​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 28 February 2013

சித்தன் அருள் - 113

சித்தர்கள்தான் இந்த உலகையே கட்டிக் காக்கிறார்கள் என்பது எனது எண்ணம்.  பல நேரங்களில் நடக்கிற விஷயங்களை பார்த்தால் அப்படித்தான் தீர்மானிக்க முடியும்.  இறைவன் சித்தர்களிடம் இந்த உலகை ஆட்சி செய்யும் உரிமையை கொடுத்துவிட்டு எங்காவது உல்லாச பயணம் போய் விட்டாரோ என்று தோன்றுகிற அளவுக்கு சில வேளை விஷயங்கள் நடக்கும்.  நாம் ஒவ்வொருவரும் கடவுளிடம் வேண்டிக்கொண்டாலும், பல நேரங்களில் சித்தர்கள் வழிதான் ஒரு தீர்வை இறைவன் நமக்கு அருளுகிறான்.

அன்றையதினம் நான் போகர் நாடியை புரட்டிக்கொண்டிருந்தேன்.  ஒரு தம்பதியர் வந்து வணக்கம் சொல்லி அமர்ந்தனர்.  அவர்களை கண்டால் அத்தனை வசதி உள்ளவர்கள் போல் தோன்றவில்லை.  வறுமையில் வாடுகிற நிலை அவர்கள் முகத்தில் பிரதிபலித்தது.

"என்ன விஷயமாக இங்கு நாடி பார்க்க வந்தீர்கள்?" என்று வினவினேன்.

"அய்யா!  எங்களுக்கு 12 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.  பிறவியிலேயே அவள் ஒரு ஊமை, காது கேட்க்காது, புத்தி ச்வாதீனமும் இல்லை.  நாங்கள் மிகவும் வறுமையில் வாடும் குடும்பம்.  எங்களுக்கு என்று உதவி செய்ய யாரும் இல்லை.  எங்கள் வசதிக்கு உட்பட்ட அனைத்து மருத்துவ சிகிர்ச்சையும் செய்து விட்டோம்.  எந்த பலனையும் அது தரவில்லை. பணம் செலவாகி நாங்கள் கடனாளியானது மட்டும் தான் மிச்சம்.  நீங்க நாடி பார்த்து சித்தர்கள் அருளுடன் மருந்து சொல்கிறீர்கள் என்று கேள்விப்பட்டு வந்தோம்.  எங்கள் மகள் குணமாக ஏதேனும் ஒரு மருந்தை சித்தரிடம் வாங்கித் தரமுடியுமா?" என்று கண்ணீர் மல்க வினவினர்.

அவர்கள் கேட்ட விதம் மிக சரியாக இருந்ததை கண்டு நானே அசந்துவிட்டேன்.  ஒருவரிடம் சென்று நமக்கென்று ஒரு உதவியை கேட்க்கும் பொது அதை மிகச் சரியாக கேட்கத் தெரியவேண்டும்.  இவர்களுக்கு படிப்பறிவில்லை என்றாலும், கேட்க்க வேண்டியதை கேட்ட விதம் மிகச் சரியாக இருந்தது என்னை கவர்ந்தது.  இவர்களுக்கு கண்டிப்பாக சித்தரிடம் இருந்து பதில் வரும் என்று என் மனம் கூற, போகரின் நாடியை எடுத்து உரிய முறையில் பிரார்த்தித்து வாசிக்க தொடங்கினேன்.

தொடங்கிய வேகத்திலேயே நாடியில் வந்த செய்தி முடிந்து போனது.  ஆம்! போகர் பெருமான் ரொம்ப சுருக்கமாக எத்தனை பெரிய விஷயத்தையும் கூறிவிடுபவர்.  அன்றும் "மூன்று தினங்களுக்குள் உன் மகளை அழைத்துக்கொண்டு கொல்லிமலை செல்.  அங்கு உன் மகளுக்கு புதிய வாழ்க்கை கிடைக்கும்" என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

இதை சொல்லி அவர்களை உடனடியாக கொல்லி மலைக்கு பணித்தபின் நானே சற்று யோசித்தேன்.

"இவர்களோ பரம ஏழைகளாக தெரிகிறார்கள்.  கொல்லி மலைக்கு சென்றால் எங்கு தங்குவார்கள்?  யார் இவர்களை அடையாளம் கண்டுகொண்டு மருந்து கொடுப்பார்கள்?  இப்படி இவர்களை அலைய விடுவதற்கு பதில் போகர் பெருமானே இவர்களுக்கு மருந்தை கூறி இருந்தால், மிக எளிதாக இருந்திருக்குமே!" என்று என் மனம் நினைத்தது.

"ஹ்ம்ம்!  அங்கு போகர் என்ன அதிசயம் நிகழ்த்தப் போகிறாரோ!  யாருக்கு தெரியும்?  பொறுத்திருந்து பார்ப்போம்! ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்!  போகர் "கொல்லிமலைக்குப் போ" என்று கூறியதே ஒரு நல்ல சகுனமாகப் பட்டது. இவர்கள் மகளுக்கு கண்டிப்பாக ஒரு நல்ல வழி பிறக்கும்." எனத் தோன்றியது.

மூன்று மாதங்கள் கழிந்தது. ஒரு செய்தியும் அவர்களிடமிருந்து வரவில்லை.  நானும் மற்றவர்களுக்கு நாடி படிப்பதில் நேரத்தை கடத்தியதினால், இவர்கள் விஷயத்தை அப்படியே விட்டுவிட்டேன்.  திடீரென்று ஒருநாள் அவர்களை பற்றி எண்ணம் வரவே "சரி! என்ன ஆயிற்று என்று போகரிடமே கேட்டுவிடுவோமே" என நினைத்து போகர் நாடியை புரட்டினேன்.

"போகரின் உத்தரவின் படி அந்தப் பெற்றோர்களும், மகளும் கொல்லிமலை ஏறிவிட்டனர்.  மருத்துவ சிகிர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது.  சிகிர்ச்சை பூரணமானதும் வருவார்கள்.  அதுவரை பொறுமையாக இரு!" என்று பதில் வந்தது.

"அப்பாடா!" என்று நிம்மதி பெருமூச்சு விட்டேன்.

ஆறு மாதங்கள் கழிந்திருக்கும்.

ஒரு நாள்...........

அந்த தம்பதியர் தங்கள் மகளுடன் வந்தனர்.  மூவரின் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது.  அவர் சொல்ல தொடங்கினார்.

"போகர் சித்தர் சொன்ன படி நாங்கள் கொல்லிமலை அடிவாரம் சென்றடைந்தோம்.  யாரிடம் என்ன கேட்பது என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது பிச்சைக்காரன் போன்று தோற்றம் கொண்ட ஒருவர் எங்களிடம் வந்து 'சிவன் கோவிலில் பூசை நடந்து கொண்டிருக்கிறது.  அங்கு ஒரு சித்தர் இருக்கிறார்.  அவர் மனது வைத்தால் உங்கள் பிரச்சினை தீரும்.  அந்த சித்தர் அருகில் வரும்போது உங்கள் மகளை அவர் பாதத்தில் விழுந்து வேண்டிக்கொள்ள சொல்லுங்கள். உங்கள் மகளின் வியாதிக்கு கண்டிப்பாக ஒரு தீர்வினை உருவாகும்." என்றார்.

அவர் சொன்ன சிவன் கோவிலை தேடி சென்றோம்.  உள்ளே போய் பார்த்தால், "சித்த புருஷர்கள்" போல தோற்றம் அளிக்கும் நிறைய பேர்கள் இருந்தனர்.  யார் அவர்களில் அவர் சொன்ன சித்தர் என்பது தெரியவில்லை.  என்ன செய்வது என்று திகைத்து நின்றிருந்தோம்.  அன்று பௌர்ணமி தினம்.  ஆதலால் பூசையை விமர்சையாக செய்து கொண்டிருந்தனர். பூசை முடியட்டும் என்று பொறுமையாக காத்திருந்தோம்.  பூசை முடிந்த பின் கூட்டத்தை விலக்கிக்கொண்டு எங்களை பார்த்து உயரமான ஒருவர் வந்தார்.  அவர் கண்களில் அப்படி ஒரு ஒளி!  அவரை கண்டதும் எங்கள் மகள் தானாக முன் வந்து அவர் காலில் விழுந்து நமஸ்காரம் செய்தால்.  எங்களுக்கே ஆச்சரியமாக இருந்தது.  சொல்லும் எதையும் புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருக்கும் இவளா தானாக நாங்கள் சொல்லாமலே காலில் விழுந்து வணங்குகிறாள் என்று.  நாங்களும் அவர் பாதத்தில் விழுந்து வணங்கினோம்.  நாங்கள் எதையும் சொல்லாமலே அவரே "பூசை முடிந்ததும் உங்கள் மகளுக்கு மருந்து தருகிறேன் என்றார்".  சரி சாமி! அப்படியே ஆகட்டும்!  நாங்கள் காத்திருக்கிறோம் என்றோம்.

ஆச்சரியம் தாங்க முடியாமல் உடல் முழுவதும் புல்லரிக்க "எங்கள் மகளுக்கு விடிவுகாலம் வந்துவிட்டது" என்று இறைவனுக்கும் அவருக்கும் நன்றி சொல்லி, ஒரு ஓரமாக ஒதுங்கிநின்று அவர்கள் செய்கிற பூசையை பாத்துக்கொண்டிருந்தோம்.  கடைசிவரை பூசையும் அதன் முறைகளும் அதன் நேர்த்தியும் எங்களை புல்லரிக்க வைத்துக்கொண்டே இருந்தது.  உண்மையிலேயே இறைவன் அங்கு வந்து அமர்ந்து அவர்கள் செய்த பூசையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதை எங்களால் உணர முடிந்தது.  அத்தனை நேர்த்தி.  எத்தனையோ கோவில்களுக்கு மகளுடன் சென்று பூசையை பார்த்திருக்கிறோம்.  இது போல் எங்கள் உடல் புல்லரிக்க வைக்கிற ஒரு பூசையை பார்த்ததில்லை 

பூசை முடிந்ததும் அவர் ஒரு மூலிகை மருந்தை ஒரு குவளையில் கொண்டு வந்து மகளிடம் தந்து குடிக்க சொன்னார்.  பின்னர் "நாற்ப்பது நாட்களுக்கு பின் வாருங்கள்.  அதுவரை ஊருக்கு சென்று சில பத்தியங்களை கடை பிடியுங்கள் என்று கூறி விரிவாக சொன்னார்.  கண்ணீர் மல்க நன்றி சொல்லி விடை பெற்றோம்.  நாற்பது நாட்களுக்கு பின் சென்ற பொது அவர அங்கேயே இருக்க மறுபடியும் ஒரு குவளை மருந்தை குடிக்க கொடுத்தார்.  மறுபடியும் நாற்பது நாட்களுக்குப்பின் பத்தியமாக இருந்த பின் வரச்சொன்னார்.கடந்த ஆறு மாதங்களாக பலமுறை நாற்பது நாளுக்கு ஒரு முறை ஒரு குவளை மருந்தை எங்கள் மகளுக்கு தொடர்ந்து கொடுத்து வந்தார்.  ஆறு மாதங்களுக்கு பின் ஒருமுறை சென்ற பின் "இத்துடன் மருந்து குடித்தது போதும்.  உங்கள் மகள் இன்னும் ஒரு மண்டலத்திற்குள் முழுவது சரியாகி விடுவாள்.  பத்தியங்களை கடை பிடியுங்கள்.  இனி மேல் வரவேண்டாம்.  உங்கள் ஊரில் இருக்கும் "வைத்தியநாத சுவாமிக்கு" எல்லாம் சரியானபின் ஒரு முறை அபிஷேகத்துக்கு ஏர்ப்பாடு பண்ணுங்கள்.  அதுவே நீங்கள் இறைவனுக்கு செய்யும் மரியாதை.  எங்களுக்கு எதுவும் வேண்டாம்" என்று கூறி நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கருவறைக்குள் சென்று மறைந்துவிட்டார்."

"நீங்களே என் மகளிடம் பேசி பாருங்கள்.  எங்கள் மகள் பூரணமாக குனமடைந்துவிட்டாள்" என்று என்னிடம் கூறியபோது என்னால் நடந்ததை நம்பவே முடியவில்லை.  அவள் மிக மரியாதையுடன் கை கூப்பி வந்து நமஸ்காரம் செய்தாள்.  என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது.  அந்த மகளை தூக்கி எழுப்பி "அம்மா! நீ சித்தனால் அருளப்பட்டவள்! என் காலில் விழுந்து நமஸ்காரம் செய்யக்கூடாது. என்று இருகரம் உயர்த்தி ஆசிர்வதித்தேன்."

பின் அவரிடம் "சரி! வந்தது யாராக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?" என்றேன்.

"பழனியில் நவபாஷான முருகரை செய்த போகரை தவிர வேறு யாராக இருக்க முடியும்?" என்றார் மிகத்தெளிவாக.  அவரது பதில் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.  இத்தனை தெளிவாக இருக்கும், கல்வி அறிவில்லாத ஒருவரை அன்றுதான் என் வாழ்க்கையில் முதன் முறையாக சந்திக்கிறேன் என்ற சந்தோஷத்தோடு என் இரு கரங்களையும் நீட்டி அவரிடம் கை குலுக்கினேன்.

இதிலிருந்து ஒரு விஷயத்தை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.  வாழ்க்கையே தொலைந்து போகிற எத்தனை பிரச்சனை வந்தாலும் நம்பிக்கையுடன் மிகத்தெளிவாக இருந்தால்.............

அவருக்கு கிடைத்தார் போல் சித்தர் தரிசனம் நமக்கும் கிடைக்கும்.
மிக நேர்த்தியான பூசை பார்க்க, இறைவனை அவர்கள் இடையில் பார்க்க, உணர ஒரு பாக்கியம் கிடைக்கும்.
எல்லாவற்றுக்கும் மேல் நம் பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

சித்தர்களால் அருளைப்பெற்றால் இந்த உலகத்தில் நம்மால் அனுபவிக்க, அடையப் பெறாத ஒன்று என்பதே இருக்காது.

சித்தன் அருள் ................... தொடரும்! 

Thursday 21 February 2013

சித்தன் அருள் - 112


அனைத்தையும் அறிந்தவர்கள் சித்தர்கள் என்பதில் எனக்கு திடமான நம்பிக்கை உண்டு.  பொதுவாகவே என்னிடம் நாடி படித்து தங்கள் பிரச்சினைகளுக்கு பிராயச்சித்தம் செய்ய விரும்புகிறவர்கள் நாடியில் வரும் செய்திகளை கண்டு பல வேளை பயந்து, சொன்ன பரிகாரங்களை செய்யாமல் விட்டு, பின்னர் பிரச்சினை முற்றி, வாழ்க்கை கை விட்டு போய் விடும் என்று பயந்து மறுபடியும் நாடியை நாடி வர, முன்னர் சொன்ன பரிகாரங்களை செய்யாது விட்ட தோஷமும் சேர்த்து, அதே பரிகாரம், ஆனால் சற்று கடினமான முறையில் மீண்டும் உரைக்கப்படும்.

"இதை விட முதலில் சொன்னதே தேவலாம்!" என முணுமுணுத்த பலரையும் பார்த்திருக்கிறேன்.

