​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 26 December 2018

சித்தன் அருள் - 784 - இன்றைய அகத்தியர் திருநட்சத்திர பூஜை!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

இன்றைய அகத்தியப் பெருமானின் திரு நட்சத்திர பூஜை படங்களை, உங்கள் பார்வைக்காக கீழே தருகிறேன்.

[ ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசர் கோவில், பாலராமபுரம் ]

அகத்தியர் இல்லம், பாண்டிச்சேரி








அகத்தியர் கோவில், பாபநாசம்


[கல்யாண தீர்த்தம் ]





[பொதிகையில் இன்று ]
[ஸ்ரீ அகஸ்தியர் கோவில், திருச்செந்தூர்]







-- * --






சித்தன் அருள்........... தொடரும்!

Thursday 20 December 2018

சித்தன் அருள் - 783 - அகத்தியப் பெருமானின், திருநட்சத்திரம்!


வணக்கம் அடியவர்களே!

இந்த மாதம் 26ம் தேதி (மார்கழி மாதம்) அகத்தியப் பெருமானின் ஆயில்ய திரு நட்சத்திரம் வருகிறது. அகத்தியப் பெருமானின் கோவில்களிலும், வேறு பல புண்ணியத் தலங்களிலும் அவருக்கான அபிஷேக பூஜைகள் மிகச் சிறப்பாக நடக்கவுள்ளது. வலைப்பூவில் தேடிப்பார்த்தால், எங்கெல்லாம் பூசை நடக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

அகத்தியர் அடியவர்கள் அனைவரும், அருகில் எங்கேனும் அகத்தியருக்கு பூஜை நடந்தால், சென்று பங்கு பெற்று, உங்களால் முடிந்த உதவிகளை, உழவாரப் பணிகளை செய்யுமாறு, தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். காலம் சற்று சுகவீனம் அடைந்துள்ளதால், தர்மமும், புண்ணிய கர்மாவும் குறைந்துவிட்டதாக தகவல். அகத்தியரின் அடியவர்களாகிய நாம் அதை மெருகுபடுத்த, அவரின் உத்தரவின் பேரில், அன்றைய தினம், குறைந்தது நல்ல வேண்டுதல்களை வைக்க வேண்டும், லோகம் க்ஷேமமாக இருக்க வேண்டும் என பிரார்த்திப்போம்.

மேலும், அந்த நாள் இந்த வருடத்தில் கூறப்பட்ட, பாபநாச ஸ்நான காலம் மார்கழி மாதத்தில், தொடங்கிவிட்டது. உங்கள் வசதிக்கு ஏற்றபடி, என்றேனும் ஒருநாள், சென்று, ஸ்நானம் செய்து, இறைவனை தரிசித்து வாருங்கள், என வேண்டிக்கொள்கிறேன்.

பாபநாச ஸ்நானம்:- தாமிரபரணி புராணத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சிவபெருமானை லிங்க ரூபத்தில் பிரதிஷ்டை செய்து, தாமிரபரணி தேவியானவள், அகத்திய பெருமான் முன்னிலையில் தவமிருந்து, இறைவனிடமிருந்து நம் மனித குலத்திற்காக ஒரு வரத்தை பெற்றாள். எவர் இந்த இடத்தில், மார்கழி மாதத்தில் எம் தீர்த்தத்தில் நீராடி, உம்மை கண்டு வணங்குகின்றனரோ, அவர்களுக்கு இந்த பூமியில் இனிமேல் பிறவி என்பதே இருக்கக்கூடாது, என. சிவபெருமானும் தாமிரபரணியின் பூசை, தவத்தில் உளம் மகிழ்ந்து "அப்படியே ஆகட்டும்" என்று கூறி பாபநாத சுவாமி கோவில் லிங்கத்தினுள் மறைந்தார். அந்த நாட்கள் இந்த வருடம் 16/12/2018 முதல் 14/01/2019க்குள் வருகிறது. 

அகத்தியர் அடியவர்களே! மேல் சொன்ன இந்த நாட்களை குறித்து வைத்துக் கொண்டு, இங்கு தெரிவிக்கப்பட்ட இடத்திற்கு சென்று, இறை அருள், அகத்தியர் அருள் பெற்று நலமாக வாழ்ந்திட வேண்டிக் கொள்கிறேன்

கோடகநல்லூர் தொகுப்பை, தனியாக விரைவில் தருகிறேன்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் நமஸ்காரம்!

சித்தன் அருள்........................ தொடரும்!

Thursday 13 December 2018

சித்தன் அருள் - 782 - கோடகநல்லூர் - அந்தநாள்>>இந்த வருட நிகழ்ச்சிகள் - 7

[ கலச பூஜை ]
[அகத்தியர் அடியவர்கள் ]


[ பூஜைக்காக காத்திருக்கும் அகத்தியர் அடியவர்கள் ]

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

தாமிரபரணி நதிக்குள் இறங்கி செல்லும் பொழுதுதான் ஞாபகம் வந்தது, தாமிரபரணி தாய்க்கும், அகத்தியர் லோபாமுத்திரை பெற்றோருக்கும், நெற்றி மண்ணில் பட்டு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யவில்லை என்று. எப்பொழுது, தாமிரபரணியில் ஸ்நானம் செய்தாலும், மூச்சடக்கி, நீரின் அடியில் சென்று,  இரு கரம் முன் நீட்டி, உடல் மண்ணில் பட பல முறை நமஸ்காரம் செய்கிற பழக்கம் உண்டு. சிலவேளைகளில், தாமிரபரணித்தாயே, வேகத்தில் செல்கிற பொழுது, எத்தனை முறை முயற்சி செய்தாலும், நெற்றி மட்டும் பூமியில் படும் அன்றி, நீரின் வேகம், உடலை மேல்பரப்பை நோக்கி தள்ளிவிடும். இம்முறை, நீர் ஓட்டம் அதிகமாக இருந்தாலும், நீரின் அடியில் சென்ற பொழுது, இதமான வேகமாக இருந்ததை உணர்ந்து, இது தான் தருணம் என பலமுறை சாஷ்டாங்கமாக நெற்றி பட நமஸ்காரம் செய்தேன். மனதுள் ஒரு சில எண்ணங்கள் தோன்றியது. அவற்றை கோர்த்து, மந்திர ஜபம் செய்து தாமிரபரணி தாய்க்கு காணிக்கையாக்கினேன்.

"உன் குழந்தைகள், எத்தனையோ பிரச்சினைகளுக்கிடையில், உனக்கான புஷ்கர பூசையை, எங்கிருந்து எல்லாமோ வந்து நடத்துகிறார்கள். அதை ஏற்றுக்கொண்டு, அத்தனை பேரின் வாழ்விலும், இன்பத்தை அளித்திடு. இன்றைய தினம், புஷ்கரத்தினூடேயே அகத்தியப்பெருமான் பெருமாளுக்கு நடத்துகிற பூசையும் நடக்கப்போகிறது. எல்லாம் சிறப்பாக அமைய, நீ அருள வேண்டும். உன் ஆசிர்வாதம் வேண்டும்!" என பிரார்த்தித்தேன்.

நீண்ட நேரம் நீருக்கடியில் இருந்ததால் மூச்செடுப்பதற்காக நீரின் மேல் பரப்பிற்கு வந்து கண் மூடி த்யானம் செய்து நின்றேன். நின்ற இடத்தில் மார்பு வரை நீர் ஓடிக்கொண்டிருந்தது. வேறு யாரும் அருகில் இல்லை. தியானத்தை கலைத்தபடி, ஏதோ ஒன்று மார்பில் முட்டியது. கண் விழித்து பார்க்க, ஒரு அரை முழம் பூ மார்பில் தட்டி மேலும் முன்னுக்கு போக முடியாமல் தவித்தது. இரு கரங்களினால் அதை கையில் எடுத்துப்பார்க்க, அப்பொழுது பூசை செய்ய உபயோகப்படுத்திய பூ போல் தோன்றியது. சரி! தாய் அனைத்திற்கும் பதில் கொடுத்துவிட்டாள்! இனி பூசைக்கு செல்வோம் என் தீர்மானித்து, கரை ஏறும் பொழுது "இந்தா! தாமிரபரணித்தாய் கொடுத்த பூ! தலையில் சூடிக்கொள்!" என மனைவியிடம் கொடுத்துவிட்டு, கரை ஏறினேன்.

அகத்தியர் லோபாமுத்திரை தாயின் விக்கிரகங்களை சுமந்த படி தங்கியிருந்த வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.பொதுவான விஷயங்கள் அனைத்தும் அதனதன் நேரத்தில் நடப்பதை கண்டு, அகத்தியரும், பெருமாளும், எல்லா விஷயங்களையும் அதனதன் நேரத்துக்கு கொண்டு தருகிறார்கள், பூசை விஷயத்தை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என அமைதியானேன்.

கோவிலுக்கு வந்த பொழுது, நான்கு விக்கிரகங்களும் மண்டபத்தில் தூணுக்கு அருகில் அமர்ந்திருந்தது. விக்கிரகங்களை கீழே தரையில் வைக்கக்கூடாது என்று தீர்மானித்து, அடியேனுக்கு ராமானுஜரிடமிருந்து கிடைத்த காவித்துண்டை, விரித்து அதன் மீது வைக்கச் சொன்னேன்.

அகத்தியர் அடியவர்களுக்காக, தயார் செய்யப்பட்ட பொங்கல், பெருமாளின் நிவேதனத்துக்குப் பின் கோவில் வாசலில் வைத்து கொடுக்கப்பட்ட்டது. வந்திருந்த நிறைய பேருக்கு பெருமாளின் பிரசாதம் பெரும் பாக்கியம் கிடைத்தது. கோவிலில் நல்ல கூட்டம் இருந்ததால், பூசை தொடங்க நிறைய நேரம் ஆகும் எனது தோன்றியது.

இதற்கிடையில், அர்ச்சகரை கண்டு, ஐந்து குடங்களையும், மூன்று அண்டாக்களையும் கடன் வாங்கினேன்.

ஒரு குழுவை உள்ளே அனுப்பி, பெருமாளின், தேசிகர் மேடையை தூக்கி வரச்செய்து, வெளியே மண்டபத்தில் போட்டு, சுத்தம் செய்ய வேண்டினேன். ஒரு சிறு குழு மின்னல் வேகத்தில் அந்த வேலையை முடித்தது. அபிஷேக தீர்த்தம் வெளியே செல்ல வேண்டிய குழாய்களை போட்டு, மேடைகளுக்கு நான்கு புறமும் சுத்தம் செய்து மாக்கோலம் போடப்பட்டது.

வந்திருந்த நிறைய அகத்தியர் அடியவர்கள் ஒன்று சேர்ந்து, பஞ்சாமிர்தம் செய்வதற்காக அமர்ந்தனர். அதில் பலரும், ஞாபகம் வைத்திருந்து, கனியை நறுக்குவதற்கு, கத்தி வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்தது, ஆச்சர்யமாக இருந்தது.

குடத்தை முதலில் அங்கு வந்திருந்த அகத்தியர் அடியவர்களில் ஐந்து பேரிடம் கொடுத்து, நதிவரை சென்று பெருமாளுக்கு அபிஷேக தீர்த்தம் எடுத்து கொண்டு வந்து, இந்த மூன்று அண்டாக்களில் நிரப்ப முடியுமா! என்று வினவ, உடனே முன் வந்தனர். ஒரு குடம் நீர் விட்டதும், குடத்தை அடுத்த அகத்தியர் அடியவருக்கு கொடுக்க வேண்டும். இதனால் நிறைய பேருக்கு, அபிஷேக தீர்த்தம் கொண்டு விடுகிற வாய்ப்பு அமையும், என கூறி நதிக்கரைக்கு செல்லச்சொன்னேன்.

அடுத்ததாக, யாரெல்லாம் சுற்று விளக்கு போட வருகிறீர்கள், என வினவ, ஒரு ஆறு பேர் வந்தனர். அவர்களிடம், சுற்று விளக்கை காண்பித்துவிட்டு, பெருமாளின் மண்டபத்தை காண்பித்து, அங்கும் விளக்கு போடவேண்டும் எனக்கூறி, அதற்கான சாமான்களை அவர்களிடம் கொடுத்தோம். மிகச்சிறப்பாக, விளக்கு போட்டனர். யாரெல்லாம் என்று தெரியவில்லை, ஆனால் அன்று விளக்கு போட்டவர்களுக்கு, பெருமாள் மிகச்சிறப்பான ஆசிர்வாதத்தை அளித்தார் என்பதை உணர முடிந்தது.

