​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 30 July 2015

சித்தன் அருள் - 230 - "பெருமாளும் அடியேனும் - 14 - பெருமாளின் விளக்கம்!


மேலும் பெருமாள் தொடர்ந்து கூறலானார். அனைவரும் மிக ஆச்சரியமாக கவனிக்கத் தொடங்கினர்.

"கலிபுருஷனின் அவதாரங்கள் துர்தேவதைகளாக மாறி பெரும் படையோடு என்னிடம் மோதும். அப்போதுதான், யான் "கல்கி" அவதாரம் எடுப்பேன்." என்றார்.

"அப்படியென்றால், இன்னும் எத்தனையோ ஆண்டுகள் ஆகும் அல்லவா?" என்றார் அகத்தியப் பெருமான்.

"சொல்ல முடியாது. நான் கல்கி அவதாரம் எடுப்பதும், எடுக்காமலிருப்பதும் கலிபுருஷன் கையில்தான் இருக்கிறது" என்று வேங்கடவன் கூறிவிட்டு அமைதியானார்.

அகஸ்தியர் பவ்யமாக ஒரு கேள்வியை திருமலயானிடம் கேட்டார்.

"எல்லாரையும் விட்டுவிட்டு வராஹரை மட்டும் ஏன் உங்கள் பக்கத்தில் வைத்துக் கொண்டீர்கள்?

"இன்னொன்று, ஆதிசேஷனின் மற்ற தலைகள் எல்லாம் எப்படி பாதுகாப்பாக இம்மலையைச் சுற்றி அமர்ந்திருக்கின்றன? என்பதை தங்கள் திருவாய் மூலம் தெரிந்து கொள்ள விருப்பமாக இருக்கிறது" என்றார் அகத்தியர்.

திருமால் கருணையுடன் பார்த்துவிட்டு "அகஸ்தியருக்கு எல்லாம் தெரியும். இருந்தாலும் ஒன்றும் தெரியாத மாதிரி கேட்கிறார். இந்த பதில் அகஸ்தியருக்கு மட்டுமில்லை, எல்லோருக்கும்தான்" என்று ஆரம்பித்துச் சொல்லலானார்.

"எங்கு ஞானம் இருக்கிறதோ அங்கு பக்தி இருக்கும். பக்தி இருக்கும் இடத்தில் பண்பு, பாசம், இறக்கம், கருணை இவை எல்லாம் குடிவரும். இப்படிப்பட்ட இடத்தில் தான் தெய்வ ஒளி வீசும். திருமலையில் என்னைத் தேடி வருபவர்களுக்கு பக்தி மட்டும் இருந்தால் போதும் என்றில்லாமல், அவர்களுக்கு ஞானமும் வேண்டும்."

"அந்த "ஞானம்" வராஹரிடமிருந்து கிடைக்கட்டும் என்பதற்காகத்தான் வராஹரை என்பக்கம் நிறுத்தி வைத்துக் கொண்டேன்.  வேகத்திற்கு குதிரை ஒரு உதாரணம். சிறுத்தையைக் கூட வேகத்திற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆனால், அது ஒரு கொடிய மிருகம். அதைப் பார்க்க ஆசைப்படலாம். ஆனால், அதனோடு பழக முடியாது. அது அப்படிப்பட்ட குணம் கொண்டது. அதே சமயம் "வராஹர்" குதிரை முகத்தோடு கூடிய அவதாரம். எதையும் வேகமாக புத்தியில் பற்றிக் கொள்ள வேண்டும், என்பதற்காகத்தான், குதிரை முகத்தோடு கூடிய வராஹரை ஞான சொரூபமாக பக்கத்தில் வைத்துக் கொண்டேன்."

"கலி புருஷன் தொந்தரவு  இல்லாமல் வாழ வேண்டும் என்றால், அவர்கள் என்னைத் தஞ்சமடைந்தால் போதும். இதற்கு "பக்தி" மாத்திரம் இருந்தால் போதும். அவர்களை நான் காப்பேன். பக்தியோடு ஞானமும் பெற்றவர்கள் யாராலும், எத்தகைய சூழ்நிலையினாலும் பாதிக்கப்பட மாட்டார்கள். எனவே பக்திக்கும், ஞானத்திற்கும் அடையாளம்தான் இந்த திருமலை தரிசனம்" என்று விளக்கம் கொடுத்தார் வேங்கடவன்.

"இதுவரை தெரிந்து கொண்டதை விட இனிமேல்தான் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்." என்று மேலும் தொடரலானார் பெருமாள்.

"இந்த அற்புதமான இயற்கை எழில் நிறைந்த பூலோகத்தில், திருமலையாக நிற்கின்ற ஆதிசேஷனின் தலைப் பகுதியைத்தான் நான் இருப்பிடமாகக் கொண்டிருக்கிறேன். ஆதிசேஷனின் உடல் அளவு மிகவும் பெரிது. அதனை இங்கேயே சுருட்டிக் கொண்டிருக்க இயலாது. அதன் உடல் தான் இங்கிருந்து காத தூரத்தில் காணப்படும் ஸ்ரீசைலம் என்னும் புனித இடத்தில் காணப்படுகிறது.

முந்தய அவதாரத்தில் ஹிரண்ய கசிபுவைக் கொன்ற "அஹோபிலம்" என்னும் இடத்தைத்தான் ஆதிசேஷனது  வால் பகுதியெனக் கொள்க. யாரொருவர் அஹோபிலம் நோக்கிச் சென்று அங்குள்ள நரசிம்மமூர்த்தியை தரிசனம் செய்தாலும், ஸ்ரீசைலத்திற்குச் சென்று அங்குள்ள இறைவனை மனதாரப் பிரார்த்தனை செய்தாலும், அத்தனையும் எனக்குச் செய்ததாகவே ஏற்றுக் கொண்டு அவர்களின் பிரார்த்தனைகளுக்கு உயிர் கொடுத்துக் காப்பாற்றுவோம். திருமலைக்கு வர இயலாதவர்கள் ஆங்கங்கே தரிசனம் செய்து, பிரார்த்தனை செய்து கொண்டால் அவர்களின் பிரார்த்தனைகளுக்கும் யாம் அருளுவோம்" என்று திருவாய் மலர்ந்து அருளினார்.

"அப்படியென்றால் என் பிரார்த்தனைக்கும் பலன் கிட்டுமா?" என்று திடீரென்று ஒரு குரல் கேட்டது.

யார் இத்தனை தைரியமாக பெருமாள் பேசும் பொழுது மரியாதை இன்றி குறுக்கிட்டது என்று அனைவரும் திரும்பி பார்த்தால்......................

பார்த்தவர்கள் அனைவரும் ஒரு வினாடியில் அங்கு கண்ட காட்சியில், அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

அங்கே ....................  கலிபுருஷன் நின்று கொண்டிருந்தான்.

சித்தன் அருள்....................... தொடரும்!

Thursday 23 July 2015

சித்தன் அருள் - அந்தநாள் இந்த வருடம் - நம்பிமலை, பாபநாசம், திருச்செந்தூர்!

வணக்கம்  அடியவர்களே!

"அந்தநாள் இந்தவருடம்" என்கிற தலைப்பில்,  அகத்தியப் பெருமான் குறிப்பிட்டு அருளிய கோவில்கள்/இடங்களை பற்றி முன்னரே உங்கள் "சித்தன் அருளில்" தெரிவிக்கப்பட்டிருந்தது.

மறுபடியும் ஞாபகப்படுத்தி, விரும்புகிறவர்கள் சென்று இறை/அகத்தியர் அருள் பெற்று வருவதற்காக இந்த மாதத்தில் அந்த முக்கியமான நாளை  பற்றிய தகவலை தருகிறேன்.

நம்பிமலை:- (இறைவனும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருக்க, அகத்தியப் பெருமான் நம்பிமலை பெருமாளுக்கு 200 வருடங்களுக்கு ஒருமுறை செய்கிற பூசையை செய்த நாள்)

26/07/2015, ஞாயிற்று கிழமை, ஆடி மாதம், சுக்லபக்ஷ தசமி திதி, அனுஷம் நட்ச்சத்திரம் அன்று காலை 11 மணி முதல்.

பாபநாசம்:- (நதிகள் எல்லாம் அகத்தியப் பெருமானுடன் இருந்து அன்று தீர்த்தமாடியவர்கள் அனைவருக்கும், அவர்கள் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் புண்ணியம் கொடுத்த நாள். நவக்ரக தம்பதிகள் ஆசிர்வதித்த நாள்)

27/07/2015, திங்கட்கிழமை, ஆடி மாதம், சுக்லபக்ஷ ஏகாதசி திதி (இரவு 9.39 வரை), கேட்டை நட்சத்திரம் (அன்று காலை 11.55 முதல்), சித்தயோகம்.

திருச்செந்தூர்:- (ஓதியப்பர், அகத்தியர், அனுமன் ஆகிய மூவரும் சேர்ந்து இருந்த நாள். அதில், முருகர் அனுமனுக்கு அன்று அனுமனின் நட்சத்திரம் ஆனதால், அவரை ஆரத்தழுவி, நல்வாழ்த்து தெரிவித்த நாள். இன்றும் எல்லா மாதமும் அனுமன், அவரது நட்சத்திரத்தன்று திருசெந்தூரில் அன்று மாலை வந்து முருகரின் அருள் பெற்று செல்கிறாராம்.)

28/07/2015, செவ்வாய்க்கிழமை, ஆடி மாதம், சுக்லபக்ஷ த்வாதசி திதி (அன்று இரவு 09.13 வரை), மூலம் நட்சத்திரம் (அன்று மதியம் 12.23 முதல்), சித்தயோகம்-அமிர்தயோகம்.

எல்லோரும் சென்று அவர் அருள் பெற்று வாருங்கள்.

அக்னிலிங்கம்!

சித்தன் அருள் - 229 - "பெருமாளும் அடியேனும் - 13 - பெருமாள் ஹயக்ரீவரை ஏற்று, கலிபுருஷனை பற்றி விளக்குதல்!


"அதுமட்டுமல்ல, ஹயக்ரீவரே! பிரம்மாவின் கட்டளைப்படி என்னுடன் இதுவரை இருந்த ஞானப் பொக்கிஷத்தை பெரும்பகுதி யாம் உமக்குத் தந்தோம். கல்வியில் மேனிலை பெறுவதற்கும், வாக்கில் உயர்நிலை பெறுவதற்கும், சகலவிதமான கலைகளிலும் சிறந்து ஓங்குவதற்கும் இனி என்னையே நம்பி இருக்க வேண்டியதில்லை."

இந்தக் கோனேரி மலையில் சிறு கோயிலைக் கொண்டு திருமால் முன்னிலையில் பக்தர்களுக்கு காட்சி தரும் உங்களை துதி செய்தால் போதும். தாங்களே ஞானத்திற்கு வழிகாட்டியாகவும் விளங்கப் போவதால், தங்கள் அருட்பார்வை பட்டால் போதும், அத்தனை பேருக்கும் ஞானபலம், புத்திபலம், வைரக்கியபலம், ஆரோக்கியபலம் ஆகியயாவும் கிட்டும்.  இனி தாங்கள் வேறு நான் வேறு அல்ல. சமபலம்" என்று சொன்னதைக் கேட்டு அத்தனை பேரும் மெய்சிலிர்த்து வராஹமித்ரரை வணங்கினார்கள்.

"முரட்டுத்தனம் கொண்டு, ஞானமின்மையால், சொல்வார் சொல்லைக்கேட்டு எந்தவித ஒழுக்கக் கட்டுப்பாடுமின்றி, சுதந்திரமாக வலம் வந்த என்னை திருமலை வேங்கடவனுக்கு இணையாக நிறுத்தி என் அறியாமையைப் போக்கிய கலைவாணிக்கும், இதற்கெல்லாம் மூலாதாரமாக இருக்கும் பிரம்ம தேவருக்கும் என் நன்றி" என்று சொன்ன வராஹர், "நான் திருமலையில் குடிகொண்டிருக்கும் வேங்கடவனைத் தரிசிக்க விரும்புகிறேன். வேங்கடவன்  கருணை காட்டுவாரா?" என்று பவ்யமாகக் கேட்டார்.

"நிச்சயமாக கருணை கொண்டு தரிசனம் கொடுப்பார்!"

"எனக்கு வேங்கடவனைத் தரிசிக்க ஆசையிருந்தாலும், சில நாழிகைக்கு முன்பு நான் செய்த தவறு என்னைக் கூச்சப்பட வைக்கிறது தேவி" என்றார் ஹயக்ரீவர்.

"வராஹரே! தாங்கள் தெய்வ சொரூபம் மிக்கவர். முன் ஜென்ம சாபத்தால் கோனேரிக் காட்டில் ஹயக்ரீவராக உலா வந்தீர்கள். வேங்கடவனின் கருணையால் அச்சாபம் நீங்கியது. திருமால் கருணை பெற்று இருப்பவர். அவரது அருள் பரிபூரணமாக தங்களுக்கு கிட்டும். வாருங்கள், நானே தங்களை அழைத்துக் கொண்டு அவரிடம் செல்கிறேன்" என்று கூறிய கலைவாணி பெருமாளை காணப் புறப்பட்டாள்.

"என் பக்கத்தில் எப்பொழுதும் இருந்து, என்னை நாடிவரும் பக்தர்களுக்கு நீயும் ஞானத்தையும், பக்தியையும் அளித்து உய்விக்க வேண்டும்" என்று வேங்கடவன், வராஹமித்திறரை ஆலிங்கனம் செய்து, அன்பாக உத்தரவிட்டார்.

இதைக் கேட்டு வராஹமித்ரர் புளகாங்கிதம் அடைந்தார்!

"நீயும் ஒரு பெருமாள் அவதாரம்தான். என்னைக் காப்பது என்பது என் பக்தர்களைக் காப்பது என்பது போலாகும். உனக்கு இங்கு மட்டும்தான் இடம், என்பதில்லை. எந்தெந்த பக்தர்கள் உன்னைத் தொழுது, கல்வியிலும், ஞானத்திலும், கலைத்துறையிலும் மேன்மை அடைகிறார்களோ, அங்கெல்லாம் கோயில் கொண்டு அருள் பார்வையை வீசும் பாக்கியம் உனக்குண்டு" என்று வேங்கடவன் மீண்டும் தொடர்ந்து சொன்னார்.

"என்னைப் போல் பல அவதாரங்கள் எடுக்க வேண்டும் என்ற அவசியம் உனக்கில்லை. கலிபுருஷன் தான் இன்று பூலோகத்தில் நமக்கு எதிரி. அவன் பல லட்சம் யானை பலம் கொண்டவன், அவன் யாரை, எப்படி, எதனால் மயக்கி பூலோக மக்களின் புத்தியை கெடுப்பான் என்று சொல்ல முடியாது. இதனால் பூலோகத்தில் அத்தனை பேரும் மயங்கி, அவன் பின்னால் போவதால், எத்தனையோ பேரழிவுகள் ஏற்படப் போகிறது. அதனை நானும், நீயும் இங்கிருக்கும் கலைவாணி, சித்தர் பெருமான் அகத்தியர் அத்தனை பேரும் ஒன்றாகச் சேர்ந்து தடுக்க வேண்டும்" என்றார் வேங்கடவன் திருவாய் மலர்ந்து.

"தாங்கள், இதற்கு முன்பு எத்தனையோ அவதாரங்கள் எடுத்து, அத்தனை அரக்கர்களையும் கொன்று குவித்திருக்கிறீர்கள். தாங்கள் நினைத்தால் அந்தக் கலிபுருஷனை இப்போதே கொன்று, மக்களுக்கு க்ஷேமத்தை தரலாமே" என்றார் ஹயக்ரீவர்.

"கலி புருஷனை பற்றி, கலைவாணி அறிவாள். அவனை வெல்வது என்பது அத்தனை எளிதல்ல. இல்லையா கலைவாணி?" என்றார் திருமால்.

"ஏன்? இது வராஹமித்ரருக்கே தெரியும்.  இவர் ஹயக்ரீவராக சில நாழிகைக்கு முன்பு இருந்த பொழுது, கலிபுருஷனால் ஏவப்பட்டு, நான்குகால் பாய்ச்சலில் தங்களையே தாக்க முற்பட்டாரே, இது ஒன்றே போதுமே, கலி புருஷன் எப்படிப் பட்டவன் என்று தெரிந்து கொள்ள!" என்று நகைச்சுவையாக எடுத்துக் காட்டினாள் கலைவாணி.

"சரி! சரி! போனது போகட்டும். இனிமேல் நமக்குத் தொழில் கலிபுருஷனிடமிருந்து பூலோக ஜனங்களைக் காப்பதுதான். அதை இப்போது முதல் வராஹரும் செய்வார். நானும் இந்த மலையில் கல் அவதாரமாக இருந்து செய்வேன்" என்ற வேங்கடவனிடம் அகஸ்தியர் பவ்யமாக ஒரு கேள்வி கேட்டார்.

"பெருமாளே! இந்த அவதாரம் எத்தனை காலம் இருக்கும் என்பதை அடியேன் அறியலாமா?"

"கலியுகம் இப்போதுதானே ஆரம்பித்திருக்கிறது? இதுவரை தாங்கள் கண்டிராத சம்பவங்கள் இனிமேல்தான் நடக்கப் போகிறது. அதெல்லாம் முடியப் பல நூறு வருடங்கள் ஆகும்" என்றார் பெருமாள்.

"பிறகு?" என்றார் அகத்தியர்.

"கலிபுருஷனால் பொதுமக்கள் கெட்டு இறைநிலையை மறந்து அதர்மங்களும் கொடிகட்டிப் பறக்கும். தெய்வ நம்பிக்கை குறையும். நடக்கக்கூடாத சம்பவங்கள் தினமும் நடக்கும். புத்திசாலிகளும், ஹயக்ரீவரால், வராஹமித்ரரால் ஞானம் பெற்றவர்களும் இங்கு வந்து சரண் அடைவார்கள். மற்றவர்கள் துன்பப்பட்டு கதறும்போது, இந்த வேங்கடவன் கலிபுருஷனைக் கொன்று குவிப்பேன்." என்றார் பெருமாள்.

"பிறகு பூலோகம் சுவர்க்க பூமி ஆகிவிடும் அல்லவா?" என்றார் அகத்தியர்.

"இல்லை!" என்றார் பெருமாள்.

அகத்தியப் பெருமானே ஆச்சரியத்தில் உறைந்து போனார்.

சித்தன் அருள்................ தொடரும்!

Thursday 16 July 2015

சித்தன் அருள் - 228 - "பெருமாளும் அடியேனும் - 12 - ஹயக்ரீவர் தெளிவு பெறுதல்!


ஹயக்ரீவர் வரும் வேகத்தை அறிந்து, சட்டென்று பூமிக்குள் தன்னை இழுத்துக் கொண்டார், பெருமாள்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத ஹயக்ரீவர், எதிர்பாராத விதமாக மலை உச்சியிலிருந்து தலைக்குப்புற கோனேரி நதிப்ரவாகத்தில் விழுந்து கொண்டிருக்கும் பொழுதுதான், சில நாழிகை முன்பு கலைவாணி சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.

"எப்பொழுதுதாவது என் உதவி தேவைப்பட்டால் வராஹன் அழைக்கிறேன் என்று மூன்று முறை அழைத்தால் ஓடி வந்து உதவுகிறேன்" என்று சரஸ்வதி தேவி சொன்னது ஹயக்ரீவருக்கு நினைவுக்கு வரவே, "வராஹன் அழைக்கிறேன்! தேவி சரஸ்வதியே வருக" என்று மூன்று முறை அழைத்தார்.

அடுத்த நாழிகைக்குள்,

கோனேரிக்கரையின் நதியில் விழுந்து கால்கள் ஒடிந்து விழவேண்டிய ஹயக்ரீவரை சரஸ்வதிதேவி தாங்கிக் கொண்டாள். ஹயக்ரீவர் பெரும் ஆபத்திலிருந்து தப்பினார்.

நன்றாக வளர்ந்திருந்த பசும்புல் செடியில் ஹயக்ரீவர் மயக்க நிலையில் கண் துயின்று கொண்டிருக்க, அகஸ்தியர் வெண்சாமரத்தால் அவருக்கு வீச, சரஸ்வதிதேவி கருணை பொங்கும் உள்ளத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள். கலிபுருஷன், அங்கே காணப்படவில்லை.

சில நாழிகை கழிந்தது.

பட்சிகள் சப்தத்தினாலும் அருகிலிருக்கும் பாபநாசம் மலையிலிருந்து தெள்ளிய நீர் வீழ்ச்சி அமைதியாக பூமாதேவியின் பாதங்களை நோக்கி மகிழ்ச்சியோடு நீர்த்திவலைகளை அங்குமிங்கும் தெளித்துக் கொண்டு சென்றதால், அவற்றின் குளிர்ச்சி ஹயக்ரீவரின் முகத்தில் பட்டுச் சென்றது.

மயங்கி கிடந்த ஹயக்ரீவர் மெல்ல கண் திறந்தார்.

எதிரே, கருணை பொங்கும் குரு பகவான் ஸ்தானத்தில் அன்னை சரஸ்வதி தேவி அமர்ந்திருக்க, அகஸ்தியர் சாமரம் வீசுவதையும், சித்தர்கள், முனிவர்கள், ராஜ ரிஷிகள் சுற்றிலும் அமர்ந்து மந்திரங்களை மெல்லிய குரலில் தனக்காக ஜெபிப்பதையும் கேட்டு, துள்ளி எழுந்தார்.

"ஹயக்ரீவரே அவசரப்படாதீர்கள். அமைதியாக அமருங்கள். தங்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை" என்றாள் கலைவாணி.

ஹயக்ரீவருக்கு இப்பொழுதுதான் நடந்தது எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக ஞாபகத்திற்கு வந்தது.

கலிபுருஷன் பேச்சைக் கேட்டிருந்தால் தன் கதி என்ன? என்று யோசித்துப் பார்த்த ஹயக்ரீவருக்கு, அன்னை கலைவாணி மீதும், அகஸ்தியப் பெருமான் மீதும் அளவற்ற மரியாதை ஏற்பட்டது.

கலைவாணி தேவியிடம் கை கூப்பி நன்றி சொன்னார்.

"தாயே! எனக்கு அசுரபலம் வேகம் இருந்தாலும், ஆழ்ந்த கல்வி ஞானம் இல்லை. இருந்திருந்தால், கலிபுருஷனின் பேச்சைக் கேட்டு பாதாளத்தில் விழுந்திருக்கமாட்டேன். நான் தங்களிடம் தன்யனானேன். எனக்கு "ஞானத்தை" சொல்லிக் கொடுங்கள். அன்னை சரஸ்வதி தேவியே" என்றார் ஹயக்ரீவர்.

"ஹயக்ரீவரே! பிரம்மா சொன்னபடியேதான் எல்லாமும் நடக்கின்றன. தங்களுக்கு முனிவர்களால் முன் ஜென்மத்தில் கொடுத்த சாபம் இன்று முதல் விலகிவிட்டது. இனி தாங்கள் ஹயக்ரீவராக காட்ச்சியளித்தாலும், திருமலையில் இனி வராஹமித்ரர் என்ற திருநாமத்தோடு திருமலை வாசலுக்கு முன்பு அமர்ந்து வேங்கடவனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கும் அனுக்கிரகம் செய்வீர்கள்" என்றாள் கலைவாணி.

"ஒரு சின்ன விண்ணப்பம். எனக்கு எப்பொழுது ஞானப்பாடம் சொல்லித்தரப் போகிறீர்கள்?" என்றார் ஹயக்ரீவர்.

"வராஹ மித்ரரே! உங்களுக்கு இப்பொழுதே இந்த இடத்திலேயே அகஸ்தியர் முதலாக பதினெட்டு வகையான சித்தர்கள் முன்னிலையில் விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் பட்சிகளின் மங்களமான சப்தங்களுக்கு நடுவில் திருமலை வாசனின் அருட்கடாட்சத்தோடு புனிதமிகு கங்கை நதி நீரைத் தெளித்து "ஞானத்தை" தருகிறேன், ஏற்பாயாக!" என்றாள்.

அடுத்த வினாடியே விண்ணுலகத் தேவர்கள் மலர்மாலை தூவ ரிஷிகளும் முனிவர்களும் வேதகோஷத்தோடு வாழ்த்த சரஸ்வதிதேவி தன் அருட்கடாச்சத்தை ஹயக்ரீவருக்கு அளித்தாள்.

"வராஹமித்ரரே! இன்று முதல், இந்த திருமலையில் அவதாரம் எடுத்திருக்கும் வேங்கடவனைத் தரிசிக்க வரும் பக்தர்கள், ரிஷிகள், சித்தர்கள், ஞானிகள் அத்தனை பேரும் முதலில் தங்களை தரிசித்து அனுமதி பெற்ற பிறகுதான் வேங்கடவனைத் தரிசிப்பார்கள். தங்களை தரிசிக்காமல், வேங்கடவனைத் தரிசித்தால் அவர்களுக்கு எந்த புண்ணியமும் கிடையாது. இது திருமாலின் கட்டளை!" என்றார் அகத்தியர்.

"எதற்காக இப்படி ஒரு கட்டாயம்?" என்று கேள்வியை எழுப்பினார் ஹயக்ரீவர்.

"அதற்கு காரணம் உண்டு ஹயக்ரீவரே! என்ன இருந்தாலும் இந்த கோனேரிக்கரை, கானகம் எல்லாம் உங்கள் ராஜ்ஜியம் தானே? உங்களிடம் அனுமதி கேட்காமல் திருமால் இங்கு அவதாரம் எடுத்து விட்டார். ஒரு வேளை, பிற்காலத்தில் கலிபுருஷன் மறுபடியும் வந்து உங்கள் மனத்தைக் கெடுக்கலாம். நீங்களும் பெருமாளோடு சண்டைக்கும் கிளம்பலாம் அல்லவா. அதற்காகத்தான் இந்த முன்னேற்ப்பாடு" என்று சொல்லி கலைவாணி சிரித்தாள்.

"போங்கள் சரஸ்வதிதேவி, எனக்குத்தான் ஞானம் வந்துவிட்டதே. இனிமேல் கலிபுருஷன் மட்டுமல்ல, வேறு யார் வந்தாலும் என் புத்தியில் சஞ்சலம் ஏற்படாது" என்றார் ஹயக்ரீவரான வராஹமித்ரர்.

இப்படி அவர்கள் சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, மிகப் பயங்கரமான சப்தம் ஒன்று அங்கே கேட்டது.

எல்லோரும் திரும்பிப் பார்த்த பொழுது....................

முரட்டுத்தனமும் கூர்மையான கொம்புகளையும் கொண்டு, ஆக்ரோஷமாக நான்கு எருதுகள், நின்று கொண்டிருந்தன.

அவை இருக்கும் நிலையைப் பார்த்தால், எதிரில் இருக்கும் அத்தனை பேரையும் துவம்சம் பண்ணிவிடும் போலிருந்தது.

யாரால் இந்த எருதுகள் இங்கு அனுப்பப்பட்டன? எதற்காக இத்தனை ஆக்ரோஷத்தோடு பழிவாங்கும் எண்ணத்தோடு வேகமாக சப்தமிட்டபடி வந்திருக்கின்றன, என்பதை தெரிந்து கொள்ள சில வினாடிகள் அனைவருக்கும் தேவைப்பட்டது.

கலைவாணி, தன் கையைத் தூக்கிக் காட்ட, அடுத்த வினாடி அந்த நான்கு எருதுகளும் சப்தநாடியும் அடங்கியது போல் அடங்கி நின்றன.

ஹயக்ரீவர் இதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, கலைவாணியைப் பார்த்தார்.

"ஹயக்ரீவரே! இது கலிபுருஷனின் அடுத்த விளையாடல். உங்களைக் கொல்லக் கிளப்பிவிட்டிருக்கிறான். இனி அவனால் உங்கள் பக்கம் நெருங்க முடியாது என்பதை அவன் நன்கு அறிவான். இந்த நான்கு எருதுகளும் பொய்யானவை. நான்கு துர்குணங்கள் கொண்டவை. இப்படிப்பட்ட குணங்களைக் கொண்ட மனிதர்களும் இங்கு இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நீங்கள் தான் ஞானத்தைப் புகுத்தவேண்டும்." என்றாள் கலைவாணி.

சித்தன் அருள்.......................... தொடரும்!