​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 30 April 2017

சித்தன் அருள் - 659 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ப்ரஹ்லாதனின் பக்தி அவன் தந்தைக்கு பிடிக்கவில்லை. தந்தையின் போக்கு ப்ரஹ்லாதனுக்கு பிடிக்கவில்லை. தந்தை என்ற உறவில் ப்ரஹ்லாதன் மதிப்பை வைத்திருந்தான். ஆனால் தந்தையின் கருத்தில் ப்ரஹ்லாதனுக்கு மதிப்பு இல்லை. எனவே தாய்க்கும், தந்தைக்கும் ஆற்ற வேண்டிய கடமை, கொடுக்க வேண்டிய மரியாதையை மைந்தன் கொடுத்துதான் ஆக வேண்டும். ஆனால் அவர்களுடைய கருத்தை அப்படியே பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை, அந்த கருத்து நல்லவற்றிற்கு, சத்தியத்திற்கு, அறத்திற்கு, இறைக்கு எதிராக இருக்கும் பட்சத்தில். எனவே இஃதொப்ப நிலையிலே தாய்க்கும், தந்தைக்கும் தன் பிள்ளை தாராளமாக தர்மம் செய்வது பிடிக்கவில்லையென்றால், அந்தக் கருத்தை அந்த மைந்தன் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. தொடர்ந்து தர்மத்தை செய்யலாம். அதே சமயம், தாய்க்கும், தந்தைக்கும் செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

Saturday 29 April 2017

சித்தன் அருள் - 658 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஐயனே! பாவமும், புண்ணியமும் அற்ற நிலைதான் சித்த நிலையா? எப்பொழுது பாவமும், புண்ணியமும் ஆன்மாவைப் பற்றி கொண்டது?

எப்பொழுது நீக்கமற நிறைந்த பரம்பொருள் பல்வேறு படைப்புகளை படைத்ததோ, அந்த படைப்புகளுக்கு சுய உரிமை தந்து, சுய ஆற்றல் தந்து தன் விருப்பம் போல் சிலவற்றை செய்யலாம் என்று இறைவன் எனப்படும் பரம்பொருள் அனுமதி தந்தாரோ, அப்பொழுதே பாவமும், புண்ணியமும் வந்துவிட்டது.

Friday 28 April 2017

சித்தன் அருள் - 657 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவன் அருளாலே, ஏதோ குறிப்பிட்ட ஒருவனை இறைவன் படைத்துவிட்டு, அஃதொப்ப அப்படி படைக்கப்பட்ட ஆணிலிருந்து ஒரு பெண்ணைப் படைத்தான், என்று ஒரு குறிப்பிட்ட மார்க்கத்தை சேர்ந்தவர்கள் சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அதற்காக அதை குறை கூறவும் நாங்கள் விரும்பவில்லை. எனவே நீக்கமற நிறைந்துள்ள இந்த பிரபஞ்சம், அண்ட, சராசரங்கள் எப்பொழுதுமே இருக்கின்றன. இங்கே ஆத்மாக்களும் எப்பொழுதுமே இருந்து கொண்டு இருக்கின்றன. இறைவன் எப்பொழுது இந்த உலகத்தைப் படைத்தான்? எப்படி படைத்தான்? என்று பார்க்கப் போனால், அதைப் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு அறிவாற்றலானது மனிதக் கூட்டுக்குள் இருக்கக்கூடிய ஆத்மாவிற்குக் கிடையாது. இந்த மனிதக் கூட்டுக்குள் இருக்கின்ற ஆத்மாவானது தன் உடலை மறந்து, தனக்குள் நீக்கமற நிறைந்துள்ள ஆத்மாவை புரிந்து கொண்டு, அந்த ஆத்மாவும், பரமாத்மாவும் ஒன்று என்று உணரும்பொழுதே, அந்த ஆத்மாவிற்கு மெல்ல, மெல்ல புலப்படத் துவங்கும். அதாவது பரந்துபட்டு ஓடுகின்ற ஒரு புண்ணிய நதி. அந்த நதியை சுட்டிக்காட்டி, அந்த அற்புதமான புண்ணிய நதியைப் பார்த்து ஒருவன் கேட்பான் “இது என்னப்பா?" என்று. இன்னொருவன் கூறுவான் ‘இது புண்ணிய நதி. இது கங்கை, இது காவிரி, இது சரஸ்வதி, இது யமுனை' என்று.  ‘ சரி ‘ என்று ஒரு செப்புக் கலசத்திலே அந்த நதி நீரை அள்ளி ‘இப்பொழுது இது என்ன ?' என்று கேட்டால், ‘இது கலச நீர்' என்பான். அந்த நதியிலே ஓடுகின்ற நீர்தான் கலசத்துள் வந்திருக்கிறது. ஆனால் நதியிலே இருக்கும்பொழுது அது கங்கை என்றும் காவிரி என்றும் பெயர் பெற்றது. இப்பொழுது அதே நீர் கலசத்திற்குள் வந்த பிறகு கலச நீர் என்றாகிவிட்டது. அந்த கலச நீரை நதியிலே மீண்டும் விட்டுவிட்டால், மீண்டும் அது நதி என்று பெயரை அடைந்துவிடுகிறது. இப்படியாக இந்த ஆத்மா, பரமாத்மா எனப்படும் நதியிலிருந்து பிரிக்கப்பட்டு இந்த உலகென்னும் கலசத்திற்குள் அடைக்கப்பட்டது. கலச நீர், ஜீவாத்மா என்று அழைக்கப்படுகிறது. மீண்டும் நதியோடு கலந்துவிட்டால் பரமாத்மா ஆகிவிடுகிறது. எனவே திடும்மென்று ஒரு நாள் ஒரு ஆணையோ, பெண்ணையோ, திடீரென்று இறைவன் படைத்து விடவில்லை. அதற்கு முன்பே தேவர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள் என்றெல்லாம் இருக்கிறது. அங்கே தவறு செய்பவர்களை அனுப்புவதற்கென்றே ஒரு சிறைக்கூடம் போல் ஒன்று செயல்பட்டபோது, இந்த பூமி படைக்கப்பட்டு, முதலில் மேலானவர்கள் செய்யக்கூடிய, அறியாமையிலே அல்லது அகங்காரத்திலே செய்யக்கூடிய குற்றங்களுக்காக அவர்களை பதவியிறக்கம் செய்வதற்காக மனித குலம் படைக்கப்பட்டது.  அந்த மனித குலம் மேலும், மேலும் விரிவடைந்து மீண்டும், மீண்டும் தவறுகள், மீண்டும், மீண்டும் பாவங்கள் என்று அடுக்கடுக்காக பிறவிகள் வந்து கொண்டே இருக்கிறது.

Thursday 27 April 2017

சித்தன் அருள் - 656 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஒரு ஆத்மா எப்போது? எந்த மாதத்தில்?  ஒரு பெண்ணின் கர்ப்பத்தில் உள்ள பிண்டத்தில் பிரவேசிக்கிறது என்பதை முழுக்க, முழுக்க இறைவன்தான் முடிவெடுப்பார். இஃதொப்ப ஆணும், பெண்ணும் சேர்ந்து சதை பிண்டத்தை உருவாக்குகிறார்கள். அதற்குள் என்ன வகையான ஆத்மா? அது என்ன வகையான காலத்திலே, என்னென்ன வகையான நிலையிலே அந்தப் பிண்டத்திற்குள் நுழைய வேண்டும் என்பதை இறைவன் முடிவெடுக்கிறார். எப்படி முடிவெடுக்கிறார்? அந்தக் குடும்பம், புண்ணியம் அதிகம் செய்த குடும்பமா? புண்ணியங்களை தொடர்ந்து செய்து வரும் பாரம்பர்யம் மிக்க குடும்பமா? அப்படியானால் அந்த புண்ணியத்தின் அளவின் விழுக்காடு எந்த அளவு இருக்கிறது? புண்ணியத்தின் தன்மை எந்தளவிற்கு இருக்கிறது? அப்படியானால் அதற்கு ஏற்றாற் போல் ஒரு புண்ணிய ஆத்மாவை அங்கே பிறக்க வைக்க வேண்டும். அப்படியானால் அந்த புண்ணிய ஆத்மா அங்கே பிறப்பதற்கு எந்த கிரக நிலை உகந்தது? என்பதையெல்லாம் பார்க்கிறார். அதற்கு ஏற்றாற் போல்தான் அந்த ஆணும், பெண்ணும் சேரக்கூடிய நிலையை விதி உருவாக்கும். விதியை இறைவன் உருவாக்குவார். அதன் பிறகு அந்த சதை பிண்டம் உருவாகின்ற நிலையில் ஒரு ஜாதகம் இருக்கும். அதுவும் கூடுமானவரை உச்சநிலை ஜாதகமாகவே இருக்கும். இந்த கூடு உருவாகிவிட்ட பிறகு நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளானது அதற்குள் ஆத்மாவை அனுப்புகின்ற ஒரு காலத்தை நிர்ணயம் செய்து அதற்கேற்ற கிரக நிலைக்கு தகுந்தாற்போல் உள்ள கால சூழலில் அதனை முடிவெடுப்பார். இது ஆதியிலும் நடக்கலாம். இடையிலும் நடக்கலாம். இறுதியிலும் நடக்கலாம். இஃதொப்ப நிலையிலே சில மிக விசேஷமான புண்ணிய சக்தி கொண்ட ஆத்மாக்கள் ஒரு முறை உள்ளே சென்று விட்டு பிறகு மீண்டும் வெளியே வந்து இறைவனைப் பார்த்து "நான், இந்த குடும்பத்தில் பிறக்க விரும்பவில்லையே! வேறு எங்காவது என்னை அனுப்புங்கள்" என்றெல்லாம் உரைக்கின்ற நிலைமையும் உண்டு. இஃதொப்ப நிலையில், அஃதொப்ப அந்த பிண்டம் ஆண் பிண்டமாக இருக்கலாம். உள்ளே இருக்கின்ற ஆத்மா, பெண் தன்மை கொண்ட ஆத்மாவாக இருக்கலாம். அஃதொப்ப அந்த பிண்டம் பெண் பிண்டமாக இருக்கலாம். உள்ளே நுழைகின்ற ஆத்மா, ஆண்  ஆத்மாவாக இருக்கலாம் அல்லது பெண் ஆத்மாவாக இருக்கலாம். பெண் பிண்டம், பெண் ஆத்மா – அங்கு பிரச்சினை இல்லை. ஆண் பிண்டம், ஆண் ஆத்மா – அங்கும் பிரச்சினை இல்லை. ஆனால் இதை மாறி செய்வதற்கும் சில கர்ம வினைகள் இருக்கின்றன. இதற்குள் நுழைந்தால் அது பல்வேறு தெய்வீக சூட்சுமங்களை விளக்க வேண்டி வரும்.

Wednesday 26 April 2017

சித்தன் அருள் - 655 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவன் அருளால், மங்கல சின்னம் என்று, இடை காலத்தில் பெண்கள் குங்குமம் வைத்துக்கொள்ளும் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் அதை மறுக்கவில்லை. ஆனால் உடலுக்கு தீங்கைத் தரும் இரசாயனங்களை எல்லாம் வைத்துக் கொள்வதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையப்பா. இன்னமும் கூறப்போனால், அந்த செந்நிற வண்ணத்தை விட, நேரடியாக தூய்மையான சந்தனத்தை வைத்துக் கொள்ளலாம். நல்ல முறையில் தயாரிக்கப்பட்ட திருநீற்றை வைத்துக் கொள்ளலாம். பெண்கள், அப்படி செந்நிற வண்ணத்தை இட்டுக்கொள்ளாமல், மங்கலமான கஸ்தூரி மஞ்சள் பொடியையோ அல்லது தூய்மையான மஞ்சள் பொடியையோ பொடித்து அவற்றை வைத்துக் கொள்ளலாம். அதுதான் சித்தர்களின் முறையாகும்.

Tuesday 25 April 2017

சித்தன் அருள் - 654 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

செடி,கொடிகளைக் கொன்றுதான் நாங்கள் இந்த பூமியில் வாழ வேண்டுமா? வேறு மாற்று வழியில்லையா?

மனிதனாக பிறந்து விட்டாலே பாவங்கள் செய்துதான் ஆக வேண்டும் என்பதற்கு, இந்த வினாவும் ஒரு உதாரணம். ஆனாலும் ஐம்புலனை சரியாக கட்டுப்படுத்தி. யோக நிஷ்டையில் அமர்ந்து, யோக மார்க்கத்தில் செல்லக்கூடிய ஒரு பாக்கியம் பெற்ற ஆத்மாக்கள் ஐம்பூதங்களில் இருந்து தன் உடலுக்கு தேவையான சத்துக்களை எடுத்துக் கொள்ள முடியும். காட்டிலிருந்தும், தன்னை சுற்றியுள்ள கதிர்வீச்சிலிருந்தும், சூரிய, சந்திர ஒளியிலிருந்தும், மண்ணிலிருந்தும் கூட அந்தந்த பொருளின், புற பாதிப்புகள் ஏதும் இல்லாமல், தன் உடல் சோரா வண்ணம், தேவையான சத்துக்களை கிரஹிக்க முடியும்.  இதற்கு “பஞ்சபூத சாஸ்திர சக்தி தத்துவ முறை"  என்று பெயர்.  இவற்றையெல்லாம் சராசரி மனிதனால் உடனடியாக பின்பற்ற முடியாது.

Monday 24 April 2017

சித்தன் அருள் - 653 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

  • ஒரு ஆத்மா மீண்டும் இந்த பூமியிலே பிறக்க வேண்டிய ஒரு சூழல் வரும்போது, இதுவரை எடுத்த மொத்த ஜென்மங்கள் எத்தனை? அதில் கழித்த பாவங்கள் எத்தனை? சேர்த்த புண்ணியங்கள் எத்தனை? இந்த விகிதாசாரத்தின் அடிப்படையிலே ஓரளவு புண்ணியம் இருந்தால்தான் மனிதனாகவே பிறக்க முடியும். அதற்கே அவன் சேர்த்து வைத்த புண்ணியம் செலவாகி விடும். 
  • மிகுதி புண்ணியம் இந்த பூமியிலே மேல்திசை நாடுகளிலே பிறக்காமல் இஃதொப்ப பாரத கண்டத்திலே, கர்ம பூமியிலே பிறப்பதற்கே சில புண்ணியம் வேண்டும். 
  • அதனினும் இறை மறுப்புக் குடும்பத்தில் இல்லாமல், இறையை நம்பக்கூடிய குடும்பத்தில் பிறப்பதற்கே, சில புண்ணியங்கள் வேண்டும். 
  • அஃதோடு மட்டுமல்லாமல் மகான்களின் தொடர்பு கிடைப்பதற்கும், ஸ்தல யாத்திரை செல்வதற்கும், தர்மங்களில் நாட்டம் வருவதற்கும் புண்ணியம் தேவைப்படும். 
  • பிறகு ஆணாக, பெண்ணாக, ஆரோக்கியமான உடல் கிடைக்க புண்ணியங்கள் வேண்டும். பெண்ணாக பிறப்பதற்கு புண்ணியம் வேண்டும். 
  • பெண் என்றால் பெண் தோற்றத்தில் மட்டுமல்ல. அந்தப் பெண் உணர்வை நன்றாக உணரக் கூடிய, பெண்மைக்குரிய குணங்கள் மேலோங்கி நிற்கக்கூடிய சாத்வீகமான பெண்ணாக பிறப்பதற்க்கென்றே சில புண்ணியம் தேவைப்படும். 
  • அதன் பிறகுதான் ஏனைய விஷயங்கள். கல்வி, பணி, பொருளாதாரம் என்று புண்ணியத்தைப் பகுத்துக் கொண்டே வந்தால் ஒரு நிலையில் புண்ணியம் தீர்ந்து விடும். 
  • எதோடு புண்ணியம் தீர்ந்து விடுகிறதோ, அதன் பிறகு அந்த ஆத்மாவிற்கு போராட்டமாகத்தான் இருக்கும். அதை(புண்ணியத்தை)த்தான் அவன், அந்த ஊரிலே பிரார்த்தனை செய்து, தர்மங்களை செய்து, சத்தியத்தைக் கடைபிடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Sunday 23 April 2017

சித்தன் அருள் - 652 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

தர்மத்தின் தன்மை கொடுக்கின்ற பொருளின் அளவைப் பொருத்ததல்ல. கொடுக்கின்ற மனிதனின் மனதைப் பொருத்தது. கோடி, கோடியாக அள்ளித் தந்துவிட்டு தனிமையில் அமர்ந்துகொண்டு "அவசரப்பட்டு விட்டோமோ? நமக்கென்று எடுத்து வைத்துக் கொள்ளாமல் கொடுத்து விட்டோமோ?" என்று ஒரு தரம் வருத்தப்பட்டாலும், அவன் செய்த தர்மத்தின் பலன் வீணாகிவிடும். ஆனால் ஒரு சிறு தொகையை கூட மனமார செய்துவிட்டு, மிகவும் மனம் திறந்து "இப்படியொரு வாய்ப்பு கிடைத்ததே?" என்று ஒருவன் மகிழ்ந்தால், அது கோடிக்கு சமமாகும். 

Saturday 22 April 2017

சித்தன் அருள் - 651 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

தாம்பத்ய உறவை விட்டால்தான் ஞான மார்க்கம் சித்திக்கும் என்று நாங்கள் கூறவில்லை. இறைவன் அருளாலே ஒன்றை நன்றாக புரிந்து கொள். எது குற்றமாகிறது? எது தவறாகிறது? எது பாவமாகிறது? என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பிறர் மீது ஆதிக்கமும், பிறர் மனதையும், பிறர் உடலையும், பிறர் உடைமைகளையும் பாதிக்கும் வண்ணம் ஒரு மனிதன் நடந்து கொள்ளும்பொழுது பாவத்திற்குண்டான ஒரு சூழலுக்கு தன்னை ஆட்படுத்திக் கொள்கிறான். நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இல்லறம் நடத்துவது என்பது நேர்மையான முறையிலே ஒருவன் நடத்துகின்ற இல்லறம் கட்டாயம் இறைவனுக்கு எதிரானது அல்ல. ஆனால் தாரமாக இருந்தாலும் கூட உடலும், உள்ளமும் சோர்ந்திருக்கும் நிலையிலே அவளைக் கட்டாயப்படுத்தி, அந்த நிலைக்கு ஆட்படுத்துவது ஒருவிதமான பாவத்திற்கு கணவனை ஆட்படுத்தும் என்பதை மறந்துவிடக் கூடாது. எங்கு கட்டாயம் இல்லாத நிலை இருக்கிறதோ, எங்கு இயல்பாக அனைவரும் ஒத்துப் போகிறார்களோ, அந்த உணர்வுகள் எதுவும் இறைவனுக்கு எதிரானது அல்ல.

Friday 21 April 2017

சித்தன் அருள் - 650 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

யாங்கள் அடிக்கடி கூறுவது போல இறைவன் அருளால் கூறுகிறோம். தொடர்ந்த எண்ணங்களின் ஓட்டமே சிந்தனை. தொடர்ந்த சிந்தனை என்பது மனமாகும். விழிகளை மூடிக்கொண்டு ஒவ்வொரு மனிதனும் தன் மனதை உற்று நோக்கினால் அதில் எத்தனையோ ஆசா, பாசங்கள் இருக்கலாம். அவற்றிலே ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். அதை விட்டுவிட்டு மேலும் பார்த்தால் என்ன தெரியும்? லோகாயம் மட்டுமே அதில் நிரப்பப்பட்டு இருக்கும். ஒன்று இல்லக்கடமை அல்லது தசக்கடமை அல்லது அப்பொழுது அவன் சந்திக்கின்ற கடுமையான பிரச்சினை குறித்த சிந்தனை அல்லது எதிர்காலத்தில் வேறு எஃதாவது புதிதாக ஒரு பிரச்சினை இதனை சார்ந்து வந்துவிடுமோ? என்ற அச்சம். இஃது எதுவுமே இல்லாத மனிதனாக இருந்தால் பொழுதை ஆக்குவதற்கு பதிலாக பொழுதை போக்குகிறேன் என்று அந்தப் பொழுதை வீண் செய்வதும் அதற்காக தனத்தை வியம் செய்வதுமான ஒரு அசுரத்தனமான செயல்களில் ஈடுபடுவது. இப்படி மனதிற்கு அந்த மாபெரும் சக்திக்கு சரியான பணியை தராமல் அதன் ஆற்றலை முறைபடுத்தி பயிர்களுக்கு அந்த மனோசக்தி எனப்படும் நீரை பாய்ச்சாமல் தேவையற்ற வெள்ளமாக வடிய விடுவதுதான் மனிதனுக்கு என்றென்றும் இயல்பாக இருந்து வருகிறது. எல்லோருக்குமே இது பெரும்பாலும் பொருந்துகிறது. உடல் வேறு, உடலில் குடிகொண்டு இருக்கும் ஆத்மா வேறு. ஆத்மா எத்தனையோ உடல்களுக்குள் இருந்துகொண்டு, புகுந்துகொண்டு பிறவி என்ற பெயரில் வாழ்ந்து, மடிந்து, வாழ்ந்து, மடிந்து சேர்த்த வினைகளின் தொகுப்புதான், அந்த வினைகளின் அடிப்படையில்தான் அடுத்த உடம்பு கிடைத்திருக்கிறது. அந்த உடம்போடு அந்த ஆத்மா மயக்கமுற்ற நிலையிலே தன்னை அறியாமல் வாழ்கிறது. அப்படி வாழ்கின்ற அந்தப் பிறவியிலும் அது பல்வேறு வினைகளை செய்கிறது. அதில் பாவமும், புண்ணியமும் அடங்குகிறது. இதிலே பாவங்களைக் குறைத்து எல்லா வகையிலும் புண்ணியங்களை அதிகரிக்க வேண்டும் என்பதுதான் மகான்களின் உபதேசமாக இருக்கிறது. இந்த புண்ணியத்தை கனவிலும், நனவிலும், ஒவ்வொரு அணுவிலும் எப்பொழுதும் சிந்தித்துக்கொண்டே, கடமைகளை பற்றற்ற நிலையில் ஆற்றிக்கொண்டே உள்ளத்தில் சதாசர்வகாலம் இறை சிந்தனை மட்டும் வைத்துக்கொண்டு, எதனையும் இறைவன் பார்த்தால் எப்படி பார்ப்பாரோ அந்த பார்வையில் பார்க்கப் பழகினால் மனம் நிம்மதியான நிலையிலிருக்கும். நிம்மதியான மன நிலையில்தான் மனிதனுக்கு பெரிய ஞானம் சார்ந்த விஷயங்கள் மெல்ல, மெல்ல புரியத் துவங்கும்.

பிரச்சினைகளே இல்லாத வாழ்க்கை என்பது எக்காலத்திலும், எந்த மனிதனுக்கும் கிடையாதப்பா. பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கிறான்? என்பதில்தான் வாழ்க்கை நிலை அடங்கியிருக்கிறது. அசைக்க முடியாத இறை பக்தி கொண்ட மனிதனுக்கும், அப்படியில்லாத சராசரி மனிதனுக்கும் வேறுபாடே, அதிகளவு துன்பத்தை பார்க்கும்பொழுது அதனை எப்படி எதிர்கொள்கிறான்? என்பதை பொறுத்துதான். ஒரு வேளை இறைபக்தி இல்லாவிட்டாலும் தன்னுடைய அனுபவ அறிவைக்கொண்டும், தான் கற்ற கல்வியைக்கொண்டும் துன்பங்களை எதிர்கொண்டு வாழ்கின்ற மனிதன் எத்தனையோ மடங்கு மேலப்பா, இறைபக்தி இருந்தும் சோர்ந்து போகின்ற மனிதனைவிட. எனவே மனசோர்வு மிகப்பெரிய பிணி. அதற்கு இங்கு வருகின்ற யாரும் இடம் தராமல் இருப்பதே சிறப்பு.

Wednesday 19 April 2017

சித்தன் அருள் - 649 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

மனிதர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இறைவனிடம் மிகக் கடுமையாக பிரார்த்தனை செய்வதும், வேண்டுகோள் வைப்பதும் தவறல்ல. அதே சமயம் இறைவனிடம் ‘ இதை உடனடியாக நடத்திக் கொடு. அதிசயத்தை செய்து காட்டு ‘ என்றால் வேண்டுமென்றே இறைவன் சோதனைகளை அதிகரிப்பார். எனவே இறைவன் திருவடியை இறுக பற்றிக்கொண்டு ‘ நீ எதை வேண்டுமானாலும் செய், எப்பொழுது வேண்டுமானாலும் செய். ஆனாலும் என்னைக் கைவிட்டு விடாதே ‘ என்ற ஒரு பரிபூரண பக்தியின் அடிப்படையில் உள்ள பூரண சரணாகதிக்கு ஒரு மனிதன் வந்துவிட வேண்டும். "வாழ்க்கை நீண்ட காலம் அல்ல. குறைந்த காலம். அதற்குள் எண்ணியது கிடைத்து வாழ்ந்தால்தானே?" என்பது போன்ற விஷயங்கள் கட்டாயம் இறைவனுக்கும் தெரியும். மகான்களுக்கும் தெரியும். ஆனால் எந்த விதி எப்பொழுது மாற்றப்பட வேண்டும்? என்பதும் இறைவனுக்கும் தெரியும். திடும் என ஒரு விதியை மாற்றுவதால், நன்மை நடந்து விட்டால் பாதகமில்லை. அதே சமயம் தீய பக்க விளைவுகள் வந்து, முன்பு இருந்த நிலைமையே மேல் என்கிற ஒரு நிலை வந்துவிடும் என்பதையும் மனிதன் மறந்துவிடக் கூடாது.

இறைவனின் கருணையாலே, ஒவ்வொரு மனிதனும் விதியின் வழியாக வருகின்ற துன்பங்களில் இருந்து விரைவில் விடுதலை அடைய வேண்டும் என்று எண்ணுகிறான். யாங்களும் மறுக்கவில்லை. அதே சமயம் ஒரு மகானின் தொடர்பு கிடைத்து வழிமுறைகள் அறிந்தாலும் கூட பல்வேறு தருணங்களில் மனிதனால் விதியை வெல்ல முடிவதில்லை. காரணம், மன சோர்வும், எதிர்மறையான எண்ணங்களும், விதியை எதிர்த்துப் போராட ஒரு வலுவைத் தராமல் அவனை சோர்ந்து அமர வைத்து விடுகிறது.

