​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 13 November 2022

சித்தன் அருள் - 1217 - அகத்தியர் மைந்தனுக்கே பரீட்சை - 4


ஆன்மீகத்தில் நல்லவை நடக்க, தனிமை, தவம், திடமனது வேண்டும் என்று அகத்தியர் அடிக்கடி கூறுவார். இப்பொழுது ஏதேனும் ஒரு நல்லது நடக்கப்போகிறதா? த்யானத்தில் இரு என்று மட்டும் கூறிவிட்டு சென்று விட்டார். இங்கு தினமும் ஒவ்வொரு விதமாக வியாதி உடலை வருத்துகிறதே.நாடியை கையில் வைத்து, அவரை வணங்கி நின்றாலே, அவர் பேசாமல் இருந்தாலும், அனைத்தும் தெரியும். நாடியை கட்டி ராமர் பாதத்தில் வை! என்று உத்தரவானபின் நம் தேவைக்காக கையில் எடுத்தால் அதற்கும் திட்டுவார்.

சரி நடப்பது அனைத்தும் அவர் பார்த்துக்கொண்டுதான் இருப்பார். பேசாமல் இருந்து விடுவோம் என்று தீர்மானித்தேன்.

அன்று காலை ஜுரம் காணாமல் போயிருந்தது. சூடு நீரில் குளித்து வந்தேன். எந்த பிரச்சனையும் வரவில்லை. ராமர் முன் அமர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லலாம் என்று அமர்ந்தேன்.

தொண்டையில் புண் இருந்ததால், முடிய வில்லை. சரி "ஓம் அகத்தீசாய நமஹ" என்கிற ஜெபத்தை தொடர்ந்து செய்வோம் என்று தீர்மானித்து இருபது நிமிடம் ஜெபித்திருப்பேன். உடல் முழுவதும் ஒரு பதட்டம், உடல் வலி வந்தது. வியர்த்து கொட்டியது. யாரோ உடலுக்குள் புகுந்து கட்டுப்படுத்துவது போல் ஒரு உணர்வு. கால் இரண்டும் மரத்துப்போன உணர்வு.

மருத்துவரை பார்த்து வருவோம் என தீர்மானித்து, நண்பர் ஒருவரை அழைத்து சென்றேன். உடலை தொட்டுப்பார்த்து, நீர் சத்து ரொம்ப குறைந்து போயுள்ளது. உள்ளே போய் படுங்கள். ரெண்டு பாட்டில் சலைன் ஏற்றுகிறேன் என்றார்.

எதனால் இப்படி படுத்துகிறது. நீங்கள் சொன்னபடி எல்லாம் செய்கிறேனே. மாத்திரை கூட சரியான நேரத்துக்கு சாப்பிடுகிறேன், என்றேன்.

உங்க குருவிடம் நாடியில் கேட்க வேண்டியது தானே. உடலில் எல்லாம் சரியாக இருக்கிறது. உடல் சூடும், பிபியும் சற்று அதிகம், எனக்கென்னவோ இது வியாதியினால் வருந்துவது போல் இல்லை, என்று அவர் வகைக்கு கடுப்பேத்தினார்.

நடந்த நிகழ்ச்சிகளை கூறியவுடன், சிரித்துக்கொண்டே, "அப்ப நான்தான் 45 நாட்களுக்கு உங்களுக்கு மருந்து கொடுத்து பத்திரமாக அவரிடம் சேர்க்க வேண்டுமா? என்றார், மருத்துவர்.

"நீங்க என்ன சொல்ல வரீங்க?" என்றேன்.

