​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 30 May 2019

சித்தன் அருள் - 811 - அகத்தியர், லோபாமுத்திரை தரிசனம்!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

நீண்ட வருடங்களுக்கு பின், சமீபத்தில், ஒரு புண்ணியத்தல யாத்திரையாக, திருவண்ணாமலை சென்றிருந்தேன்.  அகத்தியப்பெருமானின் அருளினால், மிக மிக அருமையான யாத்திரையாக அமைந்தது. அன்றையதினம், முதன் முறையாக அகத்தியர் ஆஸ்ரமம் செல்லும் வாய்ப்பும் கிட்டியது. உள்ளே நுழைந்ததும், திகட்டாத அதிர்ச்சி காத்திருந்தது. ஆம். அகத்தியப்பெருமான், லோபாமுத்திரை சமேதராக, அன்றைய யாகத்தை ஏற்று வாங்கிக்கொண்டு, பின்னர், தம்பதி சமேதராக அமர்ந்திருந்தார். அருமை, அவ்வளவு அருமையான தரிசனம் என்றுதான் கூறவேண்டும். அதிலும், அகத்தியப் பெருமான், தன் இடது கைவிரல்களால், லோபாமுத்திரை தாயாரை சன்னமாக தட்டி கூப்பிட்டு, "இங்க பார்! யார் வரான்னு! நான் சொன்னேனே, அவன் வருகிறான் பார்" என்று தாயாரின் கவனத்தை நம் பக்கம் திருப்புவது போல், நிறைந்த அன்புடன், அமர்ந்திருந்த கோலம். இதை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. அந்த இடத்தை விட்டு விலகவே மனமில்லை. அப்படி அருமையான சூழ்நிலை. நிறைய புகைப்படங்களை எடுத்து சேர்த்துக் கொண்டேன்.

அதில் ஒன்றை, உங்கள் அனைவருக்காகவும், கீழே தருகிறேன். அந்த அன்பு நிறைந்த சூழ்நிலையை உணர விரும்புபவர், படத்தை பெரிதாக்கி, அகத்தியர் விழிகளையும், தாயாரின் கனிவான பார்வையையும், பாருங்கள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகள் போற்றி!


Saturday 18 May 2019

சித்தன் அருள் - 810 - சித்த மார்க்கம் காட்டும் இல்லற தர்மம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகளை தொடரும் வழியில், ஒரு சித்த வித்யார்த்தியை சந்திக்க நேர்ந்தது. கலந்துரையாடலின் பொழுது, சித்த மார்க்கம் காட்டும், இல்லற தர்மம் என்பதை பற்றி தெளிவுபடுத்தினார் அடியேனுக்கு. யாம் பெற்ற இன்பத்தை, நீங்களும் உணர, அந்த சிறு விரிவுரையை, உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

இல்லற_தர்மம்

கட்டிய மனைவியை கடைசி வரை கண் கலங்காமல் காப்பவன் தவம் செய்ய தேவை இல்லை!

இருபத்தி ஒரு வயது வரை அவனவன் சொந்த ஆன்ம கர்மா செயலுக்கு வராது

அந்த ஆன்மாவின் ஸ்தூல தாய் தந்தை கர்மாவே வழி நடத்தும் 

96 தத்துவங்கள் முடிவு பெறுவது இருபத்தி ஒரு வயதிலே.  அதன் பிறகே 
அவனது சொந்த ஆன்ம கர்மா செயலில் இறங்கும். 

சிவமாக இருந்தால் மட்டும் சிரசு ஏற முடியாது! சக்தியோடு துணை சேர வேண்டும். சிரசு ஏற பல வழி 
  • தியானம் மூலம் 
  • பக்தி மூலம் 
  • ஞான மூலம் 
  • யோக மூலம் 
  • தீட்சை மூலம் 
  • சிவசக்தி மூலம் 
இன்னும் எத்தனையோ மூலம், வழி உள்ளது சிரசு ஏற. ஆனால் சிறந்த மூலம் இல்லற தர்மம். 

சிவம் பிறக்கையிலே அவனுக்கு முன்பே சக்தி பிறந்து விடுகிறது 

சக்தி மாறி சிவம் சேர்ந்தாலே பிறவியே சிக்கலே. 