இறைவனில் 'சிவபெருமானை" பற்றி தவறான தீர்மானம் பலரிடமும் இருப்பதை நான் கண்டிருக்கிறேன்.  அவர் சம்ஹாரத்துக்கு அதிபதி.  அவரிடம் போய் சேர பரிஹாரம் செய்தால், என்ன கிடைத்துவிடும்.  அவர் தான் இகபர வாழ்க்கையின் அதிபதி அல்லவே என்று நினைப்பவர்கள் நிறையபேர்.  ஒரு சிலரோ இப்படி எல்லாம் நினைக்காமல் 

"சித்தர் சொல்கிறார் எதிர் கேள்வி என்ன வேண்டி இருக்கிறது.  ஆத்மார்த்தமாக செய்வோம்.  பாக்கியை அவர் பார்த்துக்கொள்வார்" என்று செய்ய அவர்கள் பிரச்சினை உடனேயே விலகியதையும் பார்த்திருக்கிறேன்.

என்னிடம் அகத்தியர் அருளும் "ஜீவநாடி" இருந்ததை போல், போகரின் ஜீவா நாடி ஒன்றும் அகத்தியர் அருளால் என்னிடம் வந்து சேர்ந்தது.  பொதுவாக அதில், போகர் மருத்துவ முறைகளை பற்றியும், இன்ன வியாதிக்கு இன்ன மூலிகை என்றும் தகவல் தருவது வழக்கம்.  ஜீவ நாடி போலவே அதிலும் போகரின் வார்த்தைகள் தங்க நிறத்தில் வந்து போகும்.  அதை படித்து பலருக்கும் போகர் அருளால் மருந்துகளை கிடைக்க வழி செய்துள்ளேன்.

ஒருநாள் இரு இளம் வயது தம்பதியர் நாடி படிக்க வந்து அமர்ந்தனர்.  இருவரையும் அமரச்செய்து விஷயம் என்னவென்று விசாரித்தேன்.

"எங்களுக்கு திருமணமாகி சில ஆண்டுகளுக்குப் பின் தான் ஒரு குழந்தை பிறந்தது.  அதற்கு இப்பொழுது இரண்டு வயது ஆகிறது.  பிறக்கும் போதே உடல் நலக் குறைவுடன் பிறந்துள்ளது. "

"என்ன உடல் நலக் குறைவு?"

"ஒன்றரை வயதானதிலிருந்து திடீர் திடீர் என்று உடல் முழுவதும் நீல நிறமாகி விடும்.  உடனே, குழந்தையை வாரி எடுத்து மருத்துவ மனைக்கு தூக்கி சென்று சிகிர்ச்சை அளித்தால் வியாதி விலகி விடுகிறது.  ஆனால் மறுபடியும் அந்த வியாதியின் தாக்கம் எப்பொழுது வரும் என்பதை எங்களால், மருத்துவர்களால்   கணிக்க முடியவில்லை.  எத்தனையோ மருத்துவ முறைகளை கையாண்டு விட்டோம்.  முதலில் மாதம் ஒருமுறை என்று வந்த உடல் நலக்குறைவு, இப்பொழுது வாரம் ஒருமுறை என்று ஆகிவிட்டது.  கடைசியாக ஒரு மருத்துவரிடம் சென்ற போது அவர்தான் இந்த தாக்கம் எதனால் வருகிறது என்பதை கண்டுபிடித்தார். பிறவியிலேயே எங்கள் குழந்தையின் இருதயத்தில் ஒரு துவாரம் உள்ளதாம்.  அதனால் ரத்தம் பம்ப் பண்ணுவது சரியாக அமையாத நேரங்களில், பிராணவாயு குறைவால் உடல் நீல நிறமாகிவிடுகிறது.  இதற்கு இரண்டு வழிதான் உள்ளதாம்.  ஒன்று குழந்தைக்கு அறுவை சிகிர்ச்சை செய்து பார்க்க வேண்டும்.  ஆனால் குழந்தை அறுவை சிகிர்ச்சையை தாங்குகிற அளவுக்கு உடலில் சக்தியை பெறவில்லை.  அதனால் அறுவை சிகிற்ச்சை செய்தால் பலன் எப்படி வேண்டுமானாலும் அமையலாம் என்றார்".

"சரி! இரண்டாவது வழி என்ன சொன்னார்?"

"அந்த மருத்துவர் போகர் சித்தரின் மருத்துவ முறைகளில் மிகுந்த நம்பிக்கை உள்ளவர்.  அதனால், போகர் சித்தர் மனது வைத்தால் மருந்து மூலம் இந்த குழந்தையை பிழைக்க வைக்கலாம் என்றார்.  மேலும் அவர் உங்களிடம் போகர் நாடியில் போகரின் உத்தரவு என்ன என்பதை கேட்டு வரச் சொன்னார்.  தாங்கள் தான் போகர் நாடி படித்து எங்கள் பிரச்சினைக்கு வழிகாட்ட வேண்டும்" என்று வேண்டினர்.

போகரின் ஜீவநாடியை எடுத்து முறையாக பிரார்த்தனை செய்து "சித்தபெருமானே! இந்த தம்பதியரின் குழந்தைக்கு நல்ல சரியான ஒரு தீர்ப்பை வழங்குங்கள்" என்று மனதுள் வேண்டிக்கொண்டேன்.

நாடியில் வந்த போகர் பெருமான் இவ்வாறு சொன்னார்.

"இந்தக் குழந்தையை சிவபெருமானால் மட்டும் தான் காப்பாற்றமுடியும்.  இந்த குழந்தை காப்பாற்றப்பட வேண்டுமென்றால் அது, ஒரு வியாழக்கிழமை அன்று அலகானந்தா நதியில் மூன்று முறை மூழ்கி குளிக்கப்படவேண்டும்.  அப்படி குளிப்பாட்டும் போது சிவநாமத்தை உச்சரித்துக்கொண்டே இருக்கவேண்டும்.  கண்டிப்பாக சிவபெருமான் வந்து இந்தக் குழந்தையை காப்பாற்றுவார்" என்று கூறி உடனே மறைந்துவிட்டார்.

பொதுவாகவே போகர் சித்தர் கேட்ட கேள்விக்கு மிக சுருக்கமாக பதில் சொல்பவர்.  மருந்து எதையும் கூறாமல், குழந்தையை அலகாநந்தா நதியில் மூன்று முறை முக்கி குளிப்பாட்ட வேண்டும் என்று கூறியதை கேட்ட அந்த பெற்றோர்கள் அதிர்ந்து போய் விட்டனர்.  அலகாநந்தா நதி குளிர்ச்சிக்கு பெயர் பெற்ற ஒன்று.  பெரியவர்களே அதில் ஒரு முறை நீராடினால் விறைத்து போவார்கள்.  அதிலும் இந்த குழந்தை ரொம்ப பலவீனமான இதயத்தைக் கொண்டு பிறந்துள்ளது.  அந்த குளிரில் மூன்று முறை முக்கி எடுத்தால் என்னவாகும்?  என்று நினைப்பு எனக்கு.

"இதை தவிர வேறு எதுவும் போகர் கூறவில்லையா?" என்று கேட்டனர்.

"போகர் சொன்னதை கூறிவிட்டேன்,  மருந்து எதுவும் சொல்லவில்லை.  அவர் சொன்னபடி செய்துவிட்டு வாருங்கள்.  கண்டிப்பாக நல்ல செய்தியுடன் திரும்பி வருவீர்கள்" என்றேன்.

சற்றும் நம்பிக்கை இல்லாமல் சோர்ந்த மனதுடன் எழுந்து சென்றனர் அந்த தம்பதியினர்.

இரண்டு மாதங்கள் வரை அவர்களிடமிருந்து எந்த செய்தியும் கிடைக்கவில்லை.

