​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 30 November 2017

சித்தன் அருள் - 735 - அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர் - 02/11/2017 - 4


கடைசி சனிக்கிழமை, அந்த நாளுக்கான ஏற்பாடுகளை, மேற்பார்வையிட்டு வரலாம் என்று கோடகநல்லூர் சென்று அடைந்த பொழுது, உடல் மிகவும் களைத்துப் போனது. இனி மிச்சம் உள்ள விஷயம் என்பது "அந்த புண்ணிய நாளில் செய்ய வேண்டிய வேலைகள் தான்" பாக்கி இருந்தது. எப்போதும் போல சுற்று விளக்கு போட்டுவிட்டு, பெருமாள் சன்னதி முன் அமர்ந்து,

"அடியேனை மன்னித்து பொறுத்தருள வேண்டும். இதுவரை சகல ஏற்பாடுகளையும் செய்வதற்காக ஓடியதில், ரொம்பவே களைத்துப் போய் விட்டேன். இனியும் முடியும் என்று தோன்றவில்லை. ஏதேனும் ஒரு உபாயம் கூறக்கூடாதா?" என்ற கேள்வியை அவர் பாதத்தில் சமர்பித்துவிட்டு த்யானத்தில் அமர்ந்திருந்தேன்.

"உதவியை கேட்டுப்பார், கிடைக்கும்" என்று உத்தரவு வந்தது.

சற்று நேரத்தில் தியானத்தை விட்டு வெளியே வந்து, பெருமாளுக்கு நன்றியை சொல்லிவிட்டு, நடந்து வரும் பொழுது தான் அந்த எண்ணம் தாக்கியது.

"பெருமாளோ உதவியை கேட்டுப்பார், என்று கூறிவிட்டார்.  யாரிடம் உதவியை கேட்க வேண்டும் என்று கூறவில்லையே? என்ன செய்வது?" என்ற யோசனையுடன் வீடு வந்து சேர்ந்தேன்.

"நினைவூட்டல்" என்கிற தொகுப்பை தருகிற பொழுது ஞாபகம் வர, அந்த தொகுப்பின் கடைசியில் "உடல் உழைப்பால் ஏதேனும் உழவாரப்பணி கிடைத்தால், செய்யுமாறும் வேண்டிக்கொள்கிறோம்" என்று என்னையறிமல் தட்டச்சு செய்துவிட்டேன்.

உண்மையை கூறுவதென்றால், அன்று எனக்கு 1008 கைகள் முளைத்தது போல், அகத்தியர் அடியவர்களைக் கொண்டு வந்து சேர்த்தார், பெருமாளும், அகத்தியப் பெருமானும். வந்திருந்த அகத்தியர் அடியவர்களும்  அத்தனை உதவி செய்தார்கள். அந்த பெருமையை, சொல்லிக்கொண்டே போகலாம்.

பயணம் செய்த வண்டியை விட்டு கீழே இறங்கியதுமே, கோவில் கதவு சார்த்தியிருந்தாலும், ஒரு நிமிடம் அந்த வாசல் முன் நின்று வேண்டிக்கொண்டு, பிறகு, ஸ்நானம் செய்வது பற்றி யோசிக்கலாம் என்று நடக்கையில், ஒரு அகத்தியர் அடியவர் ஓடி வந்து,

"அய்யா, அகத்தியர் பூசைக்காக வந்திருக்கிறேன். அடியேன், என்ன உழவாரப்பணி செய்யவேண்டும் என்று கூறுங்கள்" என்று முதல் முறையாக ஒரு விண்ணப்பத்தை வைத்தார்.

அடியேனுக்கு ஒரே ஆச்சரியம். பயணம் செய்து வந்த களைப்பு வேறு. என்ன சொல்வதென்று தெரியவில்லை. இருப்பினும் அவர் கேள்விக்கு பதில் தர வேண்டும் என்று தோன்றியது.

"வணக்கம் அய்யா! நிறைய வேலை, அகத்தியர் அடியவர்களுக்காக காத்திருக்கிறது. எது என்று இப்பொழுது குறிப்பிட்டு கூற முடியாது. எதற்கும், குளித்து, த்யானம் செய்து தயாராக இருங்கள். நிச்சயமாக, உங்களுக்கு ஏதேனும் ஒரு உழவாரப் பணியை சொல்கிறேன்" எனக்கூறி விடைபெற்றேன்.

மனமோ, இங்கு, இன்று என்ன நடக்கிறது? அடியேனுக்கு, பெருமாளுக்கும், அகத்தியருக்கும் வேலை பார்க்கிற பாக்கியம் கிடைக்குமா?" என்கிற சந்தேகம் மெதுவாக தலை தூக்கியது.

வாசல் முன் நின்று "பெருமாளே! இது வந்துவிட்டது. எல்லாவற்றையும், இன்றைய தினம் நீங்கள்தான் மிக சிறப்பாக நடத்தி வைக்க வேண்டும். அதற்கு, உங்களின், அகத்திய பெருமானின் அருள் வேண்டும்" என வேண்டிக்கொண்டு, திரும்பி பார்க்கையில், பெருமாள், தாயார், பரிவார தேவதைகளுக்கான புதிய வஸ்திரங்களை வைத்திருந்த வீட்டுக்காரர், ஸ்நானம் பண்ண நதியை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை மடக்கி, "வஸ்திரங்களை தாருங்கள், முதலில் சிவன் கோவிலுக்கும், பின்னர் பெருமாள் கோவிலுக்கும் கொடுத்து எங்கள் வேலையை தொடங்க வேண்டும்" என வேண்டிக்கொண்டேன்.

சற்று நேரத்தில் அனைத்தும் கைக்கு வர, முதலில் காலை 7 மணி அளவில், தெருக்கோடியில் இருக்கும் சிவபெருமான், பார்வதி தேவிக்கு வஸ்திரம், அலங்கார பொருட்கள், வாசனாதி திரவியத்துடன், தக்ஷிணையும் சேர்த்து, பூசாரியிடம் கொடுத்து சார்த்த சொல்லிவிட்டு, பெருமாள் கோவில் வந்து பார்த்தால், வெளி வாசல் நடை திறந்து, உள்ளேயும் சன்னதி திறந்திருந்தது.

உடனேயே, அர்ச்சகரை சந்தித்து, அனைத்து வஸ்திரங்களையும் கொடுத்து சார்த்த சொல்லிவிட்டு, ஸ்நானம் பண்ணுவதற்காக தாமிரபரணியை நோக்கி நடந்தோம்.

தாமிரபரணி, இரு கரை தொட்டு, 5 படிகள் மேலேறி வேகமாக சென்று கொண்டிருந்தது. இத்தனை நாட்களாக எங்கு போயிருந்தாய்? என பார்ப்பவரை கேட்க வைக்கிற பாணியில் நல்ல வேகம். சில்லென்ற நீரோட்டம். நன்றாக மூழ்கி ஸ்நானம் செய்தால், எந்த களைப்பும் போய் விடும், என்ற நினைப்பு வந்தது. அது உண்மைதான் என்று பிறகு புரிந்தது.

முதலில் நதி நீரை கையில் ஏந்தி கைகால்களை சுத்தம் செய்தபின், நீரில் நின்று "குளிக்கும் முன்" சொல்ல வேண்டிய ஸ்லோகங்களை கூறியபின், நீரில் மூழ்கி எழுந்திருக்க, 48 முறை மூழ்கி எழுந்திருக்க வேண்டும் என்கிற (போன வருட உத்தரவு) எண்ணம் உதித்தது. அமைதியாக 48 முறை மூழ்கி எழுந்து, கடைசியில், சாஷ்டாங்கமாக நீருக்கடியில் நெற்றி பூமியில் பட நமஸ்காரம் செய்த பொழுது, அகத்தியப் பெருமான், லோபாமுத்திரை தாய், தாமிரபரணித் தாய் இவர்களின் பாதங்களை தியானித்து, ஸ்நானத்தை முடித்து கரையேறினேன்.

நெற்றிக்கு திருநீறு பூசி, ஈர வஸ்திரத்துடன் காத்திருக்க, அகத்தியர் அடியவர்கள் ஒரு சிலர் சேர்ந்து, தாமிரபரணி தாய்க்கு தாம்பூலம் கொடுப்பதற்காக, விளக்கு, வெற்றிலை, பழம், பாக்கு, சிறு பச்சை வஸ்த்திரம், வளையல், மஞ்சள், குங்குமம்போ, பூ போன்றவை கொண்டுவந்தனர். ஈர வஸ்த்திரத்துடன் நின்றிருந்ததால், நதியில் இறங்கி போய் பூசை செய்து தாமிரபரணி தாய்க்கு தாம்பூலத்தை கொடுத்துவிட்டு, உணர்வு நிலைக்கு வர, தண்ணீர், கழுத்துக்கு சற்று மேலே வரை சென்று கொண்டிருந்தது. இத்தனை தைரியமாக, தனியாக நதியின் ஆழமான இடம் வரை எப்படி வந்தேன் என்று ஆச்சரியமாக இருந்தது.

சற்று தூரத்தில், அந்த தாம்பூலத்தட்டு, தாமிரபரணி நதியில் அசைந்து செல்வதை, சில நொடிகள், நின்று ரசித்துவிட்டு, மெதுவாக கரை ஏறிய பொழுது, இனி என்னென்ன வேலைகள், பாக்கி இருக்கிறது? என்ற சிந்தனை வந்தது.

கோவிலுக்குள், அகத்தியர் அடியவர்களின் கூட்டம். வந்தனம் கூறியவர்களுக்கு, பணிவான வணக்கத்தை கூறிவிட்டு பெருமாள் சன்னதி முன் நின்று பார்த்தால், பெருமாள், பட்டு வஸ்திரம் அணிந்து நின்றிருந்தார்.

பெருமாளுக்கு வாங்கிய "சங்கு, சக்கிர, திருமண்" போட்ட வேஷ்டியை, அவருக்கு நேர் எதிரே கைகூப்பி நிற்கும் "கருடாழ்வார்" விமர்சையாக அணிந்து கொண்டு நின்றிருந்தார்.

"சரி! இங்கு என்னவோ பெருமாள் விளையாடியிருக்கிறார். அதை பின்னர் கேட்டு தெரிந்து கொள்வோம்" என நினைத்து கேள்வியை விலக்கி வைத்து விட்டு,

அர்ச்சகரிடம் "பெருமாள் திருமஞ்சனத்தை எப்போதும் போல கருடாழ்வார் மண்டபத்தில் வைத்துக் கொள்வோம்" என்று கூறினேன்.

"ஆமாம். அப்படித்தான் நடக்க வேண்டும். ஆனால் பெருமாளின், தேசிகர் பெருமானின், அபிஷேக நேர பீடத்தை, வெளியே கொண்டு போய் வைக்க வேண்டும். அதற்கு ஏற்பாடு பண்ணுங்கள்" என்றார் அர்ச்சகர்.

"சரிதான்! அகத்தியர் அடியவர்களிடம், உதவி கேட்க வேண்டிய நேரம் தொடங்கிவிட்டது" என தீர்மானித்து, திரும்பி பார்க்க, அடியனுக்கு பின்னால் நின்றிருந்த எட்டு அடியவர்கள் ஒரே குரலில், "எதை எடுத்து எங்கு போடவேண்டும் என்று கூறுங்கள், நாங்கள் செய்கிறோம்" என முன் வந்தனர்.

கூட வந்திருந்த ஒரு நண்பரிடம் சைகை காட்டி "நீ இதை பார்த்துக்கொள்" என்று கூறாமல் கூறிவிட்டு, அர்ச்சகரிடம் என் வேண்டுதலை வைத்தேன்.

"இந்த முறை, தாமிரபரணி நதியிலிருந்து நீர் சுமந்து வந்து, பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்துவிடலாம்" என்றேன்.

அவரும் அதற்கு சம்மதித்து, எத்தனை குடங்கள் வேண்டும்?  என்றார்.

இரண்டு பெரிய அண்டா நிறைய நீர் நிரப்ப ஐந்து குடங்கள் வேண்டுமென்றேன்.

ஒரு நொடியில், இரண்டு பெரிய அண்டாவும், ஐந்து குடங்களும் வந்து சேர்ந்தது. அதை கருடாழ்வார் மண்டபத்தில் அதற்கான இடத்தில் வைத்துவிட்டு, குடங்களை கொடுப்பதற்கு முன் சற்று நேரம் யோசித்தேன்.

"இங்கு வந்திருக்கும், அகத்தியர் அடியவர்கள் நிறைய பேருக்கு, தாமிரபரணி நதியிலிருந்து, நீர் சுமந்து வந்து, பெருமாள் அபிஷேகத்துக்கு உதவி செய்த புண்ணியம் கிடைக்க வேண்டும். அதற்கு, இது தான் ஒருவழி" என்று தீர்மானித்து,

முதலில் ஐந்து பேரை தேர்வு செய்து குடத்தை கையில் கொடுத்த பின்,

"நதியில் இறங்கி குடத்தை சுத்தம் செய்து, பெருமாள் அபிஷேகத்துக்கு நீர் கொண்டு வந்து, அந்த அண்டாவில் ஊற்றுங்கள். அது நிறைய வேண்டும். இருபாலாருக்கும் அந்த உரிமை உண்டு. ஆனால், ஒருவர் ஒரு முறைதான் கொண்டுவந்து விடவேண்டும். மற்ற அடியவர்களுக்கும் இந்த அரிய வாய்ப்பு கொடுக்கும் விதமாக, நீர் கொண்டு வந்து விட்டவரே இன்னொருவரிடம் குடத்தை கைமாற்றி கொடுக்க வேண்டும். நதியில் இறங்கும் பொழுது, மிகுந்த கவனமும் தேவை." என்று கூறி ஐந்து அடியவர்களையும் அனுப்பி வைத்தேன்.

அடியேன் சொன்னதை கேட்டுக்கொண்டிருந்த அகத்தியர் அடியவர்கள் சிலர், இரண்டாவது சுற்று குடத்தை சுமப்பதற்காக தயாராகிவிட்டனர்.

சித்தன் அருள்............... தொடரும்!

Thursday 23 November 2017

சித்தன் அருள் - 734 - அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர் - 02/11/2017 - 3


"யாம் வருவோம்" என அகத்தியர் கோவிலில் உத்தரவு வந்தபின், உண்மையிலேயே, ஒரு மிகப் பெரிய பலம் வந்துவிட்டது, என்பதே உண்மை. இத்தனை கருணையுள்ள தகப்பன் இருக்க, எல்லாம் அதனதன் இடத்தில் சென்று அமரும் என்று தோன்றியது. இருப்பினும், எது வரவேண்டுமோ அது அங்கிருக்கும். அல்லாதது அவர் அருள் இல்லாதது என்றும் தோன்றியது. ஏன் என்று தெரியவில்லை.

அகத்தியருக்கு சிரம் தாழ்ந்த நன்றியை கூறி, அவர் உத்தரவுடன் வீடு வந்து சேர்ந்தேன்.

"அந்த நாளுக்கு" முன் ஒரு சனிக்கிழமை விடுமுறை வந்ததால், விட்டுப் போன விஷயங்களை நிச்சயம் செய்வதற்காக, மறுபடியும் திருநெல்வேலி, கோடகநல்லூர் சென்றேன். கோவில் நிர்வாகிகள் முதல், ஊர்காரர்கள் ஒவ்வொருவராக 2ம் தியாதிக்கான பூசைகளை பற்றி கேட்டனர்.

எல்லோருக்கும் பதில் சொல்கிற பொழுது, ஒருவர் கேட்டார்.

"காலையிலே வருகிறவர்களுக்கு, ஏதேனும் சாப்பிட வேண்டும் என்றால், என்ன செய்வீர்கள்? இங்குதான் ஒரு உணவு விடுதி கூட கிடையாதே?" என்றார்.

"ஆமாம்! அதை பற்றி அடியேன் யோசிக்கவே இல்லையே! உங்களால், இங்கு தெரிந்தவர்கள் யாராவது இருந்தால், ஒரு சிறு வியாபாரத்திற்கு ஏற்பாடு செய்ய முடியுமா?" என்றேன்.

அவரும் "நடுக்கல்லூரில் ஒரு சைவ உணவு விடுதி உள்ளது. அவரிடம் பேசி பார்க்கிறேன். ஏற்பாடு செய்கிறேன்" என்று கூறினார்.

"சரி! அப்படியே ஆகட்டும்" என்று கூறி சென்றவர், உணவு விடுதி உரிமையாளர் ஒத்துக்கொண்டதை பின்னர் தொலை பேசி மூலம் என்னிடம் கூறினார்.

இந்த விஷயத்தில்தான் எனக்கு பெருமாளும், அகத்தியரும் சொல்லாமல், சொல்லி சூடு போட்டனர்.

இந்த வருடம் தனி ஒருவனாக ஓடத்தான் பெருமாளின் உத்தரவு. அடியேனோ, இன்னொருவரிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்ததில் அவர்களுக்கு விருப்பம் இல்லை போலும். அன்றைய தினம், ஒத்துக்கொண்டவர் வராமல் போக, அடியேனும் பிற விஷயங்களில் கவனத்துடன் இருந்து, காலை சிற்றுண்டியை பிறருக்கு ஏற்பாடு செய்தது மறந்து போக, சிறுவர்கள் முதல், பெரியவர்கள் வரை அகத்தியர் பூசைக்கு வந்து, பசியுடன்  தவித்ததை கண்டு அரண்டு போய்விட்டேன். இறைவன், அகத்தியர் மீது சத்தியம் செய்து சொல்கிறேன், இது அடியேனுடைய தவறு. அந்தநாளில் வந்திருந்து தவித்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அத்தனை விஷயங்களை கூறி அகத்தியர் அடியவர்களை அழைத்த அடியேனுக்கு, அங்கு உணவு விடுதி கிடையாது என்று சொல்ல மறந்து போனது உண்மை. இனி வரும் வருடங்களில் இந்த மாதிரியான தவறு நடக்க கூடாது என இறைவனிடம், அகத்தியரிடம் வேண்டிக் கொள்கிறேன்.

ஏற்பாடுகளில் மிச்சமிருந்தது பூமாலை, பூசைக்கான சாதனங்கள். திருநெல்வேலியில் வசிக்கும் ஒரு நண்பரின் துணையுடன், அடியேனே நேரடியாக பார்த்துப் பார்த்து, ஏற்பாடு செய்தேன். அனைத்து ஏற்பாடுகளும் செய்தாகிவிட்டது.

அந்த நாளுக்காக காத்திருந்தேன்.

நவம்பர் 1ம் தியதி இரவு 10.30க்குள் கிளம்புவதாக தீர்மானம். கூட வருகிற நண்பர்கள் வந்து சேர்ந்த பொழுது 11.30 ஆகிவிட்டது. எங்கள் ஊரில் இருக்கும் பிரபலமான விநாயகர் ஆலயத்தில் அவரை வணங்கி, கிளம்பினோம்.

திடீர் என ஒரு எண்ணம்.

"வண்டியை பூக்கடையில் நிறுத்து. அகத்தியப் பெருமானுக்கும், லோபாமுத்திரை தாய்க்கும் இரு மாலை வாங்கி கோவில் வாசல் கதவில் மாட்டிவிட்டு, வணங்கி செல்வோம்" என்றேன்.

பூக்கடையில் மிக அழகான 4 அடி உயர மாலை கிடைத்தது.

அகத்தியப் பெருமான் கோவில் வாசல் கதவில் மாட்டி விட்டு, பிரார்த்தித்து, எங்கள் பயணத்தை தொடர்ந்து, திருநெல்வேலி சென்றடைந்தோம்.

நெல்லையப்பர் கோவில் அருகில், மார்க்கெட்டில், பெருமாளுக்கான பூமாலையை வாங்கி கொண்டு, கோடகநல்லூர் கோவில் வாசலை அடைந்தவுடன், ஆச்சரியப்பட்டு போனேன்.

நாங்கள் சென்ற பொழுது காலை மணி 6. எங்களுக்கு முன்னரே வந்திருந்த அகத்தியர் அடியவர்கள் ஒரு குழுவாக, கோவில் திண்ணையில் அமர்ந்திருந்தனர். அந்தநாள், வந்தது வார நடுவில் என்பதால், அதிகம் அகத்தியர் அடியவர்கள் வர வாய்ப்பில்லை, என்கிற அடியேனின் எண்ணத்தை, "நீ என்னடா, நினைப்பது!" என்கிற படி அகத்தியர் அமைத்துக் கொடுத்தார்.

திரும்பி தாமிரபரணி நதியை பார்த்தேன். இருகரை தொட்டு விரிவாக, வேகமாக சென்று கொண்டிருந்தாள். இது அடுத்த ஆச்சரியம்.

"இன்று என்ன? அகத்தியரும், பெருமாளும், நிறைய ஆச்சரியங்களை தருவார்கள் போல இருக்கிறதே" என்று நினைத்தபடி, பெருமாளை, அகத்தியரை, தாமிரபரணி தாயை மனதில் தியானித்து கோடகநல்லூர் மண்ணில் கால் பதித்தேன், என்னென்ன நடக்கப் போகிறதென்று தெரியாமலே!

சித்தன் அருள்............... தொடரும்!

  

Monday 13 November 2017

சித்தன் அருள் - 733 - அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர் - 02/11/2017 - 2


பெருமாள் "எனக்காக நீ மட்டும் தான் ஓடப்போகிறாய்" என்று சொன்ன பொழுது "இந்த வேலையாவது கொடுத்தாரே" என்று சந்தோஷம் அடைந்தாலும், ஓடத்தொடங்கிய பின்தான் ஏற்பாடுகளை செய்வதின் சிரமம் புரிந்தது. அவர் சொன்னது போலவே, என் நண்பர்கள் பட்டாளம் காணாமல் போய்விட்டது, அல்லது ஏதேனும் ஒரு தகவல் கொடுத்து விசாரிக்கச் சொன்னால், பதிலே வரவில்லை. அனைவரும் தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய கவனம், நேரம் செலுத்த வேண்டி வந்துவிட்டது.

"சரிதான்! பெருமாள் நம்மை போட்டு பார்க்காத் தீர்மானித்துவிட்டார். இனி யாரையும் நம்பி பிரயோசனம் இல்லை" என்று தீர்மானித்து, ஒரு பட்டியலை தீர்மானித்தேன். அந்தநாளுக்குத் தேவையானதை, ஆறு பகுதிகளாக பிரித்தேன்.

முதலில் கோவில் நிர்வாகம், அர்ச்சகரிடம் சில விஷயங்களை பேசி ஒப்புதல் வாங்கினேன்.

இரண்டாவதாக, அன்றைய தினம் பிரசாத விநியோகம் செய்வதற்காக ஒரு பரிஜாதகரை (சமையல் செய்து தயார் பண்ணுபவரை) தொடர்பு கொண்டு, அன்றைய தினம் அவர் கோவிலுக்கு வந்து செய்து தருவதற்கு ஏற்பாடு செய்தேன்.

மூன்றாவதாக அனைத்து தெய்வ மூர்த்தங்களுக்கும் வஸ்திரம்.

நான்காவதாக, அன்றைய தினம் பெருமாளுக்கும், தாயாருக்கும், கருடாழ்வாருக்கும் பூ மாலை.

ஐந்தாவதாக ஷேத்ரபாலகரான சிவபெருமானுக்கு வஸ்திரம், பூமாலை, பூஜை சாதனங்கள்.

ஆறாவதாக தாமிரபரணி தேவிக்கு பூசை செய்து சீர் கொடுப்பது.

கடைசியாக ஒன்றை அடியேன் தீர்மானித்தேன்.

"அகத்தியப் பெருமான், லோபாமுத்திரை தம்பதிகளை அன்றைய தினம் கோடகநல்லூர் வந்திருந்து அபிஷேக பூசையை சிறப்பாக நடத்திக் கொடுத்து, அனைவரையும் அருளச் செய்ய வேண்டும்" என அழைப்பதை தவிர, எந்த ஒருவரையும், தனிப்பட்ட முறையில், அங்கு வாருங்கள் என அழைக்கப்போவதில்லை" என தீர்மானித்தேன். யாருக்கு விதி இருக்கிறதோ அவர்களை பெருமாளும், அகத்தியயரும் வரவழைப்பார்கள். பிறருக்கு அவர்கள் இருக்கும் இடத்திலேயே அருள் சென்று சேரட்டும் என்று வேண்டிக்கொண்டேன்.

நான்காவது புரட்டாசி சனிக்கிழமைக்கு சென்ற பொழுது, ஓடி ஓடி, உடல் தளர்ந்துவிட்டது. அன்று, பெருமாளை பார்த்த பொழுது எதுவுமே, கேட்கத் தோன்றவில்லை. அமைதியாக, தனிமையில், த்யானத்தில் அவர் முன் அமர்ந்திருந்தேன். அர்ச்சகர், அபிஷேகம் நடந்த மண்டபத்தில் கருட வாகனத்தில் பெருமாளின் உற்சவ மூர்த்தியை வைத்து அலங்கரித்துக் கொண்டிருந்தார்.

