​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 31 December 2016

சித்தன் அருள் - 553 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

கலிகாலத்திலே, பூசைகள் கடினம் என்றுதான், தர்மத்தை உபதேசம் செய்கிறோம். இயன்றவர்கள், இயன்றவருக்கு, தக்கதொரு தர்மத்தை இயன்ற அளவுக்கு செய்து கொண்டே வரவேண்டும். ஒருநாள் போய்விட்டால், வாழ்க்கையில் அது நாள் அல்ல. வெட்டும் வாள். எனவே, ஒவ்வொரு தினமும் கழியும் போதும், அன்றைய தினத்தில், நாம், எத்தனை பேருக்கு உதவி செய்தோம்? எத்தனை மனிதனுக்கு நம்மால் பயன் ஏற்பட்டது? எத்தனை மனிதனுக்கு நாம் ஆறுதலாயிருந்தோம்? எத்தனை மனிதனுக்கு நாம், உடலால் உபகாரம் செய்தோம்? எத்தனை பேருக்கு வார்த்தைகளால், எண்ணங்களால், பொருட்களால், மருத்துவ உதவி செய்தோம்? எத்தனை பேருக்கு பசி தீர்த்து உதவினோம்? கல்வி கற்க உதவினோம்? என்றெல்லாம் சிந்தித்து, சிந்தித்து, அந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த, அதிகப்படுத்த, கூடவே, இறையருளும், எமது ஆசியும் தொடரும்.

Friday 30 December 2016

சித்தன் அருள் - 552 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஒரு மனிதன், உடல் எடுத்ததற்கு, மனித முயற்சி என்று எதை வேண்டுமானாலும்  செய்யலாம். இதுதான் நடக்கப்போகிறதே என்று, எந்த மனிதனையும் நாம், வாளாய் (சும்மா) இருக்கச் சொல்லவில்லை. சோம்பலாக இருக்க சொல்லவில்லை. அவன் கடுமையாக முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். அந்த முயற்சியின் விளைவு எதுவானாலும் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அவன் வளர்த்துக் கொள்ளவேண்டும். இந்த மனம்தான், ஒரு மனிதனுக்கு எக்காலமும் நன்மையைத் தரும். இல்லையென்றால், ஒன்று மாற்றி ஒன்று, அவன் விருப்பத்திற்கு மாறாக நடக்கும்பொழுது, மிகவும் விரக்தியுற்று, சோர்வுற்று, தன்னிலையை மறந்து, மேலும் சிக்கலில் தானாகச் சென்று மாட்டிக் கொள்வான்.  எனவே, ஒரு மனிதன், பதட்டம், குழப்பம் இல்லாமல், எதனையும் நிதானமாக, மூன்றாவது பார்வை கொண்டு, ஒவ்வொரு பிரச்சினையும் பார்க்கப் பார்க்க, அவனுக்கு அனைத்துமே தெளிவாகிவிடும். அனைத்துமே, சிக்கல் அற்றதாகிவிடும். இந்த கருத்தை மனதில் பதியவைத்தால்,  என்றும், எக்காலமும் நலமாகும். ஆசிகள். சுபம்!

Thursday 29 December 2016

சித்தன் அருள் - 551 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

பிரச்சினையே இல்லாத வாழ்க்கையை தா, என்று கேட்பது சிறப்பல்ல. கேட்டாலும், இறை அதை யாருக்கும் வழங்காது. ஏனென்றால், அவ்விதமான அமைப்பு, யாருக்கும் இல்லை. தெளிந்த ஞானியும் அல்லது ஞானம் அற்ற மனிதனுக்கும்தான் பிரச்சினை இல்லாதது போல் ஒரு வாழ்க்கை இருக்கும். காரணம், தெளியாத மனிதனுக்கு எதுவுமே புரிவதில்லை. தெளிந்த ஞானியோ அனைத்திலுமே தேர்ந்திருப்பதால், அவனுக்கு எதுவும் பிரச்சினையாகத் தோன்றாது. இந்த கருத்தை உன்னிப்பாக கவனித்து, மனதிலே ஊன்றிக் கொண்டு விட்டால், மனிதனுக்கு, எக்காலத்திலும், எந்த நிலையிலும், எந்த சூழ்நிலையிலும் துன்பம் என்பது இல்லை.

Wednesday 28 December 2016

சித்தன் அருள் - 550 - மார்கழி மாதம் - பாபநாசத்தில் நீராடவேண்டும்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

தாமிரபரணி நதியின் ஆதிகாலத்தில், அகத்தியப் பெருமான் உத்தரவுடன், ஸ்ரீ தாமிரபரணி தேவியானவள், சிவபெருமானை நோக்கி, பூசித்து, தவமிருந்தாள். அப்படி இருந்த இடம்,  திருநெல்வேலியில் இன்றுள்ள பாபநாசம் என்கிற ஊர்.

ஸ்ரீ தாமிரபரணி தாயின் தவத்தில் மகிழ்ந்து, சிவபெருமான் காட்சி கொடுத்து தாமிரபரணித் தாய் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி பலவரங்களை கொடுத்து பின் அந்த கோவிலில் உள்ள சிவலிங்கத்தில் உறைந்து போனார்.

ஸ்ரீ தாமிரபரணித் தாய் நமக்காக கேட்டு வாங்கித் தந்த வரங்களில் ஒன்று ........

"மார்கழி மாதத்தில் இவ்விடத்தில் எனது தீர்த்தத்தில் ஸ்நானம் பண்ணி (நீராடி) தங்களை தரிசனம் பண்ணுவோர், மறுபடியும் இந்த பூமியிற் பிறக்ககூடாது" என்றாள்.

சிவபெருமானும் "அங்ஙனமே" என்று வரமளித்தார்.

பிறகு மலயகுமாரியான இம்மகா நதியானவள் சதாசிவத்தினிடமிருந்து இவ்விதம் அனுக்ரஹம் பெற்று அகஸ்திய மாமுனியுடன் அமர்ந்து அவருக்கு குருபூசை முதலியவை செய்து, பின்னர் மார்கழி மாதத்தில் தன் இருப்பிடம் ஏகினாள்.

இப்படிப்பட்ட தகவல் என்பது மிக மிக அரிதான ஒன்று. ஆதலால், இந்த வாய்ப்பை மனதில் கொண்டு, அகத்தியப் பெருமான், லோபா முத்திரை அருளுடன், அனைவரும் பாபநாசம் சென்று நீராடி, கோவிலில் சிவபெருமானை தரிசனம் செய்து, இப்பூமியில் மறுபிறவி இல்லாத நிலையை பெறுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

மார்கழி மாதத்தில் எந்த நாளிலும் செல்லலாம்.

ஸ்ரீ லோபாமுத்திரா தாய்க்கும், அகத்தியப் பெருமானுக்கும் நன்றியை, பணிவான வணக்கங்களை தெரிவித்துக் கொண்டு,

சித்தன் அருள்.............. தொடரும்!

சித்தன் அருள் - 549 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

எது எங்கனம் ஆயினும், இந்த உலகில் நிலவுகின்ற ஒவ்வொரு சம்பவமும், அவனவன் மனநிலையை பொறுத்தே அமைவது, ஆகுமப்பா! அப்பனே, இன்பம் என்ற ஒன்றை மனம் தேடும் பொழுதே, அதன் மறுபக்கம் துன்பம் என்ற ஒன்று உள்ளதை புரிந்து கொள்ள வேண்டும். துன்பம் என்ற ஒன்று வரும்பொழுதே. அதன் மறுபக்கம் இன்பம் என்ற ஒன்று வரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வேண்டுமப்பா, இவை இரண்டும் வேண்டாத உள்ளம் வேண்டுமப்பா. மனம் சமநிலையில் இருக்கும்கால், யாதொரு தொல்லையும் இல்லை.  மனதை வலுவாக்குதலே, இந்த உலகில் முதல் பணியாக மனிதனுக்கு இருக்கவேண்டும். மனம் உறுதி பெற, உறுதி பெற எந்த பிரச்சினையும், பிரச்சினையாக தோன்றாது.

Tuesday 27 December 2016

சித்தன் அருள் - 548 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

அகுதொப்ப பிரார்த்தனைகளும், தர்மங்களும் பலன் தரவில்லை என்றால், அகுதொப்ப குறை, அதனை செய்கின்ற மாந்தனிடம் உண்டு, என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அகுதொப்ப அறியுங்கால், முன் ஜென்ம வினையின் தாக்கம் அதிகம் உண்டு. அது குறித்து, பிரார்த்தனைகளின் அளவு போதவில்லை, தர்மங்களின் அளவு போதவில்லை என்பது பொருளாம். அல்லது, இன்னும் சில காலம் கழித்து கிட்டப்போகும் நன்மைக்கு முன்னரே, சில தீமைகள் போல் தோன்றுகிற நன்மைகளும், தீமைகளாய் மாற்றி, இறை தருகின்றது, என்பது பொருளாகும்.

Monday 26 December 2016

சித்தன் அருள் - 547 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

உள்ளத்திலே உண்மையை மறைத்து வைப்பது என்பது, அக்னியை மடியிலே வைத்துக் கொள்வது போல. கடை வரையில் அவனை சுட்டுக்கொண்டுதான் இருக்கும். எனவே, பின்விளைவுகள் எதுவானாலும் பாதகமில்லை என்று ஆதியில் இருந்தே, ஒரு மனிதன் உண்மையை சொல்லப் பழகவேண்டும். இடையிலிருந்து தொடங்கினால், அதற்கு, அவன் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். எனவே, அறத்தில் மிகப்பெரிய அறம், உண்மை பேசுவதாகும். உண்மையால் பிரச்சினை வருவது உண்மைதான் என்றாலும், உண்மையை, உண்மையாக, நன்மையாக பேசவேண்டும். உண்மையை கூறுகிறேன் என்று, யார் மனமும் புண்படும்படி வார்த்தைகளை பேசக்கூடாது. நாகரீகம் கலந்து உண்மையை பேசும் கலையை கற்க வேண்டும். சில சமயம் மௌனம் காக்கலாமே ஒழிய, சின்ன விஷயங்களுக்காக உண்மையை மறைக்க வேண்டிய அவசியமில்லை. என்றாலும், நாங்கள், எம்முன்னே அமரும் சில மனிதர்களுக்கு மௌனம் காக்கிறோம் என்றால், உண்மையைக் கூற முடியவில்லை என்றுதான் பொருள்.  உண்மையை கூறினால், நம்பி வந்த கூட்டம் எரிச்சலடையும், பிறகு தேவையில்லாத விவாதங்கள்  வரும். அதனால் தான் சில நேரங்களில் நாங்கள் மௌனமாக இருந்து விடுகிறோம். நாங்கள் மௌனமாக இருப்பதாலேயே, அனைத்திற்கும் "சம்மதம்" என்று அர்த்தமல்ல. அதற்குத்தான் கூறுகிறோம், "ஜீவ அருள் நாடி" என்பது எல்லோருக்கும் ஏற்றதல்ல. இதை கேட்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் பக்குவம் தேவை. மழை பொழிவது இயற்கை என்றாலும் கூட,  மழை நீர் வேண்டுமென்றால், நல்ல தரமான பாத்திரத்தை கவிழ்த்து வைக்காமல், நிமிர்த்து வைத்து, மழை நீரை சேகரித்து வைக்க வேண்டும். அதைப்போல எம்முன்னே அமருபவருக்கு பக்குவம், தெளிவு இல்லாமல் "இது என்ன வாக்கு? இது என்ன ஜோதிடம்?" என்று விமர்சிப்பதால், பாவங்கள் சேர்வதைத்  தவிர, கர்மாக்கள் குறைவதில்லை.

Saturday 24 December 2016

சித்தன் அருள் - 546 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இகுதொப்ப,  ஒவ்வொரு துளியும், புவி சுழன்று சுழன்று காலத்தை மனிதனுக்கு அறிவுறுத்துவது "இறை நோக்கி செல், இறை நோக்கி செல், இறை நோக்கி செல்" என்பதுதான். ஒரு பிறவியில் அதை விட்டுவிட்டால், எப்பிறவியில்? என்பதை மனிதனால் நிர்ணயிக்க இயலாது. விலங்குகளுக்கு கிடைக்காத பாக்கியம், மனிதனுக்கு இறை தந்திருப்பது, இறையின் கருணை. விலங்குகளும் உண்ணுகின்றன. மனிதனும் உண்ணுகிறான். விலங்குகளும், தன் இனத்தை விருத்தி செய்கின்றன. மனிதனும் செய்கிறான். பின் எதில்தான் வேறுபாட்டை காட்டுவது? என்றால், விலங்குகள் குகைக்குள் வாழ்கின்றன. மனிதன் தனக்கு கொடுத்த அறிவை கொண்டு குகையை வடிவமைக்க கற்றுக் கொண்டுவிட்டான். எனவே, மனதை தூய கருவறையாக்கி உடலை ஆலயமாக்கி, மனதுக்குள் சதா இறைவனை அமர்த்த போட்டியிடவேண்டும். "எங்கு சென்று அமர்வது?" என்று தெரியாமல், இறை திணறவேண்டும். அந்த அளவுக்கு மனம், புத்தி, செயல், எண்ணம், வாக்கு புனிதமாக இருக்க வேண்டும். எனவே, சண்டை, சச்சரவில் மனதை செல்ல விடாமல், அவரவர் தொண்டையில் சுரக்கும் தீர்த்தத்தை உணர்ந்தால், அதுவே சுய தீர்த்தம், மெய் தீர்த்தம்

Friday 23 December 2016

சித்தன் அருள் - 545 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறையருளால், இயம்பிடுவோம் இத்தருணம். இறை வணங்கி, அறம் புரிய, என்றென்றும் நலமாம். இடைவிடாத பிரார்த்தனைகள், சாத்வீக எண்ணங்கள், சதாசர்வ காலம் தர்ம சிந்தனை. இகுதொப்ப வாழ்வை நடத்த, கர்மாக்கள் குறையுமப்பா. இகுதொப்ப சினம், விரக்தி, தளர்வு, பிறரை பிறரோடு ஒப்பிட்டுக் கூறுதல், ஒரு மனிதன் இல்லாதபோது அவரைப் பற்றி விமர்சனம் செய்தல், காழ்ப்பு உணர்ச்சி இன்னும் இத்யாதி, இத்யாதிகளை எல்லாம் தள்ள தள்ளத்தான், மனிதன், மாமனிதனாகிறான். இகுதொப்ப ஒரு பயணம் செய்யும்பொழுது, இறை நாமமும், பிரார்த்தனையும் செய்து கொண்டு செல்வது நலம். வீண் விவாதங்களும் பிரச்சினைக்குரிய செயல்களும், வாக்குகளும் வேண்டாம்.

Thursday 22 December 2016

சித்தன் அருள் - 544 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

கர்மத்தால் வருகின்ற துன்பம் யாவும், தர்மத்தால் தீர வழியுண்டு. அது வேண்டும், இது வேண்டும் என்ற எண்ணத்தை எல்லாம் வேண்டாது, இறை வேண்டும் என்ற எண்ணம் வேண்டுமப்பா. 

அகத்தியப் பெருமானே! எல்லாரையும் ஆசிர்வதித்து, ஒவ்வொருவருடைய வேண்டுதலையும்  நிறைவேற்றி வையுங்கள்!

Wednesday 21 December 2016

சித்தன் அருள் - 543 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

எத்தனையோ தர்ம வழிகளை காட்டி அருளுகிறோம். எத்தனையோ, நீதி வழிகளைக் காட்டி அருளுகிறோம். எத்தனையோ சத்திய வழிகளைக் காட்டி அருளுகிறோம். எத்தனையோ இறை வழிகளைக் காட்டி அருளுகிறோம். எனவே, இறையே "காட்டானை" மீது அமர்ந்து வந்தாலும், தன்னைக் "காட்டானை, காட்டானை" என்றுதான் இறையே இருக்கிறார். அகுதொப்ப "காட்டானை" யை நீ பிடித்து, நன்றாக வழிபடு. "காட்டானை" உன் அருகில் இருக்க அதைத் தவிர வேறு "காட்டானை" எதற்கு? எனவே, "காட்டானை", "காட்டானை"யாக இருக்க, நாங்கள் மட்டும் காட்டி அருளும் தன்மைக்கு ஏன் வரவேண்டும்? இருந்தாலும், காட்டிக் காட்டி, காட்டி அருளுகிறோம். "காட்டானை" திருவடி வணங்கி, நாங்கள் காட்டி அருளுகிறோம். "காட்டானை" தன்னைக் காட்டாத, நாங்கள் காட்டி அருளுகிறோம். அந்தக் "காட்டானை" யின் திருவருளாலே, எங்களைக் காட்டி அருளுகிறோம். எங்களைக் காட்டி அருளுமாறு, அந்தக் "காட்டானை" அருள் புரிந்தால், நாங்கள், எங்களையும் காட்டி அருளுகிறோம். "காட்டானை" அருளவேண்டும் என்று தன்னைக் "காட்டானை" திருவடி வணங்கி வேண்டிக்கொள்.

Tuesday 20 December 2016

சித்தன் அருள் - 542 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!

 அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

மயிலைக் கனவில் கண்டாலே புண்ணியம். நனவில் கண்டால் அதைவிட புண்ணியம். ஆனால் மனிதன் கண்ணில் பட்டால் மயிலுக்குத்தான் பாவம்.

Monday 19 December 2016

சித்தன் அருள் - 541 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவன்,  சாஷாத் தரிசனம் மூலமாகவோ, பசு மாட்டு தரிசனம் மூலமாகவோ, யானையின் தரிசனம் மூலமாகவோ, பல்லியின் ஒலி மூலமாகவோ, ஒரு சுப சகுனத்தை காட்டுகிறார். அதை விட (பூசை, யாகங்களின் போது) வானத்தில் இருந்து ஒரு துளி மழை விழுந்தாலும், இறை அதை ஏற்றுக் கொண்டது என பொருளாகும்.

Sunday 18 December 2016

சித்தன் அருள் - 540 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

வீட்டின் அருகில் இருக்கும் லோபாமுத்திரா சமேத அகஸ்தியப் பெருமான் கோவிலில் இன்று காலை அபிஷேக, பூசைகளுடன் அகத்தியப் பெருமானின் திரு நட்சத்திரத்தை, நண்பர்கள் இருவருடன் சேர்ந்து சிறப்பாக கொண்டாடினோம். மிக அருமையான தரிசனம், ஆசிர்வாதத்துடன், அங்கு அப்போது எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்களை உங்கள் பார்வைக்காக கீழே தருகிறேன். நான்காவது படத்தை சற்று பெரிதாக்கி பார்த்தால், ஓரளவுக்கு அகத்தியரும், லோபாமுத்திரையும் தெரிவார்கள். அவர் அருள் பெற, நீங்கள் அனைவரும், இன்று விழைவீர்கள் என நம்புகிறேன்.




அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு


அவரவர் செலுத்துகின்ற வாகனத்திலிருந்து, வெளிவரும் நச்சுப்புகை, இந்த அண்டத்திற்கும், உயிர்களுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதால், இகுதொப்ப தொடர்புடையவர்கள் எல்லாம், நறுமணமிக்க புகையை ஆலயங்களிலே அதிகம் இட்டு, இட்டு, இந்த குறைக்கான பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.

Saturday 17 December 2016

சித்தன் அருள் - 539 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


[வணக்கம் அகத்தியர் அடியவர்களே! மறுபடியும் உங்களை, ஞாபகப்படுத்துவதற்காக. நாளை அகத்தியப் பெருமானின் நட்சத்திரம். ஏதேனும் அகத்தியர் சன்னதிக்கு சென்றோ, வீட்டிலோ, சிறிது நேரம் பிரார்த்தித்து, ஒரு செயல்/உதவி அவரை நினைத்து, பிறருக்கு செய்து, அவர் அருள் பெற வேண்டிக்கொள்கிறேன்.  இன்றைய "அகத்தியரின் அருள்வாக்குக்கு செல்வோம். ஓம்  லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!]

அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஒவ்வொரு மனிதனின் மனம் எப்படி என்று எமக்குத் தெரியும். ஒவ்வொரு மனிதனையும், இறை சக்தியைக் கொண்டு, பக்குவம் அடைந்த மனிதனாக மாற்ற முடியும், என்றாலும் கூட, இறைக்கு வேலை அதுவல்ல. அன்னவனே, உழன்று, சிதிலப்பட்டு, வேதனைப்பட்டு, கவலைப்பட்டு, கஷ்டப்பட்டு, பக்குவப்பட்டு தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதுதான், இறையின் எண்ணமாகும். அறிவிலே தெளிவும், மனதிலே உறுதியும், இருக்கவேண்டும். இது கிடைப்பதற்கு, மனிதன் வாழ்விலே துன்பங்கள் படவேண்டும். அதை அறிவிலே ஊடுருவி நாங்களே தெளிய வைப்போம். தொடர்ந்து பூசை செய்ய முடியவில்லையே என்று  வருந்தாதே. அந்த ஏக்கமே, ஒரு பூசை தான். எந்த இடத்தில் அமைதி கிடைக்கிறதோ, அங்கு  அமர்ந்து, நீ பூஜை செய்யலாம். அங்குதான், இங்குதான், அதிகாலைதான், உச்சிப்பொழுததுதான் என்பது இல்லை. இறையை வணங்க, காலம், நாழிகை, சூழல் எதுவும் தேவை இல்லை. மனம் ஒன்றி இருந்தால் மட்டும் போதும்.  எனவே, இதனை எண்ணி அமைதியாக வாழ். நல்லதொரு வாழ்க்கை இறைவன் அருளால் உனக்கு கிடைக்கும். ஆசிகள். சுபம்.

Friday 16 December 2016

சித்தன் அருள் - 538 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


[வணக்கம் அகத்தியர்  அடியவர்களே! இன்றைய அகத்தியப் பெருமானின் அருள் வாக்கை தொடரும் முன்............. ஒரு சிறிய வேண்டுதல். வரும் ஞாயிற்று கிழமை (18/12/2016) அன்று அகத்தியப் பெருமானின் திரு நட்சத்திரம். அனைத்து அகத்தியர் சன்னதியிலும் சிறப்பு பூசை நடக்கும். அதில் கலந்துகொண்டு, இயன்றதை செய்து, அவர் அருள் பெறுங்களேன்!

 இனி, அருள்வாக்குக்கு செல்வோம்.]

அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

உந்தனுக்கு, கடைவரையில் இறையருள் தொடர நல்லாசிகள். எது குறித்தும் மனக்கலக்கம் கொள்ள வேண்டாம். அன்றன்று காலம், விதிப்படி, விதிப்பயனாக, அவனவன் செய்த வினையின் எதிரொலியாக ஆண்டாண்டு காலம் சில கஷ்டங்களும், மன உளைச்சல்களும் தொடரத்தான் செய்யும். கஷ்டங்கள் தொடர்கிறதே என்று, இறை வழி விட்டு விலகக்கூடாது. சிறப்பில்லா வாழ்க்கையிலே, சிறப்பில்லா சம்பவங்கள் எதிர்பட்டாலும், இறை வணங்க மறுத்தல் கூடாது. செய்கின்ற தர்மத்தை விடக்கூடாது. சிந்தை கொள். எம்மீது ஆர்வம் கொண்டு, நீ செய்கின்ற அனைத்து செயல்களுக்கும் எமது அருளாசி உண்டப்பா!

Thursday 15 December 2016

சித்தன் அருள் - 537 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவன் அருளைக் கொண்டு, உரைப்பது என்னவென்றால், இடைவிடாத, மனம் தளராத பக்தி, மன உறுதி குறையாத பக்தி, வாழ்க்கையிலே ஏற்படும் கஷ்டங்களுக்கும், இறைக்கும், எந்தவித தொடர்பும் இல்லை என்ற அழுத்தமான எண்ணம், எது நடந்தாலும் இறை நம்பிக்கை குறையாமல் இருக்கவேண்டும். இந்த நிலையிலிருந்து, இறைவனை ஆத்மார்த்தமாக விருப்பு, வெறுப்பு இன்றி உலகியல் ஆசைகளுக்காக இல்லாமல், "இறையை காணவேண்டும்,  அவன் அருளைப் பெறவேண்டும்,  அதைத்  தவிர வேறெதுவும் நிரந்தரமல்ல" என்ற உணர்வோடு இறைவனை வணங்கத் தொடங்கினால், அது சிவ இரவு என்ன? நவ இரவு என்ன? பிரதோஷமாக இருந்தால் என்ன? கார்த்திகையாக இருந்தால் என்ன? எந்த நாளாக இருந்தால் என்ன? அன்று அனைவருக்கும் இறை காட்சி திண்ணம், உறுதி. பிறகு, ஆங்காங்கே சிறு சிறு விஷயங்கள் எதற்காக நடத்திக் காண்பிக்கப்படுகிறது? அது இன்னும் பக்குவம் அடைய வேண்டியவர்களுக்காக நடத்திக் காண்பிக்கப்படுகிறது. எனவே, எங்கு சென்று வணங்கினாலும், அவரவர்கள் விரும்பும் வண்ணம் அற்புதங்கள் உண்டு. கட்டாயம் நடக்கும். அது திருவண்ணாமலையாக இருந்தால் என்ன? கொல்லி மலையாக இருந்தால் என்ன? சதுரகிரியாக இருந்தால் என்ன? இருந்தாலும், ஆப்பூர் மாலையிலும், மருத்துவாமலையிலும், பௌர்ணமி, மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி அன்று சென்று, மனம் ஒன்றி பிரார்த்தனைகள் செய்தால், இறை, சாந்நித்தியத்தை வழங்கும்.

Wednesday 14 December 2016

சித்தன் அருள் - 536 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஞானம் அடைய வேண்டும், ஞானத்தை நோக்கி செல்ல வேண்டும் என்றாலே, தாய், தந்தை, உற்றார், உறவினர், சூழல், ஏதுவாக இருந்தாலும், கர்மத்தின்படி நடக்கிறது என்று அமைதியாக இருக்க வேண்டும். தாய் கஷ்டப்படுகிறார், தந்தை  சிரமப்படுகிறார், என்று எண்ணும்பொழுதே மீண்டும் மனிதன், மாயவலைக்குள் சிக்கிவிடுகிறான். எனவே, ஒவ்வொரு உடலும், தோற்றமும் ஒவ்வொரு மனிதனுக்கும், ஒவ்வொரு விதமாகப் படைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும். பெற்று வந்த கர்மங்களின் படி அதன் வாழ்வின் போக்கும், சிந்தனைகளும், சந்திக்கின்ற அனுபவங்களும் அமைகின்றன. இருந்த போதிலும், துயரங்களை எல்லாம் களைந்து வாழ வேண்டும், என்ற ஆசை இல்லாத உயிரினம் இல்லை. இவற்றுக்கெல்லாம் ஒட்டுமொத்த ஒரே வழி, பிரார்த்தனை. (பித்ரு தோஷங்களும், தந்தை வழி, தாய் வழி, முன்னோர் வழி பெற்ற சாபங்களும் தொடர்வதால், இந்த நிலை). பசு மாடுகளுக்கு உணவு, ஆலயத்தில் மீன்களுக்கு உணவு, ராமேஸ்வரத்தில் தில யாகம் செய்து, குறைத்துக் கொள்ளலாம். எந்த ஒரு மனிதனுக்கும் துன்பங்கள் இருக்கிறதென்றால், முன்வினை இருக்கிறது என்று பொருள். முன்வினை குறையக்குறைய, துன்பங்கள் குறைந்துகொண்டே வரும். இந்த வினைப்பயனை பெரும்பாலும் அனுபவித்து தீர்ப்பது ஒரு வகை, தர்மத்தால் தீர்ப்பது ஒரு வகை. இறை வழிபாட்டால் தீர்ப்பது ஒரு வகை. 

Tuesday 13 December 2016

சித்தன் அருள் - 535 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவனை வணங்கிக் கொண்டே, தர்மத்தை செய்துகொண்டே வாழ்ந்தாலும், இதற்கு முன்பே எடுத்த  ஒட்டு மொத்த பாவங்களின் எதிரொலியால், சலனங்களும், சங்கடங்களும், சோதனைகளும், வேதனைகளும் ஒரு மனிதனுக்கு வரத்தான்  செய்யும். இது போன்ற தருணங்களில் எல்லாம், இத்தனை தர்மம் செய்தோமே, இத்தனை இறை வணங்கினோமே, எதற்காக இத்தனை கஷ்டங்கள் வரவேண்டும்? என்று எண்ணாமல், தொடர்ந்து வைராக்கியத்தோடு இறைவனை வணங்கி வந்தால், எந்த கஷ்டமும் இல்லாத சூழல் வரும், அல்லது, அதை உணராத மனோபாவம் வந்து விடும்.  இதை மனதிலே வைத்துக் கொண்டு எம் வழியில் வர நல்லாசிகள்.

Sunday 11 December 2016

சித்தன் அருள் - 534 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

தமிழ் மொழியிலே, கூடுதலாக, இறை சார்ந்த இறை அருள் இருக்கிறது. சரியான உச்சரிப்போடு, தமிழைப் பேசினாலே அது சுவாசப்பயிற்சிக்கு சமம். இலக்கணத்தைப் பற்றி கூறினால், எத்தனையோ அதிசயங்கள், அற்புதங்கள் உள்ளது. இந்த உலகத்திலே பரபரப்பாக வாழும் மனிதனுக்கு தமிழாவது? மொழியாவது? சிறப்பானது? யார் இவற்றை எல்லாம் கவனிப்பது? வயிற்றுப்பாட்டிற்கே போராடிக் கொண்டிருக்கிறோம், என்றெல்லாம் அளந்துகொண்டு இருக்கிறார்கள். அப்படியல்ல, தமிழ் மொழியிலே, காரண காரியங்கள் இல்லாமல் எதுவுமே அமைக்கப் படவில்லை. உலகத்திலே எந்த மொழியிலும் "ழ"கரம் என்ற உச்சரிப்பு கிடையாது. மூன்று இனமாக பிரிக்கப்பட்டு ஏற்ப எழுத்துக்கள் உள்ளது. ஒலிக்குறிப்பே போதும், அது எந்த இனம் என்று கூறிவிடலாம். மரபு இலக்கணப்படி ஒவ்வொரு பாடலும் எவ்வாறு அமைக்கப்படவேண்டும்? எந்த தளை, சீர், எத்தனை அடியிலே அமைக்கப்படவேண்டும், என்றெல்லாம் உள்ளது. இதுதான் தமிழின் சிறப்பு.

[இது உண்மை. அனுபவ பூர்வமாக இதை அடியேன் உணர்ந்துள்ளேன். சிறப்பான முறையில் தமிழை பேசும் பொழுது, உள்ளுக்குள்ளே ஒரு வித சக்தி பரவுவதையும், சுவாசம் சரி செய்யப்படுவதையும், உள் கழிவுகள் தானாக விலகி, உடல் சுத்தமடைவதையும், பல மறை பார்த்திருக்கிறேன். இதை நடை முறைப் படுத்துவது மிக நல்லது. மேலும், தமிழ்  மொழியின் தெய்வம், உள்ளிருந்து நம்மை வழி நடத்துவதையும் உணர முடியும்.]

Saturday 10 December 2016

சித்தன் அருள் - 533 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

"வில்வத்தால் ஆராதனை செய்வது எமக்கு பிரியம்" என்று இறை எங்காவது எழுதி வைத்திருக்கிறதா? அப்படியல்ல. இறையோடு தொடர்புடைய அனைத்தும் மனிதனுக்கு நன்மையைத் தரக்கூடியவைதான். "வில்வத்தை ஏற்றுக்கொள்" என்றால் மனிதன் உண்ணமாட்டான். ஆனால் அதையே "பிரசாதம்" என்றால் சாப்பிடுவான். அது மட்டுமல்ல, அன்போடு எதைக் கொடுத்தாலும், அதை இறை ஏற்றுக்கொள்ளும். வில்வத்தை பக்தியில்லாமல் நீ போட்டால், சிவன் மகிழ்ந்து ஏற்றுக் கொள்ளப்போகிறாரா என்ன? பிடிக்காதது என்ற ஒன்றையும் கூட, பக்தியோடு படைத்தால் இறை அதை ஏற்றுக்கொள்ளும். எனவே, பக்தி, அன்போடு செய்யப்படும் செயலை அல்ல, அந்த செயலுக்குள் ஒளிந்திருக்கும் அர்த்தத்தைத்தான் இறை பார்க்கிறது. இன்னொன்று, வேறு மார்கத்தைப் பின்பற்றக்கூடியவர்கள், நெய் தீபத்திற்கு பதிலாக, வேறு வகை தீபத்தை ஏற்றுகிறார்கள். இன்னும் சிலரோ, மலர்களை போடுவதேயில்லை. அதையும் இறை ஏற்கத்தானே செய்கிறது. அண்ட சராசரங்களைப் படைத்தது இறைவன். இறைக்கு மனிதன் தரக்கூடியது ஒன்றுமில்லை, தன் உள்ளத்தை தவிர.

Friday 9 December 2016

சித்தன் அருள் - 532 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இன்பம் என்ற ஒன்றை, எவன் ஒருவன் உணர்கிறானோ, அவனால்தான் துன்பத்தை உணர முடியும். எவன் எதிலேயும் இன்பத்தைப் பார்க்கவில்லையோ, அவனுக்கு  எதனாலும், எவற்றாலும் துன்பம் இல்லை. அது இறை ஒருவருக்குத்தான் சாத்தியம். அதனால்தான், "இன்பமும், துன்பமும் இல்லானே, உள்ளானே" என்று கூறப்படுகிறது. மற்ற, பற்றும், பாசமும், ஆசையும் அனைத்து உயிர்களுக்கும் உண்டு. இன்பமும் உண்டு, துன்பமும் உண்டு. எதையெல்லாம் இவன், இன்பம் என்று எண்ணி, அதன் பின்னால் ஓடுகிறானோ, அவற்றால் இவனுக்கு துன்பம் வருகிறது. எதையெல்லாம் துன்பம் என்றெண்ணி பயந்து பின் வாங்குகிறானோ, அவற்றால் இன்பமும் உண்டு. இரண்டுமே வேண்டாம் என்ற நிலையை மனிதன் முடிவெடுத்துவிட்டால், நிம்மதியாக வாழ முடியும். இல்லையென்றால், ஒன்றன் பின் ஒன்றாக இவன் மாறி, மாறி ஓடிக்கொண்டே இருப்பான். மனித வாழ்க்கையில் "கடமையை செய்தோம், பிரார்த்தனை செய்தோம், பிறருக்கு நன்மையை செய்தோம்" என்று போக வேண்டும். பெரிய அளவிலே ஒன்றின் மீது பற்றும், அதி தீவிர பாசமும் வைத்தால், பிறகு அது நம்மை பாடாய்படுத்தும்.

Thursday 8 December 2016

சித்தன் அருள் - 531 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

  1. பூ வாட்டம், பொன் ஆட்டம் மனம் இருக்க, என்றென்றும் கொண்டாட்டம்.
  2. தேன் ஆட்டம்  சொல் இருக்க என்றென்றும் மகிழ்வாட்டம்தான்.
  3. தினை ஆட்டம் உளம் இருக்க என்றென்றும் அது உறுதி ஆட்டம்.
  4. ஆண் ஆட்டம், பெண் ஆட்டம் எல்லாம் அடங்கும் காலம், ஆட்டத்தில் விதி ஆட்டம் முன்னே மாந்தர் வாழ்வு வினை ஆட்டம் போல் இருக்கும்.
  5. மதி ஆட்டம் ஆடி மாந்தன் அவன் தனக்குத்தான் விதி ஆட்டம் போடுகிறான்.
  6. தொடர்ந்து பிறவி ஆட்டம் தொடர, அதற்கு ஒப்ப அவன் ஆடிய மதி ஆட்டம், விதி ஆட்டம் ஆடி, கதி ஆட்டம் போடுதப்பா.
  7. வாழ்வு ஆட்டம் உயர்வு ஆட்டம் ஆட, நலம் ஆட்டம் தொடரும்.
  8. தப்பாட்டம், தவறாட்டம் ஆட, தாழ்வு ஆட்டம் தொடரும்.
  9. பெண் ஆட்டம் கண்டு பெண் நாட்டம் கொண்டால், வாழ்வின் ஆட்டம் தவறு ஆட்டம் ஆகும்.
  10. புலன் ஆட்டம் வழியே மனம் ஆட, முடிவில் திண்டாட்டம் ஆகுமப்பா.
  11. ஆட்டம் ஆட, மெய் ஆட்டம் ஆட, பொய் ஆட்டம் ஆடாது வாழலாம்.
  12. விதி ஆட்டம் ஆடும், அதன் வழியாட்டம் யாவும் தொடர்ந்து சேர்க்கும் வீண் பழியாட்டம்.
  13. நரி ஆட்டம் புத்தி பேதலிக்க, அது சரி ஆட்டம் என்று அத்தருணம் மதி சொல்ல, சரி ஆட்டம் அல்ல.
  14. தப்பாட்டம் என விதி சொல்லும், என்னாட்டம் ஆடினாலும், முடிவில் அந்தம் ஆட்டம் பின்னே, முதல் ஆட்டம் தொடங்கி முடிவு ஆட்டம் வரை யாவும் கர்ம ஆட்டம் என புரியும்.
  15. தர்ம ஆட்டம் ஆடும் மைந்தனுக்கு, கர்ம வாட்டம், வாட்டாது.
  16. பேதமில்லா பிரார்த்தனை ஆட்டம் ஆடும் மைந்தனுக்கு துயர் ஆட்டம் வாட்டாது.
  17. உயர்வாட்டம் தேடும் மாந்தன் உலக ஆட்டத்தில் உயர் ஆட்டம் தேடுகிறான்.
  18. உயர் வாட்டம் என்பது மெய்ஞ்ஞான வழியிலே என்பது புரியாது, தடுமாற்றம் காண்கிறான்.
  19. உள்ளபடி உள்ளம், உயர்வாட்டம் ஆட, பொறுமை கூடத்தான் ஆட்டம் ஆட, எளிமை பின் ஆட்டம் ஆட, கருணை தானும் நல் ஆட்டம் ஆட, சாந்தம், வதனம் ஆட்டத்தில் ஆட, தெளிவு உள்ளத்தில், சதா ஆட்டம் ஆட, ஆடாத நிலையில் ஆடிய ஆட்டம் புரிபடும்.
  20. ஆடுவதும், ஆட்டுவிப்பதும் தில்லையில் ஆடும் அம்பலத்து அரசனாட்டம் என்று தெரிய வரும்.
  21. முடிவாட்டத்தில் தெரியவரும்.
  22. புத்தி முதலாட்டத்திலே தெரிந்தால் அவன் ஞானி.
  23. சதா அம்பலத்திலே ஆடும் பொன்னம்பலம் அடியான் அடியினின் அடியையும், ஆடும் அரசனின் ஆட்டத்தில் அடியையும் மறவாமல் தொழத்தான், தப்பாட்டமாய், தவறாட்டம், பாவாட்டம் ஆடாது, வாழ்வு புனிதமாகும்.
  24. நல் ஆட்டம் வாழ்வில் ஆட, நல் ஆடல் அரசன் அருளட்டும், என ஆசிகள், சுபம்.

Wednesday 7 December 2016

சித்தன் அருள் - 530 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

மனிதன் கண்களுக்கு, ஒன்று அசைந்தால் அதற்கு உயிர் இருக்கிறது. இல்லையென்றால், உயிரற்ற ஜடம் என்று எண்ணுகிறான். அசையாமல் அசைகின்ற எத்தனையோ உயிரினங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான், சாளக்கிராமம். அதிலே உயிரோட்டம் மட்டுமல்ல, இறையாற்றல், மின்னாற்றலும், காந்த ஆற்றலும், பிரபஞ்ச ஆற்றலும் உள்ளது. அந்த ஆற்றல்களை, முறைப்படுத்தித்தான் மனிதர்கள் பெற முடியும். சாளக்கிராமத்தை, தூய்மையான சந்தானம், இளநீர் கொண்டு அபிஷேகம் செய்வது சிறப்பு.

Tuesday 6 December 2016

சித்தன் அருள் - 529 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

மனிதன், இந்த அண்ட சராசர பிரபஞ்சத்திலே வெறும் தூசியிலே தூசி. இந்த காற்றிலே கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ, பூச்சிகள், உயிரினங்கள் அலைந்து கொண்டுதான் இருக்கின்றன. மனிதன் கண்ணுக்குத் தெரியாமல் அவை வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதுபோல, இந்த அண்டசராசரங்களை எல்லாம் பார்க்கும்போது, எத்தனையோ  கிரகங்கள், உயிரினங்கள். அனைத்திற்கும் அதனதன் வழியிலே, அதனதன் போக்கில் துன்பங்கள் இருந்து கொண்டுதான் உள்ளன. எனவே, துன்பம் என்பது ஒருவனுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. மனதை தெளிவாக வைத்துக் கொண்டால், எல்லாம் "மாயை" என்பது புரிய வரும்.

Monday 5 December 2016

சித்தன் அருள் - 528 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

தன்னாலும் முடியும் என்றால் தன்னம்பிக்கை. தன்னால் மட்டும்தான் முடியும் என்றால் அது ஆணவம்.

Sunday 4 December 2016

சித்தன் அருள் - 527 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

கோவிலில் உழவாரப்பணி செய்யும் பொழுது, செடி, கொடிகளை அகற்றினால் பாவம் தான். என்றாலும், இறை இதை மன்னிக்கிறது. அகற்றப்பட்ட செடிகள், மீண்டும் துளிர்கின்ற தன்மையைப் பெறுவதால் (அந்த செயல் அந்தச் செடி கொடிகளுக்கு பூரணமான அழிவை ஏற்படுத்துவதில்லை). ஒரு ஆட்டையோ, மாட்டையோ ஒரு மனிதன் கொலை செய்யும் பொழுது, அது பரிபூரணமாக மரித்துவிடுகிறது. ஆனால் செடி/கொடிகளை அகற்றும் போது, அதன் அடிவேரோ, மாற்று விதைகளோ சற்று உயிர் பெறுவதால், அந்த ஜீவன் அதற்கு இடம் பெயர்ந்து விடுவதால், இதனால் வரக்கூடிய தோஷம், மன்னிக்கப்படக்கூடிய தோஷமாகிவிடுகிறது. என்றாலும் கூட, இதிலும் பாவம் சேர்வதால் தான், பிறவியற்ற தன்மை வேண்டுமென்று கூறுகிறோம். ஏனென்றால், ஒரு மனிதனால், இந்த பூமியிலே, சிறிய பாவம் கூட செய்யாமல் வாழ முடியாது. வீடுகளை   பொருத்தவரை, வீட்டை சுற்றிலும் "சிறியா நங்கை'" போன்ற மூலிகைகளை வளர்த்தால், பூச்சிகள் வராது. வேறு வழி இன்றி வீட்டினுள் இருக்கும் பூச்சிகளை கொல்ல நேர்ந்தால், ஒருவன் செய்கின்ற தர்மங்கள் காரணமாக, அந்த தோஷமானது, மன்னிக்கப்படும்.

Saturday 3 December 2016

சித்தன் அருள் - 526 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

மனிதர்கள் செய்யும் சிறு தவறுகளை எல்லாம் அறிந்தும், அறியாமலும், இறைவன் மன்னித்துவிடுகிறார். ஆனால், மனிதர்களை தாண்டி, உயர்வான பிறகும், சிறிய தவறுகள் கூட வரக்கூடாது. வந்தால், அவர்கள் எந்த விதமான சாபத்திற்கும் ஆளாகலாம். இப்படி ஒரு மனிதனுக்கு, மனிதப்பிறவி சாபமாக கிடைக்கிறது என்று வைத்துக்  கொள்வோம்.பல்லாண்டு காலம், தேவனாக வாழ்ந்த அவன், ஒரு புண்ணிய ஆத்மா தானே. அதனால், மிக உயர்ந்த செல்வ செழிப்பிலே, புகழின் உச்சியிலே, தேக ஆரோக்கியத்திலே, தோற்றப்பொலிவிலே சிறந்தவனாகத்தான் பூமியிலே இறைவன் அனுப்பி வைப்பான். ஆனால் அவ்வாறு கொடுத்த பிறகு, அவன் என்ன செய்வான்? ஊழ்வினையாலும்,மாயையால்  எல்லாம் மறந்து போய், சராசரியாக தனக்கு கிடைத்த ஐஸ்வர்யங்களை வைத்து பாவங்களை செய்யத் துவங்குகிறான். எனவே, எந்த நிலையிலும் ஒரு மனிதன் விழிப்புணர்வோடு பாவங்களை செய்யாமல் இருந்தால், மீண்டும், மீண்டும் இந்த மனிதப்பிறவி சுழற்சியில் மாட்டிக் கொண்டு அவதிப்பட நேரிடாது.

Friday 2 December 2016

சித்தன் அருள் - 525 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

பசு, கன்று குட்டியை ஈன்றவுடன், மனிதனுக்கு பால் தருவதில்லை. கன்றுக்குத்தான் பால் தருகிறது. பல பசுக்கள் மகரிஷிகளின் அவதாரங்கள்தான். முதலில் கன்று திருப்தியாக. திகட்ட, திகட்ட உண்ட பிறகு, மிச்சத்தைத்தான் மனிதன் எடுக்கவேண்டும். பாவத்தில் உச்சகட்ட பாவம், கன்றை பால் குடிக்க விடாமல் செய்வது. இந்த பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது. பரிகாரமும் கிடையாது. ஆனால், இப்படியெல்லாம் பார்த்தால் நாங்கள் வாழ முடியுமா? என்று மனிதன் விதண்டாவாதம் பேசுவான். எனவேதான், பசுக்கள் காப்பகங்களுக்கு சென்று உதவி செய்வது, குறிப்பாக, பரசுராம தேசத்திற்கு (கேரளா) எடுத்துச் செல்லப்படும் பசுக்களை வாங்கி, எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் வளர்ப்பது. மிகப்பெரிய புண்ணியமப்பா. கோடிக்கணக்கான காலங்கள் யாகம் செய்தாலும், ஹிமாச்சலத்தில் தவம் செய்தாலும் கிடைக்காத இறையருள், பசுக்களை பராமரிப்பதில் கிடைக்கும். அதிலும், பசுக்களால் இனி நமக்கு நன்மை இல்லை, அதனால் கொலை களத்திற்கு அனுப்புகிறோம் என்று அனுப்பப்படும் அந்த மாடுகளை, எவன் ஒருவன் அழைத்து வந்து பராமரிக்கிறானோ, அவன் வேறு எந்த பூஜையும் செய்ய வேண்டாம். வேறு எந்த யாகமும் செய்ய வேண்டாம். அதை வளர்ப்பதே  போதும். அது அவனை இறைவனிடம் அழைத்துச் செல்லும்.

Thursday 1 December 2016

சித்தன் அருள் - 524 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

விருக்ஷங்களுக்கு என்று சில வகையான பூஜை முறைகள் உண்டு. விருக்ஷங்களுக்கு திருமண பந்தம் கூட செய்து வைப்பார்கள். நக்ஷத்திரங்களுக்கு உரிய மரங்களை மட்டும்தான் வளர்க்க வேண்டும், பூஜிக்க வேண்டும் என்றில்லை. எல்லாவற்றையும் வளர்க்க வேண்டும். ஏனென்றால், மரங்கள், தூரத்தில் உள்ள மரங்களோடு பேசும். அது மட்டுமல்லாது, மரங்கள் காதல் செய்கிறது. இதை மனிதர்கள் யாராவது நம்புவார்களா? மரங்களை ஓரறிவு என்று கூறினாலும் கூட, தேவர்கள், முனிவர்கள், தவம் செய்வதற்காக, மரங்களாக அவதாரம் எடுப்பார்கள். மரத்தின் மீது, "கூரானை" செலுத்துவது மகா பாவம். அது மட்டுமல்லாது, ஒரு மரமானது, எத்தனையோ உயிர்களுக்கு நிழலை, காயை, கனியை, உறைவிடத்தை தருகிறது. இப்படி பலவற்றை மரம் தருவதால், அதற்கு "தரு" என்ற ஒரு பெயர் உண்டு. "கற்பக விருக்ஷம்" என்று ஒவ்வொரு மரத்தையும் கூறலாம். அது மட்டுமல்லாது, ஒவ்வொரு மரமும், மனிதனை விட பல மடங்கு மேம்பட்டது. அவை பாவம் செய்வது கிடையாது. எனவே, மரங்கள் அனைத்துமே போற்றப்படவேண்டியவை என்பதால் தான், வேதங்களில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. "ஸ்தல விருக்ஷம்" என்று வைத்து, ஒவ்வொரு ஆலயத்திலும் பராமரிக்கப் படுகிறது. அந்த விருக்ஷம் அந்த மண்ணிற்கு ஏற்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

Wednesday 30 November 2016

சித்தன் அருள் - 523 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ராம நாமம் ஜெபித்தார்கள், சம்பாதிக்கு சிறகு முளைத்தது, என்றெல்லாம் படிக்கும் பொழுது, இது சாத்தியமா என்று கேட்கத் தோன்றும். அப்படியானால், ஒரு பறவையை பிடித்து, சிறகுகளை அரிந்துவிட்டு, ராம நாமம் ஜெபித்தால் சிறகுகள் முளைக்குமா? என்றால், ராம நாமம் சக்தியுடையது. சிறகென்ன, கரங்கள், கால்கள் கூட ஒரு மனிதனுக்கு முளைக்கும். ஆனால், நாம நாமத்தை சொல்கிறவர்கள், பக்குவமடைந்து, ஆத்ம சுத்தியோடு, பற்றற்ற தன்மையோடு, பல காலம் ராம நாமத்தை ஜெபித்து, ஜெபித்து, ஜெபித்து, ஸித்தி பெற்று இருந்தால், உடனடியாக நடக்கும். மனம் ஒன்றாத பிரார்த்தனைகள் பலனளிக்காது. மந்திரங்களும், வழிபாடுகளும் ஒன்றுதானப்பா. அதை கையாளும் மனிதனை பொறுத்துதான், உடனடி முடிவும், தாமதமான முடிவும். எனவே, விளைவு எப்படி இருந்தாலும் பாதகமில்லை என்று தொடர்ந்து பிரார்த்தனை செய்யச் செய்ய, பலன் கிடைக்கும் நாள் நெருங்கி வரும்.

Tuesday 29 November 2016

சித்தன் அருள் - 522 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவன் அருளால் சொல்வது என்னவென்றால், லலிதா சஹஸ்ரநாமத்தை, 1,3,5 மண்டலம் பிரார்த்தனையாகவோ, யாகமாகவோ, ஆலயத்திலோ, இல்லத்திலோ, அதிகாலை துவங்கி பூர்த்தி செய்வது, பல்வேறு பிறவிகளில் செய்த பிரம்மஹத்தி தோஷத்தை அகற்றும் அப்பா! இது பக்தி வழி. யோகா மார்க்கம் என்று எடுத்துக் கொண்டால், குண்டலினி சக்தியை மேலே எழுப்புவதற்கு சரியான உச்சரிப்பைக் கற்றுக் கொண்டு, மனதை ஒரு நிலைப்படுத்தி அதிகாலைப் பொழுதில், வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து, நித்தமும் உச்சரித்து வந்தால், மூலாதாரத்தில் உறங்கி கொண்டிருக்கும் குண்டலினி சர்ப்பமானது எழுவதை உணரலாம். எனவே, எல்லா வகை மந்திரங்களும் மனித உடலின் 72000 நாடி, நரம்புகளின் ரத்த ஓட்டத்தை சரி செய்வதும், அவனின் உள்முக சக்தியையும் தட்டி எழுப்பும் அப்பா!

Monday 28 November 2016

சித்தன் அருள் - 521 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரும் இறைவனின், மாற்று வடிவங்கள் என்பதை உணர்வதும் தனக்குள் உள்ள அண்ட சராசர பேராற்றலை உணர முயல்வதும்தான், துன்பமின்றி வாழ்வதற்கு ஒரு வழியாகும். அதற்கு, ஆன்மாவை படிப்படியாக எடுத்துச் செல்வதற்குத்தான், யாம் காட்டுகின்ற வழிமுறைகள். நெறி முறைகள், பக்தி வழிகாட்டுதல், ஆகமங்கள், தர்ம காரியங்கள். ஆனால் துன்பமில்லாத நிலையென்றால், இங்கு அவன் மனநிலை அகுதோப்ப மாறிவிடும் தவிர, வாழ்வு நிலை மாறாது, என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மனிதனுக்கு நோக்கமானது மாறிக்கொண்டே இருக்கும். இவன் நிம்மதியை ஒத்திப்போட்டுக்கொண்டே செல்வான். சந்தோஷத்தை ஒத்தி வைப்பதுதானே விதியின் வேலை, மாயையின் வேலை. எனவே, இவற்றில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதுதான், மனிதனின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். அகுதொப்ப ஒரே தினத்திலோ, ஒரு சில ஆண்டுகளிலோ இதை செய்ய இயலாது என்பது எமக்கும் தெரியும். அந்த ஞானத்தை நோக்கி பயணத்தை துவங்க வைப்பதுதான், எமது பணியாக உள்ளது. ஒரு மனிதனின் முன் ஜென்ம பாவத்தை குறைத்தால்தான், இகுதொப்ப விஷயமே அவன் சிந்தனைக்கு எட்டும், என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். தர்மம் செய்யாமல் ஒருவன் பாவங்களை குறைக்கவே இயலாது. படைப்பெல்லாம் இறைவனுக்கே சொந்தம். இந்த கருத்தை மீண்டும், மீண்டும், மீண்டும், மீண்டும் அசைபோட, துன்பங்களிலிருந்து வெளிவருவதற்கான வாய்ப்பு, ஒவ்வொரு மனிதனுக்கும், கிட்டும்! ஆசிகள்! சுபம்!

Sunday 27 November 2016

சித்தன் அருள் - 520 - அந்த நாள் > இந்த வருடம் 2016 - கோடகநல்லூர் - 2

உண்மையிலேயே, இந்த நிகழ்ச்சியை அகத்தியப் பெருமான் தான் தன் அடியவர்கள் வழி நடத்தி எடுத்துக் கொள்கிறார் என்பது அன்று தெளிவாயிற்று.

3-4 அகத்தியர் அடியவர்கள் ஒன்று சேர்ந்து பெருமாள், தேசிகர் இவர்களின் அபிஷேக பீடத்தை தூக்கி வெளியே கொண்டுவந்து வைத்தனர். ஒரு சிலர் சேர்ந்து, பூசைக்கான பூக்களை எடுத்து அடுக்கி வைத்து கேட்கும் பொழுது எடுத்து கொடுக்க வரிசை படுத்தி வைத்தனர். ஒரு சிலர் சேர்ந்து, துளசி, ரோஜா பூ போன்றவற்றை ஆய்ந்து, அர்ச்சனை செய்வதற்கு ஏதுவாக பூ கூடையில் வைத்தனர். ஒரு சிலர் அபிஷேகத்துக்கு தேவையான பாத்திரங்களை மேடை மேல் கொண்டு வைத்து அதில், மடப்பள்ளியிலிருந்து நீர் பிடித்து வைத்தனர். ஒருவரிடம் இந்த இடத்தை கூட்டி சுத்தம் பண்ணிவிடுங்களேன் என்றிட, அதை செய்வதற்கும் பலர் போட்டியிட்டனர். இதற்குள் வந்திருந்த பக்தர்களின் எண்ணிக்கை 150ஐ தொட்டது.  எல்லோரும், மிக அமைதியாக மேடைக்கு எதிர் புறத்தில் அமர்ந்திருந்தனர்.


உள்ளே சென்று, உற்சவ மூர்த்தியை எடுத்துவர திரும்பிய அர்ச்சகரிடம், ஒரு சிறிய பொருளை கொடுத்து "பெருமாள் பாதத்தில் வைத்து, பூசைகள் முடிந்ததும், என்னிடம் தாருங்கள்" என்றேன். அவரும் அதை வாங்கிச் சென்று, பெருமாள் பாதத்தில் வைத்தார்.

உற்சவ மூர்த்தி, இரு தாயார்கள், சக்கரம், சாலிகிராமம், தேசிகர் இவர்களின் அபிஷேக மூர்த்தங்கள் மேடைக்கு வந்து சேர்ந்தது. கோலம் போடப்பட்டு, கலச தீர்த்தம் வைத்து, தயாராக இருந்தது.

அர்ச்சகர், சங்கல்பத்துடன் பூசையை தொடங்க வேண்டி, என்னை அழைத்து, "யார் பேருக்கு சங்கல்பம் செய்ய வேண்டும்" என்றார். முன்னரே தீர்மானித்திருந்தபடி, "அகத்தியப் பெருமான்", அன்றைய நட்சத்திரம், திதி இவைகளை கூறி பூசையை தொடங்கச் சொன்னேன். அவரும், கடைசியாக "அகத்தியர் பக்த ஜன சபை" என்று ஒரு நாமத்தையும் சேர்த்து, அகத்தியர் அடியவர்களை பெருமை படுத்தும் விதமாக பூசையை தொடங்கினார்.

20 நிமிடத்தில் கலச பூசை நிறைவேற, அடுத்தது அபிஷேக பூசை தொடங்கப்பட்டது. அனைத்து அடியவர்களும் அமைதியாக அமர்ந்திருந்தனர். எல்லோருடைய மனதிலும் ஒவ்வொரு விதமான பிரார்த்தனை என்பதை, அவரவர் முகம் காட்டிக் கொடுத்தது.

பெருமாள் பாதத்தை பார்த்து, "எல்லோருக்கும் அருள் புரியுங்களேன்" என்று வேண்டிக் கொண்டேன்.

முதலில் விதவிதமான அபிஷேகம் செய்யப்பட்டது. கடைசியில்தான் கலச தீர்த்த அபிஷேகம்.

வாசனாதி திரவியங்கள் சேர்த்த தைலக்காப்பு பெருமாளுக்கும் தாயாருக்கும், தேசிகருக்கும், சக்கரத்துக்கும், சாலிக்ராமத்துக்கும் செய்யப்பட்டு, அதில் ஒரு சிறு பங்கு, அங்கு வந்திருந்த அனைத்து அடியவர்களுக்கும், உடலில் தேய்த்துக் கொள்ள, கையில் கொடுக்கப்பட்டது. இதே போல், திருமஞ்சனத்துக்கு உபயோகிக்கப்பட்ட, பெருமாள், தாயார் மார்பில் இருந்த மஞ்சள் கலவையும் எல்லோருக்கும் பின்னர் வழங்கப்பட்டது. [இது மிகப் பெரிய அரிய மருந்து, என்பதை, நானறிவேன்].

தேன், நெய், பால், தயிர், 128 மூலிகைப் பொடி, மஞ்சள், வாசனாதி திரவியங்கள், என பலவிதமான அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அபிஷேக நேரத்தில், பெருமாளின் முகத்தையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த பொழுது, அதில் பல விதமான உணர்வுகள் வெளிப்படுவதை காண முடிந்தது. ஒரு முறை மூச்சு முட்டி, முகத்தை வழித்து விட்டு நிற்கிற குளிக்கும் குழந்தை போல், மறுமுறை, ஆனந்தமாக கண்ணை மூடி அபிஷேகத்தை அனுபவிக்கிற நிலை. ஒரு முறை கண்ணை திறந்து வைத்துக் கொண்டு "சரி! ஏற்றுக் கொண்டுவிட்டேன்" என்றும், உடனேயே அடுத்த அபிஷேகத்தில் பள்ளி கொண்டு, ஆனந்தமாக நீரில் சயனித்து இருக்கும் முக பாவம். என்னவென்று சொல்வது. இதை நேரில் கண்டுதான் உணரவேண்டும்.

அபிஷேகத்தின் பொழுது பலர் ஒன்று சேர்ந்து "புருஷ சூக்தம்" என்கிற மந்திரத்தை ஓதினார்கள். மிக ரம்மியமாக இருந்தது, சூழ்நிலை. அமைதியாக அமர்ந்திருந்த அகத்தியர் அடியவர்கள், இந்த சூழ்நிலையை மிகவே கவனமாக கவனித்து வந்தனர் என்பதற்கு, பின்னர் ஒருவர், பெருமாளின் அபிஷேகத்தின் போது, மாறி மாறி வந்த அவரின் முக பாவத்தை விளக்கிய பொழுதே புரிந்தது.

முதல் கட்ட அபிஷேகம் முடிந்து போன நிலையில், இரண்டாம் கட்டமாக கலச தீர்த்த அபிஷேகம் செய்யப்பட்டது. அமோகமாக, நாராயணா என்கிற நாமம் ஒலிக்க, பெரிய கலச தீர்த்தம் அபிஷேகத்துக்குப் பின் தீர்த்தமாக அனைவருக்கும் தலையில் தெளிக்கப்பட்டது.

அபிஷேகம் முடிந்து போனதால், திரை போடப்பட்டு, அலங்காரம் தொடங்கப்பட்டது. அரை மணி நேரத்தில் அலங்காரம் முடியவே, முதலில் மூலவருக்கு பூசையும், தீபாராதனையும் செய்யப்பட்டது. அத்தனை பேரும் அந்த சின்ன சன்னதிக்குள் செல்ல முடியாது என்பதால், அடியேன் வெளியே நின்று, ஒரு நிமிடத்தில் பெருமாளை எட்டிப் பார்த்து தரிசனம் செய்து கொண்டேன்.

தரிசனம் முடிந்து அனைவரும் வெளியே வர, உற்சவ மூர்த்திக்கு நிவேதனம் செய்யப்பட்டது. பின்னர் ஆரத்தி எடுக்கப்பட்டது. அமைதியும், ஆனந்தமும் ஒரு சேர, அகத்தியர் அடியவர்கள் ஒன்று கூடி நாராயணா என்கிற மந்திரம் உள்ளொலிக்க பெருமாளின் தரிசனத்தை பெற்றனர்.

வந்திருந்த அனைவருக்கும், சடாரி சார்த்தப்பட்டு, தீர்த்தம் கொடுக்கப்பட்டு, துளசி ப்ரசாதத்துடன் குங்குமம் அளிக்கப்பட்டது.

கோவில் நிர்வாகி, "பிரசாதத்தை உங்கள் ஆட்களை வைத்தே எல்லோருக்கும் கொடுத்து விடுங்களேன்" என்றார். முன்னரே, பிரசாதத்தை உள்வலம் வரும் வழியில் வைத்து கொடுக்கலாம் என்று தீர்மானித்திருந்ததால், ஒரு நான்கு அகத்தியர் அடியவர்களை தேர்ந்தெடுத்து வரிசையாக மேடைமேல் நிற்கச்சொல்லி, பிரசாத பாத்திரத்தை அடுக்கி வைத்தோம். ஒருவர் தட்டு கொடுக்க, மற்றவர்கள் வரிசையாக வந்து சென்ற அகத்தியர் அடியவர்களுக்கு, புளியோதரை, தயிர் சாதம், சர்க்கரை பொங்கல் என விநியோகம் செய்தனர். இதனுடன் ஐந்தாவதாக நின்றவர், அகத்தியர் அடியவர்கள் கொடுப்பதற்காக வாங்கி வந்த "இனிப்பு பலகாரத்தை" கொடுத்தார். எனக்கோ ஆச்சரியம். எப்படி அகத்தியர் அடியவர்கள் தாங்களும் பங்கு பெற வேண்டும் என்ற அவாவில், இனிப்பை வாங்கி வந்திருக்கிறார்கள் என்று. எனக்கு அது தோன்றவே இல்லை. சரி அந்த பாக்கியத்தை அகத்தியப் பெருமான் அவர்களுக்கு உணர்வாக இருந்து கொடுத்துள்ளார் என்று புரிந்து கொண்டேன். ஆறாவதாக நின்ற ஒரு பெரியவர், தன் சார்பாக "லோபா முத்திரையுடன் அகத்தியப் பெருமான்" சேர்ந்திருக்கும் ஒரு சிறிய படத்தை அனைவருக்கும் கொடுத்தார். இதற்கிடையில், விநியோகம் தொடங்கும் முன்னரே, அர்ச்சகரிடம் அடியேன் கொடுத்து உள்ளே மூலவர் பெருமாளிடம் வைத்திருந்த அந்த சிறிய பொருளை வாங்கி, முதல் பரிசாக ஒரு "786" பதித்த ரூபாய் நோட்டை பெருமாளுக்கு கொடுத்து அவர் பாதத்தில் வைத்த பின், இரண்டாவதாக அர்ச்சகருக்கு ஒன்றை கொடுத்த பின், ஏழாவதாக நின்று கடைசியில், வந்திருந்த அனைத்து அகத்தியர் அடியவர்களுக்கும் "இது பெருமாளின் பரிசு உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும். பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்" என்று கூறி கொடுத்தேன். அடியேனுக்கு பெருமாள் கொடுத்தது, இந்த சின்ன வேலைதான். அதிலேயே, திருப்தி வந்துவிட்டது.

அடியவர்கள் அனைவரும், மிக அமைதியாக, அன்பாக, வரிசையில் வந்து இவை அனைத்தையும் பெற்று சென்றனர். அனைவரும் சாப்பிட்டபின் தட்டை கோவிலுக்கு வெளியே எடுத்துச்சென்று, அதற்கான இடத்தில் விட்டு சென்றது, நம் மக்களுக்குள்ளும், சுத்தம், சுகாதாரம் என்கிற எண்ணம் நன்றாக பரவியுள்ளது, என்பது புரிந்தது.

வந்திருந்த பலரும், திரு.கார்த்திகேயன் வந்திருக்கிறாரா என்றுதான் விசாரித்தனர். அவர் வராததால் தப்பித்தார். இந்த வருட இந்த புண்ணிய தினத்துக்குப் பிறகு இப்படி ஒரு "பல முனை தாக்குதல்" போல "அகத்தியப் பெருமானின் சித்தன் அருளை" விட்டு விலகிவிடுவார் என்று அடியேன் நினைக்கவில்லை.  அதற்கான காரணமும் நியாயமானது. அதை பற்றி பின் ஒருமுறை தெளிவாக விளக்குகிறேன். அவர் விலகிய செய்தியில் சற்றே செயலிழந்து நின்றதால்தான், இந்த இரண்டாம் பாகம் சற்று தாமதமாகிவிட்டது. உண்மையிலேயே மறந்தே போனது.

நிறைய அடியவர்கள், அடியேனிடமும் சற்று நேரம் பேசினார்கள். இதுவே பெரும் பாக்கியம் என்று நினைத்துக் கொண்டேன். அதிலிருந்து, அகத்தியப் பெருமானின் சித்தன் அருள், அவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு தூரம் வேரோடி, உள் புகுந்து, நல்லவைகளை செய்துள்ளது என்று உணர முடிந்தது. அனைத்து பெருமையும், அகத்திய பெருமானுக்கும், திரு.கார்த்திகேயனையும் சாரும். அனைவரும் இறை அருள் பெற்று, இன்பமாக விலகி செல்ல 4 மணியாயிற்று.

எல்லாம் முடிந்த பின் ஒரு அசதி வந்தது பாருங்கள். உடல் வலிமை அனைத்தும் வற்றி போனது போல். அருகிலிருந்த ஒரு வீட்டில் சற்று நேரம் அமர்ந்து ஓய்வெடுத்துவிட்டு, அன்றைய தினம் "சனிப்பிரதோஷம்" ஆனதால், சிவபெருமானுக்கு வாங்கி வைத்த அபிஷேக பொருட்களை எடுத்துக் கொண்டு 5.30க்கு கோவிலுக்கு சென்றோம். அந்தக் கோவில் செவ்வாய்க்கான பரிகார தலம். மிகுந்த கூட்டம். வெளியே நின்று, ஒரு அடியவரிடம் வேண்டி, விலகி வழி தரச்சொல்லி, மெதுவாக எட்டிப்பார்த்துவிட்டு, பூசைக்கான பொருட்களை அங்கே அமர்ந்திருந்த பக்தர்கள் வழி உள்ளே கொடுத்துவிட்டேன்.

"சரி! உங்களுக்கும் மரியாதை செய்தாகிவிட்டது. ஏற்றுக் கொள்க! எல்லோரையும் ஆசீர்வதியுங்கள்" என வேண்டிக் கொண்டு, பெருமாள் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். ஒரு விஷயம் தெரியுமா? பெருமாள் கோவில் உள்ள ஊர்களில், சிவபெருமான் தான் "ஷேத்ரபாலகராக" இருக்கிறார். எந்த பெருமாள் கோவிலுக்கு சென்றாலும், ஆராய்ச்சி பண்ணி பாருங்கள். பக்கத்தில் எங்கேனும் ஒரு சிவலிங்கம் இருக்கும்.

இரவு 7.30க்கு நடை சாற்றி வீட்டுக்கு செல்ல வேண்டும் என பெருமாள் கோவில் அர்ச்சகர் ஏற்கனவே என்னிடம் தெரிவித்திருந்தால், அவசர அவசரமாக கோவிலுக்கு வந்தோம். அப்பொழுதும் ஒரு 50 பேர் நின்றிருந்தனர். உள்ளே பெருமாள் ஆனந்தமாக, அமைதியாக நின்றிருந்தார்.

அவரை பார்த்ததும் ஒன்றுதான் கேட்கத் தோன்றியது. "மழை இல்லை, நீர் இல்லை, ஏன் தாமிரபரணியே மெலிந்துவிட்டாள். இன்றைய பூசையை நீங்கள் ஏற்றுக் கொண்டதாக இருந்தால், இந்த குறைவை நிவர்த்தி செய்யக் கூடாதா?" என்றேன் மனதுள்.

இரவில் பூசை, தீபாராதனை, அதன் பிறகு சடாரி வைக்கப்பட்டு, துளசி குங்குமம் கொடுக்கப்பட்டு, சுண்டல் பிரசாதம் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. சற்றே நேரத்தில், எந்த செயற்கை வெளிச்சமும் இன்றி, மறுமுறை கும்ப தீபம் காட்டி, நேத்ர தரிசனம் அனைவருக்கும் செய்து வைக்கப்பட்டது. நாங்கள் காத்திருந்தோம். பெருமாள் சார்பாக, பள்ளியறை பால் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. அதை அருந்தி பார்க்க வேண்டும். இந்த காலத்தில், நான் சிறுவனாக இருந்த காலத்தின் ருசியுடன், இப்படி ஒரு பாலா? என்று நம்மை திகைக்க வைக்கும்.

பூசை முடிந்து கருவறை திரையிட்டு மூடிய பின், சற்று நேரம் அர்ச்சகரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

"எல்லாம் திருப்தி தானே?" என்ற பொதுவான கேள்வியை கேட்டேன்.

அதற்கு அவர்,

"பெருமாள், இன்று ரொம்ப குளிர்ந்து போய், ஆனந்தமாக, அழகாக இருக்கிறேன் என்கிறார். இது போல் தினமும் எனக்கு பூசை ஏற்பாடு செய்தால், நான் தினமும் சந்தோஷமாக இருப்பேன்" என்றார்.

"அது சரி! வருடத்தில் ஒரு நாள் ஏற்பாடு செய்வதற்குள் எல்லோரும் படுகிற பாடு என்னவென்று அவருக்கு தெரியும். இதை தினமும் என்றால், அவ்வளவுதான். எதுக்கும், அவர் பெயரை "ப்ரஹன்மாதாவார்" என்கிற நாமத்திலிருந்து "நித்ய கல்யாண பெருமாள்னு" மாத்திக்கச் சொல்லுங்க!" என வேடிக்கையாக சொல்லிவிட்டு, என் வேண்டுதலை மறுபடியும் ஒரு முறை கூறிவிட்டு, கிளம்பினோம்.

மறுநாள், அதிகாலையில் தொடங்கிய மழை, யாரையுமே வீட்டை விட்டு வெளியே போகவிடாமல் செய்து, 24 மணிநேரம் திருநெல்வேலியை ஸ்தம்பிக்க வைத்தது என அதிர்ச்சி தரும் செய்தி வந்து சேர்ந்தது.

அகத்தியர் அடியவர்களே, உங்கள் பங்கினாலும், பிரார்த்தனையினாலும், அகத்தியப் பெருமானின் அருளாலும், இந்த வருட அந்த புண்ணிய தினம் மிக விமர்சையாக நடந்தேறியது. அதற்கு பரிசாக, உங்கள் அனைவருக்கும், இறை அருளையும், எனது பணிவான வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டு,

மேலும் இது போல் நிறைய வழிகளை, நம் அனைவருக்கும், அகத்தியப் பெருமான் அருளட்டும், என்று வேண்டிக் கொண்டு, இந்த தொகுப்பை நிறைவு செய்கிறேன்.

நமஸ்காரம்.

சித்தன் அருள் ................ தொடரும்!

சித்தன் அருள் - 519 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

மனிதனின் எதிர்கால வாழ்வினை அறிய, அருள் வாக்கோ, ஜோதிடமோ பார்ப்பதில் தவறில்லை. ஆயினும், மனிதர்களின் முன் ஜென்ம பாவத்தின் அடிப்படையில் அமைவதுதான், அவன் வாழ்வு. எம்மை நாடுவதாலோ, எமது வகை அறிவதாலோ மட்டும் உடன் உயர்ந்த பலன் கிட்டிவிடாது. விதி, முதலில் அதன் வேலையை செய்துகொண்டே இருக்கும். அதன் போக்கிலே சென்றுதான் திசை திருப்பவேண்டும். விதி எப்படி நிர்ணயிக்கப் படுகிறது? ஒவ்வொரு ஆத்மாவும், ஒவ்வொரு பிறவியிலும் செய்த பாவ, புண்ணிய அளவை வைத்து, நடப்பு பிறவியிலே அதற்கு ஏற்றவாறு தாய், தந்தை உறவினர், நட்பு, பணி, கல்வி, ஆரோக்கியம் போன்றவை முன்னரே தீர்மானிக்கப்படுகிறது. அதில், விரும்பக்கூடியதை, மனிதன், ஏதும் சொல்லாமல் ஏற்றுக் கொள்கிறான். விரும்பக் கூடாததை மட்டும் மாற்றினால் நன்மை என்று எண்ணுகிறான். அது தவறில்லை. என்றாலும் விதி அதற்கு அனுமதி தராது. ஆத்மார்த்தமான பிரார்த்தனைகள், தர்மங்கள் செய்துதான் பிரச்சினைகளில் இருந்து மெல்ல, மெல்ல வெளியே வர வேண்டும். ஒருவனுக்கு நடக்கும் நிகழ்வு, வேறொரு மனிதனுக்கு நடக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. ஏனென்றால், ஒவ்வொரு மனிதனின் கர்மா, பாவங்கள், தனித்தனியான அளவீடுகளை கொண்டதாக இருக்கிறது. எம்மை நாடுவதும், வாக்கை அறிவதும், அறிந்த பிறகு ஆதி பிழறாமல் செய்தும், எவ்வித மாற்றமும் இல்லை என்று வருந்துகின்ற மனிதர்கள் பலருண்டு. அங்கும் விதி கடுமையாக உள்ளதை, புரிந்து கொள்ளவேண்டும். மனச்சோர்வு கொள்ளாமல், மீண்டும், மீண்டும் இறைவனிடம் பிரார்த்தனையை வைத்துக் கொண்டே இருக்கவேண்டும். துன்பமே இல்லாத வாழ்க்கை என்று ஒன்றுமே கிடையாது. எப்படி இன்பம் ஒரு மாயையோ, துன்பமும் ஒரு மாயைதான். ஆக, இவ்விரண்டையும் தாங்கக்கூடிய மனோ பக்குவத்தை ஒரு மனிதன் வளர்த்துக் கொள்ளவேண்டும். அதற்குத்தான், "ஞானநிலை" என்று பெயர். அந்த ஞானத்தைத்தான் ஒவ்வொரு மனிதனும் அடையவேண்டும் என்று யாங்கள் எதிர் பார்க்கிறோம்.

Saturday 26 November 2016

சித்தன் அருள் - 518 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!



அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

விதியை மதியால் ஆய்வு செய்யலாம். ஆட்சி செய்ய இயலாது. அகுதொப்ப விதி, மதி என்பதையெல்லாம் தாண்டி, பிரார்த்தனை என்ற எல்லைக்கு வந்துவிடு. அதே உன்னை காலா காலம் காத்து நிற்கும். சென்றது, செல்ல இருப்பது என்றெல்லாம் பாராமல், உள்ளுக்குள்  பார்த்து, பழகு. பழகப் பழக, விதி உனக்கு சாதகமாக மாறும். பக்குவம் பெறுவதற்குத்தான் அனுபவங்கள். அந்த அனுபவங்கள்தான், மனோபலத்தை அதிகரிக்கும் வழியாகும். மனோபலம் இல்லாது, தெய்வ பலம் கூடாது. மனோபலத்தை உறுதி செய்யவும், வளர்த்துக் கொள்ளவும், துன்பங்களைத் தாங்கி கொள்ளத்தான் வேண்டும். அகுதொப்பத்தான், பல்வேறு சோதனைகளும், வேதனைகளும் மனிதனை விரட்டுகின்றன. அவற்றை கண்டு மனம் தளராது, எதிர்த்து, இறையருளோடு போராடினால், இறுதியில் நலமே நடக்கும். உனது வாழ்விலும் கடை வரையிலும் நலமே சேரும். அகுதொப்ப இயன்ற பிரார்த்தனைகளை, தர்மங்களை செய்து கொண்டு எமது வழியில் தொடர்வதை தொடர்க. யாவும் நலமே நடக்கும். பூரண நல்லாசிகள்.

Friday 25 November 2016

சித்தன் அருள் - 517 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

கோவிலில் எத்தனை முக தீபங்கள் வேண்டுமானாலும் ஏற்றலாம். தீபத்திலே முகங்களின் எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக, பூர்வீக தோஷம் குறையும். இது அடிப்படை ஆனாலும், ஒவ்வொரு மனிதனின், அன்றாட கலிகால வாழ்க்கையில், நடைமுறை என்ற ஒன்று உள்ளது. அதிக எண்ணிக்கையுள்ள தீபங்களை வாங்கி ஏற்றக்கூடிய வாய்ப்பும், சூழலும், இட வசதியும் இருந்தால், எந்த ஒரு மனிதனும் தீபங்களை ஏற்றலாம். அதில் பயன் உண்டு. இறையருளும் கூடும். ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதன் புதிதாக ஒரு தீபத்தை பெறும்பொழுது, "பஞ்சாட்சரம்" ஓதித்தான் அதைக் கையில் வாங்கி கொள்ள வேண்டும்.

Thursday 24 November 2016

சித்தன் அருள் - 516 - திரு.கார்த்திகேயனின் "பின்னுரை"


ஓம்  ஸ்ரீ லோபாமுத்திரா சமேத ​அகத்தீசாய நமஹ! சில விஷயங்கள் ​பின்னுரை​யாக.

அகத்தியப் பெருமான் அருளிய "பெருமாளும் அடியேனும்" என்கிற தொடர் திடீரென்று முடிந்து போனதில், உங்களுடன், எனக்கும் சற்றே அதிர்வை தந்தாலும், நாடியில் வந்து அகத்தியப் பெருமான் அதை அருளிய காலத்தில் என்ன நடந்தது என்பதை, ஏன் நின்று போனது என்பதை திரு.கார்த்திகேயன் அவர்கள் பகிர்ந்து கொண்டதை, உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். கூறப்படுகிற விஷயங்களை, அதனதன் நிலையில் நின்று புரிந்து கொள்ளுங்கள்.