ஒரு நாள் சோர்ந்த முகத்துடன் அந்த தம்பதியினர் வந்தனர்.  அந்த குழந்தையின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாகவும் அவர்களால் போகர் நாடியில் வந்து சொன்னதை நிறைவேற்ற முடியவில்லை என்றும் தெரிவித்தனர்.

"உண்மை தான்.  போகர் நாடியில் வந்து சொன்னதை சாதாரண மனிதர்களின் மன நிலையில் இருந்தால் நிறை வேற்ற முடியாது தான்.  சற்றே திட மான மன  நிலையுடன் சித்தர் மீது நம்பிக்கை வைத்து காரியத்தில் இறங்குங்கள்.  எல்லாம் வெற்றி அடையும்.  சீக்கிரம் போங்கள்" என்றேன்.

"இன்னும் ஒருமுறைகூட போகரின் நாடி படித்து ஏதேனும் மருந்தை போகர் சொல்கிறாரா என்று பார்த்து சொல்லுங்களேன்" என்றனர் அவர்கள்.

மறுபடியும் நாடியை படிக்க முன்னர் சொன்னதே இப்பொழுதும் வந்ததை கண்டு மனம் தளர்ந்த அவர்களை நோக்கி,

"வியாதிக்கு காரணமான கர்மாவையே அழித்தவர் சிவபெருமான்.  உங்கள் குழந்தையை அவர் கண்டிப்பாக காப்பாற்றுவார்.  இனிமேல் அந்தக் குழந்தையை சிவபெருமானின் குழந்தை என்ற எண்ணத்துடன் தூக்கி சென்று, போகர் பெருமான் கூறியதை நிறைவேற்றுங்கள்.  நல்லதே நடக்கும்" என்றேன்.

அந்த தம்பதியர்களுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை;

"உங்கள் வாக்கை வேத வாக்காக வைத்து, இந்த நிமிடம் முதல் அந்தக் குழந்தை "சிவபெருமானின்" குழந்தை என்ற எண்ணத்துடன் சென்று நீங்கள் சொன்னதை நிறைவேற்றி விட்டு வருகிறோம்" என்று கூறி விடை பெற்றனர்.

இரு வாரங்களுக்கு பின் அந்த இருவரும் என்னை காண வந்தனர்.  கையில் அந்த குழந்தை நல்ல ஆரோக்கியமாக விளையாடியபடி இருந்தது.  அவர்கள் முகத்தில் நிறையவே சந்தோஷம்; கூட நிறையவே புல்லரித்துப்போக வைக்கிற அனுபவங்கள்.  அந்த குழந்தையின் தந்தை நடந்ததை விவரித்தார் 

"போகர் சித்தர் சொன்னது போலவே ஹிமாலயத்தில் உள்ள அலகானந்த நதிக்கரைக்கு குழந்தையுடன் போய் சேர்ந்தோம்.  தண்ணீரின் வேகமும் அதில் உறைந்த குளிர்ச்சியின் வீரியமும் எங்களை அதிர வைத்தது.  குழந்தையை எப்படி இந்த குளிர்ந்த தண்ணீரில் மூழ்கடிப்பது? என்ற யோசனை இருமுறை எங்களை தாக்கியது.  மூன்றாவது முறையும் அந்த கேள்வி எங்களை தாக்கும் முன் சித்தர் சொன்னபடி இறைவன் நாமமான "நமச்சிவாய" என்பதை கூறிக்கொண்டே மெதுவாக ஒருமுறை பயத்துடன் முக்கினோம்.  என்ன நடந்தது என்று புரியவில்லை.  பொதுவாகவே அப்படிப்பட்ட குளிர் உடலை தாக்கும்போது குழந்தை "வீ ல்" என்று அலறியிருக்கும்.  ஆனால் அந்தக் குழந்தை சிரித்தபடி அந்த நீரின் ஸ்பரிசத்தை விரும்பியது.  அப்போது எங்கள் பக்கமாக நடந்து வந்த ஒரு சாது, "குழந்தையை என்னிடம் கொடுங்கள்.  நான் குளிப்பாட்டி பத்திரமாக திருப்பி தருகிறேன், கவலை வேண்டாம்!" என்று கூறி வாங்கி சென்றார்.

குழந்தையை வாங்கி சென்றவர் நாங்கள் நின்ற பகுதிக்கு நேராக சற்று ஆழமுள்ள பகுதிக்கு சென்று குழந்தையை பலமுறை நீரியில் முக்கியபின் சற்று அருகில் வந்து குழந்தையின் உடலை தடவி கொடுத்து, பின் தன நனைந்த வஸ்திரத்தின் ஒரு முனையிலிருந்து சிறிது விபூதியை எடுத்து குழந்தையின் நெற்றியிலும் மார்பிலும் தடவி, சிறிதளவு அதன் வாயிலும் போட்டு அதன் வலது காதில் எதையோ முணுமுணுத்துவிட்டு எங்களிடம் தந்தார்.  குழந்தை கிடைத்த வேகத்தில் அதன் உடலில் உள்ள நீரை துவட்டும் வேலையில் கவனத்தை செலுத்தியதில் அந்த சாதுவுக்கு நன்றி சொல்ல கூட மறந்துவிட்டோம்.  ஒரு நிமிட இடைவேளையில் நிமிர்ந்து பார்க்க அங்கே அந்த சாதுவை காணவில்லை.  குழந்தையின் உடல் சூடு முன்னரை விட சற்று அதிகமாக இருக்கவே, குழந்தைக்கு எல்லாம் சரியாயிருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஊர் வந்து சேர்ந்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்ததில், மருத்துவர்களே அசந்து போய் விட்டனர்.  எங்கள் குழந்தையின் இருதயத்தில் இருந்த ஓட்டை முழவதுமாக அடைந்து போய் இப்பொழுது பம்பிங் சரியாக நடப்பதாக சொல்கின்றனர்.  வந்தவர் யார் என எங்களுக்கு புரியவில்லை.  எப்படி குணப்படுத்தினார் எனவும் தெரியவில்லை.  ஆனால் நீங்கள் சொன்னபடி நல்ல விஷயம் மட்டும்  நடந்துள்ளது எங்கள் நன்றியை போகர் சித்த பெருமானுக்கு தெரிவிக்க வேண்டும்" என்றார்.

போகர் ஜீவ நாடியில் நடந்த அதிசயத்தைப் பற்றி கேட்ட பொழுது அவர் சொன்னார் 

"இந்தத் திருவிளையாடல் சிவ பெருமான் நேரடியாக நடத்தியது.  சித்தர்களுக்கே தலையாய சித்தர் தான் ஒரு திருவிளையாடலை ஏதோ ஒரு காரணத்துக்காக நடத்த விரும்புகிறார் என்றால், எங்களுக்கு அங்கே என்ன வேலை?  சொன்னதை சொல்வதுடன் எங்கள் வேலை முடிந்தது.  அதனால் தான் எந்த மருந்தும் அந்த குழந்தைக்கு விதிக்கப்படவில்லை.  சில திருவிளையாடல்களுக்கு அர்த்தம் புரியாது.  புரிந்துகொள்ளவும் முயற்ச்சிக்கக்கூடாது." என்ற உபதேசத்துடன் நிறுத்திக்கொண்டார்.

சிவபெருமானே நம்மிடை சித்தனாக உலா வருகிறார் என்பதை அறிந்த பொழுது உண்மையில் நானே அசந்து விட்டேன்.

சித்தன் அருள்......................... தொடரும்!   

Thursday 14 February 2013

சித்தன் அருள் - 111

ஒரு முக்கிய விஷயமாக ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். வழக்கம் போல் அகத்தியர் ஜீவ நாடியும் என்னிடம் இருந்தது.

