​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 26 February 2015

சித்தன் அருள் - 212 - நவக்ரகங்கள் - சுக்ரன்!


ப்ருகு மகரிஷிக்கும், புலோமா என்பவளுக்கும் பிறந்தவர் சுக்கிரன். சகல வித்தைகளிலும் கரை கண்டவர். சுக்ர நீதி என்ற ராஜதந்திர நூலை எழுதியவர்.

சுக்ரன் அழகு தெய்வம் என்று சொல்லப்படுபவர். இவர் அசுரர்களுக்கு தலைவனாக விளங்கினார்.

இளம் வயதில்  குபேரனது உடலில் புகுந்து அவனது பொருள்களையெல்லாம் கவர்ந்தவர். குபேரன் சிவனிடம் முறையிட்டார். சிவன் சூலத்தை எடுத்து சுக்கிரன நோக்கி பிரயோகித்தார். இதைக்கண்டு சுக்கிரன் சூலத்தில் நுனியில் தங்கி, உயிர் பிழைத்தார்.

திருமால், எப்பொழுதும் தேவர்களுக்கு உதவி செய்வதைக் கண்டு அசுரர்கள் வருந்தினார்கள். அவர்களைச் சமாதானப்படுத்தி, கொஞ்சம் பொறுங்கள், நான் சிவபெருமானிடம் உபதேசம் பெற்று வந்து, உங்களைக் காப்பாற்றுகிறேன். அதுவரை தேவர்களுடன் சண்டைக்குப் போகாதீர்கள்" என்று வாக்குறுதி கொடுத்தார்.

சுக்கிரன், நேராக காசி நகரம் சென்று,  அங்கே லிங்கம் ஒன்றை நிறுவி  பூசித்தான். இறைவன் காட்சியைக் கொடுக்கவில்லை. சுக்கிரன் மனவருத்தமடைந்து மீண்டும் புலன்களை அடக்கித் தவம் புரியத் தொடங்கினான்.

ஆயிரம் ஆண்டுகள் தவம்  செய்வதை அறிந்த சிவபெருமான், சுக்கிரன் முன்பு தோன்றி, "உன் தவம் மிகவும் வலிமைமிக்கது.  அதனால் உள்ளம் மகிழ்ந்தோம்" என்று சொல்லி இதுவரை யாருக்கும் "கிடைக்காத "மிருத சஞ்சீவினி" என்ற மந்திரத்தை உபதேசம்  செய்தார். மிருத சஞ்சீவனி மந்திரத்தால், இறந்தவர்கள் அத்தனை பேர்களும் மீண்டும் உயிர் பெற்று எழுவார்கள்.

ஒருமுறை......

அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் ஒரு பெரிய போட்டி ஏற்ப்பட்டது.

மூன்று உலகங்களையும் தாங்கள்தான் ஆட்சி புரிய வேண்டும் என்று தேவர்களும், அசுரர்களும் விரும்பினார்கள். இதனால் பகை வளர்ந்தது.

தேவர்கள், தங்கள் குல குருவான பிரகஸ்பதியைக் கொண்டு, வெற்றி பெறுவதற்காக யாகங்கள் செய்யத் தொடங்கினார்கள்.

அசுரர்கள், சுக்கிரனை தங்கள் குருவாக ஏற்று தங்களை வலுப்படுத்திக் கொண்டார்கள். இதனால் அமரர்களாகிய தேவர்கள், சுக்கிரன் மீது கோபம் கொண்டார்கள்.

திடீரென்று ஒருநாள்,

அவர்கள் இவர்களுக்கும் போர் மூண்டது.  அசுரர்கள் நிறைய பேர்கள் போரில் மாண்டனர். சுக்கிரனோ, தான் பெற்ற மிருத சஞ்சீவனி மந்திரத்தால், இறந்த அசுரர்களை உயிர்பித்துக் கொண்டிருந்தார்.

தேவர்கள், இதைக் கண்டு கலங்கிப் போனார்கள்.

தேவர்களுக்கு குருவாக இருக்கும் ப்ரகஸ்பதிக்கு, மிருத சஞ்சீவனி மந்திரம் தெரியாது. அதனால் தேவர்கள் வீழ்ச்சியடைந்து கொண்டே இருந்தனர்.

பிரகஸ்பதியின்  தபஸ், சுக்கிரனுக்கு முன்பு ஒன்றும் பலன் தரவில்லை. இதனால், தேவர்கள், போரை இடையில் நிறுத்திவிட்டு, ஓடினார்கள்.

இதற்கிடையில்,

"அந்தகாசுரன்" என்பவன், தனியாக வந்து, தேவர்களோடு சண்டையிட்டான். தேவர்கள், அவனை விரட்டி அடித்தனர். உயிருக்கு பயந்து, அந்தகாசுரன், சுக்கிரனிடம் வந்து "பெருமானே, தாங்கள் வந்து என்னைக் காப்பாற்றுங்கள், அமரர்கள், வெகுவேகமாக நம் அசுர குலத்தை நசுக்க ஓடி வருகிறார்கள்" என்று அலறினான்.

அந்தகாசுரன் பேச்சை நம்பி, சுக்கிரன் கடும் கோபம் கொண்டு, அசுரர்களை அழைத்து, "தேவர்களோடு போர் புரியுங்கள்! உங்களை காப்பாற்றுவது என் பொறுப்பு" என்று தூண்டிவிட்டார். இந்தமுறை நடந்த கடுமையான போரில் தேவர்கள்  தோற்றுக்கொண்டிருக்க, கொல்லப்பட்ட அசுரர்கள், உயிர் பிழைத்துக் கொண்டே இருந்தார்கள்.

நிலைமையை ஞானக்கண்ணால் அறிந்தார், நந்திதேவர். சிவபெருமானிடம் சென்றார். "எம்பெருமானே தேவரீர் தாங்கள் அருளிய மந்திரத்தால், சுக்கிரன் இறந்துபோன அசுரர்களை உயிர்பித்துக் கொண்டிருக்கிறான். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சண்டை நடந்து கொண்டே இருக்கிறது. தேவர்களை காக்க வேண்டும்" என்று பிரார்த்தனை செய்தார்.

சிவபெருமான், நந்தி தேவரின் வேண்டுகோளை ஏற்றார்.  சுக்கிரனை தன்னிடம் வரச் சொன்னார். சுக்கிரன் வந்ததும் அவனை விழுங்கி, தன் திரு வயிற்றிலே இருக்கும்படி செய்தார்.

இதற்குப் பிறகு, அசுரபலம் குறைந்தது.  தேவர்கள் வெற்றி பெற்றனர். ஆனால் சிவபெருமான் வயிற்றில் இருந்த சுக்கிரன், ஆயிரம் ஆண்டு யோகத்திலே இருந்தான். சுக்கிரனது யோக நிலை சிவபெருமானை மனமிரங்கச் செய்தது.

சுக்கிரனை தன் வயிற்றிலிருந்து வெளியே கொண்டு வந்தார். இதனால் சுக்கிரனுக்கு, சிவகுமாரன் என்ற பெயரும் விளங்கிற்று.

சிவபெருமான் வயிற்றிலிருந்து வெளியே வந்த சுக்கிரனைக் கண்டு அசுரர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதே சமயம், தேவர்களுக்கு வயிற்றைக் கலக்கியது.

பிரகஸ்பதியும், இதுபற்றி சிலகாலம் சிந்தனை பண்ணினார். பின் ஒருநாள், பிரகஸ்பதி தன் மகன் "கசனை" அணுகி "தேவர்குலம் செழிக்க வேண்டுமானால் நீ ஒரு உபாயம் செய்ய வேண்டும். நீ யார் என்பது தெரியாமல் சுக்கிரனிடம் சென்று, அவனுடைய திருமகளாகிய தேவயானியின் உள்ளம் உவக்கும் வண்ணம் நடந்துகொள். சுக்கிரன் மனமிரங்கி, மிருத சஞ்சீவனி மந்திரத்தை உனக்கு  அருள்வான்" என்று ஆசையைத் தூண்டி விட்டார்.

கசன், சுக்கிரனிடம் மாணவனாக சேர்ந்தான். நாளடைவில் தேவயானியின் உள்ளத்தையும் கவர்ந்தான். அவர்கள் இன்பமுற்று இருக்கும் பொழுது, அசுரர்களுக்கு "கசன்" யார் என்று தெரிந்துவிட்டது.

சுக்கிரனுக்கு தெரியாமலேயே கசனை அசுரர்கள் கொன்றனர்.

செய்தி அறிந்த சுக்கிரன் தன் மகள் தேவயானிக்காக இறந்து போன கசனை, மந்திரத்தால் உயிர் எழுப்பினான்.

சுக்கிரன், இப்படி இருமுறை, கசனை உயிர்ப்பித்தான். மூன்றாவது முறையாகவும் அசுரர்கள் கசனை கொல்ல  முயற்சித்தார்கள். சுக்ராச்சாரியாருக்கு மதுவருந்தும் பழக்கம் உண்டு.

இதை வைத்து அசுரர்கள் ஒரு திட்டம் தீட்டி கசனைக் கொன்று, கொளுத்தி அவனது சாம்பலை மதுவோடு  கலந்து சுக்கிராச்சாரியாருக்குக் கொடுத்தார்கள்.

சுக்ராச்சாரியார் அதைக் குடித்துவிட்டார்.

கசனைக் காணாமல் தேவயானி தன் தந்தையிடம் கலங்கவே, சுக்ராச்சாரியார் மந்திரத்தைச் சொன்னார்.

இதைக் கேட்டதும் அவர் வயிற்ருக்கு உள்ளிருந்த கசன் உயிர் பெற்றான். கசனை தன் வயிற்றிலிருந்து வெளியே கொண்டு வர வேண்டுமென்றால், தான் மாளவேண்டும் என்பதை அறிந்த சுக்கிரன் வயிற்றுக்குள் இருந்த கசனுக்கு, அங்கிருந்தபடியே கற்றுக் கொள்ளும்படி சஞ்சீவனி மந்திரத்தை உபதேசித்தார்.

அதை பெற்ற கசன், சுக்கிரனது வயிற்றை பிளந்து கொண்டு வெளியே வந்தான். சுக்கிரன் இறந்து போனார்.

வெளியே வந்த கசன், தான் பெற்ற மந்திர பலத்தால் சுக்கிரனை எழுப்பினான். சுக்கிரனும் உயிர் பிழைத்தார்.

இதற்குப் பிறகு கசன்,  தன தந்தை பிரகஸ்பதியை அடைந்தான். "மிருத சஞ்சீவனி" மந்திரத்தைக் கற்று வந்த தன் மகனை ஆரத்தழுவி வரவேற்றார் குரு  பகவான். கசனது முயற்சியால்  தேவர் குலம், மரணத்திலிருந்து தப்பியது....

மகாபாரத கதைகளும், அபிதான சிந்தாமணியும்.

வாமன அவதாரத்தின் போது, குள்ள பிராமணனாக வந்த திருமாலுக்கு மூன்றடி மண் தானம் செய்யாதே என்று சுக்கிரன் தடுத்தார். மகாபலி இதை அலட்ச்சியம் செய்து கேட்காது  போகவே, வண்டு ரூபம்  எடுத்து, தானம் செய்ய விழும் தண்ணீர் துவாரத்தை அடைத்தார். வாமனர் தர்ப்பையால் கிண்டியின் துவாரத்தை குத்தவே, சுக்கிரனுக்கு கண் போய்விட்டது. மீண்டும் தவமிருந்து சிவபெருமான் மூலம் இழந்த கண்ணைப் பெற்றார்.

ஜோதிடத்தில் சுக்கிரனை பற்றி கூறும் பொழுது, அனைத்து இன்பங்களுக்கும் வித்தானவன், அழகன், மணம், மங்கை, அன்பு, ஆசை எல்லாமே இவனே, என்கிறது.

அதிர்ஷ்டம் என்பதும், காமனுக்கு அரண் என்பதும் இவனே.

வியாபாரத் தேவதை. வித்தைகளில் உலகத்தின் பார்வையை கவர்கின்றவன். காதல், கூடல், பதவி, வசதியான வாழ்க்கை, சௌபாக்கியம் தருவதும் சுக்கிரன்தான். உடல் வீர்யம், புளிப்பு சுவை பிரியன். ராஜஸ குணத்தோன், வெள்ளிக்கு அதிபதி. பஞ்ச பூதங்களில் நீர் இவன்.  அந்தண குலத்தோன். வைரம் இவனுக்குரியது. பெண் குணம் கொண்டவன்.

ரிஷபம், துலாம் சொந்த வீடு.
கன்னி நீச வீடு 
மீனம் உச்ச வீடு 
பரணி, பூரம், பூராடம் என்ற  நட்சத்திரம் இவனுக்கு சொந்தம்.

