​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 28 October 2014

கல்லார் ஸ்ரீ அகத்தியர் ஞானபீட திருக்கோயிலில் 108 சர்வ தோஷ நிவாரண மகாயாகம்


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

கல்லார் ஸ்ரீ அகத்தியர் ஞானபீட திருக்கோயிலில், அகத்தியப் பெருமானின் உத்தரவால், 08/01/2015, வியாழக்கிழமை அன்று சித்தர் நெறியில் 108 சர்வ தோஷ நிவாரண மகாயாகம் நடத்திட தீர்மானித்துள்ளார்கள். சித்தன் அருளுக்கு வந்த அழைபிதழை, அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என தீர்மானித்து, உங்கள் கரங்களில் தந்து, அகத்தியர் சார்பாக உங்களை அழைக்கிறேன்.

எல்லோரும் சென்று யாகத்தில் கலந்து கொண்டு அவர் அருளை பெற்று நலமுடன் வாழ வேண்டும் என்றும் வேண்டிக்கொள்கிறேன்.

கார்த்திகேயன்  

Saturday 25 October 2014

ஒரு செய்தி > ஓதியப்பர் உங்களுக்கு தந்த பரிசு!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, ஒரு தகவல் கிடைத்தது. ஓதியப்பர் மீது பாடப்பட்ட எத்தனையோ பதிகங்கள், பாடல்கள் இருக்கிறது. அவற்றில் ஒன்று "வேல் மாறல்" எனப்படும். இதை தினமும் வீட்டில் கேட்டாலோ, கூட சொன்னாலோ, ஒரு மண்டலம் நிறைவு பெற்றால், நம்மை சுற்றி எப்பொழுதும் ஓதியப்பர் கவசமாக நின்று காப்பாற்றுவார், என்று கூறினார்.  எல்லா தடங்கல்களும் விலகி, உடல் உபாதை இருந்தால் அதுவும் சரி ஆகி, நம் எதிர்பார்ப்பு தர்மத்துக்கு உட்பட்டதாக இருந்தால் உடனே நிறைவேறவும், அவர் அருள் புரிவார் என்று கேள்விப்பட்டேன். நல்ல விஷயம் ஒன்று கேள்விப்பட்டால் விட்டுவிடக் கூடாது. ஆகவே வலைப்பூவில் தேடி, அந்த பதிகத்தை MP3 தொகுப்பு வடிவத்தில் டவுன்லோட் செய்து கீழே உள்ள தொடுப்பில் சேமித்து வைத்திருக்கிறேன்.

எல்லா அடியவர்களும் அதை எடுத்து, உபயோகித்து இறை அருள் பெறுமாறு வேண்டிக் கொள்கிறேன்.  யாம் பெற்ற இன்பம் இவ்வையகத்து அன்பர்கள் பெறுக என்கிற எண்ணத்தில் இதை உங்கள் முன், இந்த மகா கந்த சஷ்டியின் போது அகத்தியரின் அன்பு பரிசாக தருகிறேன்.

எல்லோரும் இன்புற்று நலம் பெறுக.  தொடுப்பு (லிங்க்) கீழே உள்ளது.  

கார்த்திகேயன்!

குறிப்பு:- எதனால், இது இப்போது தெரிவிக்கப்பட்டது என்று புரியவில்லை. உங்களில் யாரோ ஒருவருக்காக கூட இருக்கலாம். இதை கேட்பவரின் வேண்டுதலுக்கு ஏற்ப அந்த ஓதியப்பரே நேரடியாக இறங்கி வந்து அருள் புரிய வேண்டி தந்தார் என்று என் மனம் சொல்கிறது.

Thursday 23 October 2014

ஒரு சிறு வேண்டுதல்!

நம் தமிழ் மொழியில் ஒரு பழ மொழி உண்டு.  யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன். அதுபோல், நமக்கு சித்தன் அருளை தந்து, அகத்தியப் பெருமானின் அறிவுரைகளை  வழங்கி சென்ற என் நண்பரின் மறைவு தியதி  இந்த மாதம் 26/10/2014 (ஞாயிற்று கிழமை) அன்று வருகிறது.

வாழ்க்கையின் உலக இன்பங்களில் திளைத்து செல்லும் நமக்கு, அன்மீகப்பாதையில், சித்தர்களை அறிமுகப்படுத்தி, அவர்கள் ஆசிகளை வாங்கித்தந்து, பலரின் வாழ்க்கையை செப்பனிடுவதே தன் கடமை என்று வாழ்ந்து சென்ற அந்த புண்ணிய ஆத்மாவுக்கு, நினைவார்த்தமாக நாம் அனைவரும் ஏதேனும் ஒரு நல்லது செய்ய வேண்டும், என்பது என் வேண்டுகோள்.  இத்தனை அருளை வாரி வழங்கிய அந்த ஆத்மாவின் நினைவாக, ஒருவருக்கேனும் அன்றய தினம் (26/10/2014) "அன்னதானம்" செய்யுங்கள். அது போதும். இதுவே என் வேண்டுதல். இதை நான் கட்டாயப்படுத்தவில்லை,ஆகவே யாரும் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது!

இத்தனை வாரி வழங்கிய அந்த குருவுக்கு செய்வது, அகத்தியப் பெருமானை, மகிழ்விக்கும்.  அவர் அருளை பெற்றுக் கொள்ளுங்கள்.

ஓம் லோபாமுத்திரா சமேத அகதீஸ்வராய நமஹ!

கார்த்திகேயன்

 

சித்தன் அருள் - 198 - புத்திர தோஷம் தீர்க்கும் புண்ணியத் தலங்கள்!


ஒவ்வொருவரின் ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றழைக்கப்படும் ஐந்தாம் வீட்டில் ராகுவோ, கேதுவோ, இல்லை நீசமான கிரகங்கள் எதுவாக இருந்தாலும், அவற்றின் தசாபுக்தி நடக்கும் பொழுது, திருமணமானால், அவர்களுக்கு புத்திர தோஷம் என்று சொல்லப்படும்.

புத்திரதோஷம் என்பதை 9 வகைகளாகப் பிரிக்கலாம்.
  1. திருமணமாகி, பல ஆண்டுகள் ஆகியும் புத்திர பாக்கியம் இல்லாமை.
  2. ஆண்வாரிசு இல்லாதது.
  3. குழந்தைகள் பிறந்தும் அவர்களால் பெற்றோர்களுக்கு சந்தோஷமோ, அல்லது சுகமோ கிடைக்காது.
  4. இளவயதில் புத்திரர்கள் நோயினால் காலா காலமாக கஷ்டப்படுவது.
  5. புத்திரர்கள் அல்லது புத்திரிகள் ஊனமுற்றவர்களாக பிறப்பது.
  6. புத்திரன், அல்லது புத்திரி பெற்றோர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு ஓடிப்போவது.
  7. புத்திரர், புத்திரி நல்லபடியாக இருந்தும் பெற்றோரோகள் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்வது, பெற்றோர்களை கொடுமை படுத்துவது.
  8. புத்திரர், புத்திரிகளால், பெற்றோர்கள், சொத்துக்காகவும், வேறு சில விஷயங்களுக்காகவும் கொல்லப்படுவது.
  9. ஆசையோடு வளர்த்துவரும் பிள்ளைகள் நோயின் காரணமாகவும், விபத்தின் காரணமாகவும், நடுவயதில் அகாலமாக உயிர் துறப்பது,
என்று ஒன்பது வகையான புத்திர தோஷங்கள் உண்டு. 
இவற்றில் சில தோஷங்கள், சில காலம் வரை நீடிக்கும். பல தோஷங்கள், பல வருஷங்களாக நீடிக்கும். மேலும் சில தொடர்ந்து கடைசிவரை வந்து கொண்டிருக்கும். இத்தனை தோஷங்களையும் தாண்டி குழந்தைகள் பிறப்பது, நல்லபடியாக பிறப்பது, நல்லபடியாக படிப்பது, பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும் அனுகூலமாக இருப்பது, நல்ல ஒழுக்கங்களுடன் திகழ்வது, குடும்பத்தின் பெருமையை மேலும் பரப்புவது, போன்ற நற்ச்செயல்கள், நற்குணத்தோடு, குழந்தைகள் பிறக்கத்தான் செய்கின்றார்கள். இது பெற்றோர்கள் செய்த புண்ணியம்.

ஜாதகத்தின் ஐந்தாம் வீட்டில் தோஷங்கள் இருக்காது. ஆனால் அப்படிப்பட்ட தம்பதிகளுக்கு என்ன காரணத்தாலோ குழந்தைகள் பிறக்காது. அப்படியே பிறந்திருந்தாலும், மேற்சொன்ன ஒன்பது வகையான தோஷங்களில் ஏதாவது ஒன்றைப் பெற்றிருப்பார்கள்.

இதற்கு காரணம், சரியானபடி ஜாதகத்தைக் குறிக்கத் தவறியதால் ஏற்பட்ட விளைவு என்பது உண்மை. அதை விட இன்னொரு முக்கியமான காரணம், ஒவ்வொருவருடைய ஜாதகத்தில், ஐந்தாம் இடம், ஒன்பதாம் இடம், பன்னிரெண்டாம் இடத்தில், ராகுவோ, கேதுவோ அல்லது பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியான கிரகம், வேறு கெட்ட கிரகங்களோடு சேர்ந்து அசுபப் பார்வை பார்க்கும் பொழுதும், அவற்றில் தசா, புக்தி, அந்தரம் நடை பெரும் பொழுதும், ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டமச்சனி, அஷ்டம குரு, சஞ்சரிக்கும் பொழுதும், புத்திரர்கள், புத்திரிகளால், மன சஞ்சலமும், வெறுப்பும், விரக்தியும், நஷ்டமும், வருத்தமும், இழப்பும், ஏற்படும். எனவே ஐந்தாம் வீட்டில் தோஷம் இல்லாவிட்டாலும், நிறைய பேர்களுக்கு, குழந்தைகளால் மனக்கஷ்டம் எர்ப்பட்டுக் கொண்டிருக்கும்.

இப்படிப்பட்ட தோஷங்கள் விலகுவதற்கு, பரிகாரங்கள் நிறைய உண்டு. அவற்றை பண வசதி உடையவர்கள் எளிதாகச் செய்து விடுவார்கள். சாதாரண மக்களும் சரி, பணவசதி இல்லாதவர்களுக்கும் வேறு என்ன மாற்றுவழி? என்று கேட்டால், அவர்கள் இதற்கு என்று அமைந்துள்ள கோயில்களுக்குச் சென்று சில பரிகாரங்களை முறைப்படி செய்யலாம்.

மன்னார்குடி:-  இந்த கோவில் மிகப் பழமையானதாக இருந்தும், ஆழ்வார்களால் பாடப் படவில்லை. என்றாலும், இந்த ராஜகோபால சுவாமிக்கு பதினாறு வகையான அபிஷேகங்களை வளர்பிறை புதன் கிழமை அன்றோ, அல்லது தம்பதிகளில் யாரேனும் ஒருவருடைய ஜென்மநட்சத்திரம் வரும் நாள் அன்று செய்துவிட்டால், மலையளவு பிரச்சினை, கடுகளவாகி மெல்ல மெல்ல மறைந்து விடும்.

திருக்கருக்காவூர்:- பெரும்பாலும் இந்த கோவிலை பற்றி கேள்விப் படாத நபர்கள் யாரும் தமிழ்நாட்டில் இருக்கவே முடியாது. குழந்தைப் பேற்றுக்காக மட்டும் செல்வதோடு அல்லாமல், குழந்தைக்குரிய ஒன்பது தோஷங்களும் வராமல் காப்பாற்றவும் இங்கு செல்வது நல்லது. இது கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது.

நாமக்கல்:- சேலத்திலிருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த ஊரில் பிரசித்தி பெற்ற அனுமனுக்கு, முடிந்த அளவு வெண்ணை சார்த்தியோ, துளசி மாலை அணிவித்தோ, திருமஞ்சனம் செய்தாலோ, புத்திர தோஷம் பெரும்பாலும் விலகும். வசதி இருந்தால் வடை மாலை கூட சாற்றலாம்.

கோடகநல்லூர்:-  இது திருநெல்வேலி-தென்காசி செல்லும் பாதையில், நடுக்கல்லூருக்கு மிக அருகாமையில் உள்ளது. இங்கு சென்று பச்சை வண்ணப் பெருமாளுக்கு அமிர்த கலசம் நைவேத்தியம் செய்வது புத்திர தோஷத்திற்குரிய, மிகச் சிறந்த பரிகாரமாகும். இத் திருத்தலம் சர்ப்ப தோஷம் என்கிற "கால சர்ப்ப தோஷத்திற்கு" மிகச் சிறந்த பரிகார ஸ்தலமும் கூட. சந்ததி விருத்தி, தடைபட்ட, தள்ளிப் போகும் திருமணம், வியாபாரத்தில் வரும் நஷ்டம், இழப்பு, புத்திர புத்திரிகளின் ஆரோக்கியம், நற்குணம் இவைகளுக்கு சிறந்த பரிகார ஸ்தலம்.

