம் என்கிற மமதையில் இறங்குகின்றனர். இதில், மலை ஏறி அகத்தியருடன் செல்பி வேறு.

அடியேனுக்கு ஒரு கேள்விதான் கேட்க விருப்பம். அகஸ்தியர் மூலஸ்தானம் இருப்பது "களக்காடு" என்கிற வனத்துறை பிரிவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இடத்தில் உள்ளது. தமிழ்நாடு ஏன் இந்த இடத்தை கேரளாவுக்கு விட்டுக்கொடுத்து விட்டு அமைதியாக இருக்கிறது.

என்னே அகத்தியருக்கு, அடியவர்களுக்கு வந்த சோதனை.

இதுவும் அகத்தியர் அருள் என கொள்க!

சித்தன் அருள்.............. தொடரும்!

Saturday 19 January 2019

சித்தன் அருள் - 790 - கோடகநல்லூர் - அந்தநாள்>>இந்த வருட நிகழ்ச்சிகள் - 9



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியர் அடியவர்கள், பிரசாதம் வாங்கிக் கொள்ள, ஒரே சீராக வந்து வாங்கிக் கொண்டனர். மிக அமைதியாக, இறை பிரசாதத்தை வாங்கிக்கொண்டவர்கள், உண்ட பின், பாக்கு இலை தட்டை அதெற்கென வைத்துள்ள குப்பை தொட்டியில் சேர்த்து, கோவிலை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவியது. 

எந்த ஊரிலிருந்து என்று ஞாபகம் இல்லை, ஒரு அகத்தியர் அடியவர் தனியாக வந்திருந்து, காலையிலிருந்தே அன்னம் தயாரித்து, நிறைய பேர்களுக்கு வழங்கினார். தன்னை அகத்தியப் பெருமானின் அடியவர் எனவும், திரு.ஹனுமந்த தாசன் அவர்களின் சீடர் எனவும், தெரிவித்துக் கொண்டார். அவர் பல அடியவர்களின், பசிப்பிணியை போக்கினார். அவர் முதல் நாள் இரவு பெய்த மழையில், அத்தனை சிரமங்களையும் தாங்கிக்கொண்டு கோவில் திண்ணையில் வைத்து காய்கறி நறுக்கி, அடுப்பு மூட்டி, சமையல் செய்தது, மிக நெகிழ்வாக இருந்தது. அவர் பட்ட சிரமங்களைப் பார்த்த பொழுது, அடியேனின் முயற்சி ஒன்றும் இல்லை என்றானது. அவரும், அவர் சுற்றமும் நலமாய் வாழ, அகத்தியர் அருளவேண்டும், என பிரார்த்திக்கிறேன்.

அகத்தியர் அடியவர்களுக்கு, அகத்தியர் பூசையின் பிரசாதமாக, இறைவனுக்கு நிவேதனம் செய்யப்பட, புளியோதரை, தயிர் சாதம், சர்க்கரைப் பொங்கல், பஞ்சாமிர்தம் வழங்கப்பட்டது. அகத்தியர் அடியவர்கள் விநியோகம் செய்வதற்கு, மிக உதவி செய்தனர். ஒருவர் தட்டு கொடுக்க, மற்றவர்கள் ஒவ்வொரு பிரசாதத்தை கொடுக்க, அதன் முடிவில், பெருமாளின் மஞ்சள் பொடி,  மூன்று விதமான எண்களில் ஒன்றை கொண்ட ஒரு 10  ரூபாய் - [786-108-354] பெருமாளின் ஆசி என கூறி வழங்கப்பட்டது. இதற்கிடையில், திரு சுவாமிநாதன், அகத்தியர் அடியவர் அனைவருக்கும் ஒரு ருத்திராக்ஷத்தை கொடுத்தார்.

உண்மையிலேயே, மேலும் இருவித பிரசாதத்தை, அகத்தியர் அடியவர்களுக்கு கொடுக்கவேண்டும் என நினைத்திருந்தாலும், மறந்து போய், கொண்டுவராததாலும், அடியேன் பக்கமே தங்கிவிட்டது.

ஒன்று, பொதிகை அகத்தியப் பெருமானிடம் வேண்டி, வாங்கிக் கொண்ட, அவர் கழுத்தில் சூடியிருந்த "வெட்டி வேர் மாலை".  இதன் ஒரு சிறு துரும்பை அனைவருக்கும், வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள் எனக்கூறி கொடுத்துவிடலாம் என்று நினைத்திருந்தேன். மறந்து போனது.

இரண்டாவது, வீட்டில் அமர்ந்து, திருப்பதி வேங்கடவரிடம் விண்ணப்பித்து, அவர் முகவாயில் வைத்து பிரசாதமாக கிடைத்த "பச்சை கற்பூரம்". இதையும் ஒரு சிறு துகள் அனைவருக்கும் கொடுக்கவேண்டும் என நினைத்திருந்தேன்.  முடியாமல் போனது.

மொத்தமாக பார்க்கையில், அகத்தியர் அடியவர்களின் உதவியுடன், இந்த வருட பெருமாளின் பூஜை, மிக சிறப்பாக நடந்தது.

சரி! நம் பார்வைக்கு தட்டுப்படாத, ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் தெரிய வந்த, அங்கு நடந்த நிகழ்ச்சிகள் என்ன?

