​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 31 August 2017

சித்தன் அருள் - 719 - அருள் சுகம் தந்த சுந்தரகாண்ட அனுபவம் - 4


இனி வியாழக்கிழமை மட்டும்தான் ஸ்ரீராமசரிதை அகத்தியரால் உரைக்கப்படும் என்று அறிந்தபின் மனம் அடங்கிப்போனது. அடுத்த வார வியாழக்கிழமைக்காக காத்திருந்தேன்.

இருபது வருடங்களுக்கு முன்னால் அனுமனை தொழுதபோது வேண்டிக்கொண்டதை, இங்கு நினைவு கூறுகிறேன். அப்பொழுதே, அனுமன் கொடுத்த உத்தரவு இதுதான்.

"தலையாய சித்தாராம் அகத்தியன் தானிருக்க - அன்னவரே உனக்கு வழிகாட்டுவார்" என்று வாழ்த்தி மறைந்தார் அனுமன். அது இப்பொழுது நடக்கிறது. அகத்தியர் வழிகாட்டுதலில், ஸ்ரீராம சரிதை முழுதும் எனக்கு உரைக்கப்பட்டாலும்,  அதில் ஒரு சிறு துளிதான் "சுகம் தரும் சுந்தரகாண்டம்" என்கிற தலைப்பில் வெளி வரப்போகிறது என்பதிலிருந்து, இறைவனின் சூட்ச்சுமம் ஓரளவுக்கு எனக்கு புரியத் தொடங்கியது. இன்ன வியாதிக்கு இன்ன மருந்து என வைத்தியன் பார்த்துப் பார்த்துக் கொடுப்பது போல, உலக மக்களின் கர்ம வினைக்கு என்ன தேவையோ அதை மட்டும் இறைவன் அருளுகிறார் என்பதே உண்மை.

வியாழக்கிழமை அன்று பிரம்ம முகூர்த்தத்தில் உடலையும், மனதையும் சுத்தப்படுத்திக் கொண்டு மூத்தோனையும், அனுமனையும் பிரார்த்தித்து, ஸ்ரீராமர் சன்னதியில் வைத்திருந்த நாடியை எடுத்து, அகத்தியரை மனதார பிரார்த்தித்து, காத்திருந்தேன்.

அகத்தியப் பெருமான் நாடியில் வந்து உரைக்கலானார்.

"வனவாசம் சென்ற சீதை ஸ்ரீராமபிரானின் அனைத்து தேவைகளையும், அரண்மனையிலிருந்தால் எப்படி கவனித்துக் கொள்வாளோ அப்படியே ஒரு பத்தினியின் மன நிலையில் அமர்ந்து கவனித்துக் கொண்டாள். ஸ்ரீராமரின் தேவைகள் மிக மிக குறைந்து போனதால், அவர் அனுமதியுடன் பர்ணசாலையை சுற்றியுள்ள வனங்களில் தனியே புகுந்து, காய், கனிகளை பறித்து, பூக்களை பறித்து மாலையாக உருவாக்கி, ஸ்ரீ ராமரின் பாதத்தில் சமர்ப்பித்து, மகிழ்ந்து போவாள். முதலில் இலக்குவனை துணையாக அனுப்பி வைத்த ராமன், சில நாட்களில் சீதையை வனத்தில் தனியாக போக விட்டது இலக்குவனுக்கே வருத்தமாக இருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ஸ்ரீ ராமன் இட்ட ஆணையை சிரம் தாழ்த்தி ஏற்று வந்தான். விதி தன் வேலையை நேரம் பார்த்து தொடங்குவதை ஸ்ரீ ராமனும் உணர்ந்திருந்தால், அனைத்தும் அதன் போக்கிலேயே செல்லட்டும் என்று தான் சீதையின் பாதுகாப்பை ஸ்ரீராமன் விலக்கியதாக" அகத்திய பெருமான் உரைத்த பொழுது, அதைக் கேட்ட எனக்கே, உள்ளுக்குள் எங்கேயோ வலித்தது.

தெய்வமே மனித அவதாரம் எடுத்திருக்க, விதி பலம் பெறட்டும் என்று ஸ்ரீராமனே அமைதியாய் இருக்க, அந்த விதியின் சக்தி சூர்ப்பணகை, மாரீசன், ராவணன் உருவில் வந்து ஒரு சில நாடகத்தை நடத்தி, சீதையை கைது செய்து லங்காபுரியில் சிறைவைத்தது என்று அகத்தியர் கூறினார்.

"இப்படிப்பட்ட விதியின் விளையாட்டுதான் இன்னொரு உருவில், காலகாலமாக ஸ்ரீராமனையே நினைத்து தவம் செய்து காத்திருக்கும் வாயு புத்திர அனுமனை ஸ்ரீராமரிடம் கொண்டு சேர்த்தது."

"அனுமனுக்கு தன் பிறப்பின் அர்த்தம் விளங்கத்தொடங்கியதும் அந்த நேரத்தில் தான். இங்கு ஒரு விஷயத்தை கவனி மைந்தா! ஒரே நேரத்தில் ஒரு விஷயத்தில், விதியானது இரு விதமாக, சிறப்பானதாகவும், சிரமம் தருவதாகவும் அமைந்திருக்கிறது. விதியின் விளையாட்டே இப்படித்தான். அதை மனிதர்களால் புரிந்து கொள்ளவே முடியாது." என்றார்.

