​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 20 December 2012

சித்தன் அருள் - 104!


சுக்கிரனில் பிளவொன்று விரைவில் உருவாகப் போகிறது, இது பாரத தேசத்திற்கு நல்லதல்ல, அது தூம கேதுதான் என்று அகஸ்தியர் சொன்னது எனக்கு என்னவோ போலாயிற்று.

இதை வெளியே சொல்லலாமா கூடாதா என்று தெரியவில்லை.  இந்த வார்த்தையை முதலில் எத்தனை பேர்கள் நம்புவார்கள் என்பதும் கூட சந்தேகம் தான்.  அப்படியே வெளியே சொன்னாலும் அது பாரத தேசத்திற்கு எப்படிப்பட்ட சங்கடங்களை விளைவிக்கும் என்பதைப் பற்றியும் இதைத் தடுக்க என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதையும் அகஸ்தியர் சொல்லவில்லை.

மொட்டையாக இப்படி சொன்னதால் இதைப் பெரிது படுத்தாமல் அப்படியே விட்டுவிடலாம் என்று முடிவெடுத்தேன்.  அதே சமயம் தினமும் பல்வேறு பத்திரிகைகளையும் வாங்கிப் பார்த்தேன்.  பெங்களூர் வீ  ராமன்  வடநாட்டு விஞ்சானிகள் வெளிநாட்டு வானியல் நிபுணர்கள் ஏதேனும் இந்த தூம கேது பற்றி சொல்லி இருக்கிறார்களா என்று அன்றாடம் அலசிப் பார்த்தேன்.

என் கண்ணுக்கு எட்டிய தூரம் யாரும் தூம கேது பற்றிச் சொல்லவில்லை.  நண்பர்கள் சிலர் தினமும் என்னைச் சந்தித்து நாட்டின் எதிர் காலத்தைப் பற்றி அகஸ்தியரின் அருள் வாக்கைக் கேட்கத் துடித்தனர்.  ஆனால் இன்னும் ஆறு மாதத்திற்கு நான் நாடி படிக்கப் போவதில்லை என்றும் அந்த ஓலைக் கட்டு தற்சமயம் என்னிடம் இல்லை என்று சொல்லி சமாளித்தேன்.  ஓர் அமாவாசை காலை பதினோரு மணியிருக்கும்.  ஏதாவது நல்ல வார்த்தையை அகஸ்தியர் எனக்குச் சொல்லமாட்டாரா என்ற தாகத்தில் பூசை அறையில் மறைத்து வைத்திருந்த அந்த ஜீவநாடியை நான் எடுத்தேன்.

"விதிமறை சோதிட நுணுக்கம்தன்னை கற்றறிந்த தயரதன் மைந்தா
நிந்தன் நாவில் நானிருக்கிறேன் - பாரத தேசந்தன்னின்
குறிப்பேட்டினை வரைந்து கூறுபோட்டு பார்த்திடு - அகத்தியன்
குறிப்பிட்டது சரியா தவறாவென அறிவாய்"

என்று ஒரு நீண்ட வார்த்தை வெளியே வந்தது.

பாரத தேசத்தில் ஜாதகத்தைக் குறித்துப் பலனைப் பார்த்தால் அகஸ்தியர் அன்று சொன்ன "தூம கேதுவைப் பற்றிய தகவல் தெரியவரும்" என்ற பொருளில் இந்த வார்த்தை அமைந்திருந்தது.

பாரத தேசத்தின் ஜாதகத்தை எப்படிக் கணக்கிடுவது?  சுதந்திரம் அடைந்த தேதியில் இருந்தா? குடியரசு ஆனா தேதியில் இருந்தா? அப்படி  கணக்கிட்டாலும் எத்தனை மணி என்று கணக்கிடுவது? மணி தெரியாமல்  லக்னத்தை கணக்கிட முடியாதே! அப்படியே கணக்கிட்டாலும் அது எப்படி சரியான லக்னமாக இருக்கும் என்ற குழப்பம் தோன்றியது.

ஆகவே நான் பேசாமல் இருந்து விட்டேன்.

ஜீவநாடியை நான் பார்க்காமல் இருப்பதால் கூட்டம் படிப்படியாகக் குறைந்தது.  கேட்டுக் கேட்டும் நாடி படிக்காததால் பெரும்பாலோர்  என்னை விட்டு விலகி விடவே டென்ஷன் இல்லாமல் பிரார்த்தனையை மாத்திரம் செய்து கொண்டிருந்தேன்.

பையன் நல்லபடியாக மாறிவிட்டான்.  யாருக்கும் நாடி படிப்பதில்லை.  குடும்பப் பொறுப்பை நல்லபடியாக நிர்வகித்து வருகிறான் என்று பெருமிதத்தோடு என் வீட்டார் என் தங்கைக்குத் திருமணம் பார்க்க ஏற்பாடு செய்யலானார்கள். எத்தனையோ வரன்கள் நெருங்கி வந்தது.  ஆனால் கை கூடவில்லை.  பிரார்த்தனை பரிகாரங்கள் பலவற்றைப் பெற்றோரே செய்ய ஆரம்பித்தனர்.  மாதம் தள்ளிக் கொண்டே போனது தவிர எந்த வரனும் நிச்சயமாகவில்லை.

ஏன் திருமணம் நிச்சயமாகவில்லை என்று என் பெற்றோர் ஒரு நாளாவது வந்து என்னிடம் கேட்கவில்லை.  கேட்டால் அகத்தியர் நாடியைத் தான் நான் படிக்க வேண்டியிருக்கும்.

"அகத்தியர் நாடி நமகேதர்க்கு? பெருமாள் நமக்கு நல்ல வழியைக் காட்டுவார்.  ஊர் உலகமெல்லாம் அகத்தியர் நாடி படித்தா திருமணம் நடந்து கொண்டிருக்கிறது" என்ற வாதம் அவர்களுக்கு உண்டு.  எனவே கௌரவ பிரச்சினையாக எண்ணி, என் தங்கையைப் பற்றி எந்த கேள்வியும் கேட்கவில்லை.

ஆனால் என் உள்மனதில் தங்கையின் திருமணத்தைப் பற்றி கேட்க வேண்டும் என்று சட்டென்று தோன்றியது.  உடனே யாருக்கும் தெரியாமல் பூசை அறையில் மறைத்து வைத்திருந்த ஜீவநாடியை எடுத்துப் படித்தேன்.  "சட்டென்று  ஹிரண்ய கசிபுவைக் கொன்ற அஹோபில மலைக்குச் சென்று மூன்று நாட்கள் யாம் சொல்லும் திசையில் அமர்ந்து லக்ஷ்மி நரசிம்மனை நோக்கித் த்யானம் செய்க.  அன்னவனை நிழலாகக் காணும் பாக்கியமும் கிட்டும்.  அன்னவனால் உன் சோதரியின் திருமணமும் வேங்கடவன் சன்னதியிலேயே நடக்கும்" என்று அகஸ்தியர் திருவாய் மலர்ந்தருளினார்.

பலமுறை கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்த்தேன்.  ஜீவநாடியில் அதே வார்த்தைகளைத்தான் படிக்க நேரிட்டது.  உடனே அஹோபில மலைக்குப் போகச் சொல்கிறாரே அப்படிச் சென்றால் தான் என் தங்கைக்குத் திருமணம் நடக்கும்.  இது முன்பு வேங்கடமாலையில் அஹோபில மடத்து மேலாளரிடம் செய்து கொடுத்த சத்தியம் என்று எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக நினைவுக்கு வந்தது.

திருமலையில் என்னுடைய ஜீவநாடி தொலைந்த போன போது "அது மீண்டும் திரும்பக் கிடைத்தால் என் தங்கைகளின் திருமணத்தைத் திருப்பதியில் நடத்துவகாகப் பிரார்த்தனை செய்து கொள் " என்று அஹோபில மேலாளர் என்னிடம் சொன்னது, நாடி கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் நான் அரைகுறை மனதோடு தலையாட்டியது இப்பொழுது முழுமையாகத் தெரிந்துவிட்டது.

நாடியை நான் பலமாதங்கள் தொடாமல் இருந்து வந்தேன்.  அதிலும் கோயம்பத்தூரில் அந்த மில் அதிபரிடம் மாட்டிக் கொண்டு படாத பாடு பட்டது, ரயில் பயணத்தின் போது தவறவிட்டுத் திண்டாடியது, பின்னர் அதே நாடி கைமாறி கடைசியில் பரதேசி உருவத்தில் அகஸ்தியரே என்னிடம் கொடுத்தது, இதெல்லாம் எண்ணி, குடும்பத்தினர் வேண்டுகோளுக்காக ஜீவநாடியை நான் படிக்காமல் பூசை அறையில் மறைத்து வைத்திருந்தது நல்லதா அல்லது கெட்டதா என்று புரியவில்லை.

எனக்கிருந்த ஆர்வமெல்லாம் அகஸ்தியர் சொன்ன அந்த தூம கேதுவை நேரில் பார்க்க வேண்டும் என்பதே.  அது எப்படி இருக்கும்? தூம கேது ஏன் நல்ல வால் நட்சத்திரமாக இருக்கக் கூடாது என்றெல்லாம் தேவையற்றச் சிந்தனை தினமும் இருந்தது.

அன்று சொன்னதற்குப் பின்பு அகஸ்தியர் தூம கேதுவைப் பற்றி பின்பு சொல்லவே இல்லை.  மீறிக் கேட்டதற்கு "உன் வாக்கில் நான் இருக்கிறேன்.  நீயே பாரத தேசத்தின் ஜாதகத்தைக் கணித்துப் பார்" என்று சொல்லி மறைந்துவிட்டார்.

அதற்குப் பிறகு என் தங்கைகளின் திருமணத்திற்கு அகஸ்தியரிடம் கெட்ட பொழுது "அஹோபிலம்" செல்க அங்கு வியத்தகு சம்பவங்கள் உனக்கு! இந்த அறிய வாய்ப்பைத் தருகிறேன்.  "உடனே கிளம்பு" என்று ஆணையிட்ட பிறகு என்னால் ஒரு நிமிடம் சும்மா இருக்க முடியவில்லை.

"அஹோபிலம்" சென்று விட்டு வருகிறேன்" என்று மாத்திரம் பெற்றோரிடம் கூறிவிட்டுக் கிளம்பும் போது என் தந்தை விருட்டென்று கோபப்பட்டார்.  "பழயபடி ஊர் சுற்றும் உன்னையும் திருத்த முடியாது.  நாய் வாலையும் நிமிர்த்த முடியாது" என்று ஆசிர்வாதம் வழங்கினார்.

தந்தைக்குத் தெரியாமல் அகஸ்தியர் ஜீவநாடியை எடுத்து மிகப் பத்திரமாகப் பெட்டிக்குள் வைத்தேன்.

அப்பொழுது அகஸ்தியரிடம் வேண்டிக் கொண்டது, இரண்டு தான்.  "பகவானே! திருப்பதியில் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் என்னைப் பரிதவிக்க வைத்து ஆடிய நாடகத்தை அஹோபிலத்தில் காட்டாதே.  என்னால் தாங்க முடியாது.

இன்னொன்று பாரத தேசத்திற்கு ஆபத்து என்றீர்.  அந்த தூம கேதுவை நான், என் கண்ணால் காண வேண்டும்.  அதோடு தேசத்திற்கு எந்தவித ஆபத்தும் அந்தத் தூமகேதுவினால் வராமல் காப்பாற்ற என்ன பரிகாரம் என்ன பிரார்த்தனைகளைச் செய்ய வேண்டும் என்பதையும் எப்படியாவது கூறிவிடு.

இதைச் சொன்னால் போதும்.  நான் ஒரு போதும் யாருக்காகவும் வேறு எதற்காகவும் தங்களைத் தொந்தரவு செய்யமாட்டேன்.  யாருக்கும் நாடி படிக்கவும் மாட்டேன்" என்று வேண்டிக்கொண்டேன்.

ரயில் பயணத்தின் பொழுது வானத்தைப் பார்த்தேன்.  பௌர்ணமி முடிந்து ஒன்பதாம் நாள் நிலா வெளிச்சம் ஏறத்தாழ மறைந்து நட்சத்திரங்கள் வானத்தில் அடிக்கடி மின்னிக் கொண்டிருக்கின்றன.  பெரும்பாலானவர்கள் நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.  இரவு மணி இரண்டரை இருக்கும்.

திடீரென்று வானத்திலிருந்து பளிச்சென்று ஒரு பெரிய மின்னல் போன்ற ஒளி, கிழக்குப் பக்கம் தோன்றியது.  முதலில் மிகப் பிரம்மாண்டமாய் கண்ணைப் பறிக்கும் அந்த ஒளியை நான் பார்த்த பொழுது அரண்டு விட்டேன்.

ஒரு பெரிய தீ பிழம்பு தலை, உடல், காலோடு வானத்தில் தோன்றி இரண்டு நிமிட நேரம் மிகவேகமாகப் பூமியை நோக்கி வருவது போல் தோன்றி பின்னர் படிப்படியாகக் குறைந்து ஒரு சிறிய மின்னல் போல் குறுகி பின்னர் மறைந்துவிட்டது.

மழை பொழியும் பொழுது மின்னல் முதலில் தோன்றும்.  பின்பு இடி இடிக்கும்.  மழை பொழியும்.  அப்பொழுது அந்த மின்னலைக் கண்டாலே கண்ணை கூசும்.

கண் பார்வை பறிபோய் விடக்கூடாது என்பதற்காக இப்படிப்பட்ட "ஒளி" வீசும் மின்னலைக் கண்ட உடன் சட்டென்று நமது பார்வையை அருகிலுள்ள பச்சை மரத்தில் பார்க்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

அதுதான் இப்பொழுது எனக்கு நினைவில் வந்தது.

வானத்தில் தோன்றிய இந்த அதிசயத்தை அன்றைக்கு எத்தனைப் பேர்கள் பார்த்தார்களோ எனக்குத் தெரியாது.  ஆனால் நான் கண்டு பயந்து போனதும் பின்னர் பரவசம் அடைந்ததும் உண்மை.

