​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 21 June 2018

சித்தன் அருள் - 760 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!


தலைகீழ் லிங்கத்தை பற்றி கூறும் முன் ஒரு சில விஷயங்களை தெரிவிக்க விரும்புகிறேன். இங்கு நடந்த கலந்துரையாடலை நீ வெளியிடும்பொழுது, வாசிக்கிற அனைவரும், இனி கூறப்போகிற விஷயத்தை அவர்கள் வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும். இரண்டு வருடமாக, தூது அனுப்பிய பின்தான் உனக்கு சந்திக்கவே அனுமதியளித்தோம். முதலில், விரிவாக எதையும் கூற வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தோம். இருப்பினும், இந்த விஷயங்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்கிற உன் நல்ல எண்ணத்துக்கு மதிப்பளித்து, இத்தனை விரிவாக கூறினோம். சரி விஷயத்துக்கு வருவோம்.

சித்த மார்கத்தை தேர்ந்தெடுத்தவர்கள் அனைவரையும் "சித்த வித்யார்த்திகள்" எனத்தான் அழைப்பார்கள். இத்தனை தகவலை உன்னுடன் பகிர்ந்து கொண்டாலும், இன்னமும், நானும் ஒரு "வித்யார்த்திதான்". அப்படிப்பட்ட எண்ணம்தான் உயர்வை தரும். சாதாரண மனித வாழ்விலிருந்து, விலகி நின்று, சித்த மார்க்கத்தின் பாதையில், பயிற்சி செய்து, எண்ணங்களை தூய்மையாக்கி, ஒரு புள்ளியில் நின்று, தவத்தில் இருப்பவர்களை, பிறரின் எண்ண அலைகள் நிறையவே பாதிக்கும். அவர்கள் தவத்திற்கு, இடையூறாக இருக்கும். எல்லா மனிதர்களும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட கர்மாவில், எப்பொழுதேனும் ஒரு பெரியவரை சந்திக்க நேரலாம். அப்படி சந்தித்தபின், அவருடன் கலந்துரையாடியது, எண்ணங்களை பகிர்ந்து கொண்டது, நிறையவே மனதுக்கு இதமாக இருக்கும். தன்னையே மறந்து விடுவார்கள். பின்னர், அவரிடமிருந்து விடை பெற்று தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு வந்த பின், கிடைத்த வெளிச்சத்தை/ஞானத்தை தங்கள் வாழ்வில் நடைமுறைப்படுத்தி முன்னேற முயற்சிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, சொல்லித்தந்தவரையே, நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. அப்படிப்பட்ட நினைப்பு, அவர்கள் தவத்துக்கு இடையூறாக இருக்கும். அவர்கள் செல்கிற சித்த மார்க்க வழியில் தடங்கலாக இருக்கும், அவர்களை பின்னுக்கு இழுக்கும். இந்த ஒரு காரணத்தினால்தான், சித்த மார்கத்தை ஏற்றுக்கொண்டவர்கள், எதுவும் பேசாமல், எல்லோரையும் விட்டு விலகியே இருக்கிறார்கள்.

இரண்டாவதாக, சித்த மார்க்கம் என்பது, பிற உயிர்களுக்கு துன்பம் விளைவிக்கக் கூடிய செயல்களை அறவே விலக்குகிற ஒரு வழி. பிற உயிர்களுக்கு/எந்த ஜீவனுக்கும் ஊறு விளைவிக்கக் கூடிய மனநிலை உடையவர்கள் யாரும், தாங்களாக நிரந்தரமாக திருந்தும் முன், எட்டிக் கூட பார்க்காதீர்கள். உதாரணமாக, அசைவ உணவு உண்பவர்களை கூறலாம். குருவின் சாபத்துக்கு, ஏதேனும் ஒரு ஜென்மத்தில் ஒரு குருவுக்கு பணிவிடை செய்து பரிகாரம் தேடிக்கொள்ளலாம். சித்தர்கள் சாபத்துக்கு, ஒரு பொழுதும், எத்தனை ஜென்மம் எடுத்தாலும், விமோசனம் கிடையாது. மிகுந்த ஆபத்தை விளைவிக்கக் கூடியது. குருவின் சாபத்தை இறைவன் ஜாதகம் வழி காட்டிக் கொடுத்துவிடுவான். சித்தர்கள் சாபத்தை மறைத்துவிடுவான். இறைவனுக்கு தெரியும் இருந்தும், இன்னொரு சித்தனால்தான் அதை கண்டு பிடிக்க முடியும். ஒருவழியிலும் கண்டு பிடிக்க முடியாத அப்படிப்பட்ட சாபத்தை, சாதாரண மனிதன் ஏன் பெறவேண்டும்? குருவை குளிரவைத்து பரிகாரம் தேடிக்கொள்ளலாம், குரு சாபம் விலகிவிடும். பற்று இல்லாத சித்தனை எப்படி குளிர வைக்க முடியும்? என்று விடுதலை கிடைக்கும்?