Tuesday 18 April 2017

சித்தன் அருள் - 648 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் இஃதொப்ப நலம், நலம், நலமே எல்லா நிலையிலும் எல்லா சூழலிலும் தொடர்ந்து கிட்டிட இறைவன் அருளால் நல்லாசிகள் இத்தருணம் இயம்புகின்றோம். இறைவன் அருளாலே, மனிதர்களின் வாழ்விலே பின்னிப்படர்ந்து கிடக்கின்ற கர்ம வினைகள், பெரும்பாலும் பாவங்களே இருப்பதால்தான் அறியாமை அதிகமாக மதியிலே படர்ந்து கிடக்கிறது. அறியாமையை விட மிகப்பெரிய துன்பம் மனிதனுக்கு வேறு எதுவுமில்லை. எல்லாம் அறிந்திருக்கிறோம் என்று, அறியாத நிலையிலும், அறிந்தது போல் மனிதன் இருப்பதுதான் அறியாமையின் உச்ச நிலையாகும். அஃதாவது லோகாய அறிவு என்பது ஒரு நிலை. லோகாய அறிவை நன்றாகக் கைவரப்பெற்ற மனிதன் கூட  பல்வேறு தருணங்களில் அந்த அறிவால் பெரிய பலனேதுமில்லாமல் துன்பத்தில் வாழ்வது உண்டு. அதே சமயம் அறிவை செயல்பட விடாமல் முடக்குவதில் ஆசைக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு. அந்த ஆசைக்கு துணையாக கடுமையான பாசத்திற்கும் மிகப்பெரிய பங்களிப்பு உண்டு. ஆசையும், பாசமும் மட்டுமா அறியாமைக்கு துணை செய்கிறது?  அஃதோடு உணர்ச்சி நிலை, மிகு உணர்ச்சி நிலை. இவை அனைத்தையுமே கொண்டுள்ள மனிதன் அதிலிருந்து தப்ப இயலாமல், தொடர்ந்து போராடிக் கொண்டே வாழ வேண்டிய நிலையில்தான் இருக்கிறான் அன்றும், இன்றும், என்றும். எனவேதான் ஒரு மனிதன் எப்பொழுதுமே இறைபக்தியோடு சத்தியத்தை விடாது, மனசாட்சியோடு, தொடர்ந்து தர்மசிந்தனையோடு வாழ மேற்கூறிய அறியாமை மெல்ல, மெல்ல விலகும். அறியாமை விலக, விலகவே மனிதனுக்கு நிம்மதி பிறக்கும். அஃதொப்ப நிலையிலே மனிதன் தன்னையும், தன்னை சேர்ந்த குடும்பத்தாரையும் பாசவலைக்குள் வைத்து பார்க்கும்பொழுதுதான் "என் பிள்ளை இப்படி துன்பப்படுகிறானே, என் தாய் இப்படியெல்லாம் கடினப்படுகிறாளே" என்றெல்லாம் எண்ணி, எண்ணி ஒரு மயக்கத்தில் ஆழ நேரிடும். ஆயினும் கூட அந்த பாசம்தான் பெருமளவு குடும்பக்கடமைகளை செய்ய மனிதனுக்கு ஒருவிதத்தில் உதவுகிறது. இருந்தாலும் அஃதே அதிகமாகும் தருணத்தில் அவனை அறியாமையில் வழுக்கிவிழ வைக்கிறது. அதை அப்படியே மூன்றாவது மனிதன் மீது பார்க்கும்பொழுது, இரத்த சம்பந்தமில்லாத, நட்போ, உறவோ இல்லாத மனிதனிடம் பார்க்கும்பொழுது அப்படியெல்லாம் ஏற்படாததால், அப்படி ஏற்பட்டு ஒரு மயக்கம் கிட்டாததால் மனிதன் அதனை சாதாரணமாகப் பார்க்கிறான். அவர்களின் துன்பம் மனிதனுக்கு துன்பமாகத் தெரிவதில்லை. அதை அப்படியே இரத்த சம்பந்தம் உடைய உறவுகளோடு பொருத்திப்பார்க்க பழகிவிட்டால் அதுதான் ஞானத்தை நோக்கி செல்கின்ற பாதையாகும். அது எப்படி? சொந்த உறவுகளுக்கும், சொந்த நட்புகளுக்கும், பழகிய உறவுகளுக்கும் துன்பம் என்றால் பார்த்துக்கொண்டு இருப்பதா? என்றால் யாங்கள் அந்தப் பொருளில் கூறவில்லை. யாராக இருந்தாலும் துன்பம் வந்துவிட்டால் அதனை துடைக்கும் வழியை மேற்கொண்டிட வேண்டும். ஆனால் உள்ளத்தில் பாசமும், ஆசையும், அறியாமையும் வைத்துக்கொண்டு அதனை செய்யாமல் நடுநிலையோடு செய்யப்பழகினால் மனதிலே சோர்வில்லாமல் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கலாம். இந்தக் கருத்தை மனதிலே வைத்துக்கொண்டால் வாழ்வு நலமாகும், சுகமாகும், சாந்தியாகும்.

Monday 17 April 2017

சித்தன் அருள் - 647 - அந்தநாள் >>> இந்த வருடம் (2017)


அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அகத்தியப் பெருமானின் "சித்தன் அருளை" வாசித்து வரும் அடியவர்கள், அகத்தியப் பெருமான் குறிப்பிட்ட தினங்களில், நாடி வாசித்த மைந்தனை, கோடகநல்லூர், நம்பிமலை, பாபநாசம், கரும்குளம், திருச்செந்தூர் என்று பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, இறை, சித்த அனுபவங்களையும், ஆசிர்வாதங்களையும் பெற்றுக் கொடுத்ததை, நாம் அனைவரும் அறிவோம். அதில் மறைமுகமாக "அந்த நாள்/இந்தநாள்" என்று அகத்தியப் பெருமான் பல இடங்களில், குறிப்பிட்டதை கவனித்திருக்கலாம். 2016ம் ஆண்டு பல அகத்தியர் அடியவர்களும், அந்தப் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று அருள் பெற்றது நினைவிருக்கலாம்.

நம் அனைவருக்குமே, "அந்த நாள்" இந்த வருடம், எப்போது வருகிறதோ, அன்று, அங்கு சென்று இருந்து அவர்களின் அருள், ஆசிர்வாதம், செம்மையான வாழ்க்கைக்காக பெற்றுக்கொள்ள வேண்டும், என்கிற எண்ணம் ஒவ்வொரு அகத்தியர் அடியவரின் மனதுள் இருக்கும். உங்களின் அந்த இனிய எண்ணைத்தை பூர்த்தி செய்வதற்காக, இந்த வருடம் "அந்த நாட்களை" தெரிவு செய்து இங்கே தருகிறேன். குறித்து வைத்துக்கொண்டு, அங்கெல்லாம் சென்று, அவர் அருள் பெற்று வருமாறு, வேண்டிக்கொள்கிறேன்.

நம்பிமலை:- (இறைவனும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருக்க, அகத்தியப் பெருமான் நம்பிமலை பெருமாளுக்கு 200 வருடங்களுக்கு ஒருமுறை செய்கிற பூசையை செய்த நாள்)

02/08/2017 - ஆடி மாதம் - புதன்கிழமை  - சுக்லபக்ஷ தசமி திதி மதியம் 04.20 வரை, அனுஷம் நக்ஷத்திரம் அன்று மாலை 05.54 வரை

பாபநாசம்:- (நதிகள் எல்லாம் அகத்தியப் பெருமானுடன் இருந்து அன்று தீர்த்தமாடியவர்கள் அனைவருக்கும், அவர்கள் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் புண்ணியம் கொடுத்த நாள். நவக்ரக தம்பதிகள் ஆசிர்வதித்த நாள்)

03/08/2017 - ஆடி மாதம் - வியாழக்கிழமை - சுக்லபக்ஷ ஏகாதசி திதி இரவு 06.19 வரை, கேட்டை நக்ஷத்திரம் இரவு 08.28 வரை.

திருச்செந்தூர்:- (ஓதியப்பர், அகத்தியர், அனுமன் ஆகிய மூவரும் சேர்ந்து இருந்த நாள். அதில், முருகர் அனுமனுக்கு அன்று அனுமனின் நட்சத்திரம் ஆனதால், அவரை ஆரத்தழுவி, நல்வாழ்த்து தெரிவித்த நாள். இன்றும் எல்லா மாதமும் அனுமன், அவரது நட்சத்திரத்தன்று திருசெந்தூரில் அன்று மாலை வந்து முருகரின் அருள் பெற்று செல்கிறாராம்.)

04/08/2017 - ஆடி மாதம் - வெள்ளிக்கிழமை  - சுக்லபக்ஷ த்வாதசி திதி இரவு 08.15 வரை, மூலம் நட்சத்திரம் இரவு 10.59 வரை.

ஒதிமலை ஓதியப்பர் பிறந்த நாள்:- (போகர் கூற்றின் படி, ஓதியப்பர் ஆவணி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். ஓதியப்பரின் பிறந்த நாளை அபிஷேக ஆராதனைகளுடன் கொண்டாடுகிற நாள். சித்தர்கள் அனைவரும் அன்று அங்கே ஒன்று கூடி, ஓதியப்பரை தரிசனம் செய்து, பின்னர் 90 நாட்களுக்கு அங்கேயே தங்கி இருக்க தொடங்குகிற நாள்.) 

20/08/2017 -ஆவணி மாதம் - சதுர்தசி திதி மறுநாள் காலை 02.25 வரை, பூசம் நட்சத்திரம் அன்று இரவு 06.04 வரை .

கோடகநல்லூர்:- (எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள். தாமிர பரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள். அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள்.)

02/11/2017 - வியாழக்கிழமை  - ஐப்பசி மாதம் சுக்லபக்ஷ த்ரயோதசி திதி அன்று பகல் 02.27 வரை, ரேவதி நட்சத்திரம் மறுநாள் காலை 05.10 ("த்ரயோதசி" திதிக்கு முக்கியத்துவம் கொடுத்து ரேவதி நட்சத்திரமாயினும் "வியாழக்கிழமை" தெரிவிக்கப்பட்டுள்ளது. தெய்வீக விஷயங்களுக்கு திதிக்குத்தான் முக்கியத்துவம்.) 

புதிய தகவல்:-

பாபநாச ஸ்நானம்:- தாமிரபரணி புராணத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சிவபெருமானை லிங்க ரூபத்தில் பிரதிஷ்டை செய்து, தாமிரபரணி தேவியானவள், அகத்திய பெருமான் முன்னிலையில் தவமிருந்து, இறைவனிடமிருந்து நம் மனித குலத்திற்காக ஒரு வரத்தை பெற்றாள். எவர் இந்த இடத்தில், மார்கழி மாதத்தில் எம் தீர்த்தத்தில் நீராடி, உம்மை கண்டு வணங்குகின்றனரோ, அவர்களுக்கு இந்த பூமியில் இனிமேல் பிறவி என்பதே இருக்கக்கூடாது. சிவபெருமானும் தாமிரபரணியின் பூசை, தவத்தில் மகிழ்ந்து "அப்படியே ஆகட்டும்" என்று கூறி பாபநாத சுவாமி கோவில் லிங்கத்தினுள் மறைந்தார். அந்த நாட்கள் இந்த வருடம் 16/12/2017 முதல் 13/01/2018க்குள் வருகிறது. 

அகத்தியர் அடியவர்களே! மேல் சொன்ன இந்த நாட்களை குறித்து வைத்துக் கொண்டு, இங்கு தெரிவிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று, இறை அருள், அகத்தியர் அருள் பெற்று நலமாக வாழ்ந்திட வேண்டிக் கொள்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகதீசாய நமஹ!

சித்தன் அருள் - 646 - இறைவனும் சித்தர்களும் - ஒரு சிறு அனுபவம் - 2 !


வணக்கம் அகத்தியர் அடியவர்களே! 

நாம் ஒன்று நினைக்க, அதுவே நடந்தால், மனித மனம் உற்ச்சாகம் பெரும். நாம் நினைத்தது வேறு வடிவில் (நமக்கு சாதகமாக) நடந்தால் மனம், "சரி! ஏற்றுக்கொள்வோம்" என்று அமைதியடையும். இவை இரண்டுக்கும் முரணாக நடக்கையில் தான் வருத்தப்படும், மனித மனம்.

என்னை பொறுத்தவரை, இதுவரை நடந்ததே மிகப் பெரிய பாக்கியம் என்று நினைத்து, நன்றி கூறி ஏதும் இதற்கு மேலும்  எதிர்பார்க்காமல் இருந்துவிட்டேன். மனம் திருப்தி அடைந்துவிட்டது. பெருமாளே அத்தனையையும் ஏற்பாடு செய்து தந்ததால், வேறு யாரும் உள்ளே நுழைய முடியவில்லை.

பொதிகை சென்றவர்களின் பூசை பிரசாதம் இனி 15 தினங்களுக்குப் பின்தான் வந்து சேரும் என்ற நியாயமான உணர்வோடு இருக்கையில்.......

ஒரு இன்ப அதிர்ச்சி. செவ்வாய் கிழமை கீழே வந்துவிட்ட நண்பர் ஒரு ஆச்சரியமான விஷயத்தை சொன்னார்.

"நண்பரே! நீங்கள் வேலை பார்க்கும் அலுவகத்தில் பணிபுரிந்த ஒருவர் எங்கள் குழுவில் இருந்தார். அவராகவே தன்னை அறிமுகப் படுத்திக் கொண்ட பொழுது, உங்களை தெரியுமா என்று விசாரித்தேன். மிக நன்றாக தெரியும் என்று கூறிய பொழுது, அபிஷேக பிரசாதம் தருகிறேன் அவரிடம் கொண்டு போய் சேர்க்க முடியுமா என்றேன்."

"என்னிடம் கொடுங்கள். அவர் பணிபுரியும் அலுவலகத்தின் பின் புறத்தில் தான் என் வீடு உள்ளது. வீட்டிற்கு போய்விட்டு, பின்னர் அவரை சந்தித்து பிரசாதத்தை கொடுத்துவிட்டு, நான் வேலை பார்க்கும் வெளியூருக்கு செல்கிறேன்" என்று வாங்கி கொண்டார்.

"அவரை தொடர்பு கொண்டு, பிரசாதத்தை வாங்கி கொள்ளுங்கள்" என்று கூறி தொடர்பு எண்ணையும் தெரிவித்தார்.

நான் மலைத்துப் போனேன். அபிஷேக பிரசாதத்தை கோடகநல்லூரில் கொடுத்தபின், யோசித்தது ஞாபகத்துக்கு வந்தது. "அகத்தியர் என்ன கூரியர் சர்வீஸ் நடத்துகிறாரா? அது வரவேண்டிய நேரத்துக்கு வந்து சேரும்" என கிண்டலடித்திருந்தேன்.

"நீ என்னடா கிண்டலடிப்பது. என் வேகத்தைப்பார்!" என்று சொல்லாமல் சொல்லி, செவ்வாய் கிழமை அன்று மாலை 5 மணிக்கு அலுவலகம் விட்டு சரியாக வாசலுக்கு வந்தவுடன், அங்கே அவர் நின்று கொண்டிருந்தார்.

ஒரு பையில் பிரசாதம். என்னை பார்த்ததும் புன்னகைத்தபடி "இதை உங்களிடம் கொடுக்கச் சொன்னார்" என்று தந்துவிட்டு, உடனேயே விடைபெற்றார்.

சரியான சந்தனம், மஞ்சள், விபூதி மணம். திறந்து பார்த்தால், அகத்தியருக்கு அபிஷேகம் பண்ணிய விபூதி. என்ன நடக்கிறது, என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்து நின்றேன்.

நாம் சென்று அபிஷேகம் செய்யாவிடினும், கொடுத்துவிட்டதை அவர்கள் ஏற்றுக் கொண்டுவிட்டனர், நம்மை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை அன்று உணர்ந்தேன்.

அபிஷேகம் பண்ணிய எண்ணெய்தான் கிடைக்கவில்லை. கிடைத்த விபூதி அந்த குறையை போக்கியது. (இன்றும் அந்த விபூதிப்பை வீட்டில் இருக்கும் ஓதியப்பர் விக்ரகத்தில் அவரது வலது கையில் தொங்கி கொண்டிருக்கிறது.)