அப்பொழுதெல்லாம் "பறக்கும் தட்டு" பற்றி ஒரு கிலி இருந்தது.  வீட்டை விட்டு வெளியே வருகின்ற பலர், வானத்தில் பறக்கும் தட்டு தன தலை மீது விழுந்து விடக்கூடாது என்று பயந்து அடிக்கடி வானத்தைப் பார்த்துக் கொண்டே நடப்பார்கள்.  அதிலேயும் இரவு நேரத்தில் வீதியில் நடக்கிறவர்கள் ஏதாவது சப்தம் பலமாகக் கேட்டாலும் அந்தப் பறக்கும் தட்டுதான் தலை மீது விழுந்து விட்டதோ என்று கதிகலங்கி தலை தெறிக்க ஓடியதும் உண்டு.

என் மனதிலும் இதுதான் பட்டது.  ஆனால் இதை பறக்கும் தட்டு என்று எண்ண முடியவில்லை என்றாலும் வானத்தில் நடக்கும் அற்புதங்களில் இதுவும் ஒன்று என் எண்ணினேன்.

தூக்கம் வரவில்லை.  தலைக்கருகே காத்திருக்கும் பெட்டியைத் தடவிப் பார்த்தேன்.  அகத்தியர் ஜீவநாடி இருந்தது.  பத்திரமாக இருக்கிறது என்று சந்தோஷம்.

அஹோபிலத்தில் நிறைய ஆச்சரியமான சம்பவங்கள் நடக்கப் போகிறது என்று சொல்லியிருந்ததால் அது என்னவாக இருக்கும்? என்று யோசித்துக் கொண்டிருந்த எனக்கு, வானத்தில் தோன்றியது ஒரு வேளை தூம கேதுவாக இருக்குமோ என்று நினைக்க தோன்றியது.

அகத்தியர் நாடியிடம் இது பற்றிக் கேட்கலாம் என்றால் அது சரியான நேரம் இல்லை.

கை கால் சுத்தம் பண்ணிக் கொண்டு கேட்கலாம்.  ஆனால் நாடியை விட்டு விட்டுத் திரும்பி வருவதற்குள் "நாடி காணாமல் போய்விடுமோ" என்ற பயம்.

அதே சமயம் நாடியைத் தூக்கிக் கொண்டு பாத்ரூமுக்கும் செல்ல முடியாது.  ஆனாலும் வானத்தில் தோன்றி மறைந்த அந்த விசித்திரத்தைப் பற்றி உடனே தெரிந்து கொள்ளவும் ஆசை.

இப்படி மனப்போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஏதோ ஓர் உணர்வு உந்தித்தள்ள ஜீவநாடியில் கை வைத்த போது நூற்றி முப்பது வாட் எலெக்ட்ரிக் கம்பத்தில் கை வைத்தால் என்ன ஷாக் ஏற்பட்டிருக்குமோ அப்படி ஒரு ஷாக் எனக்கு அடித்தது.

எனக்கு இதுவரை இப்படியோரு அனுபவம் ஜீவ நாடியைத் தொட்டு ஏற்பட்டதில்லை.

உடனே அவசர அவசரமாக ஜீவ நாடியைப் பார்த்த பொழுது அகஸ்தியர் சொன்னார் "வானத்தில் வட கிழக்குத் திசையை அசையாது பார், தூம கேது தெரியும்".

சித்தன் அருள் ...................... தொடரும்! 

[அகத்தியர் அடியவர்களே! இரு வார இடைவேளைக்கு பின் சித்தன் அருளுடன் உங்களை சந்திக்கிறேன். நமஸ்காரம்!]

Tuesday 18 December 2012

அகத்தியர் தரிசன அருள் பெற!

சித்தர் பக்தன் என்கிற அகத்தியர் அடியவர் அனுப்பித்தந்த அகத்தியர் தரிசன அருள் விதியை கீழே தருகிறேன்.  யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக  என்கிற எண்ணத்தில், எல்லோரும் அருள் பெறுங்கள்.

அகத்தியரின் பாதார விந்தங்களை பணிந்து கொண்டு செப்புகிறேன்.

வீட்டில் அகத்தியருக்காக ஒரு அறையை தேர்ந்தெடுத்து.அதை கழுவி அதில் மங்சள் நீரை தெளிக்க வேண்டும். அந்த அறையில் அசைவம் கொண்டு செல்லலாகாது.. பூசை செய்பவர் அசைவம் அலையலாகாது. 45 நாள் அகத்தியர் தரிசனம் காண மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அகத்தியரின் படத்தின் முன் பத்மாசனத்தில் அமர்ந்து கீழ் காணும் மந்திரத்தை சொல்ல வேண்டும்.
ஓம் பசு பதிபஷராஜ 
நிரதிசய சித்ருப ஞானமூர்த்தாய
தீர்க்க நே த்ராய
கணகம் கங்கெங் லங் லீங் லங் லாலீலம் 
ஆவ் பாவ் ஆம் ஊம் பார்க்கவ்விய ஜோதிமய வரப்பிரசன்ன
பாத தரிஸ்யே அகத்தியர் சரணாய நமஸ்து.

இவ்வாறு108 தடவை கூற வேண்டும். ”மனதில் தீய எண்ணத்தை விலக்கி 45 நாளும் மனதார ஜெபிப்பவர் 45ம் நாள் அகத்தியரை தரிசிக்கலாம். தரிசிப்பவர் முதலில் அவரின் காலில் விழுந்நு ஆசிர்வாதம் பெறவேண்டும். பின்னர் தேவையான வரத்தை கேட்கவேண்டும்.அதன் பின்னால் அவர் நம் காதில் ஒரு மூல மந்திரத்தை சொல்லுவார். அதை  யாரிடமும் கூறக்கூடாது.அதை ஜெபித்து நாமும் ஞானகுரு ஆகலாம்.

Thursday 13 December 2012

சித்தன் அருள் - 103


இன்பம் தனித்து வரும்.  துன்பம் துணையோடு வரும் என்பது பழமொழி.  இதனை நினைவுருத்துவதர்க்காகத்தான் எனக்கு இப்படிப்பட்ட சோதனைகள் நடக்கிறதோ என்று எண்ணிக் கொண்டேன்.

தூக்கம் அடியோடு போனதால் நிலை கொள்ளாமல் தவித்தேன்.

திருப்பூரில் என்னை ரயில்வே ஸ்டேஷனில் வந்து சந்திப்பதாகச் சொன்ன அந்த மில் அதிபரின் ஆட்கள் ஏன் வந்து சந்திக்கவில்லை.  ஒரு வேளை என்னைக் கண்டு பிடிக்க முடியாமல் திரும்பிப் போய் விட்டார்களா? என்று ஒரு சந்தேகம்.

