​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 9 May 2024

சித்தன் அருள் - 1601 - அந்த நாள் >> இந்த வருடம் (க்ரோதி வருடம்) 2024-2025!

 

அகத்தியப்பெருமானின் அடியவர்களுக்கு வணக்கம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

அகத்தியப் பெருமானின் "சித்தன் அருளை" வாசித்து வரும் அடியவர்கள், அவர் குறிப்பிட்ட தினங்களில், நாடி வாசித்த மைந்தனை, கோடகநல்லூர், நம்பிமலை, பாபநாசம், கரும்குளம், திருச்செந்தூர், திருப்பதி, மந்த்ராலயம் என்று பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, இறை, சித்த அனுபவங்களையும், ஆசிர்வாதங்களையும் பெற்றுக் கொடுத்ததை, நாம் அனைவரும் அறிவோம். அதில் மறைமுகமாக "அந்த நாள்/இந்தநாள்" என்று அகத்தியப் பெருமான் பல இடங்களில், குறிப்பிட்டதை கவனித்திருக்கலாம். முன்னரே தெரிவித்ததினால், பல அகத்தியர் அடியவர்களும், அந்த தினத்தில் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று அருள் பெற்றது நினைவிருக்கும்.

நம் அனைவருக்குமே, "அந்த நாள் இந்த வருடம்", எப்போது வருகிறதோ, அன்று, அங்கு சென்று இருந்து இறைவன்/பெரியவர்களின் அருள், ஆசிர்வாதம், நிம்மதியான வாழ்க்கைக்காக பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம், ஒவ்வொரு அகத்தியர் அடியவரின் மனதுள் இருக்கும். உங்களின் அந்த  எண்ணைத்தை பூர்த்தி செய்வதற்காக, இந்த வருடம் "அந்த நாட்களை" தெரிவு செய்து இங்கே சமர்ப்பிக்கிறோம். அவற்றை குறித்து வைத்துக்கொண்டு, அங்கெல்லாம் சென்று, நல்லது செய்து அவர் அருள் பெற்று வருமாறு, வேண்டிக் கொள்கிறேன்.

முன்னரே, கங்கை கரையில் வாக்களித்த அகத்தியப்பெருமான், அவர் அடியவர்கள் உணர்ந்து, செய்வதற்காக, கீழ் கண்டவாறு உரைத்தார்.

"கவலைகள் இல்லை யான்  அருகிலேயே இருந்து வழி நடத்துவேன். என்னென்ன தேவை என்பதைக் கூட யான் அறிவேன். என் பிள்ளைகளுக்கு கூட அறிந்தறிந்து நிச்சயம் செய்வேன்  அதனால் குறைகள் ஒன்றும் இல்லை.

அனைவரையும் கூட இறைவன் பார்த்து கொண்டே தான் இருக்கின்றான். நல்லோர்கள்  புண்ணியம் செய்தவர்கள் என்று. இறைவன் எங்கெல்லாம் அவர்களை அழைக்க வேண்டுமோ நிச்சயம், வந்து அழைத்துச் செல்வான்.

அதனால்தான் புண்ணியங்கள் செய்யுங்கள், புண்ணியங்கள் செய்யுங்கள் என்றெல்லாம். இவ்வாறு புண்ணியங்கள் செய்து கொண்டு இருந்தாலும் கூட நிச்சயம் அனைவரும் மகிழ்வார்கள் எதை என்று அறியறிய!!! என்ன தேவையோ அதையும் கொடுப்பார்கள.

நிச்சயம் ஒவ்வொருவரும் நினைத்துக் கொள்ளுங்கள் எவையென்று கூட புண்ணியங்கள், யான் சொல்லிவிட்டேன். பின் நீர் ( தண்ணீர்  மோர் மூலிகை குடிநீர்)  இன்னும் பல வகையான பழங்களை கூட மற்றவர்களுக்கு தரும் பொழுது எப்படியாவது ஞானிகள் வந்து நிச்சயம் கர்மத்தை வாங்கிக் கொண்டு சென்று விடுவார்கள்!

புண்ணியங்கள் செய்தால் உன்னை தேடியே இறைவன் வருவானப்பா. அதனால் ஈசனின் பார்வையும் பார்வதி தேவியின் பார்வையும் கிடைக்க நல்லாசிகள். இனிமேலும் உயர்வுகள் தான் உண்டு என்பதைப் போல் நிச்சயம் என்னுடைய ஆசிகள்!

மேற் கூறியதை, ஒவ்வொரு அடியார்களும் மனதில் இருத்திக் கொள்ளுங்கள்.

இனி இந்த "ஸ்ரீ க்ரோதி வருஷத்தில்" முக்கியமான நாட்களை கீழே தெரிவிக்கிறேன்.

ராமரும் சீதையும் ராமேஸ்வரத்தில்:-

ராமேஸ்வரத்தில் சிவபெருமான் தானே விரும்பி அமர்ந்தார். சித்திரை மாதத்தில், ராமரும், சீதையும் அங்கே வந்து, வளர்பிறை ஏகாதசி அன்று (19/04/2024, வெள்ளிக்கிழமை) சிவபெருமானுக்கு பூசை செய்து பத்து நாட்கள் அங்கு உறைவார்கள்.  

ஸ்ரீ போகர் திருநட்சத்திரம்:-

04/06/2024 - செவ்வாய்க்கிழமை வைகாசி மாதம் - பரணி நட்சத்திரம். பழனி போகர் சமாதிக்கு செல்லலாம்.

நம்பிமலை:- (இறைவனும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருக்க, அகத்தியப் பெருமான் நம்பிமலை பெருமாளுக்கு 200 வருடங்களுக்கு ஒருமுறை செய்கிற பூசையை செய்த நாள்)

17/07/2024 - ஆடி மாதம் - புதன் கிழமை - சுக்லபக்ஷ ஏகாதசி திதி, அனுஷம் நக்ஷத்திரம்

பாபநாசம்:- (நதிகள் எல்லாம் அகத்தியப் பெருமானுடன் இருந்து அன்று தீர்த்தமாடியவர்கள் அனைவருக்கும், அவர்கள் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் புண்ணியம் கொடுத்த நாள். நவகிரக தம்பதிகள் ஆசிர்வதித்த நாள்)

18/07/2024 - ஆடி மாதம் -  வியாழக்கிழமை - சுக்லபக்ஷ துவாதசி/திரயோதசி திதி - கேட்டை நட்சத்திரம்.

திருச்செந்தூர்:- (முருகர், அகத்தியர், அனுமன் ஆகிய மூவரும் சேர்ந்து இருந்த நாள். அதில், முருகர் அனுமனுக்கு அன்று அனுமனின் நட்சத்திரம் ஆனதால், அவரை ஆரத்தழுவி, நல்வாழ்த்து தெரிவித்த நாள். இன்றும் எல்லா மாதமும் அனுமன், அவரது நட்சத்திரத்தன்று திருசெந்தூரில் அன்று மாலை வந்து முருகரின் அருள் பெற்று செல்கிறாராம்.)

19/07/2024 - ஆடி மாதம் -  வெள்ளிக்கிழமை- சுக்லபக்ஷ துவாதசி/திரயோதசி திதி - மூலம் நட்சத்திரம்.

ஓதியப்பர் பிறந்த நாள்:- போகர் கூற்றின் படி, ஓதியப்பர் ஆவணி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். ஓதியப்பரின் திருநட்சத்திரத்தை அபிஷேக ஆராதனைகளுடன் கொண்டாடுகிற நாள். சித்தர்கள் அனைவரும் அன்று அங்கே ஒன்று கூடி, ஓதியப்பரை தரிசனம் செய்து, பின்னர் 90 நாட்களுக்கு அங்கேயே தங்கி இருக்க தொடங்குகிற நாள்.

31/08/2024 -ஆவணி மாதம் - சனிக்கிழமை - திரயோதசி திதி பூசம் நட்சத்திரம்.

கோடகநல்லூர்:- எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள். தாமிரபரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள்.

2022ம் வருடம் இதே நாளில் திருப்பதியிலிருந்து நாடியில் வாக்குரைத்த அகத்தியப்பெருமான், "அடுத்த வருடம் முதல் அபிஷேக பூசை செய்கிற முகூர்த்தத்தை யாமே தெரிவு செய்து, இறைவனுக்கு சமர்ப்பித்துக் கொள்கிறோம். யார் வரவேண்டும், யார் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை கூட யாமே தீர்மானித்துக் கொள்கிறோம்"  என்று உத்தரவிட்டு தெரிவித்த படியால், அந்த முகூர்த்த நாளை அகத்தியப்பெருமான் தெரிவிக்கும் பொழுது, சித்தன் அருளில் வெளியிடுகிறோம். தெரிவிக்காமலே இருந்தால், அதுவும், அவர் திருவிளையாடலே என எடுத்துக் கொள்ளுங்கள்.

முருகர், விநாயகர், ஐயப்பன் இணைந்து சந்தாேசமாக விளையாடக்கூடிய இடம் ஓதிமலை உச்சியில். ஆலய சுற்றுபிரகாரத்தில். கார்த்திகை மாதத்தில் வரும் கடைசி சஷ்டி நாள் - 06/12/2024 வெள்ளிக்கிழமை.

பாபநாச ஸ்நானம்:- தாமிரபரணி புராணத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சிவபெருமானை லிங்க ரூபத்தில் பிரதிஷ்டை செய்து, தாமிரபரணி தேவியானவள், அகத்தியப் பெருமான் முன்னிலையில் தவமிருந்து, இறைவனிடமிருந்து, நம் மனித குலத்திற்காக ஒரு வரத்தை பெற்றாள். எவர் இந்த இடத்தில், மார்கழி மாதத்தில் எம் தீர்த்தத்தில் நீராடி, உம்மை கண்டு வணங்குகின்றனரோ, அவர்களுக்கு இந்த பூமியில் இனிமேல் பிறவி என்பதே இருக்கக்கூடாது. சிவபெருமானும் தாமிரபரணியின் பூசை, தவத்தில் மகிழ்ந்து "அப்படியே ஆகட்டும்" என்று கூறி பாபநாத சுவாமி கோவில் லிங்கத்தினுள் மறைந்தார். அந்த நாட்கள் இந்த வருடம் 16/12/2024 முதல் 13/01/2025 க்குள் வருகிறது. பாபநாச தாமிரபரணி கட்ட ஸ்நானம் மிக இன்றி அமையாதது.

அகத்தியப் பெருமானின் திரு நட்சத்திரம்:-

19/12/2024 - வியாழக்கிழமை - மார்கழி மாதம், சதுர்த்தி திதி - ஆயில்யம் நட்சத்திரம்.

ஸ்ரீ லோபாமுத்திரா தாயின் திரு நட்சத்திரம்:-

04/01/2025 - சனிக்கிழமை, மார்கழி மாதம், பஞ்சமி திதி, சதயம் நட்சத்திரம்.

ராமர் கோதாவரி தாய்க்கு பூசை செய்யும் நாள்:-

ராமர்,  சீதா தேவி, லக்ஷ்மணர், அனுமனுடன் வைகுண்ட ஏகாதசி அன்று மாலை பத்ராசலம் கோவில் முன்பாக ஸ்நான கட்டத்தில் வந்து, கோதாவரி தாய்க்கு பூஜை செய்து, ஆரத்தி எடுக்கிற முகூர்த்தம்.

10/01/2025 - வெள்ளிக்கிழமை, மார்கழி மாதம், வைகுண்ட ஏகாதசி.

சிவபெருமான், உத்தரகோசமங்கை:-

13/01/2025 - திங்கள் கிழமை, பௌர்ணமி/பிரதமை திதி, திருவாதிரை நட்சத்திரம். ஆருத்திரா தரிசனம். உத்தரகோசமங்கை கோவிலில் சிவபெருமான், அபிஷேக நேரத்தில், ஸ்தல வ்ருக்ஷத்தின் அடியில் அமர்ந்திருப்பார். அன்று சிவபெருமானே விரும்பி அமர்கிறார். நாமும்  அன்று அங்கு அமர வேண்டும் என்கிறார் அகத்தியப் பெருமான்.

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............தொடரும்!

3 comments:

  1. மிகவும் சிறப்பு ...நன்றி ஐயா
    🙏🙏🙏

    ReplyDelete
  2. நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
  3. OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA

    GEURUVADI SARANAM
    THIRUVADI SARANAM

    NANRI AYYANE

    