​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 3 November 2023

சித்தன் அருள் - 1491- ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம், திருச்சுனை, கருங்காலக்குடி, மதுரை!





[அகத்தியப்பெருமான் அமர்ந்து தவம் செய்த பாறை]




[அகத்தியரும் போகரும்]

[ அகஸ்தியர் அருளிய திருச்சுனை]


[திருச்சுனை ஆலய முகப்பு]

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

[தொகுப்பு 1490ஐ, அகத்தியப்பெருமானின் உத்தரவின் பேரில், மூன்று நாட்கள் உங்கள் அனைவர் கண்ணில் படும்படி வைக்கச்சொன்னதால், வேறு ஏதும் தொகுப்பை போடவில்லை. அதில் காவேரி துலா ஸ்னானம் என்பதே அவரது முக்கிய உத்தரவு. முடிந்தவரை அனைவரும் காவேரியில் இந்த ஐப்பசி மாதம் ஸ்நானம் செய்து விடுங்கள். ஒருவரும் (என் சேய்கள்) யாம் சொல்வதை கேட்பதில்லை எனவும் வருத்தப்படுகிறார். தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.}

31/10/2023, செவ்வாய் கிழமை அன்று உறவினர்களுடன் மதுரையில் (திருச்சுனையில்) உறையும் ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று இறைவனையும், அம்பாளையும், குறிப்பாக நம் குருநாதர் அகத்தியப்பெருமானையும் தரிசிக்கிற பாக்கியம் கிடைத்தது. உங்கள் அனைவருடன் இந்த கோவிலை பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.

இரு தினங்களாக "திருச்சுனை" என்கிற வாக்கு பலமுறை அடியேனை சுற்றி சுற்றி வந்தது. இது எங்கிருக்கிறது என்று கூட தெரியாது. கோடகநல்லூர் அந்த நாள் இந்தவருடம் அகத்தியப்பெருமானின் பூசை முடிந்தபின் ஏதோ ஒரு உணர்வால் உந்தப்பட்டு மதுரை வந்து சேர்ந்தேன். வந்ததும், அகத்தியப்பெருமானுக்கு நன்றி கூறிட, பசுமலை அகத்தியர் கோவிலுக்கு சென்று நன்றியை உரைத்து, அவர் அருள் பெற்று, வேறெங்கேனும் செல்லலாம் என நினைத்த பொழுது, இந்த திருச்சுனை வார்த்தை குருவே கூறியது போல் சுற்றி சுற்றி வந்தது. சரி! இங்கு தான் எங்கோ இருக்கிறது என நினைத்து, கண்டுபிடித்து உறவினர்களுடன் புறப்பட்டு சென்றேன்.

மனதை மயக்கும் சூழ்நிலை கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. மதுரையிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு 500 அடி உயர சிறு பாறை குன்றின் மேல் அமைந்திருந்தது, கோவில். அகத்தியப்பெருமான்  தவமிருந்த பாறையும், நித்ய பூசைக்காக அவர் உருவாக்கிய தீர்த்தமும், அருமையான சூழ்நிலையை உருவாக்கியது.