உள்ளே சன்னிதானத்தில், கூட்டத்தை ஒரு வழியாக சமாளித்து அனுப்பிவிட்டு 11 மணிக்கு அர்ச்சகர், பெருமாள், தாயார், தேசிகர் விக்கிரகங்களை அதனதன் இடத்தில் கொண்டு வந்து வைத்தார். எதேச்சையாக ஒரு சில விஷயங்களை அர்ச்சகரிடம் கொடுத்து பெருமாள் பாதத்தில் வைக்க வேண்டி சென்ற அடியவன், பெருமாள் இருந்த நிலையை கண்டு ஆனந்தத்தில் அசந்து போனேன்.  அகத்தியர் அடியவர்கள் கொண்டு வந்த மலை, பூ போன்றவற்றை தரித்து, அவர் முகம் பூரித்து போய், நின்றிருந்தார். அடடா! அகத்தியர் பூஜை செய்கிறார், என்றால், இப்படித்தான் தடாலடி போல. எல்லாம் மிகச்சிறப்பான நேரத்தில், சரியாக வந்து சேரும் போல. என்ன கேட்டாலும், பெருமாள் அப்பொழுதே கொடுத்துவிடுவார் என்று உள்மனம் கூறியது.

"ஏதாவது ஒன்று வேண்டுமானால் கேட்டு வாங்கிக்கொள்!" என்று கூறினாலே, நூறு விண்ணப்பத்தை கொடுத்துவிடும் பழக்கம், அடியேனுடையது. ஆனால் அந்த நேரத்தில் ஒரு விண்ணப்பம்தான் வந்தது.

"வந்திருக்கும் அகத்தியர் அடியவர்கள் சமர்ப்பிக்கிற வேண்டுதல்களை உடனேயே நிறைவேற்றி கொடுத்து, பத்திரமாக அவர்களை வீடு கொண்டு சேர்த்துவிடு!" என விண்ணப்பித்தேன்.  இதுவன்றி, வேறெதுவும், அடியேன் மனதில் தோன்றவில்லை.

திரு காளிமுத்து என்கிற ஒரு அகத்தியர் அய்யனின் அடியவர், சுத்தமான விரளி மஞ்சள் வாங்கி, நன்றதாக சுத்தம் செய்து, பொடியாக்கி கொண்டு வந்திருந்தார். அதை அர்ச்சகரிடம் கொடுத்து, பெருமாள் பாதம், மார்பு, கைகளில், தாயார் கைகளிலும், பாதத்திலும் சார்த்தி வைக்க கொடுத்தேன். அதையும், பெருமாள் மிக கனிவுடன் வாங்கி வைத்துக் கொண்ட காட்சியை மறக்கவே முடியாது.

பெருமாளிடம், நன்றி கூறி வெளியே வந்து பார்த்த பொழுது, மூன்று பாத்திரங்களிலும், தாமிரபரணி தீர்த்தம் நிரப்பப்பட்டுவிட்டது. கடைசியாக, ஐந்தாவது குடமும் நீருடன் வந்து சேர்ந்தது. நிமிர்ந்து பார்த்த பொழுது, அடியேனுக்கு வெகு பரிச்சயமான முகம்.

"என்ன? எத்தனை குடம் சுமந்தீர்கள்!" என்றேன்.

"ஒன்று தான்! அதற்கு மேல் வாய்ப்பில்லை. இந்த வாய்ப்பு கிடைக்க நிறையவே முயற்சி செய்ய வேண்டி வந்தது. அவ்வளவு பேர்கள் வரிசையில் நின்றார்கள். இதுவே பெரும் பாக்கியம்" என்றார்.

அர்ச்சகர் வந்து, அபிஷேக பூஜையை தொடங்குவதற்காக, அகத்தியர் அடியவர்கள், மிக அமைதியாக, த்யானம் செய்தபடி, ஜெபித்தபடி, மெதுவாக மந்திரம் கூறியபடி அமர்ந்திருந்தனர்.

ஒன்பது குடங்களில், கலச தீர்த்தம் வைத்து முதல் பூசையை அர்ச்சகர் தொடங்கிய பொழுது மணி 11.30.

தாமிர பரணி தீர்த்தமே, குடத்தினுள் விடப்பட்டது.

முதல் பூசையை ஆவாகனம், மந்திர ஜெபம் செய்து முடித்தவர்,  அடியேனை பார்த்து, தொடங்குகிறேன், என கண்களால் கூறினார்.

அபிஷேகத்துக்கு, அகத்தியர் அடியவர்கள் கொண்டு வந்த சாமான்களை பிரித்து அடுக்கி, ஒரு அகத்தியர் அடியவர், எடுத்து கொடுக்க தயாராக நின்றார்.

சுற்று விளக்கு போட்டுவிட்டு அந்தக் குழு வந்து அமர்ந்தது.

எல்லோரும் வந்துவிட்டார்களா? என ஒரு முறை சுற்று முற்றும் பார்த்துவிட்டு, அர்ச்சகரை நோக்கி "சரி" என தலையாட்டினேன்.

அகத்தியப் பெருமானின், அந்தநாள் >> இந்தவருட பூஜை தொடங்கியது.

சித்தன் அருள்................. தொடரும்!

Sunday 9 December 2018

சித்தன் அருள் - 781 - கோடகநல்லூர் - அந்தநாள்>>இந்த வருட நிகழ்ச்சிகள் - 6


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

[கடந்த வியாழக்கிழமை, காலையிலேயே தொகுப்பை வழங்க முடியவில்லை. மாலை அகத்தியர் கோவில் சென்று குருநாதரிடம் முறையிட்டேன். "சரி! போனால் போகிறது நேரம் கிடைக்கும் பொழுது சித்தன் அருளை வெளியிடு" என்று அருள் புரிந்தார். வீடு வந்து சேர்ந்து, அவர் அருளியது உண்மை தானா என்ற சந்தேகம் வரவே (சாதாரண மனுஷனாயிட்டேன்) சோதித்து பார்க்கலாம் என்று ஒரு எண்ணம் வரவே (திருந்தவே மாட்டேன் போல) கோடகநல்லூர் நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்க்க, மடை திறந்த வெள்ளமென சிந்தனை உருண்டோடியது. ஓ! நடந்ததை சொல்ல வேண்டுமென்றாலும், அவர் அருளினால்தான் உண்டு. அடியேன் கையில் எதுவுமே இல்லை.

"ஓதியப்பரின் பால் கட்டி பிரசாதம்", முகவரி தந்தவர்களுக்கெல்லாம் அனுப்பியாகிவிட்டது. இன்னும் ஒரு 40 பேர் இருக்கிறார்கள். இந்த வாரம், அல்லது அடுத்த வாரம், அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். கையில் பிரசாத இருப்பு தீர்ந்துவிட்டபடியால், இந்த 40 பேருடன், பிரசாத விநியோகம் நிறைவு பெறுகிறது. அடுத்த முறை கிடைக்கிற பொழுது அனுப்பி வைக்கிறேன் என்று உறுதி கூறுகிறேன். 

மேலும் ஒரு விஷயம். தயவுசெய்து யாரும், மொபைல் எண், சுய விலாசத்தை சித்தன் அருள் தொகுப்பில் போடாதீர்கள். உங்களுக்கு தொடர்பு கொள்ள ஏற்கனவே agnilingamarunachalam@gmail.com தந்திருக்கிறேன். இதுவரை வெளியிட்ட அடியவர்கள் தொடர்பை, எடுத்துவிட்டேன்  இனி, கோடகநல்லூர் நிகழ்ச்சிகளுக்கு செல்வோம்.]

ந்த வேஷ்டியை தெரிவு செய்வது என்பதை பெருமாளிடம் வேண்டி நின்ற அர்ச்சகருக்கு, பெருமாளிடம் இருந்து உத்தரவு வந்தது.

"என் குழந்தைகள் ஒன்று சேர்ந்து, அபிஷேக ஆராதனைகளை நடத்தி இன்றைய தினம், கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். ஆனால், இந்த தினம் எனதருமை கருடாழ்வாருக்கு உரியது. அவன் விஸ்வரூபம் எடுத்த ஒரே நிகழ்ச்சி நடந்த நாளில், அவனுக்கு மரியாதை செய்ய நான் விரும்புகிறேன். ஆதலால், என் பக்தனை யாமே தூண்டிவிட்டு வரவழைத்தோம். அவன் கொண்டு வந்ததை எனக்கு சார்த்து. எனக்கென என் குழந்தைகள் வாங்கிக்கொண்டு வந்த உடையை, கருடாழ்வானுக்கு சார்ந்து. அவன் அலங்காரம் தரித்து நிற்பதை நான் இங்கிருந்து கண்டு களிக்க விரும்புகிறேன்." என்றார்.

அடுத்த நொடியில், பக்தனின் வேஷ்டி பெருமாளிடமும், ஜரிகை போட்டு, சங்கு, சக்கரம், திருமண் போட்ட பெரிய வேஷ்டி, கருடர் விக்கிரகத்தையும் அலங்கரித்தது.

இப்படிப்பட்ட நிகழ்ச்சி, ஒரு கவனக்குறைவு அடியேன் பக்கம் மறுபடியும் வரக்கூடாது என்பதற்காக, இந்த முறை, பெருமாளுக்கும், கருடாழ்வாருக்கும் ஒரே போன்ற வஸ்திரங்களை வாங்கியிருந்தேன்.

இதில் புரிந்த ஒரு விஷயம் என்னவென்றால், அகத்தியப் பெருமான் பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகளை செய்தாலும், பெருமாளோ, அத்தனை பெருமைகளையும், கருடாழ்வாரை சிறப்பிக்க கொடுக்கிறார் என்பதே உண்மை.

கோவிலை விட்டு வெளியே வரவும், நான்கு பேர்கள் ஒரு ஆட்டோவில் வந்து இறங்கினார்கள். அவைகளில் ஒருவர், சமையல்காரர்.

அடியேனை கண்டதும், ஓடி வந்து "அடியேன், வந்துட்டேன்!" என்று கை கூப்பி நின்றார்.

அடியேனும் கைகூப்பி வணக்கம் சொல்லிவிட்டு "இப்ப உடம்பு எப்படி இருக்கு!" என்று அர்த்தத்துடன் சிரித்த படி கேட்டேன்.

"இப்பொழுது பரவாயில்லை! நேற்று இரவு 11 மணி வரை உறங்கவே இல்லை! பின்னர் தான் உறங்கினேன். விடியற்காலை 4.30க்குத்தான் நினைவு வந்தது. உடல் பாதிப்புகள் எல்லாம் சரியாகிவிட்டது. அதான் ஓடி வந்திருக்கிறேன்!" என்றார்.

"ஹ்ம்ம்! சரி உங்கள் வேலையை தொடங்குங்கள்! அதற்கு முன், 9 மணிக்கு எல்லோருக்கும் பிரசாதமாக பொங்கல் போட்டுவிடுங்கள். பெருமாளுக்கு நிவேதனம் பண்ணிவிட்டு, பிறகு, வந்திருக்கும் அடியவர்களுக்கு காலை சிற்றுண்டியாக கொடுக்க வேண்டும்!" என்றேன்.

"சரி!" என்றபடி தன் பரிவாரத்துடன் கோவில் உள்ளே சென்றார்.

சக நண்பர்களுடன், தாமிரபரணிக் கரை அடைந்தோம். ஒரு நண்பரிடம், "நாம் இருவரும் ஒருமுறை நன்றாக முங்கி குளித்தபின், கரையேறி, வீட்டுக்கு சென்று லோபாமுத்திரை சமேத அகத்தியர் விக்கிரகத்தை கொண்டு வந்து படித்துறையில் வைத்து அபிஷேக ஆராதனைகளை செய்துவிடலாம்" என்றேன்.

சொன்னது போலவே, ஒரு முறை தாமிரபரணியில் மூழ்கி கரை ஏறி, அகத்தியர், லோபாமுத்திரை விக்கிரகங்களை கொண்டு வந்து ஒரு காவி துண்டை நீரில் நனைத்து, பின் படித்துறையில் விரித்து, அதன் மீது வைத்தோம்.

அபிஷேகத்துக்கான சாமான்கள் எதையும் கொண்டு வரவில்லை என்று அப்பொழுது புரிந்தது.

அப்பொழுது ஒரு ஆச்சரியமான நிகழ்ச்சி நடந்தது.

என்ன செய்வது, வெறும் தாமிரபரணி தீர்த்தத்தை  விட்டு அபிஷகம் செய்து பூஜையை முடித்துக் கொள்ளலாமா என்று யோசிக்கும் பொழுது,

"அய்யா! என்று ஒரு குரல் கேட்டது.

நிமிர்ந்து பார்க்க, சென்னையிலிருந்து வந்த ஒரு அகத்தியர் அடியவர் தன் கரத்தில், ஒரு பீடத்தில், அகத்தியர், லோபாமுத்திரையின் விக்ரகங்களை சுமந்தபடி நின்றிருந்தார்.

"அய்யா! நீங்கள் அந்த விக்கிரகங்களுக்கு அபிஷேக பூசை செய்கிற பொழுது, இந்த விக்கிரகங்களையும் வைத்து செய்து விடுங்களேன்!" என்றார்.

"எந்தவிதமான அபிஷேக சாமான்களும் எங்களிடம் இல்லை. வெறும் தாமிரபரணி நீரைத்தான் உபயோகிக்கப்போகிறோம்." என்றேன்.

"அய்யா! அபிஷேக பொருட்கள் என்னிடம் உள்ளது! எடுத்துக்கொள்ளுங்கள்" என்றார்.

