​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 31 December 2020

சித்தன் அருள் - 972 - ஆலயங்களும் விநோதமும் - அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோவில், திருப்புன்கூர், சீர்காழி!



வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் மேற்கே 3 கி.மி. சென்றால் ஒருபுறம் திருப்புன்கூர் கைகாட்டியும், மறுபுறம் திருப்புன்கூர் சிவலோக நாதசுவாமி கோயில் என்ற வளைவும் உள்ளது. அதனுள் - அச்சாலையில் 1.5 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். சாலை ஓரத்திலேயே கோயில் உள்ளது. கோயில் வரை வாகனங்கள் செல்லும்.

புங்க மரத்தடியின் கீழே சிவபெருமான் தரிசனம் கொடுப்பதால திருப்புன்கூர் என்று இத்தலம் வழங்கப்படுகிறது. திருநாளைப் போவார் நாயனார் (நந்தனார்) தம்மை நேராக தரிசனம் செய்து வணங்கும் பொருட்டு இத்தலத்து இறைவன் சிவலோகநாதர் தமக்கு முன்னால் அமர்ந்திருந்த நந்தியை சிறிது விலகி இருக்குமாறு செய்தருளிய தலம் திருப்புன்கூர். நந்தனார் கீழ் குலத்தில் பிறந்தவராதலால் ஆலயத்திற்குள் செல்வதற்கு அனுமதி இல்லாததால் வெளியில் இருந்தே வழிபடுவார். அப்போது இறைவன் முன் இருக்கும் நந்தி நன்றாக அவர் இறைவனைப் பார்க்க முடியாமல் மறைக்கும். அதற்காக கவலைப்பட்டு ஆதங்கப்பட்ட அவருக்கு தரிசனம் கொடுக்க நந்தியை விலகச் சொல்லி நந்தனாரின் பக்தியை உலகிற்கு எடுத்துக் காட்டிய தலம். 

  • எல்லா சிவன் கோவில்களிலும் உள்ள நந்தியின் நாக்கு வெளியில் தெரியும்படி இருக்கும். ஆனால் நந்தனாருக்காக விலகிய இங்குள்ள நந்தியின் நாக்கு வெளியில் தெரிவதில்லை. 
  • இங்குள்ள நந்திகேஸ்வரர் மிகவும் அழகிய வேலைப்பாடுடன் ஒரே கல்லில் சிற்பமாக வடிக்கப்பட்ட சிறப்புடையதாகும். 
  • இத்தலத்தில் ஆலயத்தின் மேற்புறம் உள்ள ரிஷப தீர்த்தம் நந்தனாருக்காக விநாயகர் ஒரே இரவில் வெட்டிய குளம் என்ற பெருமையுடையதாகும்.
  • சிவபெருமான் திரிபுரத்தை எரித்தபோது அழியாது பிழைத்த அசுரர் மூவரில் இருவரை தனது திருக்கோயிலின் வாயில் காவலராகும்படி பணித்தபின்பு, மற்றொருவனை தான் நடனம் ஆடும்பொது அழகிய மத்தளத்தை முழக்கும்படி அருள்செய்தார். 
  • இத்தலத்திலுள்ள நடராச சபையில் உள்ள நடராச வடிவம் கலையழகு வாய்ந்தது. 
  • இத்தல சுந்தரர் பதிகத்தில் கூறியபடி நடராஜப் பெருமான் பாதத்தில் ஓர் உருவம் அமர்ந்து தன் நான்கு கரங்களாலும் பஞ்சமுக வாத்யத்தை அடித்து மணிமுழா முழக்குவதைக் காணலாம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..................தொடரும்!

Thursday 24 December 2020

சித்தன் அருள் - 971 - ஆலயங்களும் விநோதமும் - அருள்மிகு லக்ஷ்மிபுரீசுவரர் திருக்கோவில், திருநின்றியூர்



வைத்தீஸ்வரன்கோயில் - மயிலாடுதுறை சாலை மார்க்கத்தில் திருநின்றியூர் இருக்கிறது. பிரதான சாலையிலிருந்து கோவில் செல்ல பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 1 கி.மீ. சென்று இத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறையிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது.

தனது தந்தை ஜமதக்னி முனிவரின் ஆணைப்படி தனது தாயான ரேணுகாவைக் கொன்றார் பரசுராமர். பின் தனது தந்தையிடம் அன்னையை உயிர்ப்பிக்கும் படி வரம் வேண்டி தாயை உயிர்ப்பித்தார். தாயைக் கொன்ற தோஷம் நீங்குவதற்காக இத்தலத்தில் இறைவனை வழிபட்டு மன அமைதி பெற்றார். ஜமதக்னி முனிவரும் தான் அவசரத்தில் செய்த செயலுக்கு வருந்தி இங்கு சிவபெருமானை வணங்கி மன்னிப்பு கேட்டுக் கொண்டார். சிவன் இருவருக்கும் காட்சி தந்து அருள் செய்தார். பரசுராமர் வழிபட்ட சிவன் பிரகாரத்தில் பரசுராமலிங்கமாக காட்சி தருகிறார். ஜமதக்னி முனிவருக்கு காட்சி தந்த சிவன் ஜமதக்னீஸ்வரர் என்ற் பெயருடன் சிறிய பாண வடிவில் காட்சி தருகிறார். அருகில் மகாவிஷ்ணுவின் சந்நிதியும் உள்ளது. 

மகாலட்சுமியும் இத்தலத்தில் சிவனை வழிபட்டு அருள் பெற்றாள். எனவே தான் இத்தலத்து சிவன் மகாலட்சுமீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

சோழ மன்னன் ஒருவன் தினந்தோறும் சிதம்பரம் சென்று நடராஜரை தரிசிக்கும் வழக்கும் உடையவன் அவ்வாறு தனது படைகளுடன் செல்லும் போது இத்தலம் இருக்கும் காட்டு வழியே தான் தினமும் செல்வான். இரவு நேரத்தில் தீப்பந்தங்களுடன் இவ்வழியே செல்லும் போது தீப்பந்தங்கள் தானாகவே அணைந்து, இத்தல எல்லையைத் தாண்டியவுடன் தானாகவே எரிய ஆரம்பிக்கும். இவ்வாறு பல நாட்கள் தொடர்ந்து நடைபெற, மன்னன் காட்டில் மாடுகளை மேய்ந்து கொண்டிருந்த ஒரு இடையனிடம் இத்தலத்தில் ஏதேனும் விசேஷம் உண்டா எனக் கேட்டான். இடையன் பசுக்கள் இங்கு ஓரிடத்தில் தானாகவே பாலை கறப்பதைக் கண்டதாகக் கூறினான். மன்னன் அவ்விடத்தில் நிலத்தைத் கோடாரியால் தோண்ட இரத்தம் வெளிப்பட்டது. மன்னன் மேலும் அவ்விடத்தை ஆராய ஒரு சிவலிங்கம் இருப்பதையும், அதன் பாணத்தின் மேல் பகுதியில் கோடாரி பட்டு இரத்தம் வருவதையும் கண்டு மிவும் வருத்தம் அடைய, அப்போது அசரீரி மூலம் இறைவன் தான் இருக்குமிடத்தை தெரியப்படுத்தவே இவ்வாறு செய்ததாகக் கூறி, இவ்விடத்தில் ஆலயம் எழுப்ப மன்னனுக்கு ஆணையிட்டார். மன்னனும் சிவலிங்கம் இருந்த அதே இடத்தில் கோவிலைக் கட்டினான் என்று தல வரலாறு கூறுகிறது. இன்றும் சிவலிங்கத்தின் பாணத்தில் தற்போதும் கோடரி வெட்டிய தழும்பு குழி போல இருப்பதைப் பார்க்கலாம். இத்தலத்தில் மூலவர் சுயம்பு லிங்கமாக உயர்ந்த பாணத்துடன் எழுந்தருளியுள்ளார். தீப்பந்தம் திரி நின்ற ஊர் ஆனதால் இத்தலம் திரிநின்றஊர் என்று பெயர் பெற்று தற்போது மருவி திருநின்றியூர் என்று வழங்குகிறது.

சிலந்திக்கு அருள் செய்து மறுபிறப்பில் கோச்செங்கட் சோழனாக பிறக்க அருள் செய்த இடம்!

பரசுராமர் தனக்கு காட்சி கொடுத்தருளிய இறைவனுக்கு 300 வேதியர் சூழ, 340 வேலி நிலத்தைக் கொடுத்து திருநின்றியூர் என்று பெயரிட்டு பொன்னாலாகிய அழகிய கலசங்களைக் கொண்டு நீர் வார்த்து அளிக்க, அவருக்கு தன் திருவடியை இறைவன் இங்குதான் அளித்தார்.

இத்தலத்திலுள்ள இறைவனை இந்திரன் வழிபட அவனுக்கு வான நாட்டை ஆட்சி செய்யும் உரிமையை வழங்கினார்.

முக்கியமாக, தெற்கு நோக்கி வந்த அகத்தியருக்கு பொதிகை மலையில் வீற்றிருக்க அருள் புரிந்ததும் இங்குதான்.

துர்வாசர் சாபத்தால் காட்டானையாகி திரிந்த தேவலோக யானை ஐராவதம் இறைவனை வழிபட அதற்கு முன்னை வடிவத்தையும் விண்ணலகம் அடையும் பேற்றையும் வழங்கியதும் இங்குதான்.

லிங்கத்தின் தலையில் இடி பட்டமையால், இன்றும் சிவலிங்கத்தின் மீது உச்சியில் குழி இருப்பதைக் காணலாம்.

இக்கோயிலில் கொடி மரம் இல்லை

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்........... தொடரும்!

Friday 18 December 2020

சித்தன் அருள் - 970 - அகஸ்தியர் கோவில், பாலராமபுரத்தில் அவரின் திரு நட்சத்திர விழா !



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

02/01/2021, சனிக்கிழமை அன்று நம் குருநாதரின் திருநட்சத்திரம், (மார்கழி மாதம், ஆயில்யம்) வருகிறது. உலகெங்கும் உள்ள அகத்தியர் கோவில்களில்/சன்னதிகளில்  அன்றைய தினம் மிகச்சிறப்பாக அபிஷேக பூஜைகள்/ஆராதனைகள் நடைபெறும். வரும் புது வருடத்தில் முதல் விழாவாக அவரது திரு நட்சத்திரம் வருகிறது.

அடியேன் எல்லா வருடமும் அந்த தினத்தில், பாலராமபுரத்தில் அமைந்துள்ள "ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் கோவிலில்" நடக்கும்  பூசையில் கலந்து கொள்வேன். அனைத்துமே அவர் அருளால் மிக சிறப்பாக அமையும்.

"சித்தன் அருள்" வலைப்பூவின் அகத்தியர் அடியவர்கள்/வாசகர்கள் அகத்தியர் திரு நட்சத்திர விழா/கோவில் பூசையில் பங்குபெறுகிற கோவில் தொடர்பை கேட்டிருந்தனர். உரிய தகவல்களை கீழே தருகிறேன்.

பாலராமபுரம் அகத்தியர் கோவிலை பொறுத்தவரை, அகத்தியப்பெருமானின் திருவிளையாடல்களை நிறையவே அடியேன் உணர்ந்துள்ளேன். அதற்காக மற்ற கோவில்களில் அவர் திருவிளையாடல்களை நடத்துவதில்லை என்று அர்த்தம் அல்ல. சித்தன் அருளை வாசித்து இன்பமுற்றவர்கள் வாழ்க்கையில் "பாலராமபுரத்தில் உறையும் குருநாத/குருபத்னியே, சற்று ஆசீர்வதியுங்கள்" என வேண்டிக்கொண்ட பொழுது, அவர்களின் சூழ்நிலை நல்லபடியாக மாறியதாக கூறினர்.

சமீப காலமாக, நம் குருநாதர் சேய்களை நினைத்து சற்றே சோர்ந்துள்ளது, ஒரு சில நிகழ்ச்சிகளால் உணர முடிந்தது. ஆகவே அனைத்து அகத்தியர் அடியவர்களும், ஏதோ ஒரு அகத்தியர் சன்னதியில்  அன்றைய தினம், குறைந்தது, பச்சை கற்பூரமாவது பூஜைக்கு/அபிஷேகத்துக்கு வாங்கிக்கொடுத்து, உலகை, நம்மை சூழ்ந்து இருக்கும், விஷ/திருஷ்டி தோஷங்களை அகற்ற அகத்தியப்பெருமானின் கோவிலுக்கு உழவாரப்பணி/பூஜையில் கலந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

நாம் அனைவரும் பெற்ற இன்பம் அனைவரும் பெறுவதற்காக பாலராமபுரம் அகத்தியர் கோவில் பற்றிய இந்த தகவலை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். விருப்பமுள்ளவர், இந்த தகவலை உபயோகித்து பாலராமபுரம் கோவிலில் தொடர்பு கொண்டு, அகத்தியர் திருநட்சத்திர விழாவில் பங்கேற்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

ஸ்ரீ அகஸ்தியர் ஸ்வாமி திருக்கோவில்,
பாலராமபுரம், திருவனந்தபுரம், கேரளா.
தொடர்புக்கு : திரு. ரதீஷ், பாலராமபுரம் 9020202121
திரு. சுமேஷ், பூஜாரி, அகத்தியர் கோவில் 9497866079

அன்றைய தின அபிஷேக பூஜைகள் தொடர்பான விவரங்கள்.

  • காலை 5 மணிக்கு கோவில் திறக்கப்படும்.
  • காலை 5.30 மணிக்கு நிர்மாலய தரிசனம் பின்னர் அபிஷேக பூஜைகள்.
  • காலை 6.30 மணிக்கு பூஜை, தீபாராதனைகாலை 7.00 - 8.00 மணிக்குள் அகத்தியர், லோபாமுத்திரை தாய் வழங்கும் அன்னதானம். 
  • காலை 8.45க்கு நிவேதனம், ஆரத்தி.
  • காலை 9 மணிக்கு கோவில் நடை சார்த்தப்படும்.
  • மாலை 5 மணி முதல் 7.30 வரை கோவில் திறந்திருக்கும்.

02/01/2021 அன்று ஏதேனும் ஒரு அகத்தியப்பெருமான் கோவிலில், பூஜையில் அகத்தியர் அடியவர்கள் பங்குபெற்று, உழவாரப்பணி செய்து, அவரின் திருவருளை பெறுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

சித்தன் அருள்.............. தொடரும்!

Thursday 17 December 2020

சித்தன் அருள் - 969 - அகத்தியப்பெருமான், அனைவருக்கும் தெரிவிக்க சொன்ன தகவல்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

திரு.ஜானகிராமன் அவர்கள், அகத்தியரின் நாடி வாசிக்கிற தகவலையும், ஒவ்வொருவருக்கும் நாடி வாசிக்க முன் பதிவு செய்கிற முறையையும் சமீபத்தில் சித்தன் அருளில் தொகுப்பு 961 & 962 வழி தெரிவிக்கப்பட்டது.

முன் பதிவு செய்தவர்களில் பல அடியவர்களுக்கும் இன்று வரை நாடி வாசிக்கப்படாமல் போகவே, அடியேனுக்கு ஈமெயில் வழி தெரிவித்த கருத்தை, அவருக்கு அனுப்பி, ஏன் இத்தனை தாமதம் என கேட்ட பொழுது, தெரிய வந்த தகவலை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

நிறைய அடியவர்கள் முன் பதிவுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், யாருக்கு நாடி வாசிக்க வேண்டும் என்பதை அகத்தியர், நாடியில் வந்து தெரிவு செய்பவருக்கு மட்டும்தான், தற்போது நாடி வாசிக்க முடிகிறது. பலரின் பெயரை கூறி உத்தரவு கேட்டாலும், அகத்தியப் பெருமான் மௌனம் காக்கிறார்.  இதற்கான காரணத்தை நாடியில் கேட்ட பொழுது, அவர் விவரித்ததை கீழே தருகிறேன்.

"அப்பனே! எமது ஆசியை, அருள் வாக்கை கேட்க முன் வந்திருக்கிற சேய்களின் கர்மா, அவர்களின் மனஎண்ணம், இவைகளில் இத்தனை வருடங்களாகியும், முன்னேற்றமே இல்லை. எத்தனையோ அறிவுரைகள் கூறிய பின்னும் தவறாய் வாழ்க்கையில் வாழ்வது, அதன் வழி கெட்ட கர்மாவை சேர்த்துக் கொள்வதில் திறமையானவர்கள் ஆகிவிட்டார்கள். பிற உயிர்களும் நம்மைப்போல் கர்மாவை கழிப்பதற்காக இந்த பூமியில் வந்தவர்கள்/வந்தவைகள்தான்  என, எந்த கெடுதலும் செய்யாமல் வாழ்வது மிக முக்கியம். ஆகவே, அருள்வாக்கு கேட்க விழைபவர், வாழ்க்கையை தவமாக நேர் முறையில் வாழட்டும். அதன் பின்னர் அவர்கள் விதி விலகி வழிவிட, அப்படிப்பட்டவர்களுக்கு யாம் வாக்குரைப்போம். அதுவரை எம்மை நாடும் சேய்களின் கர்மாவை அவர்களே சரி செய்துகொள்ளட்டும்" என்றார்.

மேலும் கூறுகையில் "எமது நாமத்தை கூறிக்கொண்டே தவறு செய்கிறவர்கள், எமது நாமத்தை கூறி, வியாபார பொருள் போல் உபயோகிப்பதையும் யாம் அறிவோம். அவர்களுக்கான பலனை, யாமே முன் நின்று கொடுப்போம்" எனவும் கூறினார்.

"நிழல் ஒளியுள்ளவரை
உயிர் மூச்சுள்ளவரை
ஆசை அறுந்து போகும்வரை
குரு கடைசிவரை
இறை உள்ளொளி வரை
இதை உணர்ந்திடு மானிடா!"

மேற்கூறிய வார்த்தைகளின் அர்த்தம் உங்கள் அனைவருக்கும் புரியும் என்று நினைக்கிறேன்.

இனி இங்கு தனிப்பட்ட ஒவ்வொருவரின் கர்மாதான், நாடியில் அகத்தியரின் அருள்வாக்கை தீர்மானிக்கும். ஒவ்வொருவரும், தங்கள் செயல்களை, எண்ணங்களை பரிசீலனை செய்து சீர்படுத்தி, நேர்மையாக வாழ்ந்து, அகத்தியரை நினைத்து விளக்கேற்றி, தவமிருந்து, அவரே உங்களை அழைத்து அருள் செய்யும்படி வேண்டிக் கொள்ளுங்கள்.

எப்படி வாழ்ந்தால் இறைவனுக்கு பிடிக்குமோ அப்படி வாழ்ந்து வாருங்கள். புண்ணியம் சேர்ந்து, விதி விலகி வழி விட, அகத்தியப்பெருமானே உங்களை தேடி வருவார். அதுவரை, பொறுமையாக இருப்பதை தவிர வேறு வழி இல்லை.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!


சித்தன் அருள்....................தொடரும்!

Thursday 10 December 2020

சித்தன் அருள் - 968 - ஆலயங்களும் விநோதமும் - உத்தமர் கோயில், திருச்சி!


உத்தமர் கோயில் திருச்சி கோட்டை இரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர்கள் தொலைவிலும், ஸ்ரீரங்கத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர்கள் தொலைவிலும் உள்ள, மும்மூர்த்திகளும் குடி கொண்ட, 108 வைணவத் திருத்தலங்களுள் மூன்றாவது திருத்தலம்.

மும்மூர்த்திகளையும் தன்னிடத்தே கொண்டுள்ள இத்திருத்தலம் பல சிறப்புப் பெயர்களையும் கொண்டுள்ளது.

ஆதிபிரம்ம புராணத்திலேயே இக்கோயில் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

தம்மிடம் மிக்க பக்தி செலுத்தி வரும் பிரம்மாவைச் சோதிக்க விஷ்ணு கடம்ப மரமாக உருவெடுத்து இங்கு வந்ததாகவும், அவ்வுருவிலும் பிரம்மா அவரை அறிந்து கொண்டு தொடர்ந்து வழிபட்டமையால், மனம் மகிழ்ந்த விஷ்ணு அவருக்கு இங்கு தனி வழிபாட்டு சந்நிதி கொள்ளுமாறு செய்ததாகவும் கூறுவர். இந்தியாவில் மிகச் சில இடங்களிலேயே பிரம்மா மற்றும் சரஸ்வதி ஆகியோருக்கு தனிக் கோயில்களோ, சந்நதிகளோ உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

  • இக்கோயிலில், சிவன் பிச்சாடனாராக உருக்கொண்டமைக்கும் ஒரு வரலாறு உள்ளது. தன்னைப் போல் பிரம்மாவிற்கும் ஐந்து தலைகள் உள்ளதைச் சகிக்காத சிவபெருமான் பிரம்மனுடைய ஒரு தலையைக் கிள்ளி எறிந்ததாகவும், பிரம்ம ஹத்தி தோஷம் வந்ததால், சிவனின் கையிலிருந்த கபாலம் அவரது கையோடு ஒட்டிக் கொண்டதாகவும், சிவன் கையில் ஒட்டிக் கொண்ட கபாலத்தில் மகாலட்சுமியைக் கொண்டு பிச்சையிடச் செய்ததால் அச்சாபம் நீங்கியதாகவும் கூறுவதுண்டு.
  • கடம்ப மரங்கள் அதிகமிருந்தமையால், கடம்பனூர் என வழங்கப்பெற்று பிறகு அது கரம்பனூர் எனவும், திருக்கரம்பனூர் எனவும் ஆனது என்பர்.
  • இதுவே வடமொழியில் நீப ஷேத்திரம் என்றானது.
  • புருஷோத்தமர் எழுந்தருளியுள்ள திருத்தலமானதால், உத்தமர் கோயில் எனப் புகழ் பெற்றது.
  • சிவபெருமான் திருவோடேந்தி பிட்சை கேட்ட திருக்கோலத்தில் எழுந்தருளியமையால், பிட்சாடனர் கோயில் எனலாயிற்று.
  • மும்மூர்த்திகளும் காட்சியளிக்கும் காரணத்தால் மும்மூர்த்தி ஷேத்திரம் எனவும் இது வழங்கப்படுகிறது.
  • முற்காலத்தில் இத்திருத்தலம் கதவுகளே அற்று இருந்ததாகவும், அதனால் எந்நேரமும் இறைவனைத் தொழுதிட இயன்றிருந்தது எனவும் பெரியவாசன் பிள்ளையின் குறிப்பொன்று கூறுகிறது.
  • சிவன், பார்வதி, பிரம்மா, சரஸ்வதி என அனைவருக்கும் இங்கே தனிச் சன்னதிகள் உள்ளன.
  • பிஷாடண மூர்த்தியாக சிவன் காட்சியளிப்பதால் பிஷாண்டார் கோயில் என்ற பெயரும் வழங்கப்படுகிறது.
  • திருமங்கையாழ்வார், கதம்ப மகரிஷி, உபரிசிரவசு, சனகர், சனந்தனர், சனத்குமாரர், முதலியவர்களுக்கு அரும் காட்சி தந்தருளிய பெருமான் இவர்.
  • அப்பர், சுந்தரர் மற்றும் திருஞான சம்பந்தர் ஆகிய நாயன்மார்கள் இத்தலம் பற்றிப் பதிகம் பாடியுள்ளனர்.
  • மதுரை மெய்ப்பாத புராணிகர் இயற்றிய தலவரலாறினையும் இது கொண்டுள்ளதாகக் கூறுவர்.
  • 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்றாகும்.
  • திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்வித்த திருக்கோவில்
  • சிவகுரு தெட்சிணா மூர்த்தி, விஷ்ணு குரு வரதராஜர், குரு பிரம்மா, சக்தி குரு சவுந்தர்ய பார்வதி, ஞான குரு சுப்பிரமணியர், தேவ குரு வியாழன், அசுரகுரு சுக்ராச்சாரியார் ஆகிய ஏழு குரு சுவாமிகளும் குருவிற்குரிய இடங்களில் இருந்து அருளுகின்றனர். குருப் பெயர்ச்சியின்போது ஏழு குருக்களுக்கும் விசேஷ அபிஷேகங்கள் நடக்கிறது. எனவே இத்தலம் சப்தகுரு தலம் எனப்படுகிறது.
  • சிலர் நிறைய பாவம் செய்து இருப்பார்கள். அந்த பாவம், பல பரிகாரங்கள் செய்தும் தீராமல் இருக்கலாம். இத்தகைய சூழ்நிலையில் இருப்பவர்கள் திருக்கரம்பனூர் தலத்தில் 3 நாட்கள் தங்கி வழிபாடுகள் செய்தால் பொதும், அது எத்தகைய பெரிய பாவமாக இருந்தாலும் சரி, பஞ்சாக பறந்தோடி விடும்.
  • சிலருக்கு முன்னோர் அல்லது பெரியவர்கள் சாபம் ஏற்பட் டிருக்கும். அவர்கள் எது செய்தாலும் காரியத்தடை உண்டாகும். எதையும் முழுமையாக செய்ய முடியாமல் தவிப்பவர்களின் இச்சாபம் இத்தலத்தில் எளிதில் விரட்டியடிக்கப்படும்.
  • வாரிசு இல்லாமல் தவிப்பவர்கள், கொடிய நோயால் துடிப்பவர்கள், இங்குள்ள புருஷோத்தமனிடம் மனம்விட்டு பிரார்த்தித்தால் நிச்சயம் நல்லது நடக்கும்.
  • தம்பதியர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் குடும்பம் சிறக்கும் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியம் கிடைக்க, கிரக தோஷங்கள் நீங்க, வேண்டிக் கொள்ளலாம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............தொடரும்!

Tuesday 8 December 2020

Monday 30 November 2020

Saturday 28 November 2020

Monday 23 November 2020

Sunday 22 November 2020

சித்தன் அருள் - 963 - அகஸ்தியர் கோவில், வட்டியூர்காவு, திருவனந்தபுரம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில், அடியேன் வீட்டிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில், வட்டியூர்காவு என்கிற இடத்தில், நண்பர் ஒருவரின் வீட்டிற்கு செல்ல வேண்டி வந்தது.

அழைத்து செல்ல வந்த நண்பரிடம், முதலில் "வட்டியூர்காவு அகத்தியர் கோவிலுக்கு"  சென்று விட்டு பின்னர் உங்கள் வீட்டுக்கு செல்லலாம் என்றேன்.

இந்த கோவில் திருவனந்தபுரத்திலிருந்து, அகத்தியர்கூடம் (பொதிகை) செல்ல வனபாதுகாப்பு அலுவலகத்துக்கு செல்லும் வழியில் உள்ளது. குருநாதரின் தரிசனம் இங்கு கிடைப்பது மிக கடினம். ஏற்கெனவே ஒரு முறை சென்று, கதவடைத்து இருந்தது. இந்த முறையும் அப்படியே நடந்தது.

அகத்தியர் மீது மிகுந்த பற்று கொண்ட ஒருவர், முதலில் விக்கிரகத்தை செய்து தன் வீட்டு மாடியில் பிரதிஷ்டை செய்து பூசித்து வந்தார். பின்னர், அகத்தியப்பெருமானின் உத்தரவின் பேரில், பக்கத்தில் இருந்த குடும்ப வீட்டை இடித்து, அங்கே அகத்தியருக்கு கோவில் கட்டி பூசித்து வருகிறார்.

அடியேன் சென்ற பொழுது, அவர் கோவிலில் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

"நமஸ்காரம்" என்றதும் சப்தம் கேட்டு எழுந்து வந்தவரிடம், கோவில் சன்னதி மாலை எத்தனை மணிக்கு திறக்கப்படும்? என்றேன்.

"சன்னதி, காலை ஒரு வேளை மட்டும்தான் திறக்கப்படும். அதுவும், காலை 9 மணிக்குள் பூசை முடித்து கதவை சார்த்திவிடவேண்டும் என்பது அவர் உத்தரவு" என்றார்.

கோவில் சிறிய இடத்தில் அமைக்கப்பட்டிருந்தாலும், மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருந்தது.

பொதுவாக, யார் பேசினாலும் சற்று கவனத்துடன், உன்னிப்பாக கூறுகிற விஷயங்களை உள்வாங்குவது அடியேனின் பழக்கம்.

அவர் பேச்சில், நிறைய விஷயங்களை மறைக்கிறார் என்று தோன்றியது.

"சன்னதி சார்த்தியிருந்தாலும், ஒரு நிமிடம் முன் நின்று பிரார்த்தித்து கொள்கிறேனே" எனக்கேட்டேன்.

"தாராளமாக" என்றார்.

வெகு நாட்களுக்குப் பின் அகத்தியர் சன்னதி முன் அடியேன்!

தலைமேல் கைவைத்து, விரல்களை மடித்து, குருவுக்கான முத்திரை பிடித்து, "குரு ப்ரம்மா ..." மந்திரத்தை கூறி நமஸ்காரத்தை சமர்பித்தேன்.

குருமுத்திரை நமஸ்காரத்தை கண்டவர், உணர்ந்து, சற்று இயல்பாக பேசினார்.

அகத்தியர், மஹாதேவர், பிள்ளையார், அம்பாள் போன்றவர்களுக்கு தனித்தனி சன்னதி. அனைத்தும், அகத்தியரின் உத்தரவின் பேரில் கட்டப்பட்டது.

சற்று நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, குருவுக்கு தட்சிணை சன்னதி முன் வைத்து, "உத்தரவு" என்றேன்.

அவரிடம் பின் ஒருமுறை சந்திக்கிறேன், என கூறி விடை பெற்றேன்.

எங்களுக்கு முன் கோவிலை விட்டு இறங்கி சென்றவர், தான் வசிக்கும் வீட்டின் முன் நின்று, "உள்ளே வந்து அமருங்கள்" என அழைத்தார்.

உள்ளே நுழைந்தவுடன், மேலே உள்ள படத்தை காண முடிந்தது.

ஏதோ ஒரு விதத்தில், அகத்தியப்பெருமானின் முகம், மேலும், மேலும் பார்க்க வேண்டும் என ஈர்த்தது.

சற்று நேரம் மௌனமாக அவர் முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது, அவராகவே மௌனத்தை இடை மரித்தார்.

"இது ஒரு வித்யாசமான சூழ்நிலையில் வந்த படம்!" என்றார்.

"வேறு ஒன்றும் இல்லை! என்னவோ பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் எனத் தோன்றியது. குருநாதரின் முகத்தில் ஒரு ஈர்ப்பு உள்ளது" என்றேன்.

"ஆம் இங்கு வரும் ஒரு சிலர்தான் அப்படி கூறுகிறார்கள்! அதுதான் அவரின் கட்டளையும் கூட!" என்றார்.

அடியேன் ஆச்சரியமாக அவரை உற்றுப்பார்த்தேன். என் முகத்தில் தொக்கி நின்ற கேள்வியை உணர்ந்து, அவராகவே நடந்த விஷயத்தை கூறினார்.

ஒருநாள் பூசை முடிந்து, ஹோமம் நிறைவுற்றவுடன், அகத்தியப்பெருமானிடம் ஏதேனும் கேட்க வேண்டும் என்ற நினைவு உள்புகுந்தது.

அவரின் உருவப்படம் ஒன்றை கேட்போம்! நாம் மட்டுமின்றி இங்கு வரும் அனைவரும் அவரை தரிசிக்கட்டும். அதுவும் அவர் அருளுடன் நடந்தால், நன்றாக இருக்குமே! என தோன்றியது.

அவரும் அனுமதியளித்தார்! ஆனால் ஒரு சில கட்டுப்பாடுகளுடன்.

"விரைவில் ஒரு ஓவியர் இங்கு வருவார். அவரும் என் சிஷ்யர்தான். அவர்தான் எம் உருவப்படத்தை படைப்பார். அவருக்கு எப்படி படைக்க வேண்டும் என்கிற உத்தரவுகளை யாம் கொடுப்போம். எம் படத்தை வரையும் காலம், அவர் வேறு எந்த படைப்புக்கும் செல்லக்கூடாது. எப்பொழுதும், இறை சிந்தனையிலேயே இருக்க வேண்டும். எம் படத்தை படைக்க எந்தவிதமான ரசாயன கலவைகளையும் உபயோகிக்க கூடாது. இயற்கை இலை சாற்றை மட்டும் உபயோகித்து உருவாக்க வேண்டும். மேலும் அவர் ஒரு மண்டலம் விரதமிருக்க வேண்டும். இங்கு வந்து குளித்து, தலை துவட்டிய ஈரத்துண்டை, உடுத்திக்கொண்டு படைக்கத் தொடங்க வேண்டும். உடுத்திய அந்த ஈரத் துண்டானது, எப்பொழுது ஈரத்தன்மை போய், உலர்ந்து போகிறதோ, அப்பொழுது, அன்றைய தினம் படைப்பதை நிறுத்தி விட வேண்டும்! பின்னர், மறுநாளே தொடங்க வேண்டும்! அப்படியாயின், எம் உருவத்தை படைக்க யாம் அருள் புரிவோம்!" என்றார்.

மறுவாரமே, ஓவியர் வந்தார், அகத்தியப்பெருமானின் அனைத்து கட்டளைகளையும் சிரம் மேற்கொண்டு, 365 நாட்கள் எடுத்து உருவாக்கப்பட்டதே, மேலே உள்ள படம்!

சரி! இங்கு ஏதோ ஒரு உண்மையை அவர் மறைக்கிறார். அது என்னவென்று கூறுங்களேன்!

இத்தனை கட்டுப்பாடுகளுடன் வரையப் பெற்ற அந்த படத்தை பார்க்க கிடைத்த மூன்று நிமிடங்களே போதும். அடுத்த முறை குருநாதரை ஒரு வேளை தரிசிக்கலாம், என் நினைத்து, நன்றி கூறி விடை பெற்றேன்.

ஓம் ஸ்ரீ லோபா முத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.................தொடரும்!

Saturday 14 November 2020

சித்தன் அருள் - 962 - அனைவருக்கும் குருவருள் கூடும் நேரம்!


நாம் என்னதான் சிலவிஷயங்களை தீர்மானித்தாலும், அகத்தியப் பெருமான் என்ன நினைக்கிறாரோ அந்த நேரத்துக்குத்தான் நம் திட்டமிடல் நிறைவேறும்.

நான்கு நாட்கள் அமைதியாக காத்திருந்தேன். வியாழக்கிழமையும் வந்தது. அன்று காலை 9 மணியிலிருந்து 12 மணிவரை நல்ல நேரமாயினும், 10.30முதல் 11.30தான் நல்ல முகூர்த்தம் என்று மனது கூறியது. பஞ்சாங்கம் ஆம்! அதுவே உண்மை என காட்டியது.

10 மணிக்கு அவரை தொடர்பு கொண்ட பொழுது, கோவில் சென்றுவிட்டு வந்ததாகவும், காலை உணவை அருந்திவிட்டு, பிறகு அவரே அழைக்கிறேன் என கூறினார்.

பின்னர் அவர் அழைத்தது 10.45 மணிக்கு; முகூர்த்த நேரம்.

சிரித்துக்கொண்டே "நமஸ்காரம்! அடியேனின் குருநாதருக்கு, குரு மாதாவுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன். எப்படி? கேள்விகளை நான் கேட்கட்டுமா? என்றேன்.

"இல்லைங்க நீங்கள் கேட்க வேண்டாம். அவர் சொல்ல வருவதை படித்து விடுகிறேன். அதில் உங்கள் கேள்விகளுக்கான பதில் இருக்கும். ஏதேனும் விட்டுப்போனால், பின்னர் நீங்கள் கேட்கலாம்!" என்றார்.

"சரி! அப்படியே ஆகட்டும்! வாசியுங்கள்!" என்றேன்!

"அப்பனே!" என முதலில் மூன்று முறை அழைத்தார்!

யாரும் அடியேனை இதுவரை அப்படி அழைத்து கேட்காததால், கூச்சத்தால், கூனிக்குறுகி போனேன்! ஒரு அமைதி உடலுள் பரவுவதை உணர்ந்தேன். முதலில், தனிப்பட்ட விஷயங்களை பற்றி அவர் விவரித்தது, ஆச்சரியத்தை கொடுத்தது. அவர் அருள் வாக்கில், என் கேள்விகளுக்கு பதில் கிடைக்க, ஒவ்வொரு வினாவாக காற்றில் கரைந்து போகத் தொடங்கியது. இத்தனை வருடங்களாக, ஒவ்வொரு விஷயத்தையும் செய்யும் பொழுது, அது பின்னர் முளைத்து, என் கர்மாவையும் சேர்த்து கரைக்கும் என ஒரு பொழுதும் உணரவே இல்லை. அவர் அத்தனையையும் கவனித்திருக்கிறார். [அவர் கூறியதில், அடியேனின், தனிப்பட்ட விஷயங்களை இவ்விடத்தில் தவிர்த்து விடுகிறேன்].

"எதற்காக என்னை விரட்டிப்பிடித்து இப்பொழுது இந்த நாடி அருள்வாக்கு? என மனதுள் கேள்வி எழுந்த அடுத்த நிமிடம் பதில் வந்தது.

"இவனும், இவனை சேர்ந்த என் சேய்களும் எத்தனை வருடங்களாக, எப்படியெல்லாம் என்னிடம் பிரார்த்தனை வைத்தார்கள் என்பது எனக்கு தெரியும்! அதில் மனம் நெகிழ்ந்து யாம் இந்த நாடிக்கு வழி வகுத்தோம். இனி யாம் இங்கு வாக்குரைப்போம்!" என்ற  அமிழ்தினும் இனிதான தமிழில் தெளிவாக உரைத்தார்.

அடியேன் ஒரு நிமிடம் ஆடிப்போனேன். நான் கேட்டது உண்மைதானா, இது கனவா, நனவா என்றறிய, என்னையே விரல் நகத்தால் ஒரு முறை குத்திப் பார்த்துக் கொண்டேன்.

"அப்பாடா! ஒரு வழியாக நம் குருநாதர் அருள்வாக்கு உரைக்க சம்மதித்துவிட்டார். மறைந்த திரு ஹனுமந்த தாசன் ஸ்வாமிக்குப்பின், இனி யாம் வாக்குரைப்பதில்லை என்று கூறி சென்றுவிட்ட குருநாதரிடம், அடியேன் எங்கு சென்றாலும் வைத்த ஒரே பிரார்த்தனை இதுதான்.

"பாரதத்தில் உள்ள 130 கோடி மனிதர்களில், ஒருவரை தெரிவு செய்து, நாடியை கொடுத்து, அதில் தாங்கள் அமர்ந்து வாக்குரைக்க வேண்டும். நல்வழி காட்ட வேண்டும்" என்பேன். இதையே இறையிடமும் கூறி வந்தேன். "சித்தன் அருள்" வழி அனைத்து அடியவர்களையும், அகத்தியரிடம் வேண்டிக்கொள்ள சொல்லியிருந்தேன். அந்த வேண்டுதலுக்கு 10 வருடங்களுக்கு பின் நம் குருநாதர் செவி சாய்த்துள்ளார் என அன்று உணர்ந்தேன். [நாடி வாசித்தவர் பின்னர் ஒருமுறை பேசிய பொழுது, வந்த ஒரு அருள்வாக்கை பகிர்ந்து கொண்டார். அது!

"இனி வாக்கு உரைப்பதில்லை என்று சென்ற அகத்தியர், சாதாரண ஒரு மனிதனுக்காகவும், மனிதர்களின் வேண்டுதலுக்காகவும், மறுபடியும் வாக்குரைக்க வந்திருப்பது, பிற சித்தர்களையே ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளது. அகத்தியர், தீர்மானித்தால் அதுவே முடிவு. ஒரு பொழுதும் மறுபரிசீலனை செய்யவே மாட்டார்! அவரா இந்த முடிவை எடுத்தார்!" என போகர் முதல், காகபுஜண்டர் வரை, கேள்வியை எழுப்பினராம்!]

சரி! இனி உங்கள் அனைவருக்குமான பதிவுக்கு வருகிறேன்!

  1. அகத்தியப்பெருமான், வாரத்தில் மூன்று நாட்கள் (புதன், வியாழன், வெள்ளி) நாடியில் வந்து அருள் வாக்குரைப்பார்.
  2. அருள்வாக்கு கேட்க விரும்புகிறவர்கள் கீழே தரப்பட்டுள்ள எண்ணில் SMS செய்தியை (உங்கள் பெயர், ஊர் பெயர், செல் நம்பர்) தட்டச்சு செய்து முன் பதிவு செய்ய வேண்டும்.
  3. முன் பதிவு செய்தபின், தியதி, நேரம் போன்றவையுடன் பதில் பின்னர் வரும்.
  4. அதில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் அழைத்து உங்களுக்கான அகத்தியரின் நாடி அருள்வாக்கை போன் வழியாகவே கேட்டுக் கொள்ளலாம்.
  5. நாடி வாசிப்பவர் பெயர் - திரு.ஜானகிராமன்,
  6. தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 8610738411

சித்தன் அருளில் எனக்கு இடப்பட்ட முக்கியமான வேலை நிறைவு பெற்றது என எண்ணுகிறேன்.

அனைவரும், அகத்தியர் அருள்வாக்கை பெற்று, அதன் படி நடந்து, வாழ்க்கையை செம்மையாக்கிக் கொள்ள வேண்டுகிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் அடியேனின் நமஸ்காரத்தையும், மிக்க நன்றியையும் சமர்ப்பிக்கிறேன்.

சித்தன் அருள்.................. தொடரும்!

சித்தன் அருள் - 961 - அனைவருக்கும் குருவருள் கூடும் நேரம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே! "அகத்தியப்பெருமானின் சித்தன் அருள்" வாசகர்களே!

'சித்தன் அருள்" வலைப்பூ 2011இல் தொடங்கப்பட்டு 10வது வருடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையிலே, எத்தனையோ அரிய அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடிந்தது. பகிர்ந்து கொள்ளாத அனுபவங்கள் எத்தனையோ உண்டு. இருப்பினும், பல கேள்விகளை அகத்தியப் பெருமானிடம் கேட்டு ஏதோ ஒரு காரணத்தால் பதில் கிடைக்காமலேயே இருந்தது. கேட்டது கேட்டதுதான், அதை திருப்பி எடுத்துக் கொள்வதாக இல்லை என்ற திட மனதுடன், என்றேனும் அவர் இதற்கெல்லாம் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் நாட்களை கடத்தினேன்.

நாரதர் கலக்கம் நன்மையில் முடியும் என்பார்கள். அடியேனோ, நம் குருநாதர் நம்மை சோதனைக்குள்ளாக்குவது, காத்திருக்க வைப்பது, நம்மை புடம் போடவும், நம் கர்மாவை கரைத்து, வாசனைகளை களையவும் என பல முறை உணர்ந்திருக்கிறேன்.

ஒரு நாள், எத்தனை கேள்விகளுக்கு குருநாதரின் பதில் கிடைக்க வேண்டியுள்ளது என எண்ணிப்பார்த்த பொழுது, ஒரு 25 கேள்விகள் நினைவுக்கு வந்தது. ஏன் இப்படி பதில் சொல்லாமலேயே நாட்களை நகர்த்துகிறீர்களே, என் கேள்வியில் எங்கும் சுயநலமே இல்லையே. அனைத்தும் பொதுநலம், லோகஷேமம் தானே, பின்னர் அதில் என்ன தவறு உள்ளது என மௌனம் காக்கிறீர்கள் குருநாதரே! என கேட்டுவிட்டேன்.

அடியேனின் முன் அனுபவப்படி, அமைதியாக எல்லாவற்றிலிருந்தும் விலகி இருந்தால், அவராகவே யார் வழியிலேனும் பதிலை உரைத்து, அல்லது புது வேலையை தந்து, நம் மனதை மாற்றி விடுவார். அடியேனும் அவர் சொல்வதற்கு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல், அவர் காட்டும் வழியில் நடந்துவிடுவேன். ஆனால் இம்முறை நடந்த விஷயம் சற்று வித்யாசமாக இருந்தது.

அடியேனை ஒரு சித்தன் அருள் வாசகர், ஈமெயில் வழி தொடர்பு கொண்டார்.

"வணக்கம்! எனக்கு தெரிந்த நண்பர் ஒருவரிடம், உங்களிடம் தெரிவிக்க வேண்டிய ஒரு சில விஷயங்களை அகத்தியப் பெருமான் கூறியுள்ளார். அவர் தங்களிடம் உரையாற்ற விரும்புகிறார்!" என்றார்.

"என்ன விஷயம், என உங்களுக்கு தெரியுமா? யார் அவர்? என்னை தெரியாதவரிடம் எப்படி என்னை பற்றிய விஷயங்கள் தெரிவிக்கப்பட்டது?" என ஈமெயில் வழி கேள்வி எழுப்பினேன்.

"அவரிடம் உங்களை தொடர்பு கொள்ளச்சொல்லி விஷயங்களை கூறியதும், "சித்தன் அருள்" வலைப்பூவை அகத்தியர் காட்டிக்கொடுத்துள்ளார். அங்கே போய் தேடி உங்கள் தொடர்பு எண் கிடைக்காததால், அவருக்குத்தெரிந்த பலரையும் தொடர்பு கொண்டு, கிடைக்காமல் போகவே, கடைசியாக என்னிடம் கேட்டார். உங்களை சந்திப்பது மிக கடினம் என்றும், செய்தியை ஈமெயில் வழி தெரிவித்து விடுகிறேன் என்று கூறினேன்" என்றார்.

மிகுந்த யோசனைக்குப் பின், "சரி! அவர் பெயரையும், தொடர்பு எண்ணையும் தெரிவியுங்கள். அடியேனுக்கு நேரம் கிடைத்தவுடன் நானே கூப்பிடுவேன் என்று தெரிவித்து விடுங்கள்" என பதில் போட்டேன்.

அவர் பெயரும், தொடர்பு எண்ணும், அடியேனுக்கு தெரிவிக்கப்பட்டது. வாங்கி பத்திரமாக சேமித்து வைத்துக் கொண்டேன். உடனேயே கூப்பிட வேண்டும் என்று தோன்றவில்லை. சில நாட்கள் கடந்து போனது.

தகவல் அடியேனுக்கு தந்தவர், சில நாட்களுக்குப்பின் அடியேனை தொடர்பு கொண்டு, அவரிடம் பேசிவிட்டீர்களா! தொடர்பு கொள்வதில் ஏதேனும் பிரச்சினையா? அவருக்கு குருநாதரிடமிருந்து அழுத்தம் அதிகரிக்கிறது என்றார். உங்கள் எண்ணை கொடுத்தால், அவரையே கூப்பிட சொல்கிறேன்" என்றார்.

"குருநாதரிடமிருந்து அவருக்கு அழுத்தமா? அவர் அழுத்தம் உணருகிற அளவுக்கு, அப்படி என்ன செய்கிறார்?" என்றேன்.

"அவர் நாடி வாசிக்கிறார்" என்றாரே பார்க்கலாம்.

அடியேனின் சிந்தனை எங்கெல்லாமோ பாய்ந்தது. ஒரு முடிவுக்கு வந்தேன்.

"சரி! கூடிய விரைவில் நானே அவரை அழைக்கிறேன். செல் வழிதான் அடியேனால் பேசமுடியும். நேரடியாக போய் பார்ப்பதெல்லாம் இயலாத விஷயம். கால சூழ்நிலை பயணத்துக்கு அனுமதிக்கவில்லை" என தெரிவித்தேன்.

ஒரு நாள் இரவு 8 மணிக்கு, உணவருந்திவிட்டு, சற்று நடந்துவிட்டு வரலாம் என பத்மநாபஸ்வாமி கோவிலின் தெற்கு வாசலை நோக்கி நடந்தேன். அன்று மும்மூர்த்திகளும் கோவிலுக்கு உள்ளே உலாவருகிற நாள். மெதுவாக நடந்து கோவில் வாசலை அடைந்தவுடன், இது தான் நேரம், இங்கிருந்தே அவரை தொடர்பு கொள்வோம், என நினைத்து அவர் எண்ணில் அழைத்ததும், உடனேயே எடுத்தார்.

சுருக்கமாக அடியேனை அறிமுகப் படுத்திக்கொள்ளவும், மூன்று மூர்த்திகளும் வாசலுக்கு நேராக வந்து நின்றனர். உடனேயே அவரிடம், மூன்று மூர்த்திகளும் நிற்பதை கூறி "வேண்டிக்கொள்ளுங்கள், முகூர்த்தம் நன்றாக இருக்கிறது" என்றேன், ஒரு இரண்டு நிமிடம் அமைதியானேன்.

சற்று நேரத்தில், மும்மூர்த்திகளும் கிளம்பிச் செல்லவும், "எப்பொழுது உங்களுக்கு பேச வசதிப்படும்!" என்றேன்.

"எப்பொழுது வேண்டுமாயினும்!" என்றார்.

"சரி! வியாழக்கிழமை காலை 9 மணியிலிருந்து 12 மணிக்குள் உங்களை அழைக்கிறேன். அப்பொழுது கூறுங்கள்" என்றேன்.

"நான் எதுவும் சொல்வதற்கில்லை. நீங்கள் தொடர்பு கொள்கிற பொழுது அகத்தியர் நாடியில் வந்து எல்லாவற்றையும் உரைப்பார். நீங்களாக எதுவும் கேட்க தேவை இல்லை. அனைத்திற்கும் பதில் இருக்கும். அவர் உரைத்தபின், உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், பின்னர் நீங்கள் கேட்கலாம்!" என்றார்.

"சரி! சொன்ன நேரத்துக்கு அடியேன் அழைக்கிறேன்" என்றேன்.

"குருநாதர் என்ன சொல்லப்போகிறார்?" என்கிற எண்ணம் மனதை குடைய ஆரம்பித்தது!

சித்தன் அருள்...............தொடரும்!

Friday 13 November 2020

சித்தன் அருள் - 960 - தீபாவளி தின நல்வாழ்த்துக்கள்!

வணக்கம்!

அகத்தியர் அடியவர்கள், சித்தன் அருள் வாசகர்கள், அவர்கள் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும், "தீபாவளி தின நல்வாழ்த்துக்கள்". இனி என்றும் குருவருள் பெற்று, இறையருள் கொண்டு நலமாய் வாழ "அகத்தியப்பெருமானின் சித்தன் அருள்" வலைப்பூ சார்பாக வாழ்த்துகிறேன்.

அகத்தியப் பெருமானின் அருள்வாக்கு!

"இங்கு கொண்டாடப்படுகிற பண்டிகைகள் எல்லாம், ஒரே எண்ணத்தில் உருவானவை. வாழ்க்கையில் உள்ள ஏற்ற தாழ்வுகளை உணர்த்தி, இருப்பவன், இல்லாதவர்களுக்கு கொடுப்பதின் மூலம், ஒரு சமூகத்தில் தர்மம் வளர்ந்தால், அங்கு இறையருள் நிறைந்து நிற்கும். அவன் குடும்பம் நிம்மதியில் வாழும். இன்னும் மேலான தர்மங்கள் ஏதென உரைக்க இறைவன் எங்களுக்கு கட்டளையிடுவார்."

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் நமஸ்காரம்!

சித்தன் அருள்...............தொடரும்!

Thursday 12 November 2020

சித்தன் அருள் - 959 - ஆலயங்களும் விநோதமும் - அருள்மிகு சுத்த ரத்னேஸ்வரர் திருக்கோயில், ஊட்டத்தூர், திருச்சி!

'உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம்' என்றெல்லாம்  பாடி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர். அப்படி ஆலயமாகப் பொலிவு பெற்று இருக்க வேண்டிய நம் உடம்பு சுணக்கமுற்றால் என்னாவது? பழக்க வழக்கங்கள்தான் நம் உடம்பு சுணக்கமுறுவதற்குக் காரணம் என்றால், நம்மால் மாற்றிக் கொள்ள இயலும். கர்மவினை காரணம் என்றால், அவற்றை எங்கே போய் கழிப்பது?

உள்ளத்துப் பிணிகளைப் போக்குபவை ஆலயங்கள். அதே நேரம், நம் உடற்பிணிகளுக்கும் நல்மருந்தாகி, நம் பிணிகளைப் போக்கி, ஆரோக்கியமுடன் திகழச் செய்யும் திருத்தலங்களும் நிறைய உண்டு.

சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில், திருச்சிக்கு முன்னதாக பாடலூர் என்ற இடத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு சுத்த ரத்னேஸ்வரர் திருக்கோயில்.

இந்தத் திருத்தலத்தில் அருளும் இறைவனுக்கு சுத்தரத்தினேஸ்வரர் என்று திருப்பெயர். அம்பாளின் திருப்பெயர் அகிலாண்டேஸ்வரி.இந்தக் கோயிலின் சிறப்பம்சம், வேறு எங்குமே காண முடியாதவாறு, ஸ்வாமி சந்நிதிக்கு நேர் எதிரிலேயே தீர்த்தம் அமைந்திருப்பது. மற்றொரு சிறப்பம்சம், இங்கே தனிச்சந்நிதி கொண்டிருக்கும் ஆடல்வல்லான்.

அபூர்வ வகை பஞ்சநதனக் கல்லால் ஆனவர் இந்த நடராஜப் பெருமான். கொள்ளை அழகுடன் அருட்காட்சி தரும் இவருக்கு அருகிலேயே சிவகாமி அம்மையும் தரிசனம் தருகிறார்.   இவரைத் தரிசித்து, உரிய பூஜைகள் செய்து வழிபட்டால், சிறு நீரகக் கோளாறுகள் நீங்கும் என்று நம்பிக்கை.

பஞ்சநதனக் கல்லால் ஆன இங்குள்ள நடராஜர் பல்வேறு வகையான நோய்களையும் போக்கக்கூடிய வரப்பிரசாதி. குறிப்பாக, சிறுநீரகம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளையும் அறவே போக்கி அருள்பவர். இதற்கு நேரடி சாட்சியாக, இங்கே வந்து வழிபட்டு, தங்கள் சிறுநீரகப் பிரச்னையிலிருந்து விடுபட்டு, அனுபவபூர்வமாகப் பலன் பெற்ற பலரை நீங்கள் இங்கே பார்க்கலாம்’’

பரிகார பூஜை செய்யும் முறை:-

சிறுநீரகக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து, கோயிலிலேயே கிடைக்கும் வெட்டிவேரை ஒரு கிலோ அளவில் வாங்கி, அதை 48 துண்டுகளாக்கி, மாலையாகக் கோத்து நடராஜருக்கு அணிவித்து, அர்ச்சனை செய்து வழிபடவேண்டும். பின்னர், அந்த மாலையைப் பிரசாதமாகப் பெற்றுக்கொண்டு, கோயிலில் அமைந்திருக்கும் பிரம்ம தீர்த்த நீரை (5 லிட்டர் கொள்ளளவு உள்ள) ஒரு கேனில் எடுத்துச் செல்ல வேண்டும். இந்த தீர்த்தம் எத்தனை நாட்களானாலும் கெடவே கெடாது என்பது சிறப்பு.

வீட்டுக்குச் சென்றதும், தினமும் இரவில் பிரம்ம தீர்த்தத்தை ஒரு குவளையில் நிரப்பி, அதில் வெட்டிவேர் மாலையில் இருந்து ஒரு துண்டை எடுத்து அந்தத் தீர்த்தத்தில் போட்டு ஊற விடவேண்டும். மறுநாள் காலையில் வெட்டிவேர்த் துண்டை எடுத்துவிட்டு, அந்த தீர்த்தத்தைப் பருகவேண்டும். இப்படித் தொடர்ந்து 48 நாட்கள் பருகி வர, சிறுநீரகக் கோளாறுகள் நீங்கி ஆரோக்கியம் பெறலாம் என்பது ஐதீகம்.

பெண்கள் மட்டும் வீட்டு விலக்காகும் நாட்களில், இந்தத் தீர்த்தத்தைப் பருகக் கூடாது. 48 நாட்கள் முடிந்ததும், அந்த வெட்டிவேர்த் துண்டுகளை நீர் நிலைகளில் சேர்த்துவிட வேண்டும்.

சிறுநீரகக் கோளாறுகள் என்றில்லை, நமது சகல பிரச்னைகளுக்கும் தீர்வெனும் மருந்து தரும் மருத்துவன் இத்தலத்தின் இறைவனான ஆடல்வல்லான். ஒருமுறை, நாமும் இந்தத் தலத்துக்குச் சென்று, ஐயன் சுத்த ரத்தினேஸ்வரரையும், நடராஜப் பெருமானையும் தரிசித்து, உடற்பிணிகளோடு மனப் பிணிகளும் நீங்கிட வரம் பெற்று வருவோம்.

பார்ப்பதற்கு கருங்கல்லை போன்று தோற்றம் இருந்தாலும் சில தருணங்களில் அந்தக் கல்லானது கரு நீலமாகவும், கரும்பச்சை வண்ணத்திலும் கூட காட்சி தரும். பல கோடி சூரியனின் சக்தியை உள்ளடக்கிய கல்லாக இது சித்தர்களால் கூறப்பட்டுள்ளது. இந்த பஞ்சநதன பாறையின் மற்றொரு சிறப்பை கேட்டால் எவராலும் நம்ப முடியாது. இந்தப் பாறையில் இறைவனின் திரு உருவத்தை எவராலும் உளியால் செதுக்க முடியாது என்றும், இறைவனின் திருவுருவம் தானாகவே உருவாகும் என்றும், வரலாற்றில் சொல்லப்பட்டிருக்கிறது. எந்த இடத்திலும் காணமுடியாத பஞ்சநதன கல்லில் உருவான சிலைதான் ஊட்டத்தூர் நடராஜர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊட்டத்தூரின் மேற்கு திசையில் அமைந்திருக்கும் சோளேஸ்வரம் கோவிலுக்கு ராஜராஜ சோழன் அடிக்கடி வருகை தருவார். ஒருசமயம் மன்னரின் வருகைக்காக, பாதையை சரி செய்யும் சமயத்தில் மண்வெட்டியால் புல்லை வெட்டும் போது, ஒரு இடத்தில் இருந்து ரத்தம் பீரிட்டது. பயந்துபோன தொழிலாளிகள் இந்த செய்தியை மன்னனிடம் தெரிவித்தனர். அந்த இடத்தில் இருந்த சிவலிங்கத்தை கண்டுபிடித்து, செய்த பாவத்திற்காக மன்னிப்பும் கேட்டு, அந்த லிங்கத்திற்கு ஊட்டத்தூரில் ரத்தினேசுவரர் திருக்கோவிலை கட்டினார் ராஜராஜ சோழ மன்னர். இன்றும் இத்திருத்தலத்தில் வீட்டிலிருக்கும் லிங்கத்தின் நெற்றியில் வடு தென்படுவது குறிப்பிடத்தக்கது.

புண்ணியநதிகள் தம்முள் எவர் பெரியவர் என்ற போட்டியில் சிவபெருமானிடம் தீர்ப்புக்கு வர, நந்தியை அழைத்து அனைத்து நதிகளையும் குடித்துவிடும் படியும் எந்த நதியைக் குடிக்கமுடியவில்லையோ அதுவே சிறந்தது எனக்கூற, நந்தியெம்பெருமானால் கங்கையைக் குடிக்க முடியாததால் அதுவே சிறந்தது எனத் தீர்ப்பாயிற்று. தாம் குடித்த நதிகளை எல்லாம் வெளியே நந்தியெம்பெருமான் வெளியே விட, அதுவே நந்தி ஆறு என ஆயிற்று.

ஓம் ஸ்ரீலோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.................தொடரும்!

Wednesday 11 November 2020

சித்தன் அருள் - 958 - ஆலயங்களும் விநோதமும் - அக்னீஸ்வரர் திருக்கோவில், திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டம்

இச்சிவாலயம் இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்த ஊரானது புராணக் காலத்தில் மேலைத்திருக்காட்டுப்பள்ளி என்று அழைக்கப்பட்டுள்ளது.

புராண காலத்தில் தேவர்களும், அவர்கள் தலைவனான இந்திரனும் இத்தலத்திற்கு வந்து இறைவனை  வணங்கினர்.  அப்போது அக்னிதேவன் தான் தொட்ட பொருட்கள் யாவும் சுட்டெரிக்கப்பட்டு நாசமாகி விடுகிறதென்றும் அதனால்  ஏற்படும் பழியிலிருந்து விடுபட வழி சொல்ல வேண்டுமென்றும் இறைவனிடம் முறையிட்டான்.  இறைவன் சிவன் அக்னிதேவன்  முன் தோன்றி இத்தலத்தில் ஒரு குளம் அமைத்து அதற்கு அக்னி தீர்த்தம் என்று பெயரிட்டு அந்த குளத்து நீரைக்கொண்டு தன்னை  அபிஷேகம் செய்தால் என்னை வழிபடும் உனக்கு அந்தப் பழி தீரும் என்றும் அதில் நீராடும் பக்தர்களுக்கும் அவர்கள் செய்த  பாவங்கள் தீரும் என்றும் வரமளித்தார்.

உறையூரிலிருந்து ஆண்டு வந்த மன்னன், உறையூர்  நந்தவனத்தில் இறைவனுக்குரியதாக பூத்துவந்த செவ்வந்தி மலர்களைப்  பணியாளன் பறித்து வந்து தர, அவற்றைப் பெற்று தன் இரு மனைவியருக்கும் தந்தான். மூத்தமனைவி அம்மலரைச்  சிவபெருமானுக்கு அணிவித்து வந்தாள். இளையவள் தான் சூடி மகிழ்ந்தாள்.  இதனால் இளையவள் இருந்த உறையூர் மண்  மாரியால் அழிந்தது.  மூத்தவள் இருந்த திருக்காட்டுப்பள்ளி மட்டும் அழியாமல் பிழைத்தது எனக் கூறுவர்.

அக்னி பகவான் சிவபெருமானை வழிபட ஏற்படுத்திய அக்னி தீர்த்தம்  இன்றும் கிணறு வடிவில் உள்ளது.  மூலவர் அக்னீஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.  சிவலிங்கம் வடிவம் உருவில்  சிறியது. சிவலிங்கத்தின் சிரசின் மீது ஐந்து நாகங்கள் படமெடுக்கும் தோற்றம் காணலாம்.

இறைவன் சந்நிதிக்கு இடது பக்கத்தில் பிரம்மாவிற்கு தனி சந்நிதி  உள்ளது. இத்தலம் பிரம்மாவிற்கு ஏற்பட்ட சாபம் நீங்கிய தலம் ஆகும்.  பிரம்மா இத்தலத்தில் இறைவனை வணங்கி  மும்மூர்த்திகளில் ஒருவர் என்ற அங்கீகாரம் தரவேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்.  சிவன் அவருக்கு தனியிடம் தந்து தங்க  அனுமதித்தார் என்று இத்தலத்தில் உள்ள கல்வெட்டு கூறுகிறது.

இத்தலத்தில் விஷ்ணு ஸ்ரீனிவாச பெருமாள் என்ற  திருநாமத்துடன் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார்.

இத்தலத்திலுள்ள  இரண்டாம் பிரகாரத்தில் இரண்டு தட்சிணாமூர்த்திகள் உள்ளனர்.  குரு தட்சிணாமூர்த்தியின் அடிப்பகுதியில் உள்ள துவாரம்  வழியே மற்றொரு தட்சிணாமூர்த்தியைப் பார்க்கலாம்.

நவக்கிரக சந்நிதியில், எல்லாக் கிரகங்களும் சூரியனைப் பார்த்தவாறே அமைந்துள்ளது சிறப்பு ஆகும்.  

இத்தலத்தில் உள்ள யோக தட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர்.  இவர் குரங்காசனத்தில் அமர்ந்து, இரண்டு திருக்கரங்களுடன் கழுத்தில் மகரகண்டி ருத்திராஷம் அணிந்து, திருச்சடையில் சூரிய, சந்திரன் அணிந்து யோக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

காவிரியாற்றின் தென்கரையில் இவ்வூர் அமைந்துள்ளது. காவிரியாறு, காவிரி-குடமுருட்டி என்று இரண்டு ஆறுகளாகப் பிரிவது இவ்வூரில்தான்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!


சித்தன் அருள்.....................தொடரும்!

Monday 9 November 2020

சித்தன் அருள் - 957 - ஆலயங்களும் விநோதமும் - கொளஞ்சியப்பர் கோயில், மணவாளநல்லூர், விருத்தாசலம், தமிழ் நாடு!

கொளஞ்சியப்பர் கோயில் விருத்தாசலம் நகருக்கு மேற்கே சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள மணவாளநல்லூரில் அமைந்துள்ளது. இதன் மூலவர் சுயம்பு வடிவிலான முருகன் ஆவார். இக்கோயிலின் சிறப்பு, இங்கே நடைமுறையில் இருக்கும் “பிராது” எனும் வழக்கு பதிவு செய்யும் முறை, சூறை விடுதல் போன்றவையாகும்.

பிராது என்கிற வார்த்தைக்கு முறையீடு, குற்றச்சாட்டு, புகார், குறை கூறல் என்பது பொருள். இயல்பு வாழ்க்கையில் மக்கள் தங்கள் புகாரினை நீதிமன்றத்தில் முறையிடுவது போல, மக்கள் தங்கள் புகார்களை, வேண்டுகோளை ஒரு காகிதத்தில் எழுதி கொளஞ்சியப்பரை நீதிபதியாக கருதி சமர்பிப்பார்கள். சமர்பித்த மூன்று நாட்களுக்குள்ளோ, மூன்று வாரங்களுக்குள்ளோ, மூன்று மாதங்களுக்குள்ளோ, மூன்று வருடங்களுக்குள்ளோ முறையிடப்பட்ட குறை, புகாரின் தன்மையைப் பொறுத்து கொளஞ்சியப்பரே ஆய்ந்து நல்ல முடிவை தந்து, குறையை தீர்த்து, வேண்டுகோளை நிறைவேற்றி வைப்பதாக நம்பப்படுகிறது. வெளியூர்களில் இருந்தும் கூட பலரும் இங்கு வந்து இந்த பிராது பிராத்தனையை மேற்கொள்கின்றனர்.

மக்கள் காகிதத்தில் எழுதி கொடுக்கும் குறைகள் முதலில் மூலவரான கொளஞ்சியப்பர் சன்னிதானத்தில் வைக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது. அதன்பிறகு, கோயில் வளாகத்தின் உள்ளேயே இருக்கும் முனியப்பர் சன்னிதானத்தின் முன்புறத்தில் அமைந்துள்ள சூலம், ஈட்டி போன்றவற்றில் கட்டப்படும். தங்கள் வேண்டுதல், கோரிக்கை நிறைவேறிய பிறகு மக்கள் மீண்டும் இந்தக்கோயிலுக்கு வந்து தங்கள் பிராதினை திரும்பப் பெற்றுக்கொள்கிறார்கள். பிராது கட்டும் வேண்டுதலுக்கு வசூலிக்கும் கட்டணத்திலும் ஒரு புதுமையான முறைமை கடைபிடிக்கப்படுகிறது. கோயில் நிர்வாகத்தின் பொதுவான கட்டணத்திற்குப் பிறகு, பிராது கட்டும் நபர் எங்கிருந்து வருகிறாரோ அந்த இடத்திற்கும் கோயிலுக்கும் இடையே உள்ள தொலைவு கணக்கிடப்பட்டு, ஒரு கிலோமீட்டருக்கு குறிப்பிட்ட பைசா வீதம் வசூலிக்கப்படுகிறது

விவசாயிகள் தங்கள் நிலங்களில் நல்ல விளைச்சல் கிடைக்க இக்கோயில் வேண்டிக்கொள்கிறார்கள். அறுவடைக்குப் பிறகு வரும் பங்குனி உத்தர திருவிழா அன்று தாங்கள் விளைவித்த பயிர் விளைச்சலில் ஒரு பங்கினை கோயிலுக்கு கொண்டு வந்து மக்கள் கூட்டத்தில் மேலே எறிவார்கள் இது சூறைவிடுதல் எனப்படுகிறது. பொதுவாக சூறைவிடுதலில் முந்திரிக் கொட்டைகள் முக்கிய இடம்பெறும்.

பிராது கொடுப்பதுபோல், வேண்டிய விஷயம் நடந்துவிட்டால், கொடுக்கப்பட்ட பிராதை வாபஸ் பெறும் "ராஜினாமா" கொடுப்பதும் இங்கு நிறைவேற்றப்படுகிறது. பிராது கொடுத்தவர், இன்ன தியதியில் இன்ன விஷயத்துக்கு பிராது கொடுத்ததாகவும், கொளஞ்சியப்பர் அருளால் அது நடந்துவிட்டதாகவும், ஆதலால் கொடுத்த பிராதை வாபஸ் பெறுவதாகவும் எழுதி,  அதை கொளஞ்சியப்பர் சன்னதியில் கொடுத்து பூஜை செய்ய வேண்டும். மேலும் அவர் வீடு இருக்குமிடத்திலிருந்து, கொளஞ்சியப்பர் கோவில் இருக்கும் தூரத்திற்கு எத்தனை கிலோமீட்டரோ, அத்தனைக்கு குறிப்பிட்ட தொகையை கோவிலுக்கு கொடுக்க வேண்டும்.

இங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு, 90 நாட்களுக்கு, பெயர் வைப்பது, ஆடை அணிவிப்பது, பொட்டு வைப்பது, கிடையாது. 90 நாட்களை விரதமாக எடுத்து, இந்த கோவிலுக்கு வந்த பின் தான் அவை செய்யப்படுகிறது.

வேப்பெண்ணெய்யை வாங்கிக்கொடுத்தால், கொளஞ்சியப்பர் சன்னதியில், விபூதியை கலந்து தருவார்கள். அது ஒரு அருமருந்து. உடலில் உள்ள அனைத்து வியாதிக்கும் சிறந்த மருந்தாக பலனளிக்கிறது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...............தொடரும்!

Sunday 8 November 2020

சித்தன் அருள் - 956 - அந்தநாள் >> இந்த வருடம் - 2020 - கோடகநல்லூர்!


இரு தினங்கள் கழித்து, அர்ச்சகரிடம் பேசிய பொழுது அனைவருக்கும் (அர்ச்சகர், கோயில் சிப்பந்திகள் மற்றும் அத்தெருவில் வசிப்போர்) (11 பேர்) கொரோனா தொற்று இல்லை என்று கூறினார். குருநாதர் காப்பாற்றிவிட்டார்.

நான் 25.10.2020 அன்று காலையே கோடகநல்லூர் சென்றேன். அர்ச்சகரிடம் பேசி அபிஷேகத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் பற்றி பேசினோம். அவர் செய்துவிடலாம் என்று கூறினார். 

என்னை குருநாதர் ஏற்பாடுகள் செய்வதற்காகத்தான் நான்கு நாட்கள் முன்னதாகவே அங்கு செல்லும்படி டிக்கெட் கிடைக்க செய்துள்ளார், என்பதை அத்தருணம் உணர்ந்தேன். குருநாதர் திருவடிகளே போற்றி.

29.10.2020 அன்று காலை தாமிரபரணி தாய்க்கு முதலில் தாம்பூலம் கொடுத்த பின், பெருமாளுக்கு அபிஷேக பூஜைகள் ஆரம்பித்தது. அதுவும் வெகு சிறப்பாக நடந்தது என்றே கூற வேண்டும். பூஜைக்கு நிறையவே உதவி செய்த எனது நண்பர் முரளிதரன் அபிஷேகம்  நடந்து கொண்டிருந்த போது எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு என்னவென்று விசாரித்தேன். அப்பொழுது அவர் "பெருமாளுக்கு அபிஷேகம் நடந்த போது பெருமாளை அர்ச்சகர் மறைக்கிறாரே என எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்திற்கு பிறகு, கண் மூடி தியானித்த போது குருநாதர் அகத்திய பெருமான் திருக்கரங்களால் பெருமாளுக்கு அபிஷேகம் செய்யும் காட்சி மனக்கண்ணில் தெரிந்தது. என்றார். எனக்கு இத்தனை அருள் செய்வாரா குருநாதர் என நினைத்து, இதை கேட்டதும்  ஆடிப்போய்விட்டேன், இந்த ஜென்மத்திற்கு, இது போதும் என தோன்றியது, என புளகாங்கிதமடைந்து கூறினார். குருநாதரின் ஆசியாலும். வழிகாட்டுதலினாலும் பெருமாளுக்கு குருநாதர் செய்யும் அபிஷேகம் இனிது நடந்தது. எவ்வித தடங்கலும் இல்லாமல் நடைபெற்றது.

அகத்தியர் அடியவர்களுக்கு சில வேண்டுகோள்.

அபிஷேகத்திற்கு பொருட்கள் வாங்கும் போது, முடிந்த வரை சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

1. மஞ்சள் பொடி கடையில் வாங்காமல், மஞ்சள் கிழங்கு வாங்கி அதற்கென்று இருக்கின்ற அரவை நிலையத்தில் கொடுத்து அரைக்கவும். நான் சென்னையிலேயே மஞ்சள் கிழங்கு வாங்கி அரைத்து எடுத்து சென்றேன். கலப்படம் இல்லாமல் இருக்கும். கஸ்தூரி மஞ்சளும் வாங்கி அரைத்து எடுத்து சென்றேன். கூடிய வரையில் நம்மால் முடிந்த, கலப்படம் இல்லாமல் கொடுக்கக் கூடிய பொருளை அபிஷேகத்திற்கு கொடுக்கலாம்.

2.பாக்கெட் பால், தயிர் தவிர்க்கலாம். முடிந்தால் பசும்பால் வாங்கி கொடுக்கலாம். நான் முதல் நாள் பசும்பால் வாங்கி தயிர் செய்து கொண்டு சென்றேன். காலை பசும்பால் வாங்கி சென்றொம். இளநீர் கலப்படமில்லாதது, அதை வாங்கி தரலாம். பழங்கள் வாங்கி தரலாம்.

3. பூக்கள்: வாசனையுள்ள பூக்களையே தர வேண்டும். மல்லிகைப்பூ, முல்லை, பன்னீர் ரோஜா போன்றவை தரலாம். தாமரைப்பூ குருநாதருக்கும் பெருமாளுக்கும் மிகவும் பிடித்தமானது. துளசி வாங்கி தரலாம். தாமரை மாலை, மல்லிகைப்பூ மாலை, துளசி மாலை வாங்கப்பட்டது. அர்ச்சனைக்கு துளசி, பன்னீர் ரோஜா, தாமரை வாங்கப்பட்டது. சாமந்தி (வெள்ளை, மஞ்சள்), கனகாம்பரம் மற்ற வகையான வாசனையற்ற ரோஜாக்கள் தவிர்க்கலாம்.

4. பசுநெய் கிடைத்தால் சிறப்பு. கலப்படம் இல்லாத நெய் விளக்கேற்றுவதற்கு வாங்க முயற்சிக்கலாம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

லட்சுமி, சென்னை.

பூஜை அன்று நடந்த ஒரு சில நிகழ்ச்சிகள் (தகவல் பிறரால் தெரிவிக்கப்பட்டவை) பார்க்கலாம்.

  • காலையில் பூஜையின் பொழுது, ஒரு விதமான பச்சை நிற ஒளி, கோவிலை சூழ்ந்து நின்றதாக பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
  • காலையிலும், மதியத்திலும், அகத்தியர் அடியவர்கள் செய்த அன்னதானத்தில், பெரியவர்கள் கலந்து கொண்டு அன்னம் பாலித்து, பூஜை மிக சிறப்பாக நடந்ததாக கூறி அனைவரையும் ஆசீர்வதித்தனர்.
  • மிகுந்த அன்புடன், அடியவர்கள் பூஜை நடத்தியதால், அங்கு வந்திருந்த அனைவருக்கும், அகத்தியரின் அருளாசி கிடைக்கப் பெற்றுள்ளது. 
  • உழவாரப்பணிகளில் அடியவர்கள், மிகுந்த ஈடு பாட்டுடன் செயல்பட்டது குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது.
  • அத்தனை அடியவர்கள் ஒன்று கூடியும், அமைதி காத்து, பூஜையில் பங்கு கொண்ட அடியவர்களுக்கு, நலம் மிகுந்த ஆசிகள் குருநாதர் உரைத்துள்ளார்.
  • பெருமாளுக்கு, பூஜைக்கு, பச்சை கற்பூரம் வாங்கி கொடுத்த அடியவர்கள் அனைவரின் திருஷ்டி தோஷங்களையும், குடும்பத்தில் நலம் விளைய பெருமாள் ஆசிர்வதித்ததாக, அர்ச்சகர் பின்னர் உரைத்தார். 
  • மேலும் பெருமாள் அன்றைய பூஜையால், மிகுந்த மன நிறைவுடன் இருந்ததாகவும், அனைவரையும் ஆசிர்வதித்ததாகவும் தகவல்.

பூஜையையும், அன்றைய நிகழ்ச்சிகளையும் ஏற்று நடத்த முன் வந்த திருமதி.லட்சுமி குடும்பத்தினருக்கும், அவரது நண்பர்களுக்கும் "சித்தன் அருள்" வலைப்பூவின் சார்பாக நன்றியை/அகத்தியப்பெருமானின் ஆசிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

கோடகநல்லூர் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றது!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்................. தொடரும்!

Wednesday 4 November 2020

சித்தன் அருள் - 955 - அந்தநாள் >> இந்த வருடம் - 2020 - கோடகநல்லூர்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

வருடா வருடம், அகத்தியப்பெருமான் ஒரு குறிப்பிட்ட முகூர்த்தத்தில் பெருமாளுக்கும், தாயாருக்கும் அபிஷேக/பூஜை, செய்கிற அந்தநாள் >> இந்த வருடம் - 2020 - கோடகநல்லூர் நீளா பூமி தேவி சமேத பிரஹன்மாதவர் கோவிலில், பெருமாள்  அருளினால் மிக சிறப்பாக நடந்தது, என பல வழிகளில் வந்த தகவல்கள் படி புரிந்து கொள்ள முடிந்தது.  அடியேனால் ஒரு சிறு உழவாரப்பணியையும் செய்ய முடியவில்லை என்பது மிக நிதர்சனமாக, சில விஷயங்களை உணர்த்தியது. சில நாட்கள் பின் செல்வோம்.

அக்டோபர்  மாதம் முதலே, கோடகநல்லூரை பற்றி யோசிக்கத்தொடங்கினேன் என்பது உண்மை. ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கும் முன், எப்பொழுதும் அகத்தியப்பெருமானிடம் உத்தரவு கேட்பது அடியேனின் வழக்கம். ஆனால் இம்முறை, எப்பொழுது கேட்டாலும், கை உயர்த்தி ஆசிர்வதிப்பது மட்டுமே தெரியுமே தவிர, மௌனம்தான் நிலவியது. ஒரு சில நாட்களில் சில உண்மைகள் புரியத் தொடங்கியது. ஆம்! அபிஷேக பூஜை நடக்கும், அகத்தியர் அடியவர்கள் பங்கு பெறுவர், ஆயினும், அடியேனுக்கு அனுமதி இல்லை என்று உணர்ந்தேன்.

அகத்தியர் எப்பொழுதுமே ஒரு தனி வழியை தொடருவார். அதை பல முறை உணர்ந்திருக்கிறேன். கோடகநல்லூர் பூஜை என்பது, அவருக்கு மிக முக்கியமான ஒன்று, ஆனால், அதை நடத்துகிற அடியவர்களை மாற்றிக் கொண்டே இருப்பார். இங்கு, இன்று அடுத்த தலைமுறையை, அவர் நடத்தும் அபிஷேக பூசைக்குள் நுழைத்து, அவர்களுக்கும் வளர வாய்ப்பளிக்க விரும்புகிறார் என தோன்றியது.

இதை மனதில் வைத்துதான், "சித்தன் அருளில்" யாரோ கோடகநல்லூர் அபிஷேக பூசையை பற்றி கேட்டவுடன், அடியேனால் வர முடியும் என்று தோன்றவில்லை, எல்லையில் பிரச்சினைகள் இருக்கிறது; தமிழ் நாட்டில் வசிக்கும் அகத்தியர் அடியவர்கள் ஒன்று கூடி நடத்தலாம் என்று, பதில் கூறினேன். அதற்கு ஏற்றார் போல், அடியேனை சுற்றி இருந்தவர்கள் அனைவரும் விலகி சென்றனர். 

இந்த வருடம், அபிஷேக பூஜையை செய்ய வேண்டும் என்கிற ஆசையை, அடியேன் மனதிலிருந்து அறுத்தேன். அமைதியானேன். 

இனி, பூஜையை நடத்திக் கொள்ள வேண்டியது, உங்கள் கையில் உள்ளது என்று, நம் குருநாதரிடம் மானசீகமாக கூறிவிட்டு மேலும் அமைதியானேன்.

இரு வாரமாயிற்று! குருநாதரிடம் இருந்து  எந்த தகவலும் இல்லை. பூஜை அறையில் அவரை பார்க்கும் பொழுது "ஓம் அம் அகத்தீசாய நமக!" என்கிற ஜபம் மட்டும்தான்.

ஒரு நாள் த்யானத்தில் அமர வேண்டும் என்கிற எண்ணம் வந்தது. அமைதியாக பூசை அறையில் அமர்ந்து, த்யானத்தில் நுழைந்த பொழுது, "என் சேயவள் கேட்பாள்! உனக்கு சொல்லித் தந்த பூஜை முறையை சொல்லிக்கொடு! அபிஷேக பூஜைகள் அன்று நடக்கும்! நான் பார்த்துக் கொள்கிறேன்!" என்றார்.

"உத்தரவு!" என்கிற ஒரு பதிலை கூறி, தியானத்தை நிறுத்திக் கொண்டேன்.

யார் கேட்பார்கள்? என் சேயவளாக வரப்போவது யார் என்று கூட தெரியாமல், அமைதியாக காத்திருந்தேன்.

ஒரு வாரத்தில், குருநாதர் கிளப்பிவிட்ட "சேயவளாக" திருமதி லட்சுமி என்பவர், பூசைக்கான முறைகளை கேட்டு ஈமெயில் போட்டிருந்தார். பூஜைக்கான விஷயங்களை தெரிவித்தால், தான் ஏற்று, சிரம் மேற்கொண்டு தாத்தாவின் அருளால் (அகத்தியரை தாத்தா என்றழைப்பாராம்) செய்ய முடியும் என்றார்.

பூஜை முறைகளின் வழிகள் அர்ச்சகருக்கு தெரியும் என்றாலும், நாம் ஓடி ஓடி வாங்க வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு.

அனைத்தையும் ஒரு ஈமெயிலில் தட்டச்சு செய்து தெரிவித்தேன். முதலில், அர்ச்சகர் ஒத்துக் கொள்ள வேண்டும். ஆதலால் அவரிடம் முதலில் பேசவேண்டும். பின்னர் பிற ஏற்பாடுகள், என்றேன்.

அனைத்தையும் படித்துவிட்டு "செய்கிறேன்" என்றார்.

அடியேனின் மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்தேன்!

இனி, அவர் செயல். பொறுமையாக அமர்ந்து வேடிக்கை பார்ப்பதே நம் வேலை என்று உணர்ந்தேன்.

அபிஷேக பூஜையை ஏற்று நடத்திய திருமதி லட்சுமியின் வார்த்தைகளில் இனி கேட்போம்.

ஓம் ஸ்ரீ அகத்திய பெருமான் திருவடிகளே போற்றி!

நான் வருடா வருடம், கோடகநல்லூரில், அகத்தியப் பெருமான், பெருமாளுக்கும் தாயாருக்கும் நடத்தும் அபிஷேக பூஜையில் கலந்து கொள்வேன். 

இந்த வருடம், 29.10.2020 அன்று நடந்த அபிஷேகத்திற்காக இரண்டு மாதங்கள் முன்பாகவே இரயிலில் டிக்கெட் பதிவு செய்ய முயன்றேன். அபிஷேகம் நடக்கும் நாள் 29.10.2020. ஆதலால், வழக்கம் போல் 28.10.2020 அன்று பதிவு செய்தால், பூஜை அன்று கோடகநல்லூரில் இருந்துவிடலாம் என்று ஒரு எண்ணம். முன்பதிவு செய்ய முயன்ற பொழுது, கிடைக்க வில்லை. தொடர்ந்து 26, 27 மற்றும் 28 தேதிகளில் டிக்கெட் இல்லை. ஆகவே 24.10.2020 அன்று தான் கிடைத்தது. நான்கு நாட்கள் முன்னதாகவே செல்வதால் நம்பிமலை, திருக்குறுங்குடி சென்று பெருமாளை தரிசித்து விட்டு பின்பு புதன்கிழமை கோடகநல்லூர் செல்லலாம் என்றிருந்தேன்.

ஆனால் சித்தன் அருளில், இங்கு நிலவும் அசாதாரண சூழ்நிலையால் இம்முறை நடக்குமா என்று தெரியவில்லை என்று தெரிவித்திருந்தார். மிகவும் கவலையாக இருந்தது. ஆகவே நான் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது கேரளாவில் நிலவும் சூழ்நிலையால் வர இயலாது என்று தெரிவித்தார். நான் தமிழகத்தில் இருப்பதால் பூஜைக்கான ஏற்பாடுகள் செய்வதற்கு அவரின் வழிநடத்தலை வேண்டினேன்.

என்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்ற விவரங்கள் தெரிவிக்கப்பட்டது. 

அதில் கூறியபடி, அர்ச்சகரை தொடர்பு கொண்ட பொழுது  அவர் செய்யலாம் எனறு கூறினார். 

அப்பொழுது தான் உயிர் வந்தது. ஆனால் வெளிப்பிரகாரத்தில் வைத்து செய்ய முடியாது என்றும், உள்ளேயே சுவாமி சன்னதிக்கு முன் வைத்து செய்வதாக கூறினார். 

எப்படியோ பெருமாளுக்கு அபிஷேகம் நடக்க வேண்டும் அதுதான் எல்லோருடைய ஆசை, வேண்டுதல். ஒவ்வொருவராக நாங்கள் ஏற்பாடுகள் செய்ய தொடங்கினோம். எங்கள் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் நண்பர்கள் உதவியுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

திடீரென்று அர்ச்சகர் ஒரு வாரம் முன்பு தொலைபேசியில் அழைத்து, அவருக்கும், அவருடன் கோவிலில் பணிபுரியும் 10 பேருக்கும் "கொரோனா ஆய்வு" செய்திருப்பதாகவும், அதன் முடிவு இரண்டு நாட்களில் தெரியும் என்றும், அதில் தொற்று உறுதி செய்யப்பட்டால், தான் 14 நாட்கள் வெளியில் வரமுடியாது என்றும் கூறினார். 

எனக்கு தூக்கி வாரி போட்டது. அர்ச்சகர் வராவிட்டால் கோவில் திறக்க முடியாது. அபிஷேகம் எவ்வாறு செய்வது?

இது என்ன புது சோதனை என்ற எண்ணம் மனதுள் வந்தது. தாத்தாவிடம்தான் வேண்டிக்கொண்டு, பிரார்த்தனையை சமர்பித்தேன்.

சித்தன் அருள்............ தொடரும்!

Thursday 29 October 2020

சித்தன் அருள் - 954 - அந்தநாள் >> இந்த வருடம் 2020 - கோடகநல்லூர்!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்று கோடகநல்லூர் ப்ரஹன்மாதாவப் பெருமாள் கோவிலில் நடை பெற்ற நம் குருநாதர் அகத்தியப்பெருமான் நடத்திய அபிஷேக பூசைகளின் சில காட்சிகள்.














 ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...........தொடரும்!

Sunday 25 October 2020

சித்தன் அருள் - 953 - அந்தநாள் >> இந்த வருடம் - 2020 - ஸ்ரீ நீளா பூமி சமேத ப்ரஹன்மாதாவப் பெருமாள் கோவில், கோடகநல்லூர்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

எல்லா வருடமும் ஐப்பசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரமும், திரயோதசி திதியும் ஒன்று சேருகிற நாளில் கோடகநல்லூர் பிரஹன்மாதாவப் பெருமாள் கோவிலில், அகத்தியர் உத்தரவின் பேரில், அடியவர்கள் ஒன்று சேர்ந்து பெருமாளுக்கும், தாயாருக்கும் அபிஷேக பூஜைகளை ஏற்பாடு செய்து வருவதை அறிவீர்கள். அகத்தியர் அடியவர்கள் ஒரு கருவியாகத்தான் செயல்படினும், உண்மையிலேயே, அகத்தியர் பெருமான்தான் இந்த பூசையை நடத்துகிறார் என்பது, முன்பு நடந்த பூஜைகள் சாட்சி.

சித்தன் அருள் 850வது தொகுப்பில், கீழ் வருமாறு உரைக்கப்பட்டிருந்தது.

 "29/10/2020 - வியாழக் கிழமை - ஐப்பசி மாதம் சுக்லபக்ஷ த்ரயோதசி திதி- உத்திரட்டாதி நட்சத்திரம்.

கோடகநல்லூர்:- எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள். தாமிரபரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள். அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள்."

"இன்றைக்கும் விண்ணவர்களை நோக்கி வணங்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த புனிதமான இடத்தில் வந்து புரண்டு எழுந்தாலே போதும் உனது தோஷம் போய் விடும், ஏன் என்றால் இந்த மண்ணுக்கு அவ்வளவு வாசனை உண்டு. நதிக்கு அத்தனை சிறப்பு உண்டு. இந்த தாமிரபரணி நதியை அத்தனை சாதாரணமாக நினைக்கக் கூடாது."

நம் குருநாதர், அகத்தியப்பெருமான் பூசை செய்ய, பெருமாள் ஆனந்தமாக அமர்ந்து அதை ஏற்று வாங்கிக்கொள்கிற முகூர்த்தம் அது. அந்த நாளில், கோடகநல்லூர் கோவிலில் இருக்கவே கொடுத்து வைக்க வேண்டும்.

தமிழக எல்லை கடந்து வருவதில் பிரச்சினை உள்ளதால், இந்த முறை அடியேனால் பங்கு பெற முடியாது என்பதில் சற்று விசனம் இருப்பினும், அகத்தியப்பெருமான், பூஜை சிறப்பாக நடக்க ஏற்பாடு செய்கிறார்.

ஆம்! திருமதி. லட்சுமி என்கிற அகத்தியர் அடியவர், அகத்தியர் ஆணையை சிரம் மேற்கொண்டு, அன்றைய தினம் பூஜைக்காக ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

தமிழ்நாட்டுக்குள் இருக்கும் அகத்தியர் அடியவர்களுக்கு, அதிக சிரமமின்றி கோடகநல்லூர் வந்து போக முடியும். ஆகையினால், அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு ஒரு வேண்டுதலை வைக்கிறேன்.

பூஜைக்கு முன்னரும், பூஜை முடிந்த பின்னரும், கோவிலை சுத்தப்படுத்தி கொடுத்துவிட்டு செல்லுங்கள். இந்த உழவாரப்பணியை யாரும் செய்யலாம். யாரேனும் மேலும் பங்கு பெற விரும்பினால், திருமதி.லட்சுமியை அங்கேயே தொடர்பு கொண்டு உதவலாம்.

உங்கள் பிரார்த்தனையை, மனதை அகத்தியப்பெருமானிடம் கொடுத்துவிட்டு, அன்றையதினம் உழவாரப்பணியை மேற்கொள்ளுங்கள்.

எல்லோரின் வாழ்க்கையும் சிறப்பாக மாறும்.

அபிஷேக/பூஜைக்கான பொருட்களை வாங்கி செல்லலாம்.  மறக்காமல் பச்சை கற்பூரம் பெருமாளுக்கு வாங்கிக்கொடுங்கள்.

மற்றவை அகத்தியர் அருளால்!




ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.................தொடரும்!

Friday 23 October 2020

சித்தன் அருள் - 952 - ஆலயங்களும் விநோதமும் - ஸ்ரீ அனந்தபுரா கோவில், காசர்கோடு, கேரளா!


திவாகர முனிவர் பல காலம் ஸ்ரீமன் நாராயணனை குறித்து தவமிருந்தார். அவரின் தவத்தில் மனமிரங்கி, நாராயணர் ஆதிசேஷன் மேல் பள்ளிகொண்டு காட்சியளித்து என்ன வரம் வேண்டும் என்றார்.

"தங்களின் இந்த அனந்தசயன உருவத்தில் ஒரு விக்கிரகம் செய்து நித்திய பூசைகள் செய்துவர அருளவேண்டும்" என்றார்.

"அப்படியே ஆகட்டும்" என அருளிய இறைவன், அனந்தசயன ரூபத்தில் ஒரு விக்கிரகத்தை அளித்தார்.

அதை வைத்து நித்ய பூசைகள் செய்து வந்தார். ஒரு சிறுவன் அவருக்கு பூசைகளுக்கு பூ பறிக்க, உதவி செய்ய என வந்தான். நித்ய பூசைகள் நல்லபடியாக நடந்து அந்த இடம் செழிப்புறவே, விதியின் வலிமையால், திவாகர முனிவர் இறுமாப்புற்றார்.

இதை அறிந்த இறைவன் அவரின் மனநிலையை மாற்றும் எண்ணத்துடன் திருவிளையாடல் புரிய எண்ணம் கொண்டார்.

ஒருநாள் பூசையின் பொழுது, அவர் ஜபத்திற்காக நீர் எடுத்துவைத்த பாத்திரத்தை, சிறுவன் விளையாட்டாக தட்டிவிடவே, இறுமாப்பில் இருந்த முனிவருக்கு கோபம் வந்தது.

வேகமாக எழுந்து வந்து அந்த சிறுவனை அடிக்கப் போகவே, அவன் ஓடிச்சென்று, மண்மேட்டில் தோன்றிய ஒரு குகைக்குள் பூப்பிளந்து மறைந்து போனான். திடீரென்று தோன்றிய குகையை கண்டதும், அதிசயித்த முனிவர் ஒரு அசரீரியால் நிறுத்தப்பட்டார்.

"முனிவரே! யாமே சிறுவனாக உம்மிடம் வந்தோம். உம் செருக்கை சுட்டிக்காட்டி திருத்திட எண்ணினோம். இனி என்னை தரிசிக்க வேண்டுமாயின் "அனந்தன் காட்டிற்கு" வருக" என்றார் இறைவன்.

நடந்த விஷயங்களை உணர்ந்து மிக வருந்திய முனிவர், அனந்தன் காடு எங்கிருக்கிறது என்றறியாமல், அந்த குகைக்குள் புகுவதுதான் சரி என தீர்மானித்து, உள்ளே புகுந்தார்.

குகையை விட்டு வெளியே வந்தது, அனந்தன்காடு என்கிற இடத்தில்.

அந்த அனந்தன் காடு என்கிற இடம்தான் இன்றைய "திருவனந்தபுரம்".

சரி! இங்கு நாம் தெரிந்துகொள்ள என்ன இருக்கிறது.

  • அனந்தபுரா கோவில், இன்றைய திருவனந்தபுர அனந்த பத்மநாபா சுவாமி கோவிலின் மூலஸ்தானம்.
  • சிறுவனும், முனிவரும் புகுந்து மறைந்த குகை இன்றளவும் அங்கு உள்ளது.
  • முனிவர் குகைக்குள் மறைந்த உடன், அவர் பூசித்து வந்த அனந்தசயன நாராயணர் விக்கிரகத்தை, நீர் சூழ்ந்து குளம் உருவானது. பின்னர் அங்கு ஒரு கோவில் உருவாக்கப்பட்டது.
  • இந்த கோவில் குளத்தில் 70 ஆண்டுகளுக்கு முன் ஒரு முதலை வந்தது. அது இன்றளவும் அங்குள்ளது.
  • அந்த முதலை, சுத்த சைவம்.
  • கோவிலிலிருந்து இரண்டு நேரம் கொடுக்கப்படும் சோற்று உருண்டையை மட்டும்தான் உண்ணும்.
  • யாரையும் தொந்தரவு செய்வதோ, அராஜகம் பண்ணுவதோ கிடையாது.
  • மிகுந்த சாந்த ஸ்வரூபம். அது உறையும் குளத்தில் நிறைய மீன்கள் இருக்கிறது. ஆனால் அது ஒரு மீனைக்கூட தின்றதில்லை என்கிறார்கள்.
  • அந்த கோவிலில் பூஜை செய்யும் பூஜாரியின் வார்த்தைக்கு மிகவும் கட்டுப்பட்டது என்பது ஆச்சரியமான விஷயம்.
  • கோவில் பூஜாரி, அந்த குளத்தில்தான் தினமும் இருவேளை ஸ்நானம் செய்கிறார்.
  • பூஜாரி கொடுக்கும் உணவை உண்டுவிட்டு, அந்த குகைக்குள் புகுந்து காவல் காக்கிறது.
 
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...............தொடரும்!

Thursday 22 October 2020

சித்தன் அருள் - 951 - ஆலயங்களும் விநோதமும் - உச்சிப்பிள்ளையார் கோவில், திருச்சிராப்பள்ளி!


உச்சிப்பிள்ளையார் கோயில் தென்னிந்திய மாநிலமான தமிழகத்தின் திருச்சி நகரத்தில் உள்ள பிள்ளையார் கோயில் ஆகும். 3400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறையின் உச்சியில் இந்த கோயில் அமைந்துள்ளதால் உச்சிப்பிள்ளையார் கோயில் என்று இதற்கு பெயர் வந்தது. (இப்பாறைக்கு மலைக் கோட்டை எனவும் பெயர் உண்டு.)  

இராவணனுடன் நடந்த போரில் வெற்றி பெற்று அயோத்தியா திரும்பிய இராமருக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அதில் விபீசணனும் கலந்து கொண்டார். போரில் தனக்கு உதவியதற்காக இராமர், விபீசணனுக்கு இரங்கநாதர் சிலை ஒன்றை பரிசளித்தார். விபீசணன் இராமருக்கு உதவிய போதிலும், அவர் அசுரன் என்ற காரணத்தால் அச்சிலையை அவர் கொண்டு செல்வதில் விருப்பமில்லாத தேவர்கள், அதை தடுக்க வேண்டுமென விநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தனர். அவர்களது வேண்டுகோளை விநாயகரும் ஏற்றார்.

விபீசணன் இலங்கைக்கு திருச்சி வழியே செல்லும் போது, அங்கு ஓடும் காவிரி ஆற்றில் குளிக்க விரும்பினார். ஆனால், இரங்கநாதர் சிலையை ஒரு முறை தரையில் வைத்து விட்டால் அதை அங்கிருந்து நகர்த்த முடியாது என்ற காரணத்தால் செய்வதறியாமல் திகைத்தார். அப்போது அங்கு இருந்த ஒரு சிறுவனிடம் அச்சிலையைக் கொடுத்து, தான் குளித்து விட்டு வரும் வரையில் அதைத் தாங்கி பிடித்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்து குளிக்கச் சென்று விட்டார்.

சிறுவன் வேடத்தில் இருந்த விநாயகர், இரங்கநாதர் சிலையை தரையில் வைத்து விட்டார். இதைக் கண்ட விபீசணன் கோபங்கொண்டு அச்சிறுவனைத் துரத்தி மலை உச்சியில் பிடித்து, கோபத்தில் அவனது தலையில் கொட்டினார். அப்பொழுது விநாயகர் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தினார். பின்பு, அவ்விடத்திலேயே உச்சிப்பிள்ளையார் கோயில் எழுப்பப்பட்டது.

சரி! இங்கு நாம் தெரிந்துகொள்ள என்ன உள்ளது!

  • இங்குள்ள விநாயகர் சிலையின் தலையில் ஒரு வீக்கம் இருப்பதைக் இப்பொழுதும் காணலாம்.
  • இக்கோயில் மலைக்கோட்டையின் உச்சியில் 273 அடி உயரத்தில் உள்ளது. பிள்ளையார் சன்னதியை அடைய தரையில் இருந்து 437 படிகளை ஏற வேண்டும்.
  • இக்குன்றின் மீதுள்ள மூன்று சிகரங்களில் சிவன், பார்வதி மற்றும் விநாயகர் வீற்றிருந்ததாகவும், ஆதிசேஷனுக்கும் வாயுவிற்கும் இடையில் ஏற்பட்ட பெரும்போரின் விளைவாக, இமயமலைத் தொடரிலிருந்து இந்தியாவின் பல பாகங்களுக்கும் பறந்து சென்ற மலைத் தொகுதிகளில் இது ஒன்று எனவும் கூறுவர்.
  • இம்மலையின் இடைக்கோயிலின் மூலவரான செவ்வந்திநாதர் தாயுமானவர் என்றழைக்கப்படுவதற்கு ஒரு கதை கூறப்படுவதுண்டு. அந்நாளில் திருவரங்கத்திற்கும் திருச்சிராப்பள்ளிக்கும் இடையில் காவிரியாறு புரண்டோடிக் கொண்டிருக்கையில், நிறைமாத கர்ப்பிணியான தன் மகளை திருவரங்கத்தில் விட்டு விட்டுத் திருச்சிக்கு வந்த ஒரு தாயால், காவிரியின் வெள்ளம் காரணமாக திரும்பச் செல்ல இயலாதபோது, இறைவனே அத்தாய் வடிவில் அவள் மகளுக்கு மகப்பேறு செய்வித்து, அதன் காரணமாகத் தாயும் ஆனவன் எனப் பெயர் பெற்றான் எனக் கூறுவர்.
  • இந்த மலை உச்சியிலிருந்து ஸ்ரீரங்கம் கோவில், காவேரி ஆறு, கொள்ளிடம் ஆறு, திருவானைக்காவல் கோவில் ஆகியவை நன்கு புலப்படும்.
  • தமிழ்நாட்டின் தென் கைலாயம் என்ற பெயரும் இதற்கு உண்டு.
  • தாயுமான சுவாமியை வழிபட்டால் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகும்.
  • ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.................தொடரும்!

Wednesday 21 October 2020

சித்தன் அருள் - 950 - ஆலயங்களும் விநோதமும் - ஸ்ரீ பரசுராமர் கோவில், திருவல்லம், திருவனந்தபுரம்!


பாரத கண்டத்தில், பரசுராமருக்கென அமைந்த ஒரே கோவில் இங்குதான் உள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து கோவளம் செல்கிற பாதையில் 5 கிலோமீட்டர் தூரத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது.

அவரின் தந்தை ஜமதக்னியின் உத்தரவின் பேரிலும், தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்கிற கருத்துக்கு ஏற்பவும், தன தாயின் தலையை கொய்து, பின்னர் தந்தையின் தபோ பலத்தால் தாயை உயிர்ப்பித்து எழச்செய்தாலும், பரசுராமரை ப்ரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது. இறைவன் சிவபெருமானை நினைத்து தவமிருந்த அவருக்கு, இறைவனே ப்ரத்யக்ஷமாகி, லிங்கத்தை கொடுத்து, அவர் அதை பிரதிஷ்டை செய்து, தன் பாபத்தை போக்கிக்கொண்டார்.

சரி! இங்கு நாம் தெரிந்துகொள்ள என்ன உள்ளது!

  • இந்த கோவிலில் பிரம்மா விஷ்ணு சிவன் என மூன்று தெய்வங்களும் இருந்து அருள் பாலிக்கிறார்கள்.
  • சிவலிங்கத்தை இறைவனிடமிருந்து பெற்று, பரசுராமர் இங்கு பிரதிஷ்டை செய்துள்ளார்.
  • அப்படி பிரதிஷ்டை செய்து பூசை செய்யும் பொழுது பதிந்த, பரசுராமரின் கால் சுவடுகள் இன்றும் அந்த கோவிலில் பாதுகாக்கப்பட்டு பூசை செய்யப்படுகிறது.
  • பரசுராமர் தன் தாய் தந்தையருக்கு இங்கு தர்ப்பணம் கொடுத்ததால், பிதுர் தர்பணத்துக்கும், பிதுர் தோஷங்களுக்கும் மிக சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
  • "வல்லம்" என்றால் தலை. அனந்தசயனத்தில் இருக்கும் பத்மநாபரின் தலை முதலில் திருவல்லத்தில் இருந்ததாகவும், பின்னர் திவாகர முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க தனது உடலின் நீளத்தை தற்போதைய கோவிலின் வீதிக்கு பெருமாள் சுருக்கிக்கொண்டதாகவும் புராண வரலாறு.
  • பரசுராமர் சிவபெருமானையும், விபாகரண மகரிஷி விஷ்ணுவையும், வேதவ்யாஸரையும், ஆதி சங்கரர் பிரம்மாவையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக புராணங்கள் கூறுகிறது.
  • பத்மனாபாரின் தலை திருவல்லத்திலும், உடல் அனந்தசயனத்திலும், பாதம் திருப்பாதபுரம் என்கிற இடத்திலும் இருந்ததாக நம்பப்படுவதால், அனந்த பத்மநாபரை தரிசிக்க வருபவர்கள், திருவல்லத்தில் தொடங்கி, அனந்தசயனம் தரிசித்து பின்னர் திருப்பாதபுரத்தில் பாத தரிசனத்துடன் முடிக்க வேண்டும் என்றும் ஒரு முறை உள்ளது.
  • இதை ஒரு தவணை கோவில் என்று கூறலாம். இன்று பூசை செய்கிற பூசாரி, மறுநாள் விட்டு அதற்கு அடுத்த நாள்தான் பூசை செய்யலாம் என்கிற முறை இருக்கிறது. 
  • உள்ளே காண்கிற ரகசியத்தை வெளியே கூறவும் கூடாது என்கிற கட்டுப்பாடும், பரசுராமர் விதித்திருக்கிறார்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.......................தொடரும்!