ஒரு வேளை நான் ஜன்னலோரம் கவிழ்ந்து கண் அசந்திருந்ததால் என் முகம் அவர்களுக்குத் தெரியாமல் போய் விட்டதா? இல்லை அவர்களே சற்று தாமதமாக வந்து என் ரயிலைப் பிடிக்க முடியாமல் "கோட்டை" விட்டிருக்கலாமோ? என்று கூட எண்ணிக் கொண்டேன்.

இந்த சமயத்தில் தான் திடீரென்று ஒரு சந்தேகம் எனக்கு.  ரயில் டிக்கெட் திருப்பூர் வரையில் எடுத்திருக்கிறார்களா? இல்லை சென்னை வரையிலும் எடுத்திருக்கிறார்களா? என்பதுதான்.

நல்லவேளை ரயில் டிக்கெட்டில் சென்னை என்று இருந்தது.  அதன் பின்புறம் என் பெயரும் வயதும் தெளிவாக எழுதி இருந்தது.  தப்பித்தேன்,  இல்லையென்றால் என் நிலை கந்தல் நாராக மாறி இருக்கும்.  திருப்பூர் வருவதற்கு முன்பே என் டிக்கெட்டை டி டி ஆர் பரிசோதித்து விட்டதால் இனிமேல் டி டி ஆர் செக்கிங் இருக்காது.  காலையில் சென்னைக்குப் போய் பார்த்துக் கொள்ளலாம் என்று தைரியம் ஏற்பட்டது.

இத்தனை நடந்ததிற்கும் அகஸ்தியரின் ஜீவநாடி தொலைந்ததிற்கும்  ஏதோ ஒரு காரணம் இருந்திருக்கும் என்று மனதைத் தேற்றிக் கொண்டேன்.

ஈரோட்டில் ரயில் நின்றது.  ஒரு நப்பாசை, யாராவது ஜீவநாடியை எடுத்துக் கொண்டு போகிறார்களா, தப்பித்தவறி அதனை மீண்டும் என்னிடம் கொடுத்து விட மாட்டார்களா என்று ஒரு ஏக்கம் மனதில் உறுத்தியது.

பிளாட்பாரத்தில் இறங்கி அங்குமிங்கும் பார்த்தேன்.  யார் யார் என்ன என்ன லக்கேஜ் கொண்டு போகிறார்கள் என்பதிலே கண்ணும் கருத்துமாகப் பார்த்தேன்.

நேரம் ஆனது தவிர என் கண்ணில் அகஸ்தியர் ஜீவநாடி தென்படவே இல்லை.

நிறைய பேர்களுக்கு நாடி பார்த்துப் பலன் சொன்ன போது வியத்தகு அதிசயங்கள் நடந்திருக்கிறது.  என் விஷயத்தில் இது போல் நடக்காதா என்று கூட நினைத்தேன்.

யாராவது ஒருவர் "இந்தப்பா உன் அகஸ்தியர் ஜீவநாடி" என்று அந்த ஓலைக்கட்டை எடுத்துத் தரமாட்டார்களா என்று கூட நினைத்தேன்.  பலருக்கு பலவிதமான அதிசயங்களைச் செய்து வைத்த அகஸ்தியர் எனக்கு எதுவும் செய்யவில்லை.

இது வருத்தம் தான் என்றாலும் "நான் தான் இந்த நாடி கைவிட்டுப் போகட்டும் என்று சில மணி நேரத்திற்கு முன்பு நினைத்ததால் இழந்து போனதை நினைத்து வருத்தப்படக் கூடாது" என்று தேற்றிக் கொண்டேன்.

பிளாட்பாரதிலுள்ள மணி அடிக்கவே ரயிலில் ஏறிக் கொண்டேன்.  எல்லோருமே படுக்கையை விரித்து, ஜன்னலைச் சார்த்தி, வெளிச்சமான விளக்குகளை அணைத்து விட்டதால், நானும் என் பெட்டியைத் தலையணை மாதிரி வைத்துக் கொண்டு படுத்தேன்.

தூக்கம் வந்தால் தானே!

புரண்டு புரண்டு படுத்தேன்.  திருப்பதி சம்பவங்கள், லக்ஷ்மி நரசிம்மரின் வாசனைத் தரிசனம், கோயம்பத்தூர் மில் அதிபரின் தொடர்பு, அவரது விருந்தாளியாகத் தங்கியது எல்லாம் மீண்டும் என்னை முள் குத்துவது போல் குத்தியது.

எதற்காகப் பிறந்தேன், என்ன பண்ணப் போகிறேன், அகஸ்தியர் எதற்காக என்னிடம் வந்தார்? என் குடும்பப் பொறுப்பை விட்டு விட்டுத் தந்தையின் கோபத்திலிருந்து நாடி பார்ப்பதால் ஏற்ப்படுகின்ற நல்லதை விட ஏற்ப்படுகின்ற கெட்டது, அவமானம், கேவலமான பேச்சுக்கள் தொடர்ந்து மற்றவர்களைப் போல் வேலைக்கு செல்லாமல் பைத்தியம் பிடித்தவன் போல், ஊர் ஊராக அலைவது எல்லாமே வீண் தான் என்று இப்போதுதான் ஞானோதயம் ரயிலில் தோன்றியது.

நடந்தது நடந்துவிட்டது.  இனிமேலாவது மற்றவர்களைப் போல் பொறுப்புள்ள மனிதனாக நடந்து கொள்வோம்.  அகஸ்தியர் இதற்காகத்தான் என்னைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.  எல்லாம் நன்மைக்கே என்று என்னை நான் தேற்றிக் கொண்டேன்.  இனிமேல் நாடி பற்றிச் சிந்திக்க கூடாது என முடிவெடுத்தேன்.  சேலத்தில் ரயில் நின்றது.

தூக்கம் வராததினால் எழுந்து பிளாட்பாரத்தில் இறங்கினேன்.

மனது கேட்கவில்லை.  தப்பித்தவறி யாராவது அகஸ்தியர் நாடியைத் தூக்கிக் கொண்டு செல்கிறார்களா என்ற நப்பாசை மறுபடியும் தலையைத் தூக்கியது.

அப்படியே கண்ணோட்டம் விட்டேன்.  பசி லேசாக வயிற்றைக் கிள்ளியது.  ஒரு கப் பால் சாப்பிட்டுவிட்டு வருவோம் என்று கான்டீன் பக்கம் சென்றேன்.

அங்குதான் என் கண்கள் வியப்படைந்து நின்றன.

மேல்சட்டை எதுவுமின்றி, பரட்டைத்தலை, வெண்தாடி மீசையோடு தோளில் ஒரு துண்டை தூளி போல் கட்டி தொங்கவிட்டு கொண்டு காவி வேஷ்டியில் தீட்சண்யமான கண்களோடு தனியாக நின்று கொண்டிருந்தார் ஒரு வயதான பெரியவர்.

பெரும்பாலும் இப்படிப்பட்டவர்கள் பரதேசியாகத்தான் இருப்பார்கள்.  யாரும் இவர்களைக் கண்டு கொள்வதும் இல்லை.  அதேபோல் இந்தப் பரதேசிகளும் டி டி ஆரால் எந்த ஸ்டேஷனில் இறக்கிவிட்டாலும் அதைப் பெரிது படுத்துவதும் இல்லை.