"எல்லா ஏற்பாட்டையும் பார்த்து பார்த்து செய்த நீ, என் அபிமான அகத்தியனை அழைக்க மறந்துவிட்டாயே. பாதகமில்லை. வரும் வியாழன் அன்று அவன் குடியிருக்கும் கோயில் சென்று பெருமாளே அழைக்கிறார் என்று வரச் சொல். வருவார்!" என்று நான் மறந்து போனதை பெருமாள் அன்று எடுத்துக் கொடுத்தார்.

இரு வியாழனன்று அகத்தியர் தரிசனத்துக்கு சென்றிருக்கிறேன். அதெப்படி, அவரிடம் வேண்டிக்கொள்ள, அழைக்க மறந்து போனது? கவனக்குறைவோ, அல்லது ஞாபகம் இல்லாமல் போனதோ, என்று என்னை நானே நொந்து கொண்டேன். செய்துவிட்ட தவறுக்கு பெருமாளிடம் மன்னிப்பு கேட்டு, அந்த வாரம் வியாழக்கிழமை, அன்று எதுவாகினும் சரி, அகத்திய பெருமானிடம் சென்று பெருமாளின் உத்தரவை சமர்ப்பிக்க வேண்டியது தான், என்று தீர்மானித்தேன்.

மனிதனாக நம் இறைவனுக்கு என்னதான் செய்தாலும், குருவருள் இருந்தால் தான் நிறைவு பெரும். அதுவும் அகத்தியர் குருவாக நம்முடன் இருந்தால், நம்மை வழி நடித்திக் கொண்டிருந்தால், நாம் எதை பற்றியும் யோசிக்க வேண்டியதில்லை.

அந்த வாரம் வியாழக்கிழமை அகத்தியர் கோவிலுக்கு சென்று அவரிடம் விண்ணப்பித்தேன். செய்த தவறு உள்ளேயே இருந்து உறுத்திக் கொண்டிருந்ததால், மிக கவனமாக வார்த்தைகளை சேகரித்து, அவர் முன் நின்று மனதால் சமர்ப்பித்தேன்.

"ஐயனே! அடியேன் செய்த தவறை மன்னித்து பொருத்தருளுக. பெருமாள் விரட்டிய விரட்டில், உடலால் சோர்ந்து போய்விட்டேன். போனமுறை சனிக்கிழமை அன்று கோடகநல்லூரில், பெருமாள் உத்தரவிட்டார். உங்கள் அருகாமை வேண்டுமாம். உங்களை அழைக்கச் சொன்னார். நீங்கள் வந்திருந்து அன்றைய அபிஷேக பூசைகளை நடத்திக் கொடுக்க வேண்டும். உங்கள் குழந்தைகள் அனைவரையும் வாழ்த்தி, ஆசிர்வதித்து, அவர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி கொடுங்கள்" என விண்ணப்பத்தை சமர்ப்பித்து விட்டு அமைதியாக நின்றேன்.

சற்று நேர அமைதி. ஒரு வினாடிக்குள், அந்த அமைதியை விலக்கிக்கொண்டு, அகத்தியப் பெருமானின் சன்னதிக்குள் இருந்து புறப்பட்ட காற்று ஒன்று, படியிறங்கி அடியேனை தழுவி சென்றது. நல்ல நறுமணம். என்னவென்று கண்டுபிடிக்க முடியாத மணம்.

கூடவே "யாம் வருவோம்" என்ற வார்த்தைகள், என் வலது காதில் சன்னமாக ஒலித்தது.

நடந்ததை என்னாலேயே நம்ப முடியவில்லை. உடல் சிலிர்த்து, உறைந்து நின்றேன்.

சித்தன் அருள்........... தொடரும்!

Monday 6 November 2017

சித்தன் அருள் - 732 - அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர் - 02/11/2017 - 1


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அந்தநாள்>>இந்த வருடம், கோடகநல்லூரில் 02/11/2017 அன்று மிகச்சிறப்பாக நடந்தேறியது என்பதே உண்மை. இன்னும் அன்று நடந்த நிகழ்ச்சிகளிலிருந்து வந்து சேர்ந்த திகைப்பிலிருந்து அடியேன் மீளவில்லை என்பதும் உண்மை. அன்றைய நிகழ்ச்சிகளை பற்றி கூறவேண்டுமென்றால், இரண்டு மாதங்கள் பின்னே சென்று அவ்வப்போது நடந்த சம்பவங்களை விவரித்தாலே நிகழ்ச்சிகளை தொடர்புபடுத்துவது எளிதாக இருக்கும்.

ஓதியப்பரின் பிறந்தநாள் விசேஷத்துக்குப்பின் வருகிற அடுத்த, அதுவும் இந்த வருட கடைசி புண்ணிய நாள் என்கிற எண்ணம் என்னுள் வலுத்தது. பெருமாளின், அகத்தியரின் அருள்/ஆசிர்வாதம் இன்றி எதுவும் சாத்தியமில்லை என்கிற எண்ணமும் உதித்தது.