அன்று பூஜைக்கு வந்திருந்த ஒரு அகத்தியர் அடியவர், ஊருக்கு சென்றபின், கோவில் பிரசாதத்தை, ஒரு பெரியவரிடம் கொடுத்திருக்கிறார். என்ன விஷயம் என்று கூறவில்லை. கண் மூடி சற்று த்யானத்தில் இருந்த பெரியவர், "என்ன? பெருமாள் கோவில் ப்ரசாதமா? அகத்தியர் பூசை செய்தாரா? என்று கேட்டுவிட்டு, மேலும் தொடர்ந்தார். "அட! கருடாழ்வார் முதல் நாளே, பெருமாள் உத்தரவின்படி வந்து சேர்ந்துவிட்டாரே. வாயு பகவானும், வருணனும் பூஜை அன்று மிகுந்த சிரமம் கொடுப்பார்கள் என்று உணர்ந்த பெருமாள், வாயு மைந்தனான, அனுமனை வரவழைத்து, கோவிலில் இருக்கவைத்து, அவர்களை, தடுத்து நிறுத்தினார். அதனால் பூசை மிக சிறப்பாக நடந்துள்ளது. அட! நாரதரும் "இங்கு பெருமாள் கோவிலில், அகத்தியரும் அனுமனும், அடியவர்களும் சேர்ந்து என்னதான் செய்கிறார்கள் என்று அறிய, சிவனடியாராக வேடம் பூண்டு வந்திருக்கிறார்!"  சிறிது நேரம் அமைதியாக இருந்தவர், கண் திறந்து, "இப்படி ஒரு பூஜை நடக்கிறது என்பதை முன்னரே சொல்லியிருக்கலாமே! வந்திருந்த அடியவர்கள் அனைவருக்கும் மிகச்சிறந்த ஆசிர்வாதத்தை, பெருமாளும், அகத்தியரும், அனுமனும், கருடாழ்வாரும், நாரதரும், மற்றும் பல சித்தர்களும், அளித்துள்ளார்கள்!" ரொம்ப கொடுப்பினை உள்ளவர்கள், அனைவரும்!" என தன் அருளுரையை அளித்தார். [இதுவே அகத்தியர் பூசையின் சிறந்த பரிசு, என அடியேன் நினைக்கிறேன்].

இளநீர் அபிஷேகத்தின் பொழுது நடந்த சுவாரசியமான நிகழ்ச்சியை முன்னரே கூறியிருந்தேன். அதே நேரத்தில், அங்கிருந்த அகத்தியர் அடியவர் திரு.காளிமுத்துவின், மகள், ஊருக்கு சென்ற பின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு விஷயத்தை விவரித்தாள். "இளநீர் அபிஷேகம் நடந்த பொழுது, நான் தாத்தாவை பார்த்தேன். அவர் காவியுடுத்து, ருத்ராட்ச மாலை அணிந்து, தலையில் பெரிய கொண்டைபோல போட்டுக்கொண்டு, அபிஷேகம் செய்து கொண்டிருந்தார்! அவரும் நீங்கள் கொடுத்த இளநீரைதான் வாங்கி அபிஷேகம் செய்தார்" என்றாள். {இதைக்கேட்டதும், ஒன்றும் பேசத் தோன்றவில்லை! அமைதியாகிவிட்டேன்!]

இன்னும் நமக்கு தெரியாமல் நடந்த நிகழ்ச்சிகள் பல இருக்கலாம். யாருடைய எப்படிப்பட்ட பிரார்த்தனைகள், நிறைவேற்றப் பட்டது என்பது தெரியவில்லை.

அனைவரும் சென்றபின், மீதம் தங்கியிருந்த அகத்தியர் அடியவர்கள் குழு ஒன்று, கோவிலையும் சுற்றுப்புறத்தையும், சுத்தம் செய்கிற வேலையில் இறங்கினார்கள். ஒரே மணி நேரத்தில் கோவில், அதன் உட்புறம், பிரகாரம், கோவிலின் வெளிப்புற  தெருவுவரை, குப்பைகளை கூட்டி சுத்தம் செய்தனர். வெளியே வந்து பார்த்த அர்ச்சகர் "அட! மிக சிறப்பாக செய்துவிட்டார்களே அகத்தியர் அடியவர்கள். இங்குதான் இத்தனை பேர்கள் கூடி ஒரு பூசை நடந்ததா! என ஆச்சரியப்படுகிற அளவுக்கு, சுத்தம் செய்துள்ளார்கள். நிச்சயமாக அனைத்துவருக்காகவும் நான் பெருமாளிடம் விண்ணப்பிக்கிறேன்!" என்றார்.

அகத்தியர் அருளை "சித்தன் அருளில்" வாசித்து, அகத்தியர் நடத்திய பெருமாளின் பூஜைக்கு வந்திருந்து, அத்தனை உழவாரப்பணியையும் சிரம் மேற்கொண்டுசெய்து, பெருமாள், அகத்தியரின் அருள் பெற்ற அனைத்து அடியவர்களுக்கும், அடியனின் சிரம் தாழ்ந்த வணக்கம்.

எல்லோரும் எல்லா நலமும் பெற்று வாழ்க!

[கோடகநல்லூர் தொகுப்பு, நிறைவு பெற்றது!]

சித்தன் அருள்........... தொடரும்!

Tuesday 15 January 2019

சித்தன் அருள் - 789 - மார்கழி மாத பாபநாச ஸ்நானம்!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

பாபநாசத்தில், தாமிரபரணி தீர்த்தத்தில், மார்கழி மாத ஸ்நானம் செய்வதற்காக, கடந்த ஞாயிற்று கிழமை சென்றிருந்தேன். அப்பொழுது, கூட வந்த அகத்தியர் அடியவர் எடுத்த மூன்று வீடியோக்களை, உங்கள் பார்வைக்காக சமர்ப்பிக்கிறேன்!

பாபநாசத்தில் தாமிரபரணி தீர்த்தம்

பாபநாசத்தில் அகத்தியர் அருவி

கல்யாண தீர்த்தம்

என்று ஸ்ரீ லோபாமுத்திரை தாயின் விக்கிரகம் உங்கள் அருகில் பிரதிஷ்டை செய்யப்படுகிறதோ, அதற்கு பின்தான் உங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வேன் என சமர்ப்பித்துவிட்டு வந்தேன். அம்மை இல்லாமல் அப்பனுக்கு மட்டும் என்று அடியேன் செய்வதில்லை. நல்ல செய்தி விரைவில் வரும் என்று என் மனம் நம்புகிறது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

Thursday 10 January 2019

சித்தன் அருள் - 788 - கோடகநல்லூர் - அந்தநாள்>>இந்த வருட நிகழ்ச்சிகள் - 8


வணக்கம்!

அகத்தியப் பெருமானின் அந்தநாள் ~ இந்தவருட பூஜை, அகத்தியர் அடியவர்களின் உதவியுடன் தொடங்கியது. ஒரு நொடியில், அகத்தியப்பெருமான் வந்திருக்க வேண்டுமே, பூந்தோட்டத்தை சுற்றி ஒரு நடை நடந்துவிட்டு வரலாம் என்று தோன்ற, வெளியே வந்தேன்.

பூந்தோட்டம் பக்கம் அமைதியாக இருந்தது. ஒரு மரத்தின்  நிழலில் நின்று கோபுரத்தை நோக்கி சிந்தித்தேன். "வந்துவிட்டிர்களா " என்று  அடியேன் மனதுள் கேட்டது அவருக்கு கேட்டுவிட்டது போலும்.

மிக மெலிதாக தென்றல் வீச, அதனுள் துளசி, சந்தானம், ஜவ்வாது என அடியேனுக்கு பரிச்சயமான மணம் தவழ்ந்து வந்தது.

"சரி! மிக்க நன்றி! என பிரார்த்தித்துவிட்டு கோவில் வாசல் முன் புறமாக நடந்து வர, ஒரு அகத்தியர் அடியவர் ஓடி வந்து "உங்களை அர்ச்சகர் கூப்பிடுகிறார்" என்றிட, உள்ளே சென்றேன்.

அடியேனை கண்டதும், அர்ச்சகர்,

"சங்கல்ப்பம் பண்ணனும்! பெயர், நட்சத்திரம், காரணம் கூறுங்கள்" என்றார்.

"உங்களுக்குத் தெரியாதா!, இது அகத்தியப்பெருமான் நடத்துகிற பூஜை, ஆதலால் அவர் பெயர், ஆயில்ய நட்சத்திரம்" என்று கூறி நிறுத்தினேன்.

"காரணம்!" என்றார்.

"முதலில் லோகஷேமம்! இரண்டாவது அ கத்தியர் அடியவர்களும் அவர்கள் குடும்பம், சுற்றம்" என விவரித்தேன்.

சிரித்துக்கொண்டே, "ஸ்ரீ அகஸ்தியர் நாமதேயஸ்ய, அஸ்லேஷ நக்ஷத்ரே, கடக்க ராஸிதௌ......" என சங்கல்பத்தை தொடங்கி பெருமாள் பாதத்தில் பூவை வைத்தார்.

"என்ன பெருமாளே! உங்கள் வலதுகரமாக விளங்கும் எங்கள் குருநாதர் நடத்துகிற பூசையை, சிறப்பாக நடத்திக்கொடுங்கள்" என வேண்டிக்கொண்டேன்.

முதலில் எண்ணை காப்பு பெருமாளுக்கு போட்டுவிட்டு அதை பிரசாதமாக அனைவருக்கும் ஒரு சொட்டு தேகத்தில் புரட்டிக்கொள்ள கொடுத்தார், அர்ச்சகர். ஒரு அகத்தியர் அடியவர், அதை வாங்கி அங்கு வந்திருந்த அனைவருக்கும் பிரசாதமாக வழங்கினார்.

பின்னர்  மந்திரங்கள், சூக்தங்கள் முழங்க, அபிஷேக ஆராதனை தொடங்கியது.

பெருமாளுக்கு வலது புறத்திலிருந்து நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். எங்கும் அமைதி, அகத்தியர் அடியவர்கள் அமர்ந்திருந்தனர்.

பெருமாளுக்கும், தாயாருக்கும், பால்,  பஞ்சாமிர்தம், நெய், தேன், தயிர், 128 மூலிகைப்பொடி, வாசனாதி திரவியங்கள், மஞ்சள் பொடி, சந்தானம், பன்னீர் என தொடர்ந்து அபிஷேகம் நடந்தது.

முதல் நாள், பெருமாளுக்கு இளநீர் அபிஷேகம் செய்விக்கவேண்டும் என தோன்றி எத்தனையோ இடங்களில் தேடியும் கிடைக்கவே இல்லை. அடியேனின் நண்பர், திரு.ஸ்வாமிநாதனிடம், கிடைத்தால் வாங்கி வாருங்களேன் என வேண்டியிருந்தேன். அவர் எங்கேயெல்லாமோ தேடி ஒரு வழியாக ஐந்து இளநீர் கொண்டு வந்து தந்தார். அதை எடுத்துக் கொடுக்கவேண்டும் என்ற அவா வரவே, திரும்பி பார்த்தால், இருபதுக்கு மேற்பட்ட இளநீர் அங்கிருந்து. ஐந்து எப்படி இருப்பதாயிற்று என்று யோசித்தபடி நண்பரை வினவ, வந்திருந்த ஒரு சில அகத்தியர் அடியவர்கள்  கொண்டுவந்தார்கள் என பதில் வந்தது.

