62. இறைவன் விதித்த விதிப்படி தான் வாழ்க்கை நடக்கும். இது கலியுகம். நீங்கள் அனைவரும் இறைவனின் கலியுக நியதியைத்தான் நடைமுறை படுத்த வேலை செய்கிறீர்கள். யாரையும் திருத்தவும் முடியாது, திருந்தவும் மாட்டார்கள் என்று தெரிந்தே, இத்தனை உண்மைகளை ஏன் மறைக்கிறீர்கள்?
குருநாதர்: நிச்சயம் மறைப்பதில்லை. அதனால் தான் ராவணனை பற்றி தெரிவிக்கின்றேனே! இன்னும் எத்தனை ஞானிகளை பற்றி தெரிவிக்கின்றேன்!
அடியவர்: ராவணனையும், ஞானிகளையும் பற்றி சொல்வதானால், ஒரு விஷயம் மாறுவதில்லை. இறைவன் விதித்த விதியை விட்டு எதிராக உங்களால் எதுவுமே செய்ய முடியாது.
குருநாதர்: நிச்சயம் முடியும்! கலியுகத்தில் கெட்டதுதான் நடக்க வேண்டும் என்பது கட்டாயம். நாங்கள் வந்து நல்லோர்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோமே!
அடியவர்: அதைத்தான் நான் சொல்கின்றேன்! இப்ப கொஞ்சம் முன்னாடி சொன்னீர்களே, ஒருவர் கூட நல்லவர்கள் இல்லை என்று!
குருநாதர்: அதனால் தான் நல்லோர்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனே!
அடியவர்: எங்க உருவாக்கினீங்க?
குருநாதர்: அப்பா! அதை பற்றி நீ கேட்டுவிடாதே!
அடியவர்: இப்படியே சொல்லி, அதை பற்றி கேட்காதே, இதை பற்றி சொல்லாதே என்று கூறி அனைத்துக்கும் ஆப்பு வைத்து விடுங்கள்.
குருநாதர்: நிச்சயம் ஆசிரியனுக்கு தெரியும், மாணவர்களுக்கு என்ன சொன்னால் புரியும் என்று!
அடியவர்: மறுபடியும் சொல்கிறேன்! இறைவனுடைய திட்டத்தை, மறை முகமாக, மனிதர்களை கவர்ந்து இழுத்து, நடைமுறைப்படுத்துவதுதான் உங்கள் வேலையே தவிர, இறைவன் விதித்த விதிக்கு எதிராக, நல்லவர்களாக மாற்றுவது உங்கள் எண்ணமில்லை.
குருநாதர்: நிச்சயம்! எங்களால் முடியும். பின் சித்தன் வாக்கு, சிவன் வாக்கு! முடிந்தது!
அடியவர்: என்ன சொன்னாலும், சித்தன் வாக்கு சிவம் வாக்கு, சித்தன் போக்கு, சிவன் போக்கு என்று சொல்லிவிட்டு போயிட்டே இருப்பீங்க! எனக்கு ஒண்ணுமே புரியல!
குருநாதர்: புரிந்தால், நீ எதுவுமே கேட்க மாட்டாய்! ஓடிவிடுவாய், அப்பொழுது சொன்னாயே, அது போல் வேண்டாம் என்று கூறி ஓடி விடுவாய். அமர்ந்து விடுவாய் மூலையில். உன்னை கசக்கினால் தான் நீயும் வெளியே வருவாய்.
அடியவர்: ஒரே ஒரு விஷயம் நான் கேட்க்கிறேன்! ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு முன் எதை பற்றியும் சிந்திக்காமல், யார் என்ன சொன்னாலும், இது உன் தலையெழுத்து, உன் விதி அனுபவித்துக்கொள் என்று கூறி, மிக அமைதியாக விலகி விடுவேன்! இருந்தேன். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து அந்த நிலையிலிருந்து நான் இறங்கி வந்தேன்.
குருநாதர்: அப்பா! என்னுடைய பல்கலைக்கழகத்தில் காற்றாய் என்று சொல்லிவிட்டாய். நாங்கள் எப்படி விட்டுவிடுவோம்.
அடியவர்: இல்லை. அப்போது இருந்த நிம்மதி என்பது இப்போது இல்லவே இல்லை.
குருநாதர்: உன் ஆசிரியர்களுக்கே இங்கு நிம்மதி இல்லை. மாணவர்களுக்கு எங்கு இருக்கப்போகின்றது?
அடியவர்: உங்களுக்கு 1008 மாணவர்கள் இருப்பார்கள். அதில் நான் ஒருவன் மட்டும் நல்லபடியாக விலகி இருக்கிறேன் என்று சொன்னால் அதற்கும் விட மாட்டீர்கள்!
குருநாதர்: என்னிடத்தில் கற்றவனை, நான் விட்டுவிடுவேனா என்ன, சாதாரணமாக!
அடியவர்: அதன்! இளிச்சவாயன், வேறு யாரும் கிடைக்கவில்லை! அப்படித்தானே!
குருநாதர்: அப்படியே வைத்துக்கொள் அப்பா!
அடியவர்: உங்கள் கூட எல்லாம் குடும்பம் நடத்துவது...... அப்பா! முடியலை!
குருநாதர்: இப்பொழுது புரிகின்றதா அகத்தியனை பற்றி!
63. பாபநாசம், திருவண்ணாமலை, மதுரை போன்ற இடங்களில் நடந்த சத்சங்கத்தில் பங்குபெற்றவர்கள் இடையே, கர்ம பரிபாலனத்தை விட கர்ம பரிவர்த்தனம்தான் நடந்துள்ளது. ஒருவன் தன் நன்னடத்தையால் தன்னை, தன் ஆத்மாவை சுத்தம் செய்து கொண்டு, இப்படிப்பட்ட இடங்களில் அனைவருக்கும் நல்லது செய்வோம் என்று வந்தால், அவன் முதுகில் பிறர் கர்மாவை ஏற்றி விடுவது எப்படி நியாயம்?
குருநாதர்: நிச்சயம் அப்படி இல்லை. ஓரிடத்தில் நன் முறையாக கேட்டால்! சரி!
64. ஓம் அகத்தீசாய நம , வள்ளலார் இயற்றிய அருட்பெருஞ்சோதி அகவலை பற்றி சொல்லுங்கள் பெருமானே .
குருநாதர்: முதலில் ஐந்து மாதங்கள் வடலூர் சென்று வரச்சொல். வள்ளலார் கூறிய நல்ல விஷயங்களை நூலாக வெளியிடச்சொல். பின்பு தெரிவிக்கின்றேன்!
65. இனி இவ்வுலகம், சித்தர்களாகிய எங்கள் ஆட்சியில் செல்லும் என்று கூறினீர்கள். தலைநகர் தில்லியில் வாகனம் வெடித்து பலர் மரணம். தமிழ்நாட்டில், கோவிலுக்குள் கொலை, கொள்ளை நடக்கிறது. எப்பொழுது கேட்டாலும், இவனெல்லாம் எங்கு கொண்டு போய் விடப்போகிறான் என்று உங்களின் எகத்தாளமாக பதில். நடக்கிற கெடுதல்களை தடுக்கிற வக்கில்லாமல் இருக்கிற சித்தர்கள் ஆட்சி பெருமைப்படுகிற அளவுக்கு இல்லையே!
குருநாதர்: தீயோர்களை அழிக்க வேண்டும். இங்கு தீயோர்கள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறார்கள். இவ்வாறே விட்டுவிட்டால், தீயோர்கள், நாலோர்களையும் கெடுத்து விடுவார்கள். அழிக்கவே வேண்டும்! அது மட்டுமல்லாமல், நல்லோர்கள் காக்கப்படவேண்டும். அனைவரும் ஒன்று சேர்ந்து கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் என்றால், யாருமே கடைபிடிப்பதில்லை. கடைபிடித்திருந்தால் போதும்! போகன், தேரையன் சொன்னானே யார் என்ன செய்தார்கள். காலத்தின் கட்டாயமப்பா! இன்னும் புரியவில்லை மக்களுக்கு. எம் அருளை பெற்றவன் அரசாள்வான். அப்பொழுது எல்லாம் மாறும்!
அடியவர்: முதலில் அந்த நல்ல செயலை செய்யுங்கள்!
குருநாதர்: இப்பொழுதுதான் வந்திருக்கின்றோம்............
அடியவர்: இத்தனை வருஷம் உட்கார்ந்து, நாங்கள் வந்தாச்சு, வந்தாச்சு என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றீர்கள்.
குருநாதர்: அப்பா! ஒவ்வொருவரையும் ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றோம்.
66. திருவண்ணாமலை, திருச்செந்தூர், மதுரை, பழனி, திருப்பரங்குன்றம், என அனைத்து கோவில்களிலும், இறைவன் அரசியல்வாதிகள், அறமில்லதுறை அதிகாரிகள், இது போக, தவறான முறையில் பக்தர்களிடமிருந்து காசு கொள்ளை அடிக்கிறவர்களிடம், கைதியாக, வேடிக்கை காட்டும் பொருளாக அமர்ந்திருக்கிறாரே! இப்பொழுது நடப்பது சித்தர்கள் ஆட்சி என்று கூறுகிற உங்களை பார்த்தால் பரிதாபமாக உள்ளது. கோவில்களை/இறைவனை பிடித்திருக்கிற இந்த ஏழரை சனி எப்பொழுது விலகும்?
குருநாதர்: நிச்சயம் இருக்கட்டுமே, இறைவனுக்கு தெரியும், யார் மூலம் எப்படி சரி செய்ய வேண்டும் என்று. வரும் காலத்தில் என்னுடைய பக்தன் ஆட்சி செய்வான். அப்பொழுது புரியும்.
67. மேலே சொன்ன நிகழ்ச்சிகளை பார்க்கும் பொழுது, ஆன்மீகமும் வேண்டாம், சித்த மார்க்கமும் வேண்டாம், பிறருக்கு உதவி கூட செய்ய வேண்டாம், அமைதியாக வாழ்ந்துவிடலாம் என்று பலருக்கும் தோன்றி விலகி விடுகிறார்கள். உங்களால், எதையும் சீர்படுத்த முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
குருநாதர்: போகச்சொல். இறைவன் என்ன எனக்கு இதை செய், அதை செய் என கேட்டானா?
அடியவர்: பெரியவர்கள் முதல், அனைவரும், இதை செய், அதை செய் என்றுதான் கூறினார்கள்.
குருநாதர்: முதலில் தர்மத்தை கடைபிடிக்கச்சொன்னேன். முதலில் யாராவது அதை கடை பிடிக்கின்றார்களா, சொல்! தர்மத்தின் முதல் பாடம், பொய் பேசக்கூடாது என்று. ஆனாலும் என் பக்தன் பொய் பேசுகின்றான். பொறாமை படக்கூடாது என்று! ஆனாலும் பொறாமை படுகிறான். உண்மையான பக்தன், இறைவன் எதை செய்தாலும், நல்லதைத்தான் செய்வான் என்று இருக்க வேண்டும். இறைவனுக்கு யாரை பிடிக்குமோ அவனுக்குத்தான் சோதனைகள் வைப்பான். இறைவனே பொய் என்று சொல்கிற அளவுக்கு எவன் ஒருவன் வருகிறானோ, அவனே உத்தமன்.
அடியவர்: தகுதி இல்லாத ஒருவனுக்கு இறைவன் வரங்களை வாரி வழங்கி, மற்ற அனைவருக்கும் பிரச்சினையை வளர்க்கிறார்.