பிரசாதத்தை பத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொண்டேன்.

சபரி மலையில் நீண்ட நாட்களுக்கு நடை சாற்றும் முன், கடைசி நாளில், அய்யப்பனை ஒரு சித்தராகவே மாற்றி, விபூதியால் மூடி, திரை போட்டு கதவை சார்த்திவிடுவார்கள். பிறகு என்று நடை திறக்கிறதோ, அன்றைய தினம் அத்தனை விபூதியையும் எடுத்து அங்கு வருகிற பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுத்து விடுவார்கள்.

என் கூட வேலை பார்க்கும் ஒரு நண்பர், அங்கே எங்கள் அலுவலகத்தில் அமர்த்தப்பட்டார். சபரி மலைக்கு கிளம்பும் முன் என்னை என்னை அழைத்த போது "உனக்கு என்ன வேண்டும், அரவணையும் அப்பமும் வாங்கி வரட்டுமா? ஆனால் மண்டல காலம் முடிந்த பின் தான் வருவேன், தர முடியும்" என்றார்.

"எனக்கு அதெல்லாம் தேவை இல்லை. முடிந்தால், அய்யப்பனை பொதிந்து மூடிய அந்த விபூதி நிறைய வேண்டும்" என்றேன்.

சரி என்று ஒத்துக்க கொண்டு சென்றவர், புதன் கிழமை அன்று ஒரு பெட்டி நிறைய அய்யப்பனுக்கு அபிஷேகம் செய்த விபூதியை கொண்டு தந்தார். (அதுவும் ஓதியப்பர் விக்கிரகத்தின் முன் பத்திரமாக அமர்ந்திருக்கிறது, இன்றும்.)

"சரி! எல்லோரும் சேர்ந்து விளையாடாத தொடங்கிவிட்டார்கள். இது எங்க போய் நிற்கும் என்று தெரியவில்லையே!" என்று சற்று யோசிக்க தொடங்கினேன்.

மறுநாள், வியாழக்கிழமை, எப்போதும் போல் அகத்தியர் கோயிலுக்கு மாலை தரிசனத்துக்கு சென்றேன்.

கோவில் மிக அமைதியாக இருந்தது. நானும் பூசாரியும் மட்டும்தான். ஒவ்வொரு தெய்வங்களாக (முதலில் அகத்தியர் லோபாமுத்திரை, பின்னர் அவருக்குப் பின் புறத்தில் பிள்ளையார், அடுத்தது நாகர், பின்னர் கிருஷ்ணர் அதன் பின் ஓதியப்பர் சன்னதி என வரிசையாக இருக்கும்).

அனைவரையும் தரிசித்து கடைசியில் ஓதியப்பர் சன்னதிக்கு வந்து நின்றால், அவர் ரொம்பவே வித்யாசமாக இருந்தார். சிரசில், மார்பில், உடுத்தியிருந்த வேட்டியில், பாதத்தில் என எங்கும் விபூதி தங்கியிருந்தது.

"இன்று உமக்கு என்னஒய் விசேஷம் என்று" இயல்பாக மனதுள் கேட்டுவிட்டேன்.

புன்னகைத்தபடி (நமுட்டு சிரிப்புடன்) இருந்தவரின் தலை முதல் கால் வரை மறுபடியும் பார்த்த பொழுது மூன்று தினங்களாக நடக்கும் பிரசாத கூரியர் சர்வீஸ் ஞாபகத்துக்கு வந்தது.

"ஓ! ஓதியப்பா! உன் சிரசில் இருக்கும் விபூதியையோ, உன் வேட்டியில் தங்கி நிற்கும் (கஞ்சி போட்டு சலவை பண்ணிய முடமுடப்பாக விரைத்து நின்ற வேஷ்டி போல் இருந்த புது வேஷ்டி) விபூதியையோ குடேன். பூசாரியிடம் ஒரு முறை கேட்டு பார்க்கிறேன். கொடுப்பதற்கு ஏற்பாடு செய்." என்று வேண்டிக் கொண்டு, அகத்தியர் சன்னதிக்கு வந்து அங்கு நின்ற பூசாரியிடம் கேட்ட பொழுது, உள்ளிருந்து ஒரு வாழை இலையை எடுத்து, ஓதியப்பர் சன்னதிக்கு சென்று, அவர் சிரசு, மார்பு, வேஷ்டி, பாதம் இவற்றில் இருந்த விபூதியை எடுத்து இலையில் வைத்து, தந்துவிட்டு நேராக அகத்தியர் சன்னதிக்குள் புகுந்துவிட்டார்.

மிகுந்த ஆச்சரியத்துடன் ஓதியப்பரை பார்த்து நன்றி சொல்லிவிட்டு, அகத்திய பெருமானின் சன்னதிக்கு வந்து "உங்க குரு, இன்னிக்கு விபூதியை குடுத்திட்டார். அவருக்கு இன்னிக்கு ஏன்ன ஆச்சுன்னே எனக்கு புரியலை. எதுக்கும் அவர் மேல ஒரு கண்ணை வைத்துக்கொள்ளவும்" என்று கூறி நமஸ்காரம் செய்துவிட்டு வரும் வழியில் நண்பரை பார்த்தேன்.

தொடர்ந்து நான்கு நாட்களாக பிரசாதம் மேல் பிரசாதமாக மஞ்சள் பொடி, விபூதி என எல்லோரும் தருவதை சொல்லி, "இது என்னவோ விபூதி வாரம்னு நினைக்கிறேன். எல்லோரும் போட்டி போட்டு அருளுகிறார்கள். எங்கயோ சரியான ஆப்பு காத்திண்டிருக்கு. எதற்கும் கவனமாக இருக்க வேண்டும்" என்று கூறி விடைபெற்றேன்.

வீட்டிற்கு வந்ததும், ஒரு யோசனை. இத்தனை விபூதி பிரசாதமும் நான் கேட்டு வாங்கியதல்ல. அவர்களாக கொடுத்துவிட்டது. அப்படியென்றால், இது அந்த உறவினருக்கு போய் சேரவேண்டும் என்பதே அவர்கள் விருப்பம் போல். யாரிடம் கொடுத்தனுப்புவது. யாரும் இங்கிருந்து அவர்கள் ஊருக்கு போவதாக தெரியவில்லையே! சரி எதுக்கும் ஒரு விண்ணப்பத்தை அகத்தியரிடம் போட்டு விடுவோம் என்று தீர்மானித்து, 

"அய்யனே, கொடுத்துவிட்டீர்கள், புரிந்து கொண்டுவிட்டேன். ஆனால் அடியேனால் விடுமுறை எடுத்து செல்ல முடியாத நேரம். ஏதாவது ஒரு வழி காட்டுங்களேன். இந்த பிரசாதம் எல்லாமாக கலந்து அவருக்கு போய் சேரவேண்டும்" என்று பிரார்த்தித்துவிட்டு காத்திருந்தேன்.

இரவு ஒரு 8 மணியிருக்கும். என் தாய் உணவருந்த அழைத்த பொழுது கீழிறங்கி வந்து பார்த்தால், வேறொரு உறவினர் வந்தமர்ந்திருந்தார்.

என்ன திடீர்னு ஒரு விஜயம், போன ஞாயிறுதானே நாம் சந்தித்தோம், என்றேன்.

"இல்லை! அந்த உறவினர் அறுவை சிகிர்ச்சை முடிந்து தேறிவருகிறார் இல்லையா? அவரை போய் பார்த்துவிட்டு வரலாம் என்று கிளம்பி வந்தேன். இங்கு வராமலேயே போயிருக்கலாம். இருப்பினும், இங்கு வந்து உங்கள் அனைவரையும் பார்த்தபின் செல்லலாம் என்று, இந்த ஊர் வந்து சேர்ந்தபின் தோன்றியது. அதான் அடுத்த ட்ரெயின் ஏறிப்போகாமல், இங்கு வீட்டிற்கு வந்தேன்" என்றார்.

மனதுள் புன்னகைத்தபடி, "சரி எப்போது அவரை சந்திக்கப் போகிறீர்கள்?" என்றேன்.

"நாளை காலை புறப்படலாம் என்றிருக்கிறேன்" என்றார்.

"நல்லது! நான் ஒரு பிரசாதம் தருகிறேன். அதை அவரிடம் சேர்த்து விடுங்கள், அவரை அதை சாப்பிடச் சொல்லுங்கள்" என்றேன்.

"தாராளமாக! கொடுங்கள் இப்பொழுதே. நாளை என்றால் ஒருவேளை நான் மறந்துவிடுவேன்" என்றார்.

எதேச்சையாக வேண்டிக் கொண்டேன். உடனேயே ஏற்பாடு செய்துவிட்டீர்களே. மிக்க நன்றி என என் பூசை அறைக்குள் சென்று கூறி, மூன்று விபூதியையும் கலந்து வைத்திருந்த பார்சலை அவரிடம் சேர்த்தேன்.

அதுவும் அடுத்தநாளே அவரிடம் சென்று சேர்ந்தது.

இந்த நிகழ்ச்சியில் என்ன புரிகிறது?

வெள்ளிக்கிழமை - திருப்பதி பெருமாள் மார்பு சந்தனமும், தீர்த்தமும்
ஞாயிற்று கிழமை - கோடகநல்லூர் பெருமாள் மஞ்சள் பொடி
செவ்வாய் கிழமை - பொதிகை முனியின் அபிஷேக விபூதி 
புதன் கிழமை - சபரிமலை அய்யப்பனின் அபிஷேக விபூதி 
வியாழக் கிழமை - ஓதியப்பரின் அபிஷேக விபூதி

பெருமாள் கூப்பிட்டு மருந்து குடுத்தார் என்றவுடன், மற்றவர்களும் "நான் தருகிறேன்! நான் தருகிறேன்!" என்று போட்டியா?

இல்லையேல் நம் வாழ்க்கை/வாழ்க்கையில் இறை/சித்தர் அருள் என்றால் இப்படியல்லவா அமையவேண்டும்  என்கிற எண்ணமா?

ஆனால், எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எப்படி நன்றி சொல்வது? தவிப்புதான் மிச்சம்.

இதன் முடிவில் அடுத்தவாரம் அதிர்ச்சிகரமான ஒரு விஷயம் நடந்தது. அதை அடுத்த பதிவில் விளக்குகிறேன்.

சித்தன் அருள்.................. தொடரும்.

சித்தன் அருள் - 645 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் இஃதொப்ப யாம் இறைவனின் கருணையைக்கொண்டு என்றும், இறைவனின் அருளைக்கொண்டு என்றும், காலகாலம் இயம்பிக்கொண்டே இருக்கிறோம். இஃதொப்ப நீக்கமற நிறைந்திருக்கக்கூடிய இறையாற்றல் எல்லா இடங்களிலும், எல்லா உயிர்களிலும் தங்கி எல்லா நிலைகளிலும் தன் ஆற்றலை எப்பொழுதுமே செயல்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. இங்ஙனமாயின் இதை பெரும்பாலான உயிர்கள், குறிப்பாக, மனிதர்கள் ஏன் உணர முடிவதில்லை? என ஆய்ந்து பார்க்குங்கால் இறைவனின் தன்மைகளை, இறைவனின் குணநலன்களை, இறைவன் எனும் மாபெரும் சக்தியை மனிதன், தன் உடலியல் சார்ந்த வாழ்வியல் நோக்கிலே என்றென்றும் வைத்து பார்ப்பதால் புலன்கள் புரிந்துகொள்ளக்கூடிய நிலையில் அவன் யோசித்துப் பார்ப்பதால் மட்டுமே இஃதொப்ப மனிதர்களால் இறைத்தன்மையை, கடுகளவும் புரிந்துகொள்ள முடியாமல் போகிறது. இறைத்தன்மையை உணரமுடியாமல் போகிறது. தெய்வீகம் உள்ளே, உள்ளே, உள்ளே, உள்ளே, உள்ளே என்று ஒளிர்ந்தாலும், மனிதனால் அந்த ஒளிர்தலை புரிந்துகொள்ள முடியாமல் போகிறது. மாயையும், அறியாமையும், ஆசையும், தன்முனைப்பும், தீவிரமான பற்றும், இச்சையும், இதைத் தாண்டிய ஒரு நிலை இருக்கிறது, என்பதை உணர ஒட்டாமல் இதற்குள்ளாகவே மனிதன் வாழ்ந்து, வாழ்ந்து, வாழ்ந்து, வாழ்ந்து, வாழ்ந்து, வாழ்ந்து அப்படியே மாய்கிறான். இதிலிருந்து ஆத்மாக்களை கடைத்தேற்ற வேண்டும் என்பதுதான் இறைவன் எமக்கிட்ட பணி. ஆயினும், அப்பணி எளிய பணி அல்ல என்பது எமக்குத் தெரியும். இறைவன் அருளாலே, இறைவனின் பெரும் கருணையாலே இதனை எம்போன்ற மகான்கள் காலகாலம் விதவிதமான சூழலிலே, விதவிதமான லோகத்திலே, விதவிதமான பக்குவம்கொண்ட மனிதர்களுக்கு, அவனவன் மன நிலை அறிந்து, கூட்டிக்கொண்டேயிருக்கிறோம்.