மூன்றாவதாக, சித்தர்கள், வாமாசாரத்தை (அதர்வண வேதத்தை) மருத்துவத்துக்காக மட்டும் உபயோகப்படுத்துவார்கள். அவர்களுக்கு எல்லா பிரயோகமும் கைவந்த கலை. எங்கு எப்பொழுது எதை செய்யவேண்டும் என்றாலும் கூட, இறைவனின் அனுமதியுடன்தான் செய்வார்கள். அவர்கள் இறைவனின் செல்லப் பிள்ளைகள் மட்டுமல்ல, இறைவனின் அபிமான கரங்கள். அவர்கள் வழிதான், இறைவன் இன்றும் பல அரிய திருவிளையாடல்களை,  நடத்துகிறான். மந்திரவாதம், செய்வினை இவைகள் அவர்கள் முன் காணாமல் போய்விடும். மனிதர்கள், ஒரு பொழுதும் அந்த பாதைகளில் சஞ்சரிக்கவே கூடாது. இன்று வாமாசாரம் இத்தனை வளர்ந்து நிற்க, இந்த மனிதர்கள்தான் காரணம். ஒருவன் கர்மாவில் அது எழுதப்பட்டிருந்தாலும், அதை எதிர்த்து போராடி வாழவேண்டும், இறை அருளை பெறவேண்டுமே தவிர, எந்த ஒரு ஜீவனுக்கும் எதிராக அதை பிரயோகிக்கக்கூடாது.

நான்காவதாக, இறைவனே தமிழ் உருக்கொண்டிருக்கும் இந்த நாட்டில், அந்த தமிழை வைத்தே, இறை நிந்தனை நிறையவே நடக்கிறது. இறை நிந்தனை செய்பவனை விட்டு விலகி விடவேண்டும். நம் கண்கள் அதை பார்க்கும்படியோ, நம் செவிகள் அதை கேட்க்கும்படியோ வைத்திருக்கக்கூடாது. கொடுத்தால், வாங்கும் கரங்கள் இருந்தால்தான் கொடுத்தது போய் சேரும். அதுபோல், இறை நிந்தனையை கேட்டு உள்வாங்க ஒருவரும் அங்கிருக்க கூடாது. உன்னை நீயே விலக்கிவிடு, அந்த சூழ்நிலையை, மனதை விட்டு அகற்றிவிடு. நீ ஏன் ஒரு சாட்சியாய் இருக்க வேண்டும்?

இல்லை என்ற வார்த்தை எங்கள் அகராதியில், இல்லை என்பதே உண்மை. அத்தனை வாரி வழங்கித்தான், இவ்வுலகை, சித்தர்கள் கட்டி காத்து வருகிறார்கள். உன்னிடம் கொடுக்கப்பட்டதெல்லாம், உனக்காக மட்டும் என்று நினையாதே. அங்கு ஒரு சோதனையை இறைவன் உன் முன் வைக்கிறான் என்பதை கவனி.

உருவ வழிபாட்டை எதிர்த்தவர்கள் சித்தர்கள். அதே சித்தர்கள் நிறைய கோவில்களை கட்டி, இறைவனை உருவத்தில் பிரதிஷ்டை செய்ததும் உண்மை. ஒன்றாம் வகுப்பில் படிக்கும் குழந்தைக்கு தேவையான பாட புத்தகங்கள், அது வளர்ந்து மேல் படிப்பு படிக்கும் பொழுது காணாமல் போய்விடும். ஒன்றாம் வகுப்பு பாடம் கோவில்களில் தொடங்கும். பின்னர் படித்தது வளர்ந்து, முதிரும் பொழுது, கோவில்கள், அடுத்த தலைமுறைக்கு தேவைப்படும், வளர்ந்த உனக்கு  தேவை இல்லை என்பதே உண்மை. 