ஸ்ரீராமரும், இலக்குவனும் சீதையை தேடித் தேடி மனம் உடல் இரண்டும் சோர்ந்து போனதை தெரிவித்த பொழுது எனக்குள்ளேயே ஒரு அசதி பரவியது. மனத்தால், அகத்தியர் உரைப்பதை அப்படியே உணர்ந்து, ஸ்ரீராமபிரானுக்கு ஒரு சிரமம் என்ற பொழுது அதன் வீச்சம் என்னுள் பரவியதினால், என்னுள்ளும் அந்த சோர்வு வந்ததை நன்றாக உணர முடிந்தது.

ஸ்ரீ ராமகாதை வனத்தினுள் புகுந்தபின், அனுமனுக்கு ஸ்ரீராம இலக்குவனின் தரிசனம் கிடைத்தவுடன், என் மனது தன் இயல்பு நிலைக்கு வந்தது. அடடா! அனுமன் வந்து சேர்ந்ததும் என்னவோ ஒரு பாதுகாப்பு உணர்வு என்னுள் புகுந்து, என் மனதையும் நேர்படவைத்தது, என்பதே உண்மை.

இந்த பகுதியிலிருந்து "சுந்தரகாண்டம்" துவக்கம் என்று புரிந்த பொழுது மனம் சந்தோஷப்பட்டது.

"என்ன? அனுமனின் சக்தி உன் மனதையும் சமன்படுத்தி, புத்துணர்ச்சியை தருகிறதோ? யாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். உனக்குமட்டுமல்ல, இவ்வுலகத்தில் உள்ள எல்லா உயிர்களுக்கும், பாத்துகாப்பு உணர்வை கொடுப்பதே அனுமனின் நாமம். அவரை நினைத்த மாத்திரத்திலேயே மனதுக்கு பிடிக்காத பிரச்சினைகள் விலகிவிடும் என்பதை இன்னும் மனிதர்கள் புரிந்து கொள்ளவில்லை. அனுமனுக்கு பிடித்ததோ "ராமநாமம்". அதை ஜெபித்துக் கொண்டிருந்தாலே தானாக பிரியப்பட்டு அனுமன் அதை ஜெபிப்பவர்களுக்கு பாதுகாப்பை கொடுத்து விடுவான். இதை முதல் குறிப்பாக எடுத்துக் கொள்" என்று அகத்திய பெருமான் கூறிய பொழுது, நானே என் கனவு மெய்படப்போகிறது என்கிற சந்தோஷத்தில் திளைத்துப் போனேன்.

கிடைத்த வாய்ப்பை விடக்கூடாது என்று தீர்மானித்து உடனேயே ஒரு புத்தகத்தை எடுத்து முதலில் மூத்தோனை வணங்கி, அனுமனை வணங்கி, அதன் மேல் புறத்தில் "ஸ்ரீ ராமஜெயம்" என்று எழுதி, அகத்தியர் அடுத்து "எழுதிக்கொள்" என்று கூறப்போகிற தகவலுக்கு காத்திருந்தேன்.

அகத்தியர் கூறலானார்.

"கம்பனும், வால்மீகியும்  எழுதிய ஸ்ரீ ராமா சரிதையில் அனைத்து ஸ்லோகங்களும் இரு மொழிகளில் இருந்தாலும், வால்மீகி எழுதிய ராமாயணத்தில் "ஸ்ரீ ராம சரிதையின்" சக்தி மிகுந்த ஸ்லோகங்களை சுட்டிக்காட்டி, எந்த எந்த சர்கங்கள், எப்படிப்பட்ட பிரச்சினைகளை கடந்துவர ஒரு மனிதனுக்கு உதவி செய்யும் என்பதை தெளிவாக கூறவும். இதை நம்பி பாராயணம் செய்பவர்கள் நிச்சயமாக தங்கள் கர்மாவை கடந்துவிடுவார்கள். இது ஸ்ரீராமர், ஸ்ரீ அனுமன் அருளால் அடியேன் அகத்தியனுடைய வாக்கு. அதுதான் இறைவன் சித்தம். அதை சிரம் மேற்கொண்டு இட்ட பணியை செவ்வனவே  செய்வதே என்னுடையவும், உன்னுடையவும் வேலை. புரிந்ததா?" என்று ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை. என்னையே ஒருமுறை கிள்ளிப்பார்த்துக் கொண்டேன். நான் காண்பது, கேட்டது உண்மைதானா? "அடடா! அகத்திய பெருமான் எப்படிப்பட்ட வேலையை எனக்கு வாங்கி கொடுத்திருக்கிறார். யாருக்கு இப்படிப்பட்ட யோகம் அமையும். இது ஒன்று போதுமே, இப்படிப்பட்ட ஒன்று போதுமே. நேராக இறைவன் பாதத்தில் சென்று அமர்ந்து விடலாமே" என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தேன்.

"என்ன? குறிப்பெடுக்க தயாராகிவிட்டாயா? கூறத்தொடங்கலாமா?" என்று ஒரு கேள்வியை கேட்டார்.

இப்படியெல்லாம் ஒரு ஆசிரியனின் குணத்தோடு அகத்திய பெருமான் ஒரு பொழுதும் என்னிடம் பேசியதில்லை.

மிகுந்த பக்தியுடன் முதலில் அகத்திய பெருமானுக்கு நன்றி சொல்லிவிட்டு 

"அடியேன்! தயாராக காத்திருக்கிறேன்" என்றேன்.

சித்தன் அருள்......... தொடரும்!

       

Thursday 24 August 2017

சித்தன் அருள்!



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களால், இந்த வார 'சுகம்தரும் சுந்தரகாண்டம்" தொகுப்பை தட்டச்சு செய்ய முடியவில்லை. ஒரு வார இடைவேளைக்குப்பின் மீண்டும் சந்திக்கிறேன்!

அக்னிலிங்கம்!

