​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 2 April 2017

சித்தன் அருள் - 630 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால், இஃதொப்ப நலம் எண்ணுகின்ற, நன்மைகளை எண்ணுகின்ற நல்ல ஆத்மாக்களுக்கு இறைவன் அருள் என்றும் தொடரும். இறைவனின் கருணையைக்கொண்டு, நாங்கள் சில ஆத்மாக்களை கடைத்தேற்ற என்றென்றும் ஒரு முயற்சியில் இறங்கிக்கொண்டே, அஃதொப்ப இறைவன், இறைவன் என்று கூறிக்கொண்டே, அந்த இறைவனின் கருணையை அந்த ஆத்மாக்கள் உணரும்பொருட்டு, உய்யும்பொருட்டு, ஒரு கருவியாக இருந்து செயல்பட்டுக் கொண்டே இருக்க, அஃதே இறைவன் எம்மை படைத்த காரணம் என்று எண்ணி யாம் என்றென்றும், எம்வழி சென்று கொண்டிருக்கிறோம். இஃதொப்ப பலவிதமான ஆர்வம் எம்மீது கொண்ட பல்வேறு மனிதர்களை யாங்கள் அறிவோம். அஃதொப்ப மெய்யாக, மெய்யாக, மெய்யாக எம்மீதும், எம் வழிமுறை மீதும் ஆர்வம் கொண்ட அனைத்து ஆத்மாக்களுக்கும் நாங்கள் நல்லாசிகளை என்றுமே வழங்கிக்கொண்டு இருக்கிறோம். ஆனாலும் மனிதர்கள் தாம், தாம் அறிந்த வகையிலே சிந்திப்பது யாதென்றால் ‘ தன்னைவிட உயர்சக்தியின் துணை கிடைத்துவிட்டால், தன்னைவிட மேம்பட்ட சக்தியின் உதவி கிடைத்துவிட்டால் குறிப்பாக இஃதுபோன்ற சித்தர்களின் அருளாசி கிடைத்துவிட்டால், அல்லது சித்தர்களின் தொடர்பு இருந்துவிட்டாலே எவ்வித துன்பங்களும் இல்லாமல் வாழ்க்கை சுகபோகமாக செல்ல வேண்டுமே! ஆனால் அவ்வாறு செல்வதில்லையே? பிறகு எப்படி இதுபோன்ற விஷயங்களை நம்புவது? சித்தர்களை நம்பி, ஓரளவு சித்தர்கள் வழியில் வருகின்ற மனிதர்களுக்கும் துன்பம் இருக்கிறது. இதனை நம்பாத மனிதர்களுக்கும் துன்பம் இருக்கிறது. என்ன பெரிய வேறுபாடு? என்றெல்லாம் மனிதர்கள் எண்ணுகின்ற எண்ண ஓட்டங்கள் அனைத்தையும் யாம் அறிவோம். பலமுறை யாங்கள் ஞானமார்க்கம் குறித்து விதவிதமான வார்த்தைகளை பயன்படுத்தி கூறினாலும் கூட, அறியாமையும், மாயையும், பற்றும், பாசமும் மனிதனை ஒரு நிலைக்குமேல் சிந்திக்க விடுவதில்லை.

2 comments:

  1. இறையின் நல்லாசிகள் அனைவருக்கும் கிடைக்க மனதார பிராத்திக்கிறேன்....ஓம் ஸ்ரீ அகத்தீசாய நமஹ......

    ReplyDelete
  2. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete