​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 29 December 2019

சித்தன் அருள் - 833 - 2020 பொதிகை பயணம் பற்றிய தகவல்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

2020 வருட பொதிகை பயணத்தை பற்றிய ஒரு தகவல் கிடைத்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

2020-ம் ஆண்டிற்கான பாபநாசம் மலையின் மீதுள்ள  பொதிகைமலை அகஸ்தியர் பயண முன்பதிவு ஜனவரி 8-ம்தேதி காலை 11  மணிக்கு kerala forest wildlife department இணையதளத்தில் தொடங்குகிறது! 
    
பொதிகை தென்காசி மாவட்டம் பாபநாசம் மலைக்கு மேலே முண்டந்துறை புலிகள் காப்பக அடர் வனத்திற்குள் 6350-அடி உயரத்தில் அமைந்துள்ளது
   
இந்த இடத்திற்கு தமிழ்நாடு வழியாக செல்ல முடியாது.. கேரளா வழியாகவே செல்ல முடியும்.
        
ஆர்வமுள்ளவர்கள் மேற்சொன்ன நாள் நேரத்தில் www.forest.kerala.gov.in என்ற இணையதளத்தில் டிக்கட் எடுக்கவும்! மொத்தம் 10 நிமிடங்களுக்குள் அனைத்து டிக்கட்களும் தீர்ந்துவிடும்! அக்கவுண்டில் பணம் உள்ள டெபிட் கார்டு, மற்றும் அதிவேக இன்டர்னெட் சென்டர் மூலம் முயலவும்! விண்ணப்பிக்கும் போது அனைவரின் அடையாள அட்டை எண் அவசியம். டிக்கட் கிடைத்துவிட்டால் பயணத்தின்போது அதே ஒரிஜினல் அடையாள அட்டை அவசியம்!
      
நபர் ஒருவருக்கு 1100 ரூபாய்!,  அதிகபட்சம் 10 பேர் கொண்ட குழுவாக முன்பதிவு செய்யலாம்! காலையிலேயே கேரள அரசின் வனத்துறை அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று  USERNAME & PASSWORD கிரியேட்டிவ் செய்து வைத்துக்கொள்ளவும்! வாய்ப்புகள் கிடைக்கலாம்!

அகத்தியர் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்!

சித்தன் அருள்.............. தொடரும்!

Thursday 26 December 2019

சித்தன் அருள் - 832 - 2020 வருட புத்தாண்டு வாழ்த்துக்களுடன் .....!



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப்பெருமானின் அருளால், பலவிதமான சூழ்நிலைகளை கடந்து புத்தாண்டை நோக்கி வந்துவிட்டோம்.

புது வருடம் ஒவ்வொருவருக்கும், நல்வாழ்வை தந்து, நல்விஷயங்களை செய்கிற வாய்ப்பை தந்து, அமைதியையும், ஆனந்தத்தையும், நம் குருநாதர் அருளால் வழங்கட்டும் என வேண்டிக்கொண்டு, "சித்தன் அருள்" சார்பாக 2020ஆம் ஆண்டின் நாட்காட்டியை உங்களுக்கு வழங்குகிறது.

தினம் பன்னிரெண்டு (12) முறை "பிராணாயாமம்" (இடமிருந்து வலம் 12, வலமிருந்து இடம் 12) சித்த மார்கத்தின் பாதைக்கு எளிதில் அழைத்து செல்லும் என அகத்தியரின் சித்த சாஸ்த்திரம் உரைக்கிறது. நாள்பட குரு வருவார், கைபிடித்து அழைத்து செல்வார் என்கிறது. விருப்பமுள்ளவர் முயற்சிக்கலாம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேதே அகத்தியர் திருவடிகளில் அனைத்தும் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..................... தொடரும்!



Thursday 19 December 2019

சித்தன் அருள் - 831 - அகத்தியப்பெருமான் அளித்த தகவல்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இந்த வருட தொடக்கத்தில், அகத்தியப் பெருமான் நாடியில் வந்து ஒரு முக்கிய செய்தியை நமக்காக உரைத்தார். அதை கீழ்கண்ட தொகுப்பில் அனைவரும் புரிந்து கொள்ளட்டும் என பதிவிடப்பட்டிருந்தது.


அன்று அகத்தியப் பெருமான் உரைத்த மிக கடுமையான கிரகநிலை இந்த மாதம் 25, 26, 27, 28 ஆகிய நாட்களில் வருகிறது. அமாவாசை, அதற்கடுத்தநாள் சூரிய கிரகணம், ஆறு கிரகங்கள் ஒருவீட்டிலும், ராகுவின் பார்வை அவைகள் மீதும் படுவது அத்தனை நல்ல நிகழ்வாக ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படவில்லை.

சமீபத்தில், ஒரு நாடியில் நம் குருநாதர், இந்த கிரகநிலை, எப்படிப்பட்ட நல் மனதையும், கெடுத்துவிடும் என்றார். இதிலிருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள, அந்த நான்கு நாட்களும், அதற்கு முன்னரும், கணபதியையும், ஆஞ்சநேயரையும் சிரத்தையுடன் வழிபட்டு வர வேண்டும் என்கிறார்.

மேலும் அந்த நான்கு நாட்களில், அகத்தியர் அருளிய, ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகத்தையும், இந்திராக்ஷி சிவ கவசத்தையும் வீட்டில் விளக்கேற்றி வைத்து, காலை, மாலை என இரு வேளையும் கூறவோ, கேட்கவோ செய்வது மிகுந்த பாதுகாப்பை, கவசத்தை ஒவ்வொருவருக்கும் உருவாக்கும் என கூறியுள்ளார்.

மேலும், குடிக்கும் நீரில், சிறிது தர்ப்பை புல்லை போட்டு வைத்து அருந்தி வந்தால், மனித மனது இந்த காலங்களில் அதிக சேதப்படாமல் தப்பிக்கும் என்ற அருளுரையையும் தந்துள்ளார்.

அகத்தியர் அடியவர்களே!

கிடைத்த தகவலை அப்படியே தெரிவித்துவிட்டேன். நடைமுறைப் படுத்தவேண்டியது, இனி உங்கள் கையில்.

அகத்தியர் காட்டிய வழியில் நடந்து சென்று, அவர் அருளை பெற்று, நலமுடன் வாழ, இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில், நமஸ்காரம்!

சித்தன் அருள்.............. தொடரும்!

Thursday 12 December 2019

சித்தன் அருள் - 830 - அகத்தியரின் அனந்தசயனம்!


"குபேரனுக்குற்ற தனத்தினும் மிகுத்து
கிடக்கு அம்பலத்தடியதினிலே"

என்ற அகத்தியர் நாடியின் வாக்கில், சிதம்பரம், சீர்காழி, தஞ்சை பெரிய கோவில், குற்றாலம், திருவண்ணாமலை, திருவரங்கம், திருவானைக்கா, ராமேஸ்வரம், திருவாரூர், பழனி, திருச்செந்தூர், அழகர் கோவில், மதுரை, போன்ற கோவில்களில் பாதுகாப்பாக இருக்கும் பொக்கிஷங்களை கணக்கிடவே முடியாது. சோமநாதர் கோவிலை 18 முறை அந்நியன் படையெடுத்ததே அங்குள்ள பொக்கிஷங்களை கவர்ந்து செல்லத்தான்.

பத்மநாப சுவாமி  சன்னதிக்கு முன் உள்ள ஒற்றைக்கால் மண்டபத்தில், மன்னரை தவிர வேறு யாரும் கீழே விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய அனுமதிப்பதில்லை. இந்த கோவிலின் ஆகம விதிப்படி, அப்படி செய்பவரின் அனைத்து சொத்தும் பத்மநாபருக்கு சென்று சேர்ந்துவிடும். ஆதலினால், அங்கு நமஸ்காரம் செய்கிற உரிமையை கோவிலை நிர்வகித்துவரும் அரசருக்கு மட்டும்தான் வழங்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு தனிப்பட்ட மனிதரின் எந்த பொருளும் அந்த மண்டபத்தில் கை தவறி விழுந்தால், அங்கிருக்கும் ஊழியரால், பறிமுதல் செய்யப்பட்டு, உடனேயே பத்மநாபரின் உண்டியலில் சேர்க்கப்படும்.

வருடத்தில் இருமுறை, ஐப்பசி, பங்குனி மாதங்களில் பத்து நாட்கள் உற்சவம் நடை பெரும். மாலையிலும், இரவிலும், கோவிலுக்குள் நான்கு முறை ப்ரதக்ஷிணமாக பத்மநாபர், நரசிம்மர், கிருஷ்ணர் ஆகிய இறை மூர்த்தங்கள் வித விதமான வாகனங்களில் எழுந்தருளுவார்கள். எட்டாவது நாள் "காணிக்கை" எனப்படும். முதலில் மன்னரும், அவர் குடும்பத்தாரும் தங்க குடத்தில் பத்மநாபாருக்கு காணிக்கை செலுத்துவார்கள். அதன் பின் யார் வேண்டுமானாலும், பத்மநாபாருக்கு காணிக்கை சமர்ப்பிக்கலாம். ஒன்பதாவது நாள் "வேட்டை"  என்கிற உற்சவம் நடை பெறும். பத்தாவது நாள், பத்மநாபர், நரசிம்மர், கிருஷ்ணர் ஆகிய இறை வடிவங்கள், பல்லக்கில் வைக்கப்பட்டு, தீர்த்தவாரிக்காக கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு அபிஷேகம் பூஜைகள்  செய்யப்படும். இதை "ஆராட்டு" என்பார்கள். ஸ்வாமிகளை, விமானநிலைய ஓடுபாதை வழியாகத்தான் பல்லக்கில் கொண்டு செல்வார்கள். உலகத்திலேயே, ஒரு கோவில் விசேஷத்துக்காக, விமான ஓடுபாதையை விட்டு கொடுத்து, ஸ்வாமியை எடுத்து செல்ல அனுமதிப்பது, அனந்தசயனத்தில் மட்டும்தான் நடக்கிறது. அன்றையதினம் மதியத்துக்குப்பின் விமானநிலையம், மூடப்படும், ஒரு விமானமும் ஏறவோ, இறங்கவோ அனுமதிக்கப்படாது.

ஆராட்டுக்கு மூன்று தெய்வங்களும் செல்வதை கண்டு பிரார்த்தனையை சமர்ப்பித்திட, அது உடனேயே நிறைவேறும். இதை அனுபவ பூர்வமாக உணர்ந்த அடியவர்கள், இறைவனை தரிசிக்க மறப்பதில்லை.

வேட்டை என்கிற ஒன்பதாவது நாள் நிகழ்ச்சியின் தொகுப்பை கீழே தருகிறேன்.


மூன்று தெய்வங்களும் விமான ஓடுபாதை வழி ஆராட்டுக்கு செல்கிற ஒரு தொகுப்பை கீழே தருகிறேன்.


முடிவுரை:-

பத்மநாபர் உலகின் முதல் செல்வந்தர் என்கிற செய்தி வெளியுலகுக்கு தெரிந்து போனபின், கோவிலை சுற்றியும், ஊரிலும் நிறையவே கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்துள்ளது. எங்கும் துப்பாக்கி ஏந்திய காவல். கோவிலுக்குள் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் யாரும் இருப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

பத்மநாபரை தரிசிக்க செல்பவர்கள், அவரை மட்டும் மனதுள் அமர்த்தி, அதுவே அவாவாக இருக்க செல்வதே நல்லது. அந்த நிதி எங்கிருக்கிறது, அந்த அறையின் கதவு எங்கு தொடங்குகிறது என்கிற எண்ணங்கள், ஒவ்வொருவருக்கும் தோஷங்களைத்தான் உருவாக்கும், என்கிறார் அகத்தியப்பெருமான். அங்கிருக்கும் "பொருள்" யாருக்கோ சொந்தம். அதை காப்பாற்ற வேண்டியது, அகத்தியப்பெருமானின்  வேலை என்றிருந்துவிடுங்கள்.

அகத்தியர் அடியவர்களான ஒவ்வொருவரின் கவனமும், எண்ணமும், இறையிடம், அகத்தியப்பெருமானிடம் (அவரின் ஆத்ம சொரூபத்தின் சமாதியில்) மட்டும் இருக்க வேண்டும் என்பதே, இந்த தொகுப்பின் நோக்கம்.

அகத்தியரின் அனந்தசயனம் தொடர் இத்துடன் நிறைவு பெற்றது! 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.................. தொடரும்!

Thursday 5 December 2019

சித்தன் அருள் - 829 - அகத்தியரின் அனந்தசயனம்!


இறையை சார்ந்திருக்கும் தேசம் நிச்சயம் வளர்ச்சியுறும் என்பதறிந்த நவகிரகங்கள், கெட்ட சக்திகள் வழி தங்கள் ஆட்சியை நிலை நிறுத்த முயற்சிக்கும், வளர விடாமல் தடுக்கும், என்பதே கலியுக விதி.

கலியுக தொடக்கத்தில், நவகிரகங்களுக்கு ஆட்சி செய்ய அனுமதி கொடுத்து, அவர்கள் ஆட்சி எல்லை மீறி செல்லவே, அனைத்து ஜீவராசிகளுக்கும் ஊரு விளைவிக்கவே, சித்தர் இடைக்காடரை வைத்து, நவகிரகங்கள் ஒருவருக்கொருவர் முகம் பார்க்க விடாமல் செய்து, பூமியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ஒரு அனுபவமே, இறைவனை பல தீர்மானங்களை எடுக்க வைத்தது என்பர். நவகிரகங்களின் ஆட்சி உச்சகட்டத்துக்கு சென்று விடாமல் தடுக்கவே, கோவில்களில் அவர்களுக்கு சன்னதி அமைத்துப் பூசை நடக்கிறது. இறைவன் சார்பாக நடக்க வேண்டுமென்பதே தாத்பர்யம். 

மனிதனுக்கான அறிவுரையில், "கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்" என மூத்தோர்கள் சொல்லிப்போனதின் உள் அர்த்தமே, மனிதன், நவகிரகங்களால் அதிகமாக பாதிக்கப்படாமல், தன் உண்மை நிலையை உணர்ந்து, இறைவனில் லயித்து வாழ வேண்டும் என்கிற அர்தத்தில் தான்.

ஒரு சாளிகிராமம் வீட்டில் இருந்தால், அதற்கு நித்ய பூசை செய்ய வேண்டும். அது கண்டகி நதியில் விளைவது. நாராயண ஸ்வரூபம். நாராயணரின் பல ரூபங்கள் அவைகளுக்குள் இருக்கும். அப்படிப்பட்ட சாளிக்ராமத்தை நித்ய பூசை செய்யாவிடில், அந்த வீட்டில் குடியிருக்கும் அத்தனை குடும்பத்தையும் பாடாய் படுத்திவிடும். 

இப்படிப்பட்ட 12000 சாளிக்ராமங்களை தருவித்த அகத்தியர், 10008 சாளிக்ராமங்களை வைத்து பத்மனாபாரின் திருமேனியை உருவாக்கியுள்ளார். மீதியை வைத்து மஹாலக்ஷ்மி தாயாரையும், பிரம்மாவையும், ஆதிசேஷனையும் உருவமைத்து, 9000 மூலிகைகளை கொண்டு "கட்டு சக்கர யோகம்" என்கிற மூலிகை மருந்தினால் பத்மநாபரின் திருமேனிக்கு மூலிகை பூச்சை உருவாக்கினார். ஆதலினால், பத்மநாபர் திருமேனிக்கு அபிஷேகம் கிடையாது. மூலவருக்கு அர்ச்சிக்கப்படும் பூக்களை, மயிலிறகினால் அகற்றுவார்கள்.

அத்தனை சாளிக்ராமங்களும் ஒரே இடத்தில் இருந்து, மிக பலமான ஆளுமைசக்தியை உருவாக்கியது. பாரத கண்டத்துக்கு மிக உயர்ந்த அரண் உருவாகியது. யாரும் பத்மநாபாருக்கு அருகில் செல்லவே முடியாமல் போயிற்று. அவரை தரிசனம் செய்து, பூசை செய்ய விரும்பிய திவாகர முனிவரின் வேண்டுதலுக்கிணங்கி இறைவன் தற்போதுள்ள திருமேனியின் உருவத்துக்கு தன்னை சுருக்கிக் கொண்டார். அப்படி சுருக்கிக் கொண்டும், இறைவனின் தேஜஸ் தாங்கமுடியாத அளவுக்கு இருந்ததால், திவாகர முனிவரே மறுபடியும் வேண்டிக் கொள்ள, இறைவன், நான்கு வேதங்களை அழைத்து தன்முன்னே சுவராக நிற்கச்செய்து, மூன்று வாசல்களை உருவாக்கி, அவரை மூன்று வாசல் வழி, சிரம்-கரம், நாபி, பாதம் என தன்னை தரிசனம் செய்தால் போதும் என அருள் செய்தார்.  பத்மநாபரை முழுமையாக தரிசிக்கும் சக்தியை முனிவர்களே பெறவில்லை என்பதே உண்மை.