Thursday 17 August 2017

சித்தன் அருள் - 718 - அருள் சுகம் தந்த சுந்தரகாண்ட அனுபவம் - 3

​​
அகத்தியப் பெருமானின் வார்த்தைகளில் ஸ்ரீராம சரிதத்தை ருசித்த எனக்கு இருப்புக் கொள்ளவே இல்லை. அவரும் அதற்குப் பிறகு வந்த நாட்களில், வேறு விஷயங்களை கூறினாரே தவிர, ஸ்ரீராமா காதையை தொடர்வது பற்றி மூச்சு விடவில்லை. என் எதிர்பார்ப்போ, ஸ்ரீராம காதை. அவரோ உலக விஷயங்களை பற்றி பேசினார்.

ஒரு நாள் என் அவாவை கட்டுப்படுத்த முடியாமல் "என்ன அகத்திய பெருமானே, இப்படி பண்ணுகிறீர்களே. ஸ்ரீராம காதை அப்படியே நிற்கிறதே!" என்று கேட்டுவிட்டேன்.

"அடேய்! மானிடா! எமக்குத் தெரியாதா எப்பொழுது உரைக்க வேண்டும் என்று? ஏன் அவசரப்படுகிறாய். அனைத்தையும் உரைப்பேன். பொறுமையாக இரு. எதற்கும், காலம் நேரம் பார்க்கிற உனக்கே அது புரியவில்லையா? குருவாரம் என்பது குருவருள் கூட்டுவது. அன்று எல்லா சித்தர்களும், முனிவர்களும், மகான்களும், தன்னை வழிபடுகின்ற நல்ல உள்ளங்களை கரையேற்ற நிறைய அறிவுரைகளை தருவார்கள். அப்படிப்பட்ட நல்ல நேரத்திற்காகத்தான் உன்னை காத்திருக்க வைத்திருக்கிறேன். ஸ்ரீ ராமரையும், அனுமனையும் உன் குருவாக போற்றி வாழ்ந்து வரும் உனக்கு, அவர்கள் சாட்சியாக இது உரைக்கப்படவேண்டும், என்பதே என் அவா. இன்னும் நிறைய அதிசயங்களை போகப்போக நீ உணர்வாய். ஆகவே, வரும் குருவாரத்துக்காக காத்திரு" என்று மென்மையாக சொன்னார். ஆனால் அதுவே என்னை கடுமையாக திட்டியதாகத்தான் உணர்ந்தேன்.

[அகத்தியர் அடியவர்களே! ஏன் "சித்தன் அருள்" வியாழக்கிழமை அன்று மட்டும் வெளியிடப்பட்டது, அதுவும் சூரிய உதயத்துக்கு முன் உள்ள பிரம்ம முகூர்த்தத்தில் பதிவு செய்யப்பட்டது என்பது இப்பொழுது தெளிவாகியிருக்கும் என்று எண்ணுகிறேன். அதை வாசிப்பவர்கள் மனதில் புகுந்து சூக்ஷுமமாக விஷயத்தை தெளிவாக்குவேன் என அகத்தியப் பெருமான் ஆணையிட்டதினால்தான்.]

"சே! என்ன இது. எத்தனை முறை அடி வாங்கினாலும் என் மனது நாய் வால் போல் நிமிராமலேயே நிற்கிறது" என்று என்னையே நான் கடிந்து கொண்டேன்.

கேட்ட தவறான கேள்விக்கு அகத்தியரிடம் மன்னிப்புக் கேட்டேன்.

"போகட்டும் பாதகமில்லை! ஸ்ரீராம காதையின் மீது நீ கொண்ட அவாவால், இவ்வுலகு மேம்பட உன் சார்பாக ஏதேனும் இந்த மனித குலத்துக்கு செய்யவேண்டுமே என்கிற எண்ணத்தால் அந்தக் கேள்வி வந்தது என்று யாம் அறிவோம். இந்த ராம கதையின் "சுந்தர காண்டம்" பகுதியை விளக்கும் பொழுது நீ குறிப்பெடுத்துக் கொள்ளலாம். அந்த பதிவிற்கு "சுகம் தரும் சுந்தர காண்டம்" என பெயர் வைத்துவிடு" என்று தலைப்பையும் அவரே எடுத்துக் கொடுத்தார்.

அந்த வார வியாழக்கிழமைக்காக காத்திருந்தேன்.

வியாழக்கிழமை வந்தது. அதிகாலை எழுந்து நீராடி, பூசை அறையில் அமர்ந்து மூத்தோனையும், அனுமனையும் த்யானம் செய்து அகத்திய பெருமானின் நாமத்தை கூறி "ஸ்ரீராமரின் காதையை" அருளுமாறு வேண்டிக்கொண்டேன்.

நாடியில் அகத்திய பெருமான் வந்து அருளலானார்.

"ஒவ்வொரு மனிதருக்கும், திருமணத்தில் திருப்புமுனை அமையும். அவன் வாழ்வே சில வேளை தலைகீழாக மாறிவிடும். மனித அவதாரம் எடுத்த ஸ்ரீராமருக்கும் அதுதான் நடந்தது. அவரது திருமணம்தான் இராமாயண காவியம் உருவாக காரணமான திருப்புமுனையாக அமைந்தது. உலகுக்கே, தன் செயலால் உணர்த்த வந்த தெய்வம், அதன் பின் நடந்ததை எல்லாம் ஒரே மனநிலையில் எடுத்துக் கொண்டதினால், மிகப் பெரிய சித்தத்தன்மையை அடைந்தது. சித்தர்களாகிய நாங்களே "அடடா! எந்த தவமும், யோகமும், பயிற்சியும் இல்லாமலேயே கூட, எதையும் அதனதன் போக்குப்படி ஏற்றுக்கொண்டு, சந்தோஷ, வருத்தமின்றி வாழ்ந்தாலும், மிகப் பெரிய சித்தனாக முடியும் என்கிற பாடத்தை, அன்று அவரிடமிருந்து கற்றுக் கொண்டோம். நாங்களே எங்களை பார்த்து வெட்கப்பட்டுக்கொண்டோம் என்றால் பார்த்துக்கொள்" என்று மனம் திறந்து ஸ்ரீராமபிரானை பாராட்டி மகிழ்ந்தார்.

