​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 28 March 2013

சித்தன் அருள் - 117


சித்தர்களின் அருள் பார்வை நம்மை சுற்றி எப்போதும் நிறைந்திருக்கிறது.  ஆனால் நாம் தான் அதை உணருவதில்லை.  கண் முன் நடக்கும் நிகழ்ச்சிகளில் கவனத்தை திருப்பி அதன் வழியில் சென்று எங்கெல்லாமோ அலைகிறோம்.  அவர்களும் பொறுமையாக இவன் அல்லது இவள் எப்போது இதை உணரப்போகிறார்கள் என்று நாம் நடிக்கும் வாழ்க்கை  நாடகத்தை கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள்.  என் நண்பர் அடிக்கடி சொல்வார்.  இந்த உலகத்தை சித்தர்கள், இறைவன் உத்தரவால் கட்டிக்காக்கிறார்கள்.  அதனால் தான் இன்றும் தர்மம் நிலைத்து நிற்க, நாம் எத்தனை மிகப் பெரிய தவறு செய்திருந்தாலும் மன்னித்தருளி, நம்மை நல் வழியில் நடத்தி செல்கிறார்கள்.  உலகத்தில் தர்மத்தின் பலம் கூடக் கூட, சுபிக்ஷம் என்றும் நிலத்து நிற்கும்.  நம்மிடம் உண்மையான எதிர்பார்ப்பில்லாத சரணடைந்த அன்பு இருந்தால் போதும்,  எந்த சூழ்நிலையிலும் நம்மை சுற்றி அவர்களின் ஒரு வளையம் நின்று காக்கும்.  இனி உண்மையாக நடந்த ஒரு நிகழ்ச்சியை பார்ப்போம்.

அது ஒரு ஏழ்மையான குடும்பம்.  கணவன் மனைவி, அவர்களின் மகன், அவன் மனைவி,  மகனும் அவன் மனைவியும் வேலைக்கு சென்று வருபவர்கள்.  இவர்களுக்கு இரு குழந்தைகள்.  குடும்பத்தலைவியான அந்த  அம்மையார் சித்தர்கள் மீது மிகுந்த பக்தி உடையவர்  கோவில்களுக்கு செல்வதில்லை.  ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வீட்டிலேயே, தெரிந்தவர்கள் கொண்டு தந்த சித்தர்கள் படத்தை வைத்து பூசை செய்வார்.  அவருக்கு சித்தர்களை பிரித்து பார்க்கும் நோக்கு கூட தெரியாது.  அவரை பொருத்தவரை எல்லா சித்தரும் ஒருவரே 

தினமும் விடியற்காலையில் எழுந்து விளக்கேற்றி த்யானத்தில் அமருவார்.  த்யானத்தின் மிகுந்த நேரமும் "அசைவில்லா மௌனமே"  மந்திரமாயிற்று. நாள் விடிந்து வீட்டில் தேவைகளுக்கான அவசர வேலைகள் அழைக்கும் போது பூசையை முடித்துக்கொண்டு சமையலறைக்குள் புகுந்துவிடுவார்.

சில நாட்களில் ஆழ்ந்த த்யானத்தில் இருந்து விடவே, கணவர் வந்து அவரை உணர்த்த வேண்டிய சூழ்நிலைகளும் உருவாகும்.  ஒன்று இரண்டு நாட்கள் பொறுத்துப் பார்த்த கணவர் மெதுவாக எரிச்சலடைய தொடங்கினார்.

"வீட்டுக்கு வீடு வாசற்படி" என்பதற்கிணங்க அவர்கள் வீட்டிலும் பிரச்சினைகள் இருந்தது.  அவர்கள் பேரக் குழந்தைகளில் ஒன்று வாய் ஊமை.  எத்தனையோ விதமான மருத்துவ சிகிற்சை செய்தும், எல்லா மருத்துவர்களும் கை விரித்துவிட்டனர்.  ஆனால் குழந்தையின் உடலில் ஊமையாக போனதற்கான எந்த குறையும் காணப்படவில்லை.  தொண்டை குழாய், அதை சூழ்ந்திருக்கும் தசைகள், நரம்புகள் எல்லாம் சரியாக இருந்தும் "அம்மா" என்று ஒரு வார்த்தை கூட அந்தக் குழந்தை பேசி அவர்கள் கேட்டதில்லை.

அந்த அம்மையார், குடும்பத்தை சூழ்ந்து நிற்கும் இந்த பிரச்சினைக்கு விடை கேட்டு பிரார்த்தனை செய்யாத நாள் ஒன்று கூட இல்லை, எனலாம்.  சித்தர்கள் இருக்கிறார்கள், அவர்கள் அருள் நமக்குண்டு.  இருந்தாலும் இந்த பிரச்சினையை நாம் தான் அவர்களிடம் கொண்டு சென்று "ஏதேனும் ஒரு வழிகாட்டக் கூடாதா" என்று வேண்டிக் கொள்ளத்தான் வேண்டும் என்று ஆணித்தரமாக நம்புகிறவர் 

எதற்கும் ஒரு காலம் உண்டு.  சிலவேளை ஒரு நாடகத்தை சித்தர்கள் நடத்திய பின்னரே அருளுவார்கள்.

ஒரு நாள், பொறுமை இழந்த அவரது கணவர் அந்த அம்மையாரிடம் 

"நீயும் தினமும் பூசை செய்கிறாய்.  என்ன பலன்! நம் வீட்டுக் குழந்தையின் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்க மாட்டேன் என்கிறது.  அது என்ன பாபம் செய்ததோ! இங்கு வந்து இப்படி பிறந்து தானும் கஷ்டப்பட்டு பிறரையும் வேதனைக்கு உள்ளாக்குகிறது.  நீ பிரார்த்தனை செய்கிற சித்தர்கள் எல்லோரும் கண் மூடிக் கொண்டிருக்கிறார்களா? என்று நமக்கு விடிவுகாலம் பிறக்கும்?  இதற்கு விடை தேடாமல், சும்மா கண் மூடி "த்யானம்" என்று நேரத்தை கடத்துகிறாய்.  இதை எல்லாம் விட்டுவிட்டு, வீட்டு வேலையை கவனிக்கிற வழியை பார்.  போதும் நீ செய்கிற பூசை" என்று சற்றே கோபத்துடன் பேசினார்.

தன் புருஷன் சொன்னதை கவனிக்காமல் அவர் தான் செய்கிற பூசை, த்யானத்தில் ஒன்றிப்போய் இருந்தார்.  அவருக்குள் ஏதோ ஒரு வைராக்கியம் பிறந்தது.  "அவன் சொல்வதை புறக்கணித்துவிடு" என்று யாரோ சொல்வது போல் உணர்ந்தார்.

"சரி இப்போது கவனிக்கவில்லை. பிறகு பார்த்துக்கொள்ளலாம்" என்று வெளியே போய் பத்து நிமிடம் கழிந்து வந்து பார்த்த அவள் கணவர், அப்பொழுதும் அந்த அம்மையார் த்யானத்தில் அமர்ந்திருப்பதை பார்த்து,

"எத்தனை முறை உன்னிடம் சொல்லியாயிற்று, அப்படி உனக்கு எப்படி என் வார்த்தையை மீறுகிற தைரியம் வந்தது" என்று கேட்டுக் கொண்டே அந்த அம்மையாரை உதைத்து தள்ளினார்.

திடீர் தாக்குதலில் நிலை குலைந்த அவர் எழுந்து 

"என்னங்க! இப்படி பண்ணறீங்க.  என்ன தப்பு நடந்துவிட்டது?" என்று விசாரித்தார்.

"என்ன தப்பு நடந்ததா?  இங்க ஒருத்தன் நாய் மாதிரி நின்று கத்திக்கொண்டிருக்கிறேன், நீ பாட்டுக்கு எப்போதும் த்யானம் பூசை என்று உட்கார்ந்து விடுகிறாய்.  நீ இத்தனை செய்தும் ஒரு புண்ணியமும் இல்லை.  நம் பேரக் குழந்தைக்காகத்தான் என்று சொல்கிறாய்.  இன்றுவரை நீ பூசை செய்யும் சித்தர்கள் நமக்கு என்ன செய்து விட்டார்கள்? " 

என்று கூறி பூசை அறையில் இருந்த சித்தர்கள் படங்களை எடுத்து தூக்கி வீசினார்.

இதைக் கண்டு அரண்டு போன அம்மையார் 

"என்னங்க இப்படி பண்ணாதீங்க!   இது ரொம்ப பாவம்.  செய்யக்கூடாத தவறை செய்யறீங்க.  இதன் பலன் எப்படி வேண்டுமானாலும் நம் குடும்பத்தை தாக்கும்!  வேண்டாங்க!" என்று கண்ணீர் மல்க கீழே கிடந்த படங்களை எடுத்து பழயபடி அதன் இடத்தில் வைக்க தொடங்கினார்.

இதைக் கண்ட கணவர் 

"இந்த படங்கள் இருந்தால் தானே பூசை செய்வாய். .  இனிமேல் நீ இங்கு பூசையே செய்யக்கூடாது" என்று கூறி ஒவ்வொரு படத்தையும் இரண்டாக கிழித்துப் போடத் தொடங்கினார்.

இதைக் கண்ட அந்த அம்மையார் கதறி அழத்தொடங்கினார்.

கிழிந்ததையும் விட்டு வைத்தால் எடுத்து ஒட்டி பூசை அறையில் வைத்து மறுபடியும் பூசை செய்வார் என்று உணர்ந்து , அத்தனை படங்களையும் அந்த அறையில் ஒரே இடத்தில் குவித்து  வைத்து தீ மூட்டினார்.  தீ மள மளவென படங்களில் பரவ தொடங்கியது.

இதைக் கண்ட அம்மையார் அப்படியே மூர்ச்சையானார், அப்படியே தரையில் நினைவின்றி வீழ்ந்தார்.

புத்தியிழந்து மேலும் மேலும் தவறை செய்த கணவர், அந்த அம்மையார் நினைவிழந்ததை கூட ஒரு நாடகமாக நினைத்து அவரை கவனிக்காமல் வீட்டை விட்டு வெளியே சென்றார்.

ஒரு பக்கத்தில் தீ எரிந்து கொண்டிருக்க, அதன் அருகில் அந்த அம்மையார் நினைவிழந்து கிடக்க, வேறு யாரும் இல்லாத நேரத்தில், அந்தக் குழந்தை மெதுவாக நடந்து வந்து அந்த அம்மையாரின் மார்பின் மீதேறி படுத்துக்கொண்டது.  சற்று நேரத்தில் விரல் சூப்பிக்கொண்டே உறங்கிப்போனது.

எங்கிருந்தோ வீசிய காற்றில் அந்த அம்மையார் உடுத்தியிருக்கும் புடவையின் முந்தானை மெதுவாக விலகி தீ ஜ்வாலையில் பட நெருப்பு அவரின் முந்தானையில் பிடிக்கத் தொடங்கியது.

சித்தர்களின் படத்தை எரித்ததையும் விட, மிகப் பெரிய தவறாக அந்த அம்மையாரை நினைவு இன்றியும், வாய் பேசாத குழந்தையை தனியாக விட்டு வந்ததையும், எல்லாவற்றுக்கும் மேலாக தீயை ஆபத்தான பரவும் நிலையில் விட்டு வந்ததையும் உணர்ந்த அவள் கணவர், வேகமாக வீட்டுக்குள் ஓடினார்.

அவர் சென்று பார்த்த காட்சியில்  இருதயமே ஒரு நிமிடம் நின்று போனது.  நினைவிழந்த மனைவி, மார்பில் உறங்கும் பேரக் குழந்தை, நீண்ட முந்தானையில் தீ பிடித்து தோளை நோக்கிய அக்னியின் பயணம்.

சரேலென்று ஓடிச் சென்று குழந்தையை தூக்கியவர், அருகில் ஒரு பாத்திரத்தில் இருந்த தண்ணீரை எடுத்து அந்த அம்மையாரின் கழுத்தை நோக்கி சத்தம் போட்டுக்கொண்டே வீசினார்.

வீசிய அவசரத்தில் தண்ணீர் எங்கேயோ போய் விழுந்தது.  தீ அணையவில்லை.  இதற்குள் தீயின் திசை வேறு பக்கமாக பரவி பக்கத்தில் இருந்த திரைசீலையில் படர, இவர் போட்ட சப்ததத்தில் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடிவந்து தீயை அணைக்க, அந்த அம்மையாரை உடனடியாக தூக்கி வெளி அறைக்கு கொண்டுவந்து தண்ணீர் தெளித்து எழுப்பினார்.

நடந்தது ஏதுமறியாத அந்த அம்மையார் தன உடலில் துணி கருகிய வாசனை வர என்னவென்று பார்த்தார்.

முந்தானையின் பெரும்பாகம் கருகிப்போய் இருந்தது.

தன கணவரை நிமிர்ந்து பார்க்க, குற்ற உணர்வினால் அவர் தலை குனிந்து நின்றார்.

மெதுவாக எழுந்தவர், அவர் அறைக்குள் சென்று பார்க்க அத்தனை படமும் தீயில் சாம்பலாகியிருந்தது.

வருத்தத்துடன் அறைக்குள் சென்றவர் பின், கணவரும் சென்றார்.

உள்ளே சென்ற அம்மையார், உடை மாற்ற நினைத்து தன பெட்டியை திறக்க,

அதனுள் தீயில் அழிந்துபோன அத்தனை சித்தர் படமும் புது பொலிவுடன் இருந்தது.  இதை கண்ட கணவர் அரண்டு போய் தீ போட்ட அறைக்குள் சென்று பார்க்க 

அங்கே எரிந்து போன சாம்பல் கூட தடமின்றி மறைந்து போயிருந்தது.

அதிர்ச்சியுடன் அத்தனையையும் கவனித்துக் கொண்டிருக்கும்போது 

வாசலிலிருந்து யாரோ கூப்பிடும் சப்தம் கேட்டது.

வாசலுக்கு சென்ற கணவர் யாரோ ஒரு சாது நிற்பதை கண்டு எரிச்சலுடன் 

"என்னய்யா வேண்டும்?" என்று குரல் உயர்த்தி கேட்டார்.

"ரொம்ப தாகமாக இருக்கிறது! குடிக்க தண்ணீர் வேண்டுமே!" என்று சாவதானமாக கேட்டார்.

"கொஞ்சம் பொறுங்கள்" என்று கூறி உள்ளே சென்று தண்ணீருடன் வெளியே வந்து பார்த்த போது 

அவரை காணவில்லை.

ஒரு ஓலைச் சுவடி வாசற் படியில் இருந்தது.

கையிலிருந்த தண்ணீர் டம்ளரை கீழே வைத்துவிட்டு. அந்த ஓலையில் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம் என்று கை நடுக்கத்துடன் எடுத்தார்.

அதில் கீழ்வருமாறு எழுதியிருந்தது.