பெருமாளின் வலது கரமாக விளங்குபவர், நம் குருநாதர் அகத்தியப்பெருமான் என்பதை நாம் அறிவோம். அப்படிப்பட்ட அகத்தியப்பெருமானுக்கு, இறைவனுக்கு திருமேனியை செய்து சன்னதியை அமைத்து, தன் சித்த சமாதியை உருவாக்குகிற பாக்கியத்தை இறைவன் கொடுத்தார் என்றால், ராமபக்த ஆஞ்சநேயர் மேலும் ஒரு பெருமையை கொடுத்தார்.

கிழக்கு வாசல் வழி பத்மனாபாரை தரிசனம் செய்ய வந்தால் கொடிமரத்துக்கு அருகில் ஆஞ்சநேயர் சன்னதி இருப்பதை காணலாம். அவர் வெண்ணை சார்த்தப்பட்டு, கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருப்பார். அனைவரும் தரிசிக்கலாம், ஆயின் அனுமனின் பாதத்தை காண முடியாது. ஏன் எனில், அனுமனின் பாதங்கள் இருப்பது, அகத்தியப்பெருமானின் தோள்களில்.

தவக்கோலத்தில் இருந்த ஆஞ்சநேயர், அனைத்து தேவர்களும், முனிவர்களும், இறைமூர்த்தங்களும், சித்தர்களும், நாரயணரின் பத்மநாபர் அவதாரத்தை கண்டு மகிழ்வதாக கேள்வியுற்று, தானும் அனந்தன் காட்டிற்கு எழுந்தருளினாராம். வெகு தூரத்தில் நிற்பதை தவிர, வேறு வழியில்லை என்ற நிலை நிலவியது அனந்தன் காட்டில். அத்தனை உயர் ஆத்மாக்களும் சூழ்ந்து நின்று பத்மனாபரின் அருளை பெற்றுக் கொண்டிருந்ததினால், ஆஞ்சநேயருக்கு பத்மநாபரின் திருப்பாத தரிசனம் கூட கிடைக்கவில்லை. மிகுந்த வருத்தமுற்ற ஆஞ்சநேயரின் மனநிலையறிந்த பெருமாள், அகத்தியரை நோக்கி கண் அசைக்க, அவரும் அனுமனை கண்டார்.

"வாருங்கள் ராமதூதனே! நாங்கள் அனைவரும் பத்மனாபரின் திருமேனியை கண்டு மனம் மகிழ்ந்துள்ளோம்! தாங்களும் வந்து இறையருளை பெற்றுக்கொள்ளுங்கள்" என்றார்.

"நன்றி! அகத்தியரே! இருப்பினும் இங்கு இருக்கும் கூட்டத்தை பார்த்தால், அடியேனுக்கு அவர் தரிசனம் கிடைக்குமா என்று சந்தேகமாக உள்ளது. பத்மநாபரின் திருப்பாத தரிசனம் மட்டும் கிடைத்தால் போதும். ஆனால், அத்தனை பேரும் அவர் முன் நின்று மறைப்பதால் ஒன்றுமே தெரியவில்லை!" என்றார் ஆஞ்சநேயர்.

"அடடா! தாங்களுக்கு பத்மநாபரின் தரிசனம் தானே வேண்டும்! இதோ, அடியேன் தோள்களில், தங்கள் திருப்பாதம் பதித்து ஏறி நின்று, அவரின் தரிசனத்தை பெற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறி அவர் முன் நின்றார்.

அனுமனும் பத்மநாபரை, அகத்தியப்பெருமானின் தோள்களில் ஏறி நின்று தரிசித்துவிட்டு, மன நிறைவுடன், அகத்தியப்பெருமானை, அவரின் சேவைக்கு பாராட்டி ஆசிர்வதித்து சென்றார் என்பதை சுட்டும் விதமாக, அந்த ஆஞ்சநேயர் திருப்பாதத்தில் அகத்தியர் தோள்கள் இருப்பதாக வடிவமைத்துள்ளனர். ஆனால், அனுமன் திருப்பாதத்தை காண்பதே மிக அரிது என்கிற நிலையில் தான் இன்றைய சூழ்நிலை. அப்படியிருக்க, அகத்தியரை எங்கு பார்க்க!

சித்தன் அருள்.................. தொடரும்!