ரிஷிகள், முனிவர்கள், முனி புங்கவர்கள், நாரதர், தேவ கணங்கள், சித்தர்கள் புடை சூழ மங்கள நாளில், ஸ்ரீராமபிரான் சீதா தேவியை தன் துணைவியாக ஏற்றுக்கொண்ட நிகழ்ச்சியை அகத்திய பெருமான் விவரித்த பொழுது, நானே அங்கிருந்து அதை நேரில் கண்டது போல் என் மனக்கண்ணுள் அத்தனையும் விரிந்தது. அப்பப்பா! மனம் அத்தனை புளங்காகிதம் கொண்டது. யாருக்கு மறுபடியும் அப்படிப்பட்ட காட்சி கிடைக்கும். என்னே பாக்கியம்! என நினைத்து 

நாடியை ஸ்ரீராமர் பாதத்தில் வைத்துவிட்டு, எழுந்து அப்படியே சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தேன்.

"அய்யனே! இப்பிறவியின் பேற்றை பெற்று விட்டேன்! மிக்க நன்றி!" என அகத்தியருக்கு நன்றியை கூறினேன்.

"இனிமேலும் இதுபோல் அரிய நிகழ்ச்சிகள் இந்த ராமர் சன்னதியில் நடக்கும், உணருவாய், காண்பாய். நடந்தபின் அதை உரைக்கிறேன். ஒன்று தெரியுமோ உனக்கு! ராமர் தன் அபிமான அனுமனை பெருமை படுத்துவதற்காகவே, "சுகம் தரும் சுந்தரகாண்டம்" என்கிற தலைப்பை நீ பதிவு செய்யப்போகிற விஷயங்களுக்கு வழங்கினார். அவர் எடுத்துக் கொடுத்த தலைப்பு அது. இறை, தான் வெளிப்படுத்த நினைக்கிற விஷயங்களுக்கு, தானே பொருள் உணர்த்தும். அது அந்த தலைப்பில் உள்ளது. பிறகு நிதானமாக அதை உணர்ந்தது ரசித்துப்பார்" என்றார். ["சித்தன் அருள்" தலைப்பை, அகத்தியப்பெருமான்தான் எடுத்துக் கொடுத்தார். அந்த அருளைத்தான், இன்றும் நாம் அனைவரும் பருகிக்கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளவும்.]

நான் அசைவுற்று, அமைதியாக அமர்ந்திருந்தேன். ஒன்றுமே தோன்றவில்லை.

ஸ்ரீராமர் சீதையின் குடும்ப வாழ்க்கையின் தொடக்கத்தில்தான் பலரது விதி ஒரே நேரத்தில் தன் வேலையை தொடங்கியது என்று, தசரதன், கைகேயி, ராமர், கூனி, பரதன், லக்ஷ்மணன் போன்றோரின் வாழ்க்கை விதி முடிச்சை திறந்து காட்டினார். விதியே, ராமபிரான் இத்தனை பெரிய விஷ(ய)த்தை எப்படி எதிர்கொள்கிறார் என்று வேடிக்கை பார்த்தது, என்று அகத்தியர் உரைத்தார். ஸ்ரீராமரோ, எப்போதும் அணியும் பொறுமை என்கிற மன நிலையில் அந்த சூழ்நிலையை எதிர் கொண்டு, விதியையே ஏமாற்றினார். தெய்வமே மனித அவதாரம் இப்பூமியில் எடுத்துவிட்டால், அவர்களும் இப்பூமியின், நவகிரகங்களின், விதியின் கட்டுப்பாட்டுக்குள் அடக்கம் என்று சொல்லாமல் சொல்லி, பணிந்து காட்டினார் ஸ்ரீராமர்.

ஸ்ரீராமகாதை விதியின் விளையாட்டால் வனவாசம் சென்றது. மன்னனாக ராஜ்ய பரிபாலனம் செய்ய வேண்டிய தெய்வம், விதிக்கு பணிந்து, மரவுரி தரித்து காட்டில் வாழ்ந்ததை அகத்திய பெருமான் விவரித்தபோது, அதை கேட்ட நானும், உள்ளுக்குள் காட்டில் உணரப்படும் குளிர்ச்சி பரவுவதை உணர்ந்தேன். இதிலிருந்தே அகத்தியப் பெருமான் "ஸ்ரீராம காதையை" எப்படி உள் உணரும்படி விளக்கினார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

"இப்படிப்பட்ட உண்மையான விளக்கங்களை புத்தகமாக லோகஷேமத்துக்காக, மனிதர்கள் தங்கள் பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு மேம்பட வெளியிட்டால், அந்த நிலைமை எப்படி இருக்கும்?" என்ற கேள்வி என்னுள் எழுந்தது.

"என்ன மறுபடியும் கேள்வியா? பொறுமையாக இரு. நேரம் வரும்போது நீயே அதை உணருவாய்." என்றார் அகத்தியர் நான் கேட்காமலேயே.

"இன்று இங்கு நடக்கிற இன்னொரு விஷயத்தையும் கூறுகிறேன். ஸ்ரீ ராமபிரானின் வாழ்க்கை தொடக்கம் முதல் கடைசி வரை கூட இருந்து கவனித்த அகத்தியன் அவர் காதையை கூறுகிறான். அதை கேட்கவே புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும் என்று அத்தனை சித்தர்களும் இந்த அறையில் அமர்ந்து மெய் உருக கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இதை விட மிகப் பெரிய பெருமை உனக்கெதற்கடா" என்று உண்மையை போட்டுடைத்தார்.

ஒரு வினாடிக்குள் நான் அதிர்ந்து போனேன்.

"சரி! இனி அடுத்த முகூர்த்தத்தில் தொடருவோம். இன்று இத்தனை போதும்" என்று அகத்தியப் பெருமான் அன்றைய வகுப்பை நிறுத்திக் கொண்டார்.

நான் பொதுவாக "எல்லா சித்தர்களையும் ஒரு நிமிடம் நிற்கச்சொல்லுங்கள்" என்று அகத்திய பெருமானிடம் கூறிவிட்டு 

எழுந்து 

சாஷ்டாங்கமாக கீழே விழுந்து நமஸ்கரித்தேன்.

அப்படியே ஒரு பத்து நிமிடம் இருந்திருப்பேன். யாரோ முதுகில் தட்டி எழுப்புவதுபோல் தோன்ற, நாடியை ஸ்ரீராமர் பாதத்தில் வைத்துவிட்டு 

"ஓம் அகத்தீசாய நமஹ!" என்று த்யானத்தில் அமர்ந்தேன்.

சித்தன் அருள்................. தொடரும்! 

Thursday 10 August 2017

சித்தன் அருள் - 717 - அருள் சுகம் தந்த சுந்தரகாண்ட அனுபவம் - 2


அகத்தியர் நாடியில் வந்து அருளலானார்.

"இறைவன் அருள் துணை கொண்டு, இறைவன் உத்தரவால், இந்த உலகத்துக்காக, வாழும் அனைத்து உயிர்களும் தன்னை உணர்ந்து, இறைவனை உணர்ந்து உய்வு பெறவும், இந்த இறைவன் காதை உனக்கு உரைக்கப்படுகிறது. இந்த காதையில் உள்ள முக்கியமான சத்துக்கள் மட்டும் பிறரை சென்று சேர்ந்தால் போதும். ஆதலால் இதை எழுத்து வடிவத்தில் வெளியிடும் பொழுது, இறை என்ன நினைத்ததோ அது மட்டும் வெளியிடப்பட வேண்டும். ஸ்ரீ ராம காதை முழுமையாக உனக்கு உரைக்கப்படும்.

இவ்வுலக மனிதர்கள் பூர்வ கர்மவினையினால் நிறையவே வருத்தங்களை, துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். என்ன தான் செய்தாலும், விதி அதன் பிடியை தளர்த்துவதில்லை. இறை மனம் கனிந்து, அந்த விதியை தளர்த்திட, சூசகமாக தன் அருளை ராமகாதையின் எந்தெந்த ஸ்லோகங்களில் மறைத்து வைத்திருக்கிறது என்பதை உனக்கு உரைக்கிறேன். அதை வெளியுலகுக்கு தெரியப்படுத்து. என் வாக்கில் ராமாயணம் முழுவதும் உனக்கு உரைக்கப்படும். அதை நீ உணர்வாய்!" என்றதும் 

நான் இடைமறித்து "ஒரு சிறு விண்ணப்பம். ராமாயணம் முழுவதும் நீங்கள் உரைக்கப்படப்போகிற அதே வார்த்தைகளில், வெளியிட்டால், உங்கள் பரிபூரண அருளுடன், ஆசைப்பட்டதை நடத்திவிட்டோம் என என் மனது திருப்திப்படுமே! அப்படிப்பட்ட அருளை தரக்கூடாதா?" என்று பெருத்த ஆசையுடன் அகத்தியப் பெருமானிடம் கேட்டுவிட்டேன்.

"உண்மை தான்! இந்த உலகம் ஸ்ரீராமனின் காதையை மேலும் உணர்ந்து மேம்படும். ஆனால், அதற்கு இறை அனுமதி அளிக்கவில்லை. அது தெய்வீக சூட்ச்சுமங்களை உட்கொண்டது. தற்போதைக்கு, சுட்டிக் காட்டப்படும் ஸ்லோகங்களை, அதை கூறுவதானால், ஒரு மனிதன் எப்படிப்பட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம் என்று தெரிவித்து, இறைக்கு, அவர் இட்ட கட்டளைக்கு அடி பணிந்து கொடுத்த வேலையை செவ்வனவே செய்து, உன் மன ஆசையை தணித்துக்கொள். நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் பின்னால் ஒவ்வொரு காரணம் உண்டு. மனதை ஆசைக்கு உட்படாமல் அடக்கி, தெரிவிக்கின்ற விஷயங்களை அதன்படியே உள்வாங்கி, எதெது சுட்டிக் காட்டப்படுகிறதோ, அதை மட்டும் பதிவு செய்து, இந்த உலக நன்மைக்காக எழுத்துருவில் மாற்றி விடு. மற்றவற்றை இறைவன் அருளால், நான் பார்த்துக் கொள்கிறேன். 

அடேய் மைந்தா! இத்தனை யுகங்கள் ஓடிய காலத்தில், எத்தனையோ முறை விண்ணப்பித்தும், இறைவனே தன் சரிதையை, என் நாவால் கூற, இப்பொழுதுதான் அனுமதி தந்தான். எனக்கு அனுமதியை பெற இறைவனிடம் எத்தனை போராடினேன் என்று எமக்குத்தான் தெரியும். எனக்கு அனுமதி கிடைத்ததும், உடனேயே அது மானிட ஜென்மத்துக்கும் இவ்வுலகில் கிட்டட்டும் என்று உன் வழியாக அருளுகிறேன். இதன் அர்த்தத்தை முதலில் புரிந்துகொள். சித்தன் மனநிலை அப்போது உனக்கு புரியும்!" என்று ஒரே போடாகப் போட்டார்.

எனக்கு முழுவதும் புரிந்து போயிற்று. சப்த நாடியும் அடங்கிவிட்டது.

பொதுவாக, மனிதர்களுக்கு, துன்பம் வரும்போது, இது எதனால் வந்தது என்று உணரும்போது சப்த நாடியும் அடங்கிவிடும். ஒரு நல்ல விஷயத்தில், நடந்த உண்மை புரியும் பொழுது, சப்த நாடியும், நெஞ்சு அதிர அடங்கியதை அன்றுதான் உணர்ந்தேன்.

நாம் மனிதர்கள், எத்தனை தவறுகள், கட்டுப்பாடில்லாமல் செய்தாலும், நமக்கென இறைவனிடம் வாதாடி, இறை அருளை பெற்றுத்தர சித்தர்கள்தான் இருக்கிறார்கள். அவர்கள் இல்லையேல், அவர்கள் வேண்டுதல்களை இறை அனுமதிக்கவில்லையெனில், இவ்வுலகம் என்றோ மிருகக் குணம் நிறைந்த மனிதக் கூட்டமாகத்தான் இருந்திருக்கும். சித்தர்கள் நம்மிடம் எல்லோரிடமும் பேசாவிட்டாகிலும், நம்மை வழி  திருப்பி, திருத்தி, மன்னிக்க வைத்து, அமைதியாக வாழவைக்க, இறைவனிடம் கொண்டு சென்று நம்மை சேர்க்க, எத்தனை காலமாக, யுகம் யுகமாக, முயன்று கொண்டிருக்கிறார்கள் என்று அந்த நொடியில் எனக்கு புரிந்தது.

இது புரிந்த நொடியில், அமைதியாகிவிட்டேன். இனி அருள்வது அகத்தியர் செயல் மட்டும்தான் என்று தீர்மானித்தேன்.

ஸ்ரீ ராம காதையை தொடங்கும் முன், ராமரின் ஜாதகத்தை அலசி விரிவாக உணர்த்தினார். அதன்  பெருமைகளை,மனிதர்களுக்கு புரியவைப்பதற்காக, தான் ஏற்றுக்கொண்ட அவதாரத்தில் எத்தனை துன்பங்களையும், தாங்க தயார் என்று இறை தீர்மானித்து, எல்லா கிரகங்களும் உச்சத்தில் இருந்த நேரத்தில், இறையே தன் பிறவியை தீர்மானித்தது. அனைத்து கிரகங்களும் உச்சத்தில் இருந்தால், பொதுவாக  மிக உயர்ந்த வாழ்க்கைதான்  அமையும் என்று மனிதர்கள் நினைத்திருந்த காலத்தில், மற்றவர்கள், உயர்ந்தோர் எதிர்பார்க்காத நிலையில், தான் எத்தனை சிரமங்களை தாங்க வேண்டியிருக்கும் என்பதை சூசகமாக உணர்த்துவதற்காக இந்த அவதாரம் எடுத்தார் என்றும் கூறினார்.

அவர் கூறுவதை அனைத்தையும் மிக கவனமாக கேட்டுக் கொண்டே வந்தேன். குறிப்பெடுத்தது மனதில் மட்டும் தான். எழுத்துருவில் கொண்டு செல்ல உத்தரவு கொடுக்கவே இல்லை. ஸ்ரீ ராமபிரானின் சரிதையை பால பருவத்திலிருந்து  தொடங்கி, கல்விக்கான குருகுல வாழ்க்கையை கூறி, ஸ்ரீ ராமாபிரானுக்கே தன் சக்தியை உணர்த்த விஸ்வாமித்ரர் அழைத்து சென்றது, அந்த காலத்திலேயே "தந்தை சொல் மிக்க மந்திரமில்லை" என்பது ஸ்ரீ ராமரை பொறுத்தவரை ஏன் என்று உணர்த்தியது, ஜனகன் மகள் சீதையை யார், எதற்கு அவதாரம் எடுத்தாள் என்று புரியவைத்தது எல்லாவற்றிலும் இறைவனின் முன் தீர்மானங்களை வெளிப்படுத்திய விதம், சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. விஸ்வாமித்ரர் இத்தனை பாக்கியசாலியா என்று அன்றுதான் உணர்ந்தேன்.

விஸ்வாமித்ரருக்கு கிடைத்த அந்த பாக்கியத்தில், ஒரு சதவிகிதம் ஒரு மனிதனுக்கு கிடைத்தால், அடடா! அவன் நேராக மோக்ஷத்துக்கு சென்று,  பெருமாள் காலடியிலேயே கிடந்திருப்பான். அத்தனை பெருமைக்குரியது, என்று தோன்றியது.

ஸ்ரீ ராமகாதை வளர்ந்து கொண்டே சென்றது. அதிலேயே மிக கவனத்தில் இருந்த எனக்கு, என்னுள் ஏற்பட்ட மாற்றங்களை உணர முடியவில்லை. ஆனால் மனம் மிக மிக பஞ்சாக மாறியது என்று மட்டும்தான் கூற முடியும்.

"இத்துடன் இன்று நிறைவு செய்வோம்! மறுபடியும் வேறு ஒரு நல்ல முகூர்த்தத்தில்  உரைக்கிறேன். இனி நான் சென்று பூசை த்யானம் போன்ற நித்தியா கர்மாக்களை செய்ய வேண்டும். ஆசிகள் உனக்கு" என்று நிறுத்திக் கொண்டார்.

"ஒரே ஒரு விண்ணப்பம்!" என்று ஒன்றை கேட்க நினைத்தேன்.

"என்ன இதுவரை எதையுமே பதிவு செய்ய அனுமதிக்கவில்லை என்பது தானே உன் விண்ணப்பம். சரியான நேரம் வரும் பொது இறை அருளியதை யாம் கூறுவோம். அதுவரை பொறுமையாக கேட்டு வா! உனக்கென்ன தெரியும் இறைவனின் உத்தரவு. யாம் பார்த்து கூறுகிறோம். அப்போது போதும்" என்று கேள்வியை/விண்ணப்பத்தை என்னை கேட்கவிடாமல், அவரே பதிலை கூறினார்.

சரிதான்! நாம் கேள்வியை மனதுள் உருவாக்கும் முன்னரே, அதை கண்டுபிடித்து, அதற்கான பதிலையும் கூறுவதில் அவருக்கு நிகர், அவர்தான் என்று உணர்ந்து, மூத்தோனையும், அனுமனையும் வணங்கி நாடியை பூசை அறையில் இருந்த ஸ்ரீ ராமர் விக்கிரகத்தின் பாதத்தில் வைத்தேன். எழுந்து, சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தேன். பிறகு, த்யானத்தில் அமர்ந்து

"ஓம் அகத்தீசாய நமஹ!" என்று ஜெபிக்கத் தொடங்கினேன்.

சித்தன் அருள்................ தொடரும்!




Thursday 3 August 2017

சித்தன் அருள் - 716 - அருள் சுகம் தந்த சுந்தரகாண்ட அனுபவம் - 1


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

திரு.ஹனுமந்ததாசன் ஸ்வாமிகளின், முக தரிசனத்துக்காக அவர் படத்தை வெளியிட்ட பொழுது, நிறைய பேர் கருத்து தெரிவித்திருந்தனர். அதில், ஒருவர், "சுகம் தரும் சுந்தரகாண்டம்" என்கிற பெயரை உச்சரித்திருந்தார். அதை கேட்டதும், அந்த புத்தகத்தை, அவர் உருவாக்கிய பொழுது நடந்த ஒரு சில நிகழ்ச்சிகளை திரு.கார்த்திகேயன் அவர்களிடம் தெரிவித்திருந்தார். அதை அடியேனிடம் தெரிவித்த பொழுது, பின்னர் எப்போதேனும் ஒரு முறை நேரம் வரும் பொழுது தெரிவிக்கலாம் என்று ஒதுக்கி வைத்திருந்தேன். இத்தனை வருடங்களாக மனதை விட்டு விலகி இருந்த அந்த நிகழ்ச்சி இப்போது தெரிவிக்கப்படவேண்டும் என்பது அகத்திய பெருமானின் விருப்பம் போல. விளக்கியது அனைத்தும் அப்படியே மனக்கண் முன் விரிந்தது. ஒவ்வொரு வார்த்தையும், என் நண்பர் கொட்டியது நினைவுக்கு வர, அதை அப்படியே உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

இனி கார்த்திகேயன் அவர்களின் நண்பரின் பார்வையில் இருந்து இதை பார்ப்போம்.

தினமும் அதிகாலை ப்ரஹ்மமுகூர்த்தத்தில் எழுந்து உடலையும், மனதையும் சுத்தி செய்து கொண்டு, த்யானம் ஜபம் போன்றவை செய்து அகத்திய பெருமானை அடிபணிந்து, ஆராதித்து வந்த பொழுது ஒரு நாள் ஏனோ ஒரு வினோதமான எண்ணம் தோன்றியது. அதை அகத்தியரிடமே கேட்டு அருள் பெறலாமே என்று, பூசை அறையில் இருந்த நாடியை எடுத்து வேண்டுதலை கொடுத்த பின் அகத்தியர் பதிலுக்காக காத்திருந்தேன்.

கேட்டது இது ஒன்று தான்.

"ஏற்கனவே இதை கேட்டுவிட்டேன். நேரம் வரும் போது, அருளுகிறேன் என்றீர்கள். காலமும் கடந்து கொண்டிருக்கிறது.  எத்தனையோ பேர் ஸ்ரீராமனின் சரிதத்தை எழுதியிருக்கிறார்கள். தாங்கள் அருள் புரிந்து, அடியேனும் அவர் காதையை எழுதி வெளியிட உதவி செய்யக் கூடாதா?" என்றேன்.

"அவசர புத்தி உனக்கெதற்கு? நேரம் நெருங்கி விட்டது. நானே அதை பற்றி உன்னிடம் கூறலாமென்றிருந்தேன். நீயே கேட்டுவிட்டாய். வரும் குருவாரத்தன்று, ப்ரம்ம முகூர்த்தத்தில், இறைவன் அருளால் அதை தொடங்கலாம். இறைவனே உத்தரவு கொடுத்துவிட்டார். யாம் சொல்லச்சொல்ல, கேட்டு எழுதி வா. தினமும் சொல்வதை பதிவு செய்யும் முன் மூத்தோனையும் வணங்கி, வாயு புத்திரனையும் வணங்கி அருள் பெற வேண்டும். இவர்கள் இருவரின் அருளுடன், இனிதே அனைத்தும் நிறைவேறும். எமது ஆசிகள் உரித்தாகுக" என்று அகத்திய பெருமான் கூறிய பொழுது, என்னாலேயே என் கண்களை நம்ப முடியவில்லை. நாடியை அதன் இடத்தில் வைத்துவிட்டு சாஷ்டாங்கமாக கீழே விழுந்து அகத்தியரை வணங்கி, நன்றியை கூறினேன்.

அறையை விட்டு வெளியே வந்ததும் அந்த அதிகாலை நேரத்திலேயே, உடலெங்கும் வியர்த்துவிட்டது. அத்தனை சந்தோஷ படபடப்பு.

மனம் இருப்பு கொள்ளவில்லை. அங்கும், இங்கும், குறுக்கவும், நெடுக்கவுமாக நடந்து யோசிக்கலானேன். இத்தனை பாக்கியம் யாருக்கு கிடைக்கும். எத்தனை வருட வேண்டுதல். அகத்திய பெருமான் உரைக்கிறேன் என்று விட்டாரே. அவர் என்ன சொல்கிறாரோ, அதுவே எழுதப்படவேண்டும். ஏன்? எப்படி? எதற்கு என்ற கேள்விகளெல்லாம் தேவை இல்லை. நான் ஏதாவது கேட்கப்போக, அவர் கோபத்தில் இனி உரைக்கமாட்டேன் என்று கூறிவிட்டால்? இனிமேல் ரொம்பவுமே பொறுமையாக இருக்க வேண்டும். அகத்தியரே ஸ்ரீராமரின் சரிதத்தை உரைக்கிறார் என்றால், மற்ற சித்தர்கள் நிச்சயமாக அதை கேட்க வருவார்கள். ஆதலால், அவர் ஸ்ரீராமரின் சரிதத்தை உரைப்பதை பூசை அறையிலே வைத்து எழுத வேண்டும். எழுதி முடித்து, நிறைவு பெற்ற பின் தான், மூன்றாவது மனிதரே அறிய வேண்டும். எல்லோருக்கும் இது ஒரு ஆச்சரிய பரிசாக இருக்க வேண்டும், என்றெல்லாம் மனதுள் எண்ணங்கள் ஓடியது.

வியாழக்கிழமைக்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்க, அகத்திய பெருமான் பல கோவில் சன்னதிக்கும் என்னை விரட்டி வைத்து, இறைவனின் அருளை பெற்று வரச் சொன்னார். எங்கும், எல்லா கோவில்களிலும் மிகுந்த மரியாதை, உபசரிப்பு. எத்தனை கூட்டமிருந்தாலும், யாரேனும் ஒருவர் என்னை அடையாளம் கண்டு கொண்டு, தனியே அழைத்து சென்று இறைவனின் தரிசனத்தை என் மனம் திருப்தி அடையும் வரை பெற்று தந்தனர். நடப்பதை கண்டு எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

"நம்மையும் விரட்டிவிட்டு, போகும் இடத்திலெங்கும், முன் ஏற்பாட்டை செய்து வைத்திருக்கிறாரே, அகத்திய பெருமான்" என்று மனதுள் நினைத்துக் கொண்டேன். செல்லும் இடமெங்கும் இறைவனின் தரிசனம் கிடைக்க, கிடைக்க,  உடலெங்கும் பூரிப்பு, மனமெங்கும் பரவசம்.

நனைந்த காகிதமாக மனமும், உடலும் மென்மையான நிலையில் புதனன்று வீடு சேர்ந்து, பூசை அறையில் புகுந்து அகத்தியப் பெருமானுக்கு நன்றி சொல்லி, "நாளை காலை ப்ரம்ம முகூர்த்தத்தில் உங்கள் வாக்கில் ஸ்ரீ ராமனின் சரிதத்தை  கூறி, அடியேனுக்கு எழுதுகிற பாக்கியத்தை அருளுங்கள்" என்று பிரார்த்தனையை வைத்து விட்டு,

எப்பொழுது ப்ரம்ம முகூர்த்த வேளை வரும் என்று, படுக்கையில் படுத்தபடி யோசனையில் இருந்தேன்.

நடுவில் "நல்லோருக்குப் பெய்யும் மழை" என சம்பந்தமே இல்லாமல் ஒரு வாக்கியம் யோசனையில் வந்து போனது. இது என்ன இப்படி ஒரு யோசனை. இதன் அர்த்தம் என்ன? என்று நீண்ட நேரம் யோசிக்கும் பொழுதே, என்னை அறியாமல் உறங்கிப் போனேன்.

நாம் என்ன வேண்டுமானாலும் யோசிக்கலாம், எதிர் பார்க்கலாம். ஆனால் எந்த நிகழ்ச்சிகளின் முடிவு எப்படி இருக்கவேண்டும் என்பதை இறைவனும், சித்தர்களும்தான் தீர்மானிப்பார்கள். நாம் எதிர்பார்ப்பது போல் அல்லாமல் வேறு விதமாக இருந்தால், அதற்கும் ஒரு காரணம் இருக்கும், என்று மனித மனம் ஒரு பொழுதும் ஒப்புக் கொள்ளாது.

இறை வழியில் தெளிவாக செல்பவர்கள் இதை நன்றாக  அறிந்தவர்கள். தொடக்க நிலையில் இருப்பவர்கள் அவர்கள் எதிர் பார்ப்பதுபோல் இல்லாமல் நிகழ்ச்சிகள் நடந்தால், இது என்ன இறைவன் அருள் என்று அசந்து போவார்கள். அத்துடன் முயற்சியையும் கைவிட்டுவிடுவார்கள். அது ஒரு குறிப்பிட்ட சோதனை காலம் என்பதை உணர்வதில்லை.

ஆனால், அகத்தியப் பெருமானோ, ஒரு திடமான தீர்மானத்தில் இருந்தார் என்று, மறுநாள் காலை ப்ரம்ம முகூர்த்தத்தில், நாடியில் வந்து பேசிய பொழுது தான் உணர்ந்தேன்.

சித்தன் அருள்................. தொடரும்!