"ஓம்  ஸ்ரீ லோபாமுத்திரா சமேத ​அகத்தீசாய நமஹ!"

"எல்லோரும் இன்புற்று இருப்பதே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே" என்ற இறைவனின் எண்ணம் வளர்ந்து இந்த பூமியில் "தர்மம்" இன்றளவும் நிலைத்து நிற்க காரணமாயிற்று. இதையே சித்தர்கள் அனைவரும் அடிப்படை எண்ணமாக கொண்டனர், நடை முறைப்படுத்தினர். அவர்களுக்குத்தான் எந்த எதிர்பார்ப்பும் கிடையாதே. தங்களுக்கு என்று எதையும் வேண்டாமல், கலியின் பாதிப்பினால் வழி தவறி செல்கிற மனிதனை, எத்தனை பெரிய தவறு செய்திருந்தாலும், மன்னித்தருள இறைவனிடம் வேண்டி, உத்தரவை பெற்றபின், "நாடி" என்கிற ஒரு முறையை உருவாக்கினர்.  ஆம்! இந்த உலகின் அத்தனை விஷயங்களையும் "ஓலைச்சுவடியில்" எழுதி வைத்தனர்.  ஒரு சில நாடிகளில் மட்டும் எழுதி வைக்காமல், வேண்டிக் கொள்கிறபோது எழுத்துக்களை தோற்றுவித்து, விஷயங்களை விளக்கினர். இந்த வகை நாடியை "ஜீவ நாடி" என்பர். எல்லா சித்தருக்கும் ஜீவ நாடி என்பது உண்டு. அதை கை வசம் வைத்திருக்கும் அந்தப் பெரியவரை நாடி சென்று கேட்கிற பொழுது, பிரச்சினைக்கான காரணத்தை விளக்கி, என்ன செய்தால் பரிகாரமாக ஆகும் என்பதையும் சொல்லி, அதை செய்ய வைத்து தனிப்பட்ட மனிதரை கரை ஏற்றி விட்ட நிகழ்ச்சிகள் இந்த பூமியில் ஏராளம்.

எத்தனையோ ஜென்மத்துக்கு முன்பு செய்த செயலால் சேர்த்து வைத்தக் கர்மவினை கூட மிக எளிதாக சித்தரால் கண்டிபிடிக்கப் பட்டுவிடும். ஆம் சித்தர்கள் முக்காலமும் உணர்ந்த ஞானிகள்.

அப்படிப்பட்ட ஜீவ நாடி ஒருவருக்கு கைவரப் பெறுவது என்பது மிக சாதாரணமான விஷயமல்ல. மகான்களை காண்பதே மிகப் பெரிய புண்ணியம்.  அதே மகானுடன் தொடர்ந்து, தொடர்பில் இருப்பது என்பது எத்தனை ஜென்ம புண்ணியம்! அப்படிப்பட்ட ஒரு புண்ணிய ஆத்மாவை நண்பனாக அடைவது என்பது, அதற்கு பின்னர் இந்த உலகில் நமக்கு எந்த பௌதீக வஸ்துவுமே தேவை இல்லை என்கிற நிலைக்கு கொண்டு வந்து விட்டுவிடும். அப்படிப்பட்டவரை, நல்ல நண்பனாக மட்டும் பார்க்காமல், குரு ஸ்தானத்தில் வைத்து கொண்டாடினால்! ஆம் அதற்கும் ஒரு குடுப்பினை வேண்டும். இறை அருள் வேண்டும். சித்தர் வழிநடத்தல் வேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு நண்பரின் தொடர்பினால் ஏற்பட்ட நட்பில், அவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட நல்ல விஷயங்களை, இங்கே "சித்த மார்க" தேடலில் முனைந்து இருக்கும் சித்தர் அடியவர்களும் தெரிந்து கொள்ளட்டுமே என்கிற எண்ணத்தில் தர நினைத்த போது உருவானது தான்

"சித்தன் அருள்"

​என்கிற தொகுப்பு. இந்த தலைப்பை கூட அகத்தியப் பெருமானே எடுத்துக் கொடுத்தார், என்பதே உண்மை.

​எங்கள் நட்பை ஒரு போதும், பிறர் புரிந்து கொள்கிறபடி நாங்கள் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. ஒரு ஆழமான தெளிவு அதில் இருந்தது. என்னை முழு உரிமையுடன் "டேய்" போட்டு கூப்பிடுகிற அளவுக்கு அது இருந்தது. ஆனால் அப்படி கூப்பிடுவது கூட ஒருவரை மிக தாழ்வாக கருதுவது போல் ஆகிவிடும் என்று நினைத்து மிக மரியாதை கொடுத்துதான் பேசுவார் அவர். அதுவே அவரிடம் எனக்கு மிகுந்த மரியாதையை வளர்த்தது.  மேலும் அவர் உருவில் தனியாக இருந்தாலும், அரூபமாக, அவர் வாக்கில் அகஸ்திய சித்தரே அவருடன் எப்போதும் உள்ளார் என்று பல முறை உணர்ந்திருக்கிறேன். அது தான் உண்மையும் கூட. தனக்கு பெயர் வர வேண்டும் என்றோ, புகழ் வேண்டும் என்றோ ஒரு நிமிடம் கூட நினைக்காதவர்.  எல்லோரும் சித்தரை கொண்டாடுங்கள் என்று தான் கூறுவார். என்னவோ தன் வாழ்க்கை கூட, அகத்தியப் பெருமானுக்கு சேவை செய்து கிடப்பதே என்று நினைத்து வாழ்ந்தவர். அடுத்த நிமிடத்தை பற்றி கவலைப் படமாட்டார். எல்லாம் அகத்தியர் பார்த்துக் கொள்வார் என்று திடமாக நம்பியவர். அவரைப் பார்த்து, அவர் சொன்னதை தெளிவாக கேட்டு, உணர்ந்து, வாழ்க்கையை செம்மையாக மாற்றிக்கொண்டேன், நான். என்னுள் அவர் கொண்டு வந்த மாற்றங்கள், அவரை ஒரு குருவாக ஏற்க வைத்தது. இன்றும் அவர் என் மானசீக குருதான்.

ஒரு முறை பேசும் போது "இந்த உடலை பற்றி நான் கவலைப்படவே இல்லை! அதனால் என்ன நடந்தாலும் யாரும் வருத்தப்படவே கூடாது. எல்லாம் அகத்தியர் பார்த்துப்பார்" என்றார்.

என்னவோ நடக்கிறது, என்னவோ நடக்கப்போகிறது என்று உணர்ந்த நான் "என்ன! இப்பொழுது இந்த வார்த்தை?" என்றேன்.

அப்பொழுது மடைதிறந்த வெள்ளமென பிறர் அறிந்திராத பல விஷயங்களை என்னிடம் கூறினார். நிறையவே புரிந்து கொள்ள முடிந்தது.  எதுவும் நம் கையில் இல்லை என்று. அனைத்தையும் தீர்மானிப்பது இறைவன் செயல். முடிந்த அளவுக்கு வாசனைகளை களைவதே நல்லது என்று உணர முடிந்தது. கூடவே, அவரின் உறவினர் வழி ஒரு தொகுப்பை கொடுத்துவிட்டார். எதற்கு என்று கேட்டதற்கு "இது உன்னிடம் இருக்கட்டும். அகத்தியருக்கு சேவை செய்கிற பாக்கியம் என்றேனும் உனக்கும் கிடைக்கலாம். நானும் வேண்டிக் கொள்கிறேன். உன் கர்மாவை, அதில் இருக்கும் வாசனைகளை களைய அகத்தியப் பெருமானால் முடியும். பத்திரமாக வைத்து உபயோகப் படுத்திக்கொள்" என்றார்.

மிகுந்த யோசனையுடன் அவர் கொடுத்த விஷயங்களை வாங்கி வைத்துக் கொண்டேன். கிடைத்ததை பார்த்தால், அதில் ஒன்று தற்போது முடிந்து போன "பெருமாளும் அடியேனும்" தொடரின் நிகழ்ச்சிகள். ஆனால், அது நிறைவு பெறாமலேயே இருந்தது.

"இப்படி நிறைவு பெறாமலேயே இருக்கிற ஒரு விஷயத்தை என்னிடம் தந்தால், நான் என்ன செய்ய முடியும்?" என்று கேட்டேன்.

"ஹ்ம்ம். தவறான கேள்வி. ஏன் அது இத்துடன் நிறுத்தப் பட்டது? மீதியை எப்போது கொடுப்பார் அகத்தியர்? என்று கேட்டிருக்கவேண்டும்" என்றார் என் நண்பர்.

"உண்மைதான். நாடியில் அகத்தியர் வந்து சொன்ன இத்தனை விஷயங்கள் எதனால் திடீரென்று நின்று போனது?" 

"ஆறு மாசமாச்சு! உத்தரவு வந்து. எங்கும் உபயோகிக்கப்பட்ட என் பெயரை, இனிமேல் உபயோகிக்கக் கூடாது என்று குருநாதரின் உத்தரவு? அதை மெதுவாக மறக்க தொடங்க வேண்டும். எல்லோரிடமிருந்தும், எல்லாவற்றிலிருந்தும் விலகி நில்! என்கிறார்."

அகத்திய பெருமானின் உத்தரவை கேட்டதும், சற்றே அதிர்ந்து போனாலும், அதை மறைத்துக் கொண்டு ஒரு கேள்வியை திருப்பிக் கேட்டேன்.

"விரிவாக என்னிடம் கூறலாம், என்றால் விளக்குங்களேன்!" என்றேன்.

"ஏழு மலைக்கு பெயர் வந்த சூழ்நிலையை அகத்தியர் நாடியில் வந்து விளக்கத் தொடங்கினார். ஐந்து மலை வரை வந்தாகி விட்டது. ஆறாவது மலை பற்றிய நிகழ்ச்சிகளை எதிர் பார்த்து காத்திருந்தேன். தினமும் நாடி வைத்து வேண்டிக் கொண்டபின், அதில் அகத்தியப் பெருமான் கூறியதை நகல் எடுப்பது என் வேலை. அன்றும் அகத்தியர் நாடியில் வந்து பேசக் காத்திருந்தேன். எப்போதும் வேண்டிக் கொண்டவுடன் பேசுகிற அவரை, காணவில்லை. ஆம்! நாடியில் வரவில்லை. ஏதோ நடந்திருக்கிறது அல்லது நடக்கிறது. அதனால் தான் அவர் வரவில்லை என்று நினைத்து நாடியை பூசை அறையில் ராமர் பாதத்தில் வைத்துவிட்டு, இயல்பாக வெளியே வந்துவிட்டேன்."

"மூன்று நாட்களாகியது. இப்படி சொல்லாமல், கொள்ளாமல் அகத்தியர் தவிக்க விட்டதே இல்லை. நான் என்ன தவறு செய்தேன் என்று கூட யோசித்துப் பார்த்தேன். எதுவும் ஞாபகத்துக்கு வரவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல், அகத்தியரை நினைத்து த்யானம் செய்யத் தொடங்கினேன்."

"பொதுவாக, அகத்தியர் வந்து வாக்கு உரைக்கவில்லை என்றால், ஏன்? என்று கூட கேட்க, உண்மையாகவே எனக்கு துணிவு கிடையாது. அவரே மௌனமாக இருந்துவிட்டதால், வராததால், மிச்சம் இருந்த கொஞ்சம் தைரியமும் கரைந்து போனது."

அது ஒரு வியாழக்கிழமை. குருவாரம் என்பதால், நிச்சயமாக அகத்தியர் அருளுவார் என்று நம்பிக்கையுடன் அவரை  தியானித்து, பூசை செய்து காத்திருந்தேன். அகத்தியப் பெருமான் நாடியில் வந்து பேசலானார். எனக்குள் மிகுந்த சந்தோஷம்.

அகத்தியப் பெருமானே, மூன்று நாட்களாக தங்களை எதிர்பார்த்து, வேண்டிக்கொண்டு காத்திருக்கிறேன். தாங்கள் வரவில்லை. அடியேன் ஏதேனும் தவறு செய்திருந்தால் மன்னித்து, பொருத்தருள வேண்டும். இன்னும் இரு மலைகளின் நாமதேயத்தை சுற்றி நடந்த விஷயங்களை தெரிவிக்க வேண்டுகிறேன்!" என்றேன்.

வந்த பதில் அதிர்ச்சியாக இருந்தது.

"யாம் முன்னரே சொன்னபடி எல்லாவற்றிலிருந்தும், எல்லா மனிதர்களிடமிருந்தும் விலகி நில். உன் பெயரை மறக்க வேண்டும். முகம் மறக்க வேண்டும். இறைவன் தன் மலைகளின் நாம புராணத்தை விளக்குவதை இத்துடன் தடுத்து நிறுத்திவிட்டார். ஏன் என வினவியபோது, கைலாயப் பெருமானை சென்று வணங்கி கேட்டுக்கொள் என்று கூறிவிட்டார். உடனேயே கைலாயம் சென்றேன். அதனால் தான் வாக்குரைக்க வரவில்லை."

ஒரே குழப்பமாக இருந்தாலும், அகத்தியப் பெருமானுக்கு தெரியாததா? என்று அமைதியாக இருந்தேன்.

அவர் கூறலானார்.

"கைலாயத்தில் சிவபெருமானை கண்டு வணங்கி நின்றேன். ஆனந்தமாக இருந்தது. என்ன அகத்தியர்! இந்த நேரத்தில் இங்கு வந்திருக்கிறீர் என்றார். 

"இறைவனை கைலாயத்தில் வந்து தரிசனம் செய்தாலே பெரும் புண்ணியமாயிற்றே! அதனால் தான் அடியேன் இங்கு வந்து சேர்ந்தேன், என்றேன்."

"கேட்க வந்த விஷயத்தை, அகத்தியர் சுற்றி வளைக்காமல் நேரடியாக கேட்கலாமே!" என்றார்.

"திருமலையின் சிறப்புக்களை பெருமாள் அனுமதியுடன் உலகறிய உரைத்து வந்தேன். திடீர் என பெருமாள் கொடுத்த அனுமதியை திருப்பி வாங்கி கொண்டுவிட்டார். ஏன் இப்படி? என தாச விண்ணப்பத்துடன் கேட்ட பொழுது முக்கண்ணனை கண்டு விஷயத்தை அறிந்து கொள் என்றார். ஆதலால் இங்கு ஏகினேன். அடியேனுக்கு அருள் கூர்ந்து வழிகாட்ட வேண்டும்" என்றேன்.

"நாடி வாசிக்கும் அகத்தியர் மைந்தனின் விதி முடிகிற காலம் வந்துவிட்டது. அவன் திரும்பி வரவேண்டிய காலம் நெருங்குகிறது. ஆதலால், ஏழுமலையான் தன் உத்தரவை திருப்பி வாங்கி கொண்டுவிட்டார். அதனதன் விஷயங்கள், விதிப்படி தானே நடக்கும்." என்றார்.

"அடியேனின் ஒரு விண்ணப்பம். பூமியில் மனித குலம் தர்மத்தின் வழி சென்று, இறையை அடைய, நிறைய விஷயங்களை செய்ய வேண்டியுள்ளது. அதற்காக, இந்த மைந்தனை தெரிவு செய்துள்ளேன். இன்னும் ஒரு தசவருடம் மைந்தனின் ஆயுளை நீட்டி தரும்படி எம்பெருமானிடம் வேண்டிக்கொள்கிறேன்" என்றேன்.

அதற்கு எம்பெருமான் "இல்லை அகத்தியா! இவன் விதியை மாற்றுவதாக எமக்கு எண்ணமில்லை. அவன் வந்து சேர்ந்துதான் ஆகவேண்டும். நீ சென்று வா. காலம் உன் செயல்களுக்கு உதவி செய்யும்" என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். எத்தனையோ முறை வேண்டிக்கொண்டும் அவர் மனம் மாறுவதாக தெரியவில்லை.

"நடப்பதெல்லாம் இறைவன் செயல், எனக்கு கூட புத்திரபாசம் இருக்கிறதோ?" என்ற கேள்வியுடன் கைலாசத்தை விட்டு வந்துவிட்டேன். ஒரு மனிதனாக இருக்கும் உனக்கு, இது நிச்சயமாக சலனத்தை ஏற்படுத்தலாம். தாக்கத்தை உருவாக்கலாம். எல்லாவற்றின் மீதும் உள்ள பற்றை விட்டுவிடு. சரியான தருணத்தில், யாம் வந்து அழைத்துச் செல்கிறோம்" என்று கூறி அமைதியாகிவிட்டார் அகத்தியர்.

சொன்னது எல்லாம் பேரிடியாகி உள்ளே இறங்கினாலும், மனதை கல்லாக்கிக்கொண்டு நண்பரிடம் வினவினேன்.

"சரி! என்று? எத்தனை நாட்களில்? எப்படி? எப்பொழுது? என்பதை அகத்தியப் பெருமான் கூறினாரா?" என்றேன், சிறு பதட்டத்துடன்.

சற்று புன்னகைத்தபடி, "என்ன? நீயும் சாதாரண மனிதனாக இருக்கிறாய்? அப்படிப்பட்ட முகூர்த்தத்தை அவர் தெரிவிப்பாரா? அது இறைவன் சித்தமாயிற்றே! போய் அமைதியாக இரு! உன்னிடம் தந்தவற்றை பத்திரமாக வைத்துக்கொள். அகத்தியப் பெருமானுக்கு சேவை செய்யும் பாக்கியம் உனக்கும் கிடைக்கும். அதை கெட்டியாக பிடித்து கொண்டு, மேலேறி வந்துவிடு. பிறகு பார்க்கலாம். சென்று வா" எனக்கூறி விடை பெற்றார், அகத்தியர் மைந்தன்.

அவர் மெதுவாக திரும்பி நடந்து செல்வதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தேன். அதுவே கடைசியாக சந்தித்ததும், பார்த்ததும்.

கிடு கிடுவென நாட்களும் ஓடியது. நிறைய மாற்றங்களும் அவர் உடல் நிலையில் வந்தது. ஒரு சில நாட்கள் மருத்துவ மனையில் சிகிர்ச்சை அளித்தும், பலனின்றி, அவர் ஆத்மா நல்ல முகூர்த்தத்தில், உடலை விட்டு பிரிந்தது..................

நான் அதிர்ந்து போய் அமர்ந்துவிட்டேன். ஒரு வாரத்துக்கு மேல் யாரிடமும் பேசவில்லை. எதுவும் செய்யவில்லை. தினப்படி செய்கிற விஷயங்கள் கூட நின்று போனது. எதிலும் சிறு துளி கூட விருப்பமில்லாத நிலை. அமைதியாக அமர்ந்து அகத்தியர் படத்தை பார்த்தபடி இருந்தேன். மிகப்பெரிய இழப்பு என்ற உணர்வு வரவே, மொத்தமாக இடிந்து பெயர்ந்து போன நிலை.

என்னை சுற்றி யார் யாரோ வந்து போகிற மாதிரி உணர்வு வந்தது. யாரென உணரவில்லை. என்னென்னவோ பேசுவது கூட கேட்டது.

" மனித பிறவியெடுத்தவர்களுக்கு இது நிச்சயம். இதை விட்டு வெளியே வா! இன்னும் இது போல் நிறையவே நடக்கும். அனைத்தையும், இறைவன் சித்தம் என்று ஏற்றுக் கொண்டு, உனக்கு விதிக்கப்பட்ட கடமையை பற்றின்றி செய்!" என யாரோ காதருகில் வந்து மிக சன்னமாக கூறினார்கள்.

தலை குனிந்து, கண் மூடி த்யானத்தில் அமர்ந்திருந்த என் தலைக்குள் இந்த செய்தி தெளிவாக கேட்டது. உடன் கண் திறந்து வலது பக்கம் பார்த்தேன். ஏதோ ஒரு அதீத சக்தி, காற்றாய் வந்து சொல்லிவிட்டு மெதுவாக விலகி சென்றது போல் உணர்வு ஏற்பட்டது. என் நண்பரா? சித்தனா? அகத்தியரா, கூறி சென்றது யார் என்று புரியவில்லை.

சற்று நேர அமைதிக்குப்பின், நடந்த விஷயங்களை மறுபடியும் யோசித்து பார்த்து "சரி! யாரோ துணை இருக்கிறார்கள்! சொன்ன படியே நடந்து கொள்வோம்" என தீர்மானித்து, இயல்பு நிலைக்கு வர தீர்மானித்தேன். இருப்பினும் உள் அமர்ந்த சோகம் விலக சிறிது நாட்களாகியது.

ஒருநாள், காலை த்யானத்தில் எதோ ஒரு உணர்வு உந்த, ஒரு விண்ணப்பத்தை தெரிவித்தேன், அகத்திய பெருமானை நினைத்து.

"என் நண்பர், நிறையவே என்னுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அவை அத்தனையையும் இந்த உலக மக்கள் தெரிந்து கொள்ள வெளியிட அனுமதி வேண்டும். என் நண்பரின், அகத்தியரின் புகழ் எங்கும் பரவ வேண்டி மட்டும் தான் இதை கேட்கிறேன். அடியேனுக்கும், உங்கள் இருவருக்கும் ஏதேனும் சேவை செய்ததுபோல் இருக்கும். அதனால் வருகிற பெருமைகள் அனைத்தையும் உங்களுக்கே தாரை வாரத்துக்கு கொடுத்துவிடுகிறேன். ஏதேனும் சிறுமைகள் இருந்தால் அது அடியேனின் தவறாக நினைத்து மன்னித்தருளுக! இதற்கான அனுமதியை எதிர் பார்க்கிறேன்!" என்று கூறிவிட்டு, சொந்த விஷயத்தை பார்ப்பதற்காக வெளியே சென்று விட்டேன்.

எங்கெங்கோ அலைந்து, வீட்டு விஷயங்களை பார்த்து, வீடு திரும்பிய பொழுது மாலை நேரமாகிவிட்டது. நடந்து வரும் வழியில், "வீடு சென்று குளித்து த்யானத்தில் அமரவேண்டும்" என்று தோன்றியது.

அதன் படியே அமர்ந்த ஐந்தாவது நிமிடத்தில் "எமது ஆசிகள் உமக்குண்டு" என்று ஒலிக்க, யாரது அருள்வது என்று கண்மூடி பார்த்தால், அகத்தியப் பெருமான் வலது கரம் உயர்த்தி ஆசிர்வதித்தபடி நின்றிருந்தார்.

ஆனந்த அதிர்ச்சியில், எழுந்து நின்று, அவர் நின்ற திசை நோக்கி சாஷ்டாங்கமாக கீழே விழுந்து நமஸ்காரம் செய்தேன்.

"நலம் உண்டாகட்டும்" என்றார்.

"தாங்களே! அதற்கும் வழிகாட்டி, ஒரு தலைப்பு பெயரையும் சூட்டி விடுங்களேன்" என்றிட,

அவர் திருவாயால் அருளிய தலைப்பே 

"சித்தன் அருள்"

சூட்ச்சுமமாக அனைவருக்கும் அதை உணர்த்தவே, அந்த தலைப்பை பின்னர் "அகத்தியப் பெருமானின் - சித்தன் அருள்" என்று தற்போதைய நடத்துனர் மாற்றினார்.

இதனால்தான், "பெருமாளும் அடியேனும்"  திடீரென ஐந்து மலைகளின் நாமகரணத்துடன் நின்று போனது. பின்னர், வேறொரு சமயத்தில், பெங்களூரில் அகத்தியப் பெருமான் நடத்திய சத்சங்கத்தில் (திரு.கணேசன், தஞ்சாவூர் அவர்கள் வாசித்த நாடியில்) ஒரு அடியவர், "ஏழு மலையில், மீதமிருக்கும் இரண்டு மலைகளின் நாமகரண சரித்திரத்தை, எங்களுக்கு கூறக்கூடாதா?" என்று வினவியபோது, "காலம் கனியும் பொழுது, இறைவன் அனுமதி அளிக்கும் பொழுது, யாமே அதை பற்றி கூறுவோம். பொறுத்திருங்கள்" என்றார், அகத்தியர்.

அகத்தியர் அதை பற்றி கூறும் பொழுது, அதை கேட்கிற பாக்கியம் செய்தவர்கள், அதை கேட்டு அவர் அனுமதியுடன் அதை பதிவு செய்கிற அந்த புண்ணிய ஆத்மா யாரோ? தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் என் அவா. இந்த உலக மக்களுக்கு அந்த  மலைகளுக்கு பெயர் வந்த போது நடந்த நிகழ்ச்சிகள் கிடைக்கவேண்டும்.

இறைவன் கனியும் வரை, அகத்தியர் அருளும் வரை காத்திருப்போம்.

சித்தன் அருளை இத்தனை நாட்கள் வளர்ந்து வர அகத்தியப் பெருமான் அருளியிருந்தாலும், அதன் வளர்ச்சியில் நிறைய அகத்தியர் அடியவர்கள் பங்கு பெற்றனர். ஒவ்வொருவரும் அவரவர் பங்கை ஒவ்வொருவிதத்தில் அளித்தனர். அத்தனை பேருக்கும், எனது பணிவான நன்றியை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். குறிப்பாக, இந்த வலைப்பூவில் பங்கு பெற்று, தன் சித்திரங்களால் "சித்தன் அருளை" அழகுபடுத்தி இன்று வரை எனக்கு கூட உறுதுணையாக நின்றிருந்த திரு.சரவணனுக்கு, மனமார்ந்த நன்றியை, அகத்தியப் பெருமானின் ஆசிர்வாதத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போதைய வலைப்பூ நடத்துனரும், திரு சரவணனும் செய்த ஒரு கூட்டு முயற்சியாக இன்றைய படம் மிக சிறப்பாக வந்துள்ளது. "ராமருக்கு" பட்டாபிஷேகம் இருக்க, ஏன் வேங்கடவருக்கு அது போல் ஒரு ராஜ்ய பரிபாலன தர்பார் இருக்கக் கூடாது என்று நினைத்து இன்றைய படத்தை தொகுத்து தந்துள்ளார். அருமையாக, மிகச்சிறப்பாக வந்துள்ளது என்று தெரிவித்துக் கொண்டு, "சித்தன் அருளில்" நின்றும், உங்கள் அனைவரிடமிருந்தும், என்றைக்குமாக விடை பெறுகிறேன்.

அனைவரும் அகத்தியர், இறைவன் அருள் பெற்று இனிதே வாழ்ந்திட வாழ்த்துகிறேன். வணக்கம்!  

கார்த்திகேயன்