ஏன் எதிரே இரு பெண்கள் அமர்ந்திருந்தனர்.  அவர்களில் பர்தா அணிந்தபடி ஜன்னல் ஓரம் வெளியே விரக்தியோடு பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளம் பெண் அடிக்கடி தனது கண்களை துடைத்துக் கொண்டே இருந்தார்.  அருகில் தலையில் முக்காடு போட்டிருந்த நடுத்தர வயது பெண் முதுகில் தட்டி ஆறுதல் கூறியபடி இருந்தாலும், அந்தப் பெண்ணின் கண்களிலும் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

அவர்களது நிலையைப் பார்க்கும்பொழுது, ஏதோ ஒரு பெரும் துக்கத்தில் மாட்டிக் கொண்டிருப்பவர்கள் போல் தோன்றிற்று.  இவர்களுக்கு அப்படி என்ன துக்கம் என்று தெரிந்து கொண்டு அகத்தியர் மூலம் உதவலாமே என்று நினைத்தேன்.

இது வீண் வம்பா?  அல்லது வேண்டாத வேலையா? எதற்காக எனக்கு இப்படியொரு எண்ணம் ஏற்ப்பட்டது? என்று கூட ஒரு சமயம் தோன்றிற்று. அந்தப் பெண்மணியுடன் யாராவது ஆண் மகன் இருந்தாலும் பரவாயில்லை. அப்படி யாரும் இருப்பதாகத் தெரிய வில்லை.  அப்படியிருக்க நாம் ஏதாவது ஒன்றைப் படித்து அதை இந்தப் பெண்மணிகளிடம் சொல்லி அது விலைக்கு வாங்குகிற வீண் வம்பாகப் போய் விடுமோ என்ற பயமும் ஏற்பட்டது.

வேறு மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அகத்தியர் மீது பற்றுக் கொண்டு பலர் வந்து நாடிக் கேட்டுப் போவதால் தவறாக எண்ண மாட்டார்கள் என்ற நம்பிக்கையும் அடி மனதில் இருந்தது.

பொதுவாக இப்போடியொரு எண்ணம் எனக்குத் தோன்றினால் அது அகத்தியரே என்னைத் தூண்டி விடுகிறார் என்றுதான் அர்த்தம்..  இதற்கு பிறகு அந்த நபர்களுக்கு நல்லதே நடந்திருக்கிறது.

எதற்கும் இந்தப் பெண்களுக்காக நாடியைப் பார்ப்பது, இவர்களாக வாய் திறந்து கேட்டால் மட்டும் பதில் சொல்வது.  இல்லையெனில் அமைதி காப்பது, என்ற முடிவோடு நாடியை எடுத்துப் புரட்டினேன்.

"எதிரே இருப்பவர்கள் தாய் - மகள்.  இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள். சூழ்நிலையின் காரணமாக இவளது கணவன், இவர்களை கைவிட்டு வேறொரு பெண்ணோடு வெளிநாட்டிற்கு ஓடிவிட்டான்.  நான்கு ஆண்டுகளாக அவன், இவர்களைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை. வறுமையின் கொடுமையும், சொந்தக்காரர்களது உதவியின்மையும் இவர்களது மனதை பெரும் பழிக்கு உள்ளாகி இருப்பதால், தாயும் மகளும் தற்கொலை செய்யும் எண்ணத்தோடு சென்று கொண்டிருக்கிறார்கள்.

இவர்களுக்கு அருமையான ஆனந்தமான வாழ்வு இருக்கிறது.  வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டாம் என்று தைரியமாகச் சொல்.  அப்படியே நாகூர் சென்று தர்க்காவில் பிரார்த்தனை பண்ணச் சொல் .  அங்கு தான் இவர்களுக்கு ஒரு திருப்புமுனையே காத்திருக்கிறது" என்று சொல்லி முடித்தார் அகத்தியர்.

இதை படித்து முடித்ததும் இந்த தகவல்களை எப்படி இவர்களுக்கு சொல்வது என்று தெரியாமல் முழித்தேன்.  முதலில் இவர்களுக்கு நாடியைப் பற்றியும், அகத்தியரின் ஜீவ நாடியைப் பற்றியும் தெரிந்தால்தானே நாம் ஏதாவது சொல்ல முடியும்? என்று வித விதமாக கற்பனை செய்து கொண்டேன்.

அப்போது என் எதிரில் இருந்த பெண்மணி "அய்யா, இப்போது நீங்கள் ஏதோ ஓலைச் சுவடியில் படித்தீர்களே அது என்ன?" என்று வாய் திறந்து கேட்டாள்.

நான், அகத்தியர் ஜீவ நாடியைப் பற்றி ஓரளவு விவரமாக எடுத்துச் சொன்னேன்.

"இதிலே அகத்தியர் எல்லா விஷயத்தையும் சொல்வாரா சாமி?"

"சொல்வார்.  ஆனால் அவரவருக்குரிய அதிஷ்டத்தைப் பொறுத்தது".

"எங்களுக்கு சொல்வாரா?"

"சொல்லுவார்".

"அப்படின்னா கொஞ்சம் கேட்டுச்  சொல்லுங்க அய்யா!" என பணிவோடு கேட்டாள்.

"இப்பொழுது உங்களுக்குத் தான் நான் அகத்தியரிடம் கேட்டேன்.  நீங்கள் தற்கொலை செய்யும் எண்ணத்தை விட்டு விட்டு நாகூர் தர்காவுக்கு போங்கள்.  அங்கு தான் உங்கள் வாழ்க்கையே மலரப் போகிறது என்று அகத்தியர் சொன்னார்" என்று தைரியமாகச் சொல்லி விட்டேன்.

இதைச் சொன்னதும் அந்த தாயும் - மகளும் அதிர்ச்சியால் அரண்டே போனார்கள்.  சில நிமிடங்கள் வரை என்னிடம் பேசவே இல்லை.  பின் என்ன தோன்றியதோ தெரியவில்லை, "நாங்கள் நாகூர் சென்று விட்டு பின்னர் உங்களை சந்திக்கிறோம்" என்ற அந்த பெண்மணி என் முகவரியை மட்டும் வாங்கிக் கொண்டாரே தவிர, வேறு எதுவும் பேசவே இல்லை.

ஒன்றரை மாதம் கழிந்திருக்கும்.

எனக்கு ஒரு கடிதம் வந்தது.  அந்தக் கடிதத்தை சாயிராபானு என்கிற பெண்மணி எழுதியிருந்தார்.

"அன்றைக்கு ரெயிலில் தாங்கள் அகத்தியர் நாடியைப் பார்த்து சொன்னது எங்களுக்குத்தான்" என்று தன்னை அறிமுகம் செய்து இருந்தார்.  "அன்றைய தினம் நாங்கள் தற்கொலை செய்யும் மனநிலையில் தான் இருந்தோம். அப்போது அகத்தியர் கூறியதாக நீங்கள் கூறியது அத்தனையும் உண்மை நதியில் விழுந்து தற்கொலை செய்யப் போன எங்களுக்கு நீங்கள் சொன்ன தகவல் யோசிக்கவைத்தது.  இதன் மூலம் எங்களது தற்கொலை எண்ணத்தை மாற்றிக்கொண்டு நாகூர் சென்றோம்.  இன்றைக்கு மிகப் பெரிய வயதான வசதிமிக்க "ஹாஜி" ஒருவரது கருணையால் சவுகரியமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்" என்று எழுதப்பட்டிருந்தது.

ஆனால் நாகூரில் என்ன அதிசயம் நடந்தது என்று எழுதவில்லை.  ஏதோ ஒரு நல்ல காரியம் நடந்திருக்கிறது என்று மட்டும் தெரிந்தது.  அகத்தியருக்கு நன்றி சொன்னேன்.

இரண்டு மாதம் கழிந்தது.

ஒரு நாள் மாலையில் அந்த பெண்மணியே என்னைத் தேடி வந்தார்.

"அய்யா! நாங்கள் யாரோ? நீங்கள் யாரோ?  அன்றைக்கு தற்கொலை எண்ணத்தை மாற்றி எங்கள் உயிரை காப்பாற்றினீர்கள்." என்றவர் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார்.

"என்ன விஷயம்?"

"நிறைய இருக்கிறது!  அன்றைக்கு நாகூர் தர்காவுக்கு நாங்கள் சென்றபோது இறை அருளால், மிகப் பெரிய கோடீஸ்வரர்  கருணை கிட்டியது.  வயதான அவருக்கு நானும், என் மகளும் துணையாக நின்றோம்.  வறுமையில் நான்காண்டு காலமாக துடித்த எங்களுக்கு அந்தப் பெரியவர் மூலம் புதிய வாழ்வு கிடைத்தது.  எங்களை சொந்த பிள்ளை போல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.

நாகூர் சென்றால் அதிசயம் நடக்கும் என்று அன்றைக்கே நீங்கள் சொன்னீர்கள்.  அந்த அதிசயம் தான் அந்த நல்லவரை எனக்கு அடையாளம் காட்டியது.  அந்த சந்தோசம் இப்போது குறைந்து விட்டது" என்றார்.

"என்ன விஷயமாக இருக்கும்?" என்று எண்ணியபடி நாடிக் கட்டைப் பிரித்தேன்.

"இந்த பெண்மணியின் கணவன், இவளைக் கைவிட்டு விட்டுப் போனவன், வெளிநாட்டில் இருந்து வெறும் கையேடு திரும்பி வந்திருக்கிறான்.  எந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு வெளிநாடு போனானோ, அந்தப் பெண் இவனை கைவிட்டு விட்டாள்.

எல்லாவற்றையும் இழந்து ஒரு பைசாக்கூட இல்லாமல் மனம் நொந்து தாய் மண்ணை மிதித்தான்.மனைவி-குழந்தைகளை தேடி அலைந்தபோது அவர்கள் நாகூரில் இருப்பதாக தெரிந்து கொண்டு அங்கே வந்தான்.  பணக்கார வீட்டில் செல்லப் பெண்ணாக தன மனைவி வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பதை அறிந்து அங்கு சென்று பணத்தைக் கொடு என்று தொல்லை செய்து கொண்டிருக்கிறான்.

இவளுக்கோ தன கணவனைப் பிடிக்கவில்லை.  போதாதக் குறைக்கு பொல்லாத நோயும் அவனுக்கு வந்திருக்கிறது.  இந்த பிரச்சினை ஒரு புறம் இருக்க -

இவளது திருமகளோ - இஸ்லாம் மதத்திற்கு மாறாக வேறொரு மதத்தைச் சேர்ந்த ஒரு பையனோடு காதல் கொண்டு விட்டாள்.  அவளை மாற்ற முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறாள்.  இது தான் பிரச்சினை" என்று விவரமாக அகத்தியர் எடுத்துரைத்தார்.

இதைச் சொன்னதும் அதை ஆமோதித்தபடி அந்தப் பெண் பேசினார்.

"என் பிரச்சினைக்கு முடிவே கிடையாதா?  இப்பொழுதுதானே நான் சந்தோஷமாக இருக்கிறேன்.  இதையும் என் கணவர் கெடுக்கிறார். கஷ்டப்பட்ட என் பெண்ணும், வசதி வாய்ப்புகளை பெற்றதும் புத்தி மாறிப் போகிறது" என்றார் அந்த பெண்மணி.

இதைக் கேட்டதும் எனக்கு சங்கடமான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டோமோ என்ற எண்ணம்தான் ஏற்பட்டது.

எது இருந்தாலும் இது அகத்தியர் கட்டளை என்றெண்ணி நாடியை அந்த பெண்மணிக்காக படிக்க ஆரம்பித்தேன்.

"எல்லாம் வல்ல இறைவனை நினைத்து பிரார்த்தனை செய்தால் போதும். இவளது பிரச்சினைக்கு நல்ல முடிவை இன்னும் ஆறு மாதத்தில் கொண்டு தரும்" என்று பரிகாரம் சொன்னார்.  மேலும் இந்த பெண்மணிக்காக நீயும் ஒரு யாகம் செய் என்று எனக்கு சில விஷயங்களை, மந்திரங்களை தனியாகச் சொல்லி, அதுபடி செய்யுமாறு ஆணையிட்டார்.

அந்த பெண்மணியும் மகிழ்வோடு சென்று விட்டார்.

நான்கு மாதம் கழிந்திருக்கும்.  ஒரு நாள் அந்த பெண்மணி தன கணவன், பெண் இவர்களை அழைத்துக் கொண்டு சந்தோஷமாக என்னிடம் வந்தார்.

"இப்பொழுது என் கணவரும் திருந்தி விட்டார்.  அவருக்கு வந்த நோயும் குறைந்து விட்டது.  இது மிகப் பெரிய அதிசயம்.

வேற்று மதத்தைச் சேர்ந்த ஒரு பையனை என் மகள் விரும்புகிறாள் என்று அன்றைக்குச் சொல்லி இருந்தேன்.  பொதுவாக எங்கள் மதத்தில் உள்ள பெண், வேறொரு மதத்தைச் சேர்ந்தவனை விரும்பி மணந்து கொண்டால் - அந்த வீட்டாரை எங்கள் ஊரில், யாரும் சேர்ப்பதில்லை.  அந்த நிலைக்கு ஆளாகிவிடுவோமோ என்று பயந்தேன்.  இதற்காக இறைவனிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தோம்.  குர்ரானை முறைப்படி ஓதினோம்.  இறைவன் காப்பாற்றி விட்டான்.  என் பெண்ணும் மனம் மாறி விட்டாள்.  இது அடுத்த அதிசயம்.

இந்த இரண்டை விட மிகப் பெரிய அதிசயம் ஒன்று நடந்திருக்கிறது. வறுமைக் கோட்டில் இருந்து தற்கொலை செய்யப் போன எங்களை அகத்தியர் காப்பாற்றி,கோடீஸ்வரன் வீட்டுப் பெண்ணாக மாற்றினார். இப்பொழுது என் கணவருக்கும் பணம் கொடுத்து வியாபாரம் செய்யச் சொல்லியிருக்கிறார் அந்த கோடீஸ்வரர்.  இதைவிட பாக்கியம் வேறு என்ன வேண்டும் எங்களுக்கு?  எல்லாப்புகழும் இறைவனுக்கே" என்றபடி விரிவாக பேசினார், அந்த பெண்மணி.

கேட்க சந்தோஷமாக இருந்தது.  இதுபோல் அதிசயங்களை அகத்தியர் எல்லோருக்கும் நடத்திக் காட்டட்டும் என்று வேண்டிக் கொண்டேன்.

சித்தன் அருள்.................... தொடரும்!

Thursday 7 February 2013

சித்தன் அருள் - 110


"ஜ்வால நரசிம்மர் கோயில் வரும்" என்று தெலுங்கில் சொல்லிவிட்டுக் காணாமல் போன அந்த ஆட்டிடயனைப் பற்றிப் பின்னர் நான் கவலைப்படவில்லை.

எப்படியாவது அந்த இக்கட்டான நிலையிலிருந்து தப்பிவிட வேண்டும்.  நடுகாட்டில், துஷ்ட மிருகங்களுக்கு மத்தியில் மாட்டிக் கொண்டு பட்ட பாடு போதும்" என்ற எண்ணம்தான் துளிர் விட்டதே தவிர, அந்த ஆட்டிடையன் யாரோ என்று அப்படியே விட்டுவிட்டேன்.

கொஞ்ச தூரம் சென்றதும், ஜாவால நரசிம்மரின் கோயிலுக்கு செல்லும் பாதை தென்பட்டது.