அதற்கேற்றார் போல், புரட்டாசி மாதம் வந்தது. அடியேனும் கோடகநல்லூர் பச்சை வண்ணப் பெருமாளிடம் ஒரு பிரார்த்தனையை வைத்தேன்.

"இந்த வருட நான்கு புரட்டாசி சனிக்கிழமையும், தங்களை வந்து தரிசித்து, தாங்கள் கோவிலில், பிரகாரத்தில் சுற்று விளக்கு போடவேண்டும். உங்களுடன் வீதியுலா போகும் போது கூட வரவேண்டும். அதற்கான வசதியையும், உடலுக்கான சக்தியையும், சூழ்நிலையையும் ஏற்படுத்தி தரவேண்டும். அருள வேண்டும்" என்று வேண்டிக்கொண்டேன்.

முதல் சனிக்கிழமை வந்தது. அடியேனும் மிகுந்த ஆவலுடன் கோடகநல்லூர் சென்றேன், "பெருமாள் ஏதேனும் உத்தரவு தரமாட்டாரா" என்ற எதிர் பார்ப்பில். தாமிரபரணி நதியை பார்த்தால், நீரே இல்லாமல், ஒடுங்கி சென்று கொண்டிருந்தது.

"ஹ்ம்ம். நேரம் வரும் போது உனதருளும் வேண்டும். இருகரை தொட்டு விரிவாக சென்றால் தான் அந்த புனித நாளில் அனைவரும் ஆனந்தமாக உன்னில் ஸ்நானம் பண்ண முடியும்" என்று வேண்டிக்கொண்டு பெருமாள் தரிசனத்துக்கு சென்றேன்.

பெருமாள் முதல் புரட்டாசி சனிக்கிழமையின் கருடசேவை அலங்காரத்தில் அமர்க்களமாக இருந்தார். உள்ளே சென்று அர்ச்சகரிடம் பூசைக்கான சாமான்களை கொடுத்து, நான்கு மஞ்சள் பொடி பொட்டலத்தையும் கொடுத்து,

"பெருமாள் பூசைக்கு வைத்துக் கொள்ளுங்கள். மஞ்சளை நீர் விட்டு குழைத்து பெருமாள் வலது கரத்தில், மார்பில், பாதத்தில், தாயார் இருவரின் கரங்களிலும் சார்த்தி பிரசாதமாக தாருங்கள்" என்று விண்ணப்பித்து பெருமாளை நோக்கி "உமக்கு சுற்று விளக்கு போட இது வந்திருக்கிறது. எல்லாம் நல்லபடியாக நடந்தேற பிரார்த்திக்கிறேன்" என்று வேண்டிக்கொண்டு, விளக்கு போட தேவையான சாமான்களுடன் பிரகாரத்துக்கு வந்தேன்.

முதல் விளக்கு கருடாழ்வாருக்கு. இரண்டாவது அவருக்கு பக்கத்தில் தூணில் மறைந்திருக்கும் ஆஞ்சநேயருக்கு. பின் பிரகாரத்தில் இருக்கும் கல் விளக்குகளை ஒவ்வொன்றாக சுத்தம் பண்ணி, விளக்கு போடத்தொடங்கினேன். இதற்கு முன்னரே, விளக்கு போட்ட அனுபவம் இருந்ததால், எப்படியாயினும் தனி ஒருவனாக இருந்து விளக்கு போட, அடியேனுக்கு ஒரு மணி நேரம் ஆகும்.

அன்றைய தினம் அடியேனை, பெருமாள்  தனியாக விளக்கு போட விடுவதில்லை என்று தீர்மானித்து விட்டார் போல. எங்கிருந்தோ ஓடி விளையாடிய சிறு குழந்தைகள் பட்டாளம் பிரகாரத்தில் ஓடி வந்து என் அருகில் நின்று " என்ன சாமி, விளக்கு போடுகிறீர்களா? நாங்களும் உதவி பண்ணலாமா" என்று வினவினார்.

அடியேனும் சிரித்துக் கொண்டே "அதெற்கென்ன! உதவி பண்ணுங்கள். ஒவ்வொருவர், ஒவ்வொரு பொருளை எடுத்துக் கொண்டு வாருங்கள். நான் கேட்க கேட்க தந்துகொண்டே இருக்க வேண்டும்" என்றிட, அனைத்து குழந்தைகளும் ஒவ்வொரு பொருளை சுமந்துவர, 30 நிமிடத்தில் விளக்கு போட்டு முடித்தேன். நிதானமாக பெருமாள் சன்னதிக்கு வந்து, "விளக்கு போட்டாயிற்று! ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறி த்யானத்தில் அமர்ந்தேன்.

மனம் ஒன்று பட்டு, மிக மிக லேசானத்தை உணர முடிந்தது. அனைத்து சப்தங்களும் அடங்கியது. எத்தனை நேரம் அப்படிப்பட்ட நிலையில் இருந்தேன் என்று தெரியவில்லை.

அமைதியை கலைத்துக் கொண்டு பெருமாளின் உத்தரவு வந்தது. அடியேனுக்கு மிகத்தெளிவாக கேட்டது.

