​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 31 July 2014

சித்தன் அருள் - 187 - அகத்தியர் அருள் வாக்கு!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில், அகத்தியப் பெருமான் உத்தரவினால், பெங்களூரில், திரு.கணேசன் (தஞ்சாவூர்) அவர்கள், பொது நாடி வாசித்தார்கள். தனிப்பட்ட விஷயங்களை விட்டு, பொதுவாக மனித வாழ்க்கை செம்மை பெற என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதை, தயை கூர்ந்து அருளினார் அகத்தியப் பெருமான். நாடி வாசித்து நமகெல்லாம் நல்வழி காட்டிட உதவிய திரு கணேசனுக்கும், அருளிய அகத்தியப் பெருமானுக்கும் நம் எல்லார் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொண்டு, அவர் அருளுக்கு செல்வோம்.

முதலில், பொதுவாக நன்னெறியை உரைத்து பின்னர், பொதுவான கேள்விகளுக்கு பதிலளித்தார் அகத்தியர் பெருமான்.

"இறைவனின் அருளைக்கொண்டு இயம்புகிறோம் இத்தருணம். இறைவன் அருளாலே நல்லாசி, எம்முன்னே அமர்ந்துள்ள சேய்களுக்கு. இயம்புங்கால் “இறைவனை வணங்கி, இறைவனை வணங்கி, இறையை வணங்கி” என்று யாம் துவங்குவதன் பொருள், இஃதொப்ப நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளின் வடிவம் இப்படித்தான் என்று வைத்துக்கொள்ள இயலாது. இஃதொப்ப வடிவத்தில் மனதை லயிக்க விட்டு, பிறகு, வடிவமற்ற பூரணத்தை உணர்தலே மெய்ஞானமாகும். இஃதொப்ப இறையென்றால் அதற்குள் பூரணம் அனைத்தும் அடங்கியது என்பதாலும், ஓர்ரூபம், ஓர் வடிவம், ஓர் நாமம் இல்லாதானே பரம்பொருள் என்றும், அந்தக் கருத்தினைக் கொண்டே யாம் பொதுவில் ‘இறை வணங்கி’ என்று இயம்புகின்றோம். 

இஃதொப்ப இத்தகு இறைதன்னை மூத்தோனாக, இளையோனாக, முக்கண்ணனாக, மஹாவிஷ்ணுவாக, நான்முகனாக, அன்னையர்களாக இன்னும், இன்னும் பலப்பல ரூபங்களாக மாந்தர்கள் வழிபடுவதும், வணங்குவதும் அஃதொப்ப அந்தந்த மனிதனின் மனப்பான்மைக்கு ஏற்ப அவனவன் வணங்கி வருவதும் நன்றுதான். பின்பு என்றுதான் அனைத்தும் பூரணம் ஒன்று என்று உணர்வது ? அந்த ஒன்றினை உள்ளுக்குள் உணர்ந்து, அந்த ஒன்றுக்குள் மனதை ஒன்ற வைத்து, அந்த ஒன்றையே ஒன்றி, ஒன்றி, ஒன்றி, ஒன்றே ஒன்று என்று உணரும் வண்ணம் ஒரு நிலை ஒவ்வொரு ஆத்மாவிற்கும் வரும் வரை, மனிதன், அவனவன் வழியில் செல்ல, அஃதொப்ப பரம்பொருளே வழிவிடுகிறது. 

இஃதொப்ப அத்தகு இறைக்கு, பரம்பொருளுக்கு, பரிபூரண சரணத்தை மனம், வாக்கு, காயத்தால் எந்த மனிதன் வைத்து விட்டானோ, அவனே, அஃதொப்ப சாயுச்சம், சாய்ரூபம், சாய்லோகம், சாமீபம் என்கிற இஃதொப்ப நிலைகளை அடைவான். இஃதொப்ப நிலைதாண்டியும் இறை இருக்கிறது என்பதால், இஃதொப்ப நிலை நோக்கி இஃதொப்ப சேய்கள் தொடர்ந்து வர இறைவன் அருளால் யாம் மீண்டும் நல்லாசிகள் கூறுகிறோம். 

இஃதொப்ப பொதுவில் வாக்கு என்றால் தனித்து என்று? என்பது இஃதொப்ப ஏக, ஏக மாந்தனின் வினாவாகும். ஆகுமப்பா! பொதுவில் கூறுவதையும், அஃதொப்ப தனிமையில் கூறுவதையும் யாம் ஒரு பொழுதும் இறைவனருளால் பூர்த்தி என்று சொல்லவில்லை. என்றாலும் இஃதொப்ப தக்க ஆத்மாக்களுக்கு அஃதொப்ப புரிதலுள்ள ஆத்மாக்களுக்கு கடுகளவேனும் இந்த ஜீவ அருள் ஓலைதன்னை புரிந்துகொண்டு இதன் வழியில் நடக்க சித்தமாய் உள்ள ஆத்மாக்களுக்கு இஃதொப்ப ஓலை வாசிக்கப்பட்டாலும், வாசிக்கப்படாவிட்டாலும் யாம் இறைவன் அருளால் தோன்றாத் துணையாக இருந்து கொண்டே இருக்கிறோம். 

அப்பா, அப்பனே! இஃதொப்ப இப்பிறவிக்கு தாய், தந்தை யார் என்று தெரிகிறது மாந்தனுக்கு. எப்பிறவிக்கும் தாய், தந்தை யார் ? என்றால் (அது) இறைதான். அந்த இறையை உணர்வதற்கு அல்லது அந்த இறை உணர்த்துவதை உணர்வதற்கு வேண்டியது முழுக்க, முழுக்க சத்தியமும், தர்மமும் மட்டுமே. இந்த சத்தியத்தையும், தர்மத்தையும் வைத்துக்கொண்டு அதன் பின்பு கடுகளவு பக்தி இருந்தால் அதுவே போதும் இறையை உணர்ந்து கொள்ள. எனவே இஃதொப்ப இறையை தரிசிப்பதும், இறையை தரிசித்து அதன் அருளை உணர்வதும் மிக எளிது. இயம்பிடுவோம் மேலும். எளிது என்றால் ஏன் அது அனைவருக்கும் சாத்தியப்படவில்லை? என்று ஆராய்ந்து பார்க்குங்கால், யாங்கள் அடிக்கடி கூறுவது போல மாந்தனுக்கு, தான் உணர்ந்ததை, தான் பார்த்ததை பிறர் நம்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொண்டால் கட்டாயம் இஃதொப்ப இறை சார்ந்த பலன் ஒவ்வொரு கணமும் நிகழ்ந்து கொண்டே இருக்கும். “ இல்லை. என் அறிவு, என் வித்தை, என் உழைப்பு. நான் முன்னேறுகிறேன். இறை எங்கே வந்தது ? பிறவி எங்கே வந்தது? நவக்கிரகம் எங்கே வந்தது ? இதையெல்லாம் நம்பாத மாந்தர்களும் நன்றாக வாழ்கிறார்களே ?” என்றால் இஃதொப்ப யாம் கூறியதைக் கூறுகிறோம். ஒவ்வொரு பிணி நீக்கும் மருந்து தொடர்பான அந்த லிகிதத்திலே இன்ன, இன்ன உட்பொருள்கள் கலக்கப்பட்டு இருக்கின்றன என்கிற குறிப்பு இருக்கும். ஆயினும் அஃதொப்ப வித்தை கல்லாத மனிதனுக்கு அந்த குறிப்பை வாசித்தாலும் புரியாது. பெரும்பாலும் யாரும் வாசிப்பதும் இல்லை. அதற்காக அந்த மருந்து உள்ளே சென்றால், “இவனுக்கு என்னைப் பற்றித் தெரியாது. எனவே ஏன் என் கடமையை செய்ய வேண்டும் ?’ என்று வாளாய் இருக்கிறதா? இல்லையே“. மருந்தின் நுட்பம் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும், மருந்து எப்படி வேலை செய்கிறதோ, அஃதொப்ப பிறவி இருக்கிறது என்று நம்பினாலும், நம்பாவிட்டாலும், நவக்கிரகங்கள் வாயிலாக இறைவன் பரிபாலனம் செய்கிறார் என்பதை ஒரு மனிதன் நம்பினாலும், நம்பாவிட்டாலும் அஃதொப்ப நடந்து கொண்டேதான் இருக்கும் இறைவனின் விளையாடல். இஃதொப்ப நிலையிலே ஒன்றை நம்புவதும், நம்பாமல் இருப்பதும் கூட அவனவன் கர்ம பாவத்தைப் பொருத்தது. இஃதொப்ப எம் சேய்களுக்கு, நம்பும் சேய்களுக்கும், நம்பா சேய்களுக்கும், இனிவரும் சேய்களுக்கும், இனி எதிர்காலத்தில் இந்த ஜீவ அருள் ஓலைதன்னை நாடி வருகின்ற சேய்களுக்கும் இறைவனருளால் யாம் தற்சமயம் கயிலையில் இருந்தே நல்லாசிகளைக் கூறுகிறோம்.

ஆசிகள், ஆசிகள், ஆசிகள்.

​சித்தன் அருள்................ தொடரும்!​

Thursday 24 July 2014

சித்தன் அருள் - 186 - ஒருவருக்கு வாழ்க்கையை திருப்பி கொடுத்த வரலாறு!


மனிதன் ஆசைக்கு/சுகத்துக்கு அடிமைப்பட்டு பல வழிகளில் செயல்படுவான். அந்த வழியில் அவன் செயல்படும் பொழுது, சிலவேளை, அவன் அதற்கே அடிமையாகிவிடுவான். பின்னர் அவனை திருத்தி நல்லபடியாக வெளியே கொண்டுவர, இறைவன் அருள் வேண்டும், சித்தர்கள் கனிவும் வேண்டும். அப்படி மாட்டிக் கொண்ட ஒரு இளைஞ்சனை, மரணத்தின் விளிம்பிலிருந்து, திருப்பிக் கொண்டு வந்து, நல்வாழ்க்கை அமைத்துக் கொடுத்த, அகத்தியப் பெருமானின், கனிவு, ஒரு நிகழ்ச்சி மூலமாக வெளிப்பட்டதை, இன்றைய சித்தன் அருளில் காண்போம். ​

​ஒரு நாள், ​

"எத்தனையோ அதிசயங்களை செய்கின்ற அகத்தியர்  ​என் பையனையும் குணப்படுத்த மாட்டாரா? என்ற ஏக்கத்தோடு வந்திருக்கிறேன்" என்று ​கலங்கிய கண்களோடு என் முன் வந்தமர்ந்தாள், ஒரு பெண்மணி. 

​"நிச்சயம் குணப்படுத்துவார்.  இருந்தாலும் நாடியில் அவரிடமே கேட்டுப் பார்ப்போம்" என்றேன்.

அந்தப் பெண்ணின் முகம் இதைக் கேட்டு பிரகாசமாக ஒளிர்ந்தது.

நாடியில் அகத்தியர் நல்ல வாக்கு தரவேண்டும் என்று வேண்டி கட்டைப் பிரித்தேன்.

"என்னடா அகத்தியன் மைந்தா! இப்படியொரு வாக்கைக் கொடுத்து என்னை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி விட்டாயே! இந்தப் பெண்மணியின் பையன் தினமும் மூன்று வேளையும் சோமபானம், சுரா பானம் அருந்தி, அருந்தி குடலைப் புண்ணாக்கிக் கொண்டிருக்கிறான்.  இதே நிலை நீடித்தால் அவன் இன்னும் ​சில மாதங்கள்தான் உயிர் வாழ முடியும்.  இதையறியாமல் அவளிடம் நிச்சயம் குணப்படுத்துவான் அகத்தியன் என்று அவசரப்பட்டு உறுதிமொழி கூறிவிட்டாயே, கொஞ்சம் நாவை அடக்கி இருக்கக் கூடாதா?" என்று என்னைக் கடிந்து கொண்டார் அகத்தியர்.

​பொதுவாக நான் யாருக்கும் வாக்குறுதி கொடுக்கமாட்டேன். எனெக்கென்னவோ அந்தப் பெண்மணியின் முகத்தைக் கண்டதும் அப்படிச் சொல்லத் தோன்றியது; சொல்லிவிட்டேன்.

ஆனால்;

இந்தப் பெண்மணியின் மகன் குடித்துக் குடித்துக் கெட்டுப் போய்க் கொண்டிருக்கிறான், அதிக நாளுக்கு உயிர் வாழ மாட்டான் என்று அகத்தியர் என்னிடம் சொன்னது, என்னை திகிலில் ஆழ்த்தியது.

சிறிது நேரம் மௌனமாக இருந்தேன்.

நாடியைப் படித்துவிட்டு நான் திடீரென்று மவுனமாக இருந்தது அந்த பெண்மணிக்கு சந்தேகத்தை கிளப்பியது போலும்.

துக்கம் தொண்டையை அடைக்க கேட்டார்.

"அகத்தியர் ஏதாவது கெடுதலாக சொல்லிவிட்டாரா?"

"இல்லை"

"பிறகு ஏன் பதிலே வரவில்லை?"

"பையனுக்கு ஏதாவது கெட்ட பழக்கம் உண்டா?"

'ஆமாம்"

"என்ன கெட்ட பழக்கம்?"

"குடி பழக்கம் உண்டு.  அடிக்கடி கஞ்சாவும் உபயோகிப்பான்"

"எத்தனை வருடமாச்சு?"

"7 வருடமாக"

"அவனுக்கு ஏதாவது சிகிர்ச்சைக்கு ஏற்பாடு செய்தீர்களா?"

"என்னவெல்லாமோ செய்து பார்த்து விட்டோம்.  மருத்துவமனையில் அட்மிட் செய்தும் மருத்துவம் பார்த்தோம்.  சிகிர்ச்சையின் போது நன்றாக இருந்தான். சிகிர்ச்சையை விட்டு வெளியே வந்ததும் பழயபடி குடிக்க ஆரம்பித்து விட்டான்" என்று கண் கலங்கி கூறினாள், அந்தப் பையனுடைய தாய்.

"பையனுக்கு என்ன வயது இருக்கும்?"

"26"

"திருமணம் ஆகிவிட்டதா?"

"இல்லை! வேலைக்கு சரியாகப் போகாததால் வேலையிலிருந்து இவனை நீக்கிவிட்டார்கள்.  அப்படியிருக்க யார் இவனுக்குப் பெண் கொடுப்பார்கள்?" என்றவள், அவனை எப்படியாவது அகத்தியர்தான் காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தாள்.

சில நிமிடங்கள் யோசித்து விட்டு நாடியைப் புரட்டினேன்.

"அவனுக்கு குடலில் புண் ஏற்பட்டுவிட்டது.  சிறுநீரகமும் பாதிக்க ஆரம்பித்திருக்கிறது.  இப்போது அவன் தினமும் சிறிதளவு மது குடிக்கவிட்டாலும் கூட கை, கால்கள் உதற ஆரம்பித்து விடும். அப்படியிருக்க அவனை எப்படிக் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணுகிறாய்?" என்று அகத்தியர் சற்று கோபமாகவே என்னிடம் கேட்டார்.

நான் பதிலே பேசாமல், அகத்தியரே வாயைத் திறக்கட்டும் என்று மீண்டும் மவுனமானேன்.

சில நிமிடத்திற்குப் பின் அகத்தியரே வாயைத் திறந்தார்.

"சில மருந்துகளை தருகிறேன். அதை நிழலில் காய வைத்து, பொடி செய்து, தண்ணீர் அல்லது வெந்நீரில் கலந்து தினமும் காலையிலும், மாலையிலும் சாப்பிடச் சொல்.  குறைந்த பட்சம் 48 நாட்கள் தொடர்ந்து உண்டு வந்தால் போதும்.  குணமடைந்து விடும்.  அப்படியும் இந்த மருந்தைச் சாப்பிட்டுக் குணமடையவில்லை என்றால், மீண்டும் அகத்தியனை நோக்கி வா" என்று சில நாட்டு மருந்துகளைப்  பற்றி சொல்லிவிட்டு, "ஒருவேளை இந்த மூலிகைகள் ஒத்து வராமல் வேறேதோ பிரச்சினை கூட வரலாம்.  அப்படி ஏற்ப்பட்டால் உடனே அகத்தியனை நோக்கி வா" என்றும் அகத்தியர் கருணையோடு சொன்னது எனக்கு மிகுந்த மன ஆறுதலைத் தந்தது.

"எப்படியும் என் மகன் குடி பழக்கத்திலிருந்தும், கஞ்சா பழக்கத்திலிருந்தும் விடுபட்டால் போதும். இவன் எனக்கு ஒரே மகன். எங்களுக்கு பண வசதி கிடையாது. உற்றார் உறவினர்கள் இருந்தாலும் எங்களை எட்டிக்கூட பார்ப்பதில்லை.  இவனை நம்பித்தான் நானும், என் கணவரும் இருக்கிறோம். அவன் எப்போது திருந்துவான் என்று அகத்தியரை நம்பிக் காத்திருக்கிறோம்" என்றாள் அந்தப் பெண்மணி.

"அகத்தியர் சொன்ன படி செய்யுங்கள்.  எல்லாம் சரியாகிப் போய் விடும்" என்று தைரியம் சொல்லி அந்தப் பெண்மணியை அனுப்பி வைத்தேன்.

இரண்டரை மாதம் கழிந்திருக்கும்.

திடீரென்று ஒரு நாள் அந்தப் பெண்மணி தலைதெறிக்க ஓடி வந்தாள்.

"நீங்க கொடுத்த மருந்தில் என் மகன் கொஞ்சம், கொஞ்சமாக குணமாகிட்டு வந்தான். கொஞ்சம் குடிப்பழக்கத்தையும் விட்டு விட்டான்.  அதைப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தேன். இப்போ திடீரென்று மஞ்சள் காமாலை நோயும் வந்துவிட்டது.  டாக்டர்கிட்டே கூட்டிட்டுப் போனேன். மஞ்சள் காமாலை கூடி நிற்பதால் பையன் பிழைக்கிறது கஷ்டம்னு சொல்லிட்டாங்க.  பையனை மருத்துவமனையிலே விட்டுவிட்டு, அகத்தியரிடம் உயிர்ப் பிச்சை கேட்கலாம்னு துடிச்சுட்டு ஓடியாந்திருக்கேன்" என்றாள்.

நாளுக்கு நாள் தனது மகன் குணமடைந்து வருவதாகவும், இப்பொழுதெல்லாம் தினமும் குடிப்பதில்லை என்றும் சந்தோஷப் பட்டு சில நாட்களுக்கு முன்பு இந்தப் பெண்மணி கடிதம் எழுதியிருந்தது அப்போது என் நினைவுக்கு வந்தது.

"குணமாகும்" என்று அகத்தியர் சொன்ன வாக்கு இப்பொழுது பொய் ஆகப் போகிறதே! இனிமேல் யாரும் அகத்தியர் அருள்வாக்கை சிறிதும் நம்ப மாட்டார்களே! பகவனே.... இதென்ன சோதனை? என்று கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் போனேன்.

ஏனெனில்,

அந்தப் பெண்மணி சொன்னதை பற்றி யோசித்தால் மஞ்சள் காமாலை கடுமையாக பாதித்திருக்கிறது. அவன் உடம்பிலிருந்து ரத்தமெல்லாம் முழமையாகக் கெட்டு விட்டதால் எந்த நிமிடமும் அவன் உயிர்துறக்கலாம் என்று நன்றாகவே தெரிந்தது.

மானசீகமாக அந்தப் பையன் உயிர் பிழைக்க வேண்டும் என்று வேண்டி அகத்தியர் நாடியைப் பிரித்துப் பார்த்தேன்.

"இன்னவள் ஈன்றெடுத்த மகன் பிழைப்பான்.  நேராக மருத்துவமனைக்குச் சென்று அவன் தலையருகே அமர்ந்து கருட தண்டகம், சஷ்டி கவசம், தன்வந்திரி காயத்ரி, மகா மிருத்யுஞ்ச ஜெபம் ஆகியவற்றை தொடர்ந்து படிக்கச் சொல். இவனால் படிக்க முடியாவிட்டால் அந்தப் புத்தகங்களை வைத்து குல தெய்வத்தை நோக்கி ஜெபம் செய்யச் சொல்.  தப்பு தப்பாகச் சொன்னாலும் பரவாயில்லை.  ஆண்டவன் கோபித்துக் கொள்ளமாட்டான். அகத்தியன், இந்த அம்மணிக்காக, அகத்தியன் மைந்தனுக்காக அந்தப் பையனின் உயிரைக் காப்பாற்றுவேன்" என்று சொன்னார்.