"அப்பாடி" என்று பெருமூச்சு விட்டேன்.  என் கண்ணுக்கு எதிரே கூட்டம் கூட்டமாக ஜ்வாலா நரசிம்மரைத் தரிசிக்க பக்தர்கள் சென்று கொண்டிருந்தது தெரிந்தது.  மிகவும் வேக வேகமாக நடந்த நான் இப்போது நிதானமாக நடக்கத் தொடங்கினேன்.

இந்த அகோபிலம் வந்த பிறகு சம்பந்தா சம்பந்தமில்லாத சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன.  இதெல்லாம் அதிசயம் என்று எண்ணிக் கொள்வதா? இல்லை கர்மவினை என்று சமாதானம் செய்து கொள்வதா? என்று தெரியாமல் சர்வமும் லக்ஷ்மி நரசிம்மருக்கே சமர்ப்பணம் என்று வேறு சிந்தனை செய்யாமல் விட்டுவிட்டேன்.

அகோபிலம் வரும் வழியில் நள்ளிரவில் நான் ஆகாயத்தில் கண்ட "தூமகேது" இதனை ஒட்டி வெளிவந்த அகஸ்தியர் நாடி வாக்கியங்கள் எல்லாம் ஏதோ ஒன்று இந்தப் பாரத தேசத்தில் நிகழப் போகிறது என்பது மட்டும் உண்மை என்று உள் மனதில் உறுத்திக் கொண்டிருந்தது.

எப்படியோ திருப்பதியில் அகோபில மடத்து மானேஜரிடம் கொடுத்த வாக்குறுதியை இந்த அகோபில மட விஜயம் மூலம் காப்பாற்றியாகி விட்டது.  இனி எது நடந்தாலும் அது நல்லபடியாகவே நடக்கும் என்ற தன்னம்பிக்கை ஜ்வாலாமுகி நரசிம்மர் சன்னதியில் நுழையும் போது மனதில் மிக ஆழமாக ஊன்றியது.

ஜ்வாலா என்றால் அக்னியின் வேகம்.  ஜ்வாலாமுகி நரசிம்மரின் தோற்றம்.  மற்ற நரசிம்ம மூர்த்தியின் முகங்களை விட அதிகமாக பெரியதாக இருப்பதுபோல் தென்பட்டது.

ஹிரண்யகசிபுவைக் கொல்வதற்கு முன்பு நரசிம்மர் முகத்தில் ஏற்பட்ட கோபம் எப்படியிருந்தது என்பதை ஜ்வாலாமுகி நரசிம்மர் உருவத்தை கண்டு தெரிந்து கொள்ளலாம்.  ஆனால் பக்தியோடு இந்தப் பெருமாளைத் தரிசித்தால் கருணையைக் காணலாம்.

அன்றைக்கு என்னவோ ஜ்வாலமுகி நரசிம்மர் எனக்குக் கருணை ததும்பும் தரிசனத்தைத் தந்தார் என்பது மட்டும் உண்மை.

பெருமாளைத் தீர்க்கமாகத் தரிசித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்தக் கோயிலின் கருவறையில் இருந்து வெளி வந்த பட்டாச்சாரியார், என் அருகில் வந்து என் கையில் சுற்றி வைக்கப்பட்டிருந்த அகஸ்தியரின் ஜீவ நாடியைப் பார்த்தார். 

"என்ன? ஏது?" என்று தமிழில் விசாரித்தார்.

அந்தக் கோயிலில் தமிழில் இதைக் கேட்ட பொழுது எனக்குப் பரமானந்தம்.  என்ன இருந்தாலும் அவரவர்க்குரிய தாய் மொழியில் வேற்றிடத்தில் பேசும் பொழுது ஏற்படுகிற சந்தோஷம் சொல்லிவிட முடியாது.

விஷயத்தைச் சுருக்கமாகச் சொன்னேன்.

"இந்தச் சன்னதியில் அமர்ந்து படிக்கலாமா?" என்று நிதானமாகக் கேட்டார்.

"நாடி படிக்கலாம்.  ஆனால் நான் சுத்தமாக இல்லை.  கண்ட இடமெல்லாம் அலைந்து திரிந்து வியர்வை வழிய வந்திருக்கிறேன்.  அகஸ்தியர் நாடி படிக்க சில நியதிகள் இருக்கின்றன.  அவற்றைக் கடைபிடித்தால் தான் அகஸ்தியரோடு பேசமுடியும்!"

"இது கோயில் சன்னதி தானே.  சுத்தத்திற்கு குறையிருக்காதே"

"உண்மை.  ஆனால் நான் ஸ்நானம் செய்துவிட்டு வந்து படிக்க வேண்டும்."

"அவ்வளவுதானே.  அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன்.  அப்படியே மாற்று உடையும் தருகிறேன்" என்றார் அந்தப் பட்டாச்சாரியார்.

"அப்படியென்றால் சரி" என்றேன்.  அவர் வாக்குறுதி கொடுத்தாற்போல் சகவிதமான ஏற்பாடுகளையும் செய்தார்.  மாற்றுடை அணிந்து, சிறு பலகையில் அமர்ந்து அகஸ்தியரை வணங்கி, நாடியைப் பார்த்தேன்.

"நாடியில் ஒன்றும் வரவில்லை."

எனக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  ஒரு முறையல்ல, பலமுறை முயற்சி செய்தும் அகஸ்தியர் நாடியில் தோன்றவில்லை.  சரிதான்.  விக்ரமாதித்தன் கதையில் வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறியது போல் என் விஷயத்திலும் வந்துவிட்டது போலும் என சங்கடப்பட்டேன்.

நாடி படிக்க வேண்டும் என்று என்னிடம் பணிவுடன் கேள்வி கேட்டு வேண்டி நின்ற அந்த பட்டாச்சாரியார் இன்னும் வந்து அமரவில்லை என்பதைக் கண்டு என் மனதில் ஒரு சந்தோஷம்.  அவர் வந்து என் முன் அமர்வதற்குள் அகஸ்தியர் நாடியில் தோன்ற வேண்டும் என்ற ஒரு கவலையும் ஏற்பட்டது.  லக்ஷ்மி நரசிம்மரை மனதார வேண்டிக் கொண்டேன்.  என்னை எப்படியாவது இந்த நெருக்கடியான நிலையிலிருந்து காப்பாற்று என்று கண்ணீர் விட்டுக் கேட்டுக்கொண்டேன்.

பய பக்தியோடு மறுபடியும் அகஸ்தியர் நாடியைப் பிரித்தேன்.  சட்டென்று என் கண் முன் தோன்றும்.  அந்த ஒளி வார்த்தை தென்படவே இல்லை.  ஏதோ மிகப் பெரிய தப்பு நடந்திருக்கிறது.  இல்லை என்றால் இதுவரை ஏன் அகஸ்தியர் என் கண் முன் தோன்றவில்லை என்று பயம் பிடித்துக் கொண்டது.

சுத்தமாக குளித்து வந்தால் என்ன குளித்து வராவிட்டால் என்ன? இனி ஜீவநாடி படிக்க முடியாது என்று உறுதியாகி விட்டதால் பொறுமையிழந்த நான், "கட்டை" கயிறு கட்டி நன்கு இறுக்கி மூடி விட்டேன்.

அந்தப் பட்டாச்சாரியார் வந்தால் "நாடி வரவில்லை" என்று உண்மையைச் சொல்லிக் கொள்ளலாம்.  இதனால் அவர் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டாலும் பரவாயில்லை.  மீறிப் பேசினால் இந்த நாடிக் கட்டை அவரிடமே கொடுத்து விட்டு கையை வீசிக் கொண்டு ஊர் போய்ச் சேரலாம் என்று முடிவெடுத்தேன்.

எனக்குரிய உடைகளை அணிந்து கொண்டு பட்டாச்சாரியார் கொடுத்த உடைகளை மீண்டும் எடுத்து மடித்து அவரிடம் கொடுக்கக் காத்திருந்தேன்.

ஆனால் அவர் வரவே இல்லை.

ஆட்டிடையன் வந்தான்.  ஏதோ உதவி செய்தான்.  சட்டென்று காணாமல் போனான்.  இங்கு பட்டாச்சாரியார் வந்தார்.  நாடியைப் படிக்கச் சொன்னார், "இதோ வருகிறேன்" என்று சொன்னவர் ஒரு மணி நேரம் வரை ஆகிவிட்டது.  ஆனால் காணவில்லை.

எனக்கும் மலைக் கோவிலுக்கும் என்ன தொடர்பு? எதற்காக இங்குச் சோதனை நடக்கிறது? என்று புரியவில்லை.  இதுபற்றி அகஸ்தியரிடம் கேட்கலாம் என்றால் அவரும் ஜீவ நாடியில் வரவில்லை.  இதெல்லாம் எண்ணி "இனி நாடியும் வேண்டாம், எதுவும் வேண்டாம்" என்று முடிவெடுத்து ஜ்வாலா நரசிம்மரிடம் மனதார வேண்டி "பட்டாச்சாரியார் கொடுத்த வேஷ்டியில்" அகஸ்தியர் ஜீவ நாடியை உள்ளே வைத்து யார் கண்ணிலும் படாமல் நன்றாகச் சுற்றி ஓரிடத்தில் அதனை மறைத்து வைத்தேன்.

"நல்ல வேளை யாரும் பார்க்கவில்லை" என்று எண்ணி அங்கிருந்து தப்பித்தேன், பிழைத்தேன் என்று பதுங்கிப் பதுங்கி வெளியே வந்தேன்! பட்டாச்சாரியார் கண்களில் பட்டுவிடக் கூடாதே என்ற பயத்தில் அந்த ஜ்வாலாமுகி நரசிம்மார் சன்னதிக்கு அனந்த கோடி நமஸ்காரங்களைச் சொல்லி விட்டு மிக வேகமாகப் படியிறங்கினேன்.

வரும் வழியில் எந்த நபரைக் கண்டாலும் அது ஜ்வாலாமுகி நரசிம்மர் கோயில் பட்டாச்சாரியார் போலவே தோன்றியது.  எதற்காக இவரைக் கண்டு பயந்து நடுங்க வேண்டும் என்றும் தெரியவில்லை.  ஆனால் என்னையும் அறியாமல் ஒரு தவறு செய்துவிட்டோம் என்ற உணர்வு, விடாமல் தொடர்ந்து வந்தது என்பது மட்டும் உண்மை.

"அகஸ்தியர் நாடியை நான் அவ்வாறு அங்கு விட்டு விட்டு வந்திருக்கக் கூடாது" ஏன் அப்படிச் செய்தேன்? என்பது புரியவில்லை.

இந்த நினைப்போடு கடந்த கால நிகழ்வுகளை அசைபோட்டு எப்படியோ கீழ் அகோபிலத்திற்கு வந்து சேர்ந்தேன்.

யாரும் என்னைப் பார்க்கவில்லை.  எதுவும் கேட்கவில்லை என்று ஒரு சந்தோஷம் இருந்தது.

இருந்தாலும் அந்தத் தூமகேதுவைப் பற்றி முழுமையாக அகஸ்தியரிடம் கேட்டிருக்கலாம்.  அவரும் இதுபற்றி விளக்கமாகச் சொல்லவும் இல்லை, எல்லாம் நன்மைக்கே என்று எண்ணிக் கொண்டேன்.

இனியும் இங்கிருப்பதில் அர்த்தமில்லை என்று எண்ணிய நான் அறையைக் காலி செய்து விட்டு என் பெட்டியோடு வெளியே வந்தேன்.

பெற்றோரிடம் சொல்லிக் கொள்ளாமல் வெளியே வந்தது மற்றும் அலுவகத்தில் முன் அனுமதி பெறாமல் அகோபிலம் வந்தது பெருந் தவறு போல் தோன்றியது.

இப்போது நாடி கட்டு கையில் இல்லை.  இனிமேல் அகத்தியர் அருள் கிட்டுமோ, கிட்டாதோ? நிம்மதியாக உலா வரலாம்.  இதனால் எனக்கு குடும்பப் பொறுப்பு ஏற்பட்டு விடும்.  பெற்றோர் மனதும் ஆறுதல் அடையும், ஒரு நல்ல பிள்ளையாக மாறி விடலாம் என்ற சந்தோஷம் உந்தித் தள்ள அருகிலுள்ள பஸ் ஸ்டாண்டிற்கு வந்து சேர்ந்தேன்.

பஸ் ஸ்டாண்டில் என் கண்ணில் தென்பட்டார் ஜ்வாலாமுகி நரசிம்மார் கோயில் பட்டாச்சாரியார்.

யாரைப் பார்க்கக் கூடாது என்று பயந்துக் கொண்டிருந்தேனோ, அவரே என் நாடிக்கட்டுடன் என்னை எதிர்நோக்கிக் காத்திருந்தது என் அடி வயிற்றைப் பகீர் என்றது.

சிரித்த முகத்துடன் என் அருகே வந்தவர் "அவசரத்தில் இந்த அகஸ்தியர் நாடியை மேலே மறைத்து வைத்து விட்டீர்கள் போலிருக்கிறது.  இந்தாருங்கள்" என்று என் கையில் ஜீவ நாடியைக் கொடுத்தார்.  வேறு ஒன்றும் சொல்லவே இல்லை.  "இல்லை வந்து ..........." என்று ஏதேதோ பிதற்றினேன்.  நான் சொன்னது அத்தனையும் "பொய்" என்று அவருக்குத் தெரிந்தது.  ஆனால் "வாக்குவாதம்" செய்யாமல் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார்.

எனக்கு குற்ற உணர்ச்சி என்பதால் வெட்கித் தலைகுனிந்தேன்.

"நாடியில் ஒன்றும் வரவில்லயாக்கும்" என்று யாரையோ பார்த்துச் சொல்வது போல் சொன்னவர், "இப்போது இந்த இடத்தில் பிரித்துப் படித்தால் நாடியில் செய்தி வரும்.  ஆனால் வேண்டாம்.  பஸ்சில் ஏறி அமர்ந்து படித்தால் அகஸ்தியர் நிறைய செய்திகளைச் சொல்வார்" என்று தெய்வ வாக்கை அந்தப் பட்டாச்சாரியார் சொன்னார். (என்னவெல்லாம் சொன்னார் என்பதை அந்தப் பெரியவர் மறைத்துவிட்டார்.  உண்மையாகவே இதை தட்டச்சு செய்தபோது என் உடல் அனைத்தும் "சிலிர்த்துவிட்டது" என்பது உண்மை. பல முறை படித்துப் பார்த்தேன்,  அதே உணர்வுதான்.  எல்லோரும் படித்து இன்புறுங்கள்!).

நான் மறுமொழி பேசாமல் அந்த நாடியை எடுத்து பஸ் வரும் வரை படிப்போமே என்று பிரித்தேன்.  படிக்க ஆரம்பித்தேன்.  ஏகப்பட்ட அதிர்ச்சித் தகவலை அகஸ்தியர் தந்தார்.  படித்து முடித்து நிமிர்ந்து பார்த்தேன்.  அந்தப் பட்டாச்சாரியாரை காணவில்லை. (வந்தது அகத்தியராகத்தான் இருக்கவேண்டும் என்று என் மனது சொல்கிறது)

அகோபில நிகழ்ச்சிகள் இத்துடன் நிறைவு பெற்றது!

சித்தன் அருள்................. தொடரும்!