​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 23 April 2020

சித்தன் அருள் - 861 - அதிர்வலைகளும் தசவாயுக்களும்!


அடியேனின் கேள்விக்கான பதில் வாங்குவதற்காக, இங்கிருந்து அவருடன் பயணமானேன்.

சொன்னதற்கும் முன்னரே, ஆறாவது நாள், பிரசாதம் வாங்க வந்திருந்தார்.

"என்ன? இவ்வளவு சீக்கிரம்?" என்றேன்.

"இன்றைய ஒன்றிரண்டு வகுப்புகளுக்கு விடுமுறை விட்டுவிட்டேன். நேரம் கிடைத்தது. அதான் பிரசாதம் வாங்கி செல்லலாம் என்று" என இழுத்தார்.

""அதற்கென்ன தருகிறேன். அதற்குள் எப்படி தீர்ந்தது?" என்றேன் புன்னகைத்தபடி.

"நீங்கள் எனக்கு மட்டும்தான் என்று கூறி தந்தீர்கள். ஆனால் நான் அதிலிருந்து அவருக்கும் சிறிது கொடுத்தேன். அதை உபயோகித்து அவர் நன்றாக தேறி வருகிறார். முன்னர் 25வது நிலை மிகுந்த சிரமத்தை பட்டுத்தான் ஏறுவார். இப்பொழுது எடுத்த எடுப்பில் 40 வரை தொடர்கிறார்" என்றார்.

"மிகவும் பசிக்கணுமே, நேரம் காலம் இல்லாமல்" என்றேன்.

"ஆம்! இரவெல்லாம் பசிக்கிறது என்கிறர். அவர் மனைவியிடம் அவருக்கு என்ன வேண்டுமோ அதை பண்ணிக்கொடுங்கள் என்றிருக்கிறேன். ஆனால் வெளியிலிருந்து யாரும் எதுவும் கொண்டு வந்து சாப்பிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்றேன்" என்றார்.

"சரி! எப்ப கும்பம்? எப்ப முடிச்சு?" என்றேன்.

சற்றே ஆச்சரியப்பட்டவர், "அதெப்படி உங்களுக்கு இது தெரியும்?" என்றார் ஆச்சரியத்துடன்.

"இதெல்லாம் சித்த மார்கத்தில் உள்ளது தானே" என்றேன்.

"70இல் முடிச்சு போட்டு, 90இல் கும்பம் வைக்கலாம் என்றிருக்கிறேன்" என்றார்.

"நல்லது! அவருக்கு பசிக்கிறது என்பதே, உடல் சரியானதை காட்டுகிறது. சொல்வதை மட்டும் ஆத்மார்த்தமாக செய்துவிட்டு அமைதியாக இருக்கச் சொல்லுங்கள்" என்று விட்டு அவரிடம் சிறிது பிரசாதத்தை கொடுத்தேன்.

பதினைந்து நாட்களில் தானாகவே எழுந்து உட்காரத் தொடங்கினார்.

வந்து பார்த்த உறவினர்களுக்கு, சிறிது ஆச்சரியம். என்னவோ ஒரு மாற்றம் நடக்கிறது என்று புலனாகத் தொடங்கியது.

எல்லா இடங்களிலும் சில அதிகப்பிரசங்கி உறவினர் என்று ஒருவர் இருப்பார். அவரின் ஒரு உறவினர், ஒருநாள், அடியேன் நண்பர் அவரை பயிற்றுவிக்க சென்ற பொழுது, தேவை இல்லாத வார்த்தைகளை இவரை பார்த்து பேசினார்.

அடியேன் நண்பர் கோபமே படாத ஒரு மனிதர். எல்லாவற்றுக்கும் சரி என்று கூறி சென்றுவிடுவார்.

அவர் உறவினர் பேச்சில் எரிச்சலடைந்து, சற்று நேரம் அவரையே பார்த்துக்கொண்டிருந்தது, திடீரன்று தன் மூச்சை அடக்கினார். பின்னர்,
"சரி!" என்றுவிட்டு, தன் நண்பரை பார்க்க உள்ளே சென்று விட்டார்.

மறுநாள் பயிற்றுவிக்க சென்ற பொழுது, நோய் வாய்பட்டவரின் மனைவி என் நண்பரிடம் 

"நேற்று வந்த உறவினரிடம் என்ன பேசினீர்கள், என்ன செய்தீர்கள்?" என்றார்.

"ஏன்? என்ன ஆச்சு?" என்றார்.

"நேற்று நீங்க சரின்னு ஒரு வார்த்தை பேசினீர்கள். வீட்டிற்கு சென்றதுமுதல் இன்று மதியம் வரை பயங்கர தலைவலி இருந்தது. என்ன மருந்து சாப்பிட்டும் போகவில்லை. இங்கு பயிற்சி கொடுக்க வரும் அவர் எதோ மந்திரவாதம் செய்கிறார் என தோன்றுகிறது, என்று கூறிவிட்டு இப்பொழுதுதான் நீங்கள் வரும் முன் தான் சென்றார்" என்றாள்.

"எனக்கு தெரிந்ததெல்லாம் யோகா வித்தை மட்டும்தான். மந்திரவாதம் எதுவும் தெரியாது. இனிமே என் பயிற்சிக்கு அவர் இடையூறாக இருக்கமாட்டார் என்று தோன்றுகிறது. அதுவும் நல்லதுதான்" என்று கூறி உள்ளே சென்றார்.