அவர் கொண்டு வந்த விக்கிரகங்களை முதலில் வந்த விக்கிரகங்கள் அருகில் வைத்து, அபிஷேகத்தை யார் செய்வது என்று யோசிக்கும் பொழுது, "நீங்களே, உங்கள் முறைப்படி அபிஷேக பூஜையை செய்து விடுங்கள்" என்றார் அவர்.

அவர் கொண்டு வந்த பால், மஞ்சள் பொடி போன்றவற்றை, தாமிரபரணி தீர்த்தத்துடன் மந்திர ஜபம் கலந்து,  அகத்தியப் பெருமானுக்கும், லோபாமுத்திரை தாய்க்கும், அபிஷேகம் செய்து பின்னர் ஒவ்வொரு விக்கிரகத்தையும் ஒருவர் சுமந்து நதியின் உள்ளே சென்று ஸ்நானம் செய்தோம். யாருக்கெல்லாம், விக்கிரகங்களை சுமக்கும், அவைகளுடன் நதியில் மூழ்கும் வாய்ப்பு கொடுக்க முடியுமோ, அத்தனை பேருக்கும் வாய்ப்பை கொடுத்தார் அகத்தியர்.

அகத்தியர் விக்கிரகத்தை மார்பில் சுமந்தபடி, நீரினுள் மூழ்கிய பொழுது, "என் திருவடி உன் தலையில் படவேண்டும் என்று ஆசைப்பட்டாயே! அதை நிறைவேற்றிக்கொள்வதுதானே" என்று மிகத் தெளிவாக அவர் கூறியது அடியேனுக்கு கேட்டது! உணர்ந்தேன்!

அவ்வளவுதான், அடுத்த நிமிடம், அகத்தியர் விக்கிரகத்தை, தலையில், சஹஸ்ராரத்தில் இருத்தி, நீரில் மூழ்கினேன்.

மனம் "ஓம் அகத்தீசாய நமஹ!" என்று ஜெபித்துக்கொண்டிருக்க, எத்தனை முறை மூழ்கி எழுந்தேன் என தெரியவில்லை. அடியேனின் தீராத அவா, அன்று தீர்ந்தது.

பின்னர், இரு விக்கிரகங்களையும், கரையில் இருத்தி, மாலை சார்த்தி, பூக்களை சார்த்தி, திலகமிட்டு, சிறு நிவேதனத்தை அளித்து, தீபம் காட்டி பூசையை நிறைவு செய்தபின், அகத்தியர் அமர்ந்திருந்த காவி துணியில் சிந்தியிருந்த விபூதியை, அவர் பிரசாதமாக நெற்றிக்கு இட்டுக்கொள்ளவும், நிறைய அகத்திய அடியவர்கள் வந்து "எனக்கும் அந்த விபூதி வேண்டுமென" கேட்டு வாங்கிக்கொண்டனர்.

கூட வந்திருந்த நண்பரிடம் சைகை காட்டி "தாமிரபரணி தாய்க்கான" பூசை சாமான்களை கொண்டு வரச்சொன்னேன்.

அகத்தியர் அனுமதியுடன், தாமிரபரணி தாய்க்கு பூசை செய்து, நதியின் நடுவரை சென்று பிரார்த்தனையுடன் பூஜை தட்டை நீர் ஓட்டத்தில் சேர்த்தோம். அது ஆடி அசைந்து செல்வதை மனதாரக் கண்டுகளித்தபின், கரைக்கு திரும்பும் முன், "அம்மா! தாமிரபரணித்தாயே! எதோ தெரிந்தவரையில், அகத்தியர் அனுமதியுடன், உனக்கு தாம்பூலம் சமர்ப்பித்துவிட்டோம்! அதை ஏற்றுக்கொள். ஏற்றுக்கொண்டாய் என்பதற்கு ஏதேனும் ஒரு அறிகுறி கொடுக்க வேண்டும்" என மனதுள் வேண்டிக்கொண்டேன்.

நான் நின்றிருந்த இடத்தில் நதி நீரானது கழுத்துவரை சென்றது. அருகில் யாரும் இல்லை என்று சொல்லலாம்.

யாரோ ஒரு பூவை வீசி எரிந்து, நம் மீது பட்டால் வரும் உணர்வு வரவே, இடது பக்கம் திரும்பி பார்க்க, ஒரு ரோஜா பூ, அடியேன் முகத்தில் பட்டு தெறித்து நீரில் வீழ்ந்து, ஓட்டத்தில், அடியேனை நோக்கி வந்தது.

இரு கரம் சேர்த்து அதை நீரிலிருந்து எடுத்து, கரையை நோக்கி சந்தோஷமாக வர, இதை ஒன்றிரண்டு அகத்தியர் அடியவர்கள் பார்த்துவிட்டனர்.

ரோஜா பூவுடன் கரைக்கு அருகில் வர "என்ன! அம்மா பூ கொடுத்துவிட்டாளா! எனக்கு கொடுங்களேன் அதை" என இருகை நீட்டி நீரில் நின்று கொண்டிருந்தாள் என் மனைவி.

கரையில் நின்றிருந்த ஒரு அகத்தியர் அடியவரும் (பெண்மணி) முன்னரே கவனித்து விட்டிருந்ததால், அந்த பூவை வேண்டி கைநீட்டி நின்றிருந்தார்.

அவர் கையில் அதை கொடுக்கும் முன், திரும்பி மனைவியிடம் "உனக்கு அம்மாவிடம் கேட்டு வேறு பூ வாங்கித்தருகிறேன்" என்றுவிட்டு, கரையில் நின்ற அகத்தியர் அடியவர் கைகளில், அந்த பூவை கொடுத்தேன்.

மட்டற்ற மகிழ்ச்சியுடன், பூவை வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டு, அந்த பெண்மணி தலையில் சூடிக்கொண்டார்.

அடியேன் மறுபடியும் நதிக்குள் இறங்கி சென்றேன், "ஒரு துண்டு பூ குடும்மா, தாமிரபரணித்தாயே!" என்று வேண்டியபடி.

சித்தன் அருள்.................... தொடரும்!

  

Thursday 29 November 2018

சித்தன் அருள் - 780 - கோடகநல்லூர் - அந்தநாள்>>இந்த வருட நிகழ்ச்சிகள் - 5



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகள் போற்றி!

["கிரௌஞ்சகிரி ஓதியப்பர் பால் கட்டி பிரசாதம்" அகத்தியர் அடியவர்களுக்கு வந்து சேர்ந்திருக்கும் என நினைக்கிறேன். மேலும் ஒரு சிலருக்கு இனிமேல்தான் வந்து சேரும். தூரத்தில் உள்ள அடியவர்கள் பலரும், இன்னும் கிடைக்கவில்லை என்று மெயில் அனுப்பியிருந்தனர். கிடைக்காதவர்கள், மெயிலில் தெரிவித்தால், மறுபடியும் அவர்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறேன்.

இந்த பிரசாதமானது ஓதியப்பர், அகத்தியர் அருளினால், உங்களுக்கு கிடைத்திருக்கிறது. அடியேன், உங்கள் இருவருக்கும் இடையில் நின்று பிரசாதத்தை வாங்கி உங்களிடம் கொடுக்கிற வேலையை செய்தேன் என்பது மட்டும் உண்மை. அந்த வேலையையும், அவர்களே செய்வித்தார்கள், என்பதுதான் சரி. "இதை செய், இதை கொடு" என்று உத்தரவு வந்து புரிந்துவிட்டால், பின்னர் ஒரு பொழுதும் எதையும் எதிர்பார்ப்பதில்லை அடியேன். எதிர்பார்ப்பது என்பதே வாழ்க்கையில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். செய்வதை செய்துவிட்டு, போய்க்கொண்டே இருக்கவேண்டும் என்கிற எண்ணம், அடியேனுடையது.

பிரசாதம் அனுப்புவதற்கான செலவை, திருப்பி தருவதாக பலரும் அடியேனிடம் கூறி இருந்தார்கள். மிக உயர்ந்த பரம்பொருள், உங்கள் அனைவருக்கும், ஒரு அருளை தர விரும்பியது உண்மை. அதற்கு பிரதி உபகாரம் என்பது என்றுமே இல்லை. மனிதன், இறையை உணர்ந்து மேலேறவேண்டும், உள்ளிருக்கும் வாசனைகள், நீர்த்துப்போய், விரைவாக வாழ்க்கையை கடந்து செல்லவேண்டும். அதற்காக, இறைவன் ஏற்பாடு செய்து தந்த ஒரு சிறு பரிசு என இதை வைத்துக்கொள்ளுங்கள்.

சரி! ஏதேனும் ஒரு நல்ல விஷயம் செயலில் கொண்டு வரவேண்டி விழைபவர்களுக்கு, அடியேன் ஒன்று கூறிக்கொள்கிறேன். ஒரு வேளை உணவு, ஏதேனும் சாதுக்களுக்கோ, பசிப்பவர்களுக்கோ வாங்கி கொடுத்து உங்கள் மனதை திருப்தி படுத்திக் கொள்ளுங்கள். இதுவன்றி, அடியேனுக்கு எதுவும் வேண்டாம்.

இந்த பிரசாதத்தை, உள்ளுக்கு சாப்பிட்டு, அம்பாளின் அருளையும், ஓதியப்பரின் ஞானத்தையும் பெற்றுக்கொள்வதற்காக, உங்களுக்கு அளிக்கப்பட்டது. இறை உள்புகுந்து, அனைத்தையும், உங்களுக்கு புரியவைக்கும். இனி, கோடகநல்லூர் அகத்தியர் பூசையை தொடருவோம்.]

அகஸ்தியர் பூஜைக்காக நிறையவே சாமான்கள் வாங்கவேண்டி இருந்தது. திருநெல்வேலி டவுண் சென்று, ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்து வாங்கிட, நேரம் போனதே தெரியவில்லை. சரியான நேரத்தில், மழை பலமாக பிடித்துக் கொண்டது. எங்கும் நகர முடியாதபடி, வெள்ளப்பெருக்கு. திடீரென்று நினைவுக்கு வர, நாளையும் இதே போல் மழை பெய்தால், அகத்தியர் அடியவர்கள் எப்படி வருவார்கள். பூஜை நல்ல படியாக நடக்க வேண்டுமே! என்ற எண்ணம் உதித்தது.  பெருமாளிடம் முறையிடுவதை விட, நம் குருநாதரிடமே சொல்லிவிடுவோம், எனத்தோன்றியது. மனதுள் அகத்தியப் பெருமானை தியானித்து, "அய்யனே! நீங்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். ஏற்கனவே பிரச்சினைகள் நிறைய ஓடிக்கொண்டிருக்கிறது. இதனுடன், வருண பகவானும், தன் பங்குக்கு மிரட்டுகிறார். சரி போகட்டும், நீங்கள் நடத்தும் பூஜை மிக சிறப்பாக இருக்க பார்த்துக்கொள்வீர்கள் என அடியேனுக்கு தெரியும். இருந்தாலும் நீ ஏன் பிரார்த்தனையை வைக்கவில்லை என உங்களிடம் ஒரு கேள்வி எழக்கூடாது என்பதற்காக, இந்த பிரார்த்தனையை சமர்ப்பிக்கிறேன். இப்பொழுது பெய்கின்ற மழை பெய்யட்டும். ஆனால், நாளை காலையில், இந்த மழை கோடகநல்லூருக்கு வரும் அகத்தியர் அடியவர்களுக்கு சிரமத்தை கொடுக்கக்கூடாது. அதை நீங்கள் அருள வேண்டும்" என பிரார்த்தித்துவிட்டு, வாங்கிய பூசை சாமான்களுடன், இரவு 11 மணிக்கு கோடகநல்லூர் வந்து சேர்ந்தோம்.

அடியேன் குழுவுடன் தங்கியிருந்த வீட்டில், அகத்தியர் அடியவர் திரு ஸ்வாமிநாதன் காத்துக்கொண்டிருந்தார்.

"என்ன? கல்லிடைகுறிச்சியில் தங்கிவிட்டு, காலை பூஜைக்கு முன் வருவதாக கூறி சென்றீர்கள்! இப்பொழுது, இந்த நேரத்தில் இங்கிருக்கிறீர்களே!" என்றேன்.

"அங்கு சென்றதும் என்னவோ தோன்றியது! இந்த மழை நீடித்து, காலையில் நான் வர தாமதித்துவிட்டால், நினைத்தது நடக்காது. ஆதலால், அகத்தியர், லோபாமுத்திரை விக்கிரகத்தை இங்கு கொண்டு வந்துவிட்டேன்." என்றார்.

"என்ன? விக்கிரகங்களை எங்கே வைத்தீர்கள்?" என்றேன்.

"இங்கு உள்ளே, பூஜை அறையில் வைத்திருக்கிறேன். நீங்கள் ஒன்று செய்துவிடுங்கள்.  காலையில், நீங்கள் நீராட செல்லும் பொழுது, இவர்கள் இருவரையும் அழைத்துச்சென்று, அபிஷேக ஆராதனைகளை நீங்கள் நதிக்கரையில் செய்துவிடுங்கள். கோவிலில் பூஜை முடிந்து, திரும்பி செல்லும் பொழுது நான் வாங்கிக்கொள்கிறேன்!" என்றாரே பார்க்கலாம்.

"இல்லை! அது நீங்கள் தினம் அபிஷேக பூசை செய்து வந்த விக்கிரகம்! அடியேன் அதை தொடுவது சரியல்ல. நீங்களே நேரத்துக்கு வந்து அபிஷேக பூஜையை செய்துவிடுங்கள்" என்றேன்.

ஒரு பஞ்சலோக விக்ரகமானது, தனிப்பட்ட ஒருவரின் பராமரிப்பில், அவர் கைப்பட தொட்டு பூசை செய்யும் பொழுது, அவரின் அதிர்வலைகளை உள்வாங்கி , அவரின் மனநிலைக்கு ஏற்ப, அது பிறருக்கு, நல்ல அதிர்வலைகளை கொடுக்கும். புதிதாக ஒருவரின் ஸ்பர்சம் படும்பொழுது, அதன் தன்மையில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். அது எவ்வளவு தூரம் நல்லதாகவே செய்யும் என அடியேனால் உணர முடிவதில்லை, இன்று வரை. அதனால் வேண்டாம் என மறுத்தேன்.

அவர் விடுவதாக இல்லை.

நிறைய வற்புறுத்தியத்தின் பேரில், சரி என சம்மதிக்க வேண்டி வந்தது.

அவரும் நிம்மதியாக கல்லிடைக்குறிச்சி புறப்பட்டு சென்றார்.

அந்த வீட்டு மாமி வந்து "யாரோ ஒருவர், உங்கள் நண்பர் எனச்சொன்னார். அகஸ்தியர், லோபா முத்திரை விக்கிரகத்தை பூசை அறையில் வைத்திருக்கிறார். உங்களுக்கு தெரியும் என்று சொன்னார். எனக்கும் ரொம்ப பிடித்துப்போனது. ஆதலால், விளக்கேற்றி வைத்து, பால், பழம் நிவேதனம் செய்தேன். அதிலொன்றும் தவறில்லையே?" என்றார்.

"உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என நினைத்துக்கொள்ளுங்கள். செய்ததெல்லாம் சரிதான்" என்றேன்.

அடுத்தநாள் (22/10/2018), அதிகாலையில் 4 மணிக்கு எழுந்து, டவுனுக்கு சென்று பூமாலை, பூக்கள், போன்றவை வாங்கி வராகி சென்றேன். அதற்கு முன், இரு அகத்தியர் அடியவர்களிடம் சிவபெருமான் கோவிலில் அன்றைய தினம் ஸ்வாமிக்கு அபிஷேக ஆராதனைக்கான விஷயங்களை கொடுப்பதற்கு ஏற்பாடு செய்தேன். எல்லா வருடமும், அகத்தியப்பெருமானின் இந்த பூஜை நாளில், சிவபெருமானை ஒரு பொழுதும் மறந்ததில்லை. ஏன் என்றால், பெருமாள் கோவில் இருக்கும் எந்த ஊரிலும், சிவபெருமான் கோவில் இருக்கும். சிவபெருமான்தான், பெருமாள் கோவிலின் ஷேத்ரபாலகர். பெருமாள் கோவிலின் மொத்த உரிமையும், நடக்கிற விஷயங்களை கட்டுப்படுத்துவதும், ஒரு க்ஷேத்ர பாலகரின் கடமை.

பூஜை சாமான்களை கொடு கொடுத்ததும், சிவபெருமான் கோவில் பூசாரி "வாங்க! உங்களைத்தான் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்!" என்றார்.

அடியவர்கள் பூஜை சாமான்களை கொண்டு வந்த காரணத்தை கூற முற்பட, அவர்களை கை கட்டி நிறுத்தி, "எனக்கு தெரியும். இன்று பெருமாள் கோவிலில் அகத்தியர் அடியவர்களின் பூஜை! முதல் மரியாதையாக, அப்பனுக்கு பூஜை சாமான்களை அகத்தியர் சார்பாக கொண்டு வந்திருக்கிறீர்கள்!" என பூசாரி கூறிவிட்டு, ஒரு சிறு புன்னகையுடன் வாங்கிக்கொண்டார்.

நடந்ததை பின்னர் கேட்ட பொழுது "ஹ்ம்ம்! எல்லாம் அவர் ஏற்பாடுதான்! நடக்கட்டும்" என்று தோன்றியது.

கோடகநல்லூர் பெருமாள் கோவில் அர்ச்சகரை வெளி பிரகாரத்தில் சந்தித்து, பெருமாள், தாயார், அனைத்து தெய்வ மூர்த்தங்களும் வாங்கின வஸ்திரங்களை கொடுத்து, "எல்லோருக்கும் சார்த்திவிடுங்கள், அடியேன் போய் ஸ்நானம் செய்து வருகிறேன்" என்றபடி, வெளியில் நின்றே பெருமாளை தரிசனம் செய்தேன்.

சட்டென பெருமாளிடம் கூற வேண்டும் என்று தோன்றியது.

மனதுள் கூறினேன்.

"சென்ற வருடம், அடியேன் ஒரு வேஷ்டி வாங்கி தந்த பொழுது, அதை கருடாழ்வாருக்கு உடுத்தி அழகு பார்த்தீர். கடைசி நேரத்தில், தான் அடியேன் தவறை உணர்ந்தேன். ஆதலால், இந்த முறை உங்களுக்கும், கருடாழ்வாருக்கும் ஒரே போல வேஷ்டி வாங்கியிருக்கிறேன். இப்ப என்ன விளையாடறீர்னு பார்க்கிறேன்" என்று கூறினேன்.

சென்ற வருடம் (2017)இல் என்ன நடந்தது?

பெருமாளுக்கென, தேடித் தேடி பெரிய நூல் ஜரிகை போட்டு, சங்கு, சக்கரம், திருமண் போட்ட வஸ்திரத்தை வாங்கி அர்ச்சகரிடம், கொடுத்திருந்தோம்.

முதல் நாள் இரவு, ஒரு பக்தரின் கனவில் தோன்றி, "இன்று கோடகநல்லூரில் எனக்கு திருவிழா. உன் சார்பாக, எனக்கு வேஷ்டி வாங்கித்தா!" என பெருமாள் உத்தரவிட, அதிகாலை ப்ரம்ம முகூர்த்தத்தில், உதறிப்போட்டபடி, தூக்கத்தை கலைத்தார், அந்த திருநெல்வேலிக்காரர். இதில் ஆச்சரியம் என்னவென்றால், கோடகநல்லூர் எங்கிருக்கிறது என அவருக்கு தெரியாது . யாரிடமோ விசாரித்து, இடத்தை அறிந்து, ஒரு கடைக்காரரை வீட்டில் சென்று விஷயத்தை கூறி, காலை 7 மணிக்கே கடையை திறக்க வைத்து, வஸ்திரத்தை வாங்கி, கோவில் வந்து சேர்ந்தார்.

கோடகநல்லூர், வந்தவர், "இங்கே யார் இருக்கப் போகிறார்கள் இந்த நேரத்தில்" என நினைத்து உள்ளே கால் வைத்ததும், அங்கு நிறைய பேர், ஒரு திருவிழா கூட்டமே இருந்திருக்கிறது.

எதுவும் புரியாமல், மெதுவாக உள்ளே சென்று கடைசி தூண் பக்கத்தில் பெருமாளை பார்த்தபடி, காத்திருந்தார்.

அர்ச்சகர், அடியவர்கள் குழு வாங்கிக் கொடுத்த வேஷ்டியை கையில் எடுத்து உள்ளே பெருமாளை நோக்கி நடக்கவும், முதல் முறையாக கைதவறி கீழே விழுந்தது, முதல் தூண் அருகில். சரி, போகட்டும் என, அதை கீழிருந்து எடுத்து மறுபடியும் நடக்க, மூன்றாவது தூண் அருகில் வந்ததும், மறுபடியும் கைதவறி விழுந்தது.

நன்றாக நடக்கிற விஷயங்களை உணர்ந்த அவர், பெருமாளை ஏறிட்டு பார்த்தபடி, ஒரு அடி எடுத்து வைக்க, நான்காவது தூணுக்கு பின் இருந்து வெளிப்பட்ட அந்த பக்தர், "அய்யா! இந்தாருங்கள் வேஷ்டி! பெருமாள் கொண்டுவந்து கொடுக்கச் சொன்னார்! அவருக்கு சார்த்தி விடுங்கள்!" என்று அர்ச்சகர் முன் நீட்டினார்.

அவர் கொடுத்த வேஷ்டியையும், ஜரிகை போட்ட வேஷ்டியையும், பெருமாள் முன் கொண்டு சென்று காட்டி, என்ன செய்ய? என அர்ச்சகர் வினவ, அவருக்கு உத்தரவு வந்தது. அந்த உத்தரவை அறிந்த அந்த நொடியில், "அந்த நாள் >> இந்த வருடம்" அகத்தியர் பூசையின் உண்மையான விஸ்வரூபம், அடியேனுக்கு தெரிவிக்கப்பட்டது, உண்மையை உணர்ந்தேன்.

சித்தன் அருள்................. தொடரும்!




Thursday 22 November 2018

சித்தன் அருள் - 779 - கோடகநல்லூர் - அந்தநாள்>>இந்த வருட நிகழ்ச்சிகள் - 4


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

[ஓதியப்பரின் "பால் கட்டி பிரசாதம்" வேண்டி நிறைய அகத்தியர் அடியவர்கள் கேட்டிருந்தார்கள். அதை எடுத்து, தபால் துறை வழி அவர்கள் விலாசத்துக்கு அனுப்புகிற வேலை அடியேனை ஆட்கொண்டது. அடியேனின் நண்பர்களும் இதற்கு உதவினார்கள். மேலும் இரண்டு முறை, வெளியூர் செல்ல வேண்டிய அவசியம் வந்ததாலும், இரு வாரங்களாக தொகுப்பை அளிக்க முடியவில்லை. இன்று கோடகநல்லூர் சம்பவங்களை தொடரலாம்.]

அக்டோபர், 20ம் தியதி இரவு 11 மணிக்கு நான்கு அகத்தியர் அடியவர்களுடன் கோடகநல்லூருக்கு பயணத்தை தொடங்கினோம். எப்பொழுதும், மிக உயர்ந்த விஷயங்களில் பங்குபெற செல்லும் முன் எங்கள் ஊரிலுள்ள, ஒரு பிள்ளையார் கோவில் சென்று அவரிடம் விண்ணப்பித்துவிட்டு, பயணத்தை தொடருவோம். கூடவே ஒரு தேங்காயை சதிர் வடலாக கொடுத்துவிட்டு நன்றி சொல்லுவதும் உண்டு. இந்த முறை, பிள்ளையாருக்கு தேங்காயை சமர்ப்பித்ததும், நிறைய தடங்கல்கள், காத்திருப்பதாக ஒரு உள்ளுணர்வு வந்தது.

இப்படி உணர்வு வந்ததும், கோவிலை திரும்பி பார்த்து, "எல்லாம் உன் செயல், அனைத்தையும் சரி பண்ணிக்கொடு" என்று வேண்டிக்கொண்டு யாத்திரையை தொடர்ந்தோம்.

அதிகாலை 3 மணிக்கு திருநெல்வேலி சென்றடைந்ததும், ஒரு தீர்மானம் எடுத்தேன். அனைவரையும் அழைத்துக்கொண்டு, ஒரு உறவினர் வீட்டில் சற்று ஓய்வெடுத்தபின், 9.30க்கு கோடகநல்லூர் வந்து சேர்ந்தோம்.

கோடகநல்லூர் சிவபெருமான் கோவில் சார்பாக தாமிரபரணி புஷ்கரம், நடந்து கொண்டிருந்ததால், நல்ல கூட்டம். அடியேனுக்கு தெரிந்த ஒரு அம்மாவின் வீட்டில் பூசைக்கு கொண்டு போன சாமான்களை வைத்துவிட்டு, நதிக்கரை சென்று ஸ்நானம் செய்தோம். மிக ஆனந்தமான ஸ்நானம். பின்னர், கோவில் சென்று சிவபெருமானை, அம்பாளை தரிசித்துவிட்டு, பெருமாள் கோவிலுக்கு வந்தோம், உழவாரப்பணி நிறைய காத்திருந்தது. புஷ்கரணிக்கு வந்த பக்தர்களால், கோவில் உள்-பிரகாரமும், சுவாமி சன்னதியும், நிறையவே சுத்தம் பண்ணவேண்டிய நிலையில் இருந்தது.

திரு.ஸ்வாமிநாதன், பாண்டிச்சேரி அடியேனின் நண்பர், தன்னுடன் ஒரு 9 அகத்தியர் அடியவர்கள் கொண்ட குழுவை உருவாக்கி,  உழவாரப்பணிக்காக அழைத்து வந்திருந்தார். அடியேனுடன் இருந்த நால்வரும், அவர்களுடன் சேர்ந்து உழவாரப்பணிக்காக தயாராயினர்.