உள்ளவனிடம் இருப்பதெல்லாம், இறையே அவன் பாவ புண்ணியத்தை நோக்கி கொடுத்ததாகினும், அங்கும் ஒரு சோதனைதான் நடக்கிறது. உள்ளவன், இல்லாதவனை கைதூக்கி விடுகிறானா என, இறைவன் பார்க்கிறான்.

தெரியாதவன் செய்த தவறை இறைவன் மன்னிக்கலாம், எல்லாம் அறிந்தவன் செய்தால், மன்னிப்பே கிடையாது, தண்டனை உடனேயே.

உனக்குள்ளேயே, உன் அனைத்து கேள்விகளுக்கும் பதில் உண்டு. தேடு, அவை கிடைக்கும், தொலைந்து போகமாட்டீர்கள்.

அந்த பெரியவர், வேகமாக அறிவுரைகளை அடுக்கி கொண்டு போகவே, ஆச்சரியத்துடன் கவனித்துக் கொண்டிருந்தேன்.

சுருக்கமாக சொல்வதில் எல்லாம், மிக உயர்ந்த, விரிவான சித்த மார்க அறிவுரைகள் இருந்ததுதான், என்னை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.

அதை உணர்ந்த பெரியவர், "கடுகு சிறுத்தால் ; காரம் போகுமோ" என்று புன்னகைத்தபடியே ஒரு இடைவேளை விட்டார்.

சித்தன் அருள்................. தொடரும்!

Saturday 16 June 2018

சித்தன் அருள் - 759 - சிவன் மடியில் சிவலோக ப்ராப்த்தி!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சிவன் மடியில் வீழ்ந்து சிவலோக ப்ராப்த்தி அடைய மிகுந்த புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பார்கள். எத்தனையோ கோடி பேர்களில், உண்மையான அடியவர்களுக்குத்தான் அது வாய்க்கும். சமீபத்தில், பீமாவரம் சோமேஷ்வரா ஆலயத்தில் சிவனுக்கு பூசை செய்து கொண்டிருந்த வயதான பூசாரி, அவர் மடியிலேயே விழுந்து சிவபதம் அடைந்ததை, ஒரு வீடியோவில் காண முடிந்தது. நீங்களும் அதை பார்க்க, உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

அந்த ஆத்மா மோக்ஷம் அடைய வேண்டும் என வேண்டிக்கொண்டு, கீழே உள்ள தொடுப்பை பார்க்கவும்.

ஓம் லோபா முத்திரா சமேத அகத்தீசாய நமஹ!


சித்தன் அருள்............... தொடரும்!

Thursday 7 June 2018

சித்தன் அருள் - 758 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!


சித்தம் நிலைத்துவிட்டால் ஒரு ஆத்மா, கரையேரத் தொடங்கிவிடும். அங்குதான் சித்த நிலையின் முதல் விதை விதைக்கப்படுகிறது. இதற்காக, ஒரு மனிதன், வெளியுலக தேடலை குறைத்துக் கொண்டு, தனக்குள்ளேயே ஏன்? எது? எப்படி? என்று கேள்விகளை எழுப்பி அமைதியாக, பொறுமையாக காத்திருந்தால் அனைத்தும் சரியானபடி விளங்கும். இவ்வுலகில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளிலும், காரண காரியங்களை புரிந்து கொள்ள முடியும். முன் ஜென்மத்தில் ஏதேனும் ஒரு நிமிடத்தில், சித்தர்களுடன் தொடர்பிருந்தால் தான், இந்த பாதையில் நடத்து செல்லவும் முடியும். ஒரு உண்மை தெரியுமா? இறைவனும், சித்தர்களும், தன் சேய்களிடம் பேச, தகவல் பரிமாற, அந்த ஒருவனை நேர்வழிப்படுத்த மிக மிக ஆவலாக உள்ளனர். மனிதனுக்குத்தான், நேரம் இல்லை. ஏன் என்றால், வாழ்க்கையில், அவன் கொடுக்கும் முக்கியத்துவத்தின் திசை வேறு வேறு புறமாக இருப்பதால்தான். எவனொருவன், தன் மனதை கட்டுப்படுத்தி, ஒரே நேர் கோடில் கொண்டுவந்து, சித்தத்தில் (உடலில் அது நம் புருவங்களுக்கிடையில் சுழுமுனையில் உள்ளது) நிறுத்துகிறானோ, அவனுக்கு அவர்கள் வாக்கு கேட்க்கும். அந்த வாக்கும் உண்மை என்று கண் முன் நடக்கும் பொழுது உணரலாம். நம்பிக்கை, நிறைய தனிமை தான் இதற்கு தேவை. தவம் செய்பவர்கள், காடு மலை, குகை என்று தனிமையான இடங்களை தேடிப்போவது, இதனால் தான். எத்தனையோ விஷயங்கள், தவத்தின் பின் நடந்தாலும், தவத்தின் முடிவு, தசவாசலை நோக்கித்தான் அழைத்துச் செல்லும்" என்று நிறுத்தினார்.