Sunday 16 April 2017

சித்தன் அருள் - 644 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவன் அருளாலே நல்விதமாய் ஒரு மனிதன் வாழவேண்டுமென்று எண்ணுகிறான். அந்த நல்விதம் எது? என்பதுதான் மனிதர்களுக்கு பெரும்பாலும் காலகாலம் புரிவதில்லை. உலகியல் வாழ்க்கை என்பது ஒரு மனிதனுக்கு தேவையே இல்லை, என்பது போல்தானே மகான்களின் வாக்குகள் இருக்கிறது. அங்ஙனமாயின் எதற்கு இந்த உலகைப் படைத்திடவேண்டும்? எதற்கு இந்த உடலை தந்திடவேண்டும்?  எதற்கு இந்த உடல் சார்ந்த இன்பங்களையெல்லாம் வைத்திடவேண்டும்?  என்றெல்லாம் மனித மனம் ஐயங்களை எழுப்பிக்கொண்டே இருக்கும். இப்படி எத்தனையோ ஐயங்கள் ஒரு மனிதனுக்கு வரவேண்டும். ஐயங்கள் எழ, எழத்தான் ஒரு மனிதன் தனக்குள்ளே, அவன் உள்ளே சென்றுகொண்டிருக்கிறான் என்று பொருள். சென்றுகொண்டே இருக்கவேண்டும். பூமியின் உட்புறத்தே தோண்டித் துருவி பார்க்கும்பொழுது, எடுத்த எடுப்பிலேயே எப்பொழுதும் எல்லா இடத்திலும் வைரமும், கனகமும் ஏன்? சுக்ர உலோகமும் கிட்டிவிடாது. உயர்ந்த உலோகம் என்று மனிதனால் மதிக்கப்படுகின்ற விஷயமே, பூமியின் மேற்பரப்பிலே இல்லாமல், இன்னும், இன்னும், இன்னும் தோண்டத்தான் தென்படுகிறது என்றால், ஒரு மனிதன் தன்னைத்தானே உணர்தல் என்பது வெறும் மேலெழுந்தவாரியாகவே நடந்துவிடுமா? அல்லது அவன் மேல் எழுந்த வாரியாக இருக்கக்கூடிய உலகியலால் நடந்துவிடுமா ? அவன் மேல் எழுந்த உலகியல் வாரி, அவையெல்லாம் அவன் வாரி வைத்துக்கொள்வதாலே நடந்துவிடுமா?  எனவே இறைவனை உணர்தலும், அப்படி உணர்வதால் யாது கிட்டும்? என்பதை உணர்தலும், அப்படி கிட்டுவதால் என்ன லாபம்? என்பதை உணர்தலும் எளிய முறையில் ஒரு மனிதனால் செய்துவிட இயலாது. அதற்காக அது கடினமான முறையும் அல்ல. மெய்யாக, மெய்யாக, மெய்யாக பற்றை அறுத்து, பற்றே அனைத்து துன்பங்களுக்கும் காரணம் என்பதை உணர்ந்துகொண்டு, அஃதே சமயம் பெற்ற உடலுக்கு ஏற்ப லௌகீக கடமைகளை மனசான்றின்படி நன்றாக நடத்திக்கொண்டு உள்ளுக்குள் ஆத்ம தேடலை வைத்துக்கொண்டே இருக்கக்கூடிய மனிதனுக்கு இறைவனருள் என்ன? என்பது இறைவன் அருளாலே மெல்ல, மெல்ல விளங்கத் துவங்கும். இதனை ஒவ்வொரு மனிதர்களும் புரிந்துகொண்டு வாழ்வதே சிறப்பான வாழ்க்கைக்கு வழிவகுப்பதாகும்.

Saturday 15 April 2017

சித்தன் அருள் - 643 - இறைவனும் சித்தர்களும் - ஒரு சிறு அனுபவம்!


​​​​வணக்கம் அகத்தியர் அடியவர்களே! 

அகத்தியப் பெருமானின் அருள்வாக்கை மனதுள் வாங்கி, அதுவே வாழ்க்கை என வாழ்ந்து வருகிற போது, அடியவர்களும் சோதனைக்குள்ளாக்கப் படுவார்கள். எந்த சோதனை வந்தாலும், அதனை ஒரு அனுபவமாக பார்க்க வேண்டும் என்ற அகத்தியரின் வாக்கு, தகுந்த சமயத்தில் நினைவுக்கு வர, அப்படியே ஆகட்டும் என தலை வணங்கி, ஒரு மிகச் சிறந்த அனுபவத்தை, பெற்ற ஒரு நிகழ்ச்சியை இங்கு தொகுத்தளிக்கிறேன். அனைத்தையும் கிளப்பிவிட்டு, நடத்தி, சோதனை பண்ணி, பொறுமைக்கு பரிசாக வேண்டுதலை ஆசிர்வதித்தனர். சித்தர்கள் நடத்துகிற நிகழ்ச்சியில், இறைவனும் பங்குகொண்டு தன்னை வெளிப்படுத்தினால்! இதற்கு மேல் வாழ்வில் என்ன வேண்டும் என தோன்றிவிடும்.

என் உறவினர் ஒருவர் நோய் வாய்ப்பட்டார். அறுவை சிகிர்ச்சை செய்துதான் ஆகவேண்டும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் நிற்கயில், ஒரு யோசனை தோன்றியது. அடிக்கடி, கோடகநல்லூர் சென்று பச்சைவண்ணப் பெருமாளை தரிசனம் செய்து வருவதால், அவரிடமே மருந்து கேட்ப்போமே என்று தோன்றியது. எனது பூசை அறையில் அமர்ந்து பிரார்த்தனையை சொல்லி, த்யானத்தில் இருந்த போது, "நீ கிளம்பி வா! நான் மருந்து தருகிறேன்!" என வாக்கு வந்தது. அந்த வாரம் கடைசியில் ஒரு நாள் அலுவலக விடுமுறை வந்ததால், மூன்று நாட்கள் தொடர் விடுமுறையாயிற்று. சென்று பார்த்துவிடுவோம் என்று தீர்மானித்தேன்.

இதற்கிடையில், ஒருநாள், சென்னையில் இருக்கும் இரு நண்பர்கள் (திரு.ஸ்ரீதரன், திரு.சதீஷ்) அகத்தியரை தரிசிக்க பொதிகை செல்வதாகவும், அந்த வார சனிக்கிழமை அன்று கோடகநல்லூரில் பெருமாளை தரிசித்து செல்லலாம் என்றும் தீர்மானித்திருப்பதாக, தொலைபேசியில் கூறினார்.

"சனிக்கிழமை உங்களை கோடகநல்லூரில் சந்திக்கிறேன்" என்றுவிட்டு, "நமக்குத்தான் போக குடுப்பினை இல்லை, போகிறவர்களை சந்தித்து உற்சாகப்படுத்தி, அகத்தியருக்கு அபிஷேகம் செய்ய ஏதேனும் கொடுத்துவிடலாம்" என்று தீர்மானித்தேன்.

அகத்தியர் அபிஷேகத்துக்கு, விபூதி, சந்தனப்பொடி, ஜவ்வாது, வாசனாதி திரவியங்கள் போன்றவை சேகரித்து வைத்துக் கொண்டேன்.  புதன் கிழமை அன்று மதியம் அலுவலகத்தில் அனுமதி வாங்கி கொண்டு, திருநெல்வேலியை நோக்கி பயணித்தேன். பொருட்களின் பாரம் சற்று அதிகமாக இருந்தது. இந்த சந்தனப்பொடியை பெருமாள் வாங்கி கொண்டுவிடுவாரோ? "இது ரொம்ப கனமாக இருக்கிறது, என் உடம்பை தூக்கி கொண்டு நடப்பதே மிக சிரமம். கொஞ்சம் பாரத்தை குறைத்துக் கொடுங்களேன்" என்று நண்பர் கேட்பார் என்று தோன்றியது. இருக்கட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று, அனைத்தையும் ஒன்று விடாமல் எடுத்து வைத்துக் கொண்டேன்.

வியாழக்கிழமை அன்று காலை கோடகநல்லூர் கோவிலுக்கு சென்றேன். காலை பூசை முடிந்து அனைவருக்கும் பிரசாதம் கொடுக்கிற நேரம். நேராக பெருமாள் சன்னதி முன் நின்று "வரச் சொன்னீர்கள்! வந்துவிட்டேன். இனிமேல் நீங்கள் அருளினால் தான் உண்டு. இங்கு தானா என்று தெரியவில்லை. ஏதோ பார்த்து அருளுங்கள்" என்று வேண்டி நிற்கயில், பிரசாதம் தந்த அர்ச்சகர், ஏதோ ஞாபகம் வர உள்ளே சென்றார்.

திரும்பி வந்தவர் கையில் ஒரு மஞ்சள் உருண்டை. "இந்தாருங்கள், இதை வைத்துக் கொள்ளுங்கள், இது இன்று பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்த பொழுது எடுத்து வைத்தேன்.  யார் வருவார்கள் என்று தெரியவில்லையே! என்று யோசித்த பொழுது "ஒருவன் இன்னும் இரண்டரை நாழிகையில் வருவான். அவனிடம் கொடு" என்று உத்தரவு வந்ததாக கூறினார்.

மிக அமைதியாக பக்தியுடன் அதை வாங்கி கண்ணில் ஒற்றிக்கொண்ட பொழுது, நல்ல சுத்தமான விரளி மஞ்சளின் வாசனை. "ஓ! இதுதான் மருந்தா?" என்று நினைத்து பாத்திரப்படுத்திக் கொண்டேன். அர்ச்சகர் மேலும் கொடுத்த பிரசாதத்தை வாங்கி கொண்டு,

"நாளை ஸ்ரீவில்லிபுத்தூர் செல்கிறேன்! உங்களை சனிக்கிழமை அன்று சந்திக்கிறேன்! என் இரு நண்பர்கள் இங்கு அன்று வருவார்கள், சுவாமி தரிசனத்துக்கு. வந்தால் அவர்களுக்கு தரிசனம் செய்து வையுங்கள். நானும் ஒரு 10 மணிக்குள் வந்துவிடுவேன்" என்று கூறி விடை பெற்றேன்.

மறுநாள், திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றேன். ஒரு நண்பர் என்னை சந்தித்து பல நண்பர்களை சந்திக்க அழைத்துச் சென்றார். அனைவரையும் சந்தித்து, நண்பர் வீட்டுக்கு செல்லவே, அவர் வீட்டில் அமர்ந்திருக்கும் பொழுது ஒருவர் "கையை நீட்டு. இந்தா இதையும் சாப்பிடச்சொல்!" என்று ஏதோ ஒரு துகளை கையில் போட்டார்.

"சரி! இது என்ன?" என்று வினவினேன்.

"திருப்பதி பெருமாளுக்கு மார்பில் சார்த்திய சந்தானம். மஹா லட்சுமி அவர் மார்பில் உறைகிறார் என்பது தெரியுமே! இது ஒரு அருமருந்து!" என்று கூறி கூடவே,

"இந்தா! இது பெருமாள் தீர்த்தம்!" என்று ஒரு பாட்டிலில் கொடுத்தார். நல்ல பச்சை கற்பூரத்தின் வாசனை தூக்கியது.

"இதற்காகத்தான் இத்தனை தூரம் பெருமாள் நம்மை வரவழைத்திருக்கிறார். சிகிர்ச்சைக்கு செல்பவருக்கு நிச்சயம் உடனடியாக குணம் கிடைத்துவிடும்" என்று நினைத்து, மிக்க நன்றியுடன் அவைகளை கண்ணில் ஒற்றிக் கொண்டு பத்திரப்படுத்தினேன்.

சனிக்கிழமை அன்று கோடகநல்லூர் சென்று நண்பர்கள் இருவரையும் சந்தித்தேன்.

"நல்ல தரிசனம்! பெருமாள் ஆசிர்வாதமும் பண்ணிவிட்டார். நீங்களும் வாங்களேன். உள்ளே போய் இன்னும் ஒருமுறை தரிசனம் செய்யலாம்" என்று வரவேற்றனர்.

நானும் சிரித்துக் கொண்டே "பொறுங்கள்! முதலில் பொதிகை அகத்திய பெருமானுக்கு பூசை சாமான்கள் வாங்கி வந்திருக்கிறேன். அதை பார்த்துவிட்டு, பிறகு உள்ளே செல்வோம்" என்று கூறி ஒவ்வொன்றாக வெளியே எடுத்து வைத்தேன்.

முதலில் நான் கொண்டு போன கைப்பையை தூக்கிப் பார்த்துவிட்டு, "ரொம்ப கனமாக இருக்கே! என் உடம்பை தூக்கிக்கொண்டு நடப்பதே பெருவிஷயம். கொஞ்சம் கனத்தை குறைத்துக் கொடுங்களேன்" என்றார்.

வெளியே வைத்த அனைத்தையும் பார்த்துவிட்டு அவரே "அந்த சந்தனப்பொடியை எடுத்துவிடுங்கள், விபூதி இருக்கட்டும்" என்றார்.

நான் சன்னதியை பார்த்தேன்.

"உமக்கு சந்தனம் வேண்டுமென்றால் சொன்னால் போதாதா? இப்படி அடியவர்களை கொண்டு காலைவாரி வாங்கிக்கணுமா? சரி! அதுதான் விதி போல. அகத்தியரே! மன்னித்துவிடுங்கள். உங்களுக்கு வந்து சேர வேண்டிய சந்தனப்பொடி பெருமாளுக்கு செல்கிறது. உங்களுக்கு விபூதியும், விதவிதமான வாசனாதி திரவியங்களும் வந்து சேரும். அனைத்தையும் ஏற்றுக் கொண்டு எல்லோருக்கும் அருள் புரியுங்கள்" என்று மானசீகமாக வேண்டிக் கொண்டேன்.

தரிசனம், அருள், ப்ரதக்ஷிணம் முடிந்து பெருமாள் கோவில் திண்ணையில் சிறிது நேரம் அமர்ந்து, பொதிகை பயணத்தை பற்றி பேசிவிட்டு, ஒரு வேண்டுதலை வைத்தேன், நண்பர்களிடம்.

"அகத்தியரின் அபிஷேக பூசைக்குப் பின், அடியேனுக்கு சிறிது அபிஷேக எண்ணையும், அபிஷேக விபூதியையும் பிரசாதமாக அனுப்பித்தாருங்களேன். நீங்கள் சென்னை போய் சேர்ந்ததிற்கு பின் போதும்!" என்றேன்.

அவர்கள் திங்களன்று அபிஷேகம் செய்து கீழே இறங்கி சென்னை சென்று சேர புதன் கிழமை ஆகிவிடும். அதற்குப்பின் அனுப்பி பிரசாதம் வந்து சேர மேலும் நான்கைந்து நாட்களாகிவிடும். சரி! மெதுவாக வரட்டுமே! எப்பொழுது வந்தாலும் அகத்தியர் அபிஷேக பிரசாதம் அதன் மகிமையுடன் இருக்கும். அது போதும். அகத்தியர் என்ன கூரியர் சர்வீஸா நடத்துகிறார்? உடனே வந்து சேர! அது அதற்கு காலம் என்று ஒன்று உண்டு. அதுவரை காத்திருக்கத்தான் வேண்டும்!" என்று நினைத்துவிட்டு, நண்பர்களிடமிருந்து விடைபெற்றேன். கிளம்பும் முன் அர்ச்சகரை சந்தித்து, சந்தனப்பொடியை கொடுத்து, "ஞாயிறன்று அபிஷேகத்துக்கு வைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறினேன்.