முதலில் பெருமாளை தரிசித்து, அர்ச்சகரிடம், "வந்துவிட்டோம் நாங்கள், நாளைய பூசைக்காக" என்று கூறி, உழவாரப்பணியை தொடங்க அனுமதி வேண்டி நின்றேன்.

நிறைய நேரம் வேண்டி வரும் என்பதால், உடனேயே வேலையை தொடங்க தீர்மானித்தோம். முதலில் பிரகாரத்தில் உள்ள மண்டபம், நினைவில் வந்தது. சற்று அகலமாக இருக்கும். கீழிருந்துதான் சுத்தம் செய்ய வேண்டும். மேலே ஏறக்கூடாது என்று கூறிவிட்டேன்.

மண்டபத்தில் இருந்த வலை, தூசி போன்றவற்றை பெருக்கி சுத்தம் செய்தபின், அதன் நடுவில் சிந்தியிருந்த எண்ணை படிமானத்தை சுத்தம் செய்ய நிறையவே சிரமப்படவேண்டி வந்தது. இதற்கிடையில், ஒருவர், மேலே ஏறி செய்தால், எளிதாக இருக்கும் என்றார். அவருக்கு புரியவில்லையாததால், தெளிவிக்க வேண்டி வந்தது.

"அந்த மண்டபம் என்பது, பெருமாள் இந்த இடத்துக்கு வந்த பொழுது, அமர்ந்த இடம். இங்கேயேதான் இருப்பேன் என்று அவர் அடம்பிடித்தார். பின்னர் சித்தர்கள், குறிப்பாக, அகத்தியப்பெருமான், வேண்டிக் கொண்டதற்கு இணங்க, உள்ளே, இப்பொழுது சன்னதி இருக்கும் இடத்திற்கு, இடம் பெயர்ந்தார். இப்பொழுது புரிகிறதா? பெருமாள் அமர்ந்த அந்த இடத்தை, நாம் நம் கால்களால் மிதிக்கக்கூடாது என்பதாலேயே, கீழிருந்து சுத்தம் பண்ணுங்கள் என்றேன்" என விவரித்தேன்.

உணர்ந்த அகத்தியர் அடியவர்கள், இரு மடங்கு வேகத்தில் வேலை பார்க்கத் தொடங்கினார்கள். மண்டபத்தை நான்கு பக்கத்திலிருந்தும் நீர் விட்டு சுத்தம் பண்ணி, நீரை ஓடை வழியாக வெளியேறச்செய்து, பிரகாரத்தை, பெருக்கி கூட்டி, அங்கும் நீர் விட்டு சுத்தம் செய்தனர். அடியேன் ஏதேதோ சின்ன சின்ன வேலைகளை செய்து கொண்டிருந்தேன். மண்ணை பெருக்கி சுத்தம் செய்யலாம் என்றால், ஒருவர் ஓடி வந்து, "நான் செய்கிறேன். நீங்கள் விலகுங்கள்" என்று கூறி தொடப்பத்தை வாங்கி கொண்டு விடுவார். சற்று பொறுமையாக அவரிடம் அந்த வேலையை கொடுத்த பின், கூட்டம் சற்று குறைந்தது போல் இருந்ததால் அர்ச்சகரை பார்த்து என்னென்ன ஏற்பாடுகள் செய்திருக்கிறோம். பூசை எப்படி அமையவேண்டும் என்று பேசிவிடலாம் என்று, உள்ளே சென்றால், பெருமாள் முன் உள்ள அறை முழுவதும், திட்டுத்திட்டாக மண்ணும், நீரும் கெட்டி கிடந்தது.

"என்ன சுவாமி இது. இந்த இடம் இப்படி ஆகிவிட்டது?" என்றவுடன்,

"என்ன செய்ய! புஷ்கரத்துக்கு வந்து நீராடிவிட்டு, அந்த நனைந்த வஸ்திரத்துடனேயே உள்ளே வந்து ஸ்வாமியை தரிசனம் செய்பவர்கள் கொண்டு வந்து போட்டது. உங்கள் வேலையினூடே, இங்கும் சுத்தம் பண்ணி தாருங்களேன்" என்றார்.

"என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள்! நானே, இங்கு சுத்தம் பண்ணலாமா? அதற்கு அனுமதி உண்டா? எனக்கேட்கலாம் என்றுதான் வந்தேன்" என்றேன்.

"அதற்கு என்ன. இங்கும் சுத்தம் செய்துவிடுங்கள்" என்றார்.

"நீங்கள் வீட்டுக்கு போகும் பொழுது, உள் சன்னதியை பூட்டி, இந்த அறையை திறந்து வைத்து விட்டு போய் வாருங்கள்! மாலை வரும் பொழுது சுத்தமாக இருக்கும்" என்றேன்.

அவரும் உடனேயே, வீட்டுக்கு கிளம்பினார். முதலில், அடியேனே, தனியாக அல்லது ஒருவரை துணைக்கு அழைத்து செய்து விடலாம் என்று தீர்மானித்தாலும், விஷயத்தை சொன்னதும் வேறு மூன்று அடியவர்கள் நாங்கள் செய்கிறோம் என்று முன் வந்தார்கள்.

சரி, நீங்களே செய்துவிடுங்கள். அத்தனை மண்ணும், நீரும் இங்கிருந்து வெளியேற்றி விடவேண்டும். மாலை அர்ச்சகர் வரும் பொழுது, இதுதான் நாள் காலை பார்த்த இடமா? என்று கேட்கும்படி இருக்க வேண்டும், என்றேன்.

உள்ளே வேலைக்கு சென்று தொடங்கியபின்தான், அந்த வேலையின் கடினம் புரிந்தது. தண்ணீரை, ஒற்றி எடுத்து விடலாம். மண், ஆற்று படுக்கையில் கடினமாக கிடப்பதுபோல் அமர்ந்திருந்தது. எத்தனை முறை கழுவியும் அசையவே இல்லை.

ஒரு பரந்த தடியை கொன்டு வந்து, மண்ணை கிளறி விட்டு மேலும் நீர் விட, அனைத்தும் வரத்தொடங்கியது.  இடம் மிக மிக சுத்தமானது.

இதற்குள் கோவில் வெளி பிரகாரத்தில் உழவாரப்பணி நிறைவு பெற்றது. மாலை வந்து பார்த்த அர்ச்சகர், அசந்து போனார்.

"என்ன! ரொம்ப நன்றாக மாற்றிவிட்டிர்களே! பிரகாரமும், பெருமாள் இருக்கும் இடமும் மிக மிக சுத்தமாகி பளபளக்கிறதே! பெருமாள் சார்பாக உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

"பெருமாளே! உன் குழந்தைகள் எல்லோரும், எவ்வளவு சீராக வேலை பார்த்திருக்கிறார்கள். அவர்களை சீரும் சிறப்புமாக வாழ ஆசிர்வாதம் பண்ணு" என்று கூறிக்கொண்டே உள்ளே சென்றார்.

அடியேன் திரும்பி அடியவர்களை பார்த்து "இது போதுமா! இல்லை பெருமாள் இறங்கி வந்து "தேங்க்ஸ்"னு சொல்லி கை குடுக்கணுமா" என்று கேட்டேன்.

"இதுவே அதிகம். பெருமாளை அங்கிருந்து இறங்கி வர வேண்டாம் என்று கூறிவிடுங்கள்" என்றனர் கிண்டலாக.

அகத்தியர் அடியவர்களால், கோவில் பிரகாரம் மிக மிக சுத்தமாக்கப்பட்டது.

உழவரப்பணியை இதற்கு முன் பல கோவில்களில் செய்திருந்தாலும், இங்கு செய்தது மிக நிறைவை தந்தது. அது அங்கு வந்திருந்த அகத்தியர் அடியவர்களின் முயற்சி. அடியேனின் முயற்சி என்று ஒன்றுமே இல்லை. உழவாரப்பணி என்பதை ஒருவன்/ஒருவள் செய்தாலும், அந்த நபர், தனக்கென அதை செய்வதில்லை. அதன் பலன் பிறருக்குத்தான் செல்கிறது. செய்தவர் வேண்டுமானால், அமர்ந்து, நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாம். உழவாரப்பணி என்பது தன்னைவிட்டுவிட்டு, பிறருக்காக செய்கிற விஷயம் என்பதால், சித்தர்கள் என்றுமே அதை ஆசிர்வதித்தனர். அந்த நிலையில் நிரந்தரமாக, மனசாலோ, உடலாலோ அர்ப்பண மனோபாவத்துடன் செய்கிற ஒருவன்/ஒருவள், சித்த மார்கத்தினுடே, இறைவனை அடைய தகுதி உள்ளவர்களாக மாறுகின்றனர்.

ஞாயிறன்று, உழவாரப்பணி செய்த, திரு ஸ்வாமிநாதன், அவர் மனைவி சித்ரா, மனோ, உமா (போரூர்), ராகேஷ், ராகினி, ரஞ்சித், சங்கர், ராஜேஷ், மற்றும் அடியேனின் குழுவில் இருந்த அகத்தியர் அடியவர்களுக்கும், அகத்தியர் சார்பாகவும், பெருமாள் சார்பாகவும், "சீரும் சிறப்புமாக வாழ்க்கை" அமைய வேண்டிக்கொள்கிறேன். வாழ்க்கை எல்லாம் நிறைந்ததாக இருக்கும் எனவும் கூறுகிறேன்.

வேலை எல்லாம் முடிந்து நாளை பூசைக்கு வருவதாக கூறி ஒரு சிலர் கிளம்ப, சற்று ஓய்வெடுக்கலாம் என கோவில் திண்ணையில் அமர்ந்து அடியவர்களுடன் பேசிக்கொண்டிருக்க திடீரென்று ஒரு எண்ணம் உதித்தது.

இன்று ஞாயிற்று கிழமை ஆயினும், இத்தனை சுத்தமாக இருக்கும் பிரகாரத்தில் சுற்று விளக்கு போட்டால் நன்றாக இருக்குமே. ஒரு அரை மணி நேரத்தில் அதற்கான பொருட்களை கொண்டு வந்துவிடலாம், என நண்பரிடம் கூற, அவரும் போய் வாங்கி வரலாம் என்றார்.

"ஒரு ஐந்து நிமிடம் நில். நான் வெற்றிலை போட்டுக்கொண்டு வருகிறேன்" எனக்கூறி வெற்றிலையை எடுக்க, யாரோ வந்து என்னாவோ கேள்வி கேட்டார்கள். அவர்களிடம் ஏதோ பேசிக்கொண்டிருக்கும் பொழுது, ஒரு பெண்மணி நின்று "வணக்கம்" என்று கூறினார்கள்.

"வாங்க! வணக்கம்! என்ன விஷயம்?" என்றேன் அமைதியாக.

"நான் சென்னையிலிருந்து வருகிறேன். நீங்கள் சொன்னபடி விளக்கு போடலாமென்றிருக்கிறேன்!" என்றாரே பார்க்கலாம்.

"அட! நான் ஐந்து நிமிடத்தில் கிளம்பி போய் விளக்கு போட சாமான்களை வாங்கி வரலாம் என்று, இப்பொழுதுதான் நினைத்தேன். அது பெருமாளுக்கு கேட்டுவிட்டது போலும். பாருங்க உங்களை பேச வைத்து "விளக்கேற்றுகிற பாக்கியத்தை வேறு ஒருவருக்கு கொடுத்துள்ளேன்" என சொல்லாமல் சொல்கிறார். நல்லது நடக்கட்டும். யார் விளக்கு போட்டால் என்ன. அவர் மனம் கனிய வேண்டும். அவ்வளவுதான்" எனக்கூறி விலகி நின்றேன்.

திடீரென, ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த சமையல்காரரின் நினைப்பு வர, அவரை நினைவுபடுத்த கூப்பிட்டால், கிடைக்கவில்லை. பத்து முறை கூப்பிட்டும் எடுக்காததால், மனது சற்று கடினமானது. அகத்தியர் பூசைக்கான தினத்தில், சமையல்காரரின் பங்கு மிக முக்கியமானது. அவர் வராமல் போய்விட்டால் எனன செய்வது? என்ற எண்ணம் உதிக்கவே, உடனேயே ஒரு உறவினரை கூப்பிட்டு அவரை தொடர்பு கொண்டு நிலை என்ன என தெரிந்து சொல்லுங்கள், என்றேன்.

அடுத்த பதினைந்தாவது நிமிடம், பதில் வந்தது. சமையல்காரருக்கு உடல் நிலை சரி இல்லை! அவர் மருத்துவமனையில் உள்ளார் என்று.

கடுப்பாகிவிட்டது, அடியேனுக்கு! நேராக திறந்திருந்த சன்னதிக்குள் சென்றேன். பெருமாள் சிரித்துக் கொண்டு நிற்பது போல் தோற்றம்.