எலும்பும் தோலுமாக இருந்த அவர் உடல் சற்று பூசினாற்போல மாற தொடங்கியிருந்தது.

50, 55வது நிலை வரை எளிதாக வந்துவிட்டார்.

"இன்று வரை ஒரு நேரம் தான் மூச்சு பயிற்சி செய்தீர்கள். இன்று முதல், ஒரு நாளைக்கு, குறைந்தது மூன்று முறை பயிற்சி செய்ய வேண்டும். இரவு நான் வரும்பொழுது, ஏதேனும் தேவை இருந்தல் சரி பண்ணித் தருகிறேன். இன்று சற்று நேரம் கூடுதல் எடுத்து 70வது நிலை வரை முயற்சி செய்யலாம்" என்றார்.

இந்த நிலை அடைய சற்று சிரமமாக இருந்தது. அவரால் முடியவில்லை.

""கொஞ்சம் கவனமாக பாருங்கள். மாடி ஏறும் பொழுது சிரமமாக இருந்தால் வளைந்து வளைந்து ஏறி, அசதி வராமல் பார்த்துக் கொள்வது போல், மூச்சின் வேகத்தை குறைத்து, நிதானமாக கவனத்தை இருத்தி எப்படி ஏறவேண்டும் என தெளிவாக செய்யுங்கள்" எனக்கூறி, உள்வாங்கும், வெளிவிடும் மூச்சின் வேகத்தை குறைத்து, மெதுவாக 70வது நிலைக்கு அழைத்து வந்தார்.

அன்றைய தினம், 70வது நிலையில் நின்றாலும், முடிச்சு போட்டால் அவரால் தாங்க முடியாது என்பதை உணர்ந்து, 70தை 80க்கு மாற்றினார்.

"நாளை முதல் வீட்டுக்குள்ளேயே சிறிது நேரம், தேவைப்பட்டால் உங்கள் மனைவியின் உதவியோடு நடக்க வேண்டும். உடலால் பலம் பெற வேண்டியுள்ளது." என்று கூறிவிட்டு அன்றைய பயிற்சி வகுப்பை முடித்துக்கொண்டார்.

மறுநாள் பயிற்சிக்கு சென்ற பொழுது இவர் எதிர் பார்த்த செய்தி கிடைத்தது.

கடந்த ஆறு மாதமாக படுக்கையிலேயே படுத்து கிடந்தவர், யார் உதவியும் இன்றி, படுக்கையில் இருந்து எழுந்து, வீட்டின் அனைத்து பாகங்களுக்கும் நடந்தே சென்று, வீட்டில் இருந்த அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

சித்தன் அருள்.................. தொடரும்!  

Thursday 16 April 2020

சித்தன் அருள் - 860 - அதிர்வலைகளும் தசவாயுக்களும்!


நண்பரின் விளக்கத்தை கேட்டு அமைதியாக இருந்தேன்.

"ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்கள். பிறரின் ஆதார சக்கரங்களை தொட்டு/தொடாமல் பயிற்சி கொடுக்கும் பொழுது உங்களுக்குள் பிராண அவஸ்தை உருவாகிறதே, அதை கவனித்தீர்களா?" என்றேன்.

"ஆம்! அதை பற்றித்தான் கேட்க வேண்டும் என நினைத்தேன். சில நாட்களில் பயிற்சி முடித்துவிட்டு திரும்பும் பொழுது, என் உடல் மொத்தமாக அசந்து போய்விடுகிறது. எப்படியோ சமாளித்து, வண்டி ஒட்டிக்கொண்டு, வீடு வந்து சேர்ந்துவிடுகிறேன். கண் பார்வையும் மறைக்கிறது. அவ்வாறு ஏன் நடக்கிறது, இதிலிருந்து விடுபட என்ன செய்வதென்று தெரியவில்லை" என்றார்.

"குருநாதரிடம் கேட்டீர்களா?" என்றேன்.

"தனிப்பட்ட மனிதர்களுக்கு குருவின் உத்தரவிருந்தால்தான் பயிற்சி கொடுக்கிறேன். ஒரு குழுவாக ஒரு கல்விக்கூடத்தில் பயிற்சி எடுக்கும் பொழுது, முன் அனுமதி பெற முடியவில்லை. ஏன் என்றால், அது ஒரு நிறுவனம். அங்கு கூடிய ஒருசிலரை மட்டும் ஏற்றுக்கொண்டு, மற்றவர்களை முடியாது என்று திருப்பிவிட என்னால் முடியாது. அதனால் தான்" என்றார்.

"உண்மைதான். சரி, இரண்டு நிலைகளிலும் பயிற்சி கொடுக்கும் பொழுது, உன்னை சுற்றி வளையம் கவசமாக போட்டுக்கொள்கிறயோ?" என்றேன்.

"மானசீகமாக மந்திரம் ஜெபித்து, என்னை சுற்றி வளையம் போட்டுக்கொள்கிறேன். இருந்தும் பல நேரங்களில் அடிவாங்கத்தான் வேண்டியுள்ளது. அவர்கள் கர்மா அத்தனை பலம் வாய்ந்ததாக உள்ளது. என்னை சுற்றிய வளையம் பலமிழந்து விடுகிறது" என்றார்.