அதுவரை நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அடியேன், சட்டென்று அடுத்த அபிஷேகமாக "இளநீரை" வாங்கி அர்ச்சகரிடம் கொடுக்க, அதை  கொடுத்த பொழுது, அவர் கை  விரலில் அடியேனின் விரல் பட்டது. "சுரீர்" என மின்சாரம் பாய்ந்தது போல் ஒரு உணர்வு அடியேனுக்கு ஏற்பட்டது. சட்டென்று, அவரை நிமிர்ந்து பார்க்க, அவர் "ஏதோ ஒரு சக்தி ஆட்கொண்டதுபோல" தோன்றினார். மந்திர ஜெபமும், அபிஷேகமும் எனக்கு முக்கியம் என்பது போல நடந்து கொண்டார். அவர், அவராக இல்லை, இங்கு எதுவோ நடக்கிறது என அவரை உற்று பார்த்துக்கொண்டே, ஒவ்வொரு இளநீராக எடுத்துக் கொடுக்க, ஒரு முறை கண்மூடி திறந்து பார்க்க, அங்கு அர்ச்சகரின் உருவம் தெரியவில்லை. ஒரு நிழல் அபிஷேக பூசை செய்வது போல் கண்டேன் என்பது உண்மை. அது கூட, அகத்தியர் குருநாதரின் அரூப ரூபமாகத் தோன்றியது.

அடடா! இப்படி ஒரு விஷயம் இங்கு நடக்கிறதா, என்று யோசித்தபடி, அதன் பின்னர் வாங்கிக்கொடுத்த "இளநீர்களை" விரல் படாமல் மிக கவனமாக கொடுத்தேன்.

சட்டென்று திரும்பி பார்த்த அர்ச்சகர், "என்ன! இளநீர் நிறைய இருக்கிறதே! பெருமாள் ரொம்ப குளிர்ந்து போய்விடுவாரே" என்றார், சற்று அர்த்த புஷ்டியுடன்.

அபிஷேகம் முடிந்த பின் திரை போடப்பட்டது. ஒரு அகலமான பாத்திரத்தில் நீர் எடுத்து, பிறர் அறியாமல், பச்சைக்கற்பூரம் கரைத்து, பெருமாளுக்கு அபிஷேகம் செய்யக் கொடுத்தேன்.

அர்ச்சகர் ஒரு முறை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, இதுவும் தேவைதான், என்றபடி எல்லா விக்கிரகங்களுக்கும் அபிஷேகம் செய்தார்.

பின்னர் அலங்காரம் தொடங்கியது.

"உள்சன்னதியில், முதலில் தீபாராதனை, நிவேதனம். பின்னர் இங்கு உற்சவ மூர்த்திக்கு" என்றபடி மூலஸ்தானத்தை நோக்கி நடந்தார்.

கூட்டத்தின் ஒரு பகுதி, வேகமாக உள்ளே சென்றது.

"உள்ளே போய் தீபாராதனை பார்த்துவிட்டு வரலாமே!" என நண்பர் வினவ, "நாம் தான் விரும்பிய போதெல்லாம், இரவு பள்ளியறை பால் வாங்கி சாப்பிடும் வரை தரிசனம் செய்கிறோமே.  தீபாராதனையை எவ்வளவு அகத்தியர் அடியவர்களுக்கு தரிசிக்க முடியுமோ, அவர்கள் செய்யட்டுமே. விட்டுக்கொடுப்போம்! வெளியே உற்சவ மூர்த்திக்கு தீபாராதனை நடக்கும் பொழுது பார்த்து திருப்தி அடைவோம்" என்று கூறி வெளியே நின்றுவிட்டேன், நண்பர்களுடன்.

தீபாராதனை முடிந்து வெளியே வந்த அர்ச்சகர், உள்ளே சென்ற அனைவரும் வெளியே வந்து சேரக்காத்திருந்தார்.

கோவில் மணி முழங்க, மந்திர கோஷங்களுடன், பெருமாளுக்கு தீபாராதனை நடந்தது. அது ஒரு கண் கொள்ளாக்காட்சி என்பதுபோல், மனதுள் பதிந்தது.

"அப்பாடா ! ஒரு வழியாக, இந்த வருட அகத்தியர் பூஜையை மிகச்சிறப்பாக நடத்திக் கொடுத்துவிட்டீர் பெருமாளே! உங்களுக்கும், அகத்தியப் பெருமானுக்கும், மிக்க நன்றி. இதுபோல், எல்லா வருடமும், இந்த நாளில், அனைத்து அகத்தியர் அடியவர்களும் வந்து கண்டு களிப்புற  ஆசிர்வாதம் செய்யுங்கள். உங்கள் சேய்கள் ஒவ்வொருவரும், தங்கள் வேண்டுதல்களை  கூறியிருப்பார்கள். அத்தனை பேர்களின், பிரார்த்தனைகளையும், நிறைவேற்றி கொடுங்கள்" என பெருமாளிடம் வேண்டிக்கொண்டேன்.

ஓரளவுக்கு அகத்தியர் அடியவர்கள் தீபாராதனையை கண்ணில் ஒற்றிக்கொண்டதும், பூ பிரசாதம் அனைவருக்கும், சடாரியுடன் அளிக்கப்பட்டது. ஒருவர் தீர்த்தம் அளித்தார்.

மெதுவாக அர்ச்சகர் பக்கத்தில் நின்று "வேறு யாரிடமாவது இந்த வேலையை கொடுத்துவிட்டு வாருங்கள்! நாம் இருவரும் மூலஸ்தானம் வரை போகவேண்டும்!", எனக்கூறினேன்.