சனி, புதன் நண்பர்கள் 
குரு, செவ்வாய் சமமானவர்கள் 
மற்றவர்கள் பகைவர்கள் 
ஜாதகத்தில் களத்திரகாரனாக இருந்து காம சுகத்தை தருபவன்.
சுக்கிரனின் யோக பலம் ஒருவருக்கு எப்பொழுது வந்தாலும், சந்தோஷத்தையும், சௌபாக்கியத்தையும், தானத்தையும், தனத்தையும் அள்ளிக் கொடுக்கும்.

சுக்கிரனுக்கு நான்கு குமாரர்கள். தேவயானி, கரசை என்ற பெண்கள். அசுரர்களின் தலைவராக இன்றைக்கும் இருந்து வருகிறார்.

சுக்கிரனுக்கு கரங்கள், நான்கு. இவரது தேரை, பத்து குதிரைகள் இழுப்பதாகவும் சொல்லப்படுகிறது.

பஞ்ச கோணமான பீடத்தை உடையவர். வெண்சந்தானம், வெண்மலர், வெண்மணிமாலை, வெள்ளாடை, வெண்குடை, வெண்ணிறக்கொடி உடையவர். பத்மாசனம் கொண்டு கிழக்கு நோக்கி அமர்ந்திருப்பவன்.

சுக்கிரனுடைய மந்திரத்திற்கு உரிய முனிவர் பாரத்துவாஜர். சந்தம். த்ரிஷ்டும் சுக்கிரனுக்கு அதிதேவதை. இந்த்ராணி ப்ரத்யாதி தேவதை. 

சுக்கிரன் அக்னி திக்குக்கு அதிபதி. கிழக்கு திசைக்கும் தலைவன். கருட வாகனமும் உண்டு.

களத்திர காரகன். மழை பெய்ய உதவுபவன். இனிப்பு சுவை சுக்கிரனுக்கு உகந்தது.

அசுர குருவாக  விளங்கும் சுக்கிராச்சாரியார் தமிழ்நாட்டில் பூசித்த ஸ்தலங்கள் உண்டு.  திருநாவலூர், ஸ்ரீரங்கம்.

திருநாவலூர், பண்ருட்டி ரயில் நிலையத்திலிருந்து பதினைந்து  கல் தொலைவில் உள்ளது. ஸ்ரீரங்கம்  வைணவத்தலம் திருச்சியில் இருக்கிறது. இந்தக் கோவிலில் ஏழு மதில்கள் உண்டு. அந்த ஏழு மதில்களும் பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மஹர்லோகம், ஜநலோகம், தபோலோகம், சத்யலோகம் என்று பெயர் கொண்டு வழங்கப் படுகிறது. 

மற்றொரு சிறப்பு, இதில் ஒன்பது  புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. சந்திர புஷ்கரணி, நாவல் தீர்த்தம், வில்வ தீர்த்தம், அசுர தீர்த்தம், புன்னை தீர்த்தம், மகிழ தீர்த்தம், பரசு தீர்த்தம், கடம்ப தீர்த்தம், மாதீர்த்தம் என்பவையே அது.

"அஸ்வ த்வஜாய வித்மஹே தனுர் ஹஸ்தாய தீமஹி 
தந்நோ சுக்ர ப்ரசோதயாத்"

என்பது சுக்கிரனின் காயத்திரி மந்திரம்.

ஜோதிட சாஸ்த்திரத்தில் எண் "6"ஐ சுக்கிரனுக்கு கொடுத்துள்ளார்கள்.

திருமணம் ஆகவேண்டும் என்பவர்கள், சௌபாக்கியம் , குழந்தை பாக்கியம் எற்படவில்லையே என்று கலங்குபவர்கள் சௌந்தர்ய லஹரியில் உள்ள கீழ் கண்ட ஸ்லோகத்தை தினமும் சொல்லி வரலாம்.

"சதுர்ப்பி ஸ்ரீ கண்ட்டை சிவயுவதிபி பஞ்சப்ரபி:
ப்ரபிந்தாபி: சம்போர் நவபிரபி: மூலப்ரக்ருதிபீ:
த்ரயஸ் சத்வாரிம் சத் வசுதல காலாஸ்ர: த்ரிவலய 
திரிரேகாபி: ஸார்த்தம் தவ ஸரண கோணா பரிணதா!

வெள்ளிக்கிழமை அன்று, இந்த ஸ்லோகத்தை எத்தனை தடவை சொல்கிறோமோ, அத்தனைக்கு  அத்தனை நற்பலன் அடையலாம்.

சித்தன் அருள்......... தொடரும்! 

Saturday 14 February 2015

முருகர் அருளிய அமுது - 2


மிக மிக அருமையான அபிஷேகம், தீபாராதனை கண்டு வெளியே வந்தோம்.  அபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்தவர் என்னிடம் வந்து

"நீங்க ஜோசியரா?" என்றார்.

நான் சிரித்துக் கொண்டே "இல்லை" என்றேன்.

"அப்ப உபாசகரா?" என்றார்.

"தெரியவில்லை. பூசை செய்வேன்" என்று சுருக்கமாக பதிலளித்தேன்.

"உங்க மாலைல இருக்கிற லிங்கம் ரசமணியா?" என்று தொட்டு பார்க்க கையை நீட்டினார்.

நான் எனது வலது கையை மார்புக்கு நேராக வைத்து, தடுத்து "இல்லை" என்றேன்.

என் செயலை அவர் எதிர் பார்க்கவில்லை போலும். சற்று அதிர்ந்துதான் போனார்.

நாங்கள் கோவில் வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

"சரி கிளம்பலாம், எல்லாம் நல்லபடியாக முருகர் நடத்தி கொடுத்துவிட்டாரே" என்று நினைத்து அவருக்கு நன்றி கூறி விடை பெற முயற்சித்தவுடன், ஏற்பாடு செய்தவர் வேகமாக எங்களிடம் வந்தார்.

"ஒரு நிமிஷம்!" என்றார்.

"சொல்லுங்கோ!" என்றேன்.

"நீங்க எல்லோரும் அன்னதானத்தில் அமர்ந்து சாப்பிடணுமே!" என்றார்.

நான் சிரித்துக் கொண்டே " என்ன சொல்லறீங்க! இப்ப மணி 7தான் ஆகியுள்ளது. இப்பப் போய் எப்படி உணவருந்துவது? வேறு யாரையாவது தேடுங்கள்! கிடைப்பார்கள். அவர்களுக்கு கொடுங்கள்! அழைத்ததற்கு மிக்க நன்றி" என்றேன்.

"இல்லை! வேறு யாரையும் கூப்பிட முடியாது! உங்கள மாதிரி ஆட்கள் தான் வேண்டும்" என்றார்.

நான் அவரை கூர்ந்து கவனித்தேன். பிறகு கேட்டேன் "என்ன சொல்லறீங்க? எங்களை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? நீங்க நினைக்கிற எந்த மாதிரியான ஆட்களும் இல்லை நாங்கள் அனைவரும்" என்றேன்.

"அதில்லை. ஒரு விஷயத்தை சொல்கிறேன். அப்பொழுது புரியும்" என்றார்.

"சரி! சொல்லுங்க!" என்று காத்திருந்தேன்.

"இந்த கோவில்ல ஒரு முறை இருக்கிறது. அதாவது, நான்கு வேதங்களுக்கு சாப்பாடு போடுவதாக வேண்டிக் கொண்டு, நான்கு ஆண்களுக்கு சாப்பாடு போட்டுவிட்டுத்தான், முருகருக்கு தினமும் காலையில் நிவேதனம் போடலாம்! இது அவரே வகுத்துக் கொடுத்த விதி. இன்று வேறு யாரையும் தேடிப்போனால் இன்னும் ரொம்ப நேரம் ஆகும். நீங்கள் மூன்று பேர்கள் இருக்கிறீர்கள், எங்களில் ஒருவரும் உங்களுடன் அமர்ந்து நான்கு பேர்களாக சாப்பிட்டால், முருகனுக்கு நிவேதனம் சீக்கிரமே கொடுத்துவிடலாம். அதனால் தான் உங்களை நிர்பந்திக்கிறேன்! நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் என்ன நடக்கிறது என்று" என்றார்.

நான் ஒரு நிமிடம் அதிர்ந்துவிட்டேன். சிறு வயது முதல், எல்லா கோவில்களிலும், வீட்டிலும், முதலில் இறைவனுக்கு படைத்தபின்தான் நமக்கு ஏதேனும் உணவு படைக்கப்படும். இங்கென்ன இப்படி ஒரு வித்யாசமான நிலைமை.

என் நண்பர்களை பார்த்து "என்ன சொல்கிறீர்கள்?" என்றேன்.

அவர்கள் உடனே சம்மதித்தார்கள்.

"சரி! வாருங்கள் போகலாம்" என்றேன் அவரிடம்.

எனக்குள், என்னதான் நடக்கிறது என்று பார்ப்போமே என்ற எண்ணம்.

எங்களை அழைத்துக் கொண்டு சென்றவர், முருகர் சன்னதிக்கு வெளியே, ஆனால் பக்கத்தில் இருக்கும் ஒரு மண்டபத்துக்கு சென்றார்.

அங்கு நான்கு புறமும் துணியால் மறைக்கப் பட்டிருந்தது. ஒரு சிறிய இடைவெளி இருந்ததை காட்டி,

"அது வழி உள்ளே போய் அமர்ந்து கொள்ளுங்கள். நான் இப்பொழுது வருகிறேன்" என்று சென்றார்.

நாங்கள் மூன்று பேரும் (ஆண்கள் மட்டும்) உள்ளே புகுந்தோம்.

உள்ளே நான்கு நுனி வாழை இலை போடப்பட்டு, அமர, நான்கு பலகை ஆசனமும் இருந்தது. ஒரே ஆச்சரியத்துடன், என்ன நடக்கிறது என்று புரியாமல் ஒருவருகொருவரை பார்த்தபடி அமர்ந்தோம்.

சற்று நேரத்தில், முழு நிறைவான சாப்பாடு பரிமாறப்பட்டது. நான் எப்பொழுதுமே இறைவனை வேண்டிக் கொண்டபின்தான் உணவருந்துவது பழக்கம். ஒரு நிமிட த்யானத்தில் அமர, ஏற்ப்பாடு செய்தவர் ஓடி வந்தார்.

"சாப்பாட்டை இப்ப சாப்பிட தொடங்காதீங்க! கொஞ்சம் பொறுத்துக்குங்க.  இப்ப தலைமை பூசாரி வருவார். அதற்குப் பின்தான் சாப்பிட வேண்டும்" என்றார்.

நான் சிரித்துக் கொண்டே "அதற்கென்ன! காத்திருக்கிறோம்" என்றேன்.

சற்று நேரத்தில் பூசாரி வந்தார். ஒரு இலையில் பூ, ஒரு பாத்திரத்தில் தீர்த்தம்.

பூவையும், தீர்த்தத்தையும், சேர்த்து எடுத்துக் கொண்டு, மனதுள் மந்திரம் ஜெபித்து, எல்லோரையும் கை நீட்டச்சொல்லி, தந்து,  அன்னத்தின் மேல் தெளிக்கச் சொன்னார். அவர் கூறியது போல் செய்துவிட்டு காத்திருந்தோம்.

"இனிமேல் நீங்கள் சாப்பிடலாம்" என்றார்.

மெதுவாக உணவருந்த தொடங்கினோம். மிக விமர்சையான சாப்பாடு. எங்கள் அனைவருக்குள்ளும் ஆனந்தம், ஆச்சரியம்.

"இப்ப பாருங்க என்ன நடக்கிறது என்று. கோவில் உள்ளே பெரிய மணி அடித்து, முருகருக்கு நிவேதனம் செய்வார் பூசாரி" என்றார், இவை அத்தனையும் ஏற்பாடு செய்தவர்.

அவர் சொன்னது போல், நாங்கள் சாப்பிட தொடங்கிய பின், கோவில் உள்ளே மணி அடிக்கப்பட்டு, இறைவனுக்கு நிவேதனம் நடந்தது.

எங்கள் அனைவருக்கும், என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எதற்காக முருகர் எங்களை தேர்வு செய்தார்? எதற்கு இந்த சாப்பாட்டை அருளினார்? இது என்ன செய்யப் போகிறது? என்று எத்தனையோ கேள்விகள். இவற்றிற்கு, இன்றுவரை பதில் இல்லை.

மிக அருமையான, சுவை நிறைந்த சாப்பாடு. எங்களுடன் வந்த என் நண்பரின் மனைவி வெளியே நின்று கொண்டிருந்தார். நாங்கள் சாப்பிட்டு முடித்தவுடன், மிச்சம் இருந்த கொஞ்சம் சாதத்தை, சாம்பார் விட்டு கலக்கி "வந்ததுக்கு, நீங்களும் முருகரின் கொஞ்சம் சாப்பாட்டை சாப்பிடுங்கள்" என்று நாங்கள் சாப்பிட்டு முடித்தபின் அவரிடம் கொடுத்தார்.