என் காலிலிருந்து வேஷ்டியை விலக்கியவர், "பாருங்கள், உங்கள் கால்கள் இரண்டும் வீங்கி இருக்கிறது. அதை நீங்கள் கவனிக்கவே இல்லை. தட்டி பார்த்தால், உங்களுக்கு உணர்வில்லை. வலி இருக்கிறதா? என்று புது பிரச்சினையை சுட்டி காட்டினார். மேலும் உங்களுக்கு ஆர் எப் டி, எல் எப் டி போன்ற சோதனைகளை செய்ய வேண்டும் என் சற்று பய முறுத்தும் தொனியில் கூறினார்.

அனைத்து பரிசோதனைகளும் செய்த பின் உடலில் எந்தவித குறையும் இல்லை என தகவல் வந்தது.

காத்து, கருப்பு போன்றவைகளில் நம்பிக்கை இல்லாதவன் என்றாயினும், எல்லாம் சரியாக இருக்கிறது, ஆனால் உடலை படுத்துகிறதே. ஒரு வேளை " இது வியாதியினால் வருத்துவது போல் இல்லை", என்று அவர் கூறியது உண்மையோ என என் மனம் எண்ணியது.

இரண்டு பாட்டில் சலைன் ஏற்றி முடிந்த பின், எழுந்து நின்று முட்டுக்கு கீழ் காலை பார்த்தால் நன்றாக வீங்கி இருந்தது.

நண்பரிடம், நீ போகும் வழியில் அவனை சந்தித்து, என் வீட்டுக்கு வரச்சொல்! ரொம்ப அவசரம் என சொல், என்று கூறி, ஒரு திடமான தீர்மானத்துடன் வீட்டுக்கு வந்து, அகத்தியரை ஜெபித்தபடி படுக்கையில் வீழ்ந்தேன்.

சித்தன் அருள்.........தொடரும்!

4 comments:

  1. அகத்தீசாய நம

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் திருப்பாதக்கமலங்கள் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  3. அன்புடன் அகத்தியம் பெருமானுக்கு... அன்பு வணக்கங்கள்... நலம் நலமே தொடரும்... தொடரட்டும் எம்பெருமானே... இப்பதிவின் மூலமாய் தங்களுடன் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு அடியேனுக்கு கிடைப்பதில் ஒரு ஆனந்தம் - மட்டற்ற பெறும் மகிழ்ச்சி - அடியேன் உரையாடிக்கொண்டிருக்கின்றேன் - தாங்கள் இவனுடன் உரையாடும் அந்த நன்நாளை எதிர்கொண்டு... அன்புடன் அடியவன்...

    ReplyDelete
  4. ஓம் அகத்தீசாய நமஹ
    வணக்கம் ஐயா .எங்கள் குடும்பத்திற்கு அனுபவம் வாய்ந்த பரம்பரை சித்த வைத்தியர் மூலம் வைத்தியம் பார்க்க விரும்புகின்றோம்.மதுரை மாவட்டத்தில் அகத்திய பெருமான் ஆசியுடன் மருத்துவம் செய்யும் மருத்துவர் இருந்தால் தெரிவிக்கவும்.உடல்நலம் பெற வேண்டி கோவிலுக்கும் மருத்துவமனைக்கும் அலைந்து மிகவும் மனச்சோர்வு அடைந்துவிட்டேன்.ஒரு தெய்வ சக்தியும் உதவவில்லை.முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவதைப் போல எனது முயற்சி உள்ளது.அறிவும் வேலைசெய்யவில்லை.அகத்திய பெருமானின் உதவியைப் பெரும் தகுதி இல்லாததால்
    வாழ்க்கையே தோல்வியாக அமைந்து விடுமோ என்று அச்சமாக உள்ளது.எங்கள் மாவட்டத்திலேயே உள்ள வைத்தியரிடம் சென்று வைத்தியம் செய்ய விரும்புகிறோம்.தாங்கள் மதுரை மாவட்டத்தில் உள்ள சிறந்த பரம்பரை சித்த மருத்துவர் யாரையேனும் அறிந்திருந்தால் தெரிவிக்க வேண்டிக்கொள்கிறேன்.நன்றி.

    ReplyDelete