சற்று நேரம் அவரையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு மனதுள் "நேற்று கிளம்பும் பொழுதே பிள்ளையாரப்பன் காட்டி கொடுத்துவிட்டார், தடங்கல்கள் இருக்கிறதென்று. நீர் வைத்த முதல் தடங்கல் இதுதான் என புரிகிறது. இந்த மாலை வேளையில், இனி வேறு ஒரு சமையல்காரரை தேட முடியாது. நீ என்ன செய்வாய் எனத்தெரியாது. நாளைக்கு காலையில், அந்த சமையல்காரர் உடல் நிலை சரியாகி, இங்கிருக்க வேண்டும். இல்லையெனில், அடியேன் சமையல் வேலைக்கு இறங்க வேண்டிவரும். அது தேவையான்னு யோசிச்சுக்கோ" என சொல்லிவிட்டு வெளியே வரவும், மடப்பள்ளி வரை சென்றுவிட்டு அர்ச்சகர் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அவரிடம் "சமையல்காரருக்கு உடம்பு சரியில்லை. ஆனா அவர் நாளைக்கு பெருமாளுக்கு நிவேதனம் செய்ய இங்கிருக்க வேண்டும். நீங்களும் பெருமாளிடம் கூறிவிடுங்கள்" எனக்கூறிவிட்டு பதிலை எதிர் பார்க்காமல், ஒரு சில விஷயங்களை வாங்க வேண்டியிருந்ததால், வண்டியில் திருநெல்வேலியை நோக்கி கிளம்பினோம். 

சித்தன் அருள்.................. தொடரும்!





Tuesday 6 November 2018

சித்தன் அருள் - 778 - இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப்பெருமானின் அருள் பெற்ற அனைத்து அடியவர்களுக்கும், அவர் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அகத்தியப் பெருமானின் சித்தன் அருள் வலைப்பூவின்  "இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்". அகத்தியப்பெருமான், லோபாமுத்திரை தாயின் அருள் பெற்று இனிதே வாழ்ந்திட வேண்டிக் கொள்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

சித்தன் அருள் .............. தொடரும்!

Sunday 4 November 2018

சித்தன் அருள் - 777 - கோடகநல்லூர் - அந்தநாள்>>இந்த வருட நிகழ்ச்சிகள் - 3

[கிரௌஞ்சகிரி ஓதியப்பர் சன்னதி]

[கிரௌஞ்சகிரி பார்வதி சன்னதி. இந்த சன்னதியில்தான் "பால் கட்டி" வைத்திருப்பார்கள். இலவசம்! யார் வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.]

அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!

அகத்தியப்பெருமானின் பெருமாளுக்கான பூசை தினத்தன்று "முருகர் பிரசாதம்" என அகத்தியர் அடியவர்களால், கோடகநல்லூருக்கு வந்திருந்த அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்ட "பால் கட்டி" கிரௌஞ்சகிரி என்கிற மலையிலிருந்து, ஓதியப்பரால் ஏற்பாடு செய்யப்பட்டு, தருவிக்கப்பட்டது, என்பதே உண்மை. இந்த கிரௌஞ்சகிரி, கர்நாடகா மாநிலத்தில், ஹோஸ்பெட் என்கிற இடத்திலிருந்து 32 கி.மீ தூரத்தில் உள்ளது. செந்தூர் என்கிற கிராமத்தின் எல்லையில் அமைந்துள்ளது.


ஒருநாள், மாலை, வீட்டில் ஓதியப்பரின் அருகில் அமர்ந்து மனதில் தோன்றிய விஷயங்களை சமர்ப்பித்துக் கொண்டிருக்கும் பொழுது, இந்த கிரௌஞ்சகிரி பால் பிரசாதம் ஞாபகம் வந்தது. உடனேயே, ஓதியப்பரிடம் கீழ்கண்ட விண்ணப்பத்தை சமர்ப்பித்தேன்.

"ஓதியப்பா! ஐப்பசி, உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று, பெருமாளுக்கு, அகத்தியப்பெருமான் அபிஷேக ஆராதனைகளை செய்வார். அன்றைய தினம், நிறைய அகத்தியர் அடியவர்கள் அங்கு வருவார்கள். அவர்களுக்கு கொடுப்பதற்கென்று, உன் பால் பிரசாதம் வேண்டும். அடியேனால் 1500 கீ.மீ பயணம் செய்து வர முடியாது. அது உனக்கு நன்றாகத் தெரியும். ஆகவே, ஏதாவது, ஒருவரை தூண்டிவிட்டு, வரவழைத்து, உன் பிரசாதத்தை கொடுத்தனுப்பேன். தாமிரபரணி புஷ்கரமும், அந்த நேரத்தில் நடப்பதால், நிறைய பக்தர்கள் வருவார்கள். ஆதலால், உன் பிரசாதமும் நிறைய வேண்டிவரும். உனக்கு எது சரின்னு தோன்றுகிறதோ, அதை செய்து கொடு! ஆனால் இனிமேல் இதைப்பற்றி உன்னிடம் கேட்க மாட்டேன். அடியேன் எண்ணம் சரியானது என்றால், உதவி செய். உன் ஞானமும், அம்மையின் சக்தியும், அதை அருந்துபவர்களுக்கு கிடைக்க வேண்டும்" என்று முடித்துக் கொண்டேன். பின்னர், அதைப்பற்றி யோசிக்கவே இல்லை.

12/10/2018 அன்று அடியேனின் ஒரு நண்பர், வெளி நாட்டில் இருப்பவர், பெங்களூரு வந்து சேர்ந்துவிட்டதாக தெரிவித்தார். மேலும், அவர் குடும்பத்துடன், திருப்பதி செல்வதாகவும், ஏதேனும் ஒரு முருகர் கோவிலுக்கும் செல்லவேண்டும் என விருப்பப் படுவதாகவும் தெரிவித்தார். ஏதேனும் ஒரு முருகர் கோவிலை காட்டித்தரும்படியும், வேண்டுதல் வைத்தார்.

அதைக் கேட்ட பொழுது, "ஹ்ம்! இவரை ஓதியப்பர்தான் ஏற்பாடு செய்து தந்துள்ளார். எதற்கும், கிரௌஞ்சகிரி வரை போய் வர முடியுமா? என விசாரிக்கலாம்" என நினைத்து விஷயங்களை கூறினேன்.

உடனேயே, அடியேன் நண்பர் போய்வருவதாக ஒத்துக்கொண்டார்.

ஒரு சின்ன உறுத்தல் இருந்தது. அதையும் அவரிடம் கூறினேன்.

"அங்கே போய் ஓதியப்பரை பார்த்ததும், எனக்கு வாழ்க்கையில் எதுவுமே வேண்டாம். ஓதியப்பா நீ மட்டும் போதும். நான் இங்கேயே இருந்து விடுகிறேனே" என கேட்கத் தோன்றும். அந்த எண்ணம் எல்லாம் கூடாது. உனக்கு குடும்பம் இருக்கிறது. தரிசனம் முடிந்ததும், அடம் பிடிக்காமல் கீழே இறங்கி வந்துவிட வேண்டும். சம்மதமா!" என கூறினேன்.

"ஓ! அப்படியா! அவ்வளவு அழகாக, ரம்மியமாக இருக்குமா. சரி நான் போகும் பொழுது, என் குடும்பத்தையும் கூட்டிக் கொண்டு போகிறேன். எல்லோரும் கண்டு உணரட்டும்" என்றார்.

அவர் மனைவி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு செல்கிறேன் என்றதால், அந்த நெருடல், என்னுள் இருந்து விலகியது.

"பால் கட்டியை" பற்றி விவரித்தேன். எங்கே கிடைக்கும், என்ன செய்ய வேண்டும்? அடியேன் எவ்வளவு எதிர் பார்க்கிறேன்! என்பதையெல்லாம் கூறி, ஓதியப்பரிடம், ஒருவரை ஏற்பாடு செய்து தந்ததற்கு நன்றி கூறி, காத்திருந்தேன்.

குடும்பத்தோடு சென்றவர், திரும்பி வந்து தொடர்பு கொண்ட பொழுது, முதலில், "எனக்கு அந்த கோவிலை விட்டு வரவே மனசில்லை. அவ்வளவு அழகு, ரம்மியம். என் மனைவிதான் என்னை இழுத்து வந்தாள். கொஞ்சம் பொறு போகலாம், என்று கூறி குறைந்தது நான்கு மணிநேரம் முருகர் சன்னதி முன்னர் அமர்ந்திருந்தேன். இதுதான் சமயம் என்று உணர்ந்து, என் வேண்டுதல்களை அவரிடம் சமர்ப்பித்து விட்டேன்" என்றார். பிரசாதத்தை பற்றி எதுவுமே சொல்லவில்லை.

பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த நான், அந்த கோவிலைப்பற்றி விவரித்தேன். அசந்து போனார். அவராகவே சொல்லட்டுமே என்று அமைதி காத்தேன்.

"நீங்கள் சொன்ன பிரசாதம் கிடைத்துவிட்டது" என்றார்.

"ஹ்ம்! அப்புறம்!"

"ஒருமுறை போய் எடுத்துக் கொண்டு வந்தவுடன், இது போதாது என மறுபடியும் சென்று எடுத்துக் கொண்டு வந்து, பின்னரும் அதே போல் நான்கைந்து முறை போய் எடுத்துக் கொண்டு வந்தேன். இது போதும் என்று தோன்றிய உடன், எல்லாவற்றையும் எடுத்து பையில் கட்டி கொண்டுவந்துவிட்டேன்" என்றார்.

"ஹ்ம்! இதை எப்படி அடியேனிடம் சேர்க்கப்போகிறீர்கள்? இன்னும் 7 நாட்கள் தானே உள்ளது. அதற்கு முன் கிடைத்தால்தான், அனைவருக்கும் கொடுப்பதற்காக ஏதுவாக இருக்கும். குறைந்தது 4 நாட்கள் முன் கிடைக்க வேண்டும்" என்றேன்.

"அதற்கும் ஒரு வழி இருக்கிறது. என் மனைவியின் தாயார், அங்கு புறப்பட்டு வருவார். தாங்கள் அவர்களை  வீட்டில் சென்று சந்தித்து, பெற்றுக்கொள்ளுங்கள்" என்றார்.

"சரி அவர்கள் கிளம்பி வர ரயிலில் டிக்கட் போட்டு விட்டீர்களா?" என்றேன்.

"இல்லை! இனிமேல்தான்! ஓதியப்பரிடம் ஒரு வேண்டுதல் வைத்து, அவர் ஏற்பாட்டால் ஒரு டிக்கட்டாவது கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என பந்தை என் பக்கம் உருட்டிவிட்டார்.

"சரிதான் போ! எதுக்கெல்லாம் ஓதியப்பரை துணைக்கு/உதவிக்கு கூப்பிடவேண்டும் என்கிற ஒரு வரை முறை கிடையாதா? ரயில் டிக்கெட் வாங்க அவரை அனுப்பச்சொல்கிறாயே" என கிண்டலாக கேட்டேன்.

"அடடா! நான் அப்படி சொல்லவில்லை. அவரை கொஞ்சம் கருணை காட்டி அருள் புரிய சொல்லுங்க" என்றார்.

"சரி! நீங்க தட்காலில் முயற்சி செய்யுங்க. அவர் ஏற்பாடு செய்வார்" என்று முடித்தேன்.

அவரும் முயற்சி செய்தார். பெங்களூரிலிருந்து, அடியேனின் ஊர் வர, தட்காலில், ரெயிலில் இடம் கிடைத்தது. திங்கட்கிழமை மதியம் புறப்பட்டு, செவ்வாய்க்கிழமை மாலை, அடியேன் ஊர் வந்து சேர்ந்தது, ஓதியப்பர் அருளிய "பால் பிரசாதம்".

அவர் வீடு தேடி யாத்திரை தொடங்க, சரியான பலத்துடன் மழை பெய்தது. கூடவே ஏதோ ஒரு அரசியல் கட்சியின் ஊர்வலம், மொத்தம் நகரத்தையும் அடைத்துக் கொண்டது. ஒரு முனையிலிருந்து அவர்கள் வீடு இருக்கும் இடத்திற்கு எங்கெல்லாமோ சுற்றி, எத்தனையோ சிரமங்களை கடந்து, சென்று சேர்ந்தேன்.

வண்டியில் செல்லும் பொழுது, "ஓதியப்பர்! எவ்வளவு கொடுத்துவிட்டிருப்பார்!" என்ற யோசனை வந்தது. அடியேனின் இரு கைகளையும் அகற்றி வைத்துக் கொண்டு, ஒரு சிறு குழந்தையை வாங்கி மார்பில் அணைப்பது போல, பிரசாத பையை வாங்கிக் கொள்வதுபோல் ஒரு உணர்வு வந்தது.

"சரி! ஓதியப்பர் எவ்வளவு கொடுத்தாலும், நிறைவாகத்தான் இருக்கும். எவ்வளவோ! அவ்வளவுதான்! என ஏற்றுக்கொள்வோம்" என தீர்மானித்து" சமாதானப்பட்டுக்கொண்டேன்.

அந்த அம்மா, உள்ளே பூஜை அறைக்கு சென்று பெரிய பொட்டலத்தை தூக்கிக் கொண்டு வந்து கொடுத்தவுடன், இருக்கைகளை அகற்றி வைத்து நீட்டி, ஒரு குழந்தையை வாங்கிக்கொள்வதுபோல்தான் வாங்க முடிந்தது. அவ்வளவு இருந்தது.