இறைவன் பெயர் :ஸ்ரீ அகத்தீஸ்வரர், இறைவி ஸ்ரீ பாடகவள்ளி அம்பிகா. ஒவ்வொருவர் தனித்தனி சன்னதி என, நால்வர்கள், தக்ஷிணாமூர்த்தி. துர்கை, சண்டிகேஸ்வரர், கணபதி, முருகர் வள்ளி தெய்வயானை, அகத்தியரும் போகரும், வித்யாசமான கால பைரவர் கையில் பிட்சை பாத்திரத்துடன், நவகிரகங்கள் கொடி மரத்துக்கு வெளியில். கிழக்கு நோக்கிய இறைவன் சன்னதி. மிகுந்த அமைதியும், உள்ளே புகுந்து அனைவருக்கும் பூசை செய்யும் வாயு பகவானும், அனைத்து எண்ணங்களையும் மனதில் நின்று அழித்து, அவர் பாதத்தில் பிடித்து நிறுத்தும் அகத்தீஸ்வரர் சன்னதியும். குன்று கோவிலை அடைய கீழிருந்தே மிக அகலமான, நீளமான படிகள். எப்படிப்பட்டவரும் நிதானமாக எளிதில் ஏறி விட முடிகிற தூரத்தில் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலின் பின்புறமாக அகத்தியர் அமர்ந்து தவம் செய்த பாறையும், அவர் உருவாக்கிய சுனையும் உள்ளது. அருமையான தீர்த்தம். அகத்தியப்பெருமான் உருவாக்கிய இந்த சுனை நீரில் அனைத்து மூலிகைகளும் கலந்திருப்பதாக கூறுகிறார்கள். கோவிலில் அபிஷேகத்துக்கும், நிவேதனத்திற்கும் இந்த நீரைத்தான் உபயோகிக்கிறார்கள். சொட்டு நீரை எடுத்து பருகிப் பார்த்தேன். அருமை, அற்புதம் என்றே கூறத் தோன்றியது. முதல் நான்கு படிகள் வரை நீரில் காண முடியும். அதன் பின் ஒன்றும் தெரியாது. விசாரித்த பொழுது ஒரு வளர்ந்த யானையே இறங்கி காணாமல் போய்விட்ட ஆழம் என்றார்கள். பாறையும், பல ஆண்டுகள் பழகியதானதால், ரொம்பவே வழுக்குகிறது. நீச்சல் தெரிந்தால் நல்லது. சுனை முழுவதும், தாமரை பூ இலையும், வெள்ளை தாமரைப் பூவும் நிறைய அளவுக்கு நீரை மறைத்துள்ளது.

அகத்தியப்பெருமான் இறைவன் முன் ஏகாந்தமாக த்யானத்தில் அமர்ந்து இருந்துள்ளார் என்பது தெளிவாகிறது.

இரு வாரங்களுக்கு முன்தான் (20/10/2023) கோவில் கும்பாபிஷேகம் நடை பெற்றுள்ளது.  48 நாட்களுக்குள் இறைவனை தரிசித்தால் கும்பாபிஷேகம் பார்த்த பலன் கிடைக்கும் என பெரியவர்கள் கூறுவார்கள்.

சுனையை பற்றி உணர வேண்டுமானால், அதன் கரையில் அமர்ந்து மௌனம் கடைபிடிக்க வேண்டும். சுனை நிறைந்த இலைகளும், பூக்களும், நீரின் மருத்துவ பச்சை வாசனை, சுற்றி சுற்றி குளிர்ச்சியை பரப்பிய காற்று அனைத்தும் மனதை ஒன்றுபட செய்தது. ஆம் நம் குருநாதர் அமர்ந்த இடம் அருகில் இருக்கிறது என்றறியாமல். தியானத்தில், "எதற்காக இங்கு வரச்சொன்னீர்கள்" என்று அவரிடம் கேட்டேன்.

"சாமி! நான் உங்கள பார்த்திருக்கேனே! எப்ப வந்தீங்க?" என்று கேட்டபடி ஒரு வயதான அம்மா என் தியானத்தை கலைத்தார்கள். எங்கேயோ கேட்ட குரல், பார்த்த முகம்! உடனடியாக ஞாபகத்துக்கு வரவில்லை. ஒரு நொடியில், இந்த குரலை கேட்ட சூழ்நிலை என் கண் முன் விரிந்தது. மதுரையில், ஒரு அடியவர் வீட்டில் திரு ஜானகிராமன் அவர்கள் நாடி வாசிக்க, ஒரு மூலையில் அடியேன், சுற்றிலும் கேள்வி கேட்ட படி அடியவர்கள். அங்கு இந்த அம்மா வந்த உடனேயே அகத்தியப்பெருமானின் வாக்குரைத்தல், இவரை நோக்கி திரும்பியது. அப்பொழுது இவர் யார் என்பது அடியேனுக்கு தெரியாது. ஆனால், அகத்தியப்பெருமான் இவருக்கு கொடுத்த முக்கியத்துவத்தையும், இவரை ஆசிர்வதித்ததையும், அங்கிருந்த அனைவரிடமும் "உங்களால், உங்களிடம் இருக்கும் சிறிதளவு செல்வத்தையேனும் இவருக்கு கொடுங்கள்!!" என்றதையும், குழுமியிருந்த அடியவர்கள் அனைவரும், இது ஒரு மிகப்பெரும் பேறு என நினைத்து பங்குபெற்றதையும், "இது போதுமா? இன்னும் வேண்டுமா?" என்ற அகத்தியப்பெருமானையும்.......

அடியேனின் மனக்கண் முன் காட்டினார். கண்ட காட்சியினால் ஒரு நிமிடத்தில் உடல் முழுவதும் சிலிர்த்தது!

"அட! உங்களை அன்று அகத்தியப்பெருமான் ஜீவநாடி வாசித்த இடத்தில் சந்தித்தேனே" என்றேன்.

அவர்களும் "ஆமாம்! சாமி!" என்றார்.

ஏதோ யோசித்தவர், அமர்ந்திருந்த அடியேனை சுற்றி வந்து நீருக்குள் இறங்கி நின்று "பாட்டில் இருந்தால் கொடுங்கள், நீரை எடுத்து தருகிறேன்! இது மூலிகை தீர்த்தம், இதுதான் ஸ்வாமி அபிஷேகத்துக்கும், அன்னத்துக்கும் உபயோகிக்கிறார்கள். இந்த சுனை வற்றாதது, இந்த ஊருக்கே நீர் அருள்வதே இந்த சுனைதான். இங்கு வந்து ஊர்க்காரர்கள் எடுத்து செல்வார்கள்!" என்றார்.

ஒரு பாட்டில் நிறைய சுனை நீரை எடுத்து தந்தவர், அங்கிருந்த அனைவர் மீதும் சுனை நீரை வாரி இரைத்தார்.

"வேறு! மாற்று உடை எதுவும் எடுத்து வரவில்லை அம்மா! போதும் என்ற பொழுது!" 

நீங்கள் கிளம்பி செல்லும் முன் உலர்ந்துவிடும். வாருங்கள், அன்னம் அருந்திவிட்டு செல்லலாம் என்றழைத்தார்.

என்னது அன்னமா? அப்போ நீங்கள் இங்குதான் வருபவர்களுக்கு அன்னம் கொடுக்கிறீர்களா? என்றேன்.

ஆமாம் சாமி! என்றவர், இன்று அரிசி, காய்கறி வாங்கக்கூட காசு இல்லாமல் இருந்தது. சற்றுமுன் ஒருவர் வாங்கி தந்துவிட்டு சென்றார், குருவருளால். ஆகவே, நீங்கள் அனைவரும் வந்திருந்து உணவருந்திவிட்டு செல்லுங்கள் என்றார். 

முதலில், எங்களுக்கான உணவை வேறு யாருக்கேனும் கொடுகொடுங்கள் நாங்கள் வீட்டிற்கு போகும் வழியில் உணவருந்திக் கொள்கிறோம் என்று மறுத்தோம். மலைமேல் அமைத்துள்ள அன்னதான கூடத்தில் உள்ளே சென்று பார்த்தபொழுது, குரு வள்ளலார் தீபம் ஏற்றிவைக்கப்பட்டு எரிந்து கொண்டிருந்தது. அவரை வணங்கிவிட்டு, பிரசாதமாக சிறிது உணவை உட்கொண்டோம்.  அருமையான, அற்புதமான உணவு. இன்னும் நிறைய பேருக்கு உணவளியுங்கள் என கூறி எங்கள் அனைவரின் பங்களிப்பாக ஒரு சிறு தொகையை அளித்தோம்.

அந்த அம்மாவின் பெயர். திருமதி பாண்டியம்மாள். இவரை  போன்ற அகத்தியர் அருள், கனிவு பெற்ற ஒருவர் செய்கிற அன்ன சேவைக்கு உதவுவது மிகப்பெரிய புண்ணியம். நம் ஒவ்வொருவரின் குடும்பத்திலும் நடை பெரும் ஒவ்வொரு நல்ல நிகழ்ச்சியின் பொழுதும் ஒரு சிறு தொகையை அனுப்பி வைத்தால், அவர் அன்னம் பாலித்துவிடுவார்.

உங்கள் வாழ்வில் ஒரு முறையாவது இந்த கோவிலை தரிசித்து உணர்ந்து இறையருள், குருவருள் பெற்று வாருங்கள். உதாரணத்திற்கு, சிறிது உணவை அருந்தி குன்றி மேலிருந்து இறங்கி வரும் வழியில், நல்ல காற்று வீச, ஆனந்தமாக ஒரு மரத்தடியில் அமர்ந்து உறங்கிப்போனேன். அவ்வளவு சுகமாக, அம்மை அப்பன் மடியில் தலைவைத்து உறங்கியது போல் இருந்தது.

"என்ன சாமி! தூக்கமா?" என்று கேட்டபடி அந்த அம்மா இறங்கி வந்து,

"நீங்க தூங்கினீர்களே அந்த மரம் அம்மையப்பன் மரம். யார் அங்கு அமர்ந்தாலும் சொக்கி விடுவார்கள். நீங்களே பாருங்கள்! வேப்பிலையும், வில்வமும் ஒரே மரமாக வளர்ந்திருக்கும்" என காட்டினார்.

சுருக்கமாக கூறினால், மிக மிக அருமையான சூழ்நிலை, குருநாதர், இறைவன் அருள், அகத்தியப்பெருமான் உருவாக்கிய வற்றாத மூலிகை சுனை, குருவருள் பெற்றவர் வழங்கும் அன்னம் பாலிப்பு, அமைதியை தேடிப்போகிறவர்களுக்கு இங்கேயே இருந்துவிடலாம் என்கிற மனநிலையை கொடுத்துவிடும். ஒருமுறை சென்று வாருங்கள் நம் குருநாதர் இடத்துக்கு!

இவர் செய்கிற அன்னம் பாலிப்புக்கு அகத்தியப்பெருமானே உதவி செய்கிறார் என்பதே உண்மை. நாமும் இயன்ற அளவு இவருடன் ஒன்று சேர வேண்டும் என்பது அடியேனின் சிறிய வேண்டுகோள். அப்படி பங்குபெற விரும்புகிறவர்களுக்கு தகவலாக 

இவர் பெயர்:திருமதி பாண்டியம்மாள், தொடர்பு எண்: 9047261080 [UPI கிடையாது}

வங்கி கணக்கு விவரங்கள் - 

பெயர் : பாண்டியம்மாள்
வங்கி : இந்தியன் வங்கி
வங்கி எண் : SB A/c 546978137 
IFSC CODE : IDIB000K079
கிளை :கருங்காலக்குடி

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. அகத்தீசாய நம நன்றி ஐயா 🙏🙇‍♂️

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஐயா. நேரில் தரிசனம் செய்ததுப்போல இருந்தது. பாண்டியம்மாவுக்கு என் வணக்கங்கள். என்னால் முடிந்த தொகையை அனுப்பியிருக்கிறேன். இந்த வாய்ப்பை அருளிய குருநாதருக்கும் உங்களுக்கும் நன்றி🙏

    ReplyDelete
  3. அரிய தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி அய்யா🙏🙏🙏.

    ReplyDelete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete