​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 9 October 2014

சித்தன் அருள் - 196 - சிவதாச சித்தர்


சிவதாசன் தலையை ஆட்டிக் கேட்டுக் கொண்டானே தவிர, அவனுக்கு இப்பொழுது அவர் மீது கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை.

சட்டென்று ஒரு சொட்டு தண்ணீரை எடுத்து, காய்ந்து போன இலைச் சருகுகள் மீது தெளித்தார் அந்த சாமியார். அந்த நிமிடம் அந்தச் சருகு, கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

அந்த தீயின் மீது, தன் கையேடு கொண்டு வந்திருந்த திருவோட்டை வைத்தார்.  ஏதோ பிரார்த்தனை செய்தார். அந்த திருவோடு பெரிய மண் பானையாக மாறியது.

யாரோ வந்து அந்த மண் பானைக்குள் அரிசியையும், தண்ணீரையும் கொட்டுவது போல் தோன்றியது.  அடுத்த பத்தாவது நிமிடம் மண் பானை கீழே இறக்கப்பட்டது.

பின்னர் கையை மேலே தூக்கினார். மற்றொரு பாத்திரம் வந்தது. தொடர்ந்து பச்சைக் காய்கறிகள் வந்தது.  அதனை அப்படியே கொதிக்க அந்த தீயில் வைத்தார். அது காய்கறிகளை சமைத்து தந்தது.

அரைமணி நேரத்துக்குள், அந்த இடத்தில் அறுசுவை உணவு தயாராகிவிட்டது. வாழை மர இலையை கொண்டுவந்த அந்த சாமியார், "இந்தா! இந்த சாப்பாடெல்லாம் உனக்குத்தான், வயிறு நிறைய சாப்பிடு" என்றவர், அங்கிருந்து மறைந்து போனார்.

சிவதாசன் இதுவரை இப்படி ஒரு உணவை ஒரு நாளும் சாப்பிட்டதில்லை. கல்யாண வீட்டில் இப்படிப்பட்ட சாப்பாடு உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறான். யாரும் இதுவரை சிவதாசனை கல்யாணத்திற்கு அழைத்ததே இல்லை, என்பதால் அந்த ஆசையை ஆரம்பத்திலேயே விட்டுவிட்டான்.

ஒரு மரத்தடியில் மதிய வேலையில் ஆனந்தமாக அறுசுவை உணவினை உண்டு கொண்டிருக்கிற சிவதாசனை அவ்வழியாக வந்த கிராமத்து மக்கள் பார்த்துவிட்டனர்.

அடுத்த ஒரு மணி நேரத்திற்கு, பெரும்பாலான அந்த ஊர் கிராமத்து மக்கள் சிவதாசனை நோக்கி ஓடிவந்தனர். "இவனுக்கு எப்படி, இப்படிப்பட்ட அறுசுவை உணவு கிடைத்தது? இது யட்சிணி வேலையா? பேய், பிசாசு வேலையா? கேட்டால் "நேற்றைக்கும் இப்படித்தான் நடந்தது" என்கிறான் சிவதாசன் என்று ஆச்சரியப் பட்டார்கள்.

தாங்களும் அந்த அறுசுவை உணவை ருசி பார்க்க விரும்பினர். இதற்காக சிவதாசனுடன் போட்டி போட்டனர். அவன் கையிலிருந்த உணவை தட்டிப் பறித்தனர்.

ஒவ்வொரு தடவையும், ஒவ்வொருவரும் தட்டிப் பறிக்க, சிவதாசனுக்கு அமுதசுரபி போல் அவன் கையிலிருந்து பல்சுவை உணவுகள் வந்துகொண்டே இருந்தது.

இந்த அதிசயத்தைக் கண்டு, அங்குள்ள அனைவரும் வியந்து போனார்கள். அதோடு சிவதாசனை தேவப்பிறவியாகவும் நினைக்க ஆரம்பித்தனர்.

சிவதாசனுக்கு கூட ஏன் இப்படி நடக்கிறது ? யார் அந்த சாமியார்? எதற்காக என்னிடம் வந்து கொடுக்கணம்? என்று தெரியவில்லை.

யார் எதைக் கேட்டாலும், ஒரு சாமியார் வந்தார். அவர் தான் இப்படி எல்லாம் செய்தார், என்று சொன்னானே தவிர, வேறு எதுவும் சொல்லவில்லை.

எல்லோரும் நன்றாக அறுசுவையும் உண்டு கலைய ஆரம்பித்தனர். ஒரு சிலரோ ராத்திரி வரை சிவதாசனுடன் கூடவே இருந்து ராத்திரி வேளைக்கும் இருந்து சாப்பிட்டு போகலாம் என்று தங்கிவிட்டனர்.

ஆனால், அந்த சாமியார் வரவே இல்லை. எனவே, சிவதாசன் தன்னுடைய ஆடு மாடுகளை அழைத்துக் கொண்டு வீடு நோக்கி நடந்தான்.

மறுநாள் காலையிலிருந்தே, சிவதாசன் ஆடு மாடு மேய்க்கும் இடத்திற்கு அக்கம் பக்கக் கிராமத்திலிருந்து கூட நூற்றுக் கணக்கான மக்கள், அந்த அமுதசுரபி உணவிற்காக "நான் முந்தி, நீ முந்தி" என்று போட்டிப் போட்டுக் கொண்டு காத்திருந்தனர்.

சிவதாசனுக்கு தலை கால் புரியவில்லை.

மதிய நேரம் வந்தது.

மற்றவர்களை போல சிவதாசனும் அந்த திகில் சாமியாருக்காக காத்திருக்க வேண்டியதாயிற்று. நேரம் ஆக ஆக பதற்றம்தான் அதிகரித்ததே தவிர, அந்த சாமியார் வரவே இல்லை.

நொந்து போன அந்த கிராமத்தார் சிவதானசனை நோக்கிப் பாய ஆரம்பித்தனர்.

காலையிலிருந்து, மாலைவரை நன்றாக உண்டு விட்டுப் போகவேண்டும் என்று காத்திருந்தவர்களுக்கு பசி அதிகரிக்க அதிகரிக்க கோபமும், ஆத்திரமும்  ஏற்பட, அந்த கோபத்தில் எல்லோரும் சிவதாசனை சாற்று சாற்று என்று சாத்தினர். எல்லோராலும் அடிபட்ட சிவதாசன், அப்படியே மயங்கி விழுந்தான்.

சிவதாசன் இறந்து விட்டான், என்ற பயத்தில் அத்தனை பேர்களும் ஓட, தனித்து மயங்கிக் கிடந்த சிவதாசனை நோக்கி அந்த சாமியார் வந்தார்.

சிவதாசனது பரிதாப நிலையை கண்டு, உடனடியாக மூர்ச்சை தெளிவித்தார். அடுத்த வினாடி சிவதாசனை அழைத்து செல்வது போல், தன மாய சக்தியால் அவனை, தன்னோடு அணைத்தபடி சென்றார் அவர்.

தன் மகன் அடிபட்டு இறந்து போய்விட்டான், என்ற செய்தி கேட்டு சிவதாசனின் பெற்றோர் அலறி அடித்துக்கொண்டு அந்த பொட்டல்காடு மரத்தடிக்கு ஓடிவந்தனர்.

அங்கே வந்து பார்த்தால், சிவதாசனை காணவில்லை.

சித்தன் அருள்................. தொடரும்!

1 comment:

  1. Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!

    ReplyDelete