​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 31 March 2017

சித்தன் அருள் - 628 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவன் அருளாலே, எமை நாடுகின்ற மனிதர்களுக்கு, ஆதி முதல் அந்தம் வரை பல்வேறு தோஷங்கள் இருக்க, யாமும் அதையெல்லாம் மனதில்கொண்டு, இறைவனின் திருவடியை வணங்கி, எமை நாடிய ஆத்மா பல்வேறு பிறவிகளில் செய்த பாவங்களின் காரணமாக இந்தப் பிறவியிலே இப்படியொரு சிக்கலில் இருக்கிறது. இந்த ஆத்மாவை மன்னித்து, இந்த ஆத்மாவிற்கு நல்லதொரு வழியைக் காட்டவேண்டும் என்றுதான். யாமும் பிரார்த்தனை செய்து அந்த இறைவனிடம் முழு சரணாகதி செலுத்தி, அந்த பரந்த பரம்பொருள் எதை உணர்த்துகிறதோ அதை எமை நாடுகின்ற மனிதர்களுக்கு உணர்த்துகிறோம். ஆயினும் கூட ஒரு துன்பம் வந்த உடனேயே சட்டென்று விழி மூடி விழி திறப்பதற்குள் அந்த துன்பம் போய்விடாதா? என்ற ஏக்கம்தான் மனிதனிடம் இருக்கிறது. கடுமையான பாவவினைகளின் காரணமாகத்தான் ஒரு மனிதனுக்கு கடும் வியாதியும், கடுமையான தன சிக்கலும், ருணமாகிய கடனும், கடும் பொருளாதார நெருக்கடியும், உறவு சார்ந்த சிக்கல்களும் இன்னும் பிற துன்பங்களும் வருகிறது. எனவே ஒரு மனிதன் தன் வாழ்வியல் முயற்சிகளோடு பரிபூரண சரணாகதி பக்தியையும் வளர்த்துக்கொண்டால் கட்டாயம் மெல்ல, மெல்ல அவனுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளிலிருந்து வெளியே வரலாம்.

Thursday 30 March 2017

சித்தன் அருள் - 627 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு 

இறைவன் கருணையாலே, மனிதர்களின் எண்ணங்கள், அவர்களுக்குள் தோன்றுகின்ற விதவிதமான சிந்தனைகள், பல்வேறு குழப்பங்களை வாழ்க்கையிலே ஏற்படுத்திவிடுகிறது. இறைவனின் கருணையாலே நாங்கள் கூறவருவது யாதென்றால் சாத்திரங்களும், சாத்திரங்களை ஒட்டி நடக்கவேண்டிய நிகழ்வுகளும் ஒருவிதத்தில் மெய்தான், யாங்கள் மறுக்கவில்லை. ஒவ்வொன்றிற்கும் ஒரு மரபு இருக்கிறது. நல்ல தினம், சிறப்பான கோட்களின் ஆட்சி கொண்ட தினம், சுப ஹோரை, சுப நக்ஷத்திரம் இன்னும் திதி போன்றவற்றையெல்லாம் பார்க்கத்தான் வேண்டும், நாங்கள் மறுக்கவில்லை. இவற்றின் ஆளுமை மனிதன் மீது என்றென்றும் இருந்துகொண்டேதான் இருக்கிறது, ஒவ்வொரு மனிதனின் கர்மவினைகளை அனுசரித்து. ஆயினும்கூட எல்லா நிலையிலும் இப்படியெல்லாம் எண்ணி அச்சம் கொண்டிடத் தேவையில்லை. மெய்யான இறைபக்திக்கு காலங்களோ, வேறு சாத்திரங்களோ தேவையில்லை. ஆழ்ந்த பக்தியும், திடமான பக்தியும், மனித நேயமும் கொண்டு எந்த இடத்திலும் இறைவனை ஒரு மனிதன் வழிபடலாம். அப்படி வழிபட வேண்டியதற்குரிய ஒரு குடிலை அமைத்துக்கொள்ளலாம். இது அடிப்படை ஆதார விதியாகும். அதிலும் பரம்பொருளை மூத்தோன் எனப்படும் விநாயகப்பெருமான் வடிவத்திலே மிக எளிமையாக அணுகலாம் என்பதற்காகத்தான் முழுமுதற்கடவுள் என்றும், மூத்தோன் என்றும், வேழமுகத்தோன் என்றெல்லாம் அழைக்கப்பட்டு அனைத்து பூஜைகளிலும், அனைத்து சுப நிகழ்வுகளிலும் முன்னதாக விநாயகர் வழிபாட்டை செய்வது மரபாக இருந்துவருகிறது. ஒரு எளிய வடிவமாக பரம்பொருள் காட்சியளிக்கக்கூடிய நிலையிலே அந்த விநாயகப்பெருமான் வடிவம் இருக்கிறது. இந்த வடிவத்திற்கும், பக்திபாவனைக்கும் எத்தனையோ தொடர்பிருக்கிறது. அஃது ஒருபுறம் இருந்தாலும் மஞ்சளிலே பிடித்து வைத்தாலும், பசுஞ்சாணத்திலே பிடித்து வைத்தாலும் விநாயகப்பெருமான் என்று எண்ணிவிட்டால் அது விநாயகப்பெருமான்தான். எஃதாவது ஒன்றை அஃது பரம்பொருள், அதிலே பரம்பொருள் உறைகிறது என்று மெய்யாக யார் எண்ணிப்பார்த்தாலும் அங்கே பரம்பொருள் இருப்பதும், வெளிப்படுவதும் உறுதி. இறைவனின் கருணையாலே இந்த உன்னதமான கருத்தினை மனதிலே கொண்டு ஆன்மீக விஷயங்களை பார்க்கும்பொழுது பல்வேறு விதமான தேவையற்ற குழப்பங்கள் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் மனிதர்களிடம் இருந்துவருகிறது. அதற்கும் எத்தனையோ காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

பல்வேறு தருணங்களில் மனிதர்களுக்கு அச்சம் வந்துவிடுகிறது. ‘குலதெய்வத்தை வணங்கவில்லை. எனவே குலதெய்வம் சினம் கொண்டுள்ளது. இந்த தெய்வத்தை வணங்கவில்லை. எனவே அந்த தெய்வம் சினந்து நம் குடும்பத்திற்கு துன்பத்திற்கு மேல் துன்பம் தருகிறது, என்றெல்லாம் மனிதர்கள் பல்வேறு தருணங்களில் எண்ணுவதும், பேசிக்கொள்வதும், பல ஆன்மீகவாதிகளும் இதை உறுதிப்படுத்துவதுபோல் நடந்துகொள்வதும் தேவையற்ற கருத்தாகும். கோடானுகோடி பாவங்களை மனிதர்கள் அன்றாடம் செய்கிறார்கள். எவையெல்லாம் செய்யக்கூடாது என்று தெரிந்தாலும் எஃதாவது ஒரு காரணத்தை சுட்டிக்காட்டி ‘நான் இதனால் இந்தத் தவறை செய்யவேண்டியிருக்கிறது' என்று சமாதானம் கூறிக்கொண்டு தொடர்ந்து செய்துகொண்டே வருகிறான். பல மனிதர்களும் அவ்வாறு பலகீனமான மனம் கொண்டிருப்பதால், எல்லாவகையான குற்றங்களையும் இந்த உலகிலே காலகாலம் செய்து கொண்டேயிருக்கிறார்கள். அப்பொழுதெல்லாம் சினம் கொண்டிடாத இறைவன், ஆகம விதியில் பிழை ஏற்பட்டுவிட்டாலோ அல்லது தன்னை வந்து மனிதன் வணங்கவில்லை என்பதாலோ சினம் கொள்ளவா போகிறார்? ஒருபொழுதும் அப்படியெல்லாம் இறைவன் சினம் கொள்வதில்லை. தான் படைத்த உயிர்கள் பக்குவம் அடையவேண்டும். பக்குவம் அடையாமல் பாவத்தை செய்து, செய்து மீண்டும் மாயையில் வீழ்கிறார்களே? என்று எண்ணி வேண்டுமானால் வருத்தம் கொள்ளலாம். இது கூட வார்த்தைக்காக நாங்கள் கூறுவது. எந்தவிதமான உணர்வுக்கும் ஆட்படாத நிலைதான் பரம்பொருளின் நிலை.

Wednesday 29 March 2017

சித்தன் அருள் - 626 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் இஃதொப்ப யாம் இறைவனின் கருணையைக்கொண்டு என்றும், இறைவனின் அருளைக்கொண்டு என்றும் காலகாலம் இயம்பிக்கொண்டே இருக்கிறோம். இஃதொப்ப நீக்கமற நிறைந்திருக்கக்கூடிய இறையாற்றல் எல்லா இடங்களிலும், எல்லா உயிர்களிலும் தங்கி எல்லா நிலைகளிலும் தன் ஆற்றலை எப்பொழுதுமே செயல்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. இங்ஙனமாயின் இதை பெரும்பாலான உயிர்கள், குறிப்பாக, மனிதர்கள் ஏன் உணர முடிவதில்லை? என ஆய்ந்து பார்க்குங்கால் இறைவனின் தன்மைகளை, இறைவனின் குணநலன்களை, இறைவன் எனும் மாபெரும் சக்தியை மனிதன், தன் உடலியல் சார்ந்த வாழ்வியல் நோக்கிலே என்றென்றும் வைத்து பார்ப்பதால் புலன்கள் புரிந்துகொள்ளக்கூடிய நிலையில் அவன் யோசித்துப் பார்ப்பதால் மட்டுமே இஃதொப்ப மனிதர்களால் இறைத்தன்மையை கடுகளவும் புரிந்துகொள்ள முடியாமல் போகிறது. இறைத்தன்மையை உணரமுடியாமல் போகிறது. தெய்வீகம் உள்ளே, உள்ளே, உள்ளே, உள்ளே, உள்ளே என்று ஒளிர்ந்தாலும், மனிதனால் அந்த ஒளிர்தலை புரிந்துகொள்ள முடியாமல் போகிறது. மாயையும், அறியாமையும், ஆசையும், தன்முனைப்பும், தீவிரமான பற்றும், இச்சையும், இதைத் தாண்டிய ஒரு நிலை இருக்கிறது என்பதை உணர ஒட்டாமல் இதற்குள்ளாகவே மனிதன் வாழ்ந்து, வாழ்ந்து, வாழ்ந்து, வாழ்ந்து, வாழ்ந்து, வாழ்ந்து அப்படியே மாய்கிறான். இதிலிருந்து ஆத்மாக்களை கடைத்தேற்ற வேண்டும் என்பதுதான் இறைவன் எமக்கிட்ட பணி. ஆயினும் அப்பணி எளிய பணி அல்ல என்பது எமக்குத் தெரியும். இறைவன் அருளாலே, இறைவனின் பெரும் கருணையாலே இதனை எம்போன்ற மகான்கள் காலகாலம் விதவிதமான சூழலிலே, விதவிதமான லோகத்திலே, விதவிதமான பக்குவம்கொண்ட மனிதர்களுக்கு அவனவன் மன நிலை அறிந்து கூட்டிக்கொண்டேயிருக்கிறோம்.

இறைவன் அருளாலே நல்விதமாய் ஒரு மனிதன் வாழவேண்டுமென்று எண்ணுகிறான். அந்த நல்விதம் எது? என்பதுதான் மனிதர்களுக்கு பெரும்பாலும் காலகாலம் புரிவதில்லை. உலகியல் வாழ்க்கை என்பது ஒரு மனிதனுக்கு தேவையே இல்லை என்பது போல்தானே மகான்களின் வாக்குகள் இருக்கிறது. அங்ஙனமாயின் எதற்கு இந்த உலகைப் படைத்திடவேண்டும்? எதற்கு இந்த உடலை தந்திடவேண்டும்?  எதற்கு இந்த உடல் சார்ந்த இன்பங்களையெல்லாம் வைத்திடவேண்டும்? என்றெல்லாம் மனித மனம் ஐயங்களை எழுப்பிக்கொண்டே இருக்கும். இப்படி எத்தனையோ ஐயங்கள் ஒரு மனிதனுக்கு வரவேண்டும். ஐயங்கள் எழ, எழத்தான் ஒரு மனிதன் தனக்குள்ளே அவன் உள்ளே சென்றுகொண்டிருக்கிறான் என்று பொருள். சென்றுகொண்டே இருக்கவேண்டும். பூமியின் உட்புறத்தே தோண்டித் துருவி பார்க்கும்பொழுது எடுத்த எடுப்பிலேயே எப்பொழுதும் எல்லா இடத்திலும் வைரமும், கனகமும் ஏன்? சுக்ர உலோகமும் கிட்டிவிடாது. உயர்ந்த உலோகம் என்று மனிதனால் மதிக்கப்படுகின்ற விஷயமே பூமியின் மேற்பரப்பிலே இல்லாமல் இன்னும், இன்னும், இன்னும் தோண்டத்தான் தென்படுகிறது என்றால், ஒரு மனிதன் தன்னைத்தானே உணர்தல் என்பது வெறும் மேலெழுந்தவாரியாகவே நடந்துவிடுமா? அல்லது அவன் மேல் எழுந்த வாரியாக இருக்கக்கூடிய உலகியலால் நடந்துவிடுமா? அவன் மேல் எழுந்த உலகியல் வாரி, அவையெல்லாம் அவன் வாரி வைத்துக்கொள்வதாலே நடந்துவிடுமா?  எனவே இறைவனை உணர்தலும், அப்படி உணர்வதால் யாது கிட்டும்? என்பதை உணர்தலும், அப்படி கிட்டுவதால் என்ன லாபம்? என்பதை உணர்தலும் எளிய முறையில் ஒரு மனிதனால் செய்துவிட இயலாது. அதற்காக அது கடினமான முறையும் அல்ல. மெய்யாக, மெய்யாக, மெய்யாக பற்றை அறுத்து, பற்றே அனைத்து துன்பங்களுக்கும் காரணம் என்பதை உணர்ந்துகொண்டு, அஃதே சமயம் பெற்ற உடலுக்கு ஏற்ப லௌகீக கடமைகளை மனசான்றின்படி நன்றாக நடத்திக்கொண்டு உள்ளுக்குள் ஆத்ம தேடலை வைத்துக்கொண்டே இருக்கக்கூடிய மனிதனுக்கு இறைவனருள் என்ன? என்பது இறைவன் அருளாலே மெல்ல, மெல்ல விளங்கத் துவங்கும். இதனை ஒவ்வொரு மனிதர்களும் புரிந்துகொண்டு வாழ்வதே சிறப்பான வாழ்க்கைக்கு வழிவகுப்பதாகும்.

Tuesday 28 March 2017

சித்தன் அருள் - 625 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் பலர் எண்ணலாம், எப்பொழுது வந்தாலும் நலமான வாழ்வு உண்டு. நலமான எதிர்காலம் உண்டு. அச்சம் வேண்டாம். கலக்கம் வேண்டாம். கவலை வேண்டாம் என்று சித்தர்கள் கூறுகின்றார்கள். ஆயினும்கூட, இஃதொப்ப உலகத்தில் அவ்வாறு எல்லாவகையிலும் நிம்மதியாக, சந்தோஷமாக வாழ முடிவதில்லையே? பின் சித்தர்கள் ஆசிகள் கூறுகிறார்களே? பின் அது அவ்வாறு நடைமுறையில் காண முடியவில்லை? என்று பலரும் ஐயமும், குழப்பமும், ஏன்? எங்கள் மீது விரக்தியும் கொண்டுதான் வாழ்கிறார்கள். நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

இஃதொப்ப இந்த உலகத்தில் ஒவ்வொரு ஆன்மாவும் பிறவியெடுத்ததின் நோக்கம், பூர்வீக பாவங்களைக் கழிப்பதற்கும், புதிதாக பாவங்களை சேர்த்துக் கொள்ளாமல் வாழ்வதற்குமே. அஃதாவது இது முற்றிலும் மனித பிறவிக்கு 100 க்கு 100 விழுக்காடு பொருந்தும். ஆயினும்கூட எண்ணற்ற பாவங்களை பிறவிகள்தோறும், இது ஆன்மாவிற்கு தான் செய்தது அல்லது செய்து கொண்டிருப்பது பாவம். இதனால் மற்றவர்களுக்கு துன்பமும், துயரமும், மனவேதனையும் ஏற்படும் என்பதை இறைவன் பெருங்கருணை கொண்டு கால அவகாசம் கொண்டு உணர்த்தவே எண்ணுகின்றார். இல்லையென்றால் எல்லோரும் கூறுவதுபோல தவறு செய்யும்பொழுதே ஒரு மனிதனை தடுத்துவிடலாமே? தண்டித்து விடலாமே? என்ற பார்வையிலே பார்த்தால், இறைவன் எண்ணினால் அவ்வாறும் செய்யலாம்தான். ஏன்? அதைவிட படைக்கும்பொழுதே எல்லோரும் நல்லவர்களாக இருக்கவேண்டும். நல்லதையே எண்ணவேண்டும், நல்லதையே உரைக்கவேண்டும் நல்லதையே செய்யவேண்டும் என்று  எல்லாம் வல்ல இறைவன் எண்ணினால் அது மிக எளிதாக நடக்குமே? ஆனால் அவ்வாறு இல்லாமல் இஃதொப்ப நிலையிலே மனிதர்களுக்கு எல்லாவகையான சுதந்திரங்களையும் தந்து, அவனை, பல்வேறு தருணங்களில், அவன் போக்கிலேவிட்டு ‘இஃது நல்லது, இஃது தீயது, இஃது தக்கது, இஃது தகாதது' என்று அவனையே சிந்தித்துப் பார்க்க வைத்து, இயல்பாக ஒருவன் நல்லவனாக மாறவேண்டுமே தவிர தண்டனைக்கு பயந்தோ, அல்லது தன்னை கண்காணிக்கின்றான் ஒருவன், அதாவது தான் கண்காணிக்கப்படுகிறோம் என்பதற்காகவோ அல்லது வேறு எதற்காகவோ, அச்சத்தினாலோ அல்லது வேறு எஃதாவது உபாதை ஏற்பட்டுவிடும் என்பதற்காகவோ ஒருவன் நல்லவனாக இருப்பது என்பது இறைவனை பொருத்தவரை ஏற்புடையது அல்ல.

Monday 27 March 2017

சித்தன் அருள் - 624 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

தங்கம் என்றால் அதன் இயல்பு எந்த நிலையிலும் மாறாதது. அதைபோல மனிதன் என்றால் தர்மத்திலும், சத்தியத்திலும் எப்பொழுதும் வழுவாமல் இருக்கவேண்டும். அந்த இயல்புதன்மை ஒரு ஆன்மாவிற்கு எப்பொழுது வரும்? ஏற்கனவே சேர்த்த பாவங்கள் அவனை நல்ல பாதையில் செல்லவிடாது. அந்த பாவங்களை  (கழிக்க) இறைவன் கருணைகொண்டு எஃதாவது ஒரு பிறவியிலே சில நல்ல விஷயங்களை செய்வதற்குண்டான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவார் அல்லது சில நல்லவர்களின் தொடர்பை ஏற்படுத்தித் தருவார் அல்லது நல்ல தாய், தந்தையர்களுக்கு பிள்ளைகளாக பிறக்க வேண்டிய சூழ்நிலையை அப்படியொரு வாய்ப்பை தந்தருள்வார். அதைப் பிடித்துக்கொண்டு மனிதன் மெல்ல, மெல்ல மேலேறவேண்டும். அஃதாவது எத்தனையோ கணக்கற்ற பிறவிகளை பிறந்து, பிறகு இறந்து, பிறகு பிறந்து, பிறகு இறந்து, அவையெல்லாம் நினைவுப்பதிவில் இருந்தும் இல்லாமல் போனதுபோல, இந்த உலக வாழ்க்கையே நிஜம். இந்த தேகம் நிஜம். இந்த தேகம் சார்ந்த சுகத்திற்காகத்தான் பாடுபடவேண்டும். இந்த லோகாய விஷயங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம், என்று சராசரி குணம்கொண்டு வாழ்கின்ற மனிதன் இறைவனின் கருணையால் எஃதாவது ஒரு பிறவியிலே மெல்ல, மெல்ல இவையெல்லாம் பொய். இதனைத் தாண்டி மெய்யான விஷயம் ஒன்று இருக்கிறது. அதனை நோக்கி செல்லவேண்டும். இந்த தேகம் என்பது ஆன்மாவிற்கு ஒரு கூடு போன்றது. இன்னும் கூறப்போனால் ஆன்மா இந்த தேகத்திற்குள் சிறை வைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆன்மா விடுதலை பெற வேண்டுமென்றால், இந்த தேகத்தைவிட்டு செல்வதோடு மீண்டும் ஒரு தேகத்திற்குள் புகாமல் இருப்பதற்கு என்ன வழி? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இப்படி சிந்தித்து, சிந்தித்து, சிந்தித்து, சிந்தித்து கடைத்தேறியவர்களே மகான்களும், ஞானியர்களும், சித்தபுருஷர்களும் ஆவர். இதற்காகத்தான் இத்தனைவிதமான வழிபாடுகளும், சாஸ்திரங்களும், விதவிதமான ஆலயங்களும், மரபுகளும் ஏற்படுத்தப்பட்டன.

ஆனால் காலப்போக்கில் என்னவாயிற்று?  இந்த மரபையும், சாஸ்திரத்தையும் பிடித்துக்கொண்ட மனிதன், அதன் உண்மைத் தத்துவத்தை உணராமல் அல்லது உணர ஒரு முயற்சி செய்யாமல் இருந்துவிட்டான். தேர் இழுக்கவேண்டும் என்பதை கற்றுக்கொண்ட மனிதன் தன் உடலில் இருக்கக்கூடிய குண்டலினி எனும் தேரை, கீழிருந்து மேலே பிரயாசைபட்டு ஐம்புலன்களையும் ஒன்றாக்கி, பிற இச்சைகளையெல்லாம் விட்டுவிட்டு மேலே இழுக்கவேண்டும் என்பதை விட்டுவிட்டான். தீர்த்தமாடுதல் என்றால் உள்ளே சுரக்கும் அமிர்தத்தைத் தூண்டிவிட்டு அதை சுவைத்து, உள்ளே இருக்கும் ஆன்மாவை, உள்ளே சுரக்கும் அமிர்தத்திலே நீராட வைக்கவேண்டும் என்ற உண்மையை மறந்துவிட்டு ஆங்காங்கே இருக்கின்ற நீர்நிலைகளுக்கு சென்று தேகத்தையே சுத்தி செய்துகொண்டிருக்கிறான்.

Saturday 25 March 2017

சித்தன் அருள் - 623 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவனின் கருணையால் இதுபோன்ற ஞானக்கருத்துக்களைதான் இஃதொப்ப ஜீவ அருள் ஒலையிலே யாம் இந்த காலகட்டத்தில் பலரில் சிலருக்கும், சிலரில் சிலருக்கும், சிலரில், சிலரில், சிலரில், சிலரில் சிலருக்கும், ஓதவேண்டும் என்பது இறைவனின் கட்டளையாகும். ஆயினும்கூட அது நடைமுறையில் கடினம் என்பது எமக்கும் தெரியும். ‘வாழ்வியல் பிரச்சினைகள் குறித்து சித்தர்களை அணுகக்கூடாதா?' என்றால் அணுகலாம். ஆனால், அதற்கு நாங்கள் காட்டுகின்ற வழியை மனிதனால் ஏற்க இயலாது. அவன் ஏற்க எண்ணினாலும் அவன் மதியை பிடித்து ஆட்டும் விதி ஏற்கவிடாது. அதனால்தான் பல்வேறு தருணங்களில் நாங்கள் மௌனம் காக்கிறோம். எனவே இடைவிடாத இறைவழிபாடும், தளராத தர்மமும், இயன்ற தொண்டும் இஃதொப்ப எல்லோரையும் உயர்த்தும்.

Friday 24 March 2017

சித்தன் அருள் - 622 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஐயனே! பரமாத்மாவுடன் இந்த ஜீவாத்மா இரண்டறக் கலக்க எந்தெந்த நிலைகளைக் கடக்க வேண்டும் ? ஒவ்வொரு படியிலும் எத்தனை அபாயங்கள் இருக்கின்றன? அவற்றைக் கடந்துவரும் உபாயங்களையும் கூறுங்கள்!

இறைவன் அருளால் இதுவும் மனிதனுக்கு மனிதன் வேறுபடுமப்பா. ஒருவனுக்கு கூறுகின்ற முறை இன்னொருவனுக்கு பெரும்பாலும் பொருந்துவதில்லை. இதில் ஆசாரம், வாமாசாரம் என்று இரண்டு முறைகள் இருக்கின்றன. இதில் பெரும்பாலும் நாங்கள் யாருக்கும் வாமாசாரத்தைக் கூறுவதில்லை. ஏனென்றால் வாமாசாரத்தில் நன்மையை விட தீமைகள், எதிர் விளைவுகள் அதிகமாக இருப்பதால் அதை கூறுவதில்லை. ஆனால் வாமாசார முறையை ஒருவன் சரியாகப் புரிந்து கொண்டு விட்டால் நீ கூறுவது போல பல படிகளை, இன்னும் கூறப்போனால், குறுக்கு வழியிலே இறைவனை உணரக்கூடிய ஒரு நிலை வாமாசாரம். இருந்தாலும் இவற்றை சொல்லளவில் தெரிந்து கொள். செயலளவில் தெரிந்து கொள்ள வேண்டாம். இன்னொன்று ஆசார பூஜைகள் பல செய்து கொண்டே, தர்மங்கள் செய்து கொண்டே, ஸ்தல யாத்திரைகள் செய்து கொண்டே, ஒருவன் இல்லறக் கடமைகளையும் நேர்மையாக நடத்திக் கொண்டே, மனைவி அல்லது மனைவியாக இருக்கப்பட்டவள் கணவனுக்கு வேண்டிய கடமைகளை செய்து கொண்டே, கணவன், மனைவி இருவரும் குழந்தைகளுக்கு வேண்டியவற்றை நல்ல முறையில் செய்து கொண்டே தாராளமாக இறைவனை அடையலாம். ஆனாலும் கூட இதில் உள்ள படிகளில் எல்லாம் மனிதன் ஏறிப்போக  வேண்டுமே தவிர அமர்ந்து விடக்கூடாது. இதில் சிக்கல் என்னவென்றால் மனிதன் அமர்ந்து விடுகிறான். ஆங்காங்கே அமர்ந்து கொண்டே இருப்பதால்தான் அந்த நிலையிலேயே அவனுக்கு அந்த பிறவி பூர்த்தியடைந்து விடுகிறது.

ஒரு மனிதன் ஒரு நீண்ட தூர பயணத்தை துவங்குவதாகக் கொள்வோம். ஒரு நகரத்திலிருந்து ஆயிரம் கல் தொலைவில் உள்ள இன்னொரு நகரம் நோக்கி ஒரு பொது வாகனத்தில் பயணம் செய்வதாகக் கொள்வோம். இடையிடையே சிறு, சிறு ஊர்களும், நகரங்களும் வரும். ஆனால் அவன் இறங்க மாட்டான். ஏனென்றால், அவன் எந்த நகரம் அல்லது எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறானோ அந்த ஊர் வரும்வரை பயணத்தை நிறுத்த மாட்டான் அல்லவா ?

அதைப்போல ஆத்மா எனப்படும் பயணி, தேகம் எனப்படும் வாகனத்தில் ஏறி, இறைவன் எனும் ஊரை அடைவதற்குண்டான பிறவி எனும் பயணத்தை துவங்கியிருக்கிறது. இடையிலே மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை, பதவி ஆசை, இந்த உலக ஆசை – இது போன்ற ஊர்கள் குறுக்கிட்டாலும் அங்கேயெல்லாம் கவனத்தை திசை திருப்பாமல் தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருந்தால் கட்டாயம் இந்தப் படிகளை எல்லாம் ஒரு மனிதன் எளிதில் தாண்டி விடலாம். அறிவு பூர்வமாக சிந்திக்கும்பொழுது ‘ஒன்று, உலகியல் ரீதியாக வேண்டும், தேவை என்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கலாம். ஆனால் அந்தத் தேவை உடலைக் காப்பதற்கும், அந்த உடலை ஆரோக்யமாக வைத்துக்கொள்ள மட்டும் இருந்தால் போதும். அதனையும் தாண்டி தேவையில்லை என்கிற நிலைக்கு ஒரு மனிதன் தன்னை ஆட்படுத்திக்கொள்ள வேண்டும். தொடர்ந்து வெறும் உடல் தேவைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அவன் கவனம் திசை திரும்பி, பரமாத்மனை நோக்கி ஜீவாத்மா செல்வது தடைபட்டுப் கொண்டேயிருக்கும். அப்படி வரக்கூடிய தடைகளை எல்லாம் ஒரு மனிதன் ஈஸ்வர த்யானம் அஃதாவது இறை த்யானம் மூலம் மெல்ல, மெல்ல வெல்லலாம். இதற்கு தர்மமும், சத்தியமும் பக்க பலமாக இருக்கும். எனவே மிக எளிய வழி, எத்தனையோ தர்மங்கள் செய்தாலும், எத்தனையோ புண்ணிய காரியங்களை செய்தாலும், எத்தனையோ ஸ்தல யாத்திரை செய்தாலும் கூட அவனுடைய ஆழ்மனதிலே, அவனுடைய அடிமனதிலே நீங்காத ஒரு இடமாக ‘இறைவனை அடைந்தே தீருவேன்‘ என்று உறுதியான எண்ணத்தோடு இருந்தால் அவன் எதை செய்தாலும் அது குறித்து அவன் பாதிக்கப்படாமல் இருப்பான். அஃதாவது ஒருவன் எங்கிருந்தாலும், எந்த சூழலில் இருந்தாலும் அவனுடைய ஆழ்மனதிலே ஈஸ்வர சிந்தனை அசைக்க முடியாமல் இருந்தால் அந்த ஜீவாத்மா மிக எளிதில் பல படிகளைத் தாண்டிவிடும். ஆனால் அடிப்படையிலேயே அந்த எண்ணம் இல்லாமலும், பரிபூரண சரணாகதி பக்தி இல்லாமலும் இருக்கின்ற மனிதனுக்கு தடுமாற்றங்கள் வரத்தான் செய்யும். அது போன்ற தருணங்களிலே குழப்பம் கொண்டிடாமல் கீழே விழுந்தாலும் ‘விழுவது இயல்பு’ என்று மீண்டும், மீண்டும் எழுந்து அமர்ந்து ‘இறைவா! என்னைக் காப்பது உன் பொறுப்பு' என்றெண்ணி இறைவனை நோக்கி மனதை விரைவாக பயணம் செய்வதற்குண்டான முயற்சியில் இறங்குவதே மனிதனுக்கு உகந்த கடமையாகும். இதை செய்தால் ஜீவாத்மா எளிதில் பரமாத்மாவை அடையும்.

Thursday 23 March 2017

சித்தன் அருள் - 621 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

தேகத்தைப் போற்றவேண்டும். தேகத்தை நன்றாக பேணவேண்டும். தேகத்தை ஆரோக்யமாக வைத்துக்கொள்ள வேண்டும். அஃதல்ல. யாங்கள் அடிக்கடி கூறுவதுபோல, 100 ஆண்டுகள் மேலும் வாழ்வதற்கு என்ன வழியோ அதனை தேகத்திற்கு ஒருவன் செய்துகொள்ளலாம், தவறில்லை. ஆனால், அடுத்த கணம் மரணம் வந்தாலும் ஏற்க மனதையும் தயாராக வைத்திருக்கவேண்டும். உடம்பு 100 வயதையும் தாண்டி வாழ்வதற்குண்டான பயிற்சியை மேற்கொண்டு வஜ்ர தேகமாக மாற்றி வைத்து கொள்ளவேண்டும். மனது, எப்பொழுது மரணம் வந்தாலும் அதை ஏற்கும் நிலைக்கு ஆயத்தமாக இருக்கவேண்டும். இதுதான் சித்தர்களின் வழியாகும். இஃதொப்ப சுயநலமற்று, பந்த, பாசங்களில் சிக்காமல், கடமைகளில் இருந்து தவறாமல், கடமைகளை செய்கிறேன் என்று பாசத்தில் வழுக்கி விழாமல், கடமைகளை செய்கிறேன் என்பதற்காக நேர்மை தவறாமல் ஒருவன் தன்னையும் பாதுகாத்துக்கொண்டு தன் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொண்டு மனதை இறைவனின் திருவடியை நோக்கி வைத்துக்கொண்டு சதாசர்வகாலம் அந்த இறை சிந்தனையிலே வாழவேண்டும்.  ஏன்? ஒருவன் எதை எண்ணுகிறானோ அதுவாகவே மாறிவிடுகிறான். இந்த கருத்து பல மனிதர்கள் அறிந்ததே.

Wednesday 22 March 2017

சித்தன் அருள் - 620 - ஒரு தகவல்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

திரு.சாமிராஜன் என்கிற அகத்தியர் அடியவர் அனுப்பித்தந்த ஒரு தகவலை, கீழே, உங்கள் பார்வைக்காக தருகிறேன், விருப்பம் உள்ளவர்கள் சென்று கலந்து கொள்ளலாம்.

தகவல்:-

இன்று ரைட்மந்த்ரா தளத்தை வாசிக்கும் பொழுது இந்த தகவல் பார்த்தேன். நம் தள வாசகர்களுக்கு பயன் பெறலாம் என்று தங்களுக்கு அனுப்புகிறேன். 

அகத்தியர் லோபாமுத்ரா, கல்யாணதீர்த்தம் கோவில் சார்பாக உலக அமைதி மற்றும் அனைத்து உயிர்களுக்கான பாதுகாப்பு மற்றும் குடும்ப நலன் வேண்டி கணபதி ஹோமம் மற்றும் சித்தர் ஹோமம் அறுபடை வீடு முருகன் கோவிலில் வரும் வியாழன்(23-03-2017) அன்று நடைபெற உள்ளது. 

http://rightmantra.com/?p=29604 அதில் அழைப்பிதழும் உண்டு. அந்த அழைப்பிதழை தாங்கள் பதிவிறக்கம் செய்து பயன் படுத்திக்கொள்ளலாம்.

காலை 6.00 மணிக்கு ஹோமம் துவங்குகிறது.

குறிப்பு: இந்த வேள்வியில் கலந்துகொள்ள கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. இங்கு குறிப்பிட்டுள்ள லிங்கில் சென்று, தகவல்களை பதிவு செய்து கொள்ளவும்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSefGGOn8uPEg_3I3tQ8FP7aM4mQ2QSLpMpMY4YvhTeaOFQKGQ/viewform?embedded=true

கோவில் முகவரி : பெசன்ட் நகர் அறுபடை வீடு முருகன் கோவில், அஷ்டலக்ஷ்மி கோவில் அருகில், காலா ஷேத்ரா காலனி, பெசன்ட் நகர், சென்னை-90.

அறுபடை வீடு முருகன் கோவில் பற்றி அறிய http://rightmantra.com/?p=26840

மிக்க நன்றி அய்யா 
இரா.சாமிராஜன்

சித்தன் அருள் - 619 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

நீக்கமற நிறைந்துள்ள, எங்கும் வியாபித்துள்ள, பெரும் கருணைகொண்ட அந்த பரம்பொருளை எண்ண, எண்ண, எண்ண, எண்ண, ஒரு மனிதனுக்கு தவறு செய்யக்கூடாது, பாவங்கள் சேர்க்கக்கூடாது, என்கிற நினைவு இருந்துகொண்டே இருக்கும்.  இந்த நினைவு இருக்கும்வரையில், ஒரு மனிதன் கூடுமானவரை, சரியான வழியில் சென்றுகொண்டே இருப்பான். பாவங்கள் செய்வதால் ஒரு ஆன்மாவை மனித தேகம் எடுக்க வைத்தோ அல்லது விலங்கு தேகம் எடுக்க வைத்தோ கடுமையாக தண்டிப்பதில் இறைவனுக்கு என்ன லாபம்? ஒரு மனிதன் கண்ணீர் சிந்தினால் அதனால் இறைவனுக்கு எஃதாவது லாபமா?  மூதுரை ஒன்று இருக்கிறதல்லவா! "நன்றும், தீதும் பிறர் தர வாரா" என்று. ஒருவன் நுகர்வதெல்லாம் அவன் என்றோ செய்தவைதான். இன்றொருவன் எல்லா வகையிலும் நிம்மதியாக வாழ்கிறான் என்றால், அவன் அதற்கேற்றாற்போல் முந்தைய பிறவிகளில் உழைத்திருக்கிறான் என்று பொருள். ஒருவன் எல்லா வகையிலும் நிம்மதியிழந்து வாடுகிறான் என்றால் அதற்கேற்றாற்போல் அவன் விதைகளை விதைத்திருக்கிறான் என்பது பொருளாகும்.

Tuesday 21 March 2017

சித்தன் அருள் - 618 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இப்பொழுது எதை யாங்கள் கூறவருகிறோம் என்றால், "சித்தர்கள் நல்லாசிகள் தந்தாலும், வாழ்வு நன்றாக இருக்கும். இறைவனருளால்  என்று கூறினாலும் கூட எங்கள் வாழ்வு நன்றாக இல்லையே" என்று இங்கு வந்துபோகின்ற மனிதர்கள் எண்ணுவது எதைக் குறிக்கிறது? என்றால், அறியாமையைக் குறிக்கிறது. ஏனென்றால் லோகாய வாழ்விலே ஒருவனுக்கு எத்தனை செல்வத்தைத் தந்தாலும், எத்தனை மாளிகைகளைத் தந்தாலும், எத்தனை கோடி, கோடியாக தனத்தைத் தந்தாலும், அவன் விரும்புகின்ற எந்த விஷயத்தைத் தந்தாலும், அது பதவியோ, அவன் ஆசைப்படுகின்ற பெண்களோ அல்லது நிறைய தங்கமோ எதைத் தந்தாலும்கூட ஒரு மனிதனால் நிம்மதியாக, சந்தோஷமாக வாழ இயலாது. தொடர்ந்து ஒருவன் செய்கின்ற பக்தியும், தொண்டும், தான் நேர்மையான வழியில் சேர்த்த செல்வத்தை, பிறருக்கு பயன்படுமாறு அள்ளி, அள்ளி, அள்ளி, அள்ளி வழங்குகின்ற தடைபடாத தர்ம குணத்தினால் மட்டும்தான் ஒருவனுக்கு நிம்மதியும், சந்தோஷமும் ஏற்படும். சேர்ப்பதல்ல, சேர்த்து வைப்பதல்ல சுகம். இருப்பதையெல்லாம்  தந்துகொண்டேயிருப்பதே சுகம். இழக்க, இழக்கத்தான் மனிதன் பெறுகிறான் என்பதை மனிதன் மறந்துவிடக்கூடாது. எதையெல்லாம் ஒரு மனிதன் இழக்கிறானோ, நியாயமான விஷயங்களுக்கு எதையெல்லாம் ஒரு மனிதன் கொடுக்கிறானோ, தன்னையே எப்பொழுது இழக்கிறானோ, அப்பொழுதுதான் அவனுக்கு இறைவனின் பரிபூரண கருணை கிட்டும். அதை விட்டு "எனக்கு இந்த செல்வம் வேண்டும், எனக்கு இந்தவகையான வசதியான வாழ்வு வேண்டும்" என்று இறைவனை நோக்கி வேண்டுவதால் பயனொன்றுமில்லை. ஒருவேளை, இவையெல்லாம் இறைவன் தரலாம். ஆனால் ஒரு மனிதன் கேட்கின்ற லௌகீக விஷயங்களால், லௌகீக வசதிகளால் சில காலமோ அல்லது சில நாழிகையோ வேண்டுமானால் அவன் சுகமாக, நிம்மதியாக இருக்கலாம் அல்லது அப்படி இருப்பதுபோல் ஒரு மாயத்தோற்றம் ஏற்படலாம். நிரந்தர நிம்மதியும், நிரந்தர சந்தோஷமும், பற்றற்ற தன்மையும், யோகாசனத்தால் தன் தேகத்தை வஜ்ரமாக ஆக்கி வைத்துக் கொள்வதிலும், சுவாசப் பயிற்சியை தடையற்று செய்து சுவாசத்தை ஒரு கட்டுக்குள் வைத்துக்கொள்வதும், பிறகு தன்னிடம் இருப்பவற்றையெல்லாம் தேவையான மனிதர்களுக்கு தேவையான பொழுது, அவன் வாயைத் திறந்து கேட்கும் முன்னே, குறிப்பறிந்து தருவதும், அப்படி தந்துவிட்ட பிறகு, எவன் பெற்றானோ அவனுக்கு ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் நடந்துகொள்ளாமல், அஃதாவது ஒருவனுக்கு ஒரு உதவியை செய்யவேண்டியது. பிறகு, நான் உனக்கு இந்த உதவியை செய்திருக்கிறேன், செய்திருக்கிறேன் என்பதுபோல் அவனுக்கு நினைவூட்டிக்கொண்டே இருப்பது, இதுபோன்ற உதவியை செய்வதற்கு ஒரு மனிதன் செய்யாமலேயே இருக்கலாம். எனவே உதவியை செய்துவிட்டு பிரதிபலன் எதிர்பார்ப்பதுகூட அந்த உதவிக்கு ஒரு களங்கத்தை ஏற்படுத்தியதுபோல் ஆகும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு மனிதன் வழங்கிக்கொண்டே இருத்தல் என்பதே இறைவனின் அருளையும், ஏன்? இறைவனின் தரிசனத்தையும் பெறுவதாகும். எனவே கொடுப்பது ஒன்றுமட்டும்தான் இறைவன் கருணையை எளிதில் பெறுவதற்குண்டான வழியாகும்.