"இந்த தசவாசலை நோக்கிய பயணத்தை, சற்று விரிவாக கூறுங்களேன்" என்றேன்.

"ஒன்றை அடிப்படையாக மனதுள் வைத்துக்கொள். எத்தனைதான் இங்கு கூறினாலும், எதையுமே, அவனவன் உணர்ந்தால் அன்றி உணர முடியாது. சரிதானே!"

"ஆமாம்!"

"ஒரு குழந்தை பிறந்தவுடன், அதன் தலையை தொட்டு பார்த்திருக்கிறாயா?"

'ஆமாம்! பார்த்திருக்கிறேன்!"

"எப்படி இருக்கும் என்று கூறேன்?"

"தலையின் உச்சியில் ஓடு திறந்திருக்கும்! தோல் அதை மூடியிருக்கும். தடவினால், ஒரு சிறு பள்ளத்தை உணரலாம்!" என்றேன்.

"உண்மை! ஒரு குழந்தையின் பிறப்பின் வழி இறைவன், மறுபடியும், மறுபடியும், உடலால் வளர்ந்தவர்களுக்கு ஒரு செய்தியை தெரிவிக்கிறான்! என்னிலிருந்து பிரிந்த ஆத்மா, விதியினூடே வாழ்க்கையை நடத்தும் பொழுது, உடலை விட்டு நீங்கும் போது, இந்த தசவாசல் வழி வெளியே வந்தால், உனக்கு மோட்சம் என்று கூறுகிறான். ஒரு மனிதனின் தலை உச்சியை, பெரியவர்கள் "சஹஸ்ராரம்" என்று கூறுவார்கள். சித்தர்கள் "தசவாசல்" என்று கூறுவார்கள். ஏன் என்றால் ஒரு மனிதனின் உடலுக்கு உள்ளே செல்கிற வழிகள் ஒன்பது இயற்கையாகவே, இறைவன் கொடுத்தது. அத்தனையையும் கட்டுப்படுத்தி, அனைத்திலும் ஊறும் சக்தியை திரட்டி, பத்தாம் வாசலுக்கு செல்ல வேண்டும். அந்த திறந்த ஓடானது, பிறந்த ஒரு மண்டலத்துக்குள் மூடிவிடும். பெற்றவர்கள், அது வேகமாக இணைய வேண்டும், இல்லையேல் ஏதேனும் பிரச்சினை வந்துவிடும் உடலுக்கு என்று, எண்ணெய் தடவி குளிர வைப்பார்கள். அதுவும் குளிர்ந்து மிக குறைந்த காலத்திலேயே மூடிவிடும். ஒரு பிறப்பு காட்டித்தந்த அந்த பத்தாம் வாசலை நோக்கி, உள்ளிருந்து, கவனத்தால், மூச்சு காற்றால், தடவி, தடவி, சேர்ந்த மண்டையோட்டை கரைப்பதுதான், வாசி யோகத்தின் ஒரே முனைப்பு. இதற்கான முயற்சியை தொடங்கி நடந்து செல்லும் பொழுதே, மூச்சுக் கட்டுப்பாடு வந்துவிடும். இறைவன், சித்தர்கள், வெளியுலக விஷயங்கள், உள்ளிருக்கும் ரகசியங்கள், அரிய விஷயங்கள், என ஒவ்வொன்றாக அந்த ஒருவனுக்கு புலப்படத்தொடங்கும். காலம் செல்லச் செல்ல, அவனிடம் அத்தனை அரிய விஷயங்களும் சேர்ந்துவிடும். இத்தனையையும் சொன்னால் மனிதன் குழம்பிப் போய்விடுவான் என்றுணர்ந்ததால், சுருக்கமாக பெரியவர்கள் "மூக்கின் நுனியை கவனி! உள்போகும், வெளிவரும் மூச்சை கவனி" என்றார்கள். என்ன செய்ய! அதுவும், இப்பொழுது நல்ல வியாபாரமாக ஆக்கப்பட்டுவிட்டது." என்று புன்னகைத்தபடியே நிறுத்தினார்.

"இதை, காலத்தின் கட்டாயம் என்று கூறலாமே" என்றேன்.

 "இல்லை! ஒருவனுக்கு என்ன தெரியவில்லை என்றுணர்ந்து, அதை இன்னொருவன் வியாபாரம் செய்கிறான்! அதை விடு! தொடங்கிய விஷயத்துக்கு வருவோம். ஒரு மனிதனின் மார்பு பாகத்தை "ஹ்ருதய கமலம்" என்பார்கள். த்யானத்தில், எவனொருவன், இறைவனை, தான் விரும்பிய ரூபத்தில் அங்கு அமர்த்தி மூச்சை உள்வாங்குகிறானோ, அவனுக்கு, ஒரு சில காலத்திலேயே, அவன் இருத்திய ரூபத்திலேயே இறைவன் அமர்ந்து இருப்பதை உணர்த்துவார், என்பது தெரியுமா? முடிந்தால், இறைவனின் எளிய ரூபமான "லிங்க ரூபத்திலேயே" முயற்சி செய்து பார். மார்பில், லிங்க ரூபம் உள்ளிருந்து வெளியே அழுத்துவது போன்று ஒரு சில காலத்திலேயே உணரலாம். சுழிமுனை வழி சஹஸ்ராரம் சென்று பார்த்த பெரியவர்கள், தசவாசலில், ஒரு லிங்கம் தலைகீழாக அமர்ந்து, ஆத்மாவை கரை ஏற்ற காத்திருப்பதை உணர்ந்தனர். அப்படின்னா! சிவபெருமானே, ஒவ்வொரு மனிதனையும் கரையேற்றி, தன்னையே வாகனமாக்கி, காத்திருக்கிறார், என்று கூறலாம் இல்லையா?" என்று புன் சிரிப்புடன் நிறுத்தினார்.

சற்று நேரம் அமைதியாக, ஆனால் ஆச்சரியத்துடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவரிடம் பின்னர் கேட்பதற்காக விலக்கி வைத்திருந்த கேள்விகளில் ஒன்று "தலை கீழ் லிங்கம்". இதை ஒரு சித்தர் கோவிலில் பார்த்திருக்கிறேன். ஆவுடை மட்டும் தான் மண்ணுக்கு மேலே தெரியும். பாணம், பூமிக்குள், புதைந்த விதத்தில் இருக்கும். அந்த லிங்கத்தை, அந்த விதமாக அமைத்ததே, ஒரு சித்தர்தான். அதை கண்டவுடன், இதன் அமைப்பே வித்யாசமாக இருக்கிறதே. இதன் வழி சித்த பெருமான் எதோ ஒரு செய்தி சொல்கிறாரே, என பல முறை யோசித்ததுண்டு. அந்த கேள்வியை அடியேன் இவரிடம் கேட்க்காமலேயே, கலந்துரையாடல் வழி மெதுவாக அந்த பெரியவர் விளக்கலானார். [அந்த சித்தர் கோவிலை பற்றி இன்னொரு நேரத்தில் தனி தொகுப்பாக, விளக்குகிறேன்!].

"என்ன? அப்படி ஒரு லிங்கத்தை கண்டவுடன், நடந்த நிகழ்ச்சிகளை ஆராய்ச்சி செய்து சென்ற உனக்கு விடை கிடைத்தது. ஆனால், உன் உண்மையான கேள்விக்கு பதில் இதுவரை கிடைக்கவில்லை! அல்லவா?" என்று கூறி என்னை, மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

சித்தன் அருள்................ தொடரும்!