​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 28 April 2017

சித்தன் அருள் - 657 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவன் அருளாலே, ஏதோ குறிப்பிட்ட ஒருவனை இறைவன் படைத்துவிட்டு, அஃதொப்ப அப்படி படைக்கப்பட்ட ஆணிலிருந்து ஒரு பெண்ணைப் படைத்தான், என்று ஒரு குறிப்பிட்ட மார்க்கத்தை சேர்ந்தவர்கள் சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அதற்காக அதை குறை கூறவும் நாங்கள் விரும்பவில்லை. எனவே நீக்கமற நிறைந்துள்ள இந்த பிரபஞ்சம், அண்ட, சராசரங்கள் எப்பொழுதுமே இருக்கின்றன. இங்கே ஆத்மாக்களும் எப்பொழுதுமே இருந்து கொண்டு இருக்கின்றன. இறைவன் எப்பொழுது இந்த உலகத்தைப் படைத்தான்? எப்படி படைத்தான்? என்று பார்க்கப் போனால், அதைப் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு அறிவாற்றலானது மனிதக் கூட்டுக்குள் இருக்கக்கூடிய ஆத்மாவிற்குக் கிடையாது. இந்த மனிதக் கூட்டுக்குள் இருக்கின்ற ஆத்மாவானது தன் உடலை மறந்து, தனக்குள் நீக்கமற நிறைந்துள்ள ஆத்மாவை புரிந்து கொண்டு, அந்த ஆத்மாவும், பரமாத்மாவும் ஒன்று என்று உணரும்பொழுதே, அந்த ஆத்மாவிற்கு மெல்ல, மெல்ல புலப்படத் துவங்கும். அதாவது பரந்துபட்டு ஓடுகின்ற ஒரு புண்ணிய நதி. அந்த நதியை சுட்டிக்காட்டி, அந்த அற்புதமான புண்ணிய நதியைப் பார்த்து ஒருவன் கேட்பான் “இது என்னப்பா?" என்று. இன்னொருவன் கூறுவான் ‘இது புண்ணிய நதி. இது கங்கை, இது காவிரி, இது சரஸ்வதி, இது யமுனை' என்று.  ‘ சரி ‘ என்று ஒரு செப்புக் கலசத்திலே அந்த நதி நீரை அள்ளி ‘இப்பொழுது இது என்ன ?' என்று கேட்டால், ‘இது கலச நீர்' என்பான். அந்த நதியிலே ஓடுகின்ற நீர்தான் கலசத்துள் வந்திருக்கிறது. ஆனால் நதியிலே இருக்கும்பொழுது அது கங்கை என்றும் காவிரி என்றும் பெயர் பெற்றது. இப்பொழுது அதே நீர் கலசத்திற்குள் வந்த பிறகு கலச நீர் என்றாகிவிட்டது. அந்த கலச நீரை நதியிலே மீண்டும் விட்டுவிட்டால், மீண்டும் அது நதி என்று பெயரை அடைந்துவிடுகிறது. இப்படியாக இந்த ஆத்மா, பரமாத்மா எனப்படும் நதியிலிருந்து பிரிக்கப்பட்டு இந்த உலகென்னும் கலசத்திற்குள் அடைக்கப்பட்டது. கலச நீர், ஜீவாத்மா என்று அழைக்கப்படுகிறது. மீண்டும் நதியோடு கலந்துவிட்டால் பரமாத்மா ஆகிவிடுகிறது. எனவே திடும்மென்று ஒரு நாள் ஒரு ஆணையோ, பெண்ணையோ, திடீரென்று இறைவன் படைத்து விடவில்லை. அதற்கு முன்பே தேவர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள் என்றெல்லாம் இருக்கிறது. அங்கே தவறு செய்பவர்களை அனுப்புவதற்கென்றே ஒரு சிறைக்கூடம் போல் ஒன்று செயல்பட்டபோது, இந்த பூமி படைக்கப்பட்டு, முதலில் மேலானவர்கள் செய்யக்கூடிய, அறியாமையிலே அல்லது அகங்காரத்திலே செய்யக்கூடிய குற்றங்களுக்காக அவர்களை பதவியிறக்கம் செய்வதற்காக மனித குலம் படைக்கப்பட்டது.  அந்த மனித குலம் மேலும், மேலும் விரிவடைந்து மீண்டும், மீண்டும் தவறுகள், மீண்டும், மீண்டும் பாவங்கள் என்று அடுக்கடுக்காக பிறவிகள் வந்து கொண்டே இருக்கிறது.

4 comments:

  1. ஈசனே போற்றி. அகத்திய மஹரிஷியே போற்றி.

    ReplyDelete
  2. பாவம் செய்த ஆத்மகளை தண்டிபதற்கு என்று படைக்கப்பட்ட எத்தனையோ சிறை கூடங்களில் இந்த பூமியும் ஒன்று , ஆனால் நாம் என்ன நினைத்து கொண்டிர்கிறோம் ???...!

    ReplyDelete
  3. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete
  4. அகத்தீஸ்வராய நமஹ...ஓம்! ஸ்ரீ அகத்திய மஹரிஷியே போற்றி.

    ReplyDelete