மனம் பொருத்தம் பூமியிலே ஜெயிப்பது இல்லை. ஆன்ம பொருத்தமே பிறவியை ஜெயிக்கும்.

அந்த சக்தி யோடு சிவம் சேரும் போதே சர்வமும் சாந்தி ஆகும் 

சிவ சக்தி இடையே ஊடலும் கூடலூம் உற்சாகம் தானே......!!!

ஆனால், சக்தியின் கண்ணீருக்கு சிவம் காரணமானால் அதை விட கொடிய கர்மா இவ்வுலகில் இல்லை 

ஒருவன் வாழ்வை ஜெயிக்க ஆயிரம் வழி தர்மத்தில் உள்ளது உண்மையே!

ஆனால்,

உறவுகளை கொண்டே உலகை வெல்வதும் பிறவி பிணி அறுக்கவும் ஒரு வழி உள்ளது. அது, உலகம் அறியாதது. 

சொந்தம் என்பது, பழைய பாக்கி என அறிந்தவனுக்கு சொந்தம் ஒரு சுமை இல்லை. 

நட்பு என்பது, பழைய பகை என்பதை பண்போடு அறிந்தவனுக்கு, பதற்றம் இல்லை 

எதிரி என்பவன், தனது கர்மாவின் தார்மீக கணக்கே என தன்மையோடு உணர்ந்தவனுக்கு, எதிரி, எதிரியே இல்லை... உனது எதிரி நீயே! 

உனது செயலே கர்மா ஆகி, அந்த கர்மாவே நீ எதிரி என நினைக்கும் ஒரு உயிருள்ள சடலத்தை உனக்கு எதிராக பயன்படுத்துகிறது என நீ உணரும் போது... 

உன் எதிரி முகத்தில, உனது கர்மா உனது கண்களுக்கு தெரிய வந்தால்... 

எதிரி உனக்கு எதிரே இருந்தாலும், கலக்கம் தேவைப்படுவதில்லை! 

உன்னை உடனிருந்தே கொல்லும் உறவும் உன்னோடு பிறக்கும் உனது பழைய கணக்கிலே! 

பழைய கணக்கு புரிந்தால், பந்த பாசம் சகோதரத்துவம் மீது பற்று அற்ற பற்று வைத்து பிறவி கடமை வெல்லலாம். 

கர்மாவின் கணக்கு புரிந்தால் உனது பக்கத்தில் சரி பாதி அமரும் மனைவி யார் என்றும் புரியும். 

தாய் தந்தையை அன்போடு பூஜிப்பவன் தந்தை வழி, தாய் வழி ஏழு ஜென்ம கர்மாவில் இருந்து தப்பிக்கலாம். 

உறவுகளுக்கு அவர்கள் தரும் இன்னல்கள் பொறுத்து, உபகாரமாக உதவி வந்தால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உனது ஏழு ஜென்ம சமூதாய கர்மாவில் இருந்து தப்பிக்கலாம். 

கோயில் போனாலோ, மகா குளத்தில் குளித்தாலோ ஒன்றும் மாறாது! சிறு இன்பம் மட்டும் சிறிது காலம் கிடைக்கும், அவ்வளவே. 

ஆனால், ஒரே ஒரு உறவை நீ பூஜித்தால், பிறவி பிணி மொத்தமாக தீரும், அது மனைவியே. 

மனைவியை மகிழ்ச்சியாக வைப்பது உலகிலேயே சிரமம் மட்டும் அல்ல, அது தான் உலகிலேயே சிறந்த தவம்!? 

தவம் என்பது சாமான்யன்களுக்கு சிரமமே!! 

கட்டிய மனைவியையும், உன் மூலம் அவள் பெற்ற பிள்ளைகளையும் உளமாற நேசித்து உன்னதமாக உனது வாழ்வை ஆனந்தமாக நீ அர்ப்பணித்தால் அதுவே உலகின் சிறந்த தர்மம், சிறந்த தவம்! 

தாய் தந்தையை வணங்கினால், ராமேஸ்வரம் போகத் தேவை இல்லை, பித்ரு தோஷம் நீங்க. 

உறவுகளை மதித்தால், கிரக தோஷம் நீங்க திருவண்ணாமலை இடைக்காடரைத் தேடத் தேவை இல்லை, நவகிரகமும் சுற்றத் தேவை இல்லை. 

மனைவியை, பெற்ற பிள்ளையை நேசித்தால், அவர்களை ஆனந்தமாக வைத்தால், கர்ம விமோஜனம் தேட வேண்டி, அகத்தீசனை தேடி, பாபநாசம் போகத் தேவை இல்லை. 

இதற்கு தான் இல்லற வாழ்க்கை அமைத்தான் நமது முப்பாட்டன், ஆதியோக வம்சம். 

மனைவி அழும் வீடே நரகம். 

மனைவி சிரிக்கும் வீடே பிரபஞ்ச சொர்க்கம்.

"சக்தியை" உணர்ந்தால் மட்டுமே, சிவம் ஜோதி ஆக ஜொலிக்கும்......!!!

திருச்சிற்றம்பலம்

சித்தன் அருள்.................. தொடரும்!

Thursday 9 May 2019

சித்தன் அருள் - 809 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!


​​
உணவில் கட்டுப்பாடு தேவை. இந்த தலைமுறை, நாக்கு ருசியாக ஏதேனும் உண்டு வாழ்ந்தால் போதும், என்கிற மனநிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்காக, உடல் சூட்டை எப்படி தணிப்பது என்று தெரிவிக்கிறேன்.

வாரத்தில் ஒருநாள், ஆண்கள்- புதன் அல்லது சனிக்கிழமை, பெண்கள் - செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை, தலை முதல் பாதம் வரை எண்ணெய் தேய்த்து, ஒரு மணிநேரம் எண்ணையில் ஊறியபின், சீயக்காய் போட்டு குளிக்கலாம். அப்படி குளித்தபின் உறங்குவது ஆறு மணிநேரத்திற்குப்பின்தான் இருக்கவேண்டும். அன்று தாகம் எடுத்தாலும், தண்ணீர் அருந்துவதை குறைந்தது 8 மணிநேரத்திற்கு தவிர்க்க வேண்டும். உடலை வருத்தி, எந்த விஷயத்தையும் அன்று செய்யக்கூடாது.

இரவு உறங்கச்செல்லும்முன், ஒரு பிடி, வெந்தயத்தை வாயில் போட்டு, நீர் அருந்தினால், உடல் சூட்டை நிறைய அளவுக்கு, வெந்தயத்தில் உள்ள எண்ணை குறைக்க உதவும். வெந்தயம், குடல் சூட்டை நேரடியாக குறைக்கும்.

காற்று, ஒரு பலமான கடத்தி. அதை சுவாசமாக உள்வாங்கி, கும்பத்தில் முடிந்தவரை நிறுத்தி வைத்து, குளிக்கும் பொழுது, குளிர்ந்த நீரை, மார்பில், முதுகில் ஓடவிட்டு பார். உடல் உள்ளுறுப்புகள், எளிதில் சூட்டை இழக்கும், மொத்த உடலும் சீக்கிரமாக குளிர்ந்துவிடும். குளிக்கும் நேரத்தில், இந்த கும்பமுறையை நான்கு அல்லது ஐந்து முறை செய்யலாம்.

உறங்கும் முன், ஆமணக்கு எண்ணையை, தலை உச்சியிலும், கண் இமை மீதும், தொப்பிளிலும், ஆசன வாயிலும் தடவி உறங்க சென்றால், காலை உடல் குளிர்ந்திருப்பதை உணரலாம்.

உணவில், உப்பு, புளி, காரம் போன்றவற்றை மிகக் குறைவாக தொடர்ந்து உபயோகிப்பதால், கூடிய விரைவில் உடல் சூடு மட்டுப்படுவதை காணலாம்.

இளநீர், மிக சிறந்த குளிரூட்டி. தினமும் அருந்திவர, சூட்டினால் வரும் பல பிரச்சினைகளை தவிர்த்துவிடும்.

வெட்டிவேரை, மண்கலத்து நீரில் போட்டுவைத்து, அந்த நீரை அருந்தலாம்.

உடலை குளிர்விக்க, நன்னாரி மிக சிறந்த மூலிகை.

மருதாணி இலையை, விழுதாக அரைத்து, சுண்டக்காய் அளவுக்கு உருட்டி, நிழலில் வைத்து உலர்த்தி, தினம் மூன்று வேளை ஒன்று வீதம் உட்கொண்டு வர, மூன்றே நாட்களில் உஷ்ணத்தால் ஏற்படுகிற அனைத்து அவஸ்தைகளும் விலகி, உடல் குளிர்ந்து போகும்.

வீட்டில், சமயலறையில், அஞ்சரைப்பெட்டி என்று ஒன்றிருக்கும். அதில் உள்ள

கடுகு - உணவில் உள்ள விஷத்தை முறிக்கும். ஒவ்வாமையை விலக்கும்.
வெந்தயம் - குடலை குளிர்விக்கும், ஜீரண சக்தியை ஊக்குவிக்கும்.
மிளகு - நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டி, நீர் கட்டுகளை விலக்கும்.
மல்லி - ஜீரண சக்திக்கு அடித்தளமே இது தான்.
ஜீரகம் - அகத்துள் புகுந்து சீர் படுத்தும்.
சிறுபருப்பு - உடலுக்கு உரத்தை அளிக்கும். நரம்புகளின் நண்பன்.
பயறு, உளுந்து  - அனைத்து சக்தியையும் ஊட்டும்.
சமையலில், சுட்ட புளி, கெடுதலை செய்யாது. சுடாத புளி, சுவையை கொடுத்தாலும், சுகத்தை கெடுக்கும்.

மேற்கண்ட உணவு முறைகளை நம் முன்னோர்கள் தொடர்ந்து வந்ததால் சிறப்பாக ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்தனர். பாரத தேசத்தின் நடுப்பகுதிக்கு கீழே, தென்புலம் கடைசிவரை, சீதோஷ்ண கால நிலை இதமாக இருப்பதால், எந்த உணவு முறை உடலுக்கு நன்மை செய்யும் என்றறிந்து, நம் முன்னோர்கள் அதையே கடைப்பிடித்து வந்தனர். ஏதேனும் ஒரு விஷயத்தில், சந்தேகம் வரினும், கேள்வி கேட்டால், சித்த வித்யார்த்திகளும், சித்த வைத்தியர்களும், சித்தர்களும், உடனிருந்து, அந்த காலங்களில், தெளிவுபடுத்தினர். ஆனால் இன்றோ, சித்தர்கள் விலகியதை கண்டு, சித்த வித்யார்த்திகளும், வைத்தியர்களும், தங்களை மறைத்து வாழ்கின்றனர்.

"ஏன்?" என்றேன்.

"மனிதனின் பேராசை!" என்றார்.

"சித்தர்கள் அருளினால், இங்கு அனைத்து வியாதிகளுக்கும் சேர்த்து ஒரு மருந்து இருக்கிறது. ஒரே வியாதிக்கு பல மருந்துகளும் உள்ளது. அதுவும், ஒவ்வொருவர் வீட்டிலும் உள்ளது, எனத்தெரியுமா?" என்று கொக்கி போட்டார்.

"இல்லை தெரியாதுங்க!" என்றேன்.

"சரி! ஒரு மனிதனுக்கு வியாதி வர வேண்டுமானால், அதற்கான காரணம் என்ன?" என்றார்.

"அவன் கர்மா!" என்றேன்.

"உண்மை. ஆனால் அது ஒரு காரணம் மட்டும்தான். இரு கையும் சேர்ந்து தட்டினால்தான் சுத்தம் வரும். இல்லையா?"

"ஆம்!"

"அதுபோல, காரணம், காரியம்  என்ற இரு நிலைகள் வேண்டும், ஒரு வியாதி ஒருவனுக்கு வர!"

"ஹ்ம்ம்!"

"ஒரு வியாதிக்கு, உடல் மேடைபோட்டு கொடுத்து, வந்து நாடகமாடு என வேண்டிக்கொள்ள, அந்த ஒருவனுக்கு சிரமங்கள் வருவது, விதியினால் ஆயினும், அவன் உடல் அந்த வியாதி வர தேவையான அமைப்பை அமைத்துக் கொடுப்பதால் மட்டும்தான்!"

"ஏன்? சற்று நிதானித்து சிந்தித்து, உணவில் கட்டுப்பாட்டை கடைப்பிடித்து, எத்தகு கர்மாவாயினும், வ்யாதியற்ற நிலையை மனிதன் அவனாகவே உருவாக்கி கொள்ள வேண்டும்." என்றார்.

சித்தன் அருள்......................... தொடரும்!

Thursday 2 May 2019

சித்தன் அருள் - 808 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!


ஒரு உடலில் உள்ள அக்னியானது, உயிர்/பிராணன் தங்கியிருக்கிறது என்பதற்கு சான்று. இல்லையா? சரி! இந்த அக்னியானது எங்கு கனன்று நின்று, உள் முழுவதும் பரவுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதனின் வயிற்றில்தான் அக்னி குண்டம் உள்ளது. அங்கு கனன்று எரியும் அக்னியானது, உடலில் ஓடும் ரத்தம் வழியாக அனைத்து பாகங்களையும் சென்று அடைகிறது. ரத்தம் கொண்டு கொடுக்கும் அக்னியானது, ஒவ்வொரு அவயவங்களுக்கும் எரிசக்தியாக அமைகிறது. ரத்தம் ஓடாத இடங்கள் குளிர்ந்து போவது இதனால் தான். அந்த இடங்களுக்கு எரிசக்தி கிடைப்பதில்லை. நிற்க!

உடல் முழுவதும் பரவும் இந்த அக்னியானது கட்டுப்படுத்தப்பட  வேண்டும். உதாரணமாக, ஒரு மெழுகு திரியை தீ மூட்டி நேராக பிடித்தால், அதன் அக்னி பிழம்பு எந்த திசை நோக்கி இருக்கும்?" என கேள்வி எழுப்பினார்.

"மேல் நோக்கி எரியும்" என்றேன்.

"தலை கீழாக பிடித்தால்?"

"அப்பொழுதும் மேல் நோக்கியே எரியும் "

"இதிலிருந்து என்ன புரிகிறது என்றால், அக்னியின் குணம், மேல் நோக்கி செல்வதே! அதனால் தான் சூட்ச்சுமமாக, பசியை ஒரு வியாதியாகவும், உண்கிற உணவை கர்ம தகனம், அதுவும் வயிற்றில் நடக்கிறது என்று சித்தர்கள் உரைத்தனர்."

"ஒரு சுற்று வட்டத்தில் எந்த திசை நோக்கி, அந்த மெழுகு திரியை பிடித்தாலும், அக்னி மேல் நோக்கிய பயணிக்கும். அதுபோல் நம் உடலுக்குள்ளும், அக்னியானது மேல் நோக்கியே செல்லும். மனித உடலில் மிக உறுதியான பாகம் மண்டையோடு. அதுவரை பயணித்த அக்னியானது, வழிந்து பிற இடங்களுக்கு செல்லும். இப்படி பயணித்துக் கொண்டிருக்கிற அக்னி, ஒவ்வொரு உறுப்புக்கும் சக்தியை கொடுத்துக்கொண்டே இருக்கும். அக்னியின் வேகம் கூடக்கூட ஒவ்வொரு உறுப்பின் தன்மை, உழைக்கும் வேகம் இவை மாறுபட்டுக்கொண்டே இருக்கும். அதே போல், நம் உடலில் மிக மிக மென்மையான ஒரு உடல் உறுப்பு என்பது கண்கள்தான். அக்னியின் வேகம் அதிகமாக, கண்கள் சிவக்கும், கண் பார்வை குறையும், மேலும் கவனிக்காமல் இருந்தால், கண்ணுள் இருக்கும் லென்ஸ் (Lens) முதலில் அடி வாங்கும். உடலின் அமைப்பை பொறுத்து, பெற்றுக் கொள்ளப்படும் அக்னியை பொறுத்து, இந்த லென்ஸ் ஆனது உள்வாங்கவோ, வெளியே வளையவோ செய்யும். இந்த குறையை நிவர்த்தி செய்யத்தான், Concave அல்லது Convex கண்ணாடியை போட்டு பார்வையை சரி செய்துகொள்கிறோம். உண்மை தானே?" என்றார்.

"ஆம்" என்றேன்.

"நிற்க! அக்னியை, திடீரென குளிர்வித்தால், அது நீராக மாறும் என்று உனக்கு தெரியுமா?" என்றார்.

"கேள்விப்பட்டிருக்கிறேன்!" என்றேன்.

"தினமும், எந்த தவறு செய்யும் பொழுது, இந்த அக்னி அழுத்தம் பெற்று உடலின் மென்மையான பாகங்களை பாதிப்படைய செய்கிறது, என்று யோசி, பார்க்கலாம்?" என்றார்.