அவர் மனைவிக்கும் மிகுந்த சந்தோஷம். கிடைத்த அருளை விட்டுவிடக்கூடாது என்று, வெளியே நின்றபடி அதை சாப்பிட்டு முடித்தார்.

சாப்பாட்டை முடித்தபின் ஏற்பாடு செய்தவரிடம் நன்றியை கூறிவிட்டு, திகைப்புடன் வெளியே வந்தோம்.

ஒருவருக்கும் இப்படி ஏன் நடந்தது என்று புரியவில்லை. சரி! இறை விளையாடல்களை புரிந்து கொள்வது கடினம் என்று தீர்மானித்து விடை பெற்றோம்.

ஆனால், இறை விளையாடல் இத்துடன் நிற்கவில்லை. ஊருக்கு சென்ற நண்பர், தன் நண்பர்களிடம் கூற, இப்படி எல்லாம் நடக்குமா? என்ற கேள்விதான் எல்லோருக்கும். அவரில் ஒருவர், திருச்செந்தூர் செல்கிற வாய்ப்பு கிடைத்ததும் அங்கு சென்று விசாரித்திருக்கிறார். கிடைத்த பதில் எதிர் மறையாக இருந்தது.

"என்ன இது? சுவாமிக்கு முன் மனிதர்களுக்கு சாப்பாடா? அப்படி எல்லாம் இங்கு ஒரு முறையே கிடையாது. யாரோ உங்கள் காதில் நல்ல பூ சுற்றியிருக்கிறார்கள். இதெல்லாம் இங்கு நடக்காது" என்று விரட்டி விட்டனர்.

இதை, அந்த நண்பர் திரும்பி வந்து சொன்ன பொழுது, என் நண்பருக்கு ஆச்சரியம் இன்னும் கூடிவிட்டது என்று கூறவும் வேண்டுமோ?

நாங்கள் எல்லோருமே கதை கட்டிவிட்டோம் என்று தான் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் நடந்தது என்ன என்று உணர்ந்தது, நம்பியது நாங்கள் நான்கு பேர் தான்.

இந்த தொகுப்பு இத்துடன் நிறைவு பெற்றது!

Friday 13 February 2015

முருகர் அருளிய அமுது!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

ஆன்மிகம் என்கிற வார்த்தைக்கு அர்த்தமே, நம் ஆன்மாவை ஆண்டவனின் அருகில் கொண்டு செல்வது, என்று பெரியவர்கள் சொல்வார்கள். நம் வாழ்க்கையில் நடக்கின்ற விஷயங்களை அமைதியாக உற்றுப்பார்க்கத் தொடங்கினால், நம்மால், நிறையவே விஷயங்களை புரிந்து கொள்ள முடியும்.

எல்லோருக்கும், இறைவனை காணவேண்டும், இறைவனை உணரவேண்டும் என்கிற ஆசை இருப்பது இயல்பு. இத்தனை வருட வாழ்க்கையில், நமக்கு ஏற்பட்ட அனுபவங்களின் பாதிப்பால் உருவான கேள்விகளை, நம்முள்ளே புதைத்து வைத்து, என்றேனும் இறைவனை கண்டால், அவற்றை கேட்டுவிடவேண்டும், என்று ஒதுக்கி வைத்திருப்போம். ஆனால் உண்மை என்னவென்றால், இறைவனை கண்டு, உணருகிற நிலையில் இருக்கும் சூழ்நிலையில், அத்தனை கேள்விகளும் தேவை இல்லாதது என்று உணர்ந்துவிடுவோம், அல்லது வெளியே வார்த்தைகளாக வராது. நடக்கிற எத்தனையோ நிகழ்ச்சிகளுக்குள், "ஏன்? எதற்கு நான்? எப்படி இது சாத்தியம்?" என்ற கேள்விகளுக்கு பதிலே இருக்காது, ஆனால் நம் மனம் நிறைந்து மகிழ்வுறுகிற அளவுக்கு நிகழ்ச்சிகள் நடக்கும். அப்படி நடந்த ஒரு நிகழ்ச்சியை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

ஆன்மீகத்தில் புகுந்த பின், அனுபவங்களை தேடி, எவ்வளவு தூரம், உயரம் வேண்டுமானாலும் ஓடிப் போகிற மனம் கொண்டவன் நான். ஏதோ ஒரு கேள்வியுடன், திடமான நம்பிக்கையுடன், அடிக்கடி திருசெந்தூர் சென்று, சுப்ரமண்யரை தரிசனம் செய்து வந்தேன். குறிப்பாக சொல்வதென்றால், 15 நாட்களுக்கு ஒருமுறை எப்படியாவது தரிசனம் செய்துவிடுவேன்.

ஒருமுறை, அப்படிப் போய்விட்டு வந்து வீட்டில் அமர்ந்திருக்கும் பொழுது, என்னவோ யோசனை வர "முருகா! நான் கேட்ட கேள்வி உனக்கு புரிந்ததா? புரிந்தும் பதில் சொல்லவோ, காட்டி கொடுக்கவோ மாட்டேன் என்கிறாயே? அதை அருள்வாய் என்று காத்திருப்பது எத்தனை காலம்? என் வேண்டுதல் உன்னிடம் வந்து சேர்ந்துவிட்டதா? என்றேனும் புரியவையேன்!" என்று கேட்டேன்.

மறுநாளே, சென்னையில் வசிக்கும் ஒரு நண்பர் ஒரு சில தகவல்களுக்காக என்னை தொடர்பு கொண்டார். உண்மையில், அவரது சொந்த பிரச்சினைக்கு ஒரு இடத்தில் அகத்தியர் ஜீவநாடி வாசிக்க, அதில் பல பரிகாரங்கள் கூறப்பட்டிருந்தது. அதில் ஒன்று, "சுப்பிரமணியர் சக்கரத்தை பிரதிஷ்டை செய்திருக்கும் கோவிலில் ஒரு மண்டலம் பூசை செய்து, பின்னர், திருசெந்தூர் போய், முருகனுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும்" என்று கூறினார் அகத்தியப் பெருமான்.

தான் வசிக்கும் வீட்டுக்கு அருகிலேயே ஒரு முருகர் கோவிலில் ஒரு மண்டலம் பூசை செய்து வந்தவர் அதன் முடிவில், திருச்செந்தூர் போய், அபிஷேகமும் செய்துவிட்டு வந்துவிடலாம் என்று என்னை தொடர்பு கொண்டார்.

"திருசெந்தூரில் அபிஷேகமும், தரிசனமும் பண்ணவேண்டும். அங்கே கோவிலில் வேலை பார்க்கும் ஒருவர் வழி ஏற்பாடு செய்துவிட்டேன். அதுவும் ஒரு ஞாயிற்றுகிழமைதான். நீங்களும் வர முடியுமா?" என்று கேட்டார்.

"நான்தான் 15 நாட்களுக்கு ஒருமுறை போய்வருகிறேனே! நீங்கள் நிம்மதியாக போய் தரிசனம் பெற்று வாருங்களேன்" என்று கழட்டிக் கொள்ள முயற்சி செய்தேன்.

"ஒரு துணைக்காக வேண்டுகிறேன். உங்களையும் பார்த்து ரொம்ப நாளாச்சே. கண்டிப்பாக வாருங்கள்" என்றார்.

"சரி!" என்று கூறி தீர்மானித்து, இன்னொரு நண்பரிடம் கூட வருகிறாரா என்று விசாரித்தேன். அவரும் வருகிறேன் என்றார்.

எல்லாம் நல்லபடியாக அமைகிறது என்றால், இதில் முருகர் ஏதோ விளையாட்டு நடத்த தீர்மானித்திருக்கிறார் என்று அர்த்தம், என்று என் மனது சொல்லியது.

"சரி! அது நடக்கும் பொழுது அனுபவிப்போம். இப்பொழுதே அதை குறித்து விசனப்பட வேண்டாம்" என்று தீர்மானித்து அமைதியானேன்.

மாலை என்னை வந்து சந்தித்த நண்பர் "என்ன விஷயம்! திடீர்னு திருச்செந்தூர் பயணம்? போய் வந்து ஒருவாரம் கூட ஆகவில்லையே! நான் தெரிந்து கொள்ளலாமா?" என்றார்.

என் சென்னை நண்பர் அபிஷேக, தரிசன, பரிகாரம் ஏற்பாடு செய்திருப்பதை கூறிய உடன் "அட! பெரும் பாக்கியம் ஆயிற்றே! நாம் செல்வோம்!" என்று கூறினார்.

அந்த வார சனிக்கிழமை இரவு. இந்தியா கிரிகெட் விளையாட்டில் இறுதி சுற்று விளையாடிக் கொண்டிருந்தது. நான் நண்பரிடம் இரவு 12 மணிக்கு வண்டியை கொண்டு வரச் சொல்லியிருந்தேன். விளையாட்டு முடிந்து, இந்தியா வெற்றி பெறுவதை பார்த்துவிட்டு செல்லலாம் என்று அமர்ந்திருந்தேன். 11 மணிக்கே வந்து அமர்ந்த நண்பரிடம் "என்ன! வண்டியை தயார் பண்ணிவிட்டீர்களா? போகலாமா?" என்று கேட்டபடி புறப்பட தயாரானோம்.

நண்பரிடம் அமர்ந்திருக்க சொல்லிவிட்டு, நான் போய், குளித்துவிட்டு வந்தேன். நாடு நிசி ஆயினும், குளித்துவிட்டு சென்றுவிட்டால் விடியற்காலையில் அங்கு போய் சேரும் பொழுது, குளிப்பதை பற்றி யோசிக்க வேண்டாமே! என்பது என் எண்ணம்.

12 மணிக்கு புறப்பட்டோம். வாகன நெரிசல் இல்லாத நேரம் ஆனதால், 4 மணிக்கு திருச்செந்தூர் போய் சேர்ந்து, விடிவதற்காக காத்திருந்தோம்.

திடீரென்று "கொடிமர நமஸ்கார பூசை" ஞாபகத்துக்கு வர, முன்னரே அங்கு வந்து தங்கியிருந்த நண்பரை அலைபேசியில் அழைத்து உடனே தயாராகி வரச்சொன்னேன்.

அவரும் அவரது குடும்பமும் வந்தவுடன், நேராக அந்த பூசை நடக்கும் இடத்திற்கு சென்ற பொழுது, ஏற்கனவே அந்த பூசை தொடங்கிவிட்டிருந்தார்கள். எல்லோரும், திருச்செந்தூர் செல்லும் பொழுது ஒருமுறையேனும் பார்க்க வேண்டிய பூசை அது. முதலில் கொடிமர பூசை நடத்தி முடிந்தவுடன்தான் முருகரின் சன்னதியில் நிர்மால்ய தரிசனமும், தீப ஆராதனையும்.

கொடிமர பூசை முடிந்து, தீபாரதனையை பெற்றுக் கொண்டபின், என் நண்பர், அவருக்கு அபிஷேக பூசைக்கு ஏற்ப்பாடு செய்திருந்தவரை தொடர்பு கொண்டார். சற்று நேரத்தில் வருவதாக சொன்னவர், அரை மணி நேரத்தில், வந்து சேர்ந்தார்.

"எத்தனை பேர் இருக்கீங்க?" என்று வந்தவரிடம் எங்களையும் சேர்த்து நான்கு பேர்கள் என்றார், என் நண்பர்.

"சரி, வாருங்கள், நேரடியாக சென்று விடலாம்" என்று கூறி பக்கத்து வாசல் வழி அழைத்துச் சென்றவர், நேரடியாக முருகர் சன்னதி முன் கொண்டு நிறுத்தி "நன்றாக தரிசனம் செய்து கொள்ளுங்கள், நான் உள்ளே அபிஷேக பொருட்களை கொண்டு பூசாரியிடம் கொடுத்து, அபிஷேகம் செய்து வருகிறேன்" என்று உள்ளே போனார்.

எப்போதுமே, கூட்டமும் அதனுடன் அதிக சத்தமாக இருக்கும் முருகர் சன்னதி, அன்று பொறுத்துக் கொள்கிற அளவுக்கு அமைதியாக இருந்தது.

சற்று தூரத்தில் நின்றுகொண்டிருக்கும் முருகரை பார்த்தேன். அப்படி ஒரு கனிவு.

"ஏதோ ஒன்று உந்தியது. உன்னை தேடி இன்று வந்துவிட்டேன். எப்பொழுதும் வந்து பார்க்கும் பக்தனாயிடினும், இன்று நீயே தூண்டில் போட்டு இழுத்திருக்கிறாய். உனக்கு என்னவிதத்தில் அருள வேண்டும் என தோன்றுகிறதோ, அப்படியே ஆகட்டும். உனதருள், உன்னை தேடி வருகிற அனைவருக்கும் கிடைக்கட்டும்" என்று வேண்டிக் கொண்டு, நடந்த அபிஷேகத்தை பார்த்தேன். அருமையான தரிசனம். அபிஷேக முடிவில், அவர் தலையில் விபூதியை வைத்து தீபாராதனை காட்டினார் பூசாரி.

"உன் உச்சி விபூதி கிடைத்தால், சந்தோஷப்படுவேனே! அருள்வாயா?" என்று மனதுள் கேட்டுவிட்டேன்.

தீபாராதனை காட்டி வெளியே வந்த பூசாரி "இலையில்" கொஞ்சம் உச்சி விபூதியை வைத்து "இந்தாருங்கள் பிரசாதம்" என்று தந்தார். நான் ஆச்சரியமாக முருகரை பார்த்துக் கொண்டிருந்தேன்.

"இதற்குத்தான் அழைத்தாயோ? மிக்க நன்றி அய்யனே!" என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

"இன்னும் இருக்கிறது" என்கிறபடி நிகழ்ச்சிகள் உடனே அரங்கேறின!

........... இன்னும் இருக்கிறது!

Thursday 12 February 2015

சித்தன் அருள் - 211 - நவக்ரகங்கள் - வியாழன் (குரு) !


வியாழனுக்கு "குரு" என்றும் "பிரகஸ்பதி" என்றும் சிறப்புப் பெயர்கள் உண்டு. பிரகஸ்பதி என்றாலே, அறிவில் மிகச்சிறந்தவன் என்ற அர்த்தம் தொனிக்கும். நவக்ரகங்களில் தலை சிறந்தவராக குரு கருதப்படுகிறார்.

பிரகஸ்பதி, தேவர்களுக்கு தலைவராகவும், குருவாகவும் இருப்பவர். பிரம்மாவுக்கும் பிடித்தமானவர்.

மிகச்சிறந்த தபச்வியான ஆங்கிரச முனிவருக்கும் ச்ரத்தா தேவிக்கும் புதல்வராக உதித்தவர் வியாழ பகவான்.

இவருடைய ஸ்வரூப லக்ஷணம் மிகவும் அற்புதமானது.

விந்திய மலைக்கு மேல் குருவிற்கு ஆஸ்ரமம் உண்டு. சிந்துதேச அதிபதியாக இருப்பவர். ஆங்கீரச கோத்ரம் இவருடையது.

வடக்கு ஈசான்ய திக்குகளுக்கு அதிபதி. புஷ்பராக மாலையை  கொண்டிருப்பவர். தண்டம், கமண்டலம், மாலை, வரத ஹஸ்தம் உடையவர்.

எட்டு குதிரைகள் பூட்டிய தேரில் மேரு மலையை வலம் வருபவர். இவருடைய நன்மதிப்பை பெற வேண்டுமானால் இந்திரனையும், பிரம்மனையும் வழிபட்டு வரவேண்டும்.

சூரியனுக்கு வடக்கில், நீளமான சதுர மண்டலத்தில், வடக்கு முகமாக வீற்றிருப்பவர். பாஷைகளில் சமிஸ்கிரதத்தை தன்னுடையதாக கொண்டவர்.

குளுமையான வஸ்துவில் மிகப் ப்ரியம் உண்டு.

குரு என்ற சொல்லுக்கு அஞ்ஞாநத்தைப் போக்குகிறவர் என்ற பொருள் உண்டு. ஜோதிட சாஸ்த்திரத்தில் "குரு" என்றால் வியாழ பகவானையே குறிக்கும்.

எண்ணகளில் "3" என்கிற மதிப்பை இவருக்கு ஜோதிட சாஸ்த்திரம் கொடுத்துள்ளது.

குரு மூலம் யாராவது எந்த மந்திரத்தைப் பெற்று தினமும் ஜெபித்து வந்தால், அவர்களுக்கு சந்தோஷத்தையும், செல்வத்தையும் கொடுப்பவர்.

பசு மாட்டை ரட்சிக்கிற இடத்தில், குருபகவான் பிரத்தியட்சமாகக் காணப்படுவதாக சொல்லப்படுகிறது.

"பிரதிதேவோ ஜ்வலக்ரஹம்" என்று வியாழ பகவானை சொல்வார்கள். இதன் அர்த்தம், நம் மனதில் பிரதிபலிக்கின்ற தேஜோமய ஸ்வரூபத்தை கட்டுகிற கிரகம் எதுவென்று கேட்டால் அது குருபகவானுக்குரிய மண்டலம் என்று பளிச்சென்று சொல்லிவிடலாம்.

குருவிற்கு ஐந்து சகோதரர்கள் உண்டு.

பிருஹத் ஜோதிஸ், பிருஹத் பிரம்மா, பிருஹன் மனஸ், பிருஹன் மந்திர, பிருஹத்பாஸ என்பவர்கள் அவர்கள்.

பிருஹஸ்பதியாகிய குருபகவான், தாரா என்பவளை மணந்து கொண்டார். இவர்களுக்கு, சம்யூ நிஸ்யவன், விஸ்வஜித், விச்வபுக், வடபாக்னி, ஸ்விச்ட க்ருதி என்ற புத்திரர்களும், "ஸ்வாகா" என்ற பெண்ணும் உண்டு.

ஒருமுறை பரீட்சித்தின் குமாரனாகிய ஜனமே ஜெயன் ஒரு பெரிய யாகம் செய்ய விரும்பினார். அதற்கு சர்ப்ப யாகம் என்று பெயர்.

அப்படி அந்த யாகத்தை ஜனமே ஜயன் செய்தால், உலகத்தில் உள்ள பாம்புகள் எல்லாம் அழிந்து போகும் என்பதை உணர்ந்த குரு பகவான், ஜனமே ஜயனின் சர்ப்ப யாகத்தை தன அறிவாற்றலால் தடுத்து நிறுத்தினார்.

ஒரு சமயம் இந்திரன், தெய்வத்தின் திருவருளை வேண்டி தீவிரமான த்யானத்தில் ஈடுபட்ட பொழுது, தேவர்களுக்கு சங்கடம் வந்தது. அசுரர்கள் அளவுக்கு மீறி ஆட்டம் போட்டனர்.

இந்த நிலை நீடித்தால், என்ன ஆகுமோ என்று தேவர்கள் பயந்து ப்ரஹஸ்பதியான வியாழ பகவானிடம் வந்து முறையிட்டனர்.

குருபகவான், இந்திரனை, தன் சாமர்த்தியத்தால் சுயநிலைக்கு கொண்டு வந்தார். தேவர் குலம் பிழைத்தது.

குருவுக்கும் சுக்கிரனுக்கும் பல விதத்தில் கருத்து வேறுபாடு உண்டு. இருந்தாலும் குருவின் மகனாகிய அசன் என்ற விஸ்வஜித் சுகிரனிடம் மாணவனாகச் சேர்ந்து "சஞ்சீவனி" என்னும் வித்தையைத் தெரிந்து கொண்டான்.

குருபகவான் காசியில் வெகுகாலம் தங்கியிருந்து, அங்கே ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்திருக்கிறார். அதுமட்டுமல்ல, அந்த லிங்கத்தின் அருகேயே இருந்து பதினாயிரம் தேவ ஆண்டுகள் பூசித்து, தவம் செய்திருக்கிறார்.

குருபகவானின் தவத்தைக் கண்டு மகிழ்ந்து அவர் முன்னே காட்சி தந்த சிவபெருமான், "மிகப் பெரிய தவத்தைச் செய்து, உன் மனதை இந்த லிங்கத் தானத்திலே நிறுத்திய சாதனைக்காக நீ நித்திய ஜீவனாக என்றென்றும் புகழ் பெற்று விளங்குவாய். அதுமட்டுமல்ல, உன்னுடைய திறமை, அறிவாற்றல், குணங்களினால், இன்றுமுதல் நீவிர் இந்திரனுக்கும் குருவாக விளங்கக் கூடிய பாக்கியம் பெறுவீர்" என்று வரம் கொடுத்தார்.

குருவானவர் பொன் வண்ண மேனியர். நான்கு திருக்கரங்கள் உண்டு. கமண்டலம், அட்சமாலை, யோகதண்டம், அபயம் என்பவற்றை அந்தக் கரங்களில் காணலாம்.

ஆனால், விஷ்ணு தர்மோத்தரம் என்னும் நூலில் ப்ருஹஸ்பதியை இரண்டு கரம் உடையவர் என்றும் அவற்றில் புத்தகமும் அட்சமாளையும் ஏந்திக் கொண்டிருப்பார் என்று செய்தி குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சாந்த மூர்த்தியாகத் திகழும் குருபகவான், சதுரமான பீடத்தில் இருப்பவர். கிழக்கு நோக்கி இருப்பவர். முடியுடையவர், பொன்னிறத்தினர், பொன்னிறச் சந்தனம் பூசுபவர், பொன்னிற மலர், பொன்மாலை, பொன்னாய், பொற்குடை, பொன்னிறதுவசம், கொண்டு காட்ச்சியளிப்பவர்.

குருவின் அதிதேவதை பிரம்மன். ப்ரத்யாதி தேவதை இந்திரன் ஆகும். நீதிகாரகர், தாராபதி, கற்க பீடாபஹாரர், சௌம்யா மூர்த்தி, த்ரிலோகேசர், லோகபூஜ்யர், கிரகாதீசர் என்பவை வியாழ பகவானை குறிக்கும் சொற்களாகும்.

ஏழைக்கு இறங்குபவர், பறை, பைசாந்தி, மத்திமை, விகாரி என்ற நான்கு வகை வாக்குகளின் உருவை விளக்கிக் காட்டியவர். கருணைக்கடல், தூயவர், நீதி சாஸ்த்திர ஆசிரியர், களங்கமற்றவர் என்றெல்லாம் குருபகவானை பெருமையுடன் சொல்லப்படுவதுண்டு.

ப்ரஹஸ்பதி நீதி என்ற நூலில் "நகுஷன்" என்ற அசுரன் இந்திரன் மனைவியாகிய இந்திராணியை கவர்ந்து அவளை தன மனைவியாக்கிக் கொள்ள விரும்பினான். செய்தியை அறிந்த குருபகவான், நகுஷனை சப்தரிஷிகள் சுமக்கும் பல்லக்கில் ஏற்றி தன்னிடம் வரச் சொன்னார்.

தேவர்களின் குருவே தன்னை மதித்து, சப்தரிஷிகளை அனுப்பி, அவர்கள் தூக்கும் பல்லக்கில் வரச் சொன்னதை, கர்வம் கொண்டு திமிர் பிடித்து வந்த பொழுது, தன சக்தியால் நகுஷனை பாம்பாகா மாற்றி காட்டில் அலையை விட்டார், குருபகவான்.

குருவின் பார்வை ஒருவனுக்குக் கிடைக்குமானால், அவன் மூடனாக இருந்தாலும், அறிவாளியாக விளங்குவான்.

விஷ்ணு தர்மோத்திரத்திலுள்ள ஒரு சுலோகம் குருவிற்காக உள்ளது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் எழுந்து, பக்தி ஸ்ரத்தையோடு சொன்னால், அவர் குருபகவானின் பேரருளைப் பெறுவார்.

ப்ருஹஸ்பதி ஸீராசார்யோ தைவான் சுபலக்க்ஷண:
லோகத்ரய குரு ஸ்ரீமான் சர்வஞ்ஞா: சர்வகோவித:
ஸர்வேச: சர்வா தீபீஷ்ட சர்வஜித் சர்வ பூஜித:
அக்ரோதனோ முனி சிரேஷ்ட நீதிகர்த்தா குரு: பிதா 
விஸ்வாத்மா விச்ச ஆரித்தா ச விஸ்வயோனி ரயோனிஜ:
பூர்வ வஸ்ஸுவப்ரபுச் சைவ பார்த்தா சிவமகா பல:

இந்த அற்புதமான ஸ்லோகத்தை, கிருஷ்ணா பகவான், நந்த கோபன் வீட்டில் கூறியதாக வரலாறு.

குருபகவான் இந்த பூலோகத்தில் வந்து இறைவனை பூசித்த திருத்தலங்களில் மூன்று மிகவும் குறிப்பிடத்தக்கவை.

  1. தென்குடித்திட்டை - தஞ்சாவூரிலிருந்து மாயாவரம் செல்லும் இருப்பு பாதையில் ஒன்பது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.
  2. திருவலிதாயம் (பாடி) - சென்னைக்குப் பக்கத்தில் 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
  3. திருசெந்தூர் - குருபகவான் மிகவும் விரும்பி பூசித்த முருகப் பெருமானின் அறுபடைவீடுகளில் ஒன்று. திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கிறது.

வ்ருஷப த்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி 
தந்நோ குரு ப்ரசோதயாத்:

இந்த குரு காயத்ரியை தினமும் பாராயணம் செய்கிறவர்களுக்கு எந்த குறையும் வராது, இருக்கின்ற குறைகளும் நீங்கிவிடும்.

தெய்வீக அறிவுக்கும், வேதாந்த ஞானத்திற்கும், முக்கரணங்களின் தூய்மைக்கும் பொருளாக உள்ளவர்.

மேதைகள், ஞானிகள், பக்தர்கள் இவர்களுக்கு மூலகர்த்தா.

அந்தணர்களுக்கும், பசுக்களுக்கும் ஆதிமூலவர். உடல் வலிமை, உள வலிமையைத் தருபவரும்  இவரே.தலைவணங்கா தலைமைப் பதவியையும்  தருபவர். மாபெரும் சாதனைகளை படைப்பவரும் இவர்தான்.

நாட்டை ஆளவைப்பதும், நவீன யுக்திகளை கொடுப்பதும் இவர்தான். மென்மைக்கும், அற்புதமான குணத்திற்கும் சொந்தக்காரர்.

விவேகத்தை  அளிப்பவர்,மந்தகாச முகத்தி உடையவர். இனிப்பில் பிரியர். மஞ்சள் நிறத்தவர். உடலில் சதையாக இருப்பவர். வாதம், பித்தம், கபம் இவற்றில் கபம் இவருடைய கையில் உள்ளது.

புஷ்பராக கல்லுக்குரியவர். கஜானாவை விளங்க வைப்பவர். ஆண் கிரகம் இவர். பஞ்ச பூதங்களில் ஆகாயம் இவர்.

வடகிழக்கு இவரது திசை. தனுசு, மீனம் ஆகிய ராசிகளுக்கு அதிபதி. கடகம் உச்ச வீடு, மகரம் நீச வீடு.

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி  ஆக்கிய மூன்று நட்சத்திரங்களுக்கு அதிபதி. இவர் தசை நடக்கும் பொழுது நன்மைகளே நடக்கும்.

பகலில் இவருக்கு பலம் அதிகம். இவரது பார்வை பட்டால் அத்தனையும் நன்மையாகும்.

தேவானாஞ்ச ரிஷீணாஞ்ச குரும் காஞ்சன சந்நிபம்!
பக்திபூதம் த்ரிலோ கேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்!

என்பது இவர் துதி.

சகலவிதமான சம்பத்தும், ஐஸ்வர்யங்களும் நமக்கு வேண்டுமென்றால் சௌந்தர்யலஹரியிலுள்ள கீழ் கண்ட ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்யலாம்.

அவித்யானா மந்தஸ்திமிர மிஹிர த்வீபநகரீ
ஜடானாம் சைதன்ய ஸ்தபக மகரந்த ஸ்ருதி ஜரி
தரித்ராணாம் சிந்தாமணி குண நிகா ஜந்ம ஜலதௌ 
நிமக்நா நாம் தம்ஷ்ட்ரா முரரிபு வராஹஸ்ய பவதீ!

[இரு வார இடைவேளைக்குப் பின் மறுபடியும் சந்திக்கிறேன் ]

சித்தன் அருள்........... தொடரும்!

Saturday 7 February 2015

குளிக்கும் பொழுது சொல்ல வேண்டிய சுலோகம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்றைய தினம் முதல் ஒவ்வொரு நாளும், இனிய காலை பொழுதாக விடியட்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்!

நிறைய படிக்கும் எண்ணம் உள்ள மனதிற்கு, புரிந்துகொகிற வாய்ப்புகள் நிறையவே கிடைக்கும். சமீபத்தில், அகத்தியர் பற்றி படித்த பொழுது , அவர் காட்டிய ஒரு எளிய வழியை தெரிந்து கொள்கிற ஒரு வாய்ப்பு கிடைத்தது. யாம், பெற்ற இன்பம், இவ்வையகம் பெறட்டுமே என்கிற எண்ணத்தில் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

"சித்தன் அருளில்" "இனிய இல்லற வாழ்விற்கு" என்று ஒரு தொகுப்பு வந்தவுடன், அட! இத்தனை எளிய வழிகள் இருக்கிறதா என்று, படித்து, நடைமுறைபடுத்தி அதன் பயனை உணர்ந்த நான், மேலும் தேடலானேன். அப்பொழுது குளிக்கும் பொழுது சொல்லவேண்டிய ஒரு ஸ்லோகத்தைப் பற்றி அகத்தியப் பெருமான் மிகப் பெருமையாக கூறியதை கீழே தருகிறேன்.

அகமர்ஷணம் என்கிற ஒரு தொகுப்பிலிருந்து, ஒரு ஸ்லோகத்தை அவர் கூறி, இதை குளிக்கும் பொழுது குறைந்தது மூன்று முறை ஜெபித்து வந்தால், "பிரம்ம ஞானம்" ஏற்படும் என்று கூறி இருந்தார். உடனேயே ஒரு அவா. அதை தமிழில், பிரிண்ட் போட்டு, குளிக்கும் அறையில் ஒட்டிவிட்டேன். யாரெல்லாம் அதை பார்த்து விரும்பி சொல்கிறார்களோ, அவர்களுக்கு அதன் பலம் கிடைக்கட்டும் என்கிற எண்ணம் தான். குழந்தைகளை பொருத்தவரை, சிறு வயதிலேயே, மந்திரம் மனதுள் ஏறிவிட்டால், அவர்கள் மனம் எளிதில் செம்மைப்படும். நம்மை போன்றவர்களுக்கு, இப்பொழுதேனும், ஏறினால், நம் வாழ்க்கையை, சமன்படுத்திக் கொள்ளலாம். ஓரளவுக்கு, கவனமும், ஆன்மீகமும் நம்முள் புகுத்துவிட்டால், நாம் தேடுகிற நிம்மதியை, இருக்கும் இடத்திலேயே, நல்ல விஷயங்களை செய்து, கூறி நன்மை அடைந்துவிடலாம்.

"ஆர்த்ரம் ஜ்வலதி ஜ்யோதிர் அஹமஸ்மி
ஜ்யோதிர் ஜ்வலதி ப்ரம்மா அஹமஸ்மி 
யோ அஹமஸ்மி ப்ரம்மா அஹமஸ்மி 
அஹமஸ்மி ப்ரம்மா அஹமஸ்மி 
அஹமே வாஹம் மாம் ஜுஹோமி ஸ்வாஹாஹா"

இதை, நகல் எடுத்து, குளிக்கும் அறையில் ஒட்டி வைத்து, வீட்டில் உள்ளவர்கள் அனைவரும், பயன்பெற உபயோகித்து, அகத்தியர் அருளை பெற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

மந்திரம் என்பது, மனதை செம்மைபடுத்தி அதன் திறனை, நமக்கு உணர்த்துவதர்க்காகத்தான். அதை கூறும் பொழுது ஏற்படுகிற அதிர்வலைகள், நமது ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி, உடலுக்கு உரத்தை தந்து, புத்தியை தெளிவுபடுத்தும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகதீசாய நமஹ!

Friday 6 February 2015

வேலவனின் அருள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபகாலமாக, அகத்தியப் பெருமான், ஓதியப்பர், அருணாச்சலேஸ்வரர் என பல தொகுப்புகளை உங்கள் முன் தந்திடக் காரணமே, நிறைய நல்ல செய்திகள் பல, தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக, அனைவரும் இறை, சித்தர் அடியவர்களாக ஆகிட ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில், அடியேனிடம் தெரிவிக்கப்பட்ட, வழங்கப்பட்ட  விஷயங்களை உடனேயே பகிர்ந்து கொண்டுவிடுகிறேன். ஒரு தகப்பனுக்கு தன் குழந்தை மீது இருக்கும் கனிவு போன்றுதான் இந்த பகிர்தலும்.

"வேல் மாறல்" பற்றிய ஒரு தொகுப்பை முன்னரே சித்தன் அருளில் பதிவு செய்திருந்தேன். அந்த "வேல்" ஒருவர் வாழ்வில் நிகழ்த்திய சந்தோஷமான நிகழ்ச்சியை, ஒரு அகத்தியர் அடியவர், என்னுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் அனுமதியுடன், நன்றியை அவருக்கு கூறிவிட்டு, அந்த நிகழ்ச்சியை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

ஒருவரது அனுபவம், இன்னொருவருக்கு பாடமாக இருக்கும், நிறைய வேளை, ஊக்கமாக இருக்கும், என்கிற எண்ணத்தில், அவர் சொல்வதை பார்ப்போம்.

வேல் மாறல் பாராயணம்  நிகழ்த்திய அற்புதம்!

அற்புதம் என்பது அழகான வார்த்தை. இப்பிரபஞ்சத்தில் கணத்துக்கு கணம் நிகழ்ந்து கொண்டிருக்கும். ஒவ்வொரு நிகழ்வுமே அற்புதம்தான். இறைவனது/சித்தர்களது பார்வையில் எல்லாமும் அற்புதமே! மனிதன் தன் மனதில் ஆசைப்படும் எண்ணம் நிறைவேறவேண்டும் என்று பிரார்த்தனை செய்து, அது நடக்கும்போது அற்புதம் என்றும் நிறைவேறாதபோது கடவுள் கண் திறந்து பார்க்க மறுக்கிறார் என்றும் கூறிக்கொள்ளுகிறான். ஆனால் இரண்டிற்குமே நம் கர்மவினை தான் பொறுப்பு என்பதை நாம் உணர்வதில்லை.

குருநாதரின் அருள்வாக்கின்படி ஈன்றவர்களும் ஒரு ஆத்மா அவர்களது பிள்ளைகளும் ஒரு ஆத்மா, அவரவர்களது கர்மவினைகளின்படி அவரவர்களது வாழ்வில் சம்பவங்கள் நடந்து கொண்டேயிருக்கும். இதில் ஒருவரைகுறித்து மற்றவர் கவலைப்பட என்ன இருக்கிறது? இது சாதாரணமாக இருக்கும்போது புரிந்தாலும் எல்லா நேரங்களிலும் மனம் அமைதியடைவதில்லை. அதுவும் பெற்ற பிள்ளைகளுக்கு ஒரு பிரச்சினை என்றால் அந்த ஆத்மாவிற்கு உடல் கிடைக்க காரணமாக இருந்த பெற்றவர்களுக்கு, பெற்ற கடமைக்காக கவலைப்படாமலோ, பிரார்த்தனை செய்யாமலோ இருக்கமுடிவதில்லை. 

என்னை பொறுத்தவரை கவலைகளும் பிரச்சனைகளும்தான் என்னை இறைவனுடன் எப்போழுதும் இணைத்திருக்கிறது என்று நம்புவதால், பிரார்த்தனை செய்ய கவலைகளை காரணமாக்கி, அவை தீருகிறதோ இல்லையோ மனமொன்றி பிராத்திக்க வழி ஏற்பட்டது என்று மகிழ்வேன்.

எனது இரண்டாவது மகன் முன்னணி கல்லூரிகளில் ஒன்றில் இஞ்சினீயரிங் நான்காம் ஆண்டு படிக்கிறான். முதலாம் ஆண்டு பாடம் ஒன்றை நான்கு முறை எழுதியும் பாஸ் ஆகாமல் மூன்றாம் ஆண்டு பாடம் ஒன்றையும் வைத்துக்கொண்டு, சென்ற டிசம்பரில் மொத்தம் எட்டு பாடம் மற்றும் இரண்டு செய்முறை பாடம் இவற்றை பாஸ் செய்யவேண்டிய கட்டாயத்தில் இருந்தான். இது தவிர வேலைவாய்ப்பு வளாகத் தேர்வும்  சேர்ந்துகொண்டது. முன்னணி நிறுவனங்கள் என் மகனை வளாகத்தேர்வு எழுத அனுமதிக்காத நிலையில், உடன் படிப்பவர்கள் வேலை கிடைத்த சந்தோஷத்தில் இருக்க அவனது மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று சொல்லவேண்டியதில்லை. நான்கு ஆண்டுகளாக மனதாலும் உடல் உபாதையாலும் மிகுந்த சிரமங்களை அனுபவித்துவரும் அவனுக்கு, ராகு தசை நடக்க, ஏழரை சனியின் பிடியில் இருந்த அவனுக்கு எனது ஆறுதல் வார்த்தைகளில் நம்பிக்கை ஏற்படவில்லை. ஏற்கனவே முதல் மகனை வெளிநாடு அனுப்பி படிக்கவைக்க ஏற்பட்ட மிகப்பெரிய கடன் சுமையினால் தள்ளாடிகொண்டிருந்த எனக்கும் என் மனைவிக்கும் இது மிகப்பெரிய கவலையாக வாட்டிகொண்டிருந்தது. 

கடந்த  25 அக்டோபர் 2014 அன்று “ஒரு செய்தி > ஓதியப்பர் உங்களுக்கு தந்த பரிசு!” என்ற தலைப்பில் “வேல் மாறல்” பற்றிய சித்தனருள் பதிவில் கடைசியாக இருந்த  குறிப்பு:- “எதனால், இது இப்போது தெரிவிக்கப்பட்டது என்று புரியவில்லை. உங்களில் யாரோ ஒருவருக்காக கூட இருக்கலாம். இதை கேட்பவரின் வேண்டுதலுக்கு ஏற்ப அந்த ஓதியப்பரே நேரடியாக இறங்கி வந்து அருள் புரிய வேண்டி தந்தார் என்று என் மனம் சொல்கிறது”.

எனக்கு உள்ளுக்குள் ஒரு உணர்வு, இது நமக்காகத்தானோ என்று. ஏனன்றால் குருநாதர் எனது வாழ்வியல் தேவைக்கேற்ப அவ்வப்போது சில மந்திரங்களை உரு ஏற்றும் எண்ணத்தை அல்லது யார் மூலமாகவாவது உபதேசத்தை தந்தருள்வார். அதன் படி சித்தனருள் மூலமாக கிடைத்த வேல் மாறலை  அருணகிரிநாதரின் தமிழை உச்சரிக்க சிறிது நாட்கள் படித்து பழக வேண்டியிருந்தது. வேல் மாறல் பற்றி தேடியதில்  சென்னை நங்கநல்லூர் பொங்கி மடத்தில் வேல் மாறல் எந்திர படத்துடன் கூடிய புத்தகம் கிடைக்கும் என்று அறிந்து, நண்பர் ஒருவரை வாங்கிவருமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் ஒன்றுக்கு இரண்டாக வாங்கிவந்து தந்தார். அந்த புத்தகம் என் கைக்குக்கிடைத்த அரைமணி நேரத்தில், ஒதிமலையில் சேவை செய்யும் அன்பர் ஒருவர் என்னை தொடர்புகொண்டு நாளை தான் சென்னை வருவதாகவும் என் வீட்டிற்க்கு வருவதாகவும் சொன்னார். புத்தகம் கிடைத்த அன்று நவம்பர் 19ம் தேதி மாலை தடைகள் வராமல் தொடர்ந்து பாராயணம் செய்ய திருவருள் வேண்டி குருநாதரிடமும் மூத்தோனிடமும்  பிரார்த்தனை செய்து, “எனது மகன் நல்லபடியாக தேர்வு எழுதி அனைத்து பாடங்களையும் பாஸ் செய்யவேண்டும்” என்ற ஒரே ஒரு கோரிக்கையுடன் பாராயணம் செய்ய ஆரம்பித்தேன். எனக்கு முன்பே எனது துணைவியார் ஆரம்பித்துவிட்டார் அதே கோரிக்கையுடன். 

அடுத்த நாள் ஒதிமலை அன்பர் வீட்டிற்க்கு வந்தார். சில விஷயங்கள் நடந்து முடிந்த பிறகு, அதற்குமுன் நடந்த சம்பவங்கள் எதனால் எதற்காக நடந்தது என்று நமக்குப்புரியவரும். ஆனால் எனக்கு சில சம்பவங்கள் நடக்கும்போதே இது எதற்காக என்று உள்ளுணர்வு தோன்றும். முடிவைப்பற்றிய சூசகமான தகவல்கிடைத்துவிடும். அப்படித்தான், ஒதிமலை அன்பர் என் வீட்டிற்க்கு வந்தது ஓதியப்பரே என் கோரிக்கை பிராத்தனையை ஆரம்பிக்க ஆசிர்வதித்ததாக எனக்குப்பட்டது. அந்த அன்பருக்கு  வேல் மாறல் புத்தகம் ஒன்றை கொடுத்தேன். (அவரும் ஒரு கோரிக்கையுடன் பிரார்த்தனை செய்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்). எங்கள் பிரார்த்தனை தொடர்ந்தது. டிசம்பர் 24ம் தேதியுடன் பரிட்சைகள் முடிந்தது. பரிட்சைமுடிவு தெரியும்வரை பிராத்தனையை செய்வதென்று முடிவுசெய்து தொடர்ந்தோம்.

ஜனவரி கடைசி வாரத்தில் பரிட்சை முடிவு எப்பொழுது வரும் என்று தெரியவில்லையே முடிவு என்னவாகும் புரியவில்லையே என்று குழம்பிக்கொண்டிருக்கும்போது, 22ம் தேதி அகத்தியர் தரிசனம் பெற்று அவர் ஆணையின்படி தேவி ப்ரித்யங்கரா யாகம் செய்துவரும் நண்பர் ஒருவர் என் இல்லம் வந்தார். அவர் வந்தது சுப சகுனமாகப்பட்டது. அடுத்தநாள் பகல் ஒரு மணிக்கு, அலுவலகத்தில் ஒருவர் அண்ணா யூனிவெர்சிட்டி ரிசல்ட் வந்துவிட்டதாம், என் உறவினர் மகன் ரிசல்ட் பார்த்து சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார். என் மகன் தேர்வுஎண் கைவசம் இல்லாததால் துணைவியாரிடம் தொலைபேசியில் கேட்க அவருக்கும் பதற்றம் பற்றிக்கொண்டது. நெஞ்சு துடிக்க ஆவல் கடலாய் பெருக என் மகனின் ரிசல்ட்ஐ தேடினேன். சோதனையாக இன்டர்நெட்டில் அந்த பக்கம் கிடைக்கவேயில்லை. மாலை 4 மணிவரை கிடைக்காததால் வெறுத்து ஒரு வேலையும் ஓடாத நிலையில், திருப்பதி சென்றுவந்த அலுவலக நண்பர் ஒருவர் அருட்ப்ரசாதமான லட்டு கொண்டுவந்து தந்தார். நான் இருந்த மனநிலையில், அந்த பிரசாதம் என்னைத்தேடி வந்தவுடன் அதுவரை இருந்த மனபாரம் சட்டென்று வடிந்தது. கண்ணில் நீர் துளித்தது. ஏழுமலையானை நினைத்து வேண்டி அதை சாப்பிட்டேன். மாலை 6 மணிக்கு வீடு வந்து பார்த்தும் நெட் கிடைக்கவில்லை. மனைவிக்கு ஆறுதல் சொல்லி நம்பிக்கையூட்டி பிராத்தனைக்கு அமர்ந்தேன். 6.30க்கு எனது மகன் கல்லூரியிலிருந்து வந்தான். நாங்கள் ஒன்றும் சொல்லாமல், அவன் ஆசுவசப்படுத்திக்கொள்ளட்டும் என்று அமைதியாக இருந்தபோது, அவன் சர்வ சாதாரணமாக பையிலிருந்து ஒரு பேப்பர் ஐ எடுத்து “ஆல் பாஸ்” என்று சொன்ன அந்த கணம், எங்கள் இருவருக்கும் ஆனந்தக்கண்ணீரை அடக்கமுடியாமல் போனது.

பிறகென்ன முழு சந்தோஷத்துடன் மன நிறைவுடன் அன்று பிரார்த்தனை முடிந்தது. கோரிக்கை நிறைவேறினாலும் வேல் மாறல் பாராயணத்தை தொடரவேண்டும் என்று முடிவுசெய்தோம். ஆனால் அடுத்தநாள் காலை ஒரு அசுப செய்தி வந்து பத்து நாட்களுக்கு நாங்கள் எதுவும் செய்யமுடியாமல் போனது. பிரார்த்தனை ஆரம்பித்த நாள் முதல், சரியாக பரிட்சை முடிவு தெரியும் நாள் வரை எந்த இடைஞ்சலும் இல்லாமல் வேல் மாறல்  பாராயணம் செய்ய அனுக்ரகம் செய்து, கோரிக்கையையும் நிறைவேற்றி தந்த ஓதியப்பரின் கருணையை என்னவென்று சொல்வது.

ஒரு புது கோரிக்கையுடன் அடுத்த சுற்று பாராயணம் ஆரம்பித்தாயிற்று என்று சொல்லவும் வேண்டுமோ?

ஓம் சரவணபவாய நமஹ!

அருணாச்சல அனுபவம் - 2


"அருள் உண்டு, அதற்கும் பொருள் உண்டு,
அருள் நிறைந்த வாழ்வுண்டு, 
அகம் ஒன்றில், அருகாமை உண்டு!
மனம் அடங்கும், வலம் ஒன்றில்..........."

(மன்னிக்கவும்! இது நடந்தது பத்து வருடங்களுக்கு முன். அதனால், நினைவில் நின்றவரை தட்டச்சு செய்துவிட்டேன்) 

கதவுக்கு பின்னால் நின்று இந்த செய்யுளை யாரோ கூறுவதை தெளிவாக கேட்டேன். 

அதிர்ச்சி அடையவில்லை. ஆனால் என் பிரார்த்தனைக்கு, இத்தனை வேகத்தில் பதில் கிடைக்கும் என்று நான் நினைக்கவேயில்லை. ஆனந்தத்தில் துள்ளியது மனம். ஆனால், சத்தம் போட்டால், சாதுக்கள் உறக்கம் கலைந்துவிடும்  என்று மனதுள் "நன்றி இறைவா" என்று கூறிவிட்டு, கோவில் வாசல் முன் வந்து கற்பூரம் ஏற்றி வைத்தேன். அப்பொழுதும் மனதுள் "உன்னை நம்பித்தான்" என்று வாக்கியம் வந்தது.

கிரிவலம் தொடங்கி, இந்திர லிங்கம் தரிசனம் முடித்து அக்னிலிங்கம் சன்னதியை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். எதுவுமே மனதுள் ஓடவில்லை. கேட்ட செய்யுளின் விரிவான அர்த்தம் என்ன என்ற யோசனையில் மனம் இருந்தது. அக்னிலிங்கம் சன்னதியில் ஆனந்தமான தரிசனம் முடிந்து, கற்பூரம் ஏற்றி வைத்தவுடன், எங்கிருந்தோ வந்த சப்தம் போல் தலைக்குள் "ஓம் நமசிவாய" என்ற வாக்கியம் புகுந்தது. பிறகு எதை பற்றிய சிந்தனையும் இல்லை. ஒவ்வொரு லிங்க சன்னதியிலும் பிரார்த்தித்து, கற்பூரம் ஏற்றும் பொழுதெல்லாம் என் தலைக்குள் "ஓம் நமசிவாய" என்ற வாக்கியமே உரக்க முழங்கிக் கொண்டிருந்தது. நான் நானாக இல்லை என்பது புரிந்தது. என்ன நடக்கிறது என்று புரியாவிட்டாலும், அந்த நிலை மிகுந்த ஆனந்தத்தை தந்தது என்பது உண்மை.

போகும் வழி எங்கும், தனிமை, அமைதி, நிசப்தம். என் மூச்சே எனக்கு கேட்கிற அளவுக்கு அமைதி. மெதுவாக நடந்து அடி அண்ணாமலை கோவிலை அடைந்தேன். கோவில் திறந்திருக்காவிட்டாலும், வெளியே நின்று பிரார்த்தனை செய்யலாம் என்று போனவனுக்கு, "நீ வரக் காத்திருக்கிறேன். வா" என்றழைப்பதுபோல் கோவில் திறந்திருந்தது.

மணி 6.30 இருக்கும். அபிஷேகம் முடிந்து எங்கும் கழுவிவிடப்பட்டது போல் சுத்தமாக, அமைதியாக இருந்தது. அங்கும் தனிமை கிடைத்தது. பூசாரி மட்டும் அலங்காரத்தில் ஈடுபட்டிருந்தார். 

திரும்பி பார்த்தவர் "சற்று பொறுங்கள். அலங்காரம் முடித்துவிட்டு, தீபாராதனை காட்டி பிரசாதம் தருகிறேன். அதுவரை அமர்ந்திருங்கள்" என்றார்.

நான் ஒரு இடம் தேடி அமர்ந்து அடிஅண்ணாமலையாரை பார்த்துக் கொண்டிருந்தேன். மனதுள் ஜபம் இயல்பாக, தானே ஓடிக் கொண்டிருந்தது. நிமிட நேரத்தில், கண்மூடி என்னை அறியாமல் த்யானத்தில் போய்விட்டேன்.

சற்று நேரத்தில், மணி அடிக்கும் சப்தம் என் த்யானத்தை கலைத்தது. பூசாரி மந்திர உச்சாடனத்துடன், தீபாராதனை காட்டி, கற்பூர ஆரத்தியை என்னிடம் கொண்டு வந்து காட்டினார்.

ஆரத்தியை கண்ணில் ஒற்றிக் கொண்டு, பிரசாத விபூதியை வாங்கி பூசிக்கொண்டு, மிச்சம் இருந்ததை வாயில் போட்டுக் கொண்டேன்.

"எங்கிருந்து வரேள்!" என்றார்.

"சென்னையிலிருந்து ஊருக்கு போகும் வழி. அருணாச்சலத்தை ஒரு தரிசனமும் அப்படியே ஒரு கிரிவலமும் செய்துவிட்டு போகலாம் என்று நடக்கத் தொடங்கினேன். இங்கு கோவில் திறந்து இருந்ததை பார்த்த பொழுது, உள்ளே வந்தேன்" என்றேன்.

"ஓ! அப்படியா. நல்லது, நல்லது. எப்பொழுதும் அவன் அரணாக நின்று எல்லோரையும் காப்பாற்றுவான். இன்று என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. பொதுவாக 7 மணிக்கு மேல் தான் சாவகாசமாக வந்து கோவிலை திறந்து வைத்து பூசை செய்வேன். இன்று காலை 3 மணிக்கே முழிப்பு வந்துவிட்டது. பிறகு தூக்கம் இல்லை. 5 மணிக்கு மேல் கிளம்பி வந்து, எல்லா இடத்தையும் சுத்தப் படுத்தி, அவருக்கு சீக்கிரமே அபிஷேகம், அலங்காரம் முடித்துவிட்டேன். பொதுவா, எல்லோரும் ஒரு 7.30 மணிக்குத்தான் வருவா. ஆனா, இன்னிக்கு யாரையும் காணேம். என்னெனவோ நடக்கிறது" என்று பேசியபடி சன்னதிக்குள் சென்றார். நான் சிரித்தபடி நின்றிருதேன். எனக்கு புரிந்தது. 

சற்று நேரத்தில், நான் உத்தரவு வாங்கிக் கொண்டு கிரிவலத்தை தொடர்ந்தேன்.

அதிகாலை நேரத்தில், அருணாச்சல மலையை பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். உச்சியில் கொஞ்சம் மேகம் போர்த்தி இருக்க, அமைதியாக உறங்கும் குழந்தையின் பிரதிபலிப்பு இருக்கும். திரும்பி, திரும்பி பார்க்க வைக்கும் காட்ச்சிகள் நிறைய. சத்தமும் இருக்காதா, இயற்கையின் ஸ்பரிசம், மெல்லியதாக வீசும் காற்று, பட்சிகளின் சப்தம், தூரத்தில் எங்கோ குரல் கொடுக்கும் ஒரு பசு என, எல்லாமே வித்யாசமாக இருக்கும். சின்ன வயதில் கிராமத்து உறவினர் வீட்டுக்கு போய் தங்கிய பொழுது, உணர்ந்த அந்த சூழ்நிலை. அதே சூழ்நிலை மறுபடியும் கிடைக்க 30 வருடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியிருந்தது என்பது உண்மை. இதுவே, அருணாச்சலேஸ்வரர் கோவிலின் அருகில் இருந்தால் கிடைத்திருக்காது. அடி அண்ணாமலை இருக்கும், மலையின் இந்த பக்கத்தில் மட்டும் தான் அதை உணர முடியும்.

மெதுவாக நடந்து ஒரு வழியாக, வாயு லிங்கம் வரை வந்துவிட்டேன். தரிசனம் முடித்து, சற்று நேரம் அமர்ந்து கண் மூடி இருக்கும் பொழுது

"உன்னை தேடி காவல் துறை அதிகாரிகள் வருவார்கள். பயம் வேண்டாம். உண்மையை சொல். எந்த பிரச்சினையும் உன்னை அண்டாது. நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று வந்தது.

ஒரு நிமிடம் சற்று ஆடித்தான் போனேன். ஏன் எதற்கு? நான் என்ன தப்பு செய்தேன்? வெளியூர் வேற. பிரச்சினை எதுவும் வரக்கூடாது. சரி! சொன்னபடி உண்மையாக இருப்போம். மற்றவற்றை அவர் பார்த்துக் கொள்வார் என்று சமாதானப் படுத்திக் கொண்டு, கிரிவலத்தை தொடர்ந்தேன்.

குபேர லிங்கம், ஈசான லிங்கம் என்று தரிசனம் முடித்து, கோவில் வாசலுக்கு வந்த பொழுது மணி 9.

நேராக உள்ளே சென்று, அருணாச்சலேஸ்வரர் சன்னதி முன் நின்றேன்.

மனதுள் பேசத்தொடங்கினேன்.

"அய்யனே, உங்கள் அருளால், இந்த கிரிவலம் இனிதே நடந்துவிட்டது. அடியேனுக்கும் அறிவுரை கூறி அருளியதற்கு, மிக்க நன்றி. அடி அண்ணாமலையில், கோவில் திறக்க வைத்து, அடியேனுக்கு காட்சி கொடுத்ததற்கும் மிக்க நன்றி. கூடவே, ஏதோ ஒரு பிரச்சினையை கோடிட்டு காட்டினீர்கள். அது நடந்தால், நடக்கும் பொழுது, உங்கள் பார்வை என்னை காக்கட்டும்." என்று வேண்டிக்கொண்டேன்.

வெளியே வந்து, பிரதட்சிணம் செய்து, கிரிவலத்தை நிறைவு செய்யும் விதமாக கற்பூரம் ஏற்றி வைத்துவிட்டு, அறைக்கு வந்து சேர்ந்தேன். நல்ல அசதி! உடல் நிலை சரியாக இல்லாததால், சாப்பிடக் கூட தோன்றவில்லை. அப்படியே படுத்து உறங்கிப்போனேன்.

இரண்டு மணி நேரம் உறங்கியபின், நல்ல உறக்கத்தில், யாரோ பலமாக "சார்!" என்று கூப்பிட்டு கதவை தட்டுகிற சத்தம். எழுந்திருக்க முடியவில்லை, இருந்தும் ஸ்ரமப்பட்டு போய் கதவை திறந்து பார்த்தால், அறையின் சொந்தக்காரரும், அவருடன் இரண்டு இன்ஸ்பெக்டர், ஒரு போலீஸ்காரரும் நின்று கொண்டிருந்தனர்.

முதலிலேயே இன்ஸ்பெக்டரின் கேள்விக்கணை துளைத்தெடுத்தது.

"யார் நீங்க? என்ன பேரு? எங்கிருந்து வந்திருக்கீங்க? எதுக்கா வந்தீங்க?" என்று தொடர்ச்சியாக கேள்விக்கணைகள்.

உறங்கி எழுந்திருந்தாலும், அப்பன் முன்னரே தெரிவித்திருந்ததால், நிதானமாக அவர் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் சொன்னேன்.

"என்ன பண்ணிட்டிருந்தீங்க?" என்றார்.

"உறங்கிக் கொண்டிருந்தேன்!" என்றேன்.

"இப்ப மணி 11. கோவிலுக்கு வந்தேன்னு சொன்னீங்க! இந்த நேரத்திலா உறங்குவாங்க?" என்றார்.

"உள்ள வாருங்களேன், ஏன் வெளியே நின்னு பேசறீங்க. இன்று காலையில் 3 மணிக்கு எழுந்து கிரிவலம் செய்யப் போய்விட்டு, 9 மணிக்குத்தான் வந்தேன். உடல் நிலையும் சரி இல்லை. அதனால் அசதியில் உறங்கிவிட்டேன்." என்றேன்.

உள்ளே வந்தவர் "உங்கள் பெட்டியை செக் பண்ணனும்" என்றார்.

"தாராளமாக்" என்றேன்.

கூட இருந்த போலீஸ் ஒருவர், என் பையை திறந்து முழவதும் கலைத்துப் பார்த்துவிட்டு,

"ஒண்ணும் இல்லை சார்! உடைகளும், விபூதியும் தான் இருக்கு" என்றார் இன்ஸ்பெக்டரிடம்.

"சரி! அறையை பூட்டிக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு கிளம்பிய இன்ஸ்பெக்டரிடம்,

"எதுக்காக, இப்படி செக் பண்ணினீங்கனு, தெரிஞ்சுக்கலாமா?" என்றேன், அமைதியாக.

"இன்னிக்கு ஜனவரி 26. திருவண்ணாமலை கோவிலுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் வந்துள்ளது. அதனால், எல்லா லாட்ஜிலும் சோதனை போடுகிறோம். குறிப்பாக, தனியாக அறை எடுத்து தங்குகிறவர்களை விசாரிக்கிறோம்" என்றார்.

நான் சிரித்துக் கொண்டே, அமைதியாக இருந்தேன். அவர்கள் அனைவரும் அடுத்த அறையை நோக்கி நடந்து சென்றனர்.

திடீரென்று காவல்துறை வந்து விசாரித்தால், யாருமே ஆடித்தான் போவார்கள். அப்படி வேறு ஏதேனும் பேசி பிரச்சினையை விலை கொடுத்து வாங்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான், அருணாச்சலேஸ்வரர் முன்னரே செய்தி தந்து, அமைதி படுத்தினார் என்று புரிந்தது.

அன்று மாலையே, அருணாச்சலத்தை விட்டு கிளம்பி அடுத்தநாள், ஊர் வந்து சேர்ந்தபொழுது, நல்ல செய்தி காத்திருந்தது. வருடங்களாக வேலை தேடிக் கொண்டிருந்த ஒரு நண்பருக்கு, வெளிநாட்டில் வேலை கிடைத்துள்ளது என்று கூறினார். அவரை போலவே பலரையும் மனதில் வைத்து, வேண்டுதலை கொடுத்து கிரிவலம் செய்ததற்கு, ஒரு மாதத்திற்குள், அனைவருக்கும் நல்லது நடந்தது என்பது மகிழ்ச்சியான விஷயம்.

அருணாசலம் அன்பே உருவானவர் என்று உணர்ந்தேன்.

அகத்தியர் அடியவர்களே! அருணாசலத்தில் தனிமை இருந்தால், நம் கர்மாப்படி நிறைய ஆசிர்வாதங்கள் கிடைக்கும். பலர் ஒன்று கூடும் பொழுது நிறைய விஷயங்கள், நமக்கு தெரிவிக்க வேண்டியது, தெரிவிக்கப் படாமலே போய்விடும், என்பதை தத்ரூபமாக அன்று அடியேன் உணர்ந்தேன்.

இந்த தொகுப்பு இத்துடன் நிறைவு பெற்றது

அந்தநாள் > இந்த வருடம் (2015)


அகத்தியப் பெருமானின் "சித்தன் அருளை" வாசித்து வரும் அவரின் அடியவர்கள், அகத்தியப் பெருமான் குறிப்பிட்ட தினங்களில், என் நண்பரை, கோடகநல்லூர், நம்பிமலை, பாபநாசம், கரும்குளம், திருச்செந்தூர் என்று பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, இறை, சித்த அனுபவங்களையும், ஆசிர்வாதங்களையும் பெற்றுக் கொடுத்ததை, நாம் அனைவரும் அறிவோம். அதில் மறைமுகமாக "அந்த நாள், இந்தநாள்" என்று அகத்தியப் பெருமான் பல இடங்களில், குறிப்பிட்டதை கவனித்திருக்கலாம்.

நம் அனைவருக்குமே, "அந்த நாள்" இந்த வருடம், எப்போது வருகிறதோ, அன்று அங்கு சென்று இருந்து அவர்களின் ஆசிர்வாதம், செம்மையான வாழ்க்கைக்காக பெற்றுக்கொள்ள வேண்டும், என்கிற எண்ணம் இருக்கும். உங்களின் அந்த இனிய எண்ணைத்தை பூர்த்தி செய்வதற்காக, இந்த வருடம் "அந்த நாட்களை" தெரிவு செய்து இங்கே தருகிறேன். குறித்து வைத்துக்கொண்டு, அங்கெல்லாம் சென்று, அவர் அருள் பெற்று வருமாறு, வேண்டிக்கொள்கிறேன்.

நம்பிமலை:- (இறைவனும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருக்க, அகத்தியப் பெருமான் நம்பிமலை பெருமாளுக்கு 200 வருடங்களுக்கு ஒருமுறை செய்கிற பூசையை செய்த நாள்)

26/07/2015, ஞாயிற்று கிழமை, ஆடி மாதம், சுக்லபக்ஷ தசமி திதி, அனுஷம் நட்ச்சத்திரம் அன்று காலை 11 மணி முதல்.

பாபநாசம்:- (நதிகள் எல்லாம் அகத்தியப் பெருமானுடன் இருந்து அன்று தீர்த்தமாடியவர்கள் அனைவருக்கும், அவர்கள் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் புண்ணியம் கொடுத்த நாள். நவக்ரக தம்பதிகள் ஆசிர்வதித்த நாள்)

27/07/2015, திங்கட்கிழமை, ஆடி மாதம், சுக்லபக்ஷ ஏகாதசி திதி (இரவு 9.39 வரை), கேட்டை நட்சத்திரம் (அன்று காலை 11.55 முதல்), சித்தயோகம்.