விஷயத்தை புரிந்து கொண்டவர், உடனேயே, வேறொருவரிடம், தீபாராதனை தட்டை கொடுத்துவிட்டு, உள்ளே சென்றார்.

சுற்றி இருந்த அகத்தியர் அடியவர்கள், என் நண்பர்களிடம், "மடப்பள்ளியிலிருந்து, பிரசாதத்தை எடுத்து, மேடைக்கு அருகில் வரிசையாக வைத்துக்கொண்டு, தயாராக இருங்கள். அடியேன் உள்ளே போய் பிரசாதத்தை வாங்கி வருகிறேன். வந்த பின், அகத்தியர் அடியவர்களுக்கு பிரசாத விநியோகத்தை தொடங்கலாம்" என்று கூறி உள்ளே சென்றேன்.

பெருமாளையும், அர்ச்சகரையும் பார்க்க முடியவில்லை. அத்தனை கூட்டம் உள்ளிருந்தது.

பெருமாள் பாதம், மார்பு, கரங்கள், தாயாரின் பாதத்தில் சார்த்தப்பட்ட "மஞ்சள் பொடி" பிரசாதத்தை உள்ளிருந்து பாத்திரத்தில் கொண்டு வந்து, ஒரு துணிப்பையுடன், அடியேனிடம் சேர்ப்பித்தார்.

"மிகுந்த நன்றியை" பெருமாளுக்கும், அர்ச்சகருக்கும் கூறிவிட்டு, பிரசாத விநியோகம் செய்கிற இடத்தை நோக்கி வந்தேன்.

அகத்தியர் அடியவர்கள், மிக அமைதியாக, வரிசையாக நின்று கொண்டிருந்தனர்.

பிரசாத விநியோகத்துக்காக உதவிக்கு நின்று கொண்டிருந்த அகத்தியர் அடியவர்கள் வரிசையில், கடைசியாக சிறு திண்ணையில் அமர்ந்தேன்.

வானத்தை உற்று நோக்கினேன். நீர் விட்டு கழுவி சுத்தமாக்கப் போட்டதுபோல், மேகமின்றி, நீல வானமாக இருந்தது.

ஒரு சிறு குறுகுறுப்பு உடலில் ஓட, "என்ன பெருமாளே! உங்கள் குழந்தைகள், உங்களுக்கு இன்றைய தினம் செய்த பூசையை ஏற்றுக் கொண்டுவிட்டீர்களா! என்பதை ஏதேனும் ஒரு நிகழ்ச்சி வழி, காட்டிக்கொடுக்கக்கூடாதா?' என வேண்டிக்கொண்டேன்.

நிமிர்ந்து மறுபடியும் பார்க்க, கருடன் கோபுரத்தை வட்டமிடுவதை காண முடிந்தது.

ஒன்றுமில்லாத தெளிந்த ஆகாயத்திலிருந்து, மிக லேசாக, சத்தமின்றி, மழை பெய்தது.

இது போதும்! என நன்றியை கூறிய பின் பிரசாத விநியோகம் தொடங்கியது.

சித்தன் அருள்.................... தொடரும்!

Wednesday 9 January 2019

சித்தன் அருள் - 787 - அகஸ்தியர் கூடம்!


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

நம் குருநாதர் திரு அகத்தியப்பெருமான் உறையும் பொதிகை மலை, மலை நாட்டில் "அகஸ்தியர் கூடம்" என்றழைக்கப்படும். எல்லா வருடமும், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், தரிசனத்துக்கு வனத்துறை அனுமதியளிப்பர். தினமும் 100 பேர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அதுவும், அவர்கள் வலைத்தளம் வழி பதிவு செய்பவர்களுக்கு மட்டும்.  இந்த முறை முன்பதிவு தொடங்கிய 20 நிமிடத்தில், அத்தனை நாட்களுக்குமான முன் பதிவு தீர்ந்து போய்விட்டது, என்று கேள்விப்பட்டவுடன், எத்தனைபேர் அகத்தியர் தரிசனத்துக்கு, அத்தனை கடினமான யாத்திரையையும், ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்கள் என்று உணர்ந்தேன். இதுவரை பெண்கள் யாரும் அகத்தியர் கூடத்திற்கு செல்வதற்கு, வனத்துறை அனுமதிக்கவில்லை. காரணம், மிக கடினமான பாதை, ஆபத்து மிகுந்த இடங்கள் தான் காரணம். போதாதற்கு, சமீபத்தில், பெண்களும் அகத்தியர்கூடம் செல்லலாம் என்று ஒரு தீர்ப்பு வேறு வந்துள்ளது. பக்கத்தில் இருக்கும் மலைமேல்/குன்றின்மேல் உள்ள கோவிலை பார்ப்பதுபோல் நினைத்திருப்பார்கள் போலும். போய் அனுபவித்துவிட்டு வரட்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

அகஸ்தியர்கூடம் யாத்திரை என்று ஒரு காணொளி காண நேர்ந்தது. நாம் எவ்வளவு ஆசைப்பட்டாலும், அகத்தியர் அனுமதித்தால் அல்லாமல், ஒருவரால் அவரை சென்று பார்க்க முடியாது என்று ஒரு சொல் உண்டு. அங்கு செல்ல முடியாவிட்டாலும், அகத்தியர் அடியவர்கள், அவரை தரிசிப்பதற்காக, அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

முதல் காணொளியில் பின்னுரை மலையாள மொழியில் இருக்கும். இருப்பினும் ஓரளவுக்கு புரிந்து கொள்ளலாம்.

குருநாதரை கண்டு களியுங்கள்.

சித்தன் அருள்................ தொடரும்!