நானும் அப்படித்தான் நினைத்தேன்.  அதனால் அந்தப் பெரியவரைப் பற்றி அதிகம் நினைக்கவில்லை.  வேறு பயணிகளில் யாரவது ஒலைக்  கட்டைத் தூகிக் கொண்டு இறங்குகிறார்களா என்பதிலேயே தான் என் முழுக்கவனமும் சென்றது.

பாலைக்குடித்துவிட்டு திரும்பியதும் அந்தப் பரதேசிப் பெரியவர் சட்டென்று தன தோளில் தொங்கிக் கொண்டிருந்த தூளி போன்ற துண்டிலிருந்து எதையோ ஒன்றை எடுத்து - பயணிகள் உட்காரும் பெஞ்சில் வைத்துவிட்டு விறு விறுவென்று வாசலைக் கடந்து வெகு வேகமாகச் சென்றுவிட்டார்.

அந்த இடத்தில் என்னையும் அவரையும் தவிர வேறு யாருமில்லை.  அந்தப் பரதேசிப் பெரியவர் வைத்தது என்ன என்று தெரிந்து கொள்ள எனக்கு ஆசையே இல்லை.

இருப்பினும் எனக்குள் இருந்த ஒரு உந்துதல் காரணமாகவும், ரயில் கிளம்ப இன்னும் பத்து நிமிஷம் ஆகும் என்பதாலும் அந்தப் பெஞ்சில் போய் உட்கார்ந்தேன்.

ஒரு சிறு சபலம்.  "பகவானே! அந்தப் பெஞ்சில் இருக்கும் பொருள் அகஸ்தியர் நாடியாக இருக்ககூடாதா?" என்று தோன்றியது.  மறு வினாடி ஒரு பயம்.

அவரோ ஒரு பரதேசி.  அவர் வைத்த அந்தப் பொருளைத் தொட்டுப் பார்ப்பது என்பது மிகவும் அசிங்கமான செயல்.  யாராவது அங்கிருந்தவாறு பார்த்தால் என்னை எவ்வளவு கேவலமாக நினைப்பார்கள் என்ற குற்ற உணர்ச்சி.  ஆனாலும், இத்தனையும் தாண்டி அந்தத் துண்டில் சுற்றி வைக்கப்பட்டதைப் பிரித்துப் பார்க்க வேண்டும் என்ற துடிப்பு இருந்தது.

நான் இன்னும் கொஞ்சம் அதனருகே போய் உட்கார்ந்தேன்.  இருபது அடிக்குத் தள்ளி, இரண்டு மூன்று இளைஞ்சர்கள் சிகரெட் பிடித்துக் கொண்டு பிளாட்பாரத்தில் இப்படியும் அப்படியும் நடந்து கொண்டிருந்தார்கள்.  சில சமயம் அவர்கள் என்பக்கம் வருவதும் போவதுமாக இருந்தார்கள்.

இதனால் எனக்கு ஒரு மானசீகமான பயம் ஏற்பட்டது.  என் இடது கைவிரல்கள் அந்தப் பொருளுக்கு மிக அருகில் சென்றதைச் சட்டென்று இழுத்துக் கொண்டேன்.  இந்த சமயத்தில் இன்னொரு பதற்றமும் தோன்றியது.

ஒரு வேளை அந்தப் பரதேசிப் பெரியவர் சென்று விட்டோ அல்லது இங்குமங்கும் சென்றுவிட்டோ மீண்டும் சட்டென்று திரும்பி அந்தப் பொருளை எடுக்க வந்துவிட்டால், பிச்சைக்காரனினும் கேடுகெட்டுப் போவேன்.  "ஏன் இந்த அவலம்?" என்று தான் தோன்றியது.  ஒரு முடிவு எடுத்தால் அதைக் கடைசிவரை நிறைவேற்ற வேண்டும்.  கைவிட்ட பொருள் போகட்டும் என்று தீர்மானமாக நினைக்க வேண்டும்.  சபலம் எவ்வளவு கொடுமையானது, எவ்வளவு கேவலத்தை உண்டு பண்ணுகிறது என்று நினைத்துப் பார்த்தேன்.  என் மீது எனக்கே வெறுப்பு உச்சகட்டத்தில் ஏற்பட்டது.

போர்டர் ஒருவர் என் பக்கத்தில் வந்தார்.

எந்த கூலியும் கிடைக்கவில்லை என்ற ஆத்திரம் அவருக்கு இருந்திருக்கிறது. வெறுப்புடன் யாரையோ நோக்கித் திட்டிக் கொண்டே அந்தக் கண்டீன்காரரிடம் ஒரு கப் பாலை வாங்கி, ஆற அமர நிதானமாகக் குடிக்க, நான் அமர்ந்து இருந்த பெஞ்சில் வந்தமர்ந்தார்.  எனக்கு இதைக் கண்டதும் கொஞ்ச நஞ்ச ஆசையும் போய்விட்டது.  அந்தப் பொருளைப் பார்க்காமல் அப்படி இங்குமங்கும் கண்களை ஓட்டினேன்.  இதற்குள் மணி அடிக்கவே, மனதிற்குள் அந்தப் போர்டரைத் திட்டிக் கொண்டேன் எழுந்தேன்.

ரயில் கதவைத் திறந்து கொண்டு உள்ளே ஏறும்பொழுது "ஏனுங்க......... இதை விட்டுட்டுப் போறீங்களே" என்று ஒரு குரல் கேட்டது.

திரும்பி பார்த்தேன்.

என் பக்கத்தில் சுவாரஸ்யமாகப் பால் குடிக்க வந்தமர்ந்த அந்தப் போர்டர் அந்தப் பரதேசிப் பெரியவர் வைத்துவிட்டுப் போன அந்தத் துண்டினால் சுற்றப்பட்டப் பொருளை என்னிடம் நீட்டினான்.

ஒரு பக்கம் சந்தோஷம்.  இன்னொரு பக்கம் பயம்.  இது என்னுடைய ஓலைச் சுவடியாக இல்லாவிட்டால் அதை என்ன செய்வது என்பதுதான்.  போர்டருக்கு நன்றி சொல்லி அதை வாங்கிக் கொண்டேன்.  இப்படிப்பட்ட நல்ல உள்ளத்தையா நான் திட்டினேன் என்று வெட்கம்,. அந்தப் போர்டருக்கு ஏதாவது உதவி செய்திருக்க வேண்டும்.  ஆனால் செய்ய முடியாத சூழ்நிலை என் மனம் ஒரு குற்றவாளியைப் போல் குறு குறுத்தது.

படுக்கைக்கு வந்து அதைப் பிரித்துப் பார்க்க மனது துடித்தது. மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் பொழுது அந்த துண்டிற்குள் இருந்த அமைப்பு நாடி ஓலைக் கட்டு போல் தோன்றியது.

இனியும் பொறுக்க முடியாமல் என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் என்ற வேகத்தோடு பிரித்துப் பார்த்தேன்.

அது..........

சில மணி நேரத்திற்கு முன்பு திருப்பூரில் காணாமல் போன என்னுடைய அதே அகஸ்தியரின் ஜீவநாடிதான் என்று தெரிந்தது.

நான்கு மணி நேர இடைவேளைக்குள் எனக்கு ஏற்பட்ட இந்தச் சோதனை எதற்கு?

யார் அந்தப் பரதேசிப் பெரியவர்.  அகஸ்தியப் பெருமான் தானா?  எதற்காக ஓலைச்சுவடி காணாமல் போயிற்று?  அது எப்படி இந்தப் பரதேசியின் கையில் கிடைத்தது.  இவன் பரதேசியா இல்லை ரயில் பயணிகளின் பொருளைத் திருடும் திருடனா?

அப்படியே திருடினாலும் எதற்காக என் கண்பார்வையில் அந்த ஓலைச் சுவடியை வைத்துவிட்டுச் செல்ல வேண்டும்? அப்படியே வைத்துவிட்டுப் போனாலும் அந்தப் பொருளின் மீது எனக்கு ஏன் என் தகுதியையும் மீறி ஆசை வர வேண்டும்?

அந்தப் பொருள் என்னுடையது என எண்ணி ஏன் இந்தப் போர்டர் என்னிடம் ஓடி வந்து தரவேண்டும்? இப்படி நடப்பதெல்லாம் கனவா இல்லை நனவா? இல்லை தூக்கத்தில் நடக்கின்ற நாடகமா? என்ற கேள்விக்கு உடனடியாக விடை கிடைக்கவில்லை.

நான் பக்திமான் அல்ல, பகவானே நேரில் வந்து என்னச் சோதிப்பதற்கு! பலருக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தேன்.  இந்த ஓலைச்சுவடியை வைத்து எத்தனைப் பேர்கள் இந்த அகஸ்தியர் வழிப்படி நடந்து ஏமாந்து போனார்கள் என்பது தெரியாது.

ஒன்று மட்டும் நிச்சயம்.  ஏதோ ஒரு பந்தம் எனக்கும் அகஸ்தியப் பெருமானுக்கும் இருக்கிறது.  இல்லையென்றால் வேண்டாமென்று எண்ணினாலும் இந்த ஜீவநாடி மீண்டும் என்னிடமே வந்து சேர்ந்திருக்கிறது.  இதை அதிசயம் என்று சொல்வதா? இல்லை அகஸ்தியர் பொழுது போகாமல் என்னிடம் ஆடும் நாடகம் என்று எடுத்துக் கொள்வதா? அல்லது திரும்பவும் மற்றவர்களுக்குப் படிக்க அகஸ்தியர் உத்திரவு கொடுத்து விட்டார் என்று எண்ணிக் கொள்வதா? என்று நான் ஒருவித சந்தோஷத்தில் பயத்தில் குழம்பிக் கொண்டிருந்தேன்.  மீண்டும் இந்த ஓலைச்சுவடி என் கைக்கு வந்தது நல்லதா அல்லது ஏதேனும் விபரீதச் செயலுக்கு அஸ்திவாரமா, என்றும் உறுதியாகத் தெரியவில்லை.

அந்த நள்ளிரவு நேரத்திலும் நான் சுத்தமாக இல்லாத அந்தச் சூழ்நிலையிலும் அகஸ்தியர் என்னதான் சொல்கிறார் என்று துணித்து நாடியைப் படிக்க ஆரம்பித்தேன்.

அப்பொழுது அகஸ்தியர் சொன்ன சொற்கள் ஒவ்வொன்றும் என்னை ஆச்சரியப் பட வைத்தது.  அதிலொன்று "சுக்ரனில் பிளவொன்று விரைவில் உருவாகப்  போகிறது.  இது பாரத தேசத்திற்கு நல்லதல்ல" என்று உரைத்தார்.  அது "தூமகேது" என்று பின்னர் தெரிந்தது.

சித்தன் அருள்.................. தொடரும்!

Thursday 6 December 2012

சித்தன் அருள் - 102


தன் மகளை வெளிநாட்டிற்கு அனுப்பி பல ஆயிரக்கணக்கான ரூபாயைச் செலவழித்துப் பல்வேறு அறுவைச் சிகிர்ச்சைகளைக் கையாண்டும் பலன் தராமல் போன வருத்தம் அந்த மில் அதிபருக்கு இருந்தது.

இதனால் ஏராளமான சொத்துக்கு வாரிசாகப் பிறந்த அந்தப் பெண் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போய் விடுமோ என்ற கவலையும் அச்சமும் அவரை வாட்டி எடுத்ததோடு சொத்துக்கு ஆசைப்பட்டு அவருடைய உறவினர் பலர் அதர்வண வேத பிரயோகம் செய்யவும் தயாராக இருந்தனர்.

பிரார்த்தனைகள் மீது மட்டும் நம்பிக்கையை வைத்திருந்த அந்த மில் அதிபர் இருக்கிற சொத்துக்களை எல்லாம் தர்மத்திற்கு எழுதிவிட்டு குடும்பத்தோடு தற்கொலை செய்து விடலாம் என்று முடிவெடுத்தார்.

அதற்கு முன்பு திருப்பதி பெருமாளை ஒரு முறை தரிசனம் செய்துவிட்டு வருவோம்.  தனக்கு வந்திருக்கும் எலும்பு சம்பந்தமான புற்றுநோய் இப்போது ஆரம்பக் கட்டம் என்றாலும் இதனால் தன் கால் ஒரு வேளை துண்டிக்கவும் படலாம்.  அப்படியிருக்கும் பட்சத்தில் தானும் தன குடும்பம் ஏன் உயிர் வாழ வேண்டும் என்ற வெறுப்பின் உச்சகட்டத்தில் இருக்கும் பொழுதுதான் திருமலையில் நான் சந்தித்திருக்கிறேன்.

இது ஒரு புறமிருக்க அந்த மில் அதிபரின் பெண் வீட்டில் யாருமில்லாத சமயத்தில் எடுத்த முடிவும் அது எப்படி நன்மையில் முடிந்தது என்பதும் வியப்புதானே!

எது எப்படியோ.....

கோயம்பத்தூர் போய்ச் சேர்ந்ததிற்கு ஒரு இனிப்பான செய்தி கிடைத்துவிட்டது.  அகஸ்தியர் என்னைக் கை விடவில்லை.  கெட்ட பெயர் ஏற்படாமல் தப்பித்தேன்.  டாக்டர்கள் ஆணித் தரமாக உறுதிபடச் சொல்லி விட்டதால் அந்தப் பெண்ணிற்கு இல்லற வாழ்க்கை அமைய இறைவன் கருணை காட்டிவிட்டான்.  அந்த மில் அதிபர் குடும்பம் எப்படிப்பட்ட மகிழ்ச்சியில் இருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

தன காலில் ஏற்பட்ட நோயைப் பற்றியோ அல்லது வேறு எந்த விஷயத்தைப் பற்றியோ சிறிதும் கவலைப்படாமல் அந்த மில் அதிபர் அடைந்த மகிழ்வுக்கு அகஸ்தியரின் ஜீவநாடியும் ஒரு காரணமாக இருந்ததால் ஒரு பெருமை எனக்கும் இருந்தது.

ஒரு சாதாரண செடியின் தன்மையானது ஒரு குடும்பத்திற்கே விளக்கேற்றி விட்டது நம்பமுடியாத செய்தியாகத் தான் இருக்கும்.

இந்த செய்தியை நம்பாதவர்கள் நிறைய பேர்,  இது பற்றி கூட அகஸ்தியரிடம் நான் நாடியில் கேட்டேன்.

நம்புகிறவர்கள் நம்பட்டும்.  நம்பாமல் போனால் உனக்கு நல்லது.  காரணம் அரை குறை நம்பிக்கயுடயவர்கள் யாரும் உன்னைத் தேடி வரமாட்டார்கள்.  படபடப்பு இல்லாமல், தினமும் நான்கு மணி நேர பிரார்த்தனை செய்யாமல் அமைதியாகப் பொழுதைக் கழிக்கலாம் என்று பதில் உரைத்தார்.

மேலும் அவர் சொல்லித்தந்தது எல்லாம் "தெய்வ ரகசியங்கள்" என்கிற நிலையில் இருந்ததால் நிறைய விஷயங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை.

நாடி படிக்க வருபவர்கள், அவர்கள் எதிர்பார்த்த காரியம் நடந்தால் நம்புவார்கள்.  இல்லையேல் விலகிவிடுவார்கள்.  அதோடு காரியம் நடக்காத ஆத்திரத்தில் "எழுதுவது/சொல்வது எல்லாம் பொய்" என்று ஒரு முத்திரையும் குத்திவிடுவார்கள்.

என்னிடம் நாடி பலன் கேட்க வருகிறவர்களுக்கு மிகவும் மரியாதையை கொடுப்பேன்.  அவர்களுக்காக நான் பிரார்த்தனை செய்து கொள்வதும் உண்டு.  "பகவானே வந்திருக்கும் அனைவருக்கும் எத்தனையோ பிரச்சினைகள், இது இப்போது தீரும் என்று முழு நம்பிக்கையோடு வந்திருக்கிறார்கள்.  அவர்கள் நம்பிக்கைத் தயவுசெய்து வீணாகி விடாதீர்கள்.  இதனால் நாடிபடித்து பலன் சொல்லும் நானும் கேவலப்படுவேன்.  அகஸ்தியர் ஜீவநாடிக்கும் மதிப்பு இருக்காது" என்று பங்கிகரமாகவே சொல்லிவிட்டுத் தான் ஓலைக்கட்டைத் தூக்குவேன்.  "நாடியினால் எந்தப் பலனும் கிடைக்காத பட்சத்தில் நான் மற்றவர்களுக்கு நாடி பார்ப்பதில் துளியும் பலனில்லை.  அதைவிட யாரிடமாவது இந்த ஜீவநாடியைக் கொடுத்துவிட்டு அமைதியாக உட்கார்ந்து விடுவேன்.  எனக்கெதற்கு வீண் வம்பு?  அப்படியொரு பிழைப்பு எனக்குத் தேவை இல்லை! என்று பலமுறை அகஸ்தியரிடம் போராடியிருக்கிறேன்.  அப்பொழுதெல்லாம் எனக்குக் கிடைத்த பதில் ஒன்றுதான்.  "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு.  அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா" என்பது தான் அது.

"நான் ஊருக்கு கிளம்புகிறேன்" என்று பலமுறை சொல்லிப் பார்த்தும் அந்த மில் அதிபர் என்னை விடுவதாக இல்லை.

"அகஸ்தியர் அருளால் என் பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை ஆரம்பித்துவிட்டது.  டாக்டர்களும் இதனை உறுதியாகவே சொல்லிவிட்டனர்.  இன்னும் ஆறு மாதத்தில் அவளுக்குத் திருமணம் செய்துவிடுவேன்.  என்னைப் பற்றிக் கவலை இல்லை" என்றவர் பின்னர் அரை குறை மனதோடு சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

எல்லோருக்கும் நன்றி சொல்லி அந்த மில் அதிபர் வீட்டிலிருந்து நான் கிளம்பும் போது மில் அதிபர் என் காதில் ஒரு செய்தியைச் சொன்னார்.  செய்தியா அது! இல்லை அணுகுண்டு!

அதைக் கேட்டதும் எனக்கு கையும் ஓடவில்லை.  காலும் ஓடவில்லை.  எவ்வளவுக் எவ்வளவு நான் நிம்மதியாக இருந்தேனோ அந்த நிம்மதி போய் விட்டது.  அதோடு போனாலும் பரவாயில்லை.  நான் ஒழுங்காக ஊர்ப் போய்ச் சேருவேனா என்ற திகிலும் ஏற்பட்டது.

"உங்களையும் உங்கள் கையில் இருக்கும் அகஸ்தியர் நாடியையும் கண் வைத்து ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறது.  எனவே உங்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.  இதற்கு நீங்களும் முழு மனதோடு ஒத்துழைக்க வேண்டும்" என்றார் அவர்.

"நான் என்ன தப்பு பண்ணினேன்".

"அகஸ்தியர் நாடியை வைத்துப் பலன் சொன்னீர்கள். அது பலித்துவிட்டது.  சொத்துக்கள் கைவிட்டுப் போய்விட்டதே என்ற ஆத்திரத்தில் எனது பங்காளிகள் சிலர் உங்கள் மீது கடும் கோபத்திலும் ஆத்திரத்திலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு இப்போது எங்கள் மீது கோபமில்லை.  என் மகள் மீது கோபமில்லை.  உங்கள் மீது திரும்பியிருக்கிறது.  அந்த ஆத்திரம் தீர எதை வேண்டுமானாலும் செய்வார்கள்".

இது எப்படி உங்களுக்கு தெரியும்?

தகவல் கிடைத்தது.  அதனால் நான் ஒரு புதிய ஏற்பாடு செய்திருக்கிறேன்.  இப்போது நீலகிரி எக்ஸ்ப்ரஸில் உங்களுக்காக இடம் வாங்கியிருக்கிறேன்.  அந்த கோட்சில் ஏறி பயணம் செய்யுங்கள்.  வண்டி திருப்பூர் ஸ்டேஷனில் நிற்கும்.  சட்டென்று இறங்கிவிடுங்கள்".

"அய்யய்யோ! இதென்ன கூத்து?"

"அவசரப்பட்டு எதுவும் பேசாதீர்கள்.  இங்கு இருக்கும் எல்லோருக்கும் இரட்டைக்காது.  ஜாக்கிரதை!"

"என்ன சார் இது!  துப்பறியும் கதையில் வருவது போல் இருக்கிறது.  நான் ஒரு ஜோதிடன் சார், மந்திரவாதி இல்லை சார். ஏதோ நன்மை செய்யப்போய், இப்படி வலுக்கட்டாயமாக மாட்டி வைக்கிறீர்களே.  என்ன சார் குடும்பம் உங்க குடும்பம்!" என்று எரிந்து விழுந்தேன்.

அதே சமயம் உள்ளூர எனக்கு உதறல் தான்.  இவரை விட்டால் வேறு கதியே எனக்கு இல்லை.

"கொஞ்சம் பொறுமை.  நான் சொல்வதை நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள்.  திருப்பூரில் இறங்கியதும், இதோ இந்த டிரைவரும், அவர் நண்பரும் ரயில்வே ஸ்டேஷனில் உங்களைச் சந்திப்பார்கள்.  அவர்கள் கூடவே இறங்கி காரில் போங்கள்.  பத்திரமாக உங்களை சென்னையில் சேர்த்துவிடுவார்கள்" என்று ஒரு பயங்கரமான திட்டத்தை மில் அதிபர் என்னிடம் சொன்ன போது நான் நானாக இல்லை.

"சரியாக மாட்டிக் கொண்டிருக்கிறோம்.  தப்பித்துச் செல்வது தம்பிரான் புண்ணியம்" என்றுதான் தோன்றியது.

அப்போது எனக்கிருந்த கோபத்தில் அகஸ்தியர் ஜீவநாடியை எல்லோர் கண் முன்னாலேயும் தூக்கி எறிந்துவிட்டு திரும்பிக் கூடப் பார்க்காமல் திருட்டு ரயில் ஏறியாவது சென்னைக்கு வந்திருப்பேன்.

பெரியோர்களது வார்த்தைகளை மதிப்பு கொடுத்துக் கேட்டிருந்தால், நாடியைப் பார்த்து அலைய வேண்டிய வேலை ஏற்பட்டிருக்காது.  இல்லை, என்னைத் தன மகனாக பாவிக்கும் அகத்தியராவது இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலை ஏற்படாதவாறு காப்பாற்றி இருக்க வேண்டும்.  அப்படி எதுவும் செய்யவில்லை.

என்னதான் நடக்கும் என்பதை அகஸ்தியரிடம் கேட்கலாம் என்றால் அன்றைக்கு "அஷ்டமி".  நிச்சயம் அகஸ்தியரிடமிருந்து பதில் வராது!

இப்படித்தான் மாட்டிக் கொண்டு நான் கேவலப் பட வேண்டும் என்று இருந்தால் அதை அனுபவித்துத்தான் தீர வேண்டும்.  இதற்கு யாரைச் சொல்லி என்ன லாபம்? என மனம் நொந்து போனேன்.

எனது முகம் ரத்த ஓட்டமில்லாமல் வெளிறிக் கொண்டிருப்பதைக் கண்டு தட்டிக் கொடுத்து உற்சாகமான வார்த்தைகளைச் சொல்லி காரில் ஏற்றி அனுப்பினார் அந்த மில் அதிபர்.

வியர்த்து விறு விறுத்து "ஆமாம் சாமி" போல் தலையை ஆட்டி அவர்களிடமிருந்து விடைபெற்று சென்னைக்குச் செல்லும் அந்த நீலகிரி ரயில் பெட்டியில் ஏறி அமர்ந்தேன்.

திருப்பதிக்குச் சென்றுவிட்டு அப்படியே வீடு திரும்பியிருக்க வேண்டும்.  பொல்லாத ஓசி பயணம் - கார் - இதற்கு இடம் கொடுத்ததால் ஏற்பட்ட விளைவு இப்போது எங்கே கொண்டு விட்டிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கும் பொழுது என்னையே நான் வெறுத்தேன்.

இனிமேல் நாடி படிக்கவோ பார்க்கவோ கூடாது என்று முடிவெடுத்தேன்.  யார் எப்படிப் போனால் எனகென்ன!  நாமும் இனிமேல் சுயநலமாக இருக்க வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டேன்.  அப்படியானால் கையிலிருக்கும் இந்த நாடியை என்ன செய்வது? என்ற யோசனை பிறந்தது.

பேசாமல் ரயிலிலேயே விட்டுவிட்டு ஓசைப்படாமல் இறங்கிவிடலாம்.  அல்லது ஊருக்குப் போனதும் பாண்டிபஜாரில் இருக்கும் அகஸ்தியர் கோயிலில் சொல்லாமல் கொள்ளாமல் வைத்துவிட்டு ஓடி வந்து விடலாம் என்று முடிவெடுத்தேன்.

எல்லோரும் நாடிப்பார்த்து நன்மை அடையவேண்டும் என்று ஆசைப்பட்ட என்க்குத் தொடர்ந்து பல்வேறு மிரட்டல்கள் சோதனைகள் வருகிறதென்றால் பின் எனக்கெதற்கு அகஸ்தியர் தயவு? என்ற கசப்பான எண்ணம் மீண்டும் மீண்டும் தோன்றவே நிலை கொள்ளாமல் தவித்தேன்.

ஏதோ சினிமாவிலே வர மாதிரி இடம் விட்டு இடம் மாறி பதறி பதறி ஊர்ப் போய்ச் சேரவேண்டிய அவசியம் எனக்கு எதற்கு? என்று அடிவயிறு எரிந்தது.

யாரவர்கள்? எதற்காக என்னையும் அகஸ்தியர் நாடியையும் குறிவைத்து பின் தொடர வேண்டும்.  என்னாலோ இந்த ஓலைச் சுவடியினாலோ அவர்களுக்கு என்ன லாபம்? கேட்டால் சந்தோஷமாக அந்த நாடியைக் கொடுத்துவிட்டுப் போகிறேன்.  அதை விட்டு விட்டு இப்படியோரு, பயந்து பயந்து மாற்று ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் இல்லையே என்று பொருமிற்று என் உள்ளம்.  அப்படியே கண் அயர்ந்தும் போனேன்.

சரியாக உண்ணாமல் எதையோ நினைத்து நான் புண்பட்டுக் கொண்டிருந்தாலும் ஜன்னலோரம் அமர்ந்த நான், சட்டென்று கண் விழித்துப் பார்த்தபொழுது - திருப்பூரைத்தாண்டி ஈரோட்டை நோக்கி நீலகிரி எக்ஸ்பிரஸ், கன வேகமாகச் சென்று கொண்டிருந்தது.  பதறிப்போன நான், என்னுடன் கொண்டுவந்த பெட்டியைப் பார்த்தேன்.  நல்லவேளை பத்திரமாக இருந்தது.  அதே சமயம்........

நாடி வைத்திருந்த பையைப் பார்த்தேன்.  பை இருந்தது.  ஆனால் அகஸ்தியரின் அந்த ஜீவநாடிக் கட்டை காணவில்லை.

"அப்பாடி விட்டதடி ஆசை விளாம் பழத்தோடு" என்று பொன் மொழிக்கேற்ப எப்படியோ ஒரு பெரிய தொல்லை விட்டுவிட்டது என்று மனதைச் சமாதானப் படுத்திக் கொண்டேன்.

ஆனால் - விதி வேறு விதமாக விளையாட ஆரம்பித்து விட்டது என்று அப்போது எனக்குத் தெரியவில்லை.

சித்தன் அருள் .................. தொடரும்!