"இந்த உலகத்தில் உள்ள மனிதர்களுக்கு ஆறறிவை இறைவன் கொடுத்தார். இதிலிருந்து மேலேறி என்னிடம் வந்துவிடு என்று. அவன் சேர்த்துக் கொண்டது அனைத்தும் கெட்ட கர்மா. பிற உயிர்களுக்கு ஐந்து வரையிலான அறிவை கொடுத்தான். அவை, தன் கர்மாவை மனிதனுக்கு கொடுத்து, அவனை கீழே இறக்கி வைத்துவிட்டு, தான் மோக்ஷத்தை வாங்கிக் கொண்டு சென்று விடுகிறது. இப்பொழுது புரிந்ததா, மனிதர்களின் கர்மாவை தொட்டால் ஏன் வலிக்கிறதென்று?" என்றேன்.

"மருத்துவம் மருத்துவருக்கு வாழ்வாதாரம் போல், யோகா பயிற்சி சொல்லிக் கொடுப்பது எனக்கு வாழ்வாதாரம். இதை தவிர்க்க முடியாது. ஏதேனும் ஒரு வழி இருந்தால் கூறுங்களேன்" என்றார்.

"பிறருக்கு உதவிட நினைத்து இறங்கும் பொழுது, எப்படியெல்லாம் ஒருவன் பாதுகாப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என அடியேனின் குருநாதர், பல வழிகளை சொல்லித் தந்துள்ளார். அதில் ஒரு வழியை நீ முயற்சித்துப்பார். உனக்கு, நல்ல கவசம் அமைகிறதா என பார்க்கலாம்"  என கூறி பூஜை அறையை நோக்கி சென்றேன்.

எதிர்பார்த்துப் போனது, தேடிய உடனேயே கிடைத்தது. அதிலிருந்து பிரசாதம் சிறிதளவு எடுத்து, ஒரு சின்ன சிமிழில் வைத்து அவரிடம் கொடுத்தேன்.

"இது, மிக சக்தி வாய்ந்த தெய்வத்துக்கு, குறிப்பிட்ட நாளில், கோவிலில் பூசி பிரசாதமாக கிடைத்தது. தினமும் யோகா பயிற்சிக்கு வீட்டிலிருந்து போகும் முன்னோ, வகுப்பு தொடங்கும் முன்னோ, உன் சித்தம், இரு புருவம், தலை உச்சியில் சிறிது பூசியபின், உனக்கு உபதேசிக்கப்பட்ட கவச மந்திரத்தினால் வளையம் போட்டுக்கொள். பார்க்கலாம் அந்த கவசத்தை, பிறர் கர்மாக்கள் உடைக்கிறதா என. ஆனால் நிறைய பேர் இது என்ன, இப்படி ஒரு மணம் என்றெல்லாம் கேட்பார்கள். சாதாரண வாசனை திரவியம் என்று மட்டும் கூறு. அல்லது சிரித்து பதில் சொல்லாமல் விட்டுவிடு. ஏன் என்றால், மந்திரத்துக்கும், மணத்திற்கும், எதிர்வினை உண்டு. கவனம்!" என்றேன்.

மேலும், சிறிது நேரம் பல விஷயங்களையும் பேசிவிட்டு, அவர் கிளம்பினார்.

"அவருடைய வகுப்புதான் இன்று கடைசி. அவர் வீட்டுக்கு போய் சொல்லிக் கொடுத்துவிட்டு, என் வீட்டிற்கு போகவேண்டும்" என்றார்.

"சரி! கிளம்புங்கள்! அதற்கு முன் ஒருவிஷயம். இந்த நபருக்கு, கொடுக்கப்படும் பயிற்சி, அதன் விளைவுகள் போன்றவற்றை பற்றி எனக்கு தெரிவி. அதில் என் கேள்விக்கான பதில் கிடைக்கும் என்று குருநாதர் கூறுகிறார். அப்ப இனி என்று சந்திக்கலாம்? 15 நாட்களாகுமா?" என்றேன்.

"தெரியவில்லை, நேரம் கிடைக்கும் பொழுது வருகிறேன்" என்று கூறி சென்றார்.

அடுத்தநாளே, அவரிடமிருந்து போன் வந்தது.

"என்னப்பா! என்ன விஷயம்?" என்றேன்.

"நீங்கள் தந்த இறைவன் பிரசாதம், நல்ல வீரியமானது. அது எந்தெந்த வாசனாதி திரவியங்கள் சேர்த்து உருவாக்கப்பட்டது?" என்றார்.

"பிரசாதம் தந்தார்கள். அதுவே பெரிய பாக்கியம் என்று நினைத்து வாங்கி வந்தேன். நான் எப்பொழுதும் இறைவனின் விபூதி, குங்குமம், வாசனாதி திரவியங்கள் பூசிக் கொள்வதால், இதெல்லாம் எப்படி உருவாக்கப்பட்டது என்று விசாரிப்பதில்லை. அது சரி என்ன விஷயம்?" என்றேன்.

'அந்த பிரசாதம் நல்ல பாதுகாப்பை தருகிறது. எந்த அசதியும் வருவதில்லை. வட்டம் போட்டால் அப்படியே இருக்கிறது. அதனால்தான் கேட்டேன். நீங்கள் தந்தது 10 நாட்கள்தான் இருக்கும். அது தீரும்முன் ஒரு நாள் வந்து மேலும் வாங்கிக் கொள்கிறேன்" என்றார்.

"ஆகட்டும்! பாடத்தில் கவனமிருக்கட்டும்! யாருக்கும் தெரிய வேண்டாம்" என்று முடித்துக் கொண்டேன்.

குருநாதரிடம், தெளிவு பெறுவதற்காக, பல கேள்விகளை கேட்டிருந்தாலும், அதில் ஒரே ஒரு கேள்வியை நீங்கள் தெரிந்து கொள்ள சமர்ப்பிக்கிறேன்.

"சித்தர்கள் ஆட்சி தொடங்கிவிட்டது. இனி அதிவேகத்தில் மனிதர்கள் "சீர்"படுத்தப் படுவார்கள், என கேள்விப்படுகிறோம். ஆன்மீக தேடுதல் வழி ஒருவன் தன்னை உயர்த்திக்கொள்ள நினைத்து, மந்திரம், ஜபம், பூசை, த்யானம், யோகா போன்றவைகளை சார்ந்து நின்று தன் உள்ளே செல்லும் பொழுது, அவனை/அவளை அதிர்வுகள் தானே உணரவைக்கிறது. இந்த அதிர்வுகளை கைபிடித்து நடந்தால் ஒரு மனிதனையே மாற்றிவிடமுடியுமா? மனிதனை வாட்டும் நோய் நொடியையும் அதிர்வுகளால் சரி பண்ணிவிட முடியுமா? ஏதேனும் ஒரு அனுபவம் வழி புரியவைக்க கூடாதா?" என்றேன்.

மிகப் பெரிய அனுபவம் வழி மிகத்தெளிவான பதிலை தந்தார், குருநாதர்.

சித்தன் அருள்................... தொடரும்!

Wednesday 15 April 2020

சித்தன் அருள் - 859 - திருவோணம் நட்சத்திரம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப்பெருமானின் உத்தரவு, சித்தன் அருள் தொகுப்பு - 840 இல் கீழவருமாறு உரைக்கப் பட்டிருந்தது.

"ஆறறிவு பெற்ற மனிதனை தவிர பிற உயிர்கள்/ஆத்மாக்கள் (அனைத்து பிராணிகளும்) உடலை நீத்து சென்றாலும்  அவைகளை மோக்ஷத்திற்கு கரை ஏற்றிவிட இங்கு மனிதர்களின் பிரார்த்தனை தேவைப்படுகிறது. ஆதலின், கீழ்கண்ட பிரார்த்தனையை அகத்தியர் அடியவர்கள் அனைவரும் குறிப்பிட்ட தினத்தில் சூரிய உதயத்துக்கு பின், சூரிய அஸ்தமனத்துக்குள் செய்யச்சொல்கிறார்.

எல்லா மாதமும் "திருவோணம்" நட்சத்திரத்தன்று, ஒரு செம்பு பாத்திரத்தில் நீர்விட்டு, அதில், சிறிது துளசி, சிறிது மஞ்சள்பொடி, சிறிது பச்சைக்கற்பூரம் சேர்த்து, வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து, வலதுகையை அந்த நீரில் மேலாக வைத்து "ஓம் ஸ்ரீ மாய மாலனே நமஹ" என 108 முறை ஜெபித்து, பின்னர் அந்த நீரை பூமியில்/மண் தரையில் விட்டுவிடவேண்டும். இதை செய்யும் முன், பெருமாளிடம், "அகத்தியர் உத்தரவின் பேரில் இதை செய்கிறோம். இதை ஏற்றுக்கொண்டு அனைத்து ஜீவ ராசிகளுக்கும், மோக்ஷத்தை அருளிட வேண்டும்" என வேண்டிக் கொள்ளவேண்டும். நாம் பூமியில் விடும் தீர்த்தத்தை/பிரார்த்தனையை ஏற்று சென்று, இறைவனிடம் அவ்வுயிர்களுக்கு மோக்ஷத்தை வழங்க அகத்தியப்பெருமான் செய்வார் என உரைத்துள்ளார். பிரார்த்திப்பவர் வாழ்வும் சிறப்பாக மேம்படும் என்ற அருள் வாக்கும் வந்துள்ளது."

அடியேன் இந்த உத்தரவை எல்லா மாதமும் நிறைவேற்றி வருகிறேன். அதன் பெருமையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

இந்த மாதம் "திருவோணம்" நட்சத்திரம், நாளை, வியாழக்கிழமை, 16/04/2020 அன்று வருகிறது, என்று சித்தன் அருள் வலைப்பூவை வாசித்துவரும் அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும் வாய்ப்பை வழங்குவதற்காக இன்று தெரிவிக்கிறேன்.

அகத்தியரின் உத்தரவை நிறைவேற்றி, அவர் அருள் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

சித்தன் அருள்.................. தொடரும்! 

Tuesday 14 April 2020

சித்தன் அருள் - 858 - தமிழ் புத்தாண்டு பிறவி, குருநாதருடன்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்று பிறந்த தமிழ் புத்தாண்டு, "சார்வரி" வருடம், உங்கள் அனைவருக்கும், நிறைந்த வாழ்க்கையை, ஆரோக்கியத்தை, இறை அருளை, குருநாதர்/சித்தர் அருகாமையை/வழிநடத்தலை பெற்றுத்தரட்டும் என்று "அகத்தியப் பெருமானின் சித்தன் அருள்" வலைத்தளம் வழியாக வாழ்த்துக்களை சமர்ப்பிக்கிறேன்.

இன்றைய தினம், இப்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறான அகத்தியரின் அருள் வாக்கை நினைவு கூர்ந்து, அதன் படியே வாழ்க்கையை அமைத்துக்கொள்ள ஒவ்வொருவரையும் தூண்டிவிட்டு வழிநடத்தி செல்ல, அகத்தியப் பெருமானை வேண்டிக்கொள்கிறேன்.

  
சித்தன் அருள்................... தொடரும்!

Thursday 9 April 2020

சித்தன் அருள் - 857 - அதிர்வலைகளும் தசவாயுக்களும்!


அன்றைய தினம், மதியம் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, யோகா வகுப்பு சொல்லித்தர வேண்டியது இல்லாததால், சற்று நேரம் தனிமையில் அமர்ந்து த்யானம் செய்யலாம் எனத் தோன்றியது.

தியானத்தில் அமர்ந்த ஐந்தாவது நிமிடமே, குருவின் ரூபம் உள்ளே எழும்ப, அவர் கைதூக்கி ஆசிர்வதிப்பது போலவும், இன்னொரு கையில் நான் காலை கொடுத்த விண்ணப்பம் இருப்பதையும் கண்டேன். இறை அனுமதியுண்டு, நலம்பெறுவான் என்ற ஆசிர்வாதமும் பதிலாக வந்தது.

உடனேயே நண்பரை அழைத்து, மாலை வாருங்கள், அவரை பார்க்க செல்லலாம், என்றேன்.

அவர் என்னை அழைத்து செல்ல வந்ததும், இரவு மணி 8 ஆகிவிட்டது.

என்னை அழைத்து சென்று, அவர் வீட்டின் முன் அறையில் இருத்திவிட்டு உள்ளே சென்றவர், ஐந்து நிமிடத்தில் என்னை உள்ளே அழைத்து சென்றார்.

என்னை அவரிடம் அறிமுகப்படுத்தினார். அவரின் உடல் மெலிந்து போய், எலும்பு உடலெங்கும் துருத்திக்கொண்டு நிற்பதுபோல், சதைப்பற்று இல்லாமலேயே இருந்தது.

அவர் முன் பலவித பாத்திரத்தில், வித விதமான உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்தது. இதிலிருந்தும் அவர் ஒரு துளி கூட சாப்பிட்டதிற்கான தடயமே இல்லை.

அருகில் சென்று நின்று, அவரது வலது கையை கேட்டு வாங்கி, நாடி பார்த்தேன். சரியான துடிப்புக்கு, சற்று கீழே இறங்கியிருந்தது. மூச்சு விட சற்று சிரமம் இருந்தது. ஆதார சக்கரங்கள் எப்படி இருக்கிறதென்று நாடி பிடித்து பார்க்கலாம். ஒவ்வொரு விரலும் ஒவ்வொரு பஞ்ச பூதத்திற்கு உரியது. அவர் உடலில், ப்ரித்வி அடிவாங்கியதால், உடலின் பிற பகுதிகளில் வாயுவின் சஞ்சாரம் நிறையவே  பாதிக்கப்பட்டிருந்தது.

"இறை அருளால் நாம் முயற்சி செய்யலாம். உங்கள் மனதில் என்ன நடந்தாலும், நான் உயிர் வாழ்ந்தே தீருவேன் என்கிற திட வைராக்கியம் வேண்டும். யோகாவில், பிராணாயாமம் தான் முதல் பகுதியாக உங்களுக்கு சொல்லித்தருகிறேன். பிராணாயாமம் வழி உடலை திடகாத்திரமாக்கி, உடலை கொண்டு வியாதியை தொலைக்க வேண்டும். உடலுக்கு உரம் ஏறினால், அதுவே நோயை விரட்டிவிடும். அந்த நிலையை அடைய வேண்டும். அப்படியென்றால், உங்கள் வாழ்க்கை திரும்பி உங்கள் கையில் அமரும். தினமும் ஒருவேளை எப்பொழுது எனக்கு நேரம் கிடைக்கிறதோ அப்பொழுது வந்து உங்களுக்கு பயிற்சி எடுக்கிறேன். மற்ற நேரங்களில் குறைந்தது  ஒரு நாளைக்கு மூன்று நேரமாவது நீங்கள் சுயமாக பிராணாயாமம் செய்ய வேண்டும்." என்றேன்.

அவர் ஆச்சரியமாக என்னை பார்த்து "சரி" என்றார்.

நண்பரை வெளியே அமரச்சொன்னேன்.

அவர் உடலில் ஆதார சக்கரங்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்க, குருவை பிரார்த்தித்து , அவர் நெஞ்சு குழியில் கைவைக்க, அவர் அதிர்ந்து அமர்ந்தார். ஆதார சக்கரங்களில் உயிரூட்ட வேண்டி வரும். அதுவும் அவர் உடல் இருந்த நிலைக்கு அன்றே பயிற்சி தொடங்குவது நல்லது என்று தோன்றியது.

குருவை, இறைவனை பிரார்த்தனை செய்து, அவரின் சித்தத்தில் விரல்வைத்து அதிர்வை உள்கொடுத்து, அவருக்கான பிராணாயாம வகுப்பை தொடங்கினேன். 12 அடி இழுத்த பொழுது அவர் அசந்து போனார். இதற்கு மேல் முடியாது என்று அமர்ந்துவிட்டார்.