அகஸ்தியர் கூடம் யாத்திரை


அகத்தியப்பெருமானை மிகத்தெளிவாக பார்க்க






Tuesday 1 January 2019

சித்தன் அருள் - 786 - அகத்தியர் திருநட்சத்திர பூஜை - ஒரு அனுபவம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

திரு ஜெயராமன், அகத்தியர் அடியவர், பெங்களூரிலிருந்து, அகத்தியர் திரு நட்சத்திர பூசையின் பொழுது, தனக்கேற்பட்ட அனுபவத்தை, அடியேனிடம் பகிர்ந்து கொண்டார். அவர் அனுமதியுடன், உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்.

"786"வது தொகுப்பை, அடியேன் எழுதுவதற்காக மாற்றி வைத்திருந்தேன். "நீ என்ன தீர்மானம் பண்ணுவது? அடுத்தவருக்கு அந்த வாய்ப்பை கொடு" என்ற எண்ணம் வரவே, மெயில் பார்த்தால், திரு ஜெயராமன், தனது அனுமதியை தந்திருந்தார். நல்லது செய்ய வேண்டும் என்றால், உடனேயே செய்துவிடவேண்டும் என்கிற எண்ணத்தில், இப்பொழுதே உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். இனி, திரு ஜெயராமன் அவர்கள் கூறியதை அவர் பக்கம் நின்று பாருங்கள்.

"ஓம் அகத்தீசாய நமக......ஓம் ஓதிமலை ஆண்டவா போற்றி......."

இந்த வாரம் பாண்டிச்சேரியில் திரு. சுவாமிநாதன் அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற அகத்தியர் ஆயில்ய பூசை மற்றும் அகத்தியர் லோபமுத்ரா தாயார் திருமணம், லக்ஷ்மி நரசிம்மர் தேவி திருமண விழாவில் கலந்து கொண்டேன். அந்த அனுபவத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

விழா தொடங்குவதற்கு (ஆம் மிக சிறப்பான ஒரு விழாவாக நடந்தது)  10 நாட்களுக்கு முன்பே எனக்கு திரு.சுவாமிநாதன் மற்றும் அவருடைய மனைவி திருமதி. சித்ரா சுவாமிநாதன் அவர்களிடமிருந்து விழாவில் கலந்து கொள்ள, அழைப்பு வந்து விட்டது. டிசம்பர் 25 எனக்கு அலுவலகம் விடுமுறை இல்லை அதனால் எனக்கு விடுப்பு கிடைக்காது என்றும் கூறினேன். இருந்தாலும் 2 நாடகளுக்கு ஒரு முறை என்னை கூப்பிட்டு அவசியம் வர வேண்டும் என்று அன்பு கட்டளை இட்டார்கள். நான் என்னுடைய சூழ்நிலையை விளக்கியும் அவர்கள் சொன்ன ஒரே வார்த்தை அகத்தியரிடம் முறையிடுங்கள் எல்லாம் அவர் பார்த்துகொள்வார் என்றுதான். 

இதனிடையில் தாங்கள் சித்தன் அருள் வலை தளத்தில் அகத்தியர் அடியவர்கள் அனைவரும் அகத்தியர் ஆயில்ய பூசை அருகில் எங்கு நடந்தாலும் கலந்து கொண்டு, அவர் அருள் பெற வேண்டும் என்று பதிவிட்டு இருந்தீர்கள். சரிதான் இனி எல்லாம் அவர் செயல். அவர் பார்த்துக்கொள்வார் என்று வீட்டில் அகத்தியர் முன்பு தங்கள் விழாவில் கலந்து கொள்ள எந்த தடைகளும் இருக்க கூடாது என்று, ஒரு வேண்டுதலை அவரிடம் சமர்பித்தேன்.

அன்றே அலுவலகத்தில் என்னுடைய மேலாளரிடம் விடுப்பு கோரிக்கையை வைத்தேன்.எந்த தடையும் இல்லாமல் விடுமுறைக்கு ஒப்புதல் கிடைத்தது. 

அதன்பிறகு எதிர்பாராத விதமாக சனிக்கிழமை இரவு சொந்த வேலையாக சென்னை கிளம்ப வேண்டி இருந்தது. மறுபடியும் மறுநாள்
ஞாயிற்றுக்கிழமை சாயந்திரமே பெங்களூர் திரும்ப வேண்டும். மீண்டும் மறுநாள் திங்கட்கிழமை இரவு பாண்டிச்சேரி கிளம்ப வேண்டும். உடம்பு ஒத்துழைக்க வேண்டுமே என்று ஒரு சிறு கவலை ஆட்கொண்டது. மிகவும் சோர்வாக உணர்ந்ததால் சரி இந்த முறை பாண்டிச்சேரி செல்ல வேண்டாம், என்று முடிவெடுத்தேன். ஆனால் முடிவெடுப்பது நாம். முடித்து வைப்பது அகத்தியர் என்று இந்த 2 சம்பவங்கள் மூலம் எனக்கு உணர்த்தி விட்டார். 