Monday 20 March 2017

சித்தன் அருள் - 617 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஒருவன் உலகியல் சார்ந்து சுகமாக வாழ்வதற்கு, இறைவனோ, மகான்களோ வழிகாட்டாத வரையில் அவன் எதனையும் ஏற்கப்போவதில்லை என்பது எமக்குத் தெரியும். இறைவன் அருளாலே, நேர்மையான பக்தியும், நேரிய வழியில் வாழ்கின்ற வாழ்க்கையும், தளராத, தடைபடாத ஸ்தல யாத்திரையும், நுணுகி, நுணுகி பார்க்காமல் அள்ளி, அள்ளி தருகின்ற தர்மகுணமும் மட்டுமே, இறையருளை பெறுவதற்கு வழியாகும். ஆனாலும்கூட, இவற்றையெல்லாம் கேட்கின்ற ஆத்மாக்கள் "நடைமுறையில் இவையெல்லாம் சாத்தியமில்லை" என்று தமக்குத்தாமே முடிவு எடுத்துக்கொண்டு வாழ்வதால்தான், அந்த ஆத்மாக்களின் விதி அந்த மதியை அழைத்து செல்கிறது. எனவேதான், தவறான ஆன்மீகவாதிகளின் வழிகாட்டுதல் வழியாக சென்று ஏமாறக்கூடிய நிலையும், ஆன்மீகம் என்றாலே, ஏமாற்றுகின்ற நிலைதான் என்கிற ஒரு எண்ணமும் வந்துவிடுகிறது.

இறைவன் அருளாலே, நோக்கம் தெளிவாகவும், உயர்வாகவும் இருக்கும் பட்சத்திலே ஒரு ஆத்மாவிற்கு வழிகாட்ட, இறைவன் எல்லாவகையிலும் தன் கருணையைக் காட்டுவார், என்பதே மெய்யிலும் மெய்யாகும்.

Sunday 19 March 2017

சித்தன் அருள் - 616 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவனருளால் யாம் கூறவருவது யாதென்றால் உன் போல் எம் மீது அவா கொண்டு இஃதொப்ப ஓலை வாயிலாக எமது வாக்கை மெய்யாக, மெய்யாக, மெய்யாக, மெய்யாக நாடுகின்ற மெய்யன்பர்கள் அனைருக்கும் பொருந்துவதாகும். ஆகுமப்பா  அஃதொப்ப லௌகீக வாழ்விலே துன்பங்களும், தோல்விகளும், துவண்டு விழவைக்கும் நிகழ்வுகளும் வந்துகொண்டேயிருக்கும். அதற்கும், ஒரு மனிதன் இறைவன் திருவடியை உணர்வதற்கும் உண்டான முயற்சிக்கும் என்றுமே தொடர்புபடுத்தி பார்க்கக்கூடாது. ‘இறைவனை வணங்குகிறேனே? எனக்கு இப்படியொரு துன்பம் வரலாமா? இயன்றளவு தர்மம் செய்கிறேனே? என் குடும்பத்திற்கு இப்படியொரு கஷ்டம் வரலாமா? இறைவனை வணங்கிக்கொண்டே இருந்தால் நல்லது நடக்கும் என்கிறார்களே? ஆனால் அன்றாடம் பதறிப் பதறி வாழவேண்டிய நிலை இருக்கிறதே? என்றெல்லாம் அறியாமையால் மனிதன் புலம்புவது இயல்பு என்றாலும், அங்ஙனம் புலம்புவது எம்மைப்பொருத்தவரை ஏற்புடையது அல்ல. இஃதொப்ப இல் ஆனாலும், உறவானாலும், நட்பானாலும் கர்மவினைகளின் காரணமாக பிறப்பெடுத்து குறிப்பிட்ட மனிதர்களோடு, குறிப்பிட்ட உறவு என்ற பந்தத்திற்குள் இந்த ஜென்மத்திற்கு என்று அது அடைபட்டு இருக்கிறது. இஃதொப்ப ஜென்ம, ஜென்மமாய் எத்தனை தாய்? எத்தனை தந்தை? எத்தனை தாரம்? எத்தனை பிள்ளைகள்? கடந்த ஜென்மத்து தாய். அவளை நினைத்து ஏங்குவதா? அழுவதா? கடந்த ஜென்மத்து பிள்ளைகளை எண்ணி ஏங்குவதா? அழுவதா? இனிவரும் ஜென்மத்து உறவுகளை எண்ணி அழுவதா? சிரிப்பதா? என்றெல்லாம் மனிதன் சிந்தித்துப் பார்க்கவேண்டும். தொலைதூர பயணத்திற்காக வாகனத்தில் அமரும் மனிதன் அருகருகே அமரும் பிறமனிதர்களோடு எந்தளவில் தொடர்பு கொள்கிறானோ அப்படியொரு வாழ்க்கை பயணத்திலேதான் உறவுகளும். அதற்காக இவர்களையெல்லாம் விட்டுவிடு, இவர்களையெல்லாம் வெறுத்துவிடு என்றெல்லாம் யாம் கூறவில்லை. இஃதொப்ப நிலையிலே அவர்களுக்கு செய்யவேண்டிய நீதியான, நியாயமான கடமைகளை செய்வதோடு மனதளவிலே எந்தவிதமான பற்றுக்கும் இடம் தராமல் வாழ கடினம் பாராது முயற்சி செய்யவேண்டும். இஃதொப்ப கருத்தை நன்றாக மனதிலே வைத்துக்கொண்டால் ஒவ்வொரு மனிதனும் செழுமையாக வாழ்ந்து இறைவனின் அருளை புரிந்துகொள்ளக்கூடிய அந்தவொரு சூழலுக்கு தன்னை ஆட்படுத்திக்கொள்ளலாம்.

அடக்கத்தோடு ஒருவன் செய்கின்ற அறமானது இருமடங்கு, மும்மடங்கு, பஞ்சமடங்கு என்று அதன் அடக்கம் காரணமாக உயர்ந்துகொண்டே செல்லும். அஞ்ஞான அழுக்கு ஒரு மனிதனை விட்டு செல்லவேண்டுமென்றால் அதற்கேற்ற மனப்போராட்டங்களும், மனத்தாக்கங்களும் இருந்து கொண்டேயிருக்கும். மனிதன் எதிர்பார்க்கின்ற சுகமான வாழ்வு சம்பவங்களால் மட்டும் ஒரு மனிதனின் அறியாமை அஞ்ஞானம் அகன்று ஞானம் வந்துவிடாது. எனவே மனோரீதியாக நீ என்றும் திடமாக இரு.

இறைவன் அருளாலே இயன்ற பக்தியை செய்துகொண்டே தர்மகாரியங்களை செய்துகொண்டே இருக்க, இருக்க அஃதொப்ப பாவவினைகள், முன்ஜென்ம வினைகள் குறைய, குறைய பக்குவமும், பரிபக்குவமும், புரிதலும், இறை நோக்கி செல்லவேண்டும் என்கின்ற தீவிரமும் வருமப்பா.

செய்கின்ற தர்மங்கள் எல்லாம் மேலும் இறைவனருளைக் கூட்டி வைக்கும், முன்ஜென்ம பாவத்தை கழித்து வைக்கும், புண்ணியத்தை பெருக்கி வைக்கும், தேவையற்றதை எல்லாம் அது வகுத்து வைக்கும்.

மனிதனுக்கு துக்கமோ, துயரமோ, இன்பமோ, துன்பமோ அதற்கேற்ற சிந்தனையோ அல்லது நடைமுறை நிகழ்வுகளோ அனைத்தும் ஊழ்வினைகளின் எதிரொலிதானப்பா. மனதை தளரவிடாது செய்கின்ற இறைபக்தி, தொண்டு, தன்னலமற்ற தர்மகாரியங்கள், சாத்வீக வாழ்வு, கடமைகளை சரியாக ஆற்றுதல் – இவற்றை ஒரு மனிதன் கடைபிடித்தால் அவனுடைய தேவையற்ற குழப்பங்களும், ஐயங்களும் வேறு கலக்கங்களும் எழாமல் இருக்கும்.

Saturday 18 March 2017

சித்தன் அருள் - 615 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

மகான்களும், ஞானிகளும் அரூபமாக இருந்து வாக்கை அளிக்கிறார்கள். அதே சமயம் ‘ வாழ்விலே பிரச்சினைகளும், துன்பங்களும் இருப்பதும், அதனை எங்கள் சக்தியால் தீர்க்க முடியாத நிலையில்தான், எங்களைவிட அதிக சக்தி கொண்ட ஞானிகளையும் அல்லது தேவதை வர்க்கங்களையும் நாடுகிறோம். அதனை அவர்கள் புரிந்து கொண்டு தங்கள், தங்கள் தெய்வீக ஆற்றலால் உடனடியாக நிவர்த்தி செய்து கொடுத்தால் மனம் மகிழ்ச்சியில் இருக்குமல்லவா?. ஆனால் கர்ம வினையைக் காரணம் காட்டி, வெறும் பரிகாரங்களைக் கூறுவதால் ஏற்கனவே பிரச்சினைகளால் மனம் வேதனையில் இருக்கின்ற தருணம், அந்த பரிகாரங்களையும் முழுமையாக செய்ய இயலாத நிலையும், அப்படி செய்தாலும் கூட அதிலும் குறை ஏற்படுவதும், பிறகு வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் போவதற்கு வழியாக அமைந்து விடுகிறதே? என்றெல்லாம் கூட மனிதர்கள் எண்ணுகிறார்கள். யாங்கள் மீண்டும், மீண்டும் கூற வருவது இஃதுதான். ஒவ்வொரு பிறவியிலும், விதிக்கு வேலை தருவதே, மனிதனின் மதிதான். அந்த மதியை தன் கையில் வைத்துக்கொண்டு ஆட்டம் காட்டுவதும் விதிதான்.  பற்றையும், பாசத்தையும், ஆசைகளையும், இஃது தேவை, இஃது வேண்டும் என்கிற ஒரு நினைப்பையும் மனிதன் விடாத வரையில், விதி கடுமையாக தன் பணியை செய்து கொண்டே இருக்கும். முழுக்க, முழுக்க அனைத்தையும் துறந்து, பற்றற்ற ஞானியாக முயன்று, சதா சர்வகாலம் இறைவனையே எண்ணி வாழ்கின்ற துறவு நிலை மனிதர்களுக்கே, விதி, தன்னுடைய கடமையை ஆற்றி பல்வேறு விதமான இடர்களைத் தரும்பொழுது, ஆசாபாசங்களில் சிக்கித் தவிக்கும் மனிதனை விதி அத்தனை எளிதாக விட்டுவிடுமா? மீண்டும், யாங்கள் ஒட்டுமொத்தமான மனிதர்களுக்குக் கூற வருவது மகாபாரதத்தை நினைவூட்டுவதுதான். பஞ்ச பாண்டவர்களோடு துணையாக இருந்தது சாக்ஷாத் கிருஷ்ண பரமாத்மா. பரம்பொருள். அதற்காக, பஞ்ச பாண்டவர்கள் எந்தவித இடர்களும், துன்பங்களும் இல்லாமல் வாழ்ந்தார்களா? பரமாத்மா எண்ணியிருந்தால், ஆதிமுதலே ஒரு சுகமான வாழ்விற்கு பஞ்ச பாண்டவர்களை தயார் செய்து எந்தவித இடரும், துன்பமும் வராமல் செய்திருக்கலாமே? அப்படி செய்தால் பரமாத்மாவை எதிர்த்து வினவ யார் இருக்கிறார்கள்? அல்லது அதனை வேண்டாம் என்று மறுக்க யாரும் இருந்தார்களா? இல்லையே?. பிறகு ஏன் அவ்வாறு? ஒரு வகையில் அது மேலிடத்து நாடகம். அதைப் போலதான் மனித வாழ்வும். விதி தன்னுடைய கடமையை பரிபூரணமாக செய்ய வேண்டும் என்றுதான், நவக்ரகங்களிடம் அந்தப் பணி இறைவனால் ஒப்படைக்கப்பட்டு, ஒவ்வொரு காலமும், ஒவ்வொரு யுகமும், அந்த யுக தர்மத்திற்கேற்ப அனைத்தும் மிகத் துல்லியமாக நடந்து கொண்டிருக்கிறது. இதிலே மகான்கள் ஆனாலும் சரி. ஏன்?, இறைவனே ஆனாலும் சரி,  எந்த அளவு தலையிட இயலும்? யாருக்காக தலையிட இயலும்? எந்த ஆத்மாவிற்கு, எந்த காலகட்டத்தில் தலையிட இயலும்? என்றெல்லாம் மிகப்பெரிய கணக்கு இருக்கிறது. ஆயினும் கூட ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நிம்மதி, சந்தோஷம், நிரந்தரமான திருப்தி இவைகள் கட்டாயம் புறத்தேயிருந்து வருவது அல்ல, என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பெண் கிடைத்தால் நிம்மதி. இந்த ஆணை மணந்து கொண்டால் நிம்மதி. இந்த இல்லம் கிடைத்தால் நிம்மதி. இந்தப் பதவி கிடைத்தால் நிம்மதி. இந்தக் கல்வியை கற்றால் நிம்மதி அல்லது சந்தோஷம் என்று மனிதன் எண்ணுவதே மிக, மிக அறியாமையின் உச்சம். விதி, இங்குதான் தன் பணியை நன்றாக செய்து கொண்டிருக்கிறது. அப்படியானால் இந்த உலகிலே வாழ்கின்ற அனைவரும் ஆசைகளையெல்லாம் விட்டுவிட்டு, தன்னுடைய எதிர்பார்ப்புகளையெல்லாம் விட்டுவிட்டு, பந்த,பாசங்களையெல்லாம் விட்டுவிட்டு எங்கோ வனாந்தரம் சென்று துறவு நிலைக்கு ஆட்பட வேண்டுமா? என்றால், அப்படி செய்தால் நன்றுதான். ஆனால் எல்லோருடைய விதியும் அப்படியில்லை என்பதும் எமக்குத் தெரியும். அதே சமயம், அப்படியொரு மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு, இல்லற கடமைகளை ஒருவன் ஆற்றினால்தான் நிம்மதி கிட்டும். ஒரு மனிதன் எதைக் கேட்டாலும் இறைவன் தருவதாக வைத்துக் கொண்டாலும், அது கிடைக்க, கிடைக்க அந்த மனிதனுக்கு நிம்மதியும், சந்தோஷமும் வருவதற்கு பதிலாக மேலும், மேலும் மன உளைச்சல்தான் வரும். ஆனாலும் யாங்கள் ஆறுதலுக்காக கூறவில்லை. மெய்யாக உணரவேண்டும் என்றுதான் கூறுகிறோம். அதே சமயம் விதிக்கு எதிராக, சில, சில விஷயங்கள் வேண்டும் என்பதற்காகத்தான் இறைவனருளால் யாங்கள் சில வழிமுறைகளையும், பரிகாரங்களையும் கூறுகிறோம். விதி கடுமையாக இருக்கும்பொழுது அதனை எதிர்த்து போராடுகின்ற மனிதனுக்கு அந்த அளவு புண்ணிய பலமும், ஆத்ம பலமும் இருக்க வேண்டும். சராசரியான பிரார்த்தனைகளும், வழிபாடுகளும், சிறிய தர்மமும் அத்தனை எளிதாக விதியை மாற்றி விடாது. அப்படி மாற்றி விடும் என்றால் எல்லா மனிதர்களுமே விதியை வென்று காட்டுவார்களே? எனவே, விதியை மீறி ஒருவன் எண்ணுவது நடக்க வேண்டுமென்றால், மனம் தளராமல் தொடர்ந்து இறை பிரார்த்தனையில் ஈடுபடுவதோடு புண்ணிய பலத்தையும் எல்லா வகையிலும் அதிகரித்துக் கொண்டு, சுய பிரார்த்தனையினால் ஆத்ம பலத்தையும் அதிகரித்து மனம் தளராமல் போராட கற்றுக் கொள்ள வேண்டும்.

Friday 17 March 2017

சித்தன் அருள் - 614 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

கொடுத்துக்கொண்டேயிரு. காற்று எப்படி நல்லவன், தீயவன் என்று பாராமல் வீசுகிறதோ, சூரிய ஒளி எப்படி நல்லவன், தீயவன் என்று பாராமல் படுகிறதோ, மழை எவ்வாறு நல்லவன், தீயவன் என்று பாராது பொழிகிறதோ அதைப்போல, பொதுவாக செவியில் பிறர் குறை விழுந்த உடனோ அல்லது தெரிந்த உடனோ, உன்னால் முடிந்தவரை முயற்சி செய்து தீர்த்துக்கொண்டேயிரு. இதில் எத்தனை தடைகள் வந்தாலும், எத்தனை ஏளனங்கள் வந்தாலும், அதையெல்லாம் அமைதியாக ஏற்றுக்கொண்டேயிரு. ஏனென்றால், ஒருவகையில் தர்மம் செய்வது எளிது. இன்னொரு வகையில் கடினம். எப்பொழுது கடினம்? தர்மம் செய்ய, செய்ய, செய்ய இறைவன் சில சோதனைகளை வைப்பார். அதையெல்லாம் தாண்டி இந்த ஆத்மா வருகிறதா? என்று பார்ப்பார். உடன் இருப்பவர்களை வைத்தே எதிர்ப்பு காட்ட வைப்பார். ‘இப்படி கொடுத்துக்கொண்டே போனால் நாளை உனக்கு ஒரு தேவை என்றால் என்ன செய்வாய்?" என்பதுபோன்ற அச்சமூட்டும் வினாக்களையெல்லாம் பிறரை கேட்க வைப்பார். இதுபோன்ற தருணங்களிலெல்லாம், மனம் தடுமாறாமல், சோர்வடையாமல், தொடர்ந்து நல்ல வழியில் சென்றுகொண்டே இருக்கவேண்டும்.

Thursday 16 March 2017

சித்தன் அருள் - 613 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

எத்தனைதான் தெய்வீகம், மனிதன் வழியாக சிலவற்றை செயல்படுத்த எண்ணினாலும், தெய்வீகமே மனித வடிவம் எடுத்து வந்தாலும்கூட, மற்ற மனிதர்களின் கர்மவினைகளை அனுசரித்துதான் செயலாற்ற இயலும். இஃது ஒருபுறமிருக்க இத்தனை காலங்கள் விதவிதமாக இறைவன் குறித்தும், தர்மங்களை குறித்தும், நேர்மையைக் குறித்தும் நாங்கள் வாக்கினைக் கூறியிருக்கிறோம். இது எத்தனைபேர் மனதிலே நன்றாகப் பதிந்திருக்கிறது? எத்தனை நேர்மையாக, வெளிப்படையாக நாங்கள் இங்கு பல காரியங்களை இறைவன் அருளால் செய்ய அருளாணையிட்டிருக்கிறோம்? இங்கு வருகின்ற மனிதர்கள் இந்த குடிலை எப்படி பார்க்கிறார்கள்? இந்த சுவடியை எப்படி மதிக்கிறார்கள்? என்பது எமக்குத் தெரியும். மகான்கள் என்பதால் எம்மைப் பொருத்தவரை, அனைவருமே எமது சேய்கள்தான். இத்தனை சிறப்பாக, இத்தனை உயர்வாக, இத்தனை அழகாக பல்வேறுவிதமான நுணுக்கமான கருத்துக்களை எடுத்துக் கூறினாலும்கூட மனிதர்கள் அதனை புரிந்துகொள்வதில்லை, அல்லது தங்கள், தங்கள் தனிப்பட்ட துன்பங்கள் தீர்ந்தால்தான் நம்புவேன் என்ற ஒரு எதிர்பார்ப்போடு வருவதும், பெரும்பாலான கஷ்டங்களுக்கு தங்களுடைய முட்டாள்தனம்தான் காரணம். அந்த முட்டாள்தனத்தைத் தந்த விதிதான் காரணம். அந்த விதி ஏறி அமர்ந்துள்ள மதிதான் காரணம். இவற்றையெல்லாம் மாற்றுவதற்குதான் சித்தர்கள் சில வழிமுறைகளைக் காட்டியிருக்கிறார்கள். அதைப் புரிந்துகொள்ளாமல் தவறிவிட்டோமே? என்று இன்னும் ஒருசிலரைத் தவிர வேறு யாரும் புரிந்துகொள்ளவில்லை.

Wednesday 15 March 2017

சித்தன் அருள் - 612 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவன் அருளாலே மாயை, அறியாமை இருக்கிறது. விதி கடுமையாக இருக்கிறது என்றால் என்ன செய்ய வேண்டும்? ஒரு குழந்தைக்கு தன்னால் நடந்துபோக முடியவில்லை என்றால் தாயின் இடுப்பிலே ஏறி அமர்ந்து கொள்ளவேண்டும். தாய் என்ன கூறுகிறார்களோ அதை செய்யவேண்டும். அப்படி செய்தால் அந்தக் குழந்தைக்கு நலம் நடக்குமா? நடக்காதா? (நிச்சயமாக நடக்கும் ஐயனே). "நான் தாயை நம்பமாட்டேன், தந்தையை நம்பமாட்டேன். என் வழியில்தான் செல்வேன். எதெல்லாம் என் மனசாட்சிக்கு ஒத்துவருகிறதோ அப்பொழுதெல்லாம் இந்த சுவடியில் வருவது சித்தன் வாக்கு. எனக்கு பிடிக்காத கருத்தெல்லாம் வரும்பொழுது அவையெல்லாம் பித்தன் வாக்கு" என்று இருவிதமான மனோபாவத்தில்  இங்கு வந்தமர்ந்தால் எப்படியப்பா விதி அவனைவிட்டு விலகும்?

Tuesday 14 March 2017

சித்தன் அருள் - 611 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் இஃதொப்ப மனிதர்களின் உலக வாழ்வு எக்காலத்திலும் என்றென்றும் விதிவசம்தான் என்பது எம்போன்ற மகான்கள் அறிந்த ஒன்றுதான். இவைகளைத் தாண்டி மனிதர்களை ஓரளவு மெல்ல, மெல்ல மேலேற்ற, கடைத்தேற்ற, கரையேற்ற இறைவழி, அறவழி அழைத்து செல்லவே மகான்கள் காலகாலம் போராடுகிறார்கள். ஆயினும்கூட யாம் அடிக்கடி இயம்புவது போல பெரும்பாலான பொழுதுகளில் விதிதான் ஜெயித்துக் கொண்டேயிருக்கிறது. இஃதொப்ப சராசரியாகவே வாழ்ந்து உண்டு, உறங்கி எஃதும் தெரியாமல் வெறும் புலன் கவர்ச்சிக்கு மயங்கி வாழ்கின்ற கூட்டம் ஒருபுறம். இவைகளைத் தாண்டி இறை என்ற ஒன்று இருக்கிறது என்று நம்புகின்ற கூட்டம் ஒருபுறம். இந்த இரண்டையும் தாண்டி ஒரு குருவை நாடுவோம். குருவை தொட்டு, தொட்டு மேலேறுவோம் என்று வாழ்கின்ற கூட்டம் ஒருபுறம். இவைகள் எல்லாவற்றையும் தாண்டி ஓலைகளிலே சித்தர்கள் வாக்கு உரைக்கிறார்கள். அதனைக் கேட்டு வாழ்க்கையின் துன்பங்களை நீக்கிக்கொள்வோம். அஃதோடு உண்மையான ஞானவாழ்வையும் அறிந்துகொள்வோம் என்று இருக்கின்ற கூட்டம் ஒருபுறம். எல்லாவற்றையும்விட இதில் எந்த நிலையில் ஒரு மனிதன் நின்றாலும் அவன் மதியில் விதி அமர்ந்துகொண்டு ஆட்டுவிக்கிறது என்பது உண்மை.

Monday 13 March 2017

சித்தன் அருள் - 610 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

விதியை மாற்றத்தான் யாங்களும், எங்கள் நிலையிலிருந்து மிக, மிகக் கீழே இறங்கி பல்வேறு தருணங்களில், பல்வேறுவிதமான மனிதர்களுக்கு இங்கு ஜீவ அருள் ஓலையிலே ஏறத்தாழ 9 ஆண்டுகாலம் எந்தவிதமான  (பாவ ஆத்மா, புண்ணிய ஆத்மா என்ற) கணக்கினையும் பார்க்காமல், இன்னும் கூறப்போனால், புண்ணியம் அதிகம் செய்த, செய்கின்ற ஆத்மாக்களைவிட பாவங்களை அதிகம் சுமந்து கொண்டிருக்கின்ற ஆத்மாக்களுக்கும் சேர்த்து வாக்குகளை, விதவிதமாக உரைத்திருக்கிறோம். ஆயினும்கூட எப்படி  ஒரு செவிடன் செவியிலே எதைக்கூறினாலும் ஒன்றும் நுழையாதோ, அதைப்போலதான் நடந்துகொண்டிருக்கிறது. இயல்பாக, சாத்வீகமாக எதையும் நல்லவிதமாக, பார்க்கக்கூடிய தன்முனைப்பு குறைந்த ஆத்மாக்களை கரையேற்றுவது என்பது எளிது. அதாவது, ஏற்கனவே நன்றாக படிக்கக்கூடிய மாணாக்கனை மேலும் நன்றாக படிக்கவைப்பது போல. ஆனால், சற்றும் கல்வி ஏறாமல் திணறிக்கொண்டு இருக்கக்கூடிய, கல்வி என்றாலே வெறுக்கக்கூடிய ஒரு மாணவனை மேலேற்றுவதுதான் ஆசிரியருக்கு சவாலாக இருக்கும். அந்த வழிமுறையையும் நாங்கள் கையாண்டு, இங்கு வருகின்ற பலருக்கு தராதரம் பார்க்காமல், நாங்கள் வாக்கைக் கூறியது உண்டு. ஆயினும்கூட வழக்கம்போல் விதி வென்று அவர்கள் (விதிப்படி) வாழத்தான் அவர்களுக்கு வழிகாட்டியிருக்கிறது. இறைவன் தந்த அறிவை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டுமோ அந்த இடத்தில் பயன்படுத்தாத மனிதன், எந்த இடத்தில் பயன்படுத்தக்கூடாதோ அந்த இடத்தில் பயன்படுத்துகிறான். சதாசர்வகாலம் மிருகவெறி கொண்டு அலைவதும், தன்முனைப்பும், ஆணவமும் கொண்டு அலைவதும், நல்ல புண்ணியம் செய்கின்ற ஆத்மாக்கள் மனம் நோக நடந்துகொள்வதும்தான். இங்கு வருகின்ற பெரும்பாலான ஆத்மாக்களின் இயல்பாக இருக்கிறது. கடும் சினமும், ஆணவமும் கட்டாயம் உலக வாழ்க்கையை மட்டுமல்ல, மேலுலக வாழ்க்கையைக்கூட தராது தடுத்துவிடும், என்பதை உணரவில்லை. உணர்ந்தாலும் அதை பெரிதாக யாரும் ஏற்றுக்கொள்வதில்லை.

எல்லாம் விதிதான் என்றால், மதிக்கு என்ன வேலை இருக்கிறது? என்றெல்லாம் சிந்திக்கின்ற மனிதன் எந்த இடத்தில் மதியை வைக்கவேண்டுமோ அந்த இடத்தில் மதியை வைக்காமல் வாழ்வதுதான், விதி அங்கே வெல்வதற்கு வழியாகப் போய்விடுகிறது. விதியை மீறி எத்தனையோ நல்ல விஷயங்கள் ஒவ்வொரு தனிப்பட்ட மனித வாழ்விலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. எஃதாவது ஒரு மகானின் மூலம் இறைவன் அதனை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார். ஆயினும் பெரும்பாலான பொழுதுகளில் மனிதர்கள் அதனை உணர்வதில்லை. மிகவும் தரம்தாழ்ந்த ஆத்மாவிடம் அதே நிலைக்கு இறங்கி, ஒரு மகான் வாக்கு உரைப்பது என்பது கடினம்தான். இருந்தாலும், அதனையும் நாங்கள் செய்திருக்கிறோம். எப்படியாவது அந்த ஆத்மா மேலேறி வரவேண்டுமே?  அவன் போக்கில் சென்றாவது மேலேற்றலாமே? என்றுதான். ஆனாலும் வழக்கம்போல் விதி வென்று மகான்களின் போதனைகள் எல்லாம் புறந்தள்ளப்பட்டிருக்கின்றன.

Friday 10 March 2017

சித்தன் அருள் - 609 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

எல்லாம் விதிதான் என்றால் மதிக்கு என்ன வேலை இருக்கிறது? என்றெல்லாம் சிந்திக்கின்ற மனிதன் எந்த இடத்தில் மதியை வைக்கவேண்டுமோ அந்த இடத்தில் மதியை வைக்காமல் வாழ்வதுதான், விதி அங்கே வெல்வதற்கு வழியாகப் போய்விடுகிறது. விதியை மீறி எத்தனையோ நல்ல விஷயங்கள் ஒவ்வொரு தனிப்பட்ட மனித வாழ்விலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. எஃதாவது ஒரு மகானின் மூலம் இறைவன் அதனை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார். ஆயினும் பெரும்பாலான பொழுதுகளில் மனிதர்கள் அதனை உணர்வதில்லை. மிகவும் தரம்தாழ்ந்த ஆத்மாவிடம் அதே நிலைக்கு இறங்கி ஒரு மகான் வாக்கு உரைப்பது என்பது கடினம்தான். இருந்தாலும் அதனையும் நாங்கள் செய்திருக்கிறோம். எப்படியாவது அந்த ஆத்மா மேலேறி வரவேண்டுமே?  அவன் போக்கில் சென்றாவது மேலேற்றலாமே? என்றுதான். ஆனாலும் வழக்கம்போல் விதி வென்று மகான்களின் போதனைகள் எல்லாம் புறந்தள்ளப்பட்டிருக்கின்றன. 

Thursday 9 March 2017

சித்தன் அருள் - 608 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஆன்மீகம் என்றாலே, தற்சமயம் அது பலவகையான ஆன்மீகமாக மனிதனால் பார்க்கப்படுகிறது. இந்த ஜீவ அருள் ஓலையிலே நாங்கள் சுட்டிக்காட்டுகின்ற வழியானது மிக, மிக, ஞானியர் என்று மனிதர்களால் மதிக்கப்படுகின்ற ஞானியர்களாலேயே, ஏற்றுக்கொள்ளப்படாத வழிமுறையாகத்தான் இருக்கும். நீ கற்ற, கற்கின்ற ஆன்மீக நூல்கள், நீ பார்க்கின்ற ஆன்மீக மனிதன், உன் செவியில் விழுகின்ற ஆன்ம செய்திகள், இதுவரை கற்ற பல்வேறு ஆன்மீக விஷயங்கள் எல்லாம்கூட நாங்கள் காட்டுகின்ற வழியிலே முரணாகத் தோன்றும். எமது வழிமுறையில் வரவேண்டும் என்று நீயோ, உன்னொத்து சிலரோ எண்ணலாம். நாங்கள் வாழ்த்துகிறோம். ஆனால் அதனால் மிகப்பெரிய உலகியல் நன்மையோ அல்லது உளவியல் நன்மையோ வந்துவிடாதப்பா. அதிக துன்பங்களும், அவமானங்களும் வரும். அதை சகித்துக் கொள்கின்ற பொறுமையும், சகிப்புத்தன்மையும் இருந்தால் எமது வழியில் நீயும் வரலாம். யாங்கள் தடுக்கவில்லை. வந்து வெற்றிபெற நல்லாசி கூறுகிறோம்.