காளஹஸ்தி:- திருப்பதி செல்பவர்களுக்கு, இந்த கோவிலைப் பற்றி நன்றாக தெரிந்திருக்கும். அற்புதமான ராகு, கேது பரிகார ஸ்தலம். பாதாள விநாயகருக்கு அர்ச்சனை செய்து, விளக்கேற்றி வருவது, அம்பாளுக்கு பால், இளநீர் அபிஷேகம் செய்வது புத்திர தோஷத்திற்குரிய பரிகாரமாகும்.

திருநாகேஸ்வரம்:- இங்கு குடிகொண்டிருக்கும், ராகு பெருமானுக்கு, ராகு காலத்தில் பாலாபிஷேகம் செய்வது, புத்திரபாக்கியம், புத்திரர்களால் சந்தோஷம், பெருமை, கெளரவம், அந்தஸ்து ஆகியவற்றை அள்ளித்தரும்.

குருவாயூர்:-  கேரளத்தில் உறையும், இந்தக் கோயிலுக்குச் சென்று, அவரவர் சக்திக்கு ஏற்ப, என்னென்ன வழிகளில், பிரார்த்தனையோ, துலாபாரமோ செய்துவரின், குழந்தையின் ஆரோக்கியம், எதிர்காலம் சிறப்பாக அமையும். இங்கு செல்ல முடியாதவர்கள், வேண்டிக் கொண்டு காணிக்கையை அனுப்பி வைக்கலாம்.

மண்ணார்சாலை:- இது கேரள மாநிலத்தில், ஹரிப்பாடு என்கிற ஊருக்கு அருகில் உள்ளது. குழந்தைகள் சம்பந்தமான அனைத்துப் பிரச்சினைகளுக்கும், தீர்வுகாணும் புண்ணியத்தலம். நேரிடையாக சென்று வருவதுதான் சிறந்த பரிகாரமாகும்.

நாகர் யந்திரம்:-  வெளியூர் செல்ல முடியாதவர்கள், வேற்று மதத்தினர், மற்றும் ஜாதகம் இல்லாதவர்கள், கார்கோடக யந்திரம், வீட்டில் வைத்து பூசித்து வந்தால் போதும். இதற்குரிய பலன் தாமதமாகக் கிடைத்தாலும், நல்ல பலனாக நிரந்தரமாக அடையலாம்.

​எல்லோரும் இறையருள் பெற்று, சித்தர் ஆசி பெற்று நலமுடன் வாழ பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

[குறிப்பு:- இருவார இடைவேளைக்குப் பின் சித்தன் அருளில் உங்களை சந்திக்கிறேன்!]​

சித்தன் அருள்................. தொடரும்!

Wednesday 22 October 2014

ஓதியப்பர் @ சென்னை!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

எல்லோருக்கும் மறுபடியும் "தீபாவளி நல்வாழ்த்துக்கள்".

சில தினங்களுக்கு முன் ஓதியப்பர் சென்னையில் குடிவரப் போகிறார் என்று கூறியிருந்தேன். அதை பற்றிய ஒரு சில தகவல் கிடைத்தது. அதை உங்களுடன் இன்று தீபாவளி தினத்தில் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

முதலில் சென்னையில் பிரதிஷ்டை பண்ணப் போகிற, அவரின் படத்தை கீழே தருகிறேன்.

திரு சிவகுமார் என்கிற ஓதியப்பரின் அடியவர் ஒருவர், பக்தர்கள் துணையுடன் இந்த ஓதியப்பர் சிலையை சென்னை கிழக்கு தாம்பரம் மாடம்பாக்கம் அருகில் பதவஞ்சேரியில் (அகரம் தென்) 'திரிபுரசுந்தரி உடனுறை கயிலைநாதர்' திருகோயிலில் பிரதிஷ்டை செய்ய வேண்டி உத்தரவு வாங்கியுள்ளார். கோவில் கட்டுவது, பிரதிஷ்டை என்றாலே பக்தர்களின் உதவி நிறையவே தேவைப்படும். அதுவும், ஓதியப்பருக்கு என்றால் உடனேயே எப்பாடுபட்டேனும் பங்கு பெற துடிக்கும் பக்தர்கள் இங்குள்ளார். அதை மனதில் கொண்டு, ஒரு புண்ணிய காரியத்தில் பங்கு பெற்று நீங்கள் அனைவரும் அவர் அருள் பெற வேண்டும் என்று எண்ணி இந்த தொகுப்பை, ஓதியப்பரை உங்கள் முன், சமர்ப்பிக்கிறேன். திரு சிவகுமார் அவர்களை மேற் சொன்ன கோவிலில் சென்று கண்டு தொடர்பு கொள்ளுங்கள்.

தவத்திரு சிவகுமார் அய்யா அவர்கள் கீழ்கண்ட வங்கி கணக்கு பதிவை அளித்துள்ளார்கள். விருப்பமுள்ள அன்பர்கள் திருப்பணி கொடை வழங்கவும், விவரத்தை பதிவு செய்யவும் அய்யன் கோரினார்.

SIVAKUMAR. A
SB A/C NO.: 1590 101 000 27439
IFSC CODE: ANDB0001590
ANDHRA BANK
MADAMBAKKAM BRANCH
CHENNAI 600 126

சென்னையில் வசிக்கும் அன்பர்களே, நம் ஓதியப்பரை, பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

கார்த்திகேயன்!:

Monday 20 October 2014

சித்தன் அருளின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


அகத்தியப் பெருமான் அடியவர்கள்
அனைவருக்கும், அவர்கள் குடும்பத்தாருக்கும்
சித்தன் அருளின்
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
எல்லா அருளும் பெற்று, நலமும் பெற்று
சிறப்புடன் வாழ இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

கார்த்திகேயன்

Thursday 16 October 2014

சித்தன் அருள் - 197 - சிவதாச சித்தர்


இதனால், மேலும் பதற்றமடைந்த அவர்கள், ஊரை கூட்டிக்கொண்டு பல இடங்களில் தேடினர்.

எங்கு தேடியும் கிடைக்காமல் உள்ளூர் கோயில் திண்ணையில் சோர்ந்து அமர்ந்திருதிருந்தபோது, அந்த கோயிலை திறக்க மாலை நேரத்தில் வந்த குருக்கள், "வாருங்கள், இங்குள்ள வைத்தீஸ்வரன் நிச்சயம் உங்கள் குழந்தையை வைத்தியம் செய்து உயிர் காப்பார்" என்று எல்லோரையும் அழைத்துக் கொண்டு கோயிலுக்குள்  நுழைந்தார்.

கோயில் கருவறையை திறந்தபோது, வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து புன்னகையோடு, , உடல் ஆரோக்கியத்தோடு, காவி வேஷ்டி, முண்டாசு சகிதம் கையில் தண்டத்தோடு சிவதாசன் வெளியே வந்தான்.

இது சிவதாசனா? என்று பலரும் ஐயமுற்றனர்.

"எப்படி இந்த கோயிலின் கருவறைக்குள் வந்தான். இவன் தெய்வீக சிறுவனா? மந்திரவாதியா? என்று சிலர் முணுமுணுத்தனர், அடிபட்டு செத்துப் போனான் என்று எண்ணிக் கொண்டிருந்த சிவதாசன் உயிரோடு வந்திருக்கிறான் என்றால், இது வைத்தீஸ்வரர் பெருமாள் செய்த லீலைதான். வைத்தியமும் செய்து தன்னோடு அழைத்து ஞானத்தையும் போதித்திருக்கிறார். சிவதாசன் கொடுத்து வைத்தவன் என்று பெரியவர்கள் பலரும் முடிவெடுத்து, சிவதாசனை நோக்கி கையெடுத்து கும்பிட்டனர்.  சிவதாசன் முகத்தைப் பார்த்த பொழுது, தெய்வீககளை ஏறியிருந்தது. உடலில் ஒரு புதிய சக்தி உண்டாயிருப்பதால், கண்களில் ஞானம் பரவி இருந்தது.

கருவறையிலிருந்து வெளியே வந்த சிவதாசன், ஈன்றோரை பார்த்து "அன்றைக்கு எனக்கு அன்னமளித்ததும் இந்த வைத்தீஸ்வரரே! இன்றைக்கு மருத்துவ சிகிர்ச்சை செய்து , என்னை கைத்தாங்கலாக இந்த கருவறைக்குள் கிடத்தி , ஞானத்தை புகுத்தி, அவருக்கு அடிமையாக்கி, சித்தத் தன்மையை கொடுத்தவரும் இதோ இந்த வைதீஸ்வரர்தான். கண்கண்ட தெய்வமாக விளங்கும் இந்த வைத்தீஸ்வரப் பெருமாள் புகழ் இன்னும் முன்னூறு ஆண்டுகளுக்குப் பின் புகழ் பெறப் போகிறது" என்றவன் "நான் தேசாந்திரம் சென்று மீண்டும் இதே கோவிலுக்கு திரும்புவேன். இங்கு ஒன்பது வகையான சித்தர்கள் ஜீவசமாதி நிலையில் உள்ளனர். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியே வருவார்கள். இனி இந்த கோயில் சித்தர் கோயில் என்றும், காட்டிலே இருப்பதால், இதற்கு சித்தர் காடு என்றும் புகழ் பெறப் போகிறது" என்று சொன்னவன், அப்படியே வெளியே நடந்தான், யார் கண்ணிலேயும் பின்பு தென்படவே இல்லை.

சிவதாசன் சித்ததன்மையை அடைந்து வெளியேறிய பின்பு, அங்குள்ள சிலர், "அதெப்படி! ஏதோ ஒரு மந்திரஜாலம் மாதிரி நடக்கிறது. அடிபட்டவன் கருவறைக்குள் வருகிறான். உயிரோடு நடப்பது போல் நடக்கிறான். இது தோஷம் இல்லையா? எனவே சிவதாசன் சித்தன் அல்ல; செத்துப் போனவன்.  ஆவியாக இந்தக் கோயிலுக்கு வந்திருக்கிறான். எனவே இந்தக் கோயில் தீட்டுப்பட்டுவிட்டது" என்று குரல் எழுப்பினர்.

பொதுமக்கள் இதை கண்டு குழம்பிப்போனார்கள்.

அன்றைக்கு ராத்திரி, திடீரென்று அந்த வைத்தீஸ்வரன் கோயில் ஆலயமணி வெகு வேகமாக அடித்தது.  இதைக் கேட்டு அந்த கிராம மக்கள் பதறியடித்து அரிவாள், கம்பு, கத்தியோடு கூட்டம் கூட்டமாக உள்ளே நுழைந்தார்கள்.

உள்ளே சென்று பார்த்தால், வைத்தீஸ்வரன் லிங்கத்துக்கு பால் அபிஷேகம் பன்னீர் அபிஷேகம் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கிறது. மலர்களின் நறுமணம் எல்லோரையும் சுண்டி இழுத்தது.

கோபத்தோடும், ஆத்திரத்தோடும், பயத்தோடும் வந்த அந்த ஜனங்கள் பக்தி பரவசத்தால் தங்களையும் மறந்து கைகூப்பித் தொழுதனர். அப்போது ஒரு அசரீரி குரல் கேட்டது.

"சிவதாசன் முதற் பிறவியிலே சித்தத்தன்மை பெற்று, இங்குள்ள வைத்தியநாதனுக்கு தொன்டு செய்தவன். மறுபிறவியிலும் தொண்டு செய்ய விரும்பினான்.  தாழ்ந்த குலத்தில் பிறந்தாலும் அவனுக்கு வைத்தியநாதசுவாமி அருள்பாலித்தார்.

அவன் இப்பொழுது இளம்வயது சித்தர். வடபுல யாத்திரைக்குச் செல்லும் சிவதாச சித்தன், இறையருளால் பல்வேறு அதிசயங்களைச் செய்து காட்டப்போகிறான். அவனால் இந்த சித்தர் காட்டில் குடியிருக்கும் கோயில் பெருமை படப்போகிறது.

சிவதாசன் வடபுலம் சென்றாலும், தினமும் இங்கு பறவையாக வந்து இறைவனுக்கு மலர் தூவுவான். கொழுந்துவிட்டு எரிகின்ற விளக்கின் அருகே காக்கையாக இருந்து நெய்தனை உண்டு மகிழ்வான்.

இந்த கோயிலுக்கு வருகின்ற உண்மையான பக்தர்களின் குறைகளை, தன் சித்தத்தன்மையால் தீர்த்து வைப்பான். சிவதாசன் இளம் சித்தன்தான், ஆனால் முழுமையான இறையருள் பெற்றவன், இதனை உங்களுக்கு எடுத்துச் சொல்லவே, இங்கு ஜீவா சமாதியான நாங்கள் நான்கு சித்தர்கள் உங்களை வரவழைத்தோம்" என்றது அந்த குரல்.

இதற்குப் பிறகுதான் அந்த கிராமத்து மக்கள் நம்பினார்கள், அதற்கேற்றபடி சில அதிசயங்களும் சித்தர் காட்டில் நடக்க ஆரம்பித்தது.