அப்படியே, ஓதியப்பர் முன்னரே காட்டியது அருளியது போல், மார்போடு அணைத்துக் கொண்டேன்.

"மிக்க நன்றி ஓதியப்பா!" என்றேன் கண் மூடி நின்று!

அடியேனால் நம்ப முடியவில்லை! நான் எதிர் பார்த்தது என்னவோ ஒரு கிலோ கொடுப்பார் என்று. ஆனால் பத்து கிலோ இருக்கும், அதன் எடை!

"இதைக் கொண்டு உன் வீட்டில், என் திருப்பாதத்தில் வை!" என கண் மூடி நின்றவுடன் உத்தரவு வந்தது.

அவர் கூறியபடியே செய்தேன்.

வியாழக்கிழமை அன்று விடுமுறையானதால், அகத்தியர் அடியவர்கள் மூன்று பேர் உதவியுடன், கோடகநல்லூருக்கு வரும் அகத்தியர் அடியவர்களுக்கான பிரசாதமாக அது மாறியது.

[சரி! கோடகநல்லூருக்கு வர முடியாத அகத்தியர் அடியவர்கள், தங்கள் பெயர், விலாசம், மொபைல் எண், agnilingamarunachalam@gmail.com  என்கிற தொடர்புக்கு அனுப்பினால், தபால் வழியாக அனுப்பித் தருகிறேன். யாரோ முன் பின் பார்த்திராத ஒருவரிடம் இத்தகவலை தருகிறோமே என்கிற எண்ணம் வேண்டாம். உங்கள் தொடர்பை பகிர்ந்து கொள்ளவும் மாட்டேன், வெளியிடவும் மாட்டேன், குறிப்பாக மொபைலிலில் தொடர்பு கொள்ளவும் மாட்டேன், என்று உறுதி அளிக்கிறேன். இந்த பிரசாதம் அனுப்ப வேண்டிய தகவல்கள், பாரத தேசத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் பொருந்தும். வெளிநாட்டில் வசிக்கும் அகத்தியர் அடியவர்கள், பொறுத்துக்கொள்க! நடைமுறை சாத்தியமில்லை.]

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.

சித்தன் அருள்....................... தொடரும்!

Thursday 1 November 2018

சித்தன் அருள் - 776 - கோடகநல்லூர் - அந்தநாள்>>இந்த வருட நிகழ்ச்சிகள் - 2

[ ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!]

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

எப்பொழுதும் போல, வியாழக்கிழமை அதிகாலையிலேயே தொகுப்பை வழங்குவது போல் இன்றைய சூழ்நிலை அமையவில்லை. காரணம், நேற்று அஷ்டமி. பைரவர் பூஜையில் கலந்து கொண்டு வீடு வந்து சேர்ந்ததும், அதிகாலை மணி 6.15 ஆகிவிட்டது. எதுவுமே தட்டச்சு செய்யவில்லை. ஆதலால், வியாழக்கிழமையாக இருந்தும், இன்றைய தினம் மாலையில் தட்டச்சு செய்யலாம் என்று தீர்மானித்து, இந்த தொகுப்பை வழங்குகிறேன்.

தொடரும் முன், ஒரு சிறு தகவல்.

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள கோவிலில், அகத்தியப் பெருமானும், லோபாமுத்திரை தாயும் ஒரு சேர இருந்து, அனைவருக்கும் அருள் பாலிக்கிறார்கள். அந்த கோவிலில், 10/11/2018 அன்று, அகத்தியருக்கும் லோபாமுத்திரை தாய்க்கும், திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் அங்கு சென்று குருநாதரின், லோபாமுத்திரை தாயின் அருளை பெறலாம். இந்த நடக்கப்போகிற நிகழ்ச்சிக்கும், நடந்து முடிந்த கோடகநல்லூர் அந்தநாள், இந்தவருடம் நிகழ்ச்சிக்கும் ஒரு விதத்தில் தொடர்பு உள்ளது. அதை விவரிக்கிறேன்.  

அடியேன் ஒன்று நினைக்க, அந்த நினைப்பை, அகத்தியப் பெருமானும், ஓதியப்பரும் வேறு விதமாக திருப்பி விடுவார்கள். நாம் அந்த ஓட்டத்தில் இழுத்து செல்லப்படுவோம். இது அடியேனுக்கு ஏற்பட்ட பல அனுபவங்களில் ஒன்று. எப்படியாயினும், அவர்களுக்கு அடியேனாக இருந்து, அவர்கள் இடும் கட்டளைகளை நிறைவேற்றுவதில் கிடைக்கும் இன்பம் அலாதிதான்.

கோடகநல்லூர் அந்தநாள், இந்தவருடம் 2018க்கு இரண்டு மாதங்களுக்கு முன், ஒரு நாள் அமைதியாக இருந்து, கோடகநல்லூர் பூசைக்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யவேண்டும், என யோசித்து, குறிப்பெடுக்க, அன்று அங்கு வரும் அகத்தியர் அடியவர்களுக்கு, ஏதேனும் ஒரு அரிய பரிசை வழங்க வேண்டும், என தோன்றியது. என்ன வழங்குவது என தெரியாமல், குழம்பி அமர்ந்திருக்க, திடீரென முருகர் அடியேனுக்கு கிரௌஞ்சகிரியில் தந்த, அந்த அற்புத பரிசு, நினைவுக்கு வந்தது. பின்னர் எதை பற்றியும் யோசிக்காமல், ஓதியப்பரிடம் (முருகரை அடியேன் அப்படித்தான் அழைப்பேன்), விண்ணப்பித்தேன்.

"ஓதியப்பா! இந்தவருடம் கோடகநல்லூரில், அகத்தியப்பெருமான், பெருமாளுக்கு நடத்தப்போகும் பூஜையில் கலந்து கொள்ள வரும் அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும், உன் பிரசாதத்தை அளிக்க விரும்புகிறேன். நீ இருக்கும் இடமோ, அடியேன் வசிக்கும் இடத்திலிருந்து சுமார் 1500 கி.மீ தூரத்தில் உள்ளது. அடியேனால், அவ்வளவு தூரம் பயணம் செய்து அங்கு வந்து வாங்கி வர முடியாது. நீயே பார்த்து யாரேனும் ஒருவரை ஏற்பாடு செய்து, அங்கு வரவழைத்து, உன் பிரசாதத்தை கொடுத்துவிடேன்!" என்றேன். பின்னர் பொறுமையாக காத்திருந்தேன். நிச்சயம் ஓதியப்பர் அடியேன் வேண்டுதலுக்கு தலை சாய்ப்பார், என்ற நம்பிக்கை உள்ளே வலுவாக இருந்தது. பின்னர் இதை பற்றி மறந்து விட்டேன்.

சரி! கிரௌஞ்சகிரியில் அப்படியென்ன விசேஷம் இருக்கிறது?

கிரௌஞ்சன் என்கிற அரக்கனை அழித்து, அந்த மலையில் முருகர் குடி கொண்டார். முருகன் இப்படி ஒவ்வொரு அரக்கர்களையும் வென்று, அனைத்து இடங்களிலும் இறை சக்தியை விதைத்து சென்று கொண்டிருப்பதை கண்டு, முருகனுக்கு மனையாளாக, தெய்வயானையை தேர்நதெடுத்து, முருகனின் சம்மதத்தை கேட்க வேண்டி, கிரௌஞ்சகிரி ஏகினார். ஆனால் முருகரோ, "தன்னுள் இருக்கும், ஞானம், ஓரளவுக்கேனும், இப்பூவுலக மனிதர்களுக்கு கிடைக்க என்ன செய்யலாம்" என்று யோசித்துக் கொண்டிருந்த நேரம். இப்படிப்பட்ட நேரத்தில், பார்வதி தேவியானவள் முருகர் இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தார். இதுதான் சமயம் என தீர்மானித்து முருகர் ஒரு நாடகத்தை அரங்கேற்ற முடிவு செய்தார்.

ஒருவருக்கொருவர் நலத்தை விசாரித்தபின், முருகரிடம், அவருக்கான மணப்பெண்ணாக தெய்வயானையை தான் தெரிவு செய்திருப்பதாக அறிவித்தார். கூடவே, இதுவரை யுத்தம் செய்ததெல்லாம் போதும், இப்படியே சென்றுகொண்டிருந்தால் சரியாகாது என சிவபெருமானும் கூறியதாக தெரிவித்தார்.

அமைதியாக பார்வதி தேவி கூறுவதை கேட்டுக்கொண்டிருந்த முருகர், ஒரே ஒரு கேள்வியை கேட்டார்.

"எனக்கு திருமணம் முடிக்க, நினைத்திருக்கும் அந்த பெண் எப்படி இருப்பாள்?" என்றார்.

"என்னைப்போல் இருப்பாள்" என சட்டென பார்வதி தேவி கூறினாள்.

"உன்னைப்போல் இருப்பாள் என்றால், இந்த கல்யாணம் எனக்கு வேண்டாம். ஏனெனில், அவளை மனைவியாக பார்க்கத்தோன்றாது, அதற்கு பதிலாக தாயாக, உன்னை பார்ப்பது போல் பார்க்கத் தோன்றும். ஆகவே அனைத்து ஏற்பாடுகளையும் நிறுத்திவிடுங்கள் தாயே!" எனக்கூறி, அங்கிருந்து விலகத்தொடங்கினார்.

முருகரை பின் தொடர்ந்து வந்த பார்வதி தேவியானவள், "அதெப்படி, ஒரு பெண் என்னைப்போல் இருக்கிறாள் என்பதற்காக நீ மறுதலிக்கலாம்? என்னை விலக்கி வைத்து உன்னால் வாழ முடியுமா? ஏன் உன் உடல் வளர்ச்சிக்கு காரணமே உனக்குள்ளே ஓடும் தாய்ப்பால், நான் கொடுத்தது தானே! எங்கே அதை விலக்கிவை பார்க்கலாம்? சக்தியாக நான் இன்றி, நீ ஏது? எனப் பார்க்கலாம்" என மிகுந்த கோபத்துடன் கூறினாள்.

பொறுமையாக இருந்த முருகர், கிரௌஞ்சகிரியில் ஒரு சமதளமான இடத்துக்கு பார்வதி தேவியை அழைத்துச் சென்று, தன் உடலுக்குள் இருந்த, தன் தாயிடம் குடித்த அத்தனை பாலையும் "கக்கிவிட்டார்". அத்தனை பாலும் சேர்ந்து, ஒரு மலையாக உருவெடுத்தது.    இந்தப் பால் பிரசாதத்தை, கோடகநல்லூர் வந்த அகத்தியர் அடியவர்கள், அனைவருக்கும் "முருகர் பிரசாதம்" என்று கூறி கொடுக்க வைத்தார், ஓதியப்பரும், அகத்தியப் பெருமானும். இப்படி உயர்ந்த அரிய பரிசை எப்படியேனும் கைவரப்பெற்று உங்கள் அனைவருக்கும் தரவேண்டும் என்பதே அடியேனின் பிரார்த்தனையாக இருந்தது. அது நடந்தது.

ஏதோ ஒரு முருகரின், கோவில் பிரசாதம் என அன்று நினைத்திருப்பீர்கள். ஆனால் இது சக்தியின் அம்சமும், ஓதியப்பரின் ஞானமும் ஒன்று சேர்ந்த உயரிய பொருள் என எத்தனை பேர் உணர்ந்தார்கள் என தெரியவில்லை.

வடசேரி அகத்தியர்கோவில் நிர்வாகியிடம், இந்த பரிசை கொடுத்து, இதைப்பற்றி கூறியவுடன், அவரே கூறினார்,

"அய்யா! இது இன்னும் இருந்தால் கொடுங்களேன். அகத்தியர் லோபாமுத்திரா கல்யாணத்துக்கு, இங்குள்ள ஒவ்வொருவரும் சீர் கொண்டு வருவார்கள்.  நாங்கள் மாப்பிள்ளை வீட்டு மரியாதையாக எதிர் சீர் செய்ய வேண்டும். நீங்கள் கொடுத்தால், இதையே ஊர் மக்களுக்கு கொடுக்கிறோம்" என்றார்.

காலபைரவர் பூசைக்காக நேற்று சென்ற பொழுது, ஒரு பை நிறைய பால் கட்டியை அவரிடம் (நிர்வாகியிடம்) சேர்த்துவிட்டு வந்துள்ளேன்.

10/11/2018 அன்று வடசேரியில் உள்ள அகத்தியர் கோவிலுக்கு சென்றால், கிடைக்காதவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

அந்த பால்கட்டியிலிருந்து ஒரு சிறு அளவு எடுத்து, நாக்கில் வைத்து சற்று நேரம் நெருடினால் முதலில் "விபூதி" வாசனை வரும். மேலும் சற்று நேரம் நெருட "பால்" வாசனை வரும்! இதை விட மிகச்சிறந்த பரிசும், சிறந்த அனுபவமும், இவ்வுலகில் அடியேன் உங்களுக்கு கொடுப்பதற்கில்லை.

இதை பெற முடியாமல் போனவர்களுக்கு, எப்படி கொண்டு சேர்ப்பது என்ற யோசனையும் உள்ளது.