ஞாயிற்றுக்கிழமை காலை சொந்த வேலையை முடித்து கோயம்பேடு நோக்கி பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். உடல் சோர்வில் கண் அசந்திருந்தாலும் என் மனதில் இந்த நிலையில் நாளை பாண்டிச்சேரி செல்ல முடியுமா! என்ற நினைப்புடன் அமர்ந்திருந்தேன். எதேச்சையாக ஒரு நிறுத்தத்தில் (காசி நகர் பேருந்து நிறுத்தம்) மூடிய  கண்களை மெல்ல திறந்து பார்த்தபோது, பளிச்சென்று அகத்தியர் படம்,  ஒரு பேருந்து நிறுத்ததில் ஒட்டப்பட்டிருந்தது. அகத்தியர் சூட்சும நாடிக்கான விளம்பரம்தான் அது. ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. அசந்து விட்டேன். என்னடா நாம் விட்டாலும் அவர் விட மாட்டார் போலிருக்கிறதே என்று அப்போதே தீர்மானித்து விட்டேன்.  உடல் சோர்வு பாதி சரியாகி விட்டதாக ஒரு உணர்வு. சரி என்னவோ எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று அவரை பிரார்தித்தேன். இரண்டாவதாக கோயம்பேடு பேருந்து நிறுத்ததில் இறங்கியவுடன் காலை சிற்றுண்டியை முடித்து மீதி பணத்தை வாங்கினேன். அதில் 786 என்ற எண்ணுள்ள 50 ரூபாய் நோட்டு என்னிடம் வந்தது. சரி இதுவும் அகத்தியர் அருள்தான். நம்மை எப்போதும் வழிகாட்ட, நம் கூடவே இருக்கிறார் என்று எண்ணி, அவருக்கு மானசீகமாக நன்றி தெரிவித்தேன்.

மறுநாள் திங்கட்கிழமை சீக்கிரம் அலுவலக வேலை முடித்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பி விட்டேன். சிறிது சோர்வாக உணர்ந்தாலும் அவருடைய விழாவில் கலந்து கொள்ளப் போகிறோம் என்ற எண்ணமே என்னுள் இருந்த சிறிது சோர்வையும் விரட்டி விட்டது. என்னுடைய தங்கை பூசை பொருட்கள் செலவை தாமே ஏற்பதாக சொன்னார்கள். பிறகு சிறிது பூசைப் பொருட்களை வாங்கிய பிறகு, இரவு பாண்டிச்சேரி கிளம்பினேன். கிளம்பும் முன்பு வழக்கம் போல் அகத்தியரிடம்,  பயணத்திற்கு எந்த தடையும் இருக்கக் கூடாது. உங்களுடைய பார்வை என்னை சுற்றி ஒரு கவசமாக இருந்து என்னை பாதுக்காக்கட்டும் என்று மனதார பிரார்த்தனையை சமர்பித்து விட்டு கிளம்பினேன்.  நல்ல வேளையாக அன்று பேருந்தில் முன் பதிவில் இடம் இருந்தது. வருவதற்கும் சேர்த்து முன்பதிவு செய்து கொன்டேன்.

சரியாக காலை 5.30 மணிக்கு திரு. சுவாமி நாதன் அவர்கள் இல்லம் சென்றடைந்தேன். மிகவும் மகிழ்ச்சியாக அவர்கள் மொத்த குடும்பமும் என்னை வரவேற்றது. வழக்கம்போல் அவர் இல்லமெங்கும் ஒரு தெய்வீக நறுமணம் சூழும்  லக்ஷ்மி கடாக்ஷத்தின் அருளை உணர முடிந்தது. பிறகு குளித்து விட்டு அகத்தியர் லோபமுத்திரை அபிஷேகத்தை காணத்  தயாரானேன். என்னால் ஆன சிறு உதவிகளை அவருக்கு செய்தேன். இடையில் அவர் இல்லத்தில் புதிதாக எழுந்தருளியிருக்கும் காஞ்சி  மகாப் பெரியவரையும் தரிசித்தேன்.

சரியாக 6.45 மணிக்கு அபிஷேகம் தொடங்கியது. அப்பப்பா...... அரூபமான நறுமணம் ஒருபக்கம்.......அருமையான சாம்பிரானி  புகையுடன் அதிகாலை பனிமூட்டம் கலந்த அபிஷேக மூலப்பொருட்களின் வாசனை மறுபுறம். அந்த சமயம் சூரியனின் ஆரம்ப ஒளிக்கற்றைகள் அபிஷேகத்தில்  இருக்கும் அகத்தியர்  சிலை மேல் பட்டு பொன் போல் ஜொலித்த அவர் திருமேணி ஒருபுறம்.  சொல்ல வார்த்தைகள் இல்லை அய்யா. சூர்ய பகவானே கண் குளிர அபிஷேகத்தை பார்திருப்பார் என்று தோன்றியது.  சரியாக 1 மணி நேரத்திற்கு மேலாக அகத்தியர் லோபமுத்திரை தாயார் மற்றும் இன்னும் பல தெய்வங்களுக்கும் மிகவும் அருமையாக அபிஷேகம் நடைபெற்றது.  அந்த சமயம் என்னை அகத்தியருக்கு தேன் அபிஷேகம் செய்ய சொல்லி திரு. சுவாமிநாதன் அவர்கள் கூறினார்கள். அபிஷேகம் செய்யும்போது என்னுடைய பிரார்த்தனையை, சமர்பிக்க சொன்னார்கள். சரி என்று சொல்லி நான் அகத்தியருக்கு அபிஷேகம் செய்ய ஆரம்பித்தவுடன் அவரிடம் என்ன கோரிக்கை வைப்பது என்ற நினைப்பு எதுவும் இல்லாமல், என்னை மறந்து அவருக்கு ஆனந்தமாக அபிஷேகம் செய்து வந்தவுடன் இது போதும் வேறு எதுவும் வேண்டாம் என்று அவருக்கு ஒரு நன்றியை மட்டும் தெரிவித்தேன். 

அபிஷேகம் முடிந்து ஒருபுறம் ஹோமத்திற்கான் ஏற்பாடுகள் ஆரம்பமாகின. மறுபுறம் அகத்தியர் லோபமுத்திரை தாயார் திருமண அலங்காரம் தொடங்கி இருந்தது. இதனிடையில் அடியவர்கள் பசி தீர ஒரு சிறிய காலை சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஹோமம் செய்ய வேண்டிய அந்தணர் வருவதற்கு சிறிது கால தாமதமாகும் நிலை ஏற்பபட்டதால் பக்தர்கள் அனைவருக்கும் சிவ புராணம் புத்தகம் கொடுக்கப்பட்டு  ஈசனடி போற்றி, எந்தையடி போற்றி என்று ஒரு  தெய்வீக இன்னிசை தொடங்கியது.....ஒருபக்கம் சிவ புராணம் முழங்க மறுபக்கம் அபிஷேக அகத்தியர் ராஜ அலங்காரத்துடன் மாப்பிள்ளை அகத்தியராக லோபா முத்திரை தாயார் மற்றும் லக்ஷ்மி நரசிம்மர் தேவி சமேதமாக திருமணத்திற்கு தயாராக இருக்க, தேவாதி தேவர்களும் அனைத்து சித்தர்களும் திருமண வைபவத்தில் கலந்து கொள்ள வந்து விட்டதாக ஒரு ஆனந்த உணர்வு, அந்த சமயத்தில் தோன்றியது.

சிவ புராணம் முடிவதற்கும் அந்தணர் வருவதற்கும் மிக சரியாக இருந்தது. ஹோமம் மெதுவாக தொடங்கியது. நவ தானியங்களை சேர்த்து விட்டு மந்திர உபாசனையுடன் யாகம் தொடர அக்னி கொழுந்து விட்டு எரிந்தது. யாகத்தில் புகைப்படம் எடுக்க சில படங்களில் அகத்தியர் உட்பட நிறைய தெயவங்களின் ரூபங்கள் பதிவாகி இருந்தன. அவர் அரூபமாக வந்திருக்கிறார் என்பதற்கு வேறு எதுவும் சாட்சி தேவையில்லை. படிப்படியாக ஹோமம் வளர வளர, அதன் முடிவில் பட்டு வஸ்திரம், தாம்பூலம் கனி வகைகள் சேர்த்து அக்னி தேவனுக்கு ஆஹுதி கொடுக்கப்பட்டு, ஹோமம் நிறைவு பெற்றது. ஹோமத்திற்கு இடையில் அகத்தியர் லோபமுத்ரா தாயார் மற்றும் லக்ஷ்மி நரசிம்மர் தேவி திருக்கல்யாணம் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது. அந்த சமயம் உக்ர நரசிம்மர் திருமண கோலத்தில் முகம் முழுவதும் புன்னகையுடன் தம்பதி சமேதராக ஆனந்தமாக தோன்றினார். அந்த சிரிப்பு முகம் இன்னும் என் மனதை விட்டு அகலவிலை அய்யா.

இது அகத்தியர் விழா என்பதில் சிறிதும் அய்யமில்லை. ஏனென்றால் அவ்வளவு சிறப்பாக நடைபற்றது. அனைத்து வைபவங்களும் முடிந்த பின்பு தம்பதிகளுக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது. பிறகு அடியவர்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் கல்யாண விருந்து சாப்பிட்டு முடித்த பின்பு அருட்பிரசாதத்துடன் தாம்பூலப் பை வழங்கப்பட்டது. அனைவரும் அகத்தியருடைய அருளை அன்று பெற்றிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.        

எனக்கு அன்று இரவுதான் பேருந்து என்பதால் அவர் வீட்டில் இருதேன். அனைவரும் சென்ற பின்பு அகத்தியர் லோபமுத்திரை தாயாருக்கு நன்றி சொன்னேன். மீண்டும் என்னல் ஆன சிறு உதவிகளை (பூசை பொருட்களை பிரித்து எடுத்தல்) அன்று இரவு அவர் இல்லத்தில் இரவு சிற்றுண்டியை முடித்து கிளம்பினேன். பிரியா விடை கொடுத்து திரு.ஸ்வாமிநாதன் குடுப்பத்தினர் அன்புடன் என்னை வழி அனுப்பி வைத்தார்கள்.

மறு நாள் அதிகாலை இல்லம் வந்து சேர்ந்தவுடன் அகத்தியப் பெருமான் முன்பு எனக்கு கொடுத்த அபிஷேகப் பொருள்கள் மற்றும் தாம்பூல பையை வைத்து இதைவிட வேறு என்ன பேறு வேண்டும் என்று அவருக்கு மானசீகமாக நன்றியை தெரிவித்தேன். 

இப்படிக்கு
ஜெயராமன்
பெங்களூர்

சித்தன் அருள்............... தொடரும்!

சித்தன் அருள் - 785 - அகத்தியப் பெருமானின் அருள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்று தொடங்கிய நன் நாள், என்றும் இனிமையாக, அமைதியாக, மனோபீஷ்டங்கள் நிறைவேறி, ஸ்ரீ லோபாமுத்திரா சமேத திரு அகத்தியப் பெருமானின் திருவருளும், இறைவனின் கனிவான கடைக்கண் பார்வையும், சித்தப் பெருமான்களின் ஆசியும், உங்கள் அனைவருக்கும், இனி என்றும் கிடைக்கட்டும் என வேண்டி "அகத்தியப் பெருமானின் சித்தன் அருள்" வலைப்பூவின் வாழ்த்துக்களுடன், உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

எல்லோரும் நலமாக, இன்புற்று, நிறைய தெய்வீக அனுபவங்களுடன் வாழ்க!

ஓம் ஸ்ரீ லோபா முத்திரா சமேத திரு அகத்தியர் திருவடிகள் போற்றி!

அக்னிலிங்கம்!