ஒவ்வொரு பிரதோஷம் தோறும் ஆந்தைகள் இரண்டு வரும். சுவாமி புறப்பாடு ஆகும்பொழுது வந்து அமர்ந்த அந்த இரண்டு (சித்தர்) ஆந்தைகள், பிறகு சுவாமி உள்ளே கொண்டு செல்லப்பட்டவுடனே சிறகடித்துப் பறந்துவிடும்.

இன்றைக்கும் கூட இப்படிப்பட்ட காட்சி நடப்பதாக சொல்கிறார்கள். ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரம் தோறும் சுவாமி சன்னதியில் ஏற்றுகின்ற நெய் விளக்கிற்கு அருகில் காக்காய் வந்து அமரும்.

விளக்கு எரிவதைப் பற்றிக் கவலைப்படாமல் அந்த அகல்விளக்கு நெய்யை மட்டும் உண்டுவிட்டு, எரிகின்ற தீபத்திற்கு இடையூறு இல்லாமல் பறந்து சென்று விடும்.

மாலை நேரத்தில் பறவைகள் அடைக்கலமாகி விடுவதையும் தாண்டி காக்காய் வந்து இப்படிச் சாப்பிட்டு விட்டுப்போவது சிவதாசச் சித்தர் என்று சொல்கிறார்கள்.

யாரேனும் கோயிலில் நள்ளிரவு நேரத்தில் புகுந்து விடாமலிருக்க கோயிலுக்கு வலப் புறத்தில் உள்ள ஜீவசமாதி ஆனா சித்தர்கள் வேத கோஷத்தோடு மாறி மாறி வலம் வந்து கொண்டிருக்கிறார்கள், என்பதுகூட சிவசித்தர் செய்து காட்டும் அதிசயம் தான்.  அந்த கோயிலுக்கு இடது பக்கத்தில் நந்தவனத்தில் பலநூறு ஆண்டுகளாக ஒரு நாகப்பாம்பு அவ்வப்போது நடமாடிக் கொண்டிருக்கிறது, இதுவும் ஒரு சித்தர் என்றும், இதுவரை யாரையும் துன்புறுத்தவில்லை என்றும் பார்த்தவர்கள் சொல்வதையும் கேட்கலாம்.

இன்றைக்கு அந்த கோயிலுக்குச் சென்று சித்தர்கள் தூண்களைச் சுற்றி பிரார்த்தனை செய்தால், சிவதாசச் சித்தரே இன்ன இன்ன தோஷத்திற்கு இன்ன இன்ன நிவர்த்தி என்று எப்படியாவது, யார் மூலமாவது காட்டிவிடுவார், என்று எல்லோரும் உண்மையாகச் சொல்கிறார்கள்.

இது நமது கலிகாலத்தில் அன்றாடம் நடக்கக் கூடிய தெய்வீக நிகழ்ச்சி. சித்தர்கள் நமக்காக அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவரவர்கள், நடக்கின்ற நிகழ்ச்சிகள் வழி நம்புகிறார்கள்.

​சிவதாச சித்தரின் தொகுப்பை படித்த அகத்தியர் அடியவர்களுக்கு, இந்த கோவில் எங்கு இருக்கிறது, ஒருமுறையாவது சென்று பார்க்க வேண்டுமே என்று தோன்றும். அதை பற்றிய தகவல்களை கீழே தருகிறேன்.

அருள்மிகு ஸ்ரீப்ரசூன குந்தளாம்பிகா சமேத ஸ்ரீ தாத்திரீஸ்வரர் கோவில், திருமணம் கிராமம், சித்துக்காடு. [Sri Thatheeswarar Temple, (Chithukadu), South Mada Street, 1/144, Thirumanam Village, Via Pattabhiram, Vayalanallur Post, Chennai - 600072.]

கோவில் திறந்திருக்கும் நேரம் :காலை 8 மணி முதல் 10.30 வரை, மாலை 5 மணிமுதல் இரவு 8 மணிவரை.
அர்ச்சனை நேரம் காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 5.30 மணி முதல் 6.30 வரை.​

தொடர்புக்கு: திரு.குமரன் சிவாச்சாரியார் (Mobile No. +91 94447 93942)

முடிந்தவர்கள், இந்த கோவிலுக்கு சென்று இறைவன், சித்தர்கள் அருள் பெற்றுக் கொண்டு நலமாக வாழ வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்..

​சித்தன் அருள்.................... தொடரும்!​

Thursday 9 October 2014

அந்தநாள் இந்த வருடம் - கோடகநல்லூர் - 04/11/2014


அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!

சித்தன் அருளை வாசித்து வரும் அடியவர்கள், அகத்தியப் பெருமான் நமக்கென உரைத்த மிக முக்கியமான ஒரு சில நாட்கள், சில புண்ணியத் தலங்களை பற்றி அறிந்திருப்பீர்கள். அவை இந்த வருடத்தில் எந்த தியதியில் எங்கு வருகிறது என்பதை முன்னரே தெரிவித்திருந்தேன். அந்த வகையில், இனி இந்த வருடம் கடைசியாக வருவது கோடகநல்லூர்.   ஐப்பசி மாதம் சுக்லபக்ஷ த்ரயோதசி திதியும் உத்திரட்டாதி நட்சத்திரமும் ஒன்று சேர்ந்து 04/11/2014, செவ்வாய் கிழமை அன்று வருகிறது.

சென்ற வாரம் சனிக்கிழமை அன்று கோடகநல்லூர் சென்று தாமிரபரணியில் நீராடி, பச்சைவண்ணப் பெருமாளின் கருடசேர்வை உற்சவத்தை கண்குளிர காண்கிற பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது. நண்பர் ஒருவரின் குடும்ப வகையில் அன்றைய தினம் பெருமாளுக்கு திருவாராதானமும் (அபிஷேக ஆராதனை), இரவு கருட சேர்வையும் (கருட வாகனத்தில் பெருமாளை வீதி உலா கொண்டு செல்வது) நடந்தது. மிக ஆனந்தமான வீதி உலா காட்ச்சியும், ஆராதனையும் காண முடிந்தது.