பிறகு என்னிடம், "மைந்தா! இந்த முறை உன் வேண்டுகோளுக்காக இந்த இளம்பிள்ளையின் உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்கிறேன்.  இனிமேல் அவசரப்பட்டு வாக்கு கொடுத்து விடாதே. என்னையும் வம்பில் மாட்டி விடாதே. மருத்துவமனையில் ஒரு அதிசயம் நடக்கும்.  இவளது மைந்தன் அதனால் உயிர் பிழைப்பான். பாரேன் அந்த வேடிக்கையை" என்று ரகசியமாகச் சொன்னார்.

இந்த தெய்வ வாக்கால் அந்தப் பையனைப் பற்றி எனக்குள் இருந்த பயம் விலகியது.

"அகத்தியர் அருள் வாக்கு தந்துவிட்டார்.  எப்படியும் என் பையன் பிழைத்து விடுவான்" என்று எல்லோரிடமும் பித்து பிடித்தாற்போல் சொல்லி விட்டு, சந்தோஷத்தோடு அந்த பெண்மணி சென்றதை, கண்கொட்டாமல் சில நிமிடம் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான்கைந்து நாட்கள் வரை அந்த பெண்மணியிடமிருந்து எந்தச் செய்தியும் வரவில்லை.

இதைக் கண்டு நானே ஒரு மாதிரியாக மாறி விட்டேன்.

அகத்தியரிடம் அந்த மஞ்சள் காமாலைப் பையனை பற்றிக் கேட்டுக் கொள்ளவும் தயாராக இல்லை.

மறு நாள் காலையில்.....

தினசரி பேப்பரை திருப்பி பார்த்த பொழுது "சென்னை அரசாங்க மருத்துவமனையில் மிகப் பெரிய சாதனை: மஞ்சள் காமாலையால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு இளைஞ்சனுக்கு புது ரத்தம் ஏற்றப்பட்டு காப்பாற்றப்பட்டான்" என்று அரை பக்கத்திற்கு ஒரு செய்தி போடப்பட்டிருந்தது.

கூர்ந்து கவனித்த பொழுது, அந்த சிகிர்ச்சை செய்யப்பட்ட இளைஞ்சன் என்னைத் தேடி சில நாட்களுக்கு முன்பு வந்த அதே ஏழைத் தாயாரின் மகன்தான் என்று உறுதிபடத் தெரிந்தது.

அங்கே என்ன நடந்திருக்கிறது என்றால்;

இந்தப் பெண்மணி அகத்தியர் சொன்னபடி நாளெல்லாம் தண்ணீர் கூடக் குடிக்காமல், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தன் மகனது தலைப்பக்கம் அமர்ந்து ஜெபித்துக் கொண்டிருந்த போது, யாரோ ஒரு பெரிய டாக்டர் தம் மருத்துவக் குழுவோடு இந்தப் பையனை பரிசீலனை செய்து, இவன் உயிரைக் காப்பாற்ற ஒரு வழிதான் இருக்கிறது.  அதாவது, ஒரு கை வழியாக மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ரத்தத்தை வெளியேற்றி கொண்டு வருவது.  அதே சமயம் இன்னொரு கையில் சுத்தமான ரத்தத்தை அந்த பையனின் உடலுக்குள் செலுத்துவது என்று தீர்மானித்து, அதற்கான அத்தனை ஏற்பாட்டையும் மள மளவேன்று செய்திருக்கிறார்.

அவனது அதிர்ஷ்டம்.  அவனுடைய குரூப் ரத்தம் நிறைய கிடைத்திருக்கிறது.  அதனால், சிகிர்ச்சையும் வெற்றி பெற்று இருக்கிறது.  அந்த பெண்ணின் பிரார்த்தனை ஜெயித்திருக்கிறது.

எப்படியோ அகத்தியர் அந்தப் பையனைக் காப்பாற்றி இருக்கிறார்.

இப்படிப்பட்ட ரத்த மாற்றுச் சிகிர்ச்சை சென்னையில், அந்த மருத்துவமனையில் முதன் முறையாகவும் நடந்திருப்பதாக எல்லோரும் சொன்னார்கள்.

குணமடைந்த அந்த இளைஞ்சன் இப்போது குடிப்பதில்லை, கஞ்சாவையும் தொடுவதில்லை என்பது நூற்றுக்கு நூறு உண்மை.   

[​அகத்தியர் அடியவர்களே! அடுத்த வாரத்திலிருந்து, சமீபத்தில் அகத்தியப்பெருமான், திரு,கணேசன் அவர்கள், தஞ்சாவூர், வசம் இருக்கும்  நாடியில் வந்து நமக்காக எடுத்துரைத்த அருளாசியை, கேள்வி பதிலாக வந்ததை, தரலாம் என்று ஒரு எண்ணம். அவர் அருளுக்காக பொறுத்திருங்கள்!]

​சித்தன்அருள் ............... தொடரும்.​

Monday 21 July 2014

சித்தன் அருள் - 185 - கரும்குளம் - ஒரு சில புகைப்படங்கள்!

வணக்கம்  அகத்தியப் பெருமான் அடியவர்களே!


திரு.ஸ்ரீநிவாசன் என்கிற ஒரு அகத்தியர் அடியவர், கரும்குளம் சென்று, பெருமாள், மார்த்தாண்டீஸ்வரர், தம்பதி சமேத நவக்ரகங்களை தரிசனம் செய்து, அவர்கள் அருள் பெற்று வந்திருக்கிறார். அவர் அங்கு எடுத்த புகைப்படங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டு, எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டிக் கொண்டார்.



உங்களுக்கு தகவலாக இருக்கட்டுமே என்று கீழே அந்த புகைப்படங்களை இணைத்துள்ளேன்.



எல்லோரும் நலம் பெற்று வாழ வேண்டிக் கொண்டு!



க்ர்த்திகேயன்!


கரும்குளம் வெங்கடேஸ்வர பெருமாள் கோவில்





தம்பதி சமேத நவக்ரக சன்னதி இருக்கும் மார்த்தாண்டீஸ்வரர் கோவில்





Thursday 17 July 2014

சித்தன் அருள் - 184 - ஸ்ரீ அகத்தியரும், ஸ்ரீ ராமரும்!


இராமாயண காலத்தில் நடந்த விஷயங்களில், மிக முக்கியமான சூழ்நிலைகளில், அகத்தியப் பெருமான், ஸ்ரீ ராமன் முன் தோன்றி அவரை சரியான பாதையில், வழி நடத்தியுள்ளார். யுத்தகாண்டத்தில், ஆதித்த்யஹ்ருதயம் என்கிற ஸ்லோகத்தை ஸ்ரீராமருக்கு உபதேசித்து அவரை ராவணனுக்கு எதிரான யுத்தத்தில். வெற்றி பெறச் செய்தார். இன்றளவும், அந்த சுலோகம் நம் உள்ளளவில் நின்று, பலரின் வாழ்க்கையிலும், அவர்களை வெற்றி பெறச் செய்கிறது என்றால், அதற்கு காரணம், அகத்தியப் பெருமான், கலியுகத்தில், நல்லவர்கள், அவர்களுக்கு ஏற்படும் துன்பத்தை வீழ்த்தி, வெற்றி பெற வேண்டும் என்று அன்றே நினைத்ததுதான்! ஆதித்யஹ்ருதயம் மந்திரத்தினுள் எத்தனை சூட்சுமமான பலம் பொருந்திய பீஜாக்ஷரங்களை அகத்தியப் பெருமான் எப்படி பொருத்தியுள்ளார், என்று தெய்வ மொழியில் தலை சிறந்த ஒருவராலேயே கண்டறிய முடியும். அதற்கும் அகத்தியப் பெருமான் அருள் வேண்டும்.

தசாவதாரங்களில் ஒன்றான கிருஷ்ணாவதாரத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் ராசலீலை நடத்தியது ஏன் என்ற கேள்வி மனிதரிடையில் இன்றும் நிலவி வருகிறது. ஒரு சிலரால் அது தவறாகவும் சித்தரிக்கப் படுகிறது. அகத்தியப் பெருமான் எப்போதும் சொல்வது போல், அவரின் ஒவ்வொரு வார்த்தைக்கும், சூட்ச்சும அர்த்தங்கள் பலதும் உண்டு. அதை கண்டுபிடித்து தெளிவடைவது என்பது மிக அரிதான விஷயம். இருந்தும், அகத்தியப் பெருமான், ஸ்ரீ கிருஷ்ணரின் ராசலீலையை பற்றி மிகத் தெளிவாக விளக்குகிறார்.

ஸ்ரீ கிருஷ்ணர் கோபிகா ஸ்திரீகளுடன், நீரிலும், நிலத்திலும், ஆடிப்பாடி அவர்களை மகிழ்வித்ததே ராசலீலை ஆகும். சாதாரண மனிதனின் கண்களுக்கு, அவர்கள் அழகு, வதனம் நிறைந்த பெண்களாகத்தான் காண முடியும். ஆனால் சர்வமும் அறிந்த பரமாத்மாவிற்கு, இது ராம அவதாரத்தின் பாக்கி, இந்த அவதாரத்தில் நிறைவு பெறுகிறது என்று உணர முடிந்தது.

த்ரேதா யுகத்தில் ராமபிரான் வனவாசம் ஏகிய பொழுது, பல ரிஷிகள், "ராமன் தன் ஆஸ்ரமம் வருவாரா? அவர் திருமேனியை, திருவடியைத் தொட்டு தழுவும் பாக்கியம் கிட்டாதா? என்று ஏங்கினர். கடும் தவத்தை மேற்கொண்டதால், அவர்கள் தங்கள் ஆஸ்ரமத்தை விட்டு வெளியே வர முடியாத நிலையும் கூட. ஸ்ரீ ராமரால் அனைத்து ரிஷிகளின் அபிலாக்ஷைகளையும் பூர்த்தி செய்ய, அனைவரின் அச்ரமங்களுக்கு செல்ல முடியாத நிலை. மிகச் சுருக்கமான முனிவர்களை, அதாவது அகத்தியர், பரத்வாஜர், சபரி போன்ற ரிஷிகளையே ஸ்ரீ ராமன் சந்திக்க முடிந்தது. அதற்குள், கிஷ்கிந்தா, சுந்தர, யுத்த காண்டங்கள் போன்றவை இடைப்பட, ஸ்ரீராம்னால், மற்ற நூற்றுக் கணக்கான ரிஷிகளை சந்திக்க இயலவில்லை. அத்தனை ரிஷிகளின் நிறைவேறாத ஆசைகளும், வாசனையாக மாறி, ஸ்ரீ ராமனை பற்றிக் கொண்டது.

யுத்த காண்டத்தில், இலக்குவன், போரில் மூர்ச்சையுற, மனம் தளர்ந்து நின்ற ஸ்ரீ ராமன் முன் ஸ்ரீ அகத்தியப் பெருமான் தோன்றி, ஸ்ரீ ராமருக்கு ஆதித்யஹ்ருதயம் என்கிற ஸ்லோகத்தை உபதேசித்து அருளினார்.

பின்னர், "ஸ்ரீ ராமா! என்னுடன் வந்திருக்கும் முனிவர்களையும், ரிஷிகளையும் வணங்குவாயாக. நீ வனவாசம் பூண்ட பொழுது பல ரிஷிகள், நின் மானுட திவ்ய ரூபத்தை தரிசனம் செய்யத் துடித்தனர். அதற்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போகவே, அவர்களுள் தாங்கள் ஏற்ற தவ நிலைகள் முடிந்தவர்களை உன் தரிசனதிற்காக இங்கு அழைத்து வந்துள்ளேன். உன் திரு உடலை ஆலிங்கனம் செய்து, உனக்கு உடலால் சேவை செய்ய இவர்கள் உளமார விரும்புகின்றனர். அவர்களின் ஆவலை பூர்த்தி செய்வாயாக" என்றார்.

ஸ்ரீ ராமரும் அவ்வாறே இசைய அகத்தியப் பெருமான் "ஸ்ரீ ராமா! இன்னும் நூற்றுக் கணக்கான ரிஷிகள், மகரிஷிகள், வனங்களில் உன் மானுட ரூப தேகத்தை தரிசிக்க ஆவலாய் உள்ளனர். அவர்கள் இன்னும் தண்டகாரண்யத்தில் கடுந்தவத்தில் இருப்பதால் வனத்தை விட்டு வெளிவர இயலவில்லை. உன் வனவாசத்தில் அவர்களுக்குத் தரிசனம் தருவாய் என வழிமேல் விழிவைத்துக் காத்து நின்று ஏமாற்றமடைந்து விட்டனர். அவர்களுடைய அபிலாக்ஷைகளை எவ்வாறு பூர்த்தி செய்யப் போகிறாய்? உன் ராமாவதாரதிற்குள் இது சாத்தியமா? என்று வினவினார்.

அட! ஆமாம்! இந்த ராமாவதார முடிவுக்குள், அத்தனை பேர் ஆசைகளையும் என்னால் நிறைவேற்ற முடியாதே! என்று திகைத்து நின்ற ஸ்ரீராமர், அகத்தியப் பெருமானிடம் "முனி சிரேஷ்டரே! நூற்றுக்கணக்கான ரிஷிகளின் புனிதமான உள்ளம் ஏங்க நான் காரணமாகிவிட்டேனோ? இனி அவர்களை சந்திப்பது சாத்தியம் அல்லவே! தாங்கள்தான் எனக்கு நல்வழி காட்டவேண்டும்!" என்று வேண்டினார்.

அப்போது, அகத்தியர், "ஸ்ரீ ராமா! நீ சாட்சாத் நாராயணனின் திரு அவதாரம் என்பதை அவர்கள் அறிவார்கள். உனது அடுத்த அவதாரத்தில், துவாபர யுகத்தில் நீ ஸ்ரீகிருஷ்ணனாக அவதரிக்கும் பொழுது, ராமாவதாரத்தில் உன்னை கண்டு சேவை செய்ய ஏங்கிய மகரிஷிகள், உன் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் கோபிகா ஸ்த்ரீகளாய் பிறந்து உன்னுடன் தவழ்ந்து விளையாடி, அற்புதமான பக்தி பரவச நிலையை அடைவார்கள். இது அவதார இரகசியமாகும்" என்று அருளினார்.

ஆகவே, ராசலீலையில் ஸ்ரீ கிருஷ்ணன் விளையாடியது ராமாவதார மகரிஷிகளின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யவே ஆகும்.ராமாவதார பூர்வ ஜென்ம வாசனைகளுடன், பூர்ணாவதார மூர்த்தியான ஸ்ரீ கிருஷ்ணனை ஸ்பர்சிக்க, கோபிகா ஸ்த்ரீகளான மகரிஷிகள், இரு அவதார மூர்த்திகளின் தெயவாம்சங்களால், பக்தி பெருக்கின் உன்னத நிலையை அடையும் பேறு பெற்றனர்.

அகத்தியப் பெருமானின் அருளால் நடந்த நிகழ்ச்சிகளை உற்றுப் பார்த்தால், ஒன்று புரியும். சூட்ச்சுமம் விளங்க வேண்டும் என்றால், அதற்கு அவரின் அருள் இருந்தால்தான் முடியும். முன் சொன்னது போல், தலை முதல் பாதம் வரை புண்ணிய எண்ணங்கள் பூத்து குலுங்கம் ஒவ்வொரு அடியவருக்கும், அகத்தியப் பெருமானின் அருள் என்பது சுலபமே, அனைத்து சூட்ச்சுமமும் விளக்கப்படும், விளங்கும்.

எல்லோரும் அவர் அருள் பெற வாழ்த்துகிறேன்!

சித்தன் அருள்............ தொடரும்!

Saturday 12 July 2014

சித்தன் அருள் - 183 - சிவபெருமான் வாக்கு - நானே அவன் !

குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வரா 
குரு சாக்ஷாத் பரபிரம்ம தஸ்மை ஸ்ரீ அகஸ்திய சித்த குரவே நமஹ!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்று குரு பூர்ணிமா. அகத்தியப் பெருமானை குருவாக மனதில் வரித்துக் கொண்டு, செயல் பட்டு வரும் நமக்கு, இன்று அவருக்கு நமஸ்காரங்களை தெரிவிக்கும் விதமாக, உங்களுக்கு ஒரு தொகுப்பை சமர்ப்பிக்கலாம் என்று ஒரு அவா. கீழே தருகிற தகவல் எனக்கே புதிது. இப்போதுதான் அறிந்தேன். உடனேயே, குரு பூர்ணிமாவும் வந்துவிட்டது.

ஸ்ரீ அகத்தியர் பெருமானின் திருஅவதார சரிதம் உள்ளத்தை தொடும் ஓர் அரிய காவியமாகும். இறைவனின் சிருஷ்டி காலத்தை கணிக்க இயலாது.  கோடி கோடி யுகங்கள் தோன்றித் தோன்றி மறைய கோடிக்கணக்கான அகத்திய சித்தர்களும் தோன்றி, நிறைந்தனர்.  பரம்பொருளான, ஆதிசிவனின் திருகைலாயத்தில் என்றும் வாழும் சிவனின் அம்சமாம் ஆதிமூல ஸ்ரீ அகத்தியர், சரித்திரமே படைத்தவர். அகத்தியப் பெருமான் என்றும் சதாசிவனின் சித்தத்தில் திளைப்பவர், பரம்பொருள் போல நித்யத்வம் உடையவர்.

இறைவனின், உலக சிருஷ்டியில் மீன்கள், பறவைகள், கடல் தாவரங்களின் படைப்பிற்கு அடுத்து வர வேண்டுவன, ஐந்தறிவு படைத்த விலங்கினங்கள்.  அவைகளை படைக்கும் முன் அவைகளுக்கு வேண்டிய உணவைப் படைக்க வேண்டுமல்லவா? அதற்காக தாவரங்களை படைக்க பரமசிவனார் உளம் கனிந்தார்.

அப்போது அங்கே ஒரு அற்புதமான தேவி தோன்றினாள். தன்னை வணங்கி நின்ற தேவியை "ஆஷா சுவாசினி" என்றழைத்த பரமசிவன் "தாவரங்களை பூ உலகில் படைப்பாய்" என ஆணையிட்டார்.  அவளும் பரம்பொருளை பணிந்து, இட்ட பணியை தொடங்கினாள்.

கோடி கோடியாம் விலங்கினங்கட்களுக்கும், ஏன் மனிதர்களுக்கும் கூடத் தாவரங்கள் தானே ஜீவசக்தியை தரும் உணவாகின்றது.  எனவே முதல் தாவரத்தை ஓர் அற்புதமான தெய்வீகப் படைப்பாக்கத் தீர்மானித்தாள் ஆஷாஸுவாசினி தேவி. இறைவன் நினைத்ததும் அது தான்.

அனைத்து லோகங்களிலும், மகரிஷிகள் மற்றும் தேவர்கள், கந்தர்வர்கள் இடையே மலர்ந்த நல்லெண்ணங்களை திரட்டினாள் தேவி. பரிசுத்தத்திற்கு இலக்கணமாகத் திகழும் மகரிஷிகள், தேவர்கள், கந்தர்வர்கள், என்றும் இறைத் தவம் புரியும் இறை அடியார்கள் ஆகியோரின் நல்லெண்ணங்களில் இருந்து ஒரு புனிதமான நல்எண்ணத்தை தேவி வடித்து எடுத்தாள் என்றால் அந்தப் புனிதமான எண்ணத்தின் மகத்துவத்தை என்னென்று சொல்வது?

ஆஷாஸுவாசினி தேவி ஹரியையும் சிவனையும் தொழுது, "ஹரிஹர ரூபர்களே, தங்களுடைய ஒப்பில்லா இறைசக்தியை அடியேன் பகுத்து, வடித்துள்ள இந்த நல்ல எண்ணத்தின் மூலக் கருவாய் அமைத்து, அரியும் , சிவனும் சேர்ந்த "அரிசியாய்" மாற அருள் பாலிப்பீர்களாக" என்று பிரார்த்திக்க, ஹரிஹர ரூபனும் அவ்வாறே அருளினார்.

அன்று முதல் அரியும் சிவனும் சேர்ந்ததே அரிசியாயிற்று.  தேவி, இயற்கை மாற்றங்களில் இருந்து அரிசியை காப்பாற்ற, அடுத்த ஒரு பரிசுத்த எண்ணத்தை கொண்டு உறையாக அமைக்க, உமி மூடிய அரிசியே முதல் தாவரமாக ஆகியது.

தேவியின் அற்புதமான பணி தொடர்கிறது.

ஹரிஹரனின் தெய்வீக அம்சத்தால் புனித எண்ணத்துடன் உருப்பெற்ற நெல் (அரிசி) மணியைப் பன்மடங்காக்கி ஏனைய நிலத்தாவரங்களையும் சிருஷ்டிக்க வேண்டுமே! எனவே, தேவி "யார் ஒருவர் சிரசு முதல் பாதம் வரை புனிதமான நல் எண்ணங்களை உடையவரோ, அவர் இந்த நெல் மணியை தன் கையில் தாங்கி பிரார்த்தித்தால் இந்த நெல் மணி விருத்தியாகும். அத்தகையவர் முன் வாருங்கள்" என்றாள்.

இந்த அழைப்பின் உட்பொருளை உணர்ந்த பலர் மௌனமாயினர்.  இறைவனின் லீலை அன்றோ! தகுதி பெற்றிருந்தும், யாரும் முன் வராததால், தேவி யோசித்தாள்.

உடனே சிவனை வணங்கி, "சிரசு முதல் பாதம் வரை புனிதமே பூத்துக் குலுங்கும் என் மகன் அகத்தியனை அழைக்கிறேன்! அவனால் இந்த நற்காரியம் செவ்வனவே முடியும்" என்றாள். எம்பெருமானும் அனுமதியளிக்க, 

அகத்தினுள் இருந்து அழகாய் ஆர்பவித்து 
எழுந்து நின்ற எண்ணிலா ஈசர்க்கும் பட்டம் சூட்டி 
எண்ணத்தில் கலந்து எண்ணத்தை சுத்தமாக்கி
அத்தனை சுத்தமும் அற்புதமாய் தேர்ந்தெடுத்த 
என் மகனே அகத்தியா! வா!

என்று தேவி அழைக்க, விண்ணுக்கும், மண்ணுக்கும் விரிந்த மாபெரும் விஸ்வரூபியாய் ஸ்ரீ அகஸ்தியர், தேஜோமயமாய், ஒளிப்பிழம்பாய், கோடி கோடியாம் ஆயிரம் ஆதவர்களின் அருட்ப்ரகாசத்துடன் அங்கே எழுந்தருளினார்.

ஸ்ரீ அகத்தியப் பெருமானின் அருட் கரத்தில் அவர் அன்னை ஆஷா ஸுவாசினி தேவி அற்புத நெல் மணியை வைத்திட, அது சங்கர நாராயண மணியாய் ஒளி வீசியது. ஸ்ரீ அகத்தியரின் திருக்கரத்தில் தவழ்ந்த நெல் மணி, இமைக்கும் நேரத்தில் பல்கிப் பெருகி, கோடி கோடி நெல் மணிகளாய், விண்ணிற்கும், மண்ணிற்கும் இடையே பல கோடி இமயமலைகளை நிகர்த்தார் போல் குவிந்தது.

பரம்பொருளான சதாசிவன் நகைத்தான். "பார்த்தீர்களா இந்த அற்புதத்தை. இந்த அகத்தியன் என்னிடமிருந்து உதித்தவனே! அவன் என் பூர்ணாம்ச அவதார மூர்த்தியே! என் பாகத்திலிருந்து பிரிந்த சித்தர்குல நாயகனாய், நான் உங்களுக்கு அளிக்கும் பரிசு, இந்த அகத்தியன். நானே அவன்" என்று அருளினார்.

நெல் மணிகளை மலைகள் என குவித்த ஸ்ரீ அகத்தியரின் திருக்கரங்கள், கோடிக்கணக்கான தாவரங்களின் வித்துக்களையும் உற்பவிக்க, உலகத்தில் முதல் தாவர சஞ்சாரம் அங்கே தொடங்கலாயிற்று. எனவே உலகின் அனைத்து தாவரங்களுக்கும் அம்மை, அப்பன் ஸ்ரீ அகத்தியரே. மூலிகை தாவரங்களின் மூலக்கரு ஸ்ரீ அகத்தியரே! எனவே தான் இன்றைக்கும் எந்த மூலிகையும் அகத்தியரை கண்டால், நமஸ்கரித்து தன் இனம், பெயர், பொருள், பயன் சொல்லி தலை வணங்கும்.

எனவே, "ஓம் அகத்தீசாய நமகா"  என்று வணங்கி எந்த தாவரத்தையும் பயன்படுத்திடில் அதன் பூரண சக்தியை நாம் பெறலாம். இது சுபிட்சத்தை அளிக்கும்.

பின் குறிப்பு:- இன்றைய குரு பூர்ணிமா புண்ணிய தினத்தில், உங்கள் குருவை நினைத்து நீங்கள் என்ன புண்ணியம் செய்யப் போகிறீர்கள்? ஏதேனும் ஒரு நல்ல செயலை, அவரை நினைத்து செய்யுங்கள். அது போதும் குரு தட்சிணையாக!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகதீசாய நமக!
சித்தன் அருள் .................. தொடரும்.

Thursday 10 July 2014

சித்தன் அருள் - 182 - அகத்தியப் பெருமானின் "வாழ்க்கை" பரிசு!


மனித மனம் மிக விசித்திரமானது. யோசித்து முடிவெடுக்கும் உரிமையை இறைவன் ஒவ்வொரு மனிதருக்கும் கொடுத்திருக்கிறார் என்றாலும், சில வேளை பேராசை, அதை அடைய அவர்கள் எடுக்கும் குறுக்கு வழி முறைகள், சூழ்நிலை, தெளிவில்லாய்மை போன்றவை பல நேரங்களில், அவனை அல்லது அவளை அதள பாதாளத்தில் தள்ளிவிடும். அப்படி மாட்டிக் கொண்ட சூழ்நிலையில், சித்தர் பெருமானை நாடி சென்றால், அப்படிப்பட்ட சூழ்நிலையிலும், அவர்கள் கர்மாவை, எதிர்காலத்தை பார்த்து ஒரு சில வழிகளை காட்டி, நல்வழியில் திருப்பி விடுவார். அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை இன்று பார்ப்போம்.

ஒரு நாள் நாடி வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு 24 வயது மதிக்கத்தக்க வாலிபன் வந்து அமர்ந்தான். எல்லோருக்கும் நாடி வாசித்தபின், அவன் முறை வந்ததும் அருகில் அழைத்தேன்.

"என்ன வேண்டும்?" என்று வினவினேன்.

"எனக்கு நாடி வாசிக்க வேண்டும்" என்றான்.

"எதை பற்றி அகத்தியப் பெருமானிடம் கேட்கவேண்டும்?" என்றேன். 

"​நான் ​25 லட்சம் ​கடன் பட்டிருக்கிறேன். எனது மாத​ ​சம்பள ​ம் ​வட்டிக்​கு மட்டும் சரியாக ​ இருக்கிறது.  நீங்கள் தான் அகத்தியரிடம் சொல்லி, என் கடனை தீர்க்க வழி ​பெற்று தர வேண்டும்" என்று ​கூறினான்.

​அதை கேட்டதும் ​எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இந்த சின்ன வயதில் 24 லட்சம் ரூபாய் கடனா? என்று அந்த பையனை மேலும் கீழும் பார்த்தபோது அவனே தலைகுனிந்து கொண்டான்.

"எப்படி கடன் பட்டிருப்பான்?" என்று நான் யோசிக்கும்போதே அவனே ​தன் வாய் திறந்து சொன்னான்.

"எனக்கு சின்ன வயதில் இருந்தே நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும்​ என்ற ஆசை.  கார், பங்களா வாங்கவேண்டும் என்று ஆசை.  இது பின்னர் பேராசையாக மாறி விட்டது.  என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் போனதால் சரியாக மாடிக் கொண்டேன்" என்றான்.

"எப்படி?"

"வெளிநாட்டுக் கம்பனி ஒன்று எனக்கு ​ஒன்றே கால் கோடி பரிசு ​விழுந்திருப்பதாகவும், இதற்காக அந்தக் கம்பனியிலிருந்து இருவர் வந்து என்னைச் சந்திக்கப் போவதாகவும் திடீர் செய்தி ஒன்று வந்தது.   ​இதை கண்டு ஆச்சரியமடைந்து போனேன். அதே சமயம், இந்த விஷயம் வெளியே தெரிந்து விட்டால் எல்லோரும் போரமைப்படுவார்கள், அந்த பொறாமை காரணமாக யாராவது ஏதாவது மொட்டைக் கடிதாசி எழுதி எனக்கு வர வேண்டிய பணத்தை வரவிடாமல் தடுத்து விடுவார்கள் என்ற பயம் ஏற்பட்டது.  அதனால் இந்த விவரத்தை பற்றி வேறு யாரிடமும் மூச்சு விடவே இல்லை" என்றவனிடம் 

"வீட்டில் உள்ளவர்​களுக்குக் கூட சொல்லவில்லையா?" என்று நான் கேட்டேன்.

"அப்பா, அம்மா உடன்பிறந்த சகோதரன் உள்பட யாரிடமும் இதைச் சொல்லவே இல்லை.  அந்தப் பரிசுப் பணம் கிடைத்த பிறகு திடீரென்று அது பற்றி சொல்லி அவர்களை ஆச்சரியத்தில் திக்கு ​முக்காட வைக்கலாம் என்று நினைத்து மறைத்து விட்டேன்".

"பிறகு என்னாவாயிற்று?"

"ஒரு நாள் அந்தக் கம்பனி நிர்வாகிகள் என்று சொல்லிக் ​கொண்டு ஒரு​வரும்​, ​ஒரு ​இளம் பெண்ணும் என்னைப் பார்க்க வந்தனர்.  ​ஒன்றேகால் கோடி "செக்கை" ​காட்டி, இது ​உங்களுக்கான செக். முதலில் நீங்கள் 25 லட்சம் தரவேண்டும். அதையும் உங்களுக்கே திருப்பித் தந்து விடுவோம்" என்று ஆசை காட்டினார்கள்."

"​ஒன்றேகால் கோடி ரூபாய் செக்கில் என் பெயர் இருந்ததைக் கண்டதும் எனக்கு தலை கால் புரியவில்லை.  எனவே, 25 லட்சம் ரூபாய் கொடுப்பதில் தவறில்லை என்று எனக்குத் தோன்றிற்று" என்று முடித்தான்.

"எதற்காக 25 லட்சம் ரூபாய் கேட்கிறீர்கள் என்று கேட்கவில்லையா?" என்று கேட்டேன்.

"கேட்கவில்லை" என்றான்.

"சரி... பின்னே என்ன செய்தீர்கள்?"

"இந்த விஷயத்தை, இதற்குப் பிறகு தான் அப்பா, அம்மா தம்பியிடம் சொன்னேன்.  அவர்கள் முதலில் நம்பவில்லை, அவர்களது வாயை அடக்கி, இருக்கிற நகைகளை விற்றேன். நிலமொன்று இருந்தது.அதையும் விற்றேன்.  அப்படியும் பணம் போதவில்லை என்பதால் எனது தந்தைக்குச் சொந்தமான வீட்டையும் விற்றேன்.  அலுவகத்தில் வெளியில் என்று கடன் வாங்கினேன்.  கந்து வட்டிக்கும் கடன் வாங்கினேன்.  இன்னும் ஒரு வாரத்திற்குள் 25 லட்சம் பணமாகக் கொடுக்கவில்லை என்றால், ​ஒன்றேகால் கோடி பரிசுப் பணம் கிடைக்காது என்று வந்தவர்கள் ​கெடுவிதித்ததால் பயந்து, பயந்து அத்தனை ​ஏற்பாடுகளையும் செய்து, அந்த 25 லட்சம் ரூபாயை பணமாக அந்த நபர்களிடம் கொடுத்தேன்".

"அதுவரை அவர்கள் உங்களுடன் தான் இருந்தார்களா?'.

"இல்லை, மும்பை, டெல்லிக்குப் போவதாக சொன்னார்கள்.  ஒரு வாரம் கழித்து மீண்டும் வந்தார்கள்.  "பணம் ரெடி ஆயிற்றா?" என்றார்கள்.  பணம் ரெடி ஆகவில்லை என்றதும், மேலும் பத்து நாட்கள் அவகாசம் தருவதாகச் சொல்லி இருக்கிற பணத்தை ​வாங்கிக் கொண்டார்கள்."

"அப்புறம்?"

"அப்புறம் என்ன; எனக்கு பணம் புரட்ட ஒரு மாதமாயிற்று.  அவர்கள் கேட்ட அத்தனை பணத்தையும் கொடுத்தேன். அவர்களும் அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டு, அந்த ​ஒன்றேகால் கோடி ரூபாய்க்கான செக்கை என்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றார்கள்."

"சாதாரண சம்பளக்காரனாக இருந்த நான், ஒரே மாதத்தில் கோடீஸ்வரனாக மாறி விட்டேன் என்ற சந்தோஷத்தில் மிதந்தேன்.  ஒரு நல்ல நாள் அன்று அந்த "செக்கை" எனது வங்கி கணக்கில் போடலாம் என்று வீட்டில் வைத்திருந்தேன். பின்னர் பார்த்தால் அது போலியான "செக்" என்பதும், ​ ​அப்படிப்பட்ட நிறுவனம் எதுவும் கிடையாது என்பதும் தெரிந்தது.  நன்றாக ஏமாந்து போனேன்" என்றான்.

"என்ன படித்திருகிறீர்கள்?"

"எம்.டெக்.  ஒரு சாப்ட்வயர் நிறுவனத்தில் பணிபுரிகிறேன்".

இதைக்கேட்டதும் என் கண்கள் வியப்பில் அப்படியே நின்றன.

"நான் வாழ்வதா?  சாவதா? என்று ​தெரியவே இல்லை. இருமுறை தற்கொலைக்கு முயன்றேன்.  ஏதோ தப்பிப் பிழைத்தேன்.  எப்படி என் கடன் அடையும்? என் எதிர்காலம் என்ன? ​அகத்தியர்தான் கூறவேண்டும்!" என்று கண்கலங்க கூறினான்​,​ அந்த சாப்ட்வயர் எஞ்சினியர்.

அகத்தியரிடம் அவனது வேண்டுகோளைச் சொல்லி "வழிகாட்ட" வேண்டினேன்.

"குறுக்கு வழியில் பெரும் பணக்காரனாக ஆசைப்பட்டு தவறான பாதையில் சென்றவன் இவன்.  அப்போது யாரிடமாவது இந்த விஷயத்தைச் சொல்லி, தகுந்த ஆலோசனை கேட்டிருக்க வேண்டும்.  சுயநலம் இவன் கண்ணை மறைத்ததால் இப்போது பெரும் பள்ளத்தில் வீழ்ந்திருக்கிறான்.

இதை "விதி" என்று சொல்லி ஏற்க மாட்டேன்.  இவனது பேராசை இவன் கண்ணை மறைத்ததோடு மட்டுமின்றி, இவனது குடும்பத்தையும் கெடுத்தது.  அவமானம் தாங்காமல், அண்ணனுக்கு தான் பட்ட கடனுக்காக இவனது தம்பி வீட்டை விட்டேன் ஓடிப் போனான்.  இன்னும் வீடிற்கு திரும்பி வரவில்லை.  அவனோ தற்கொலை செய்து கொண்டதாக ஊரில் பேச்சு.  இல்லையா?" என்று அகத்தியர் சொன்னதும், மிரண்டு போனான் அந்த ​வாலிபன்.

"இருப்பினும், ஈன்றிட்ட இவனது பேற்றோர்கள கடன் தொல்லை தாளாமல் இன்னும் சில நாட்களில் அல்லது சில மாதங்களில் தற்கொலை செய்து கொள்ளக் கூடும்.  இவன் செய்த பிழைக்கு இவனது பெற்றோர் பலியாகக் கூடாது என்பதை அகத்தியன் கருத்தில் கொண்டு, அந்த பெற்றோர்களைக் காப்பாற்றவும், இவன் பட்ட கடன் தொல்லையிலிருந்து விடுபடவும் ஒரு அருமையான வழியைக் ​காட்டுகிறேன்.

அதற்கு முன்பு இவன், ​தன் பெற்றோருடன் அறுபடை முருகப் பெருமான் கோவிலுக்குச் சென்று வரட்டும்.  பக்தியுடன் இவன் பயணம் மேற்கொண்டால் ஒரு சிலிர்க்க வைக்கும் சம்பவம் நடக்கும்.  பிறகு அகத்தியரை நோக்கி வரட்டும்" என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

"முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுக்கு செல்ல தேவையான பணம் என் கையில் இப்போது இல்லையே!" என்று கையைப் பிசைந்தான் அவன்.

"அகத்தியரை நம்பி முயற்சி செய்.  யாராவது ஒருவர் அகத்தியரால் அடையாளம் காட்டப்படுவார்" என்றேன் நான்.

ஏதோ ஒரு தைரியத்தில் கண்ணீர் மல்க விடை பெற்றான் அந்த பையன்.

இரண்டும் மாதம் கழிந்திருக்கும்.  வாசலில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.

எழுந்து சென்று எட்டிப் பார்த்த பொழுது அந்த பையன் வாசலில் நின்று கொண்டிருந்தான். உள்ளே வந்த அவனை நினைவிற் ​ ​கொண்டு, "என்ன அறுபடை வீடு சென்று வந்தாயிற்றா?" என்று கேட்டேன்.

"நேற்று தான் அறுபடை வீடுகளுக்கு சென்று திரும்பி வந்தேன். ஒரு சந்தோஷச் செய்தியை உங்களிடம் சொல்லி விட்டுப் போக ​ ​வந்திருக்கிறேன்" என்றான்.

"என்ன........ கடன் அடைய வழி கிடைத்து விட்டதா?"

"ஆமாம்" என்றான்.

"எப்படி?" என்றேன்.

"அகத்தியர் சொன்னபடி அறுபடை வீடு செல்ல சில ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. பல இடங்களில் கேட்டுப் பார்த்தேன். கிடைக்கவில்லை.  சென்னை வடபழனி முருகன் கோவிலி ல்​ ஒரு வெள்ளிக்கிழமை, முருகனை நினைத்துக் கண்ணீர் விட்டு அழுதபோது சுவற்றோரம் சாய்ந்து, மயக்கமடைந்து சாய்ந்து விட்டேன்.

எத்தனை நிமிடம் நான் மயக்கமுற்ற நிலையில் இருந்தேன் என்பது எனக்கு தெரியாது.  கண் விழித்துப் பார்த்த பொழுது என் அருகில் சிவப்பு நிற துணிப்பை ஒன்று கிடந்தது.  யாருமே அதனை உரிமை கொண்டாடவில்லை என்பதைத் தெரிந்ததும், பைக்குள் என்ன இருக்கிறது என்று எடுத்துப் பார்த்தேன்.

அதற்குள் 6 ஜோடி தங்க வளையல்கள் பத்திரமாக ஒரு பேப்பருக்குள் சுற்றி வைக்கப் பட்டிருந்தன.  அதை யாருமே உரிமை கேட்டு வரவில்லை என்பதை அறிந்த நான், அறுபடை முருகன் கோவில்களை தரிசிக்க முருகப் பெருமானே எனக்கு அளித்த பரிசுதான் அது என்று எண்ணி அதை அடகு கடையில் அடமானம் வைத்தேன்.

நான் செய்தது தவறுதான் என்றாலும், ஏதாவது ஒரு காலகட்டத்தில் அந்த வளையல்களைத் திருப்பி முருகன் கோவில் உண்டியலில் போட்டு விடலாம் என்று நினைத்து பெற்றோருடன் அறுபடை வீடுகளுக்கு பயணத்தை மேற்கொண்டேன்.

யாரோ ஒருவருக்கு சொந்தமான வளையல்களை அடமானம் வைத்து, தரிசனம் செய்ய செல்கிறோமே, இது மிகப் பெரிய பாவம் இல்லையா? இப்படிச் செய்யலாமா? என்று என் மனசாட்ச்சி குத்தத்தான் செய்தது.  ஆனால் ​,​ எனக்கு வேறு வழி ​தெரியவில்லை என்பதால் மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.

ஆறாவது படை வீடு சென்று முருகப் பெருமானை வணங்கிக் கொண்டிருக்கும் ​பொழுது முருகன் சந்நிதானத்தில் ஒரு மிகப் பெரிய பணக்காரர் குடும்பத்தைச் சந்திக்க நேரிட்டது.  அவரது மகளுக்கு இளம்பிள்ளை வாதம் இருப்பதால் யாரும், அவளை மணந்து கொள்ள முன் வரவில்லை.  இதனால் முருகன் கோவிலுக்கு வந்து கொண்டிருக்கிறார் என்று தெரிந்தது.

அவருக்கு என்னவோ என்னைப் பார்த்த உடன் பிடித்து விட்டது.

"என் மகளை உங்கள் மகன் மணந்து கொள்ள முடியுமா?" என்று அங்கிருந்த என் பெற்றோரிடம் கூச்சத்தோடு கேட்டிருக்கிறார்.

இரண்டு கால்களும் ஊனம், உடலும் பருமன், படிப்பும் இல்லை. என்றாலும் அந்தப் பெண்ணின் ஏக்கமான பார்வை என் மனதைத் தொட்டது.  துணிந்து அந்தப் பெண்ணை மணப்பதாக சம்மதித்தேன்.

பணத்திற்காக இந்தப் பெண்ணை மணக்க முன் வந்திருக்கிறாயா? ​​என்று என் பெற்றோர் என்னை சந்தேகப்பட்டுக் கேட்டார்கள்.

"இல்லை... அறுபடை வீடு தரிசனம் செய்து விட்டு வா. ஒரு சிலிர்க்க வைக்கும் சம்பவம் நடக்கும் என்று அகத்தியர் சொன்னாரே, அதற்காகத் தான் நான் இந்தப் பெண்ணை மணக்க முன் வந்தேன்" என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்.

நான் எடுத்த முடிவு சரிதானே? என்பதை அகத்தியர் தான் சொல்ல செண்டும்" என்று, நடந்ததை எல்லாம் விளக்கமாகக் கூறி கேட்டான் அந்த பையன்.

அகத்தியப் பெருமான் இதற்கு பச்சைக் ​கொடி காட்டினார்.

அந்தப் பையன் நெகிழ்ந்து போனான்.

இப்போது அவன் வாங்கிய கடன்களை எல்லாம் அடைத்து, அருமையான மனைவியோடு ​இல்லற வாழ்க்கையை மேற் கொண்டு வருகிறான்.

​வாழ்க்கையின் விளிம்புக்கு வந்துவிட்டோம் என்று நாம் தெரிந்து கொள்ளும் நிலைமையிலும், அகத்தியரை நம்பி, அவர் வார்த்தைகளை மதித்து நடந்து கொண்டால், மீண்டும் உச்சாணிக் கொம்பில் நம்மை அமர்த்துவார் என்பதற்கு, இந்த நிகழ்ச்சி ஒரு உதாரணம்.

அகத்தியர் அடியவர்களே, வாழ்க்கையின் ​தேவைகளுக்காக ஆசை படுவதில் தவறில்லை. ஆனால், அதுவே பேராசை ஆகி, நம்மையே விழுங்கி விடாமல் பார்த்துக் கொள்ளும் முடிவுகளை நீங்கள் எடுங்கள். நிச்சயமாக, அகத்தியர் அருள் உங்களை எல்லாம் எப்போதும் சூழ்ந்து நின்று காப்பாற்றும். பகவத் கீதையில் இறைவன் சொன்னது போல்,  தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும், தர்மம் வெல்லும் என்பது இந்த நிகழ்ச்சியில் தெளிவாகிறது. இங்கு சித்த தர்மம் தான் வென்றது. என்றுமே அதுதான் வெல்லும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமக!

​[வரும் சனிக்கிழமை குருபூர்ணிமா! அகத்தியருக்கு மரியாதை செய்யும் விதமாக அன்று ஒரு தொகுப்பை எதிர் பாருங்கள்!]​


சித்தன் அருள் ............... தொடரும்

Thursday 3 July 2014

சித்தன் அருள் - 181 - கருங்குளம் - எல்லோருக்கும் தேவையான தகவல்!


வணக்கம் அகத்தியப் பெருமானின் அடியவர்களே!

ஒவ்வொரு எண்ணமும், ஒரு அனுபவத்தை தரும் என்பது அடியேனது திடமான நம்பிக்கை. அதிலிருந்து இறை அருளையும், பெரியவர்களின் கனிவையும் உணரமுடியும்.

சித்தன் அருள் - 165இல் அகத்தியப் பெருமான் நமக்காக கரும்குளம் பெருமாள் கோயிலை பற்றி சொல்லும் பொழுது, மலைக்கு கீழே அமர்ந்திருக்கும் தம்பதி சமேதரான நவக்ரகங்களை பற்றி சொல்லி, பின்னர் கீழே உள்ள பரிகாரத்தை யாவரும் செய்யலாம் என்று சொன்னார்.

​"நவக்ரகங்கள், தம்பதிகளுடன் இருக்கின்ற அந்த அறிய பெரும் காட்சி, உலகத்திலே முதன் முதலாக, இங்குதான் நடை பெற்றது.  உலகத்திலேயே, முதன் முதலாக நடை பெற்ற அந்த காட்ச்சியைத்தான் , இங்குள்ள அத்தனை பேருக்கும் அகத்தியன் எடுத்துக் காட்டி, சாபங்கள் எல்லாம் போக்க வேண்டும் என்பதற்காகவே இங்கு வரச்சொன்னேன். நவக்ரகங்கள் தம்பதிகளாய் அமர்ந்து அகமகிழ்ந்து இருக்கின்ற நேரம். எதிரும் புதிருமாய் இருந்தவர்கள் எல்லாம் ஒன்று சேருகின்ற காலம். யார் யார் எவருக்கு விரோதிகளோ, பொறாமை பிடித்தவர்களோ, வஞ்சனை செய்பவர்களோ, கெடுதல் செய்பவர்களோ, யாராக இருந்தாலும் அவர்கள் எல்லாம் பெட்டி பாம்பாய், அடங்கிவிட்டு, அமைதியாகவும், ஆனந்தமாகவும், சந்தோஷமாகவும் இருக்கப் போகிறார்கள். நாளைக்கு ஏதேனும் திருமணம் நடக்கவேண்டும் என்றாலோ, அல்லது திருமணத் தடை இருந்தாலோ, எதுக்கு எதாக இருந்தாலும் இங்கு வரவேண்டாம், இங்குள்ள தம்பதிகள் சகிதம் உள்ள நவக்ரகங்களுக்கு, ஏதேனும் சிறு காணிக்கை அனுப்பி நினைவு படுத்திக் கொள்ளலாம். அல்லது, மன சுத்தத்துடன் மனதார நினைத்துக்கொண்டு, நவக்ரக தம்பதிகளை வந்து வணங்கினால், காலா காலத்துக்கும் அவர்கள் திருமண வாழ்க்கை ஒரு போதும் பாதிக்கப் படமாட்டாது. திருமண வாழ்க்கை பாதிப்பு மட்டுமல்ல, அத்தனை எதிர் பார்ப்புகளும், என்னென்ன தடங்கல்களை யார் யார் செய்வார்கள் என்பதை எல்லாம் இந்த நவகிரக உலகத்துக்குள் அடக்கம்."

நான் நவக்ரகங்களின் பக்கமே செல்பவன் அல்ல. அதற்காக துச்சாடனம் செய்பவனும் அல்ல. ஏதேனும் ஒரு கோவிலில் அவர்கள் சன்னதியை கடந்து செல்லவேண்டி வந்தால், "இது இறைவனை பார்க்கவேண்டி வந்துள்ளது. அங்கேயே செல்கிறது" என்று மனதில் நினைத்துவிட்டு சென்றுவிடுவேன். சில வேளை, "நீங்கள் அங்கேயே அமர்ந்து உங்கள் வேலையை பாருங்கள், நான் இறைவனை சரணடைய செல்கிறேன்" என்றுவிட்டு விலகிவிடுவேன். அது சரியா, தவறா என்றெல்லாம் சிந்திப்பதே இல்லை. உத்தரவு மேலிடத்திலிருந்து வந்த பின் யோசிப்பது கிடையாது. அது தான் என் வழக்கம்.

சித்தன் அருளில் கரும்குளத்தை பற்றி வந்தது, அகத்தியப் பெருமானின் அடியவர்கள் நிறைய பேர் தொடர்பு விலாசம் அல்லது தொலை பேசி எண் கிடைக்குமா என்று கேட்டிருந்தனர். என்னிடம் அந்த தகவல் இல்லாமல் இருந்தது, கொடுக்க முடியவில்லை. இத்தனை தகவலை கொடுத்த "சித்தன் அருளால்" ஏன் அவர்கள் கேட்ட தகவலை கொடுக்க முடியவில்லை என்று யோசித்தேன். சரி! ஒரு முறை சென்று தேவையான அனைத்து தகவலையும் அள்ளிவருவோம் என்று தீர்மானித்தேன். தனியாக செல்ல விருப்பம் இல்லாததால், ஒரு நண்பரை நாடி கேட்டேன். அவரும் சரி என்றார். ஆனால் என்னுள் தான் ஒரு குழப்பம் நிறைந்து நின்றது.

நவக்ரகங்களை தேடி செல்லாத நமக்கு, அகத்தியர் ஏன் இப்படி ஒரு வேலையை கொடுக்கிறார், என்று யோசித்து, "அய்யா! கூட இருந்து நடத்திக் கொடுங்கள். போய் பார்த்ததால் எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது" என்று அவரிடமே வேண்டிக் கொண்டேன். 

முதல் நாள் இரவு நண்பர் என்னை வந்து சந்தித்தார்.

"நம் பயணம் தீர்மானித்தாயிற்றா? எப்பொழுது கிளம்பலாம்? நாளை செல்வோமா" என்று கேள்விகளை தொடுத்தார்.

எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

அவர் கேட்ட கேள்விகளை மனதுள் வாங்கி பெருமாள் பாதத்தில் வைத்து விட்டு சிறிது நேரம் த்யானத்தில் அமர்ந்தேன். இன்னும் மனது அங்கு செல்வது பற்றி உறுதியான தீர்மானம் எடுக்கவில்லை என்பது புரிந்தது. சற்று நேர அமைதி!

திடீரென்று யாரோ சொல்வது போல் கேட்டது.

"நீ, என் ஆனி திருமஞ்சனம் காண்பாய்."

அவ்வளவுதான். த்யானம் கலைத்து வெளியே வந்து சிரித்துக் கொண்டே,  ​"நாளை செல்கிறோம், காலையில் வாருங்கள்" என்று கூறி நண்பரை அனுப்பி வைத்தேன்.

அதன் பின், மெதுவாக தின காலண்டரை பார்க்க "மறுநாள் ஆனி மாதம் பிறப்பு" என்று போட்டிருந்தது. அமைதியானேன். என்னவோ நடக்கப் போகிறது என்பது புரிந்தது.

மறுநாள் காலை, கிளம்பும் பொழுது தாமதமாகிவிட்டது. கோவில் ஒரு 10 மணிவரை திறந்திருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருந்தேன். தரிசனம் கிடைக்குமா என்று தெரியவில்லை. என்னவானாலும், நெரிசலில் மாட்டிக்கொண்டு சென்று சேரும் பொழுது 10.30 ஆகிவிடும். சரி பார்க்கலாம் என்று மனதில் நினைத்து, பெருமாளிடம் வேண்டிக் கொண்டேன்.

"பெருமாளே, நாங்கள் கிளம்பி வருகிறோம். தரிசனம் வேண்டும். தாமதாகிவிட்டது. ஏதோ ஒன்றை பார்த்து செய்யுங்கள்" என்று விட்டு பயணத்தை தொடங்கினோம்.

சென்று சேர்ந்த பொழுது காலை மணி 10.30. படி வழி ஏறிச்சென்றால் இன்னமும் நேரம் ஆகும் என்றோ, பெருமாள் மாற்று வழியில் மலை மேல்வரையிலும் வண்டியில் வரவழைத்தார் என்று தான் சொல்ல வேண்டும். வேக வேகமாக் ஓடிச்சென்று முதல் சன்னதியில் எட்டிப்பார்க்க, நிறைய பேர் (ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்) அமர்ந்திருந்தனர். பெருமாள் சன்னதி பூட்டியிருந்தது.

மலைமேல் இரண்டு சன்னதி. ஒன்று கரும்குளம் பெருமாள் சன்னதி. இன்னொன்று ஸ்ரீனிவாசர் சன்னதி. ஸ்ரீனிவாசர் சன்னதியை இழுத்து மூடிவிட்டு வந்த அர்ச்சகர் நேராக மடப்பள்ளியை நோக்கி சென்றார்.

பிறகு வெளியே வந்தவர், "எல்லோரும் வந்தாச்சா? இன்று எல்லாமே தாமதமாகிவிட்டது. ஏன் என்று தெரியவில்லை. இனி திருமஞ்சனம் தொடங்கலாமா?" என்று முன்னாடி அமர்ந்திருந்த அந்த குடும்பத்தின் தலைவரை நோக்கி கேட்டார்.

அவரும் திரும்பி எல்லோரையும் பார்த்துவிட்டு, "எல்லோரும் வந்தாகிவிட்டது, பூசையை தொடங்குங்கள்" என்றார்.

நான் சற்று புன்னகையுடன் நின்றுகொண்டிருந்தேன். என்ன சொல்ல? எதை சொல்ல? இப்படியெல்லாம் பக்தனுக்காக பெருமாள் காத்திருப்பாரா?

சன்னதிக்குள் சென்ற பூசாரி அலங்காரம் கலைத்த பொழுதுதான் பார்த்தேன், அங்கு சிலை இல்லை. சுதை சிற்பம் போல் பெருமாள் நின்று கொண்டிருந்தார். சந்தன மரத்தில் கடைந்தெடுத்த ஒரு உருவம். திருப்பதி வேங்கடவரின் நெற்றியில் இருக்கும் நாமம் போல் சற்று பெரிய உருவம், அவ்வளவு தான்.

அபிஷேகம் நடந்தது. மிக ஆனந்தமாக இருந்தது அந்த காட்சி. ஒரு ஸ்தூபி போல் இருந்தாலும், அபிஷேக நேரத்தில் பெருமாள் கண் திறந்து நம்மை பார்ப்பது போல். எனக்குத்தான் என்னவோ தோன்றியது என்று நினைத்தேன். இல்லை நண்பரும் பிறகு அதையே சொன்னார். ஆனந்தமான அருள், எல்லோரையும் சூழ்ந்து நிற்பதை உணர முடிந்தது.

மனதில் எதுவும் தோன்றவில்லை. ஒன்றும் வேண்டவில்லை. பிறகு தான் உணர்ந்து "பெருமாளே! அனைவரையும் நல்ல படியாக வாழவையுங்கள், அருள் புரியுங்கள்" என்று வேண்டிக் கொண்டேன்.

அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்த பொழுது, என்னால் நம்பவே முடியவில்லை. சாதாரண ஸ்தூபியாக இருந்த பெருமாளை, அத்தனை அழகாக மாற்றினார் அந்த அர்ச்சகர். இதை நேரில் சென்று பார்த்தால் தான் உணரமுடியும். அத்தனை கண் கொள்ளாக் காட்சி.

பூசைகள் முடிந்து, எல்லோருக்கும் மூன்று விதமான பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பெற்றுக் கொண்டு வெளியே வந்து அங்கிருந்த ஒருவரிடம் நவக்ரக சன்னதியை பற்றி விசாரிக்க, மலை அடிவாரத்தில் சிவன் கோவிலுக்குள் இருப்பதாக கூறினார். நாடி வாசிக்கப்பட்ட முருகர் சன்னதியும் அங்கேயே உள்ளது என்றார்.

"ஆனால் இப்பொழுது பூட்டியிருப்பார்களே! ஒரு விஷயம் பண்ணுங்க! கீழே இறங்கிப்   போய், சிவன் கோவில் குருக்கள் வீடு கண்டுபிடித்து, விசாரித்துக் கொள்ளுங்கள்" என்று தகவல் தந்தார்.

சுட்டு எரிக்கும் வெயில். படி வழியாக, மெதுவாக கீழே சென்று, குருக்கள் வீட்டை கண்டுபிடித்து, அவரிடமிருந்து வேண்டிய தகவலை வாங்கிக் கொண்டேன். 

"கோவில் பூட்டியிருந்தாலும், என் பசங்க, எதிரே உள்ள சாஸ்தா கோவிலில் தான் இருப்பார்கள். இன்று விளக்கு பூசை உண்டு. அதற்காக ஏற்பாடு பண்ணிக் கொண்டிருப்பார்கள். அவர்களிடம் சொன்னால், கோவிலை திறந்து காட்டுவார்கள்" என்றார்.

நன்றி கூறி விடை பெறும் பொழுது, "பூட்டிய கோவிலை திறக்கச் சொல்வது சரி அல்ல!" என்று தோன்றியது. யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தீர்மானித்து, கோவில் வாசல் வரை சென்று நின்று ஒரு நிமிடம் த்யானம் செய்துவிட்டு, "இன்னொருமுறை, உன்னை நேரத்துக்கு வந்து தரிசனம் செய்கிறேன் இறைவா" என கூறிவிட்டு அங்கிருந்து நேராக கோடகநல்லூர் சென்றோம்.

தாமிரபரணியில், கோடகநல்லுரில் ஆனந்தமாக ஒன்றரை மணி நேரம் நீராடிவிட்டு, அர்ச்சகர் வரவுக்காக காத்திருந்தோம்.

மாலை 6 மணிக்கு சன்னதியை திறந்தார்கள். யாருமே இல்லை. நாங்கள் மட்டும்தான். ஆனந்தமான தரிசனம். பெருமாளின் கரும்குளம் அருளுக்கு நன்றியை கூறிவிட்டு, திரும்பி வந்து சேர்ந்தோம்.

சரி!இனி விஷயத்துக்கு வருவோம். அகத்தியர் அடியவர்களின் நலனுக்காக கரும்குளத்தின் தொடர்பு விவரங்களை கீழே தருகிறேன். விருப்பம் உள்ளவர்கள், பரிகாரம் செய்து கொள்ளலாம். பூசை செய்து பிரசாதத்தை அனுப்பி கொடுப்பதாக அந்த குருக்கள் சொன்னார்.

குருக்கள் பெயர்: எஸ். மீனாக்ஷி சுந்தர பட்டர்,
விலாசம்: அருள்மிகு மகாதேவ மார்த்தாண்டேஸ்வரர் திருக்கோவில், கரும்குளம் - 628 615, திருநெல்வேலி ஜில்லா.
தொடர்பு எண்: செல்:9488619703, வீடு:04630-264077
ஈமெயில் : omsivokam.om55@yahoo.com

அகத்தியர் அடியவர்களே! நீங்கள் எல்லோரும், பிரச்சினைகளை கழித்துவிட்டு, அமைதியாக, ஆனந்தமாக, நல்ல படியாக வாழவேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த தகவலை தருகிறேன். எல்லோரும் முடிந்தவரை தொடர்பு கொண்டு, நலம் பெற வாழ்த்துக்கள்.

மேலும், திரு.மணிகண்டன் சுப்ரமண்யன் என்கிற அகத்தியர் அடியவர், "சுகம் தரும் சுந்தரகாண்டம்" என்கிற புத்தகத்தை, இதுவரை தேடியும் கிடைக்காத, அகத்தியர் அடியவர்களுக்கும், வெகுதூரத்தில்/வெளி நாட்டில் வசிக்கும் அடியவர்களுக்கும், அவர்களே பிரியப்பட்டால், இலவசமாக வழங்க முன் வந்துள்ளார். வேண்டுபவர் திரு. மணிகண்டனை  smanikandan1@gmail.com ​ என்கிற ஈமெயில் தொடர்பில், விலாசத்தை தெரிவித்து வேண்டிக் கொள்ளுங்கள். உங்களுக்கு யோகம் இருந்தால், நிச்சயமாக அந்த சுந்தர காண்டம் உங்களை வந்து சேரும்.​

மேலும் ஒரு விஷயம் கூட. சமீபத்தில் ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, சிவபெருமானுக்கு 63 மூவர் போல,பெருமாளுக்கு ஆழ்வார்கள் போல, முருகருக்கு 41 அடியவர்கள் உண்டு. அவர்கள் பெயரோ, அவர்களை பற்றிய தகவலோ, இல்லை ஏதேனும் புத்தகம் அதை பற்றி வெளியிட்டிருந்தால், இந்த வலைப்பூவை வாசிக்கும் அகத்தியர் அடியவர் யாராக இருந்தாலும், எனக்கு sgnkpk@gmail.com என்கிற மெயிலில் தகவலை அனுப்பிவைக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

அனைத்தையும் அகத்தியர் திருவடிகளில் வேண்டுதலுடன் சமர்ப்பித்து.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!  

​சித்தன் அருள்.............. தொடரும்!​