"மூடனே! இறை பக்தியுடன் இருந்து சொந்தமாக எதுவும் செய்யாத உன்னை, உன் மனைவியின் வேண்டுதலால் இத்தனை நாட்களாக காப்பாற்றி வந்தோம்.  எத்தனை தவறுகளை செய்வாய்.  சுயமாக நல்ல சிந்தனை செய்யாவிடிலும், அடுத்தவர் நம்பிக்கையை அழிக்க உனக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?  உன் பேரக் குழந்தை பேச முடியாமல் போனது நீ உன் வாலிப பருவத்தில் எத்தனை மகான்களை தவறாக பேசினாய், திட்டினாய்.  அவர்களை தவறாக பேசிய சாபம் தான் குழந்தை வழியாக உன்னை இத்தனை நாட்களாக வருத்தியது.  இருக்கும் வாழ்க்கையில் நல்லது செய்யாவிடினும், நல்லதே பேசாவிடினும், பிறருக்கு தீங்கு விளைவிக்கவோ, பிறரை தவறாக பேசாமல் மட்டும் இருந்தால் போதுமானது.  அத்தனை தவறையும் மனம் போனபடி ஏற்று செய்துவிட்டு இன்று எங்களை குறை கூறுகிறாயே.  உனக்கு இதுவே கடைசி வாய்ப்பு!  முடிந்தால் பிறர் நம்பிக்கையை போற்று.  இல்லையேல் விலகி நில், பிறரை அவர் நம்பிக்கை படி வாழவிடு.  இன்னும் சில மாதங்களில் உன் பேரக்  குழந்தை பேச ஆரம்பித்துவிடும்." 

அத்தனைக்கும் கீழே ஒரு பெயர் இருந்தது.  அது "கருவூரார்" என்றிருந்தது.

அதிர்ந்து போன அவர், அந்த ஓலைச்சுவடியை கொண்டு போய் தன மனைவியிடம் கொடுத்துவிட்டு அமைதியாக நின்றார்.

அதில் எழுதியிருந்ததை படித்த அந்த அம்மையார் ஆனந்தக் கண்ணீர் விட்டார்.

"நான் நம்பிய சித்தர்கள் என்னை கைவிடவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது" என்று கூறி அந்த ஓலைச்சுவடியை கண்ணில் ஒற்றிக்கொண்டார்.

உடனேயே அந்த ஓலைச் சுவடியை கொண்டு போய் பூசை அறையில் உள்ள கருவூறாரின் படத்தின் கீழ் வைத்து பணிவுடன் நமஸ்காரம் செய்தார்.

மறுநாள் விடியற்காலை, எப்போதும் போல எழுந்து குளித்து பூசை அறைக்கு சென்ற அம்மையாருக்கு ஆச்சரியம் காத்திருந்தது.

அங்கே விளக்கேற்றி வைக்கப்பட்டிருந்தது.  சாம்பிராணி, ஊதுபத்தி போன்றவையின் நறுமணம்.  

ஒரு ஓரமாக,........

இவருக்கு முன்னே எழுந்து அமைதியாக த்யானத்தில் அமர்ந்திருந்தார் அந்த கணவர்.  அவர்கள் வாழ்வில் அன்று ஒரு புது அத்யாயம் தொடங்கப்பட்டது.

சித்தர் அருளியது போல் சில மாதங்களில் அவர்கள் பேரக் குழந்தை மற்ற குழந்தைகளை போல் பேசத்தொடங்கி அந்த குடும்பத்தில் சந்தோஷம் மறுபடியும் தாண்டவமாடத் தொடங்கியது.

இன்று 

அந்த தம்பதியர்கள் சித்தர்களின் அடியவர்களாகவே மாறிவிட்டனர்.

சித்தர்கள் நம்முடன் எப்போதும் இருக்கிறார்கள்.  நம்மை சுற்றி நின்று நாம் செய்வதை பார்த்துக் கொண்டு நாம் வழுகும் காலங்களில், கை தூக்கிவிட்டுக்கொண்டு..............   நாம் தான் உணருவதில்லை, ஏன் என்றால் நடப்பதை உன்னிப்பாக கவனிப்பதில்லை.  திட நம்பிக்கையை மனதில் விதைத்து வளரவிட்டால் அவர்கள் அருள் நமக்கு எப்போதும் கிடைக்கும்.

சித்தன் அருள்............. தொடரும்!

அகத்தியர் நமெக்கென அருளியவை:-

சித்தன் அருள் - 16 - பாபத்திற்கான பரிசு நிச்சயம் 

பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தச் சமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது.  சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்".

சித்தன் அருள் - 19 - போகரை அடையாளம் காண 

அன்றைக்கு மாடசாமியின் முன் தோன்றி மருந்து கொடுத்த அந்த சித்த மருத்துவர் யார்? என்ற கேள்வியை அகத்தியரிடம் பின்பு ஒரு நாள் கேட்டேன்.

"என் அருமை சீடன் போகன்தான் அவன்.  அகத்தியனின் வேண்டுகோளுக்கு இணங்க அவனே நேரில் வந்து கொடுத்த மருந்துதான் அது.  இது அவர்கள் செய்த புண்ணியம்" என்றார் அகத்தியர்.

அப்படி என்றால் எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைக்குமா?

"கிடைக்கும்.  போகன் இன்றும் கொல்லிமலையில் உலாவிக் கொண்டிருக்கிறான்.  உண்மையில் போகனை வணங்கிக்கொண்டு போனால் ஏதாவது வைத்தியர் வேடத்தில் போகன் வந்து மருந்து கொடுத்து அவர்களது உயிரைக் காப்பாற்றுவான்".

"அப்படி என்றால், எப்படி போகரை அடையாளம் கண்டு கொள்வது.  எல்லா வைத்தியர்களும் போகரைப் போன்றே காணப்படுவார்களே!  யார் உண்மையான வைத்தியன்? விளக்க வேண்டும்" என்றேன்.

"கண்களில் ஒளிவட்டம் பளிச்சென்று தென்படும்.  துளசி மணம் யாரிடத்தில் தோன்றுகிறதோ அல்லது ஜவ்வாது கலந்த விபூதியின் வாசனை யாரிடத்தில் தோன்றுகிறதோ அவன் தான் போகன்"

மற்ற வைத்தியர்கள் எல்லாம்?

"போகனின் சிஷ்யர்களாக இருந்து, இளம் வயது முதல் சித்த வைத்தியத்தில் கரை கண்டவர்கள்.  அவர்கள் தினமும் போகனை வணங்கியே வைத்தியம் செய்வதால், அந்த சித்த வைத்தியர்களுடைய மருத்துவமும் பலிக்கும்" என்றார் அகத்தியர்.

Thursday 21 March 2013

சித்தன் அருள் - 116


சித்தர்கள் எத்தனை கனிவான மனம் கொண்டவர்கள் என்பதை ஒரு சிலரே அறிவர்.  அதை அனுபவித்துப் பார்ப்பதற்கே மிகப் பெரிய புண்ணியம் செய்திருக்கவேண்டும்.  நம் கர்மாவை பார்த்து, நம் தகுதியை பார்த்து, நம் எதிர்கால நடவடிக்கைகள் "தெய்வ நம்பிக்கையை" சார்ந்து இருக்குமா என்பதை எல்லாம் அலசி ஆராய்ந்த பின்தான் அவர்கள் அருள் நமக்கு விதிக்கப்படும். எல்லாம் அவன் செயல் என்பது நிதர்சனமாயினும், பல நேரங்களில் மனிதர்களான நாம் அதையும் மறந்து விடுகிறோம் என்பதே உண்மை.  ஏன்?  நம் வாழ்க்கையில் நம் கண் முன் நடக்கும் நிகழ்ச்சிகள் தான் காரணம்.  சோதனை இல்லாமல் ஒருபோதும் சித்தர் அருள் நமக்கு கிடைக்காது.  அந்த சோதனை நடக்கும் போது, நாம் எப்படி நடந்து கொள்கிறோம், அவர்கள் பரீட்சையில் நாம் தேறுகிறோமா என்பதெல்லாம் பொறுத்து அவர்கள் அருள் நமக்கு கிடைக்கும்.  உண்மையாக நடந்த ஒரு நிகழ்ச்சியை பார்ப்போம்.

அவன் வீட்டை விட்டு வெளியேறி கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தான்.  வியாபாரத்தில் பெருத்த நஷ்டம்.  கடன் சுமை தலைக்கு மேலே உயர, குடும்பத்தை, அதன் தினப் பிரதி விஷயங்களை சந்திக்ககூட சக்தி இன்றி வாழ்க்கையே கை விட்டு போய், என்ன செய்வதென்று அறியாமல் நடந்தான்.  திடீரென்று ஏதேனும் மலை சார்ந்த இடத்திற்கு சென்று காட்டுக்குள் போய் "தற்கொலை" செய்துகொள்ளலாம் என்று தோன்றவே, மலை ஏறத் தொடங்கினான்.  அவன் சென்று சேர்ந்த இடம் "பொதிகை மலை" அடிவாரம். 

கைவசம் சாப்பிட எதுவும் இல்லாமல், பசியும் அசதியும் ஒன்று சேர, வனத்தில்  ஒரு வேப்பிலை மரத்தின் அடியில் அமர்ந்து உறங்கிப் போனான்.

நன்றாக உறங்கியவன், ஏதோ சப்தம் கேட்டு விழித்துப் பார்க்க, தன் முன்னே ஒரு மண் குடுவையில் குடிக்க நீரும், ஒரு இலையில் சுற்றப்பட்ட உணவும் இருப்பதை கண்டான்.  அவனுக்கோ மிகுந்த ஆச்சரியம்.  மனிதர் வாடையே இல்லாத இந்த வனத்தில் நான் பசியுடன் இருக்கிறேன் என்று உணர்ந்து யார் உண்ண உணவும், குடிக்க நீரும் யார் கொண்டு வைத்திருப்பார்கள்?  என்ன ஆனாலும் யோசிக்க அவன் மனம் நிற்கவில்லை.  அவற்றை எடுத்து உண்டான்.

இந்த இடத்தில் தங்கி இருப்பது தான் உசிதம் என உணர்ந்து, "இங்கேயே தங்கிவிடுவோம்!  உணவு கிடைத்தால் உண்போம்! இல்லையேல், இறைவனை த்யானித்து தவத்தில் மூழ்கிவிடுவோம்" என்று தீர்மானித்தான்.  தற்காலிகமாக "தற்கொலை" எண்ணம் விலகி நின்றது.

மூன்று நாட்கள் கழிந்தது.  அவனுக்கு பசிக்கவும் இல்லை, யாரும் உண்ண உணவு கொண்டு தரவும் இல்லை.  நான்காவது நாள் அவனுக்குள் பசி உணரத் தொடங்க, த்யானத்திலிருந்து வெளியே வந்து கண் விழித்துப் பார்க்க, அவன் முன்னே உணவும் நீரும் இருந்தது.  மிகுந்த ஆச்சரியத்துடன் அதை உண்ணத் தொடங்கினான்.  

உண்ணும் போதே "யார் இத்தனை கருணையுடன் நான் இருக்கும் இடம் தேடி வந்து உணவை அளிப்பது?  எப்படி அவர்களுக்கு நான் இங்கு பசியுடன் இருக்கிறேன் என்று தெரிந்தது?"  என்று யோசித்தான்.

அந்த நிமிடத்தில் காட்டின் ஒரு மூலையில் இருந்து சன்னமாக வார்த்தைகள் காற்றில் மிதந்து வந்தது.

"மூடனே!  தகுதியில்லாத ஆசைகளை வளர்த்துக் கொண்டு, அளவுக்கு மீறி வியாபாரம் செய்ய ஆசைப்பட்டு, கடன் வாங்கி குவித்தாய்.  வாழ்க்கை கட்டுப்பாட்டுக்கு மேலே சென்றதும், உன்னை நம்பி இருந்த குடும்பத்தை தவிக்கவிட்டு, இங்கு வந்து தற்கொலை செய்துகொள்ள வந்தாய்.  இங்கிருந்து சென்று விடு.  உன் பிரச்சினைகளுக்கு விடிவுகாலம் வந்துவிட்டது.  இப்பொழுதே போ!" என்று உத்தரவு வந்தது.

ஆனால், அவன், தன் கடன் சுமைகளை மனதில் வைத்து "பணம் கிடைக்க வேண்டும்.  அது அன்றி இங்கிருந்து நகருவதில்லை.  இல்லையேல் இங்கேயே இருந்து மீதம் இருக்கும் வாழ்க்கையை வாழ்ந்து, முடிவை எதிர்கொள்வேன்" என்ற தீர்மானத்தில் உறுதியாக இருந்தான்.

 அசரீரி மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது.  அவன் அந்த வார்த்தைகளை சட்டை செய்வதாகவே இல்லை.

த்யானத்தை தொடர்ந்தான்.

மூன்று நாட்கள் சென்றது.  எந்த உணவும் கிடைக்கவில்லை.  அவனுக்கும் பசிக்கவில்லை.  அந்த அசரீரி மட்டும் விட்டு விட்டு அவனை "திரும்பிப் போ" என்று சொல்லிக் கொண்டிருந்தது.  

இனி எதிர்பார்த்து காத்திருப்பதில் பயனில்லை என்று நினைத்து தற்கொலை செய்துகொள்ளலாம் என்று தீர்மானித்து அருகிலிருந்த உயரமான குன்றிலிருந்து கீழே குதித்தான். 

வேகமாக பூமியை நோக்கி வந்த அவன் தன் சுய நினைவை இழந்தான்.

நினைவு வந்து முழித்துப் பார்க்க, அவனை ஒரு சித்தர் தன கைகளில் மேகக்கூட்டத்திற் கிடையில்  சுமந்து செல்வதை உணர்ந்தான்.  மிகுந்த பசியின் காரணமாக மீண்டும் நினைவிழந்தான்.

தன் முகத்தில் நீர் தெளிக்கப்படுவதை உணர்ந்து மயக்கம் தெளிந்து பார்க்க அங்கே ஒரு சித்தர் போன்ற தோற்றம் கொண்ட ஒருவர் அவனை கருணையுடன் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டான்.  அவர் அவனுக்கு தேனும், பழங்களும் கொடுத்து பசியாற்றியபின் பேசத்தொடங்கினார்.

"அப்பனே!  உன் பிரச்சினைகளுக்கான விமோசன நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.  திரும்பி உன் வீட்டிற்கு செல்.  அங்கே அனைத்தும் உனக்கு புரியும்.  தற்கொலை செய்கிற உனது திடமான எண்ணத்தை கை விடு.  இது புனிதமான மலை.  இங்கே தவறை செய்து இந்த மலையை அசுத்தமாக்காதே! உனக்கு இன்னும் விதி உள்ளது.  நல்ல முறையில் நல்லது செய்து வாழ்ந்து வா.  எனது ஆசிகள் உனக்கு" என்றார்.

நடப்பதெல்லாம் கனவா, நனவா என்று புரியவில்லை அவனுக்கு.

"சாமி! நீங்க யாரு!  உங்க பேர் என்ன?  எதுக்காக என்னை காப்பாத்தினீங்க?"

"நான் கோரக்கர்..  தலையாய சித்தர் அகத்தியரின் உத்தரவால் உன்னை காப்பாற்றி கரை ஏற்றினேன். நீ புண்ணியவான்" என்று கூறி அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சிரித்தபடி நடந்து சென்று மறைந்து போனார்.

என்னவோ கேட்க நினைத்தவன் ஒரு அடி எடுத்து வைக்க, காலில் ஏதோ ஒன்று தட்டியது.

குனிந்து கீழே பார்த்தவனுக்கு ஒரு மண் பானை கண்ணில் பட்டது.  மெதுவாக அதை திறந்து பார்த்தவன் அசந்து போனான்.

அது நிறைய பணம் இருந்தது.  தனக்கென சித்தனால் விதிக்கப்பட்டது என்று உணர்ந்து,   அதை எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தவனுக்கு இன்னொரு அதிசயம் காத்திருந்தது.

அவன் வாங்கியிருந்த கடன் அனைத்தையும் யாரோ ஒரு முன் பின் தெரியாத ஒருவர் வந்து அடைத்து தீர்த்துவிட்டிருந்தார்.

அனைத்தையும் அப்போது உணர்ந்த அவன் அன்று முதல் நேர் வழியில் சென்று, நிறைய சம்பாதித்து, ஆன்மீகத்தில் பல நிலைகளை அடைந்து, இன்றும் சித்தர் காட்டிய வழியில் செல்கிறான்.

அதீத ஆசைகளால் அலைக்கழிந்திருந்தாலும், சித்தனால் அருளப் பெறுகிற அளவுக்கு அத்தனை புண்ணியம் செய்தவனா நான் என்று ஒருநாள் த்யானத்தில் சித்தரிடம் கேள்வி கேட்க 

"ஆம்! நீ புண்ணியம் செய்தவன் தான்" என்று பதில் கூறினார் கோரக்கர்.

இன்றும் சித்தர்கள் நம்மிடை இருந்து கொண்டு, ஆபத்து காலத்தில் நம்மை கை தூக்கி விடுகிறார்கள் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சான்று.

சித்தன் அருள்............. தொடரும்!


அகத்தியர் நமெக்கென அருளியவை:-

சித்தன் அருள் - 11

அதர்வண வேதம் என்பது துஷ்ட தேவதைகளை கட்டுபடுத்தும் மந்திரங்கள் கொண்டது.  மேலும், மந்திர சக்தியால் நல்ல தேவதைகளை வரவழைத்து நல்ல காரியங்களை செய்வதாகும்.  இதற்கு மனோ பலம் வேண்டும்.  பயம் இருக்க கூடாது. அதோடு யாருக்காக எந்த காரியத்தையும் செய்ய ஆரம்பித்தாலும், முதலில் தன்னை சுற்றி ஒரு வட்டம் போட்டு கொள்ள வேண்டும்.  இதை செய்ய தவறினால், அவர்களுக்கு பெரும் பதிப்பு ஏற்படும். பெரும்பாலும் இந்த மாதிரியான காரியத்தில் ஈடுபடுபவர்கள் மிக மிக குறைவு.  கேரளாவில் சில இஸ்லாம் நபர்கள் அதர்வண வேதத்தை கற்று பலருக்கு நன்மைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த காலத்தில் கூட இப்படிப்பட்ட துஷ்ட தேவதைகளைக் கண்டு பிடித்து கட்டு படுத்த முடியுமா?  நல்ல தேவதைகள் என்கிறார்களே, இதெல்லாம் உண்மையா?" என்று நம்மில் பலருக்கு சந்தேகம் வரும்.  இதில் தவறில்லை. அதர்வண வேதம் கற்றவர்களும், இது பற்றி பல வருடங்கள் பழகியவர்களுக்கும் துர் தேவதைகள் யார் யார்? நல்ல தேவதைகள் யார் யார்? என்பதை கண்டு பிடிக்க முடியும். எந்த மந்திரத்தை எப்படி பிரயோகம் செய்ய வேண்டும்? எது எத்தனை காலத்திற்கு நல்ல பலனைத் தரும்.  அது போல எந்த மாதிரியாக கேட்ட பலனைத்தரும் என்பதை கூடத் துல்லியமாக கணக்கிட்டு விடலாம்.  இதில் எத்தனையோ ரகசியங்கள், மர்மங்கள் உண்டு.

ஒருவரை கெடுக்க நினைத்து செய்யப்படும் "பிரயோகம்" முதலில் எதிராளிக்கு வேகமாகச் செயல்பட்டாலும், அந்த குறுப்பிட்ட காலம் முடிந்து, யார் இதை ஏவி விட்டார்களோ அவர்களை நூறு மடங்கு வேகத்தில் தாக்கும்.  இந்த தாக்குதல் படு பயங்கரமாக இருக்கும். இதனால் தான் நூறுக்கு, 99 பேர் அதர்வண வேதத்தில் இறங்குவதில்லை.   எனவே, கடைசியில் ஜெயிக்கபோவது பிரார்த்தனை ஒன்று தான்.

எதற்காக இந்த விளக்கத்தைச் சொல்கிறேன் என்றால் "யாரும் செய்வினை, பேய், பிசாசு, ஏவல் என்று பயந்து மனதையும் வாழ்க்கையும் கெடுத்துக் கொள்ளாமல் இருக்கவேண்டும்" என்பதற்காகத்தான்.

சித்தன் அருள் - 13

"வெறும் நாட்டு சக்கரையைத் தானே அவளுக்கு கொடுத்தீர்கள்."

"ஆமாம்"

"நாட்டு சக்கரைக்கு அத்தனை விசேஷமா?"

"ஆமாம்.அதில் அகத்தியரின் ஜீவ மந்திரம் கலந்திருக்கிறதே. அது தான் முக்கிய காரணம்".

"ஆச்சரியமாக இருக்கிறதே. இது எல்லோரையும் குணப்படுத்தி விட முடியுமா?"

"அது அகத்தியர் கருணையை பொறுத்தது."

Thursday 14 March 2013

சித்தன் அருள் - 115


யாருக்கு என்ன விதிக்கப்பட்டுள்ளது, அது எப்பொழுது நடக்கும் என்பதை இறைவனும், சித்தர்களையும் தவிர வேறு ஒருவராலும் கூற முடியாது.  சித்தர்களை உருவாக்குவது இறைவன் செயல், சித்த மார்கத்துக்கு அழைத்து செல்வது சித்தர்கள் அருள் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.  எக்குடி பிறக்கினும், உயர் நிலை விதிக்கப்பட்டிருந்தால், அந்நிலை அடைவது உறுதி.

அந்த சிறுவன் பெயர் "முனி".  கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஏழ்மை நிறைந்த குடும்பத்தில் வளர்ந்து வந்தான்.  பள்ளிக்கூடம் அனுப்பி அவனை கல்வி கற்க வைக்கிற அளவுக்கு வருமானம் இல்லாத குடும்பம்.  தாய், தந்தையரின் உத்தரவால் கிராமத்தில் உள்ள ஆடு மாடுகளை காட்டிற்கு மேய்த்து சென்று , சுள்ளி பொருக்கி, விற்று அதில் வரும் வருமானத்தில் வாழ்க்கையையும், குடும்பத்தையும் கவனித்து வந்தான். கிராமத்தில் மற்ற குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போது வேடிக்கை பார்க்கும் அவன், நமக்கு மட்டும் ஏன் பள்ளி சென்று படிக்க முடியவில்லை என்று ஏங்குவான்.  இருப்பினும் நிகழ்கால வாழ்க்கையின் உந்துதலால், தொடர்ந்து ஆடு, மாடு மேய்த்து வந்தான்.

ஒருநாள், காட்டில் ஒரு மரத்தடியில் அமர்ந்து தூரத்தில் மேயும் விலங்குகளை பார்த்தபோது அவனுள் ஒரு புதிய சிந்தனை உருவானது.

"நான் ஏன் இந்த காட்டிலேயே நிரந்திரமாக தங்கி, இங்கு உலவும் மிருகங்களை போல் சுதந்திரமாக வாழக்கூடாது?  அவை செய்த அளவுக்கு கூட நாம் புண்ணியம் செய்யவில்லையா?  அப்படியே ஏதேனும் தவறு செய்திருந்து அதனால் இந்த ஜென்மம் என்றால் அதை கடவுளிடம் வேண்டி மாற்ற வழி தேடலாமே!" என்று நினைத்தான்.
.
அவன் சிந்தனை சரியான பாதையில் தான் சென்றது.  அது அவன் கர்மா.  ஆனால் படிப்பறிவில்லாத ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் இந்த அளவுக்கு உயர்ந்த சிந்தனைக்கு காரணம், அவன் பூர்வ ஜென்ம வாசனைதான்.  இறைவன் எங்கு எப்படி யாரிடம் விளையாடுவான் என்று யாருக்கு தெரியும்.  இறைவன் உத்திரவால் சித்தர்களும் அவனிடம் விளையாட தீர்மானித்தனர்.  சித்தர்கள் விளையாட்டு முதலில் குழப்புவது போல் இருந்தாலும் நல்ல முடிவைத்தான் எவருக்கும் கடைசியில் அருளுவார்கள்.

ஒருநாள், சுள்ளி பொறுக்க உள் வனத்துக்குள் சென்ற பொது ஒன்றும் கிடைக்கவில்லை.  ஏதேனும் சுள்ளி கிடைத்தால் தானே. அதை விற்று வீட்டிற்கு சாப்பிட ஏதேனும் வாங்கிச்செல்ல முடியும்.  மேலும் மேலும் உள்வனத்துக்குள் சென்றான்.  அவன் சென்ற பகுதி மிக அடர்த்தியாக இருந்தது.  சூரிய வெளிச்சம் கூட எட்டிபார்க்கமுடியாத அளவுக்கு மரங்கள் வானத்தை பார்வையிலிருந்து மறைத்தது.  பகல் கூட இரவு போல் தோன்றும் இடம்  எவ்வளவு தேடியும் ஒன்றும் கிடைக்காமல், அசந்து போய் ஒரு மரத்தடியில் படுத்து உறங்கிவிட்டான்.  கண் விழித்தபோது இருட்டத்தொடங்கியதை உணர்ந்து, திரும்பி செல்ல வந்த வழியை தேட அடர்த்தியான காடு இருளை கலந்து வைத்துக்கொண்டு அவனை மிரட்டியது.  அவனுள் ஒரு பயம் மெதுவாக எட்டிப்பார்க்கத் தொடங்கியது.

தொலைவில், கொன்று தின்ன ஒன்றும் கிடைக்காத கொடிய மிருகங்களின் கோப குரல் அவன் காதில் விழத்தொடங்கியது.  பயந்து போய் ஒரு மரப் பொந்துக்குள் தஞ்சம் அடைந்து இரவை அங்கேயே கழிக்க எண்ணினான்.  போதாதைக்கு அவனுக்குள் பசி விஸ்வரூபம் எடுக்கத்தொடங்கியது. எங்கு தேடியும் எதுவும் கிடைக்காமல் சற்று தூரத்தில் சல சலக்கும் நீர் ஓடையின் சப்தம் கேட்டது.  அதை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

நடந்த பாதையில் ஓரிடத்தில் எதோ ஒன்று காலை தட்ட, குனிந்து பார்த்தவன் அது காட்டில்  விளையும் ஒருவகை அபூர்வ பழம் என்பதை உணர்ந்தான்.  அது மிகுந்த மணத்துடன் இருந்தது.

பழத்தை உண்டான்.  அது அவனது ருசிக்கு ஏற்றவாறு இருந்தது.  பசி அடங்கியது.  அருகில் ஓடும் நீரோடையிலிருந்து தண்ணீரை தாகத்துக்காக அருந்தினான்.  அலைந்து திரிந்த அசதியில் ஒரு மரத்தடியில் படுத்து உறங்கிப்போனான்.

கண் விழித்தபோது விடிந்து விட்டிருந்தது.  இரவு முழுவதும் பெற்றோர்கள் தேடியிருப்பார்கள் என்று தோன்ற கிராமத்துக்கு திரும்ப நினைத்தான்.  செல்லும் முன் நீரோடையில் முகம் கழுவி, சிறிது நீரை குடித்தான்.

அப்பொழுது ஒரு குரலை அவன் கேட்க நேர்ந்தது.

"நான் கொல்லிமலை சித்த்தன் சொல்கிறேன்.  நீ கிராமத்துக்கு திரும்பி செல்ல வேண்டாம்.  இந்த காட்டிலேயே தனித்திருந்து தவத்தில் இரு!" என்ற அசரீரி கேட்டது.

அவன் சப்தம் வந்த திசையை நோக்கினான்.  அங்கு யாரும் தென்படவில்லை.

அசரீரி மேலும் தொடர்ந்தது.

"உனக்கு பசிக்கிறதா?"

"இல்லை."

"காட்டில் தனியாக இருக்க உனக்கு பயமாக இருக்கிறதா?"

"ஆமாம்!"

"அப்படியானால் நான் சொல்வதை போல் செய்!  உன் அருகில் சிவப்பு நிறத்தில் கனிகளுடன் ஒரு செடி இருக்கிறதே!  அதிலிருந்து மூன்று கனிகளை மட்டும் சாப்பிடு.  அந்த செடியின் இலையை பறித்து அதை உன் உடல் எங்கும் பூசிக்கொள்." என்றது 

"அப்படி செய்வதினால் என்ன பயன்?" அவன் கேட்டான்.

"அந்த செடியின் மூன்று பழத்தை ஒரே நேரத்தில் சாப்பிட்டால் இனி வரும் நாற்பது ஆண்டுகளுக்கு பசிக்காது.  உனக்கு சாப்பாடே தேவை இல்லை.  அந்த செடியின் இலையை உடல் முழவதும் பூசிக்கொண்டால், அதன் வாடைக்கு எந்த மிருகமும், விஷ பூச்சிகளும் உன் அருகில் வராது.  நீ சுதந்திரமாக இந்த காட்டில் உலா வரலாம்!" என்றது.

அவன் அந்த குரல் சொன்னபடியே செய்தான்.

அந்த குரல் மேலும் தொடர்ந்தது.