திருச்செந்தூர்:- (ஓதியப்பர், அகத்தியர், அனுமன் ஆகிய மூவரும் சேர்ந்து இருந்த நாள். அதில், முருகர் அனுமனுக்கு அன்று அனுமனின் நட்சத்திரம் ஆனதால், அவரை ஆரத்தழுவி, நல்வாழ்த்து தெரிவித்த நாள். இன்றும் எல்லா மாதமும் அனுமன், அவரது நட்சத்திரத்தன்று திருசெந்தூரில் அன்று மாலை வந்து முருகரின் அருள் பெற்று செல்கிறாராம்.)

28/07/2015, செவ்வாய்க்கிழமை, ஆடி மாதம், சுக்லபக்ஷ த்வாதசி திதி (அன்று இரவு 09.13 வரை), மூலம் நட்சத்திரம் (அன்று மதியம் 12.23 முதல்), சித்தயோகம்-அமிர்தயோகம்.

ஒதிமலை ஓதியப்பர் பிறந்த நாள்:- (போகர் கூற்றின் படி, ஓதியப்பர் ஆவணி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். ஓதியப்பரின் பிறந்த நாளை அபிஷேக ஆராதனைகளுடன் கொண்டாடுகிற நாள். சித்தர்கள் அனைவரும் அன்று அங்கே ஒன்று கூடி, ஓதியப்பரை தரிசனம் செய்து, பின்னர் 90 நாட்களுக்கு அங்கேயே தங்கி இருக்க தொடங்குகிற நாள்.) 

09/09/2015, புதன் கிழமை, ஆவணி மாதம், த்வாதசி திதி (காலை 07.31 வரை), பூசம் நட்சத்திரம் (காலை 07.03 முதல்) சித்தயோகம்.

கோடகநல்லூர்:- (எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள். தாமிர பரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள். அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள்.)

25/10/2015, ஞாயிற்று கிழமை, ஐப்பசி மாதம், சுக்லபக்ஷ த்ரயோதசி திதி (அன்று இரவு 10.47 வரை), உத்திரட்டாதி நட்சத்திரம் (அடுத்தநாள் காலை 4.01 வரை), அமிர்த யோகம்.

அகத்தியர் அடியவர்களே! மேல் சொன்ன இந்த நாட்களை குறித்து வைத்துக் கொண்டு, இங்கு தெரிவிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று, இறை அருள், அகத்தியர் அருள் பெற்று நலமாக வாழ்ந்திட வேண்டிக் கொள்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகதீசாய நமஹ!

கார்த்திகேயன்!

Thursday 5 February 2015

அருணாச்சல அனுபவம் - 1


​வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

"அருணாசலம்" என்கிற நாமத்தை ​நினைக்கும் பொழுதும், உச்சரிக்கும் பொழுதும் எதோ ஒரு இனம் புரியாத ஒரு அதிர்வு உள்ளே பரவுவதை எப்பொழுதும் உணர்ந்துள்ளேன். ஒரு நண்பனிடம், சொல்லவேண்டிய விஷயங்களை கொட்டித் தீர்த்தவுடன் நம்முள் விரியும் நிம்மதி போல், உச்சரித்த, நினைத்த நேரத்திலேயே, அமைதி கிடைக்கும். அதனால், அருணாசலம் என்கிற திருவண்ணாமலை என்னை பல முறை கவர்ந்து இழுத்துள்ளது என்று சொல்வதுதான் சரி.

போன அனுபவத்தில் சொன்னது போல், அருணாசலத்தில், ஒவ்வொரு வினாடியும் ஏதேனும் ஒரு அதிசய நிகழ்வு நடந்து கொண்டேதான் இருக்கும். நம் மனித சக்திக்கு அப்பால் நடக்கிற விஷயங்கள் எல்லாமே நமக்கு அதிசயம் தானே! அதுபோல் மேலும் நடக்கவேண்டும் என்று மனம் விரும்பும் என்பதுதான் உண்மை.

தமிழ்நாட்டின் வடக்கு பகுதிக்கு ஏதேனும் யாத்திரையாக சென்றால், திரும்பி வரும் வழியில், திருவண்ணாமலைக்கு சென்று அப்பனை தரிசித்து, நேரம் இருந்தால் ஒரு கிரிவலமும் செய்தவிட்டு வருவதை ஒரு வழக்கமாக கொண்டிருந்தேன்.

அப்படி ஒரு முறை சென்னையில் உறவினர் வீட்டுக்கு செல்ல வேண்டிய அவசியம் வந்தது. திரும்பி வரும் வழியில் திருவண்ணாமலையில் இறங்கினேன். எங்கோ சாப்பிட்டது ஒத்துக் கொள்ளவில்லை, உடலை வருத்தியது. அதை பொருட்படுத்தாது ஒரு நாள் இருந்து கிரிவலம் செய்துவிட்டு செல்லலாம் என்று தீர்மானித்தேன்.

திருவண்ணாமலையில் கால் பதித்த நேரம் மாலை 5.30. தங்கும் விடுதியில் ஒரு அறை எடுத்து, உடல் சுத்தம் செய்து கொண்டு அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க சென்றேன். தனிமை எனக்கு மிக பிடித்தமான விஷயம். பெரிய கோபுரத்தில் உள்ள கணபதியை பிரார்த்தித்துவிட்டு, முருகரை தரிசனம் செய்து அருணாச்சலேஸ்வரர் சன்னதியை நோக்கி நடந்தேன்.

பொதுவாகவே, கூட்டமும், சத்தமும் நிறைந்திருக்கும் அந்தக் கோவிலில் அன்று ஒரே நிசப்தம். அங்கங்கே, ஓரிருவர் அமர்ந்திருந்தனர். இரண்டே நிமிடத்தில் அருணாசலேச்வாரரின் முன் போய் நின்றேன். வெளியே வந்த பூசாரி, கூட்டம் அதிகம் இல்லாததால், என்னை அழைத்து உள்ளே கொண்டு நிறுத்தினார்.

எனக்கும், அருணாசலேஸ்வரருக்கும் ஒரு மூன்று அடி தான் தூரம். அனுமதித்தால், அங்கேயே அவர் பாதத்தில் விழுந்துவிடுவேன் என்கிற மன நிலை. இருந்தும் மனதை கட்டுப்படுத்திக் கொண்டு, பூசாரி காட்டிய தீபாராதனையை ஏற்று வாங்கிக் கொண்டு, பிரசாதம் பெற்றுக் கொண்டேன்.

என்ன வேண்டிக் கொள்ள? என்ன கேட்க? என்று மனம் எண்ணியது. அருளியது எல்லாமே நிறைவாக இருப்பதை உணர்ந்த மனது, வேறு ஏதும் வேண்டவில்லை. இருப்பினும், ஐயனை கண்ட பொழுதில், பேச வேண்டுமே! மனதுள் பிரார்த்தித்துக் கொண்டேன்.

"இறைவா! நாளை விடியற்காலையில் உன்னை கிரிவலம் செய்ய ஆசைபடுகிறேன். உடல் பாதிப்பை நிவர்த்தி செய்து, கூட துணை இருந்து, கிரிவலத்தை நல்லபடியாக நடத்தி, வாங்கிக் கொள்ளுங்கள்" என்றேன். வேறு எதுவும் தோன்றவில்லை.

வெளியே வந்து மூன்றுமுறை பிரகாரத்தில் பிரதட்சிணம் செய்துவிட்டு, உண்ணாமுலையம்மன் சன்னதிக்கு வந்தேன். அங்கும் நல்ல தரிசனம், கூட்டமே இல்லை.

என்னவாயிற்று, இன்று எல்லாமே சுலபமாக அமைத்துக் கொடுக்கிறார்கள். எப்பொழுதும் தரிசனத்துக்கு 45 நிமிடங்களாவது ஆகிற அளவுக்கு கூட்டம் இருக்கும். இன்று எண்ணிப்பார்த்தால், அரிதாகவே பக்தர்கள் இருக்கிறார்கள். ஹ்ம்ம்! என்னவோ நடக்கிறது, ஆனால் என்னவென்று புரியவில்லை.

அம்மையின் அருளோடு வெளியே வந்து கோவிலின் ஈசான மூலையில் இருக்கும் பஞ்சலிங்க சன்னதிக்கு வந்து அங்கிருக்கும் ஆகாய லிங்கத்தின் முன் அமர்ந்து சற்று நேரம் த்யானத்தில் அமர்ந்தேன். மனம் இலகுவாக படிந்தது. தூரத்தில் சன்னமாக யாரோ "நமசிவாய" என ஜெபம் செய்வது கேட்டது. நானோ, என் முன் இருக்கும் லிங்கத்தை அப்படியே உள்வாங்கும் எண்ணத்தில் அமர்ந்தேன். 30 நிமிட த்யானத்துக்குப் பின், புற உலக உணர்வுக்கு வந்தேன். மனம் மிகவும் அமைதியாக மாறிவிட்டது.

"இது ஒரு நல்ல தொடக்கம்" என்று என் மனம் சொல்லியது.

உணவருந்தி, காலை 3 மணிக்கு அலாரம் வைத்துவிட்டு, உறங்கத் தயாரானேன்.

உறங்கும் முன் எப்பொழுதுமே பிரார்த்தித்துவிட்டு கிடப்பது என் பழக்கம். அன்றும் "அருணாச்சலா! சரியான நேரத்துக்கு எழுப்பி விட்டுவிடு" என்று கூறிவிட்டு உறங்கினேன்.

உறக்கத்தில், கனவில், அருணாச்சலத்தை சுற்றி எங்கெல்லாமோ நுழைந்து, அலைகிற நிலைதான் தென்பட்டது. என்னென்னவோ விதவிதமான காட்சிகள்.

சரியாக காலை 2.59 மணிக்கு, யாரோ தொடையில் தட்டி "எழுந்திருடா!" என்று உணர்த்துவது போல் உணர்ந்தேன். நேரம் என்னவாயிற்று என்று பார்க்கவும், முன்னரே நான் வைத்திருந்த அலாரம் 3 மணி என்றது. ஹ்ம்ம். சொல்லிட்டுப் படுத்தால், சரியான நேரத்துக்கு எழுப்பிவிடுவார் போல இருக்கு, என்று அன்று உணர்ந்தேன்.

சற்று நேரம் அமர்ந்து த்யானத்தில் ஈடுபட்டேன். குளித்தபின், கிரிவலம் செல்ல அறையை விட்டு கிளம்பினேன்.

வெளியே தை மாதத்து பனி கடுமையாக தாக்கியது. இதை நினைத்துக் கொண்டிருந்தால் கிரிவலம் போக முடியாது என்று தீர்மானித்து, வருவது வரட்டும் என பெரிய கோபுரத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன். தெருவில் யாருமே இல்லை. ஒன்றிரண்டு பைரவர்கள் அங்கும் இங்கும் நின்று கவனித்துக் கொண்டிருந்தனர். ஆங்காங்கே ஒருசிலர் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.

கோவில் வாசலை அடைந்த உடன் ஆச்சரியப் பட்டேன். உள்ளே செல்லும் வழி எங்கும் சாதுக்கள் தலை வரை போர்த்திக் கொண்டு உறங்கினர். நடுவே நடந்து செல்ல ஒரு வழி. கோபுர விநாயகருக்கு முன் இருக்கும் கதவு வரை செல்லலாம். மற்றபடி கதவு பூட்டியே இருந்தது.

கதவின் அருகில் சென்று, கண் மூடி த்யானித்து, என் பிரார்த்தனையை மனத்தால் இறைவனிடம் வைத்தேன்.

"அய்யனே! இது இன்று கிரிவலம் செய்யச் செல்கிறது. உடல் நிலை பாதித்திருந்தாலும், எல்லாவற்றையும் நீ பார்த்துக் கொள்வாய் என்ற நம்பிக்கையில் இறங்கியிருக்கிறது. எங்கும் மிகுந்த தனிமை காணப்படுகிறது. அரவமே இல்லை. தனியாக கிரிவலம் இதுவே முதல் முறை. உன் அருள் வேண்டும், அருகாமை வேண்டும், வழி நடத்தல் வேண்டும். உடனிருக்க வேண்டும். மனம் ஒன்றி உன்னிலே இருந்து கிரிவலம் பண்ணவேண்டும்!

இந்த கிரிவலத்தை ஏற்றுக் கொண்டு, யாரெல்லாம் தன் பிரச்சினைகளை இதனிடம் சொன்னார்களோ, அதை எல்லாம் உடனே நிவர்த்தி செய்து கொடு. எல்லோரும் நன்றாக வாழ்ந்திட அருள்புரிவாயாக" என்றேன்.

எங்கும் அமைதி நீடித்தது. ஒரு வினாடிக்குப் பின் .............

பெரிய கோபுரக் கதவுக்குப் பின்னால் இருந்து என் பிரார்த்தனைக்கு பதில், தெளிவான தமிழில் செய்யுள் வடிவில் வந்தது.

தொடரும்!