நண்பர்கள் விடை பெற்றனர்.

அடியேன் பொதிகை இருக்கும் தென் திசை நோக்கி கும்பிட்டு "குருவே! உங்கள் குழந்தைகள் தரிசன, அபிஷேக, பூசைக்காக கிளம்பி வருகிறது. அருள் புரிந்து, ஏற்றுக் கொள்ளுங்கள்" என வேண்டிக் கொண்டேன்.

மறுநாள் காலை (ஞாயிறு) மீண்டும் கோடகநல்லூர் சென்ற பொழுது தாமதமாகிவிட்டது. பெருமாள் அபிஷேகம் முடிந்திருந்தது. திரை போட்டிருந்தது.

வெளியே வந்த அர்ச்சகர் என்னை கண்டதும் "வாருங்கள்! மெதுவாக திரையை விலக்கி பாருங்கள். இன்று என்னவோ பெருமாள் ரொம்ப சந்தோஷத்தில் திளைக்கிறார். நீங்கள் கொண்டுவந்து தந்த சந்தனப்பொடியை அபிஷேகம் செய்தேன். நிறைய அளவுக்கு அவர் விக்கிரகத்திலேயே ஒட்டி கொண்டுள்ளது. பாருங்கள்" என்றார்.

"பெருமாள் சந்தோஷமாக இருந்தால் சரி! நான் எங்கே தந்தேன். இது அவராக நாடகம் நடத்தி பிடுங்கி கொண்டுவிட்டார். அகத்தியருக்கு போய்ச்சேரவேண்டியது. இங்கு பெருமாள் விக்ரகத்தில் அடைக்கலம் புகுந்துள்ளது" என்றேன்.

அன்றைய பூசை முடிந்தது, ஒரு உருண்டை சந்தனமும், ஒரு உருண்டை மஞ்சள் பொடியும் பிரசாதமாக தந்தார்.

அதை வாங்கி கொண்டு விடைபெற்று, நடந்த நிகழ்ச்சிகளை அசைபோட்டபடியே ஊர் வந்து சேர்ந்து ஒரு உறவினர் வழி இறைவன் அருளிய அனைத்து மருந்துகளையும், சாப்பிட கொடுத்துவிட்டேன்.

ஞாயிறன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிர்ச்சை செவ்வாய் கிழமைக்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், திங்கள் கிழமை மாலைக்குள், மருந்தும், தீர்த்தமும் உறவினரின் உடலுக்குள் சென்றது.

செவ்வாய் கிழமை அறுவை சிகிர்ச்சை நடந்து, ஆபத்தான அந்த கட்டத்தை இறைவன் அருளால், அந்த உறவினர் கடந்தார்.

திங்கட்கிழமை பொதிகையில், அவர் அடியவர்களால் அபிஷேக, அலங்கார பூசை மிக சிறப்பாக நடந்தேறியது.

தொடர்ந்து நடந்த விஷயங்கள் என்னை ஆச்சரியத்தில் மலைக்க வைத்தது.

சித்தன் அருள்.................. தொடரும்.

சித்தன் அருள் - 642 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவன் அருளால் நாங்கள் அடிக்கடி கூறுவது போல உணவை மனிதன் உண்ண வேண்டும். எந்த உணவும் மனிதனை உண்ணக் கூடாது. அப்படிப் பார்த்து மனிதன் உண்ணும் ஒரு முறையை கற்க வேண்டும். இன்னும் கூறப்போனால் உணவு என்பது ஒரு மனிதன் வாயைப் பார்த்து, நாவைப் பார்த்து உண்ணக் கற்றுக்கொண்டிருக்கிறான். அப்படியல்ல. வயிற்றைப் பார்த்து, வயிற்றுக்கு எது சுகமோ, வயிற்றுக்கு எது நன்மை தருமோ அப்படிதான் உண்ண பழக வேண்டும். உணவும் ஒரு கலைதான். இன்னும் கூறப்போனால் உணவு எனப்படும் இரை சரியாக இருந்தால், மாற்று இரை தேவையில்லை. அஃதாவது "மாத்திரை" தேவையில்லை என்பது உண்மையாகும். எனவே உடல் உழைப்பு, சிந்தனை உழைப்பு இவற்றைப் பொறுத்து ஒரு மனிதன் உணவை தேர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். எப்பொழுதுமே உணவிலும் சாத்வீகத்தைக் கடைபிடிப்பது அவசியமாகும். ஒருவனின் அன்றாடப் பணிகள் என்ன? அதிலே உடல் சார்ந்த பணிகள் என்ன? உள்ளம் சார்ந்த பணிகள் என்ன? இவற்றையெல்லாம் பிரித்து வைத்துக்கொண்டு அதற்கு ஏற்றாற் போல் உணவைப் பயன்படுத்த வேண்டும். அதிக உடல் உழைப்பு இல்லாதவர்கள் உணவைக் குறைத்துக் கொள்வதும், உணவிற்கு பதிலாக கனி வகைகளை சேர்த்துக் கொள்வதும், இன்னும் கூறப்போனால் மசை பண்டம், இன்னும் அதிக காரம், அதிக சுவையான பொருள்கள், செயற்கையான உணவுப் பொருள்கள் இவற்றையெல்லாம் தவிர்த்து, உணவை ஏற்பதே சிறப்பாக இருக்கும். வயது, தன்னுடைய உடலின் தன்மை, அன்றாடம் செய்கின்ற பணியின் தன்மை, மன நிலை இவற்றை பொருத்துதான் எப்பொழுதுமே உணவை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதை விட முக்கியம், ஒருவன் எந்த சூழலில் இருக்கிறானோ, எந்த தட்ப, வெப்ப நிலையில் இருக்கிறானோ அதற்கு ஏற்றாற் போல் உணவை மாற்றிக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் விட கவனம் வேண்டியது,  உணவை பகிர்ந்துண்டு ஏற்பது. அஃது மட்டுமல்லாமல் உயர்ந்த உணவாயிற்றே, இதை வீணடிக்கக் கூடாது என்பதற்காக ஏற்காமல், உணவு வீணானானாலும், உடல் வீணாகாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஏற்பதே சிறந்த உணவாக இருக்கும். உணவு, நல்ல உணர்வை தூண்டக்கூடியதாக இருக்க வேண்டும். சாத்வீக உணவாக இருக்க வேண்டும். எனவே உணவை ஒவ்வொரு மனிதனும் உண்ணும்பொழுது அந்த உணர்வை சிரமப்படுத்தாத உணவாகப் பார்த்து, ஒரு உணவு உள்ளே செல்கிறதென்றால் அந்த உணவு பரிபூரணமாக செரிமானம் அஃதாவது ஜீரணம் அடைந்த பிறகே அடுத்ததொரு உணவை உள்ளே அனுப்பும் முறையைக் கற்க வேண்டும். காலம் தவறாமல், நாழிகை தப்பாமல் உண்ணுகின்ற முறையை பின்பற்ற வேண்டும். வேறு வகையில் கூறப்போனால் சமையல் செய்கின்ற ஒரு தருணம், ஒருவன், ஒரு அடுப்பிலே ஒரு பாத்திரத்தை ஏற்றி நீரை இட்டு, அதிலே அரிசியை இட்டு அன்னம் சமைத்துக் கொண்டிருக்கிறான். அப்பொழுது அங்கே மூன்று மனிதர்கள் இருக்கிறார்கள். அதனால் மூன்று மனிதர்களுக்கு ஏற்ப அன்னம் தயாரித்துக் கொண்டிருக்கிறான். அன்னம் பகுதி வெந்துவிட்டது. இப்பொழுது மேலும் மூன்று மனிதர்கள் அங்கே வந்துவிட்டார்கள். உடனடியாக ‘ ஆஹா! இப்பொழுது சமைத்த உணவு பத்தாது. இப்பொழுது வெந்து கொண்டிருக்கும் இந்த அரிசியிலேயே இன்னும் மூன்று பேருக்குத் தேவையான அரிசியைப் போடுகிறேன்" என்று  யாராவது போடுவார்களா? மாட்டார்கள். இதை முழுமையாக சமைத்த பிறகு வேறொரு பாத்திரத்தில் மேலும் தேவையான அளவு சமைப்பார்கள். இந்த உண்மை சமைக்கின்ற அனைவருக்கும் தெரியும். ஆனால் ஏற்கனவே உண்ட உணவு அரைகுறையான செரிமானத்தில் இருக்கும்பொழுது மேலும் உணவை உள்ளே அனுப்புவது உடலுக்கு வியாதியை அவனாகவே வரவழைத்துக் கொள்வதாகும். ஒரு மனிதனுக்கு பெரும்பாலான வியாதிகள் விதியால் வராவிட்டாலும், அவன் மதியால் வரவழைத்துக் கொள்கிறான். விதியால் வந்த வியாதியை பிரார்த்தனையாலும், தர்மத்தாலும் விரட்டலாம். பழக்க, வழக்கம் சரியில்லாமல் வருகின்ற வியாதியை மனிதன்தான் போராடி விரட்டும் கலையைக் கற்றுக்கொள்ள வேண்டும். நல்ல உணவு என்பது நல்ல உணர்வை வளர்க்கும் என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற் போல் பக்குவமாக உணவை, அகங்காரம் இல்லாமல், ஆத்திரம் இல்லாமல், வேதனை இல்லாமல், கவலையில்லாமல், கஷ்டமில்லாமல் நல்ல மன நிலையில் அதனை தயார் செய்ய வேண்டும். நல்ல மன நிலையில் அதனை பரிமாற வேண்டும். உண்ணுபவனும் நல்ல உற்சாகமான மன நிலையில் உண்ண வேண்டும். இதில் எங்கு குறையிருந்தாலும் அந்த உணவு நல்ல உணர்வைத் தராது.

Friday 14 April 2017

சித்தன் அருள் - 641 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியர் அடியவர்கள் அவர்கள் குடும்பத்தார், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும், சித்தன் அருளின் "ஹேவிளம்பி" தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

யாங்கள் அடிக்கடி கூறுவது போல, இறைவன் அருளால் கூறுகிறோம். தொடர்ந்த எண்ணங்களின் ஓட்டமே சிந்தனை. தொடர்ந்த சிந்தனை என்பது மனமாகும். விழிகளை மூடிக்கொண்டு ஒவ்வொரு மனிதனும் தன் மனதை உற்று நோக்கினால் அதில் எத்தனையோ ஆசா, பாசங்கள் இருக்கலாம். அவற்றிலே ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். அதை விட்டுவிட்டு மேலும் பார்த்தால் என்ன தெரியும்? லோகாயம் மட்டுமே அதில் நிரப்பப்பட்டு இருக்கும். ஒன்று இல்லக்கடமை அல்லது தசக்கடமை அல்லது அப்பொழுது அவன் சந்திக்கின்ற கடுமையான பிரச்சினை குறித்த சிந்தனை அல்லது எதிர்காலத்தில் வேறு எஃதாவது புதிதாக ஒரு பிரச்சினை இதனை சார்ந்து வந்துவிடுமோ? என்ற அச்சம். இஃது எதுவுமே இல்லாத மனிதனாக இருந்தால் பொழுதை ஆக்குவதற்கு பதிலாக பொழுதை போக்குகிறேன் என்று அந்தப் பொழுதை வீண் செய்வதும் அதற்காக தனத்தை வியம் செய்வதுமான ஒரு அசுரத்தனமான செயல்களில் ஈடுபடுவது. இப்படி மனதிற்கு அந்த மாபெரும் சக்திக்கு சரியான பணியை தராமல் அதன் ஆற்றலை முறைபடுத்தி பயிர்களுக்கு அந்த மனோசக்தி எனப்படும் நீரை பாய்ச்சாமல் தேவையற்ற வெள்ளமாக வடிய விடுவதுதான் மனிதனுக்கு என்றென்றும் இயல்பாக இருந்து வருகிறது. எல்லோருக்குமே இது பெரும்பாலும் பொருந்துகிறது. உடல் வேறு, உடலில் குடிகொண்டு இருக்கும் ஆத்மா வேறு. ஆத்மா எத்தனையோ உடல்களுக்குள் இருந்துகொண்டு, புகுந்துகொண்டு பிறவி என்ற பெயரில் வாழ்ந்து, மடிந்து, வாழ்ந்து, மடிந்து சேர்த்த வினைகளின் தொகுப்புதான், அந்த வினைகளின் அடிப்படையில்தான் அடுத்த உடம்பு கிடைத்திருக்கிறது. அந்த உடம்போடு அந்த ஆத்மா மயக்கமுற்ற நிலையிலே தன்னை அறியாமல் வாழ்கிறது. அப்படி வாழ்கின்ற அந்தப் பிறவியிலும், அது பல்வேறு வினைகளை செய்கிறது. அதில் பாவமும், புண்ணியமும் அடங்குகிறது. இதிலே பாவங்களைக் குறைத்து எல்லா வகையிலும் புண்ணியங்களை அதிகரிக்க வேண்டும் என்பதுதான் மகான்களின் உபதேசமாக இருக்கிறது. இந்த புண்ணியத்தை கனவிலும், நனவிலும், ஒவ்வொரு அணுவிலும் எப்பொழுதும் சிந்தித்துக்கொண்டே, கடமைகளை பற்றற்ற நிலையில் ஆற்றிக்கொண்டே உள்ளத்தில் சதாசர்வகாலம் இறை சிந்தனை மட்டும் வைத்துக்கொண்டு, எதனையும் இறைவன் பார்த்தால் எப்படி பார்ப்பாரோ அந்த பார்வையில் பார்க்கப் பழகினால் மனம் நிம்மதியான நிலையிலிருக்கும். நிம்மதியான மன நிலையில்தான் மனிதனுக்கு பெரிய ஞானம் சார்ந்த விஷயங்கள் மெல்ல, மெல்ல புரியத் துவங்கும்.

பிரச்சினைகளே இல்லாத வாழ்க்கை என்பது எக்காலத்திலும், எந்த மனிதனுக்கும் கிடையாதப்பா. பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கிறான்? என்பதில்தான் வாழ்க்கை நிலை அடங்கியிருக்கிறது. அசைக்க முடியாத இறை பக்தி கொண்ட மனிதனுக்கும், அப்படியில்லாத சராசரி மனிதனுக்கும் வேறுபாடே, அதிகளவு துன்பத்தை பார்க்கும்பொழுது அதனை எப்படி எதிர்கொள்கிறான்? என்பதை பொறுத்துதான். ஒரு வேளை இறைபக்தி இல்லாவிட்டாலும் தன்னுடைய அனுபவ அறிவைக்கொண்டும், தான் கற்ற கல்வியைக்கொண்டும் துன்பங்களை எதிர்கொண்டு வாழ்கின்ற மனிதன் எத்தனையோ மடங்கு மேலப்பா, இறைபக்தி இருந்தும் சோர்ந்து போகின்ற மனிதனைவிட. எனவே மனசோர்வு மிகப்பெரிய பிணி. அதற்கு இங்கு வருகின்ற யாரும் இடம் தராமல் இருப்பதே சிறப்பு.


Thursday 13 April 2017

சித்தன் அருள் - 640 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் இஃதொப்ப மனித சிந்தனைகளும், மனித எண்ணங்களும் காலகாலம் பெரும்பாலும் மனிதன் பட்ட அனுபவத்தைப் பொறுத்தும், சூழலைப் பொறுத்தும், சக உறவுகளைப் பொறுத்தும், உடல் வலிமை, அவனின் சமகால பதவியின் நிலைமை, கையிலுள்ள செல்வத்தின் அளவு -  இவற்றை பொறுத்தே மனித ரீதியாக மனிதனுக்கு மனிதன் அந்த எண்ணங்களும் உரு பெறுகிறது, மாற்றம் பெறுகிறது. ஒரு ஞானியின் பார்வையில் கூறுவதென்றால் மனிதன் எண்ணுகிறான், மதியால் சிந்தித்து, மதியை கூர்மையாக்கி, விசாலமாக்கி, ஆழமாக்கி நன்றாக பயன்படுத்தினால் மனிதன் நன்றாக வாழலாம் என்று. இதை நாங்கள் ஒருபொழுதும் மறுப்பதில்லை. ஆனால் இறைவன் தந்த அந்த மதியை, அறிவை பரிபூரணமாக பயன்படுத்துவதற்கு உண்டான சூழலை அவனுக்கு விதிதான் தரவேண்டும். இல்லையென்றால் கடுமையான போராட்டத்தோடு வாழவேண்டிய நிலைமையும், அறியாமையில் சிக்கி வாழ வேண்டிய சூழலும் ஏற்படும். அங்ஙனமாயின் எத்தனையோ குணக்கேடானவர்கள், பண்பாடற்றவர்கள் புத்தி கூர்மையில் சிறந்து விளங்குகிறார்களே?  அவர்களுக்கு விதி சாதகமாக இருக்கிறதா?. நல்ல குணம் கொண்ட ஒரு மனிதனுக்கு, அறியாமை மதியில் அமர்ந்துவிட அதனால் அவன் எடுக்கும் முடிவுகளெல்லாம் தவறாக முடிந்து அவன் துயரில் ஆழ்வதற்கு வழிவகுக்கிறதே? இதுதான் விதியின் வேலையா? என்றெல்லாம் மனிதனுக்கு ஐயம் எழலாம். இதை மனிதர்கள் மறுத்தாலும், ஏற்றுக்கொண்டாலும் உண்மைதான்.

எல்லாம் விதிதான் என்றால் மதியின் தன்மைதான் என்ன? எதற்காக மனிதனுக்கு மதி தரப்பட்டிருக்கிறது. ஒரு மனிதன் முயன்றால் தன்னுடைய மதியின் ஆற்றலைக்கொண்டு, கடுமையான சிந்தனையை வளர்த்துக்கொண்டு தன் வாழ்க்கையில் எதிர்படும் துன்பங்களையெல்லாம் விலக்கிக்கொள்ள இயலாதா? என்றால் தாராளமாக. அதை யாரும் செய்ய வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. இதை வேறு வகையில் கூறப்போனால் இப்பொழுது மனிதர்களுக்கு எந்தளவு மதி இருக்கிறதோ அதே அளவு மதிதானே சில ஆண்டுகளுக்கு முன்பும், பல ஆண்டுகளுக்கு முன்பும் இருந்திருக்க வேண்டும்?. இப்பொழுது மனிதன் விஞ்ஞான பூர்வமாக உணர்ந்த விஷயங்கள் ஏற்கனவே இந்த நில உலகில் உள்ளதுதான். இறைவன் அருளாலே செப்பு சுருளுக்குள் காந்த சக்தியை பாய்ச்சினால் மின்சாரம் வரும் என்றால் இந்த விதி 1000 ஆண்டுகளுக்கு முன்பும் பொருந்தும், அதற்கு முன்பும் பொருந்தும். ஆனால் அப்பொழுதுள்ள மனித மூளைக்கு இந்த கருத்து ஏன் எட்டவில்லை?. எனவே ஏற்கனவே உள்ள விதிமுறைகள் எல்லாம் இன்னின்ன காலத்தில் இன்னின்ன மனித மூளையின் மூலமாக உலகிற்கு வரவேண்டும் என்று இறைவன் தீர்மானம் கொண்டிருக்கிறார் என்பது இதன் மூலம் தெரியவருகிறது.  அப்படியானால் நடப்பது நடந்துவிட்டுப் போகட்டும். நான் ஏன் சிந்திக்க வேண்டும்? உழைக்க வேண்டும் ? என்றெல்லாம் இருக்கலாமா?  என்றால் அது குதர்க்கவாதத்தைக் குறிக்கும். அப்படியொருவன் எண்ணினாலும் கூட விதி அவனை இருக்க விடாது என்பது வேறு விஷயம். ஆன்மீகம் என்றால் எப்பொழுதுமே ஒரு மனிதன் அந்த ஆன்மீகத்தை தன் வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்து அது பொருந்தா நிலையாக இருக்கும் பட்சத்தில் ஆன்மீகத்தை ஏற்க மறுக்கிறான். அதைப்போல மெய்ஞானத்தையும் அவன் ஓரளவு கற்ற விஞ்ஞானத்தையும் பொருத்திப் பார்த்து அவனுடைய அறிவிற்கு எட்டாத நிலையில் அவனால் எதையும் ஏற்க முடியவில்லை. நாங்கள் கூறுகின்ற கருத்தாக இருந்தாலும் இன்னும் வேறு மகான்களின் ஞானக்கருத்தாக இருந்தாலும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றோ, ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்றோ நாங்கள் கூறவில்லை.

ஒரளவு பாவங்கள் அற்ற நிலையில் எம்மை நோக்கி வருகின்ற ஆன்மாக்களுக்கு வழிகாட்டி, மெய் எது? மெய்யிலும் மெய் எது?  என்பதை உணர்த்துவதற்காகத்தான் இறைவனின் கட்டளை எம்போன்ற மகான்களை இந்தக் கலியில் இதுபோன்ற நிலையில் வாக்கினை கூற அருளாணையிடுகிறது. ஆயினும் கூட நாங்கள் என்ன கூற வருகிறோம்? எதற்கு அதனைக் கூறுகிறோம்?  ஒரு வாக்கை எதற்காக உரைக்கிறோம்? ஒரு வாக்கை எதற்காக மறுக்கிறோம்?  ஏன் மௌனம் காக்கிறோம்?  ஏன் ‘பின்னர் உரைக்கிறோம்‘ என்று கூறுகிறோம்? என்பதை சற்றே கடுகளவாவது இறைவனை எண்ணி சிந்தித்துப் பார்த்தால் இறைவனே அவன் சிந்தனைக்குள் சிலவற்றை உணர்த்துவார். ஆனாலும் கூட அறியாமையின் உச்சத்தில் வாழ்கின்ற மனிதன் இதையெல்லாம் நினைத்து பார்ப்பதேயில்லை.

மனித மதியானது விதிவழியாக செல்லும்பொழுது இறைவனும், நாங்களும் வெறும் பார்வையாளராகத்தான் இருக்கவேண்டியிருக்கிறது.  அது எங்ஙனம் சாத்தியம்?  அது எங்ஙனம் நியாயம்?  என்றெல்லாம் மனிதன் வினவலாம். ‘படைத்த இறைவனுக்கு பொறுப்பில்லையா? ஞானிகளுக்கு பொறுப்பில்லையா?  மனிதர்கள்தான் அறியாமையால் தவறு செய்தால் அல்லது உழன்றால் அதிலிருந்து அவர்களை கரை சேர்க்க வேண்டாமா? என்ற ஒரு வினா எழலாம். அப்படி கரை சேர்ப்பதற்குதான் விதியை எதிர்த்து ஒரு மனிதன் பயணம் செய்யவேண்டும் என்பதற்குதான் இறைவனின் அருளாணைக்கேற்ப யாம் இந்த ஜீவ அருள் ஒலையிலே சில நுணுக்கமான வாக்குகளையெல்லாம் கூறுகிறோம். ஆனால் ‘நடைமுறையில் இவையெல்லாம் ஏற்கத்தக்கதாக இல்லை. நடைமுறையில் இவற்றை பின்பற்ற முடியாது‘ என்று மனிதன் தனக்குத்தானே சமாதானம் கூறிக்கொண்டு மீண்டும் விதிவழியாகத்தான் செல்கிறான்.

சுருக்கமாகக் கூறினால் இறைவனின் அருளாணையின்படி ஒரு மனிதனின் அறியாமை நீங்க வேண்டுமென்றால் அவன் இதுவரை எடுத்த கோடானுகோடி பிறவிகளின் பாவம் ( பாவம் என்று கூறுவதை விட பாவங்கள் என்று பன்மையில் கூற வேண்டும் ) நீங்க வேண்டும். பாவங்கள் நீங்க வேண்டுமென்றால் அவனுடைய மனம் ஒவ்வொரு நிகழ்வாலும் வேதனைப்பட வேண்டும். ஒவ்வொரு நிகழ்வாலும் வெட்கப்பட வேண்டும். ஒவ்வொரு நிகழ்வாலும் அவன் அனலில் இட்ட புழு போல் துடிக்க வேண்டும். அந்த எண்ணங்கள்தான், அப்படியொரு மனப்பாங்குதான் அவனுடைய பாவத்தை நீக்கும். எப்படி கயப்பு மருந்து நோயை நீக்குகிறதோ அதைப்போல கடினமான அனுபவங்கள் ஒரு மனிதன் சேர்த்த பாவங்களை நீக்குகிறது. ஆனால் எல்லோராலும் எல்லா நிலையிலும் எல்லா காலத்திலும் துன்பங்களை நுகர இயலாது. நேரடியாக ‘ உனக்கு இவையெல்லாம் நடக்கும். தாங்கிக்கொள் ‘ என்றால் எத்தனை மனிதர்களால் தாங்கிக்கொள்ள இயலும் ? எனவேதான் இறைவன் கருணைகொண்டு மனிதனுக்கு பல்வேறுவிதமான பிறவிகளைத் தந்து ஒவ்வொரு பிறவியிலும் பல அனுபவங்களைத் தந்து அந்த அனுபவங்களின் வாயிலாக அந்த ஆத்மாவின் பாவங்களைக் குறைக்கிறார். அஃதோடு மட்டுமல்லாமல் மறைமுகமாக, அவன் பாடுபட்டு தேடிய தனத்தையெல்லாம் வியமாக்கி அதன் மூலம் பாவத்தைக் குறைக்க வைக்கிறார். பிறரை மனம் நோக செய்து, பிறர் மனதையெல்லாம் வதைத்து பிறவியெடுத்த பிறவிகளுக்கு மீண்டும் பிறரால் மனம் வேதனை அடையும் வண்ணம் ஒரு சூழலை ஏற்படுத்தி அதன் மூலம் பாவத்தைக் குறைக்கிறார். ஒட்டுமொத்தமாக இப்படி வியாதியாக, வழக்காக, தொழிலில் ஏற்படும் மன உளைச்சலாக, உறவு சிக்கலாக, நட்பு சிக்கலாக, நம்பிக்கை துரோகமாக – இப்படி ஒவ்வொரு நாளும் நிகழும்  நிகழ்வில் மனித பாவங்கள் குறைகின்றன. இதைப் புரிந்துகொள்வது கடினம். இதை புரிந்து கொள்வதற்கே ஒரு மனிதன் கோடானுகோடி பிறவி எடுத்திருக்க வேண்டும்.

இந்த நிலையில்தான் இறைவனின் அருளாணைக்கேற்ப எமை நாடும் மாந்தர்களுக்கு ‘நீ குடம், குடமாக பாலை கொட்ட வேண்டாமப்பா. நீ பாடுபட்டு நேர்மையாக ஈட்டும் தனத்தையெல்லாம் உனக்கும், உன் குடும்பத்தேவைக்கும் போக அள்ளி, அள்ளி வழங்கு. யாருக்கெல்லாம் தேவைப்படுகிறதோ வழங்கு. கள்வன் உன்னிடமிருந்து மறைமுகமாக கவர்ந்து கொள்வதற்கு முன்பாக நீயாகவே கொடுத்துவிடு. கொடு, கொடு, கொடு, கொடு, கொடு, கொடு, கொடுத்துக்கொண்டேயிரு என்று நாங்கள் கூறுகிறோம். ஆனால் இதையெல்லாம் கேட்கின்ற மனிதனுக்கு வேடிக்கையாக இருக்கிறது. ஏளனமாக இருக்கிறது. இது குறித்து பலவிதமான விமர்சனங்களெல்லாம் தமக்குத்தாமே தன்னை சேர்ந்த மனிதர்களோடு அவன் உரையாடிக்கொண்டு ‘ இவையெல்லாம் சாத்தியமா ? இப்படியெல்லாம் செய்ய இயலுமா ? இவையெல்லாம் முட்டாள்தனம் ‘ என்று அவன் பேசவில்லை. அவன் விதி பேசவைக்கிறது. பிறகு நாங்கள் எப்படியப்பா அல்லும், பகலும், 60 நாழிகையும் எமை நாடும் மனிதர்களுக்கு வழிகாட்ட இயலும்?