குருநாதர்: வரங்களை கொடுப்பது, தன் குழந்தை கேட்கிறதே என்பதால். கிடைத்த வரத்தை சரியாக உபயோகிக்காவிட்டால், அவனை அழிப்பதும் இறைவன் செயலே! இறைவனுக்கு தெரியும் அப்பனே! மக்களை வழி நடத்த! அவ்வளவுதான்!
அடியவர்: ஆம்! அதனால்தான் தவறானவனுக்கு வரத்தை கொடுத்து, வரம் பெற்றவனே தலையில் கை வைக்க வந்தான்.
குருநாதர்: அப்பா! நீயும் "கோவிந்தா" என்று சொல்லிவிடு! உனக்கேன் அப்பா?
அடியவர்: சரிதான்! எதை பற்றியும் யோசிக்காமல் அமைதியாக சென்று விட வேண்டும் என்றுதான் நானும் நினைக்கிறேன்! ஆனால் முடியவில்லை. விட்டுவிட வேண்டும்!
குருநாதர்: நான் விடமாட்டேன் அப்பா!
அடியவர்: அமைதியாக இருந்த நிம்மதியை விட்டுவிட்டோமே என்று நான் நினைக்கிறேன்! எதையும் கண்டுக்காம இருக்க வேண்டும். இறைவனே இறங்கி வந்தால் கூட "இது உன் தலையெழுத்து" நீயே கவனி என்று சொல்லக்கூடிய நிலமைல இருந்தேன் நான். யாருக்கும் உபத்திரவம் இல்லை! அந்த மனநிலையை விட்டுவிட்டேன்! அன்னிக்கு தொடங்கியது பிரச்சினை.
68. இது கலியுகம். அனைத்தும் இறைவன் விதித்தபடிதான் நடக்கும் என்றால், பின்னர் எதற்கு இத்தனை நீதி, நேர்மை, தர்மம், அதர்மம் பற்றிய விரிவுரைகளை சித்தர்கள் கூறுகிறீர்கள். மனிதர்கள், கொத்து கொத்தாக கொல்லப்படுவதை உங்களால் தடுக்க முடியவில்லையே. ஆகவே, நீங்களும் இறைவன் விதித்த விதியை நோக்கித்தான் எங்களை அழைத்து செல்கிறீர்களோ என்ற தெளிவான எண்ணம்தான் வருகிறது.
குருநாதர்:அப்பனே ஒருவனாவது எங்களுக்கு தேவை. அதற்க்காகத்தான்! உயர்ந்த பதவியில் அமர்த்தி அனைவருக்கும் சேவை செய்ய! ஒருவன் தேவை எங்களுக்கு, இந்த உலகத்தை மாற்ற. போதும் எங்களுக்கு. அவ் ஒருவன் தர்மத்தை பற்றி கேட்டாலே போதுமானது. அப்பா! துரதிருஷ்டவாதிகளும் இருக்கின்றார்கள் ஐம்பது சதவிகிதம். நல்லோர்கள் சொல்வதை இவன் கேட்கமாட்டான். இவ்வுலகில் நல்லோர் ஒருவன் இருக்கின்றான் என்றால் துரதிருஷ்டசாலி ஒருவன் வருவான், அவனை அழிப்பதற்கு. இவன் பாம்பை விட விஷமுள்ளவன். மனிதன் நாக்கே அனைவரையும் அழித்துவிடும். மனிதன் சொல்லே அனைவரையும் அழித்துவிடும். இதனால், இறைவனை யாரும் கட்டுப்படுத்தவும் முடியாது. அனைத்தும் இறைவன் செயலால்தான் நடக்கின்றது. நேரில் வரச்சொல், மறைமுகமாக நின்று கேட்ப்பானேன், யான் பதில் கூறுகிறேன்!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

No comments:
Post a Comment