Wednesday 8 March 2017

சித்தன் அருள் - 607 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

யாம் பலமுறை கூறியிருக்கிறோம், நாங்கள் பாரபட்சம் பார்ப்பதில்லை என்று. எல்லோரும் இறைவனுக்கும், எமக்கும், சேய்கள்தான். ஆனாலும்கூட இறைவனுக்கும், மனிதனுக்கும் குறுக்கே மாயத்திரையாக இருப்பது எது? சித்தர்களுக்கும், மனிதனுக்கும் குறுக்கே மாயத்திரையாக இருப்பது எது? அந்த மாயத்திரை எது?  அது எப்பொழுது அகலும்? தீவிர பற்று, தன் பிள்ளைகள் மேல் கொண்டிருக்கின்ற பாசம், அந்த பாசத்தின் காரணமாக ஏற்படுகின்ற தடுமாற்றம். அந்த தடுமாற்றத்தில் தன் குழந்தைகள் தவறு செய்தாலும்கூட, தவறாக தெரியாத ஒரு நிலை. அதையே மற்றவர்கள் செய்தால் அது மிகப்பெரிய பஞ்சமா பாதகமாகத் தோன்றுவது. இவையெல்லாம் மாயையின் உச்சநிலை. எனவே சுயநலமும், தன்முனைப்பும், தீவிர பாசமும், ஆசையும், பற்றும் எந்த மனிதனுக்குள்ளும் எத்தனைகாலம் இருந்தாலும், இறைவன் அவன் பக்கத்தில் அமர்ந்தாலும் அவனால் புரிந்துகொள்ள முடியாது.

Tuesday 7 March 2017

சித்தன் அருள் - 606 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவன் அருளாலே ஆன்மா லயிக்கின்ற இடம் ஆலயம் என்பார்கள். இஃதொப்ப ஆன்மா என்றால், தன்னுடைய உடலுக்குள் உள்ளே உணரமுடியாமல் இருக்கின்ற உயிர் என்றும், இயக்கம் என்றும் மனிதனால் கருதப்படுகின்ற ஒன்று, என்று வைத்துக்கொள்ளலாம். தொடர்ந்த எண்ணங்களா? தொடர்ந்த சிந்தனை வாதமா ? அல்லது குருதியும், சதையும், எலும்பும் கொண்ட கூட்டமா? இதில் எது ஆத்மா? என்பதை ஒரு மனிதன் என்று உணர்கிறானோ அப்பொழுது அவன் சரியான நேர்பாதைக்கு செல்வதற்கு வாய்ப்பு வரும். பிறர் மீது வெறுப்பு வராது. ஏனென்றால் எல்லா கூட்டிற்குள்ளும் இருப்பது ஆத்மாதான். இதிலே உயர்வு, தாழ்வு ஏதுமில்லை. வினைகள்தான் குறுக்கே மறைத்துக் கொண்டிருக்கின்றது.  அந்த வினைகளை நிஷ்காம்யமாக செயல்களை செய்து, போக்கிக் கொள்ளவேண்டும என்ற உணர்வு வரும். அந்த உணர்வு அனைவருக்கும் வர இறைவனருளால் நல்லாசிகளைக் கூறுகிறோம். 

Monday 6 March 2017

சித்தன் அருள் - 605 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

யாம் கூறுகின்ற நங்கையை, மணக்கவேண்டும் என்று சிலர் எண்ணலாம். அப்பொழுதுதான் வாழ்க்கை மணக்கும், என்றும் எண்ணலாம். ஆனாலும்கூட விதியில் எது இடம்பெறுகிறதோ அதைதான் எப்பொழுதுமே மனிதன் நுகர இயலும். திருமணம் தொடர்பான கர்மவினைகள், எத்தனையோ சிக்கலான கர்மவினைகளைக் கொண்டிருக்கிறது. அது குறித்து ஆண்டாண்டு காலம் பாடம் எடுத்தாலும்கூட, மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாத விஷயம் இந்த களத்திர பாவம். எல்லா பாவங்களும் அப்படித்தான் என்றாலும், களத்திர பாவம் என்பது மிகவும் நுட்பமானது. அதனால்தான் பல்வேறு தருணங்களிலே பல்வேறுவிதமான திருமணங்கள் பொய்த்து போவதும், பல்வேறு திருமணங்கள் புறத்தோற்றத்திற்கு அவர்கள் ஒற்றுமையாக இருப்பதுபோல் தோன்றினாலும் உள்ளே நிம்மதியாக வாழாமல் இருப்பதுமாக இருக்கிறது. மனிதனின் பெருமளவு கர்மாக்கள் குறைகின்ற இடம் களத்திர பாவம்.

Sunday 5 March 2017

சித்தன் அருள் - 604 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

பரந்துபட்ட உலகமும், இந்த பேரண்டமும், நீக்கமற நிறைந்துள்ள அனைத்தும் பரம்பொருள்தான் என்பதை ஒரு மனிதன் நன்றாக உள்வாங்கி, திடமாக நம்பி "எல்லாம் அவன் செயல்"  என்று தன்னை பரிசுத்த மனிதனாக மெல்ல, மெல்ல மாற்றிக்கொண்டால், அப்படி மாற்றிக்கொள்கின்ற மனிதனுக்கு, அப்படி மாற்றிக்கொண்டு "உண்மையாக வாழவேண்டும், உண்மை வழியில் செல்லவேண்டும்" என்று எண்ணுகின்ற மனிதனுக்கு அவன் எங்கிருந்தாலும், இறைவன், எம்போன்ற மகான்கள் மூலமாகவோ, வேறு வழி மூலமாகவோ வழிகாட்டிக் கொண்டேயிருப்பார் அப்பா. அஃதொப்ப ஆத்மாக்களுக்கு யாங்களும் இறைவனருளால் வழிகாட்டிக் கொண்டிருக்கிறோம். இங்கு (குடிலுக்கு) வந்துதான் அவன் வழிமுறைகளைப் பெறவேண்டும் என்பதல்ல. நாங்கள் எத்தனையோ வழிமுறைகளை வைத்திருக்கிறோம். அதில் ஒன்றுதான் ஓலை மூலம் பேசுவது. வேளை வரும்பொழுது வேறு, வேறு மார்க்கங்களையும் நாங்கள் கடைபிடிப்போம்.

Saturday 4 March 2017

சித்தன் அருள் - 603 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

தனத்தை வைத்து விட்டதாலேயே (தானம் செய்ததாலேயே) ஒருவனின் பாவங்களெல்லாம் கணப்பொழுதில் தீர்ந்துவிடாது என்பது, உண்மையான ஞான வழியில் வருகின்ற மனிதனுக்கு தெரியும்.  உண்மையாக, உண்மையாக, உண்மையாக, உண்மையாக, உண்மையாக, உண்மையாக, உண்மையாக, இருக்கின்ற ஆத்மாக்களுக்கு பலமுறை கூறியிருக்கிறோம். நாங்கள் இந்த ஒலையில் வாக்கினை கூறினாலும், கூறா விட்டாலும் எப்பொழுதும் தாய் பறவை தன் குஞ்சுகளை எப்படி காக்கிறதோ, அதைப்போல நாங்கள் இறைவனருளால் காத்துக்கொண்டிருக்கிறோம். எனவே அஃதொப்ப மெய்யான ஆத்மாக்கள் கலக்கம் கொண்டிட வேண்டாம்.

Friday 3 March 2017

சித்தன் அருள் - 602 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


  அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

விதியிலே, ஒரு மனிதனுக்கு, அவன் எத்தனை நல்லவனாக இருந்தாலும்கூட, நல்லவனாக இருந்துவிட்ட அல்லது இருக்கின்ற காரணத்தினாலேயே இறை தரிசனமோ அல்லது சித்தர்கள் தரிசனமோ கிடைக்கவேண்டும் என்பது இல்லை. அல்லது, ஓலை மூலம்தான் சித்தர்களின் வாக்கை அறிந்து முன்னேறவேண்டும் என்ற நிலையும் இல்லை. வேறு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. இஃதொப்ப காலத்திலே பக்தி மார்க்கமும், பரிபூரண சரணாகதி தத்துவமும், அஃதோடு தக்க ஏழைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்வதும், அந்த தர்ம குணத்தை எப்படியாவது இறையிடம் போராடி பெற்று, இன்னும் கூறப்போனால், மனித அறிவு ஏற்றுக்கொள்ள முடியாத எத்தனையோ விஷயங்களை நாங்கள் கூறினாலும் அதில் உச்சகட்டமாக இங்கு வருபவர்கள் வெளியில் ஏளனம் செய்வது "ருணம் பெற்று அறம் செய்" என்று நாங்கள் கூறுகின்ற கருத்தை, அதுவும் எல்லோருக்கும் நாங்கள் கூறவில்லை, சிலருக்கு சிலவற்றை மனதிலே வைத்து கூறுகிறோம். அந்த தர்மத்தை, எவனொருவன் தன்முனைப்பு இல்லாமல் செய்கிறானோ அவனுக்கு எஃதும் கூறவேண்டியதே இல்லையப்பா. அந்த தர்மத்தை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு எத்தனை இடர், எதிர்ப்பு, சோதனை, வேதனை வந்தாலும், "நீ தர்மம் செய்தாயே? அவன் உன்னை நன்றாக ஏமாற்றிவிட்டான். அவனைப்போன்ற ஏமாற்றுக்காரனுக்கெல்லாம் நீ ஏனப்பா உதவி செய்கிறாய்?" என்று இன்னொருவன் வந்து குழப்பத்தை ஏற்படுத்தினாலும்கூட "என் கடன் தர்மம் செய்து கிடப்பதே" என்று எவன் தொடர்ந்து தர்மவழியில் வருகிறானோ அவனுக்கு எஃதும் கூறவேண்டாம். இறையே அவனை வழிநடத்தும். அதைதான் நாங்களும் தர்மம், தர்மம், தர்மம் என்று பலருக்கும் பலமுறை கூறுகிறோம். ஆனால் கேட்க விடவேண்டுமே அவனவன் கர்மா!