"இந்த வருடம், அந்தநாளில் தேவையான ஏற்பாடுகளை எனக்காக செய்ய, நீ ஒருவன் தான் தனியாக ஓடப்போகிறாய்" என்று கூறி ஆசிர்வதித்து, புன்னகைத்தபடி நின்றார்.

மிகத்தெளிவாக கேட்ட அந்த உத்தரவை மனதுள் வாங்கி மறைத்து வைத்துக் கொண்டு, ஒரு விண்ணப்பத்தை அவரிடம் சமர்ப்பித்தேன்.

"அடியேனின் மிகுந்த பாக்கியம், தாங்கள் அருளியது. இருப்பினும், ஒரு வேண்டுதல். மனம், உடல் இரண்டுக்கும் தேவையான சக்தியையும், சரியான சூழ்நிலையையும் தாங்கள் அருள வேண்டும். இது மட்டும் உங்கள் அருளால் இருந்தால், அடியேன் ஓடத்தயார்" என்றேன்.

"அப்படியே ஆகட்டும்" என்ற அவரின் ஆசிர்வாதத்துடன், வெளியே வந்து கோவில் திண்ணையில் அமர்ந்து யோசிக்கலானேன்.

"அதெப்படி இத்தனை தெளிவாக "நீ மட்டும்" என்று கூறுகிறார். கூட இருக்கிற நண்பர்களுக்கு தெரிய வந்தால், நம்மை தொலைத்து விடுவார்களே! பெருமாள், "பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டி விடுகிறாரோ? எதற்கும் பொறுமையை கடை பிடித்து, விஷயத்தை வெளியே கசிய விடாமல், அமைதியாக வேடிக்கை பார்ப்போம்" என்று தீர்மானித்தேன். நட்புவட்டாரத்தில் யாரிடமும், இதை பற்றி மூச்சு விடவில்லை. அந்த வாரம் கருடசேவைக்கு அவருடன் நடந்து வீதியுலா போய்வந்து, அவர் அருள் பிரசாதமான மஞ்சள் பொடியை இரவு இரண்டு மணிக்கு யாருக்கும் தெரியாமல் பெற்றுக் கொண்டு, யோசனையுடன் வீடு வந்து சேர்ந்தேன்.

வரும் வழியில்தான் ஞாபகம் வர "அடடா! பெருமாள் இந்த ஊருக்கு வந்த பொழுது முதல் முறையாக கால் மடக்கி அமர்ந்த இடத்துக்கு, விளக்கு போட மறந்து போனதே! சே! அடுத்த முறையேனும் அந்த பாக்கியத்தை அருளும் பெருமாளே" என வேண்டிக்கொண்டு, இனி எந்த காரணம் கொண்டும் விளக்கு போடும்பொழுது அந்த இடத்தை மறக்கக்கூடாது" என்று தீர்மானித்தேன்.

சித்தன் அருள்............... தொடரும்!

Friday 3 November 2017

சித்தன் அருள் - 731 - அந்தநாள் > இந்த வருடம் (2017) - கோடகநல்லூர் - ஒரு சில புகைப்படங்கள்!

அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!

02/11/2017 (வியாழக்கிழமை) அன்று காலை 10.30 சுபமுகூர்த்தத்தில், ஸ்ரீதேவி பூதேவி சமேத பச்சைவண்ணப் பெருமாள், தேசிகர் ஸ்வாமிகள் அவர்களுக்கும், கோடகநல்லூர் கோவிலில், அகத்தியர் அருளால் திருமஞ்சன, அபிஷேக ஆராதனைகள் தொடங்கி, மிக மிக சிறப்பாக, அகத்தியர் அடியவர்களின் ஏற்பாட்டில் நடந்தேறியது. அங்கு எடுத்த ஒரு சில புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன். எல்லோரும் பெருமாள், தாயார், கருடர், தேசிகர், அகத்தியர் அருள் பெற்று நலமாக வாழ வேண்டும். "இனி நல்லது மட்டும் நடக்கட்டும்" என பிரார்த்தித்துக் கொள்ளப்பட்டது.


கருடாழ்வார் அலங்காரத்தில்


பெருமாளும், தாயாரும் (உற்சவ மூர்த்திகள்) அபிஷேக பூஜைக்கு முன்


கலச பூஜை


அபிஷேகம்/திருமஞ்சனம்


அபிஷேகத்துக்குப் பின் - பெருமாளும் தாயாரும் - அலங்காரத்தில்


அபிஷேகத்துக்குப் பின் - பெருமாளும் தாயாரும் - அலங்காரத்தில்


தேசிகர் - அபிஷேகத்துக்குப் பின் அலங்காரத்தில்


தீபாராதனை 


முகம் மட்டும் வெளியே தெரிகிற அளவுக்கு பூவுக்குள் மறைந்திருக்கும் பெருமாளும் தாயாரும்


அகத்தியப் பெருமானின் அடியவர்கள்

அகத்தியப் பெருமானின் அடியவர்கள்

இந்த நல்ல நாளில் நடந்தேறிய நிகழ்ச்சிகளை, தொகுப்பாக விரைவில் சமர்ப்பிக்கிறேன்.

சித்தன் அருள் .................... தொடரும்!