எனவே இஃதொப்ப ஜீவ அருள் ஒலையை நாட வேண்டுமென்றால், பின்பற்ற வேண்டுமென்றால் இஃதொப்ப ஜீவ அருள் ஓலையை நம்பி, இந்த ஜீவ அருள் ஓலையை வாசிக்கும், இதழ் வாசிப்பவனையும் நம்பி இதன் மூலம் வாக்கை உரைப்பது மகான்கள்தான், என்று நம்பி வருகின்ற ஆத்மாக்களுக்கு, அப்படி நம்பும் வண்ணம் எவனுக்கு கிரகநிலை அமைகிறதோ அல்லது அப்படி அமைக்கவேண்டும் என்று இறைவன் திருவுள்ளம் கொள்கிறாரோ அஃதொப்ப ஆத்மாக்களுக்கு நாங்கள் இறைவனருளால் வழிகாட்டிக்கொண்டே இருப்போம். எனவே யாரும் விசனம் கொண்டிட வேண்டாம்.

Wednesday 12 April 2017

சித்தன் அருள் - 639 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

மரணம் என்பது மனிதப் பார்வையிலே துக்கமாக இருக்கலாம். இருக்கத்தான் வேண்டும். அப்படித்தான் இருப்பதாகவே மனிதனுக்கு அது உணர்த்தப்பட்டுள்ளது. மரணம் என்பது முடிவாக மனிதனுக்குத் தெரிகிறது. அதை அப்படி பார்ப்பதைவிட நாங்கள் அடிக்கடி கூறுகின்ற உதாரணத்தை வைத்துப் பார்த்தால் மிக எளிதாகப் புரியும். ஆனாலும் இது மனிதனுக்கு வேதனை தரக்கூடிய உதாரணமாக இருக்கலாம். அதே சமயம் எல்லா மரணத்திற்கும் இந்த உதாரணத்தை பொருத்திப் பார்க்கக்கூடாது. கூடுமானவரை பல புண்ணியங்களை செய்கின்ற மனிதன், பலருக்கும் நல்லதை செய்கின்ற மனிதன் மெய்யாக, மெய்யாக, மெய்யாக, மெய்யாக, மெய்யைப் பேசி, மெய்யாக நடந்து, இறைபக்தியோடு, அடக்கத்தோடு, ஒழுக்கத்தோடு வாழ்கின்ற மனிதன் சட்டென்று மரணித்தால் "அடடா! இத்தனை நல்லவன் இறந்துவிட்டானே? எத்தனையோ தீயசெயல்களை செய்கின்ற இன்னொரு மனிதன் வாழ்வாங்கு வாழ்கிறானே?" என்று ஒப்பிட்டு பார்ப்பது மனிதர்களின் இயல்பு. ஆனால் இதுபோன்ற தருணத்தில் எப்படி புரிந்துகொள்ள வேண்டுமென்றால், ஒரு சிறைச்சாலையிலே பல்லாண்டுகள் சிறையில் வாடவேண்டும் என்று தண்டனை பெற்ற ஒருவன், நன்னடத்தை காரணமாக முன்னதாகவே சிறையைவிட்டு வெளியே வருவது போல் பல ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் வாடுகின்ற ஒரு மனிதன், சில நாட்கள் மட்டும் தண்டனை பெற்று வெளியே போகும் கைதியைப் பார்த்து ‘என்னப்பா நீ! பெரிதாக குற்றம் செய்யவில்லையா? என்னைப் பார்த்தாயா? நான் எத்தனை பெரிய குற்றம் செய்துவிட்டு ஆண்டாண்டு காலம் சிறையில் இருக்கிறேன். நீ எதற்கு இத்தனை குறுகிய காலத்தில் வெளியே செல்கிறாய்? உனக்கென்ன  அத்தனை அவசரமா? ஏன் நீ பெரிய குற்றமாக செய்யமாட்டாயா?" என்று கேட்டால், அது எப்படியிருக்குமோ, அப்படித்தான் சட்டென்று நல்லவன் மரணித்தால் "இவன் மாண்டுவிட்டானே" என்று, மற்றவர்கள் விசனம் கொள்வதற்கு ஏதுவாக இருக்கும். இப்படிக்கூறினால் மனிதனுக்கு இன்னொரு ஐயம் எழும். "அது சரி, அவனை சார்ந்த குடும்பம் என்னாவது" அவன் மீது அதீத பற்றும், பாசமும் கொண்ட உறவும், நட்பும் வேதனைப்படுமே?" என்றெல்லாம் பார்த்தால் அது சூட்சும கர்மக்கணக்கிற்குள் செல்லும். எனவே மேலெழுந்தவாரியாக மனிதன் புரிந்துகொள்வதைவிட ஆழ்ந்து, ஆழ்ந்து சென்று புரிந்துகொள்ள முயற்சி செய்திட வேண்டும்.

Tuesday 11 April 2017

சித்தன் அருள் - 638 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் இஃதொப்ப வினைகளின் கூட்டுத்தொகுப்பான பிறவிகளில் மனிதப்பிறவி விலங்கான பிறவிகளிலிருந்து சற்றே கடுகளவு மேம்பட்டது என்றாலும் மேலும் மேம்பட சற்றே முயலாமல் அந்த விலங்குத்தன்மையை மட்டும் கொண்டு உணர்வுகளுக்கு ஆட்பட்டு, உணர்வுகளால் அலைக்கழிக்கப்பட்டு வாழ்கின்ற தன்மையே பெரும்பாலான மாந்தர்களிடம் நிலவிவருகிறது. இறைவனின் கருணையைப் பெறவும், மேலும், மேலும் இறை நோக்கி பயணம் செய்யவும், பாவங்களை சேர்க்காத வாழ்க்கை வாழவும், சேர்த்த பாவங்களை கழிக்கவும் மட்டுமே மனித பிறவி என்று ஒரு மனிதன் புரிந்துகொள்ளவே பல, பல, பல பிறவிகள் ஆகிவிடுகிறது. அவன் புலன்களால் கண்டு, கேட்டு உணரக்கூடிய வாழ்க்கை முறையை நுகர்வதே வாழ்க்கை என்று எண்ணுகின்ற தன்மையில்தான் பெரும்பாலும் வாழ்ந்து கொண்டிருக்கிறான். இஃதொப்ப புலன் வாழ்வைத் தாண்டி மேலான வாழ்வு நிலையை நோக்கி செல்வதற்கு கொடுக்கப்பட்ட பிறவியை நன்றாக பயன்படுத்திக்கொள்ள கூடுமானவரை முயற்சி செய்வதே ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். ஆகிடுமே மனதை உறுதியாக வைத்துக்கொள்ள இஃது. அஃதொப்ப வினைகளின் தொகுப்பு, உறவுகள் ரீதியாகவும், நட்பு வழியாகவும், இன்னும் தொடர்பு கொள்ளக்கூடிய பிறமாந்தர்கள் வழியாகவும், வேறு, வேறு காரணங்களைக் கொண்டும் செயல்படும் தன்மையாகும். தேகத்தின் ஒட்டுமொத்த இயக்கம் மனிதன் தன் அறிவால் கண்டு "இஃது இதனால் இயங்குகிறது. இஃது இவ்வாறு இருக்கிறது" என்று புரிந்துகொண்டு, அதற்கு ஏற்றாற்போல் செயல்பட்டாலும், அப்படி தேகம் இயங்குகின்ற அந்த இயக்கத்தின் பின்னால் இருப்பதும் வினைகள்தான், என்பதை புரிந்துகொள்வது கடினமே.

Monday 10 April 2017

சித்தன் அருள் - 637 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவனின் கருணையைப் பெறுவதற்கு சாத்வீக வாழ்வும், சலனமற்ற, சினமற்ற, தன்முனைப்பு அற்ற வாழ்வும் தேவை. இவையெல்லாம், விழி மூடி, விழி திறப்பதற்குள் யாருக்கும் கிட்டிவிடாது. தொடர்ந்து போராடிக்கொண்டே இருத்தல் வேண்டும். எத்தனை முறை வீழ்ந்தாலும் மீண்டும், மீண்டும், எழுந்து, எழுந்து, எழுந்து இறை நோக்கி, நல்ல நிலை நோக்கி போராட, மனிதன் கற்றுக்கொண்டிட வேண்டும்.

Sunday 9 April 2017

சித்தன் அருள் - 636 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவன் கருணையாலே எதையெடுத்தாலும் வினைகள், வினைகள், சென்ற பிறவிகளின் கர்மாக்கள் என்று கூறுவதால் என்ன லாபம்? மனிதனுக்கு கொடுக்கப்பட்டுள்ள அறிவு எதற்கு ? அந்த அறிவைக்கொண்டு ஒரு மனிதன் தன் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள இயலாதா? துன்பங்களற்ற நிலையை அடைய இயலாதா ? என்றால், இறைவன் படைத்த மனிதன், தான் பெற்றுள்ள அறிவை விருத்தி செய்து கொள்ளவும், அந்த அறிவை அனுபவங்களால் நிரப்பி, தான் ஏற்கனவே பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் முடிவெடுக்கவும், தன்னுடைய அறிவின் திறன் கொண்டு தன்னை வளர்த்துக்கொள்ளவும், தனக்கு இடர் வராமல் காத்துக்கொள்ளவும் அவன் முயல்வது தவறு என்று நாங்கள் கூற வரவில்லை. அப்படி முயலுகின்ற பல மனிதர்களில் சிலரில், சிலரில், சிலரில், சிலரில், சிலருக்கு மட்டுமே அவன் எண்ணுவது போல ஓரளவு வாழ்க்கை நிலை அமைகிறது. பலருக்கு அவ்வாறு அமைவதில்லை. அதுபோன்ற தருணங்களில் எல்லாம் மனிதன் சோர்ந்துவிடக்கூடாது. என்றோ, எப்பொழுதோ செய்த வினை இப்பொழுது வருகிறது என்று எடுத்துக்கொண்டு, பக்குவமாக அதனை எதிர்கொண்டு, இனி பாவங்களற்ற வாழ்க்கையை வாழ போராட ஒவ்வொரு மனிதனும் கற்றுக்கொண்டிட வேண்டும்.  தன்னுடைய லோகாய கடமையை நேர்மையாக ஆற்றுவதோடு, தன்னால் இயன்ற தொண்டினை செய்வதோடு அமைதியான முறையிலே பிரார்த்தனைகளை, ஸ்தல யாத்திரைகளை தொடர்வதும், இயன்ற தர்மகாரியங்களை செய்வதும் ஒரு மனிதனின் பாவங்களைக் குறைப்பது மட்டுமில்லாமல் மேலும் கடுமையான பாவங்களை சேர்க்காமல் இருப்பதற்கும் உதவும். இஃது போன்ற பொதுவான கருத்துக்களை நாங்கள் மீண்டும், மீண்டும் கூறுவதின் நோக்கமே  மீண்டும், மீண்டும் இஃதுபோன்ற கருத்துக்களை அசைபோட, அசைபோட, அசைபோட, அசைபோட மனித மனம் தடுமாற்றமில்லாமல் உறுதியோடு இதனை பின்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான். ஏனென்றால் சராசரி மனிதர்கள் எதையெதையோ பேசி, சற்றே தடுமாறி மேலே வரக்கூடிய மனிதர்களை குழப்பத்தில் ஆழ்த்தக்கூடும் என்பதால்தான் நல்ல விஷயங்களை, உயர்ந்த கருத்துக்களையெல்லாம் மனிதன் அடிக்கடி செவியில் விழுவதுபோல் ஒரு சூழலை ஏற்படுத்திக்கொண்டிட வேண்டும். எனவேதான் வினைகளின் தொகுப்பான பிறவிகளை களைய மனிதன் முயற்சி எடுத்திட வேண்டும். இஃதொப்ப எல்லா நிலையிலும் மனிதனுக்கு துன்பங்களற்ற நிலை வேண்டும் என்றாலும் துன்பங்களற்ற ஒரு நிலையை புறத்தே தேடுவது என்பது அத்தனை ஏற்புடையது அல்ல. ஒரு மனிதன் பக்குவப்பட, பக்குவப்படத்தான்  துன்பங்களற்ற சூழல் என்பது அவன் உணரக்கூடிய சூழலாக இருக்கும்.

ஒரு மனிதன் வியாபாரத்திலே கடுமையான நட்டத்தை சந்திக்கிறான். அதிகளவு பொருளை இழக்கிறான். உண்மையில் பார்க்கப்போனால் அது மிகப்பெரிய நட்டமே. அதைப்போல் இன்னொரு மனிதனும் அடைகிறான். இரண்டு மனிதர்களும் இழந்தது மிகப்பெரிய இழப்பு, நட்டம். ஆனால் ‘ சரி, போகட்டும். எங்கோ தவறு செய்துவிட்டோம், இனி கவனமாக இருப்போம் ‘ என்று மனதை தளரவிடாமல் ஒரு மனிதன் இருந்தால் அவனைப் பொறுத்தவரை இந்த நட்டம் துன்பத்தை தரவில்லை. அதை விடுத்து ‘இப்படியொரு நட்டம் வந்துவிட்டதே, இனி எப்படி வாழ்வது?' என்று அவன் மிகவும் சோர்ந்து, சோர்ந்து அமர்ந்தால் இருக்கின்ற சக்தியும் அவனைவிட்டு சென்றுவிடும். சோர்வே அவனை மேலும் குழப்பத்தில் ஆழ்த்திவிடும். எனவே நிஜமான துன்பம் என்பதும், நிஜமான இன்பம் என்பதும் இந்த உலகில் இல்லை என்பதை மனிதர்கள் புரிந்துகொண்டிட வேண்டும். அப்படியானால் துன்பம் என்று உணர்வதும், இன்பம் என்று உணர்வதும் பொய்யா? என்றால், அது பொய் என்று உணரும் நிலை வரும்பொழுது ஒவ்வொரு மனிதனுக்கும் அது புரியும். ஏனென்றால் பக்குவம் அடைய, அடையத்தான் எது நிஜமான துன்பம்? எது நிஜமான இன்பம்? என்பது மனிதனுக்குத் தெரியும். இறைவனின் கருணையால் இஃதுபோன்ற ஞானக்கருத்துக்களை அசைபோட்டாலே வாழ்வின் எதிரே எத்தகைய சூழல் வந்தாலும் மனம் கலங்காமல் வாழ்ந்திடலாம்.