அந்த நேரத்தில் ஒரு நண்பருடன் 04/11/2014 அன்றைய முக்கியத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கும் பொழுது, பல விஷயங்களை நினைவிற்கு கொண்டு வர முடிந்தது.
  • நாம் தமிழர்கள் மிகச் சிறப்பாக கொண்டாடுகிற ஆடிப் பெருக்கு பண்டிகை இங்குதான் அந்த நாளில் தொடங்கியது. பின்னர் அது ஆடி மாதத்துக்கு மாற்றிக் கொள்ளப்பட்டது.
  • அகத்தியப் பெருமானுக்கு, பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்கள் தங்கள் அதிகாரத்தை பகிர்ந்து கொடுத்த நாளும் அதுவே.
  • கங்கை, தாமிரபரணியில்  மஞ்சள் தேய்த்து குளித்து தன் பாபத்தை போக்கிக் கொண்ட நாளும் அதுவே. 
  • தாமிரபரணியை, லோபா முத்திரையாக ஆக்கி, அகத்தியப் பெருமான் தன்னுடனே வைத்து இந்த தென் தமிழகம் பசுமை பெற விருப்பப் பட்ட நாளும் அதுவே.
  • எல்லா தெய்வங்களும், தேவதைகளும் ஒன்றாக அமர்ந்து அளவளாவி, பகிர்ந்து உண்டு இருந்த நாள் இதுவே.
  • எல்லா நதிகளும் ஒருமித்து இங்கு வந்து அனைவரின் அருளை பெற்ற நாளும் இதுவே.
  • எத்தனையோ சித்தர்கள் ஒன்று கூடி இருந்து அத்தனை தெய்வங்களின் அருளை பெற்ற நாளும் அதுவே.
சென்ற வருடம் அகத்தியர் அடியவர்கள் இங்கு வந்து பெற்ற அனுபவங்களும், இப்படி எத்தனையோ விஷயங்கள் நினைவிற்கு வர, ஒரு சிறிய அவா மனதுள் தோன்றியது. நண்பரிடம் கூறினேன். உடனேயே அதற்கான ஏற்ப்பாடுகளை செய்தார். ஆம்! அது என்ன?

அன்றைய தினம் (04/11/2014) அங்கு வருகிற அனைத்து அடியவர்களுக்கும் இறை, சித்தர்களின் அருள் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்றேன். நண்பர் கோவில் அர்ச்சகர், ட்ரஸ்டி இவர்களுடன் கலந்து பேசி, பெருமாளுக்கு அபிஷேக ஆராதனை, நிவேதனம் இவைகளை செய்ய ஏற்பாடு செய்தார். அன்று அங்கு வந்து செல்கிற எல்லோருக்கும், இறை தரிசனமும், இறைவனுக்கு நிவேதனம் செய்த பிரசாதமும் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார்.
​​
அபிஷேகம் காலை 10 மணிக்குமேல், (தாமதமாக வந்து சேருகிறவர்களுக்காக) நடத்துமாறு வேண்டிக் கொண்டோம். அதற்கும் கோவில் பூசாரி ஒப்புதல் தெரிவித்துள்ளார். முடிந்தவர்கள், விருப்பம் உள்ளவர்கள் அங்கே உழவாரப் பணி கூட செய்யலாம். அல்லது, நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று, உடலால் சேவை செய்யலாம், உதவி செய்யலாம்.

​போன வருடம் வெகு தாமதமாக தெரிவித்தது போல் அல்லாமல், இந்த முறை மூன்று வாரங்களுக்கு முன்னரே உங்கள் அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் என்ற அவாவில், இந்த விஷயங்களை தருகிறேன். விருப்பம் உள்ள அடியவர்கள், எப்படி தீர்மானிக்க வேண்டுமோ, அதை செய்து, அன்றைய தினம் அங்கு சென்று, இறை அருள், சித்தர்கள் அருள் பெற்று, அங்கு நடக்கும் பூசையில் கலந்துகொண்டு, ஆனந்தப் படுமாறும், நல் வாழ்க்கைக்கான அருள் பெறுமாறும் வேண்டிக் கொள்கிறேன்.​

உங்கள் தகவலுக்காக - பயணிக்க வேண்டிய வழி > திருநெல்வேலி > சேரன்மாதேவி வழி தடத்தில், நடுக்கல்லூர் நிறுத்தத்தில் இறங்கி, கோடகநல்லூருக்கு சுமார் 1 கி.மி. நடுக்கல்லூரில் இருந்து ஆட்டோவில் அல்லது நடந்துதான் செல்ல வேண்டும். பஸ் வசதி கிடையாது. கைவசம், அவசியமான விஷயங்களை வைத்துக் கொள்வது நல்லது. அந்த சின்ன கிராமத்தில் எந்த வசதியும் எதிர் பார்க்க முடியாது. வெகு தூரத்திலிருந்து வருபவர்கள், குடும்பத்துடன் வருபவர்கள், திருநெல்வேலியில் தங்கிவிட்டு கோடகநல்லூர் சென்று வருவது நல்லது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

கார்த்திகேயன்!

சித்தன் அருள் - 196 - சிவதாச சித்தர்


சிவதாசன் தலையை ஆட்டிக் கேட்டுக் கொண்டானே தவிர, அவனுக்கு இப்பொழுது அவர் மீது கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை.

சட்டென்று ஒரு சொட்டு தண்ணீரை எடுத்து, காய்ந்து போன இலைச் சருகுகள் மீது தெளித்தார் அந்த சாமியார். அந்த நிமிடம் அந்தச் சருகு, கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

அந்த தீயின் மீது, தன் கையேடு கொண்டு வந்திருந்த திருவோட்டை வைத்தார்.  ஏதோ பிரார்த்தனை செய்தார். அந்த திருவோடு பெரிய மண் பானையாக மாறியது.

யாரோ வந்து அந்த மண் பானைக்குள் அரிசியையும், தண்ணீரையும் கொட்டுவது போல் தோன்றியது.  அடுத்த பத்தாவது நிமிடம் மண் பானை கீழே இறக்கப்பட்டது.

பின்னர் கையை மேலே தூக்கினார். மற்றொரு பாத்திரம் வந்தது. தொடர்ந்து பச்சைக் காய்கறிகள் வந்தது.  அதனை அப்படியே கொதிக்க அந்த தீயில் வைத்தார். அது காய்கறிகளை சமைத்து தந்தது.

அரைமணி நேரத்துக்குள், அந்த இடத்தில் அறுசுவை உணவு தயாராகிவிட்டது. வாழை மர இலையை கொண்டுவந்த அந்த சாமியார், "இந்தா! இந்த சாப்பாடெல்லாம் உனக்குத்தான், வயிறு நிறைய சாப்பிடு" என்றவர், அங்கிருந்து மறைந்து போனார்.

சிவதாசன் இதுவரை இப்படி ஒரு உணவை ஒரு நாளும் சாப்பிட்டதில்லை. கல்யாண வீட்டில் இப்படிப்பட்ட சாப்பாடு உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறான். யாரும் இதுவரை சிவதாசனை கல்யாணத்திற்கு அழைத்ததே இல்லை, என்பதால் அந்த ஆசையை ஆரம்பத்திலேயே விட்டுவிட்டான்.

