​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 18 April 2017

சித்தன் அருள் - 648 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் இஃதொப்ப நலம், நலம், நலமே எல்லா நிலையிலும் எல்லா சூழலிலும் தொடர்ந்து கிட்டிட இறைவன் அருளால் நல்லாசிகள் இத்தருணம் இயம்புகின்றோம். இறைவன் அருளாலே, மனிதர்களின் வாழ்விலே பின்னிப்படர்ந்து கிடக்கின்ற கர்ம வினைகள், பெரும்பாலும் பாவங்களே இருப்பதால்தான் அறியாமை அதிகமாக மதியிலே படர்ந்து கிடக்கிறது. அறியாமையை விட மிகப்பெரிய துன்பம் மனிதனுக்கு வேறு எதுவுமில்லை. எல்லாம் அறிந்திருக்கிறோம் என்று, அறியாத நிலையிலும், அறிந்தது போல் மனிதன் இருப்பதுதான் அறியாமையின் உச்ச நிலையாகும். அஃதாவது லோகாய அறிவு என்பது ஒரு நிலை. லோகாய அறிவை நன்றாகக் கைவரப்பெற்ற மனிதன் கூட  பல்வேறு தருணங்களில் அந்த அறிவால் பெரிய பலனேதுமில்லாமல் துன்பத்தில் வாழ்வது உண்டு. அதே சமயம் அறிவை செயல்பட விடாமல் முடக்குவதில் ஆசைக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு. அந்த ஆசைக்கு துணையாக கடுமையான பாசத்திற்கும் மிகப்பெரிய பங்களிப்பு உண்டு. ஆசையும், பாசமும் மட்டுமா அறியாமைக்கு துணை செய்கிறது?  அஃதோடு உணர்ச்சி நிலை, மிகு உணர்ச்சி நிலை. இவை அனைத்தையுமே கொண்டுள்ள மனிதன் அதிலிருந்து தப்ப இயலாமல், தொடர்ந்து போராடிக் கொண்டே வாழ வேண்டிய நிலையில்தான் இருக்கிறான் அன்றும், இன்றும், என்றும். எனவேதான் ஒரு மனிதன் எப்பொழுதுமே இறைபக்தியோடு சத்தியத்தை விடாது, மனசாட்சியோடு, தொடர்ந்து தர்மசிந்தனையோடு வாழ மேற்கூறிய அறியாமை மெல்ல, மெல்ல விலகும். அறியாமை விலக, விலகவே மனிதனுக்கு நிம்மதி பிறக்கும். அஃதொப்ப நிலையிலே மனிதன் தன்னையும், தன்னை சேர்ந்த குடும்பத்தாரையும் பாசவலைக்குள் வைத்து பார்க்கும்பொழுதுதான் "என் பிள்ளை இப்படி துன்பப்படுகிறானே, என் தாய் இப்படியெல்லாம் கடினப்படுகிறாளே" என்றெல்லாம் எண்ணி, எண்ணி ஒரு மயக்கத்தில் ஆழ நேரிடும். ஆயினும் கூட அந்த பாசம்தான் பெருமளவு குடும்பக்கடமைகளை செய்ய மனிதனுக்கு ஒருவிதத்தில் உதவுகிறது. இருந்தாலும் அஃதே அதிகமாகும் தருணத்தில் அவனை அறியாமையில் வழுக்கிவிழ வைக்கிறது. அதை அப்படியே மூன்றாவது மனிதன் மீது பார்க்கும்பொழுது, இரத்த சம்பந்தமில்லாத, நட்போ, உறவோ இல்லாத மனிதனிடம் பார்க்கும்பொழுது அப்படியெல்லாம் ஏற்படாததால், அப்படி ஏற்பட்டு ஒரு மயக்கம் கிட்டாததால் மனிதன் அதனை சாதாரணமாகப் பார்க்கிறான். அவர்களின் துன்பம் மனிதனுக்கு துன்பமாகத் தெரிவதில்லை. அதை அப்படியே இரத்த சம்பந்தம் உடைய உறவுகளோடு பொருத்திப்பார்க்க பழகிவிட்டால் அதுதான் ஞானத்தை நோக்கி செல்கின்ற பாதையாகும். அது எப்படி? சொந்த உறவுகளுக்கும், சொந்த நட்புகளுக்கும், பழகிய உறவுகளுக்கும் துன்பம் என்றால் பார்த்துக்கொண்டு இருப்பதா? என்றால் யாங்கள் அந்தப் பொருளில் கூறவில்லை. யாராக இருந்தாலும் துன்பம் வந்துவிட்டால் அதனை துடைக்கும் வழியை மேற்கொண்டிட வேண்டும். ஆனால் உள்ளத்தில் பாசமும், ஆசையும், அறியாமையும் வைத்துக்கொண்டு அதனை செய்யாமல் நடுநிலையோடு செய்யப்பழகினால் மனதிலே சோர்வில்லாமல் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கலாம். இந்தக் கருத்தை மனதிலே வைத்துக்கொண்டால் வாழ்வு நலமாகும், சுகமாகும், சாந்தியாகும்.

2 comments:

  1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete