​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 12 July 2014

சித்தன் அருள் - 183 - சிவபெருமான் வாக்கு - நானே அவன் !

குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வரா 
குரு சாக்ஷாத் பரபிரம்ம தஸ்மை ஸ்ரீ அகஸ்திய சித்த குரவே நமஹ!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்று குரு பூர்ணிமா. அகத்தியப் பெருமானை குருவாக மனதில் வரித்துக் கொண்டு, செயல் பட்டு வரும் நமக்கு, இன்று அவருக்கு நமஸ்காரங்களை தெரிவிக்கும் விதமாக, உங்களுக்கு ஒரு தொகுப்பை சமர்ப்பிக்கலாம் என்று ஒரு அவா. கீழே தருகிற தகவல் எனக்கே புதிது. இப்போதுதான் அறிந்தேன். உடனேயே, குரு பூர்ணிமாவும் வந்துவிட்டது.

ஸ்ரீ அகத்தியர் பெருமானின் திருஅவதார சரிதம் உள்ளத்தை தொடும் ஓர் அரிய காவியமாகும். இறைவனின் சிருஷ்டி காலத்தை கணிக்க இயலாது.  கோடி கோடி யுகங்கள் தோன்றித் தோன்றி மறைய கோடிக்கணக்கான அகத்திய சித்தர்களும் தோன்றி, நிறைந்தனர்.  பரம்பொருளான, ஆதிசிவனின் திருகைலாயத்தில் என்றும் வாழும் சிவனின் அம்சமாம் ஆதிமூல ஸ்ரீ அகத்தியர், சரித்திரமே படைத்தவர். அகத்தியப் பெருமான் என்றும் சதாசிவனின் சித்தத்தில் திளைப்பவர், பரம்பொருள் போல நித்யத்வம் உடையவர்.

இறைவனின், உலக சிருஷ்டியில் மீன்கள், பறவைகள், கடல் தாவரங்களின் படைப்பிற்கு அடுத்து வர வேண்டுவன, ஐந்தறிவு படைத்த விலங்கினங்கள்.  அவைகளை படைக்கும் முன் அவைகளுக்கு வேண்டிய உணவைப் படைக்க வேண்டுமல்லவா? அதற்காக தாவரங்களை படைக்க பரமசிவனார் உளம் கனிந்தார்.

அப்போது அங்கே ஒரு அற்புதமான தேவி தோன்றினாள். தன்னை வணங்கி நின்ற தேவியை "ஆஷா சுவாசினி" என்றழைத்த பரமசிவன் "தாவரங்களை பூ உலகில் படைப்பாய்" என ஆணையிட்டார்.  அவளும் பரம்பொருளை பணிந்து, இட்ட பணியை தொடங்கினாள்.

கோடி கோடியாம் விலங்கினங்கட்களுக்கும், ஏன் மனிதர்களுக்கும் கூடத் தாவரங்கள் தானே ஜீவசக்தியை தரும் உணவாகின்றது.  எனவே முதல் தாவரத்தை ஓர் அற்புதமான தெய்வீகப் படைப்பாக்கத் தீர்மானித்தாள் ஆஷாஸுவாசினி தேவி. இறைவன் நினைத்ததும் அது தான்.

அனைத்து லோகங்களிலும், மகரிஷிகள் மற்றும் தேவர்கள், கந்தர்வர்கள் இடையே மலர்ந்த நல்லெண்ணங்களை திரட்டினாள் தேவி. பரிசுத்தத்திற்கு இலக்கணமாகத் திகழும் மகரிஷிகள், தேவர்கள், கந்தர்வர்கள், என்றும் இறைத் தவம் புரியும் இறை அடியார்கள் ஆகியோரின் நல்லெண்ணங்களில் இருந்து ஒரு புனிதமான நல்எண்ணத்தை தேவி வடித்து எடுத்தாள் என்றால் அந்தப் புனிதமான எண்ணத்தின் மகத்துவத்தை என்னென்று சொல்வது?

ஆஷாஸுவாசினி தேவி ஹரியையும் சிவனையும் தொழுது, "ஹரிஹர ரூபர்களே, தங்களுடைய ஒப்பில்லா இறைசக்தியை அடியேன் பகுத்து, வடித்துள்ள இந்த நல்ல எண்ணத்தின் மூலக் கருவாய் அமைத்து, அரியும் , சிவனும் சேர்ந்த "அரிசியாய்" மாற அருள் பாலிப்பீர்களாக" என்று பிரார்த்திக்க, ஹரிஹர ரூபனும் அவ்வாறே அருளினார்.

அன்று முதல் அரியும் சிவனும் சேர்ந்ததே அரிசியாயிற்று.  தேவி, இயற்கை மாற்றங்களில் இருந்து அரிசியை காப்பாற்ற, அடுத்த ஒரு பரிசுத்த எண்ணத்தை கொண்டு உறையாக அமைக்க, உமி மூடிய அரிசியே முதல் தாவரமாக ஆகியது.

தேவியின் அற்புதமான பணி தொடர்கிறது.

ஹரிஹரனின் தெய்வீக அம்சத்தால் புனித எண்ணத்துடன் உருப்பெற்ற நெல் (அரிசி) மணியைப் பன்மடங்காக்கி ஏனைய நிலத்தாவரங்களையும் சிருஷ்டிக்க வேண்டுமே! எனவே, தேவி "யார் ஒருவர் சிரசு முதல் பாதம் வரை புனிதமான நல் எண்ணங்களை உடையவரோ, அவர் இந்த நெல் மணியை தன் கையில் தாங்கி பிரார்த்தித்தால் இந்த நெல் மணி விருத்தியாகும். அத்தகையவர் முன் வாருங்கள்" என்றாள்.

இந்த அழைப்பின் உட்பொருளை உணர்ந்த பலர் மௌனமாயினர்.  இறைவனின் லீலை அன்றோ! தகுதி பெற்றிருந்தும், யாரும் முன் வராததால், தேவி யோசித்தாள்.

உடனே சிவனை வணங்கி, "சிரசு முதல் பாதம் வரை புனிதமே பூத்துக் குலுங்கும் என் மகன் அகத்தியனை அழைக்கிறேன்! அவனால் இந்த நற்காரியம் செவ்வனவே முடியும்" என்றாள். எம்பெருமானும் அனுமதியளிக்க, 

அகத்தினுள் இருந்து அழகாய் ஆர்பவித்து 
எழுந்து நின்ற எண்ணிலா ஈசர்க்கும் பட்டம் சூட்டி 
எண்ணத்தில் கலந்து எண்ணத்தை சுத்தமாக்கி
அத்தனை சுத்தமும் அற்புதமாய் தேர்ந்தெடுத்த 
என் மகனே அகத்தியா! வா!

என்று தேவி அழைக்க, விண்ணுக்கும், மண்ணுக்கும் விரிந்த மாபெரும் விஸ்வரூபியாய் ஸ்ரீ அகஸ்தியர், தேஜோமயமாய், ஒளிப்பிழம்பாய், கோடி கோடியாம் ஆயிரம் ஆதவர்களின் அருட்ப்ரகாசத்துடன் அங்கே எழுந்தருளினார்.

ஸ்ரீ அகத்தியப் பெருமானின் அருட் கரத்தில் அவர் அன்னை ஆஷா ஸுவாசினி தேவி அற்புத நெல் மணியை வைத்திட, அது சங்கர நாராயண மணியாய் ஒளி வீசியது. ஸ்ரீ அகத்தியரின் திருக்கரத்தில் தவழ்ந்த நெல் மணி, இமைக்கும் நேரத்தில் பல்கிப் பெருகி, கோடி கோடி நெல் மணிகளாய், விண்ணிற்கும், மண்ணிற்கும் இடையே பல கோடி இமயமலைகளை நிகர்த்தார் போல் குவிந்தது.

பரம்பொருளான சதாசிவன் நகைத்தான். "பார்த்தீர்களா இந்த அற்புதத்தை. இந்த அகத்தியன் என்னிடமிருந்து உதித்தவனே! அவன் என் பூர்ணாம்ச அவதார மூர்த்தியே! என் பாகத்திலிருந்து பிரிந்த சித்தர்குல நாயகனாய், நான் உங்களுக்கு அளிக்கும் பரிசு, இந்த அகத்தியன். நானே அவன்" என்று அருளினார்.

நெல் மணிகளை மலைகள் என குவித்த ஸ்ரீ அகத்தியரின் திருக்கரங்கள், கோடிக்கணக்கான தாவரங்களின் வித்துக்களையும் உற்பவிக்க, உலகத்தில் முதல் தாவர சஞ்சாரம் அங்கே தொடங்கலாயிற்று. எனவே உலகின் அனைத்து தாவரங்களுக்கும் அம்மை, அப்பன் ஸ்ரீ அகத்தியரே. மூலிகை தாவரங்களின் மூலக்கரு ஸ்ரீ அகத்தியரே! எனவே தான் இன்றைக்கும் எந்த மூலிகையும் அகத்தியரை கண்டால், நமஸ்கரித்து தன் இனம், பெயர், பொருள், பயன் சொல்லி தலை வணங்கும்.

எனவே, "ஓம் அகத்தீசாய நமகா"  என்று வணங்கி எந்த தாவரத்தையும் பயன்படுத்திடில் அதன் பூரண சக்தியை நாம் பெறலாம். இது சுபிட்சத்தை அளிக்கும்.

பின் குறிப்பு:- இன்றைய குரு பூர்ணிமா புண்ணிய தினத்தில், உங்கள் குருவை நினைத்து நீங்கள் என்ன புண்ணியம் செய்யப் போகிறீர்கள்? ஏதேனும் ஒரு நல்ல செயலை, அவரை நினைத்து செய்யுங்கள். அது போதும் குரு தட்சிணையாக!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகதீசாய நமக!
சித்தன் அருள் .................. தொடரும்.

8 comments:

  1. Om Sri lopamutra samedha agatheesaya namaha

    ReplyDelete
  2. Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. இந்த அழைப்பின் உட்பொருளை உணர்ந்த பலர் மௌனமாயினர். இறைவனின் லீலை அன்றோ! தகுதி பெற்றிருந்தும், யாரும் முன் வராததால், தேவி யோசித்தாள்.

    Why no one came forward, when Lord Shiva called them?

    ReplyDelete
  5. அங்கிருந்த சித்தர்களும், முனிவர்களும் தங்கள் நிலையை, தகுதியை உணர்ந்தவர்கள். இறைவன் அளவுக்கு சுத்தத்தில் நாம் நிகரானவர் இல்லை இன்னும் பல நிலைகளை கடக்கவேண்டியுள்ளது என்று புரிந்தவர்கள். அதனால் தான்.

    ReplyDelete
  6. ஆதாரம் இல்லாத செய்தி.கும்பத்தில் பிறந்ததால் கும்பமுனி என்று தனக்கு பெயர் வந்தது என்று பல நூல்களில் அவரே கூறி உள்ளார்.அகத்தியர் பரிபூரனத்தில் கும்பமுனியான விளக்கம் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரை 1001- குருமகா சந்நிதானம் “ ஸ்ரீ வெங்கடராம சுவாமிகளது..., ஸ்ரீஅகஸ்திய விஜயம் மாத இதழில் வந்தது.. மேற்கண்ட விஷியம்..,

      மேலும் அகஸ்திய மகாத்மியம் என்ற கட்டுரை கூட சில ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் வந்தது..., [மகா திவ்ய கட்டுரை]

      ஸ்ரீஅகஸ்திய விஜயம் மாத இதழ் 1993முதல் வந்துகொண்டிருக்கிறது..., இதுவரை ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வெளி வந்துள்ளன , வரவுள்ளன..., ஆஸ்ரமம் திருஅண்ணாமலையில் உள்ளது..., மாதம் பௌர்னமி தோறும் ஆயிரக்கணகானோர்க்கு அன்னதானம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது....,

      மஹா மகா திவ்யமானது.... ஸ்ரீஅகஸ்திய விஜயம் மாத இதழ் ...,

      இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் ஏதேற்ச்சியான படிக்க நேரிட்டது...., அனனத்து புத்தகங்களையும் வாங்கி படித்துக்கொண்டிருக்கிறேன்....,
      படித்ததில் சில விஷியங்களை வலைப்பூவில் பதிந்துள்ளேன் ...., http://pulipanisithar.blogspot.in/ check out label “ஸ்ரீஅகஸ்திய விஜயம்”

      தெய்வத் தமிழ் எழுத்திக்களின் முதலும் , கடையுமான ‘அ’வும் , ‘ன்’னும் – ‘அ’கத்திய’ன்’ – எனும் ஆதிமுதல் தெய்வத் தமிழ்த் தொண்டனுக்குள் , அதே முதலும் , கடையுமாய் அடக்கம் . தெய்வத் தமிழின்றி அகத்தியன் இல்லை ., அகத்தியன் இன்றி தெய்வத் தமிழ்ஞானப் பரிபூரணமும் இல்லை
      --- ஸ்ரீ அகஸ்திய விஜயம் [டிசம்பர் 2010 ] ஸ்ரீஅகஸ்திய விஜய புத்தக முகவரிகள் : - http://www.agasthiar.org/store.htm

      Delete