"இந்த காட்டிலேயே "சிவபெருமானை" நினைத்து தவத்தில் இருந்தால் ஒருநாள் உனக்கு அவரே பிரத்யட்சமாக காட்சி தந்து அருள்வார்.  இந்த காட்டில் வளரும் அபூர்வ மூலிகைகள்  முதல் அனைத்து மூலிகைகளை பற்றியும் உன்னால் புரிந்துகொள்ள முடியும்.  இறையனாரின் தரிசனம் கிடைத்த நிமிடம் முதல் நீ சித்தனாக மாறுவாய்.  அன்று முதல் நீ "மூலிகை சித்தன்" என்று அறியப்படுவாய்.  அதன் பின்னர் நீ கிராமத்துக்கு சென்று மருத்துவ சிகிற்சை செய்யலாம், அனைத்தும் வெற்றியாகும்." என்றது.

சற்று நேரம் யோசித்து விட்டு அவன் "சரி!" என்று தலையாட்டினான்.

காலம் வேகமாக அவனுக்கு உருண்டோடியது.

அடுத்த இருபது வருடங்கள் தனித்திருந்து, தவத்திலிருந்து, காட்டை, மூலிகைகளை பற்றி நன்றாக ஆராய்ந்து, அதன் முடிவில் தவப்பயனால் இறை தரிசனம் பெற்று, "மூலிகை சித்தன் " எனப் பெயர் பெற்று, சித்தர்கள் உதவியுடன் இன்றும் அந்த மலையின் கீழுள்ள கிராமங்களுக்கு சென்று நோயினால் வருந்துவோர்களுக்கு மருத்துவ சிகிர்ச்சை செய்து வருகிறார்.  அவரை உணர்ந்தோர்கள் தெய்வமாக போற்றி வழிபட்டுவருகின்றனர்.

இன்றும் அவரை தேடி சென்றால், மருத்துவ உதவி கிடைப்பதாக பலரும் கூறுகின்றனர்.

இறைவன் சித்தர்களை உருவாக்குவதும், நம்மிடை உலவ விட்டிருப்பதும், நம் நலனை கருத்தில் கொண்டுதான்.  நாம்தான் அவர்களை உணர்ந்து நல்லது செய்து வாழ வேண்டும்.  நம் ஆத்மார்த்தமான வேண்டுதல்களுக்கு செவி சாய்த்து அவர்கள் ஓடி வந்து உதவக் காத்திருக்கிறார்கள், என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை.

சித்தன் அருள்.................. தொடரும்!

அகத்தியர் அருளியவை:-

சித்தன் அருள் - 7 - பழனி நவபாஷாண சிலையின் மகத்துவம்:-

"அகத்தியனை முழு அளவில் நம்பி இங்கு வந்ததால், அவன் குடித்த விஷத்தை நவபாஷான முருக பெருமானுடைய விபூதியும் சந்தனமும் முறியடித்து விட்டது. எந்த விஷத்தை அருந்தினானோ, அதுவே நவபாஷாண விபுதியோடும், சந்தனத்தோடும் கலந்து நீண்ட காலமாக இருந்து வந்த அவன் நோய்க்கு நல்லதொரு மாமருந்தாக மாறிவிட்டது" என்றார்.

சித்தன் அருள் - 9 - கண் பார்வை குறைபாட்டை சரி பண்ண:-

"நேத்திர தோஷ நிவர்த்தி புஷ்பம்" என்று ஒன்று மூணு வருஷத்துக்கு ஒரு முறை கொல்லி மலை காட்டில் விளையும். அந்த புஷ்பத்தை எடுத்து அதன் சாற்றை பிழிந்து தினமும் ஒரு சொட்டு கண்ணில் விடவும்.  தலையிலும் தேய்க்கணும். இதோடு வேறு சில மூலிகைச் சாற்றையும் அந்த கொல்லிமலைச் சித்த வைத்தியர் கொடுப்பார்.

இந்த வைத்தியத்தை சரியா தொண்ணூறு நாட்கள் செய்து வந்தால் போதும், கண் பார்வை துல்லியமாக தெரியும். கடைசிவரை ஆபரேஷன் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது.

Thursday 7 March 2013

சித்தன் அருள் - 114


[வணக்கம் அகத்தியர் அடியவர்களே!  இத்தனை நாட்களாக சித்தன் அருள் தொடரை நாம் அனைவரும் வாசித்து வந்துள்ளோம்.  மனித மனது சிலவேளை நல்ல விஷயங்களை மறந்து விடும் குணமுடையது.  எத்தனை தான் யோசித்தாலும், தக்க நேரத்தில் நினைவுக்கு வராது.  ஆதலால், இதுவரை எழுதியதிலிருந்து நல்ல விஷயங்களை மட்டும் தொகுத்து மறுபடியும் உங்கள் முன் தரலாமா என்று ஒரு யோசனை வந்தது. உங்கள் மேலான பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.  பதில் சொல்லுங்கள்! சித்தன் அருளை தொடருவோம்!] 

ஜீவ நாடி வழி தமிழ் மொழியில் எழுத்து வடிவாக வந்து பலருக்கும் வழிகாட்டிய அகத்தியர் பிரச்சினைகளுக்கு மட்டும் தான் வழி சொல்வார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  சில நேரங்களில் அதிகம் வெளியே தெரியாத பல மகான்களை பற்றியும், சித்த மார்கத்தில் சென்று வெற்றி கண்டு வெளி உலகறியாத சித்தர்களையும் பற்றியும் கூறுவார் என்று ஒரு முறை ஏற்பட்ட அனுபவம் மூலம் அறிந்துகொண்டேன்.

அப்படி ஒருநாள், காலை த்யானம், பூசை, பிரார்த்தனை எல்லாம் முடிந்த பின் பூசை அறையை விட்டு வெளியே வந்து பார்க்க, அன்று நாடி படிக்க வேண்டிக்கொண்டு  யாருமே வரவில்லை.  "பரவயில்லையே! நமக்கு இன்று விடுமுறை தான், நிம்மதியாக இருக்கலாம்" என்று நினைத்தேன்.

பொதுவாகவே அகத்தியர் நாடி என்னிடம் வந்த பின்னர் அமைதியாக எந்த செயலும் இன்றி மௌனமாய் அமர்ந்தது என்பது மிகக் குறைவு.  காலை நேர பூசை, த்யானம் போன்ற நேரம் தவிர, யாராவது ஒருவர் வந்து நாடி வாசிக்க சொல்ல, அவர்களுக்கு நாடியில் வரும் விஷயங்களை, உள்வாங்கி சொல்லும் போது, அது அப்படியே எனக்குள் ஒரு புது அவதாரம் எடுக்கும்.  எனக்கே அந்த நிகழ்ச்சி நடப்பது போல் உணருவேன்.  இதனால் மன உளைச்சல், மன வருத்தம் போன்றவை பட்ட நிமிடங்கள் தான் அதிகம்.  ஏனோ, எல்லோரையும் ஒரே கோணத்தில் பார்ப்பதால் வந்த வினையோ என்னவோ.

இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு நேர் எதிர் விதமாக அன்று அமைந்ததை கண்டு சந்தோஷப்பட்டு, உலக நடப்புகளை அறிந்து கொள்ளலாம் என்று நாளிதழை புரட்டினேன்.  சிறிது நேரம் வாசித்தும் மனம் எதிலும் ஒன்றாமல், சும்மாவேனும் அகத்தியர் நாடியை புரட்டுவோம், அகத்தியர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமே என்ற நப்பாசையில் நாடியை எடுத்து முறையாக பிரார்த்தனை செய்த பின் "ஏதேனும் சொல்கிறாரா?" என்று பார்த்தேன்.

எதிர் பார்த்தது போலவே, அகத்தியர் நாடியில் வந்து, அதிகம் வெளி உலகறியாத ஒரு சித்த புருஷரை பற்றி கூறினார்.  அதை பார்ப்போம் இன்று.

அவனுக்கு ஒரு பதிமூன்று வயதிருக்கும்!  அன்று வீட்டில் ஏற்பட்ட ஒரு வாக்கு வாதம் காரணமாக கோபமடைந்து வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டான்.  கால் போன போக்கில், கட்டுப்பாடின்றி, மனம் அலைந்தபடி எங்கெங்கோ நடந்து சென்ற அவனிடம் அடுத்த நேர பசிக்கு கூட ஏதேனும் வாங்கி சாப்பிட காசு இல்லாத நிலை.

பசி வயிற்றை கிள்ள என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு டீ கடை முன் யாரேனும் ஏதேனும் சாப்பிட தருவார்களா என்று எதிர் பார்த்து நின்றான்.  யாரும் அவனை கண்டு கொள்வதாக தெரியவில்லை.  இரவும் வெகு வேகமாக பரவத்தொடங்கிய நேரம். வீட்டுக்கும் திரும்பி போக மனம் ஒப்பவில்லை.  ஒன்றும் சாப்பிட கிடைக்காத அசதியில் கண் அயர்ந்தான்.  இரவு மணி பத்தை நெருங்கியது.

யாரோ தன்னை தட்டி எழுப்புவதை உணர்ந்து எழுந்தவன், தன முன்னே ஒரு சாது நிற்பதை கண்டான்.  

மிகுந்த கனிவுடன் அந்த சாது அவனிடம் சில பழங்களை கொடுத்து சாப்பிட சொல்லி, தானே சென்று அருகிலிருந்த கடையிலிருந்து "டீ" வாங்கி கொடுத்தார்.  அப்பொழுது இருந்த பசிக்கு அந்த சாதுவுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கூட தோன்றாமல் அவசர அவசரமாக சாப்பிட்டான்.

அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை பொறுமையாக இருந்த அவர்

"ஏன்பா! நீ என் கூட மலைக்கு வருகிறாயா?" என்றார்.

பசி அகன்ற சந்தோஷத்தில் அந்த பையன் "சரி" என்று தலையாட்டினான்.

அவனையும் அழைத்துக் கொண்டு அவர் மலையை நோக்கி நடக்கத்தொடங்கினார்.

அவர்கள் சென்று சேர்ந்த இடம், திருநெல்வேலிக்கு அருகே இருக்கும் "நம்பி மலை".

மலையின் மேலே ஒரு நீரோடையின் அருகில் இருந்த ஒரு மரத்தடியில் அவனை அமரச்செய்து, மந்திர உபதேசம் செய்து விட்டு,

"நான் திரும்பி வரும் வரை, நீ இந்த மந்திரத்தை ஜெபித்துக்கொண்டு த்யானத்தில் இரு.  பசித்தால் இந்த பச்சிலைகளை உண்ணு.  தேவை ஏற்படும் போது இந்த ஊற்றிலிருந்து நீரை குடித்துக்கொள்" என்று கூறி செல்லத்தொடங்கினார்.

சட்டென்று நினைவு வந்தவனாக "நீங்கள் எப்போது திரும்பி வருவீர்கள்?" என்றான்.

"நான் நிச்சயமாக உன்னை வந்து சந்திப்பேன்" என்று கூறி சென்றார் அவர்.  அவனுக்கு தெரியாது அவர் திரும்பி வர வெகு நாட்களாகும் என்று.

அவர் சொன்னபடியே த்யானத்தில் அமர்ந்து, அவர் சொல்லிப்போன மந்திரத்தை ஜெபித்துக்கொண்டிருந்தான்.  அவர் வருவதாக காணேம்.  இருட்டும், நடு இரவு நேரமும் சேர்ந்த தருணத்தில் வன விலங்குகளின் மிக ஆக்ரோஷமான சப்தங்கள் அவனை உலுக்கியது.  கண்ணை திறந்து பார்க்க நிலா வெளிச்சத்தில் உயரமாக வளர்ந்த மரங்களின் நிழல்கள் கூட அவனை பயமுறுத்த, ஒரு மனிதர் கூட அருகில் இல்லாததை உணர்ந்த அவன் தன்னை காப்பாற்ற யாராவது வரமாட்டார்களா என்று நினைத்து "இனி! அவர் சொன்ன மந்திரம் ஒன்று தான் நம்மை காப்பாற்றும்" என்று தீர்மானித்து கண்ணை இருக்க மூடிக்கொண்டு மந்திரத்தை ஜெபித்தபடி வெளியுலக நினைவை மறக்க எத்தனித்தான்.

மந்திர ஜெபம் மேலும் மேலும் தொடர, அவனுள் புது தைரியம் பிறந்தது.  ஒரு நிலையில் உடல் மிக மென்மையாக மாற, மிக வேகமாக உற்சாகமானான்.  மந்திரத்தை தொடர்ந்தபடி இருந்தான்.

அந்த சாது திரும்பி வரவே இல்லை.

இரவு முதல் ஜாமத்தை நெருங்க, திடீரென ஒரு வெளிச்சம் அவன் முன் தோன்றியது.  அசரீரியாக வார்த்தைகள் அதிலிருந்து அவனுக்கு உத்தரவாக வந்தது.

"இன்று முதல் நீ நம்பிமலை சித்தன் என்று அழைக்கப் படுவாய்.  உன்னில் சித்தத் தன்மை உருவெடுக்கும்.  இந்தக் காட்டில் வந்து இறைவனை வழிபட வரும் அனைவருக்கும் இங்கு உலவும் மிருகங்களிடமிருந்து பாதுகாப்பு அளித்து தொண்டு செய்வாய்" என்றது.

அந்த நிமிடம் முதல் அவனுக்குள் உடல் ரீதியாக பல மாற்றங்கள் உருவாகத்தொடங்கியது.  அனைத்தையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தவன், அவன் சுவாச முறையில் யாரோ உள்ளுக்குள் புகுந்து நிறைய மாற்றங்களை செய்வதை உணர்ந்தான்.  அது, அந்த நிமிடம் அவன் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக இருந்தது.  அன்று முதல் அவன் சித்தனாக மாறினான்.

அந்த சித்தன் தன் தவ வலிமையினால், பின்னர் தனக்கு சித்தத் தன்மையை அருளியது காலங்கிநாதர்  சித்தர்  என்பதை உணர்ந்து, அவரை குருவாக ஏற்றுக்கொண்டு இன்றும் நம்பி மலையில் உலா வருகிறான்.  தன் தபோ வலிமையினால் நம்பி மலையை வற்றாத செல்வ வளமுடைய, செழிப்பான மலையாக மாற்றி, அங்கிருக்கும் மிருகங்களின், மிருகத் தன்மையை கட்டுப் படுத்தி, நம்பிமலை பெருமாளை வழிபட வரும் பக்தர்களை, மலை ஏற தொடங்குவது முதல், தரிசனம் செய்து கீழே வந்து சேரும் வரை, அரூபமாக கூட நின்று காக்கின்றார்.

இந்த நிகழ்ச்சியை அகத்தியர் உரைத்த போது ஒரு விஷயம் தெள்ளத் தெளிவாக புரிந்தது.  சித்தன் என்பவன் எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் உதயமாகலாம்.  நாம் எந்த மலைக்கு சென்றாலும், அங்கேயும் அரூபமாக ஒரு சித்தபெருமான் இருந்து நமக்கு அருள காத்திருப்பார்.  நாம் தான் அதை புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.

சித்தன் அருள்........... தொடரும்!