சற்று நேரம் யோசித்துப்பார்த்தேன். பிடிபடவில்லை.

சற்று நேர அமைதிக்குப்பின் அவரே தொடர்ந்தார்.

"தினமும் குளிக்கும் பொழுது மனிதர்கள் செய்கிற தவறுதான் காரணம். என்ன செய்கிறார்கள்? தண்ணீர் தரும் குளிர்ச்சியை ஆனந்தமாக உணர, முதலில் தலையில் ஊற்றிக்கொள்கிறார்கள். பின்னர் மற்ற அவயவங்களை நனைத்து குளிக்கிறார்கள். இல்லையா?" என்றார்.

"ஆம் உண்மை!" என்றேன்.

"தலையில் ஊற்றப்பட்ட தண்ணீரின் குளிர்ச்சி, அக்னியை உடனேயே குளிர வைத்து, நீராக்கி, தலை முழுவதும் நீர் கட்டை உருவாக்கி, ஜலதோஷம், மூக்கடைப்பு, நீர் தாரையாக ஓடுவது, ஒற்றை தலைவலி, அப்புறம் வேறு ஏதோ சொல்வீர்களே, cynus என்கிற வியாதியை எல்லாம் உருவாக்குகிறது. அத்தனை நீர்க்கட்டையும், விலக்க உடல் இன்னும் ஏரி சக்தி வேண்டும், என உத்தரவிட, அக்னி அதன் வீரியத்தை மேலும் கூட்டி அனுப்பும். அக்னிக்கு வீரியம் கூட்டிட, வயிறு, உணவில் கட்டுப்பாட்டை விலக்கி, கண்டதை எல்லாம் தின்ன வைக்கும். இப்பொழுது புரிந்ததா, ஒரு தவறு பல தவறுகளை செய்ய எப்படி தூண்டுகிறது என்று?" என புன்னகைத்தபடி நிறுத்தினார்.

"அடடா! இதை ஒன்றைக்கூட நாங்கள் கவனிப்பதில்லையே!" என்றேன்.

"சரியான முறை என்ன? என்று பார்க்கும் முன், ஒரு சில கேள்விகள்!" என்றார்.

"நம் முன்னோர்கள், நதி, குளம் இவற்றில் தான் போய் குளிப்பார்கள். அங்கு அவர்கள் நடந்து கொள்கிற விதத்தை கவனித்திருக்கிறாயா?" என்றார்.

"குளத்தில், நதியில் முன்னோர்களுடன் நீராடிய ஞாபகம் இருக்கிறது. ஆனால், அவர்கள் நடந்து கொண்ட விதங்கள் கவனத்தில் இல்லை" என்றேன்.

"அந்தக்காலப் பெரியவர்கள், குளத்தில் குளிக்கச்சென்றால், முதலில், தான் உடுத்திய உடையையும், துவட்டிக்கொள்ள கொண்டு சென்ற துணியையும், நீரில் நன்றாக நனைத்து, பிழிந்து, படியில் வைத்துவிட்டு, சிறிது நீர் எடுத்து, கால்களை கழுவி, தலையில் தெளித்துவிட்டு, பின்னர் இரு கை நிறைய நீர் எடுத்து, வாய்க்குள் வைத்துக்கொண்டு, குளத்து நீரை வேகமாக கலக்காமல், ஒரு இலை நீரில் விழுந்து செல்வதுபோல், நிதானமாக இறங்கி சென்று மார்பளவு ஆழம் வந்தவுடன், அங்கேயே நின்று, முதலில் மூன்று முறை தலை நனைய மூழ்கிய பின், சற்று நேரம் உடலின் பாகங்களை கைகளால் இழுத்துவிட்டு, பின்னர் சீயக்காய் அல்லது சோப்பு போட்டு குளித்து, பின்னர் கரை ஏறி, அந்த நனைந்த துண்டால், முதலில் முதுகு பாகத்தை துவட்டியபின், முகத்தை துவட்டி, பின்னர் மார்பு, வயிறு, கைகள், தொடை, கால்கள் என நீரை ஒற்றி எடுப்பார்கள். பின்னர் குளிக்கும் முன் வாயில் ஊற்றி வைத்துக் கொண்ட நீரை, கரையில், வெளியே துப்பிவிடுவார்கள். இது ஆரோக்கியமான முறை. இது ஒரு சரியான உடற்பயிற்சியும் கூட."

இதிலிருந்து உணர வேண்டியது என்னவென்றால், காலில் பட்ட நீர், அங்கிருந்து அக்னியை மேல் நோக்கி விரட்டும். அக்னி துரத்தப்பட்டு கழுத்தை அடைந்ததும், வாயிலிருக்கும் நீர் அதை பிடித்துக்கொள்ளும். மேல் ஏற விடாது. பின்னர் தலை மூழ்கும்பொழுது மேலிருந்து கீழே விரட்டப்படுகிற அக்னியையும், வாயிலிருக்கும் நீர் வாங்கிக்கொள்ளும். ஆதலால், உடலில் அதிகப்படியாக உற்பத்தி செய்யப்படுகிற சூட்டை அந்த நீர் வாங்கிக்கொண்டு விடுவதால், உள் உறுப்புகள், சரியான அளவு அக்னியை பெற்று சரியான விகிதத்தில் வேலை பார்க்கும். ஏன்? பாதிக்கப்பட்ட LENS கூட தன் இயல்பான நிலைக்கு திரும்பிவிடும். சரி! வீட்டில் குளியலறையில் குளிப்பவர்கள் என்ன செய்ய முடியும்?

இதையே பின்பற்றுங்கள்!

1. துவட்ட எடுக்கும் துண்டை நனைத்து பின் துவட்டுங்கள். (முதுகு, முகம், தலை, மார்பு என)
2. இருகை நீர் எடுத்து வாயில் வைத்திருந்து, குளித்து துவட்டிய பின் துப்பிவிடுங்கள்.
3. காலிலிருந்து நனைத்து தலைக்கு வாருங்கள்.
4. வாரத்தில் ஒருநாள், வாயில் வைக்கிற நீருக்கு பதிலாக, வாய் நிறைய நல்லெண்ணையை வைத்துக்கொள்ளலாம். பின்னர் துப்பி, வாய் கழுவிவிடவும்.

இந்த முறையை தொடர்ந்து செய்து வந்தால், இழந்த காண்பார்வையை இந்த ஜென்மத்திலேயே மீட்டுவிடலாம். கண்ணாடி, லென்ஸ் போன்றவைகளை சார்ந்திருக்கிற நிலையை விட்டு வெளியே வந்து விடலாம்.

"இது போக இன்னும் ஒரு சில வழி முறைகள் உண்டு. பொதுவாக சொல்வதென்றால், உள்சூட்டை கட்டுப்படுத்த தெரிந்தவனுக்கு, வாழ்க்கை அவன் கையில். இனி வரும் தலைமுறைக்கு இந்த முன்னோர்களின் வழி தெரிந்திருக்க வேண்டும். ஆகையால், கண் பார்வையின் முக்கியத்தை எல்லோருக்கும் தெரிவித்துவிடு" என்றார்.

"மிக்க நன்றிங்க. வேறு சில வழிமுறைகளும் இருக்கிறது என்றீர்கள். அதை பற்றியும் கூற முடியுமா?" என்றேன்.

"உண்ணும் உணவில், அதிக காரமும், புளிப்பும் கண் பார்வை குறைய காரணமாக இருக்கிறது. ஆகையால், ருசி என்பது நாக்கின் பின் முனை வரைதான், அதன் பின் எது வேண்டுமானாலும் உடலுக்கு விஷமாகலாம் என்பதை உணரவேண்டும். உதாரணமாக, தேன் இனிக்கும். உடலுக்கு நல்லது. அதை சாப்பிட்ட ஒருவன், உடனே வாந்தி எடுத்தால், அது அவனுக்கு கசப்பாக இருக்கும் என்று தெரியுமா. தொண்டையை கடந்து சென்ற தேன், வயிற்றை எட்டியதும், நேர் எதிராக மாறிவிடும்.  அதனால்தான்."

உடல் சூட்டை கட்டுப்பாட்டில் வைக்க வேறு சில விஷயங்களையும் கூறினார்.

அடியேன் அமைதியாக குறிப்பெடுத்தேன்.

சித்தன் அருள்.................... தொடரும்!