உள்ளுக்குள் நோய் அவரை எவ்வளவு தூரம் பாதித்துள்ளது, எந்த அதிர்வு நுரையீரலை அதன் சுவர்களை மறுபடியும் உயிர்த்தெழ வைக்கும் என்பதெல்லாம் புரிந்தது. இது ஒரு கடினமான ப்ராஜெக்ட் ஆகத்தான் இருக்கும், இவருக்கு பயிற்சி கொடுக்க வேண்டுமென்றால், என் ஆதார சக்கரங்கள் பூட்டப்படாமல் திறந்திருக்க வேண்டும். பயிற்சியின் முடிவில் என் உடல் தன் சக்தியை இழந்து , நான் தினமும் அசந்து போய்விடுவேன் என்பதும் தெளிவாகியது. ஆதலால், அவருக்கான பயிற்சியை, தினமும், கடைசி வகுப்பாக வைக்க தீர்மானித்தேன்.

அன்றைய வகுப்பு ஒரு மணிநேரம் நீண்டு சென்றது. 

"இன்று போதும், காலை எழுந்ததும், ஒரு முறை, மதியம், மாலை ஒரு முறை என முதல் நாள் செய்கிற எண்ணிக்கையில் பிராணாயாமம் செய்ய வேண்டும். என்ன விருப்பமோ அதை சாப்பிடலாம். ஆனால் இப்போது உங்கள் முன் இருக்கும் எந்த உணவும் உங்களுக்கு ஜீரணமாகாது. இவற்றையெல்லாம் தூக்கி போட்டுவிடுங்கள். நான் நாளை வருகிறேன்" எனக்கூறி விடைபெற்றேன்.

அழைத்து சென்ற நண்பரிடம் "உறவுகள் யாரும் அவருக்கு சாப்பாடு கொண்டு வருகிறேன் என்று வந்து, வாய் தவறி அவரிடம் பேசவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். யாரும் வரவேண்டாம். நான் எப்பொழுது வருவேன் எனத்தெரியாது. அப்படி நான் வருகிற பொழுது, அவர் உறவினர் யாரையும் நான் பார்க்கக் கூடாது. அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டியது, உங்கள் பொறுப்பு. எல்லாம் நல்லபடியா நடந்தால், இறைவன் அருளால், நீங்கள் கேட்டபடி அவர் பெண்ணுக்கு தகப்பனை திருப்பி கொடுத்துவிடலாம்" என்றேன்.

அன்று தொடங்கிய பயிற்சி, நேற்று வரை 45 நாட்களாயிற்று. குருவின், இறைவனின் அருளால் நல்ல முன்னேற்றம் உள்ளது. உறவினர்கள் விலகி நின்றுவிட்டார்கள். அவர் உடலும் ஒத்துழைக்கிறது. சற்று பசி எடுக்க தொடங்கியிருக்கிறது. ஓரளவுக்கு சாப்பிடுகிறார்.

"அப்படியென்றால், இன்னும் எத்தனை நாளில், உச்சநிலையை பிடிப்பதாய் நினைத்திருக்கிறீர்கள்?" என்றேன்.

"90 நாட்களில் உச்சி ஏறவேண்டும். இன்னும் 45 நாட்கள் இருக்கிறது. அதன் பிறகுதான் அவருக்கு பிராணாயாமம் வழி சர்ப்ப நிலை உருவாக்கி தசவாயு பந்தனம் பண்ண வேண்டும்" என்றார்.

இது உடலுக்குள்ளேயே  பிராணனை அடக்க செய்யும் முறை. தசவாயுக்களையும் பிராணாயாமத்தினால் நெருடி அதில் பிராணனில் மற்ற 9 வாயுக்களையும் கோர்த்து, ஒன்றுக்கொன்று விட்டுவிடாமல் இருக்கச் செய்யும் முறை. இதை, பிராணாயாமத்தில், ஆதார சக்கரங்களை தொட்டு பயிற்சி செய்பவர்களாலேயே மட்டும் செய்ய முடியும். அதற்கு, இறை அருளும் தேவை.

அடியேன் நண்பரிடம், குருவருளும், இறையருளும் இருக்கிறது.

அந்த நோய்வந்தவருக்கு, விதி விலகி, வழி விட தயாராகவும் இருந்தது.

சித்தன் அருள்................. தொடரும்!

Tuesday 7 April 2020

சித்தன் அருள் - 856 - அகத்தியப்பெருமானின் அருள் வாக்கு!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அடியேனுடைய நண்பர், அகத்தியர் அடியவர் ஒருவர், அனுப்பித் தந்த "அகத்தியர் வாக்கை" உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். "கலியின்" பிடியில் மாட்டி உழல்வதை தவிர்த்து, இங்கு கூறப்பட்டுள்ள நல் உரையை மனதுள் ஏற்றி நலமாய் வாழ வேண்டிக்கொள்கிறேன்.

கலி முற்றி விட்டது என்பதற்கு என்ன அடையாளம்‌?

கலி என்றால்‌ துன்பம்‌ என்று ஒரு பொருள்‌. அலுப்பிலும்‌, சலிப்பிலும்‌, விரக்தியிலும்‌ ஒரு மனிதன்‌ கூறுவது “கலி முற்றி விட்டது” என்று.

கலி காலம்‌ என்பது தனியான ஒரு காலம்‌ அல்ல. த்வாபர யுகத்திலும்‌, திரேதா யுகத்திலும்‌ கலி இருந்தது. எல்லா காலத்திலும்‌ உண்டு. பஞ்சபாண்டவர்கள்‌ எந்த காலம்‌? அங்கே பலர்‌ அறிய ஒரு பெண்ணை துகில்‌ 'உரியவில்லையா?எனவே.எல்லா காலத்திலும்‌, மனிதனிடம்‌ உள்ள தீய குணங்கள்‌ வெளிப்பட்டு கொண்டுதானிருக்கும்‌. அதற்கு ஆதரவாகத்தான்‌ அசுர சக்திகள்‌ எப்போதும்‌ செயல்பட்டுக்‌ கொண்டேதான்‌ இருக்கும்‌. அதனால்தான்‌ தவறான வழியில்‌ செல்பவர்களுக்கு, செல்வம்‌ அதிகமாக சேர்வதற்கு அந்த தீய தேவதைகள்‌ உதவி செய்கின்றன. நாங்கள்‌ அவ்வாறு செய்வதில்லை. அதனால்தான்‌ நல்வழியில்‌ செல்பவர்கள்‌ குறைவாக இருக்கிறார்கள்‌. உடனடி லாபம்‌, ஆதாயம்‌ பெற, தீய வழியில்‌ செல்லக்‌ கூடாது என்று நாங்கள்‌ பலமுறை கூறுகிறோம்‌. எனவே, 

இந்த நல்ல எண்ணங்களும்‌, நல்ல செய்கைகளும்‌, எத்தனை துன்பங்கள்‌.
இருந்தாலும்‌, நன்மைகளை விட்டு விடாமல்‌ நல்லவனாக வாழ வேண்டும்‌ என்ற உறுதி ஒரு மனிதனிடம்‌ இருக்க, இருக்கத்தான்‌, அந்த தீய சக்தியின்‌ அட்டூழியங்கள்‌ குறையும்‌. இல்லை என்றால்‌ “கலி முற்றி விட்டது.கலி காலத்தில்‌ இப்படித்தான்‌ வாழ வேண்டும்‌” என்று இவனாகவே வேதாந்தம்‌ பேசி தவறு மேல்‌ தவறு செய்து கொண்டே போனால்‌ , முதலில்‌.
அது இன்பத்தை காட்டி. முடிவில்‌ முடிவில்லா துன்பத்தில்‌ ஆழ்த்தி விடும்‌. எனவே கலி முற்றி விட்டது என்பது எப்போதுமே பேசப்படக்கூடிய ஒரு வழக்கு சொல்தான்‌.

சத்யம்‌  பேசுவது எளிது என்றால்‌, இந்த உலகிலே அத்தனை மனிதர்களும்‌ சத்தியம்‌ பேசுவார்களே. ஒரு விஷயம்‌ எப்பொழுது சிறப்பு பெறுகிறது?

தங்கத்திற்கு ஏன்‌ அத்தனை மதிப்பு? குறைவாக கிடைப்பதால்தானே?அப்படி, எல்லோராலும்‌ எளிதில்‌ பின்பற்ற முடியாத ஒரு கொள்கை, ஒரு குணம்‌. அதுதான்‌ உயர்ந்ததாக இருக்கிறது. எனவே அந்த சத்யத்தை கடினபட்டுத்தான்‌ நாம்‌ பின்பற்றவேண்டும்‌. எனவே சத்யமும்‌ பேச வேண்டும்‌. இடர்பாடும்‌ இருக்க கூடாது என்றால்‌. அதற்கு வாய்ப்பு இல்லை. இருந்த போதிலும்‌ கூட, நன்மையை கருதி கூறப்படும்‌ சத்யத்திற்கு மாறான விஷயங்கள்‌, பாவமாக கருதப்பட மாட்டாது. அது சுயநல நன்மையாக இருக்க கூடாது. "பொதுநல" நன்மையாக இருக்க வேண்டும்‌.

இதை சேய்கள் உணர்ந்து, அப்படியே உலகில் வாழ்ந்து வர ஆசிகள்.

சித்தன் அருள்................ தொடரும்!

Thursday 2 April 2020

சித்தன் அருள் - 855 - அதிர்வலைகளும் தசவாயுக்களும்!


அதை கேட்டதும், சிறிதாக புன்னகைத்து நிமிர்ந்து  உட்கார்ந்தேன்.

நண்பர் இதை எதிர் பார்க்கவில்லை.

"என்ன! ஏதேனும் பிரச்சினையா? நான் சென்று பின்னர் வரவா?" என்றார்.

"இல்லை! சற்று பொறுங்கள்!" என்றுவிட்டு கண்மூடி அகத்தியப்பெருமானை தியானித்து நன்றி கூறினேன்.

"முன்னர் அகத்தியப் பெருமானிடம் சில கேள்விகள் கேட்டிருந்தேன். ஒரு வழியை காட்டி அந்த பாதையில் செல்க! என சொல்கிறார்" என்றேன்.

"சரி! நீங்கள் தொடருங்கள்" என்றேன்.

"அவருக்கு வயது 42. சில மாதங்களுக்கு முன் வரை வெளி நாட்டில் நல்ல வேலையில் இருந்தார். நல்ல சம்பாத்தியம் அவருக்கு. கூடவே சிறு குடும்பமும். மனைவி, 12 வயதான மகள். உடலில் அடிக்கடி அசதியும், சுரமும் வரத்தொடங்கிய பொழுது, அங்கிருக்கும் மருத்துவமனையில் காட்டி சிகிர்சை பெற்றார். முதலில் நல்ல பலன் அளித்த சிகிர்சை, பின்னர் பலனளிக்காமல் போகவே, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது நுரையீரல் முழுவதும் கண்டமாலையால் பாதிக்கப்பட்டுவிட்டது என கண்டறிந்தனர். அதை அவருக்கு தெரிவித்ததும், மொத்தமாக உடைந்து போனார். உடனேயே ஒரு தீர்மானம் செய்து, மனைவி, மக்களை அழைத்துக் கொண்டு, வேலையை உதறிவிட்டு, இங்கு வந்து விட்டார். இங்கே, அரசாங்க மருத்துவமனையில் அதற்கான சிகிர்சையை மேற்கொண்டார்.

நாள் செல்லச்செல்ல, அவர் உடல் இளைத்துக்கொண்டே வந்தது. நோயும், கூடியதே அன்றி, குறையவில்லை. ஒருநாள், அவருக்கு சிகிர்சை அளித்த மருத்துவர்கள், குடும்பத்தினரை அழைத்து, இனிமேலும் சிகிர்சை கொடுப்பதில் அர்த்தமில்லை. இனிமேல், அவர் ஒரு மாதம்தான் வாழ்வார். வீட்டிலேயே வைத்து, அவருக்கு என்னென்ன பிடிக்குமோ, அந்த உணவு வகைகளை செய்து கொடுத்து, அவரை கவனித்துக் கொள்ளுங்கள். மருத்துவமனைக்கு வரவேண்டம், எனக்கூறி அனுப்பிவிட்டனர்.

ஒரு இட்லியை நான்கு துண்டுகளாய் மாற்றி, அதில் ஒரு துண்டு இட்லியை 30 நிமிடம் சுவைத்துத்தான் அவரால் உண்ணமுடியும் என்கிற நிலைக்கு மாறிவிட்டார்.  அவருக்கு நிறைய உறவினர்கள். விஷயத்தை கேள்விப்பட்ட அனைவரும், ஒவ்வொரு நாள், ஒவ்வொரு நேரம், ஏதேனும் உணவை அவர் சாப்பிட கொண்டு வந்து கொடுத்தனர். இவராலோ, எதுவும் சாப்பிட முடியாத நிலை." என்று நிறுத்தினார்.

"சரி! எது உங்களை இந்த சூழ்நிலைக்குள் இழுத்து கொண்டு வந்து மாட்டிவிட்டது?" என்றேன்.

"அவருக்கும், எனக்கும் பொதுவான ஒரு நண்பர் சில நாட்களாக என்னை தேடிக் கொண்டிருந்தார். நானோ நேரமின்றி அலைவதால் அவரை சந்திக்க முடியவில்லை. ஒருநாள் விடியற்காலையில், வீட்டில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு திறந்து பார்த்தால், இவர் நின்று கொண்டிருந்தார்."

"ஆச்சரியப்பட்டு, என்ன இந்த நேரத்தில்? என்று வினவ, முன்னர் சொன்ன அவர் நண்பரின் விஷயம் அனைத்தையும் கூறினார்."

"சரி! இதில் நான் என்ன செய்ய வேண்டும்? எதற்காக நான்! என்றேன்."

"நீ யோகா சொல்லிக்குடுக்கிறே! என் வேறொரு நண்பர் உன்னை கைகாட்டி விசாரிக்க சொன்னார். இறை அருள் இருந்தால், யோகசூத்திரத்தில் ஒருவரின் எந்த வியாதியையும் விரட்டுகிற சிகிர்சை வழி உண்டு. அவன் யோகா வகுப்பெடுப்பதால், விசாரித்துப் பாருங்கள் என்றார். அதனால்தான் வந்தேன்." என்றார்.

"அவன் மகளுக்கு 12 வயதுதான் ஆகிறது. அந்த குழந்தைக்கு, தகப்பனை, திருப்பி வாங்கி கொடுக்க முடியுமா?" என்று மிக எதிர்பார்ப்புடன் வினவினார்.

"ஹ்ம்ம்! இப்பொழுது புரிகிறது, நீ ஏன் இதில் இறங்கினே என்று! சரி சொல்லு" என்றேன், அடியேன்.

"சற்று அவகாசம் கொடுங்கள். யோசித்து சொல்கிறேன். நேரமின்மை என்பது என்னை விரட்டுகிறது. எல்லாவற்றுக்கும் மேல், இறை அருள்/அனுமதி வேண்டும், குருநாதர் அனுமதித்து அருள வேண்டும். இவை கிடைத்துவிட்டால் மட்டும் போதாது, அவரிடம் நேர்மை வேண்டும், "நான் உயிர் வாழ வேண்டும்" என்கிற நேர்மையான எண்ணம் எப்போதும் வேண்டும். இவை எல்லாம் ஒன்று சேர்ந்து, உறவுகள் அனைத்தும் அவரிடமிருந்து விலகி நிற்க தயார் என்றால், பார்க்கலாம். எனக்கும் மகள் இருக்கிறாள். புரிந்து கொள்ளுங்கள்" என்றேன்.

"சரி யோசித்து சொல்லுங்கள்! அவர் பக்கத்திலிருந்து என்னென்ன அவர் செய்யவேண்டுமோ, அத்தனைக்கும் நான் உறுதி அளிக்கிறேன். எப்பொழுது கூப்பிட்டு வரச் சொல்கிறீர்களோ அப்பொழுது நான் வந்து உங்களை அவர் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன்" என்று கூறி சென்றார்.

"என் விண்ணப்பத்தை இறைவனிடமும், குருநாதரிடமும் சமர்ப்பித்து பதிலுக்காக காத்திருந்தேன். பிறகு அன்றைய தின வேலைகளில் மூழ்கி, இதை மறந்து போனேன்" என்றார்.

சித்தன் அருள்........................ தொடரும்!