ஒரு மரத்தடியில் மதிய வேலையில் ஆனந்தமாக அறுசுவை உணவினை உண்டு கொண்டிருக்கிற சிவதாசனை அவ்வழியாக வந்த கிராமத்து மக்கள் பார்த்துவிட்டனர்.

அடுத்த ஒரு மணி நேரத்திற்கு, பெரும்பாலான அந்த ஊர் கிராமத்து மக்கள் சிவதாசனை நோக்கி ஓடிவந்தனர். "இவனுக்கு எப்படி, இப்படிப்பட்ட அறுசுவை உணவு கிடைத்தது? இது யட்சிணி வேலையா? பேய், பிசாசு வேலையா? கேட்டால் "நேற்றைக்கும் இப்படித்தான் நடந்தது" என்கிறான் சிவதாசன் என்று ஆச்சரியப் பட்டார்கள்.

தாங்களும் அந்த அறுசுவை உணவை ருசி பார்க்க விரும்பினர். இதற்காக சிவதாசனுடன் போட்டி போட்டனர். அவன் கையிலிருந்த உணவை தட்டிப் பறித்தனர்.

ஒவ்வொரு தடவையும், ஒவ்வொருவரும் தட்டிப் பறிக்க, சிவதாசனுக்கு அமுதசுரபி போல் அவன் கையிலிருந்து பல்சுவை உணவுகள் வந்துகொண்டே இருந்தது.

இந்த அதிசயத்தைக் கண்டு, அங்குள்ள அனைவரும் வியந்து போனார்கள். அதோடு சிவதாசனை தேவப்பிறவியாகவும் நினைக்க ஆரம்பித்தனர்.

சிவதாசனுக்கு கூட ஏன் இப்படி நடக்கிறது ? யார் அந்த சாமியார்? எதற்காக என்னிடம் வந்து கொடுக்கணம்? என்று தெரியவில்லை.

யார் எதைக் கேட்டாலும், ஒரு சாமியார் வந்தார். அவர் தான் இப்படி எல்லாம் செய்தார், என்று சொன்னானே தவிர, வேறு எதுவும் சொல்லவில்லை.

எல்லோரும் நன்றாக அறுசுவையும் உண்டு கலைய ஆரம்பித்தனர். ஒரு சிலரோ ராத்திரி வரை சிவதாசனுடன் கூடவே இருந்து ராத்திரி வேளைக்கும் இருந்து சாப்பிட்டு போகலாம் என்று தங்கிவிட்டனர்.

ஆனால், அந்த சாமியார் வரவே இல்லை. எனவே, சிவதாசன் தன்னுடைய ஆடு மாடுகளை அழைத்துக் கொண்டு வீடு நோக்கி நடந்தான்.

மறுநாள் காலையிலிருந்தே, சிவதாசன் ஆடு மாடு மேய்க்கும் இடத்திற்கு அக்கம் பக்கக் கிராமத்திலிருந்து கூட நூற்றுக் கணக்கான மக்கள், அந்த அமுதசுரபி உணவிற்காக "நான் முந்தி, நீ முந்தி" என்று போட்டிப் போட்டுக் கொண்டு காத்திருந்தனர்.

சிவதாசனுக்கு தலை கால் புரியவில்லை.

மதிய நேரம் வந்தது.

மற்றவர்களை போல சிவதாசனும் அந்த திகில் சாமியாருக்காக காத்திருக்க வேண்டியதாயிற்று. நேரம் ஆக ஆக பதற்றம்தான் அதிகரித்ததே தவிர, அந்த சாமியார் வரவே இல்லை.

நொந்து போன அந்த கிராமத்தார் சிவதானசனை நோக்கிப் பாய ஆரம்பித்தனர்.

காலையிலிருந்து, மாலைவரை நன்றாக உண்டு விட்டுப் போகவேண்டும் என்று காத்திருந்தவர்களுக்கு பசி அதிகரிக்க அதிகரிக்க கோபமும், ஆத்திரமும்  ஏற்பட, அந்த கோபத்தில் எல்லோரும் சிவதாசனை சாற்று சாற்று என்று சாத்தினர். எல்லோராலும் அடிபட்ட சிவதாசன், அப்படியே மயங்கி விழுந்தான்.

சிவதாசன் இறந்து விட்டான், என்ற பயத்தில் அத்தனை பேர்களும் ஓட, தனித்து மயங்கிக் கிடந்த சிவதாசனை நோக்கி அந்த சாமியார் வந்தார்.

சிவதாசனது பரிதாப நிலையை கண்டு, உடனடியாக மூர்ச்சை தெளிவித்தார். அடுத்த வினாடி சிவதாசனை அழைத்து செல்வது போல், தன மாய சக்தியால் அவனை, தன்னோடு அணைத்தபடி சென்றார் அவர்.

தன் மகன் அடிபட்டு இறந்து போய்விட்டான், என்ற செய்தி கேட்டு சிவதாசனின் பெற்றோர் அலறி அடித்துக்கொண்டு அந்த பொட்டல்காடு மரத்தடிக்கு ஓடிவந்தனர்.

அங்கே வந்து பார்த்தால், சிவதாசனை காணவில்லை.

சித்தன் அருள்................. தொடரும்!

Thursday 2 October 2014

சித்தன் அருள் - 195 - சிவதாச சித்தர்!


சித்தர்கள் பெரும்பாலும் தனிமையாகவும் மலை உச்சியிலும்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை. அதனால் அவர்களைத் தரிசிக்க நாம், மலை உச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்.

மலை உச்சிக்குப் போய்த்தான் சித்தர்களைத் தரிசனம் செய்ய வேண்டுமா? பக்தியால் அந்த சித்தர்களை நம் வீட்டிற்கு, நாம் குடியிருக்கும் ஊருக்கு வரவழைக்க முடியாதா? என்ற கேள்வி நிறைய பேர்களுக்கு எழும். இது நியாயமான கேள்வியும் கூட.

ஒரு சித்தரை பற்றி அகத்தியப்பெருமான் கூறியதை பார்ப்போம்.

சென்னைக்கு அருகே உள்ள ஒரு சிற்றூர். அதை சிற்றூர் என்று சொல்வதை விட எந்த வசதியும் இல்லாத ஒரு கிராமம் என்று சொல்லலாம். அங்கிருப்பவர்கள் பெரும்பாலும் குடியானவர்கள். விவசாயத்தை நம்பி வயிறு வளர்ப்பவர்கள். பண வசதி, படிப்பு வசதி எதுவும் அவர்களுக்கு இருந்ததாக தெரியவில்லை.

அந்த சிற்றூரில் பிறந்தவன் சிவதாசன்.

அருகிலுள்ள பொட்டை வயலில், ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். வறுமையின் உச்சகட்டம் காரணமாக, அந்த ஏழு வயது சிவதாசனுக்கு பசிக்கு சரியான ஆகாரம் கிடைக்கவில்லை.

வீட்டில் பழைய சாதமும், "சாற்றமுது" என்று சொல்லப்படும் நீராகாரமும்தான் சிவதாசனின் உயிரை வளர்த்துக் கொண்டிருந்தன. நல்ல துணிமணி இல்லை. அவனது தலைமுடி எண்ணை பசியைக் கண்டு பல வருஷங்கள் ஆகியிருக்கும். வெறும் கோவணத்தோடுதான் அவன் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான்.

ஒருநாள், மதியவேளை! மரத்தின் நிழலில், அலுமினிய தூக்கில் வைக்கப்பட்டிருந்த பழைய சாதத்தை சாப்பிட சிவதாசன் சென்றபோது, கால் தடுக்கிக் கீழே விழுந்தான். விழுந்த வேகத்தில் அலுமினியத் தூக்கு உருண்டு, அதிலுள்ள சாப்பாடு எல்லாம் மண்ணில் கொட்டிவிட்டது.

இந்த சாப்பாட்டை விட்டால், இரவு ஒன்பது மணிக்குத்தான் கஞ்சியோ, கூழோ கிடைக்கும். பசி வயிற்றைக் கிள்ளியது. மண்ணில் விழுந்த உணவை மேலோட்டமாக எடுத்துச் சாப்பிட்டு விடலாமா என்று கூட யோசித்தான். ஆனால் மனது கேட்கவில்லை.

சிவதாசனுக்கு பசி போயிற்று. ஆனால் அழுகைதான் வந்தது. குமறிக் குமறி அழுதான். இவனது அழுகை அந்த பொட்டல்காட்டில் "ஒ"வென்று ஒலித்தது.

அப்போது,

"சாப்பாடிற்குதானே அழுகிறாய், இந்தா, இதில் உனக்கு வேண்டிய எல்லா சாப்பாடும் இருக்கிறது. ஆசை தீர சாப்பிடு!" என்று ஒரு வயதான சாமியார் தன் கையிலிருந்த பெரிய பொட்டலத்தைக் கொடுத்தார்.

வந்தவர் யாரென்று கூட கேட்காமல், பெரியவர் கொடுக்கிறாரே, என்று அதை பொறுமையாகச் சாப்பிடாமல் அவசர அவசரமாக அப்படியே முழுங்கினான். கடித்து சாப்பிடக் கூட அவனால் பொறுமை காட்ட முடியவில்லை.

சாப்பிட்டு முடித்துவிட்டு திரும்பி பார்த்தான் சிவதாசன். சாப்பாடு கொடுத்த அந்த பெரியவரை காணவே இல்லை.

"சரி! ஏதோ வழிப்போக்கர் போலிருக்கிறது. என் நிலையைக் கண்டு இரக்கப்பட்டு சாப்பாடு கொடுத்திருக்கிறார், என்று எண்ணிக் கொண்டானே தவிர, வேறு சிந்தனை அவனுக்கு வரவில்லை.

​மறுநாள், வழக்கம்போல் ஆடு மாடுகளை அழைத்துக்கொண்டு, அந்த பொட்டல்காடு நோக்கிப் புறப்பட்டான். நேற்றைக்காவது அவன் தாய் தூக்கில் சாப்பாடு கொடுத்தாள்.  இன்றைக்கு முற்றிலும் அவளால் எழுந்திருக்க கூட முடியாமல் ஜுரத்தில் இருந்ததால், சிவதாசனுக்கு சாப்பாடு கட்டிக் கொடுக்க முடியவில்லை.

சிவதாசனுக்கு, ஒரு நம்பிக்கை. நேற்றைக்கு தனக்கு உணவளித்த அதே சாமியார் இன்றைக்கும் தனக்கு மதியம் சாப்பாடு தருவார், என்று நம்பினான். அதற்காக மதியம் வரை காத்திருந்தான்.

அதே பெரியவர், மத்தியான நேரத்தில், சிவதாசனுடைய இருப்பிடத்தை நோக்கி வந்தார். ஆனால் அவர் கையில் சாப்பாடு பொட்டலம் இல்லை.

இது சிவதாசனுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

வந்த, அந்த பெரியவர் சிவதாசனது ஏமாற்றத்தைக் கண்டு மெல்லியதாக சிரித்து, அவன் முகத்தைத் தட்டிக் கொடுத்தார்.

 "பசியோடு இருக்கிறோம்! சாப்பாடு கொடுக்கவில்லை. மாறாக என்ன சிரிப்பு வேண்டியிருக்கு? என்று எரிச்சல் பட்ட சிறுவன், முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டான்.

"தம்பி! சிவதாசா! உனக்கு என் மீது கோபமா?" என்றார் அவர்.

"ஆமாம்" என்று மாடுபோல் தலை ஆட்டினான்.

"எதுக்கு? நான் நேற்றைக்கு மாதிரி சாப்பாடு தரவில்லை என்பதற்குத்தானே!" ஒரு பச்சைக் குழந்தை போல் கேட்டார் அந்த பெரியவர்.

"ஆமாம்" என்று பலமாக தலை ஆட்டினான்.

"சரி கோபப்படாதே! இப்போ உனக்கு சாப்பாடுதானே வேணும்" என்றவர், ஏதோ கையையும், காலையும் அசைத்தார், ஜபம் பண்ணினார். கை பட தான் கொண்டுவந்த ஒரு "திருஓட்டை" எடுத்து கீழே வைத்தார். மரத்தின் சருகுகள் காய்ந்து கீழே கிடந்ததில், இரண்டு உதிரிச் சருகுகளை கொண்டுவந்தார்.

காலை மடக்கி அமர்ந்துகொண்டார்! ஏதோ த்யானம் செய்தார். அவரது வாயோ எதையோ நினைத்து முணுமுணுத்தது. சாமியாரின் இந்த செய்கைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சிவதாசனுக்கு, இப்பொழுது பசி போயிற்று.

பேசாமல் அவனும் இந்த சாமியார் எதிரில் உட்கார்ந்துவிட்டான்.

சாமியார் கண்ணை திறந்து பார்த்தார். சிவதாசன் கையைக் கட்டிக்கொண்டு தன் எதிரே அமர்ந்திருப்பதை கண்டார்.

"ஒரு நிமிடம் பொறு. உனக்கு இலை, பாயாசத்தோடு சாப்பாடு வரும்" என்றார்.

சித்தன் அருள்.................... தொடரும்!