சரி! இது (பால் கட்டி) அடியேன் கைக்கு எப்படி வந்து சேர்ந்தது, என்பதை, அடுத்த தொகுப்பில் கூறுகிறேன்.

சித்தன் அருள்................. தொடரும்!

Friday 26 October 2018

சித்தன் அருள் - 775 - கோடகநல்லூர் - அந்தநாள்>>இந்த வருட நிகழ்ச்சிகள் - 1


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

நேற்றைய பதிவில், அகத்தியப்பெருமானுக்கு நன்றி கூறிவிட்டு வந்து கோடகநல்லூர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறேன், என கூறிவிட்டு சென்றது நினைவிருக்கும். உண்மையாகவே அகத்தியப்பெருமானுக்கு நன்றி சொல்வதுடன், கோடகநல்லூர் பூசை விஷயமாக, அவரது அருள் வாக்கு, என்ன என்று தெரியவேண்டும் என்பதே அடியேனின் விருப்பமாக இருந்தது. கோவிலில் சென்றடைந்ததும், பலமுறை அகத்தியர் அடியவர்கள் சார்பாக, பூசையை மிகச்சிறப்பாக நடத்தி தந்தமைக்கு,  "நன்றியை" அகத்தியப் பெருமானுக்கு தெரிவித்தேன். பூசாரி வந்து "பூஜை முடிந்து நடை சார்த்தும் பொழுதுதானே செல்வீர்கள்! அப்பொழுது பிரசாதம் தருகிறேன் என்றார்".

"நீங்கள் எங்களுக்காக எதையும் விட்டு வைக்கக்கூடாது. எது எப்படியோ அப்படியே நடக்கட்டும். அவரிடமிருந்து ஏதேனும் தகவல் உண்டா? என விசாரித்து சொல்லுங்கள்"  என பொதுப்படையாக கூறிவிட்டு பூஜை நிறைவு பெற காத்திருந்தேன். "நிவேதனம்" நேரத்தில் எல்லோரும் ரொம்ப விலகி இருக்க வேண்டும் என்பது இந்த கோவிலின் கட்டுப்பாடு. ஆதலால், ஒரு கயிறை கட்டியிருந்தார்கள். அகத்தியப்பெருமானுக்கு எதிரில், குறுகலாக கட்டிய கயிருக்கு பின்னால், தரையில் பத்மாசனத்தில் அமர்ந்து, பூசை முடியும் வரை "அகத்தியர் அருளிய ஆதித்ய ஹ்ருதயம்" ஸ்லோகத்தை கூறி, சித்த மார்க்க முறையில் அவருக்கு காணிக்கையாக சமர்ப்பித்தேன்.

பூசை முடித்து வெளியே வந்த பூசாரி, தீபாராதனை தட்டை வைத்துவிட்டு, எல்லார் மீதும் தீர்த்தம் தெளித்தார். மனம் அமைதியாக இருந்தது. என்ன தகவல் வரப்போகிறதோ, என்ற எண்ணத்துடன் காத்திருந்தேன். உள்ளே சென்று அகத்தியர் முன் சற்று நேரம் கண் மூடி நின்ற பூசாரி, பிரசாதத்தை, ஒரு முழம் பூவை, ஒரு இலையில் வைத்து, அடியேனை அழைத்தார்.  அருகில் சென்ற அடியேனிடம், பிரசாத இலையை தந்துவிட்டு, "பெருமாளும், அடியேனும், மிக சந்தோஷமாக, திருப்தியாக இருக்கிறோம். அனைத்து சேய்களுக்கும் எங்களது ஆசியை வழங்கியுள்ளோம். மிக சிறப்பு, என்று கூறினார்", என மலையாள மொழியில் தெரிவித்தார்.

நடந்த நிகழ்ச்சிகள் ஒன்றும் பூசாரிக்கு தெரியாததினால், அவர் வினவிய பொழுது, "கோடகநல்லூர்" பற்றி சுருக்கமாக தெரிவிக்க வேண்டி வந்தது. அவருக்கு ஒரே ஆச்சரியம். நிறைய தெரிந்து கொள்ள விரும்பினார். கோடகநல்லூர் பிரசாதத்தை அவருக்கு கொடுத்துவிட்டு, பிறகு பேசுவோம், அடியேன் உடனேயே இல்லம் சென்று சேர வேண்டியுள்ளது" என கூறிவிட்டு, மீண்டும் ஒரு முறை நம் குருநாதருக்கு நன்றியை தெரிவித்து உத்தரவு வாங்கி வீடு வந்து சேர்ந்தேன்.

இந்த நிகழ்ச்சியை இங்கு கூற காரணம், இத்தனை வருடம் இல்லாத ஒரு ஆசை, இந்த முறை வந்தது. பெருமாளும், அகத்தியரும், அடியவர்களின் பூசையை ஏற்றுக் கொண்டார்களா, ஏதேனும் குறை அடியவர்கள் செயலில் இருந்ததா என தெரிந்துகொள்ளும், ஆவல் உந்தியது. அது கேள்வியாகியது.

அகத்தியரின் சேய்கள், அன்று அங்கு வந்து, ஆத்மார்த்தமாக செய்த செயல்கள் அனைத்தும், பெருமாளாலும், அகத்தியராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது, என்பதை இதனால் தெரிவித்துக் கொண்டு, இருவரின் ஆசியும், உங்கள் வசம் என்பதையும் கூறிக்கொள்கிறேன்.

இனி கோடகநல்லூர் நிகழ்ச்சிகளுக்கு செல்வோம்.

எல்லையில்லா அருளை வழங்கும் பெருமாளும், கனிவான தகப்பனும், போன வருடம் போலவே, இந்த முறையும், அடியேனை தனியாக ஓடவிட்டு, ஒரு வழி பண்ணிவிடுவார்களோ என்கிற எண்ணத்தில், ஓதியப்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குப் பின் தான் கோடகநல்லூரை பற்றி நினைப்பது, விண்ணப்பம் கொடுப்பது என்று தீர்மானித்துவிட்டேன். அதன்படி, கோடகநல்லூர் "அந்த நாளுக்கு" மூன்று வாரங்களுக்கு முன், அங்கே சென்று விளக்கு போட்டுவிட்டு பெருமாளிடம் "இந்த முறையும் தங்களுக்கான அகத்திய பெருமானின் பூசை மிகச்சிறப்பாக நடக்கவேண்டும். வருகிறவர்களுக்கும், வர முடியாமல் போனவர்களுக்கும் எந்த பாரபட்சமும் இன்றி தாங்கள் அருளவேண்டும். அகத்திய பெருமான் வந்திருந்து அந்த நாள் பூசையை மிகச்சிறப்பாக நடத்தி தரவேண்டும்!" என பிரார்த்தித்து விண்ணப்பித்தேன்.

அன்றிரவு, பள்ளியறை பால் பிரசாதம் கொடுக்க வந்த அர்ச்சகர், மெதுவாக, அடியேனிடம் வினவினார்.

"ஏதாவது விண்ணப்பம், பெருமாளிடம் போட்டீர்களா?" என்றார்.

அடியேன் சிரித்துக்கொண்டே, "என்ன பதில் சொன்னார்" என வினவினேன்.

"இந்த முறை தாமிரபரணி புஷ்கரமும் இந்த பூசையினூடே வருவதால், மிகச்சிறப்பாக அகத்தியரின் பூசை அமையும். எதற்கும் கவலை வேண்டாம் என வாக்குரைத்தார்" என்றார்.

"இது போதும். இனி முழு வேகத்தில் ஏற்பாடுகளை கவனிக்கலாம்!" என்றேன்.

"இன்னொரு தகவலும் கூட. அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும், உங்களுக்கு கிடைக்கிற வாய்ப்பை, விட்டுக்கொடுக்கச் சொன்னார்" என்றார்.

"என்ன! பெருமாள் இப்படிச் சொல்லிவிட்டார்! என்று அடியேன் நான் மட்டும் என்று நினைத்திருக்கிறேன். போன வருடம் "நீ மட்டும்தான் எனக்காக ஓடுவாய்" என முன்னரே பெருமாள் உரைத்தது போலவே நடந்ததால், அனைத்தும் கவனிக்க வேண்டி வந்தது. சரி! எனக்கு எதுவும் வேண்டாம். ஏற்பாடுகளை பிரித்துக் கொடுத்துவிடுகிறேன்." என அவர் சன்னதி முன் நின்று சத்தியம் செய்துவிட்டு, வந்துவிட்டேன்.

அன்றைய தினத்தின் நிகழ்ச்சிகளுக்கு தேவையான விஷயங்களை, பட்டியலிட்டு, பலருக்கும் பிரித்து கொடுத்து, விவரித்த பின், ஒரு சில விஷயங்களை அடியேன் ஏற்றுக்கொண்டேன்.

உள்மனதுள் என்னவோ ஒருசிந்தனை. சரியான நேரத்துக்கு, பிரச்சனையை கிளப்பிவிட்டு, பெருமாள் எங்கேனும் தடங்கல் ஏற்படுத்துவாரோ என்ற எண்ணம், மெல்லிய நூலிழையாக உள்ளே அசைந்து கொண்டிருந்தது.

"சரி! பிரச்சினையை, அதுவாக வரும்பொழுது பார்த்துக்கொள்ளலாம்" என்ற என் பழைய மனநிலைக்கு, திரும்பினேன்.

சித்தன் அருள்.................... தொடரும்!

Thursday 25 October 2018

சித்தன் அருள் - 774 - 22/10/2018 - அந்தநாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்!



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்றைய தினம் (25/10/2018) காலையில் தொகுப்பை பதிவிட முடியவில்லை. கோடகநல்லூரில், இறைவனும், அகத்தியப்பெருமானும், அடியவர்களும், ஒன்று சேர்ந்து நடத்திக் கொடுத்த "அந்த நாளின்" நிகழ்ச்சிகளை விவரிப்பதற்கு முன், அகத்தியப்பெருமானை பாலராமபுரம் என்ற இடத்தில் உள்ள கோவிலில் தரிசித்து, விளக்கு போட்டு நன்றி கூறிய பின், எழுதுவதே சரி என்று அடியேன் மனதுக்கு தோன்றியதால், இதோ, இப்பொழுதே புண்ணிய யாத்திரை பயணம் தொடங்கலாம் என்றிருக்கிறேன். அங்கு சென்று அவருக்கு நன்றியை, உங்கள் அனைவர் சார்பாகவும் தெரிவிக்கலாம் என்றிருக்கிறேன். எல்லாம் அகத்தியர் அய்யன் செயல். நிறைய விஷயங்கள் தெரிவிக்க வேண்டி இருக்கிறது. சற்று, பொறுங்கள். சென்று வந்துவிடுகிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

சித்தன் அருள்........... தொடரும்! 

Tuesday 23 October 2018

சித்தன் அருள் - 773 - கோடகநல்லூர் - 22/10/2018 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

கோடகநல்லூர் - ஸ்ரீ நீளா பூமி சமேத ப்ரஹன்மாதவப் பெருமாள் கோவிலில், நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியப்பெருமான் நடத்திய பெருமாளுக்கான ஆராதனைகள் மிகச் சிறப்பாக 22/05/2018 அன்று நடைபெற்றது. அந்த நாளின் நிகழ்ச்சிகளை பின்னர் ஒரு   தருகிறேன். முதலில்,  தினம் எடுத்த ஒரு சில புகைப்படங்களை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். 

[ ஸ்ரீ தாமிரபரணி நதி, கோடகநல்லூர்]

[ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியப்பெருமான், சென்னையிலிருந்து வந்து தாமிரபரணி நதிக்கரையில் பூசைக்காக அமர்ந்த கோலம்]
[ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியப்பெருமான், பாண்டிச்சேரியிலிருந்து வந்து தாமிரபரணி நதிக்கரையில் பூசைக்காக அமர்ந்த கோலம்]
[ஸ்ரீ லோபாமுத்திரை, அகத்தியப்பெருமானுக்கு பாலபிஷேகம்]
[ஸ்ரீ லோபாமுத்திரை, அகத்தியப்பெருமானுக்கு பாலபிஷேகம்]
[ஸ்ரீ லோபாமுத்திரை, அகத்தியப்பெருமானுக்கு திருநீர் அபிஷேகம்]
[ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியப்பெருமான் தாமிரபரணியில் நீராடல்]
[ஸ்ரீ தாமிரபரணி ஸ்நானத்துக்குப் பின் படித்துறையில் எழுந்தருளல்]
[ஸ்ரீ தாமிரபரணி தாய்க்கான தாம்பூலத்திற்கு அகத்திய பெருமான் லோபாமுத்திரை தாயின் அருள் வேண்டுதல்]
 [பெருமாள் அபிஷேகத்தை/பூசையை காண வந்திருந்த அகத்தியர் அடியவர்கள்]


 [ஸ்ரீ நீளா பூமி சமேத ப்ரஹன் மாதவர்]
 [அபிஷேகத்துக்கான கலச பூசை]
[பெருமாளுக்கு அபிஷேகம்]

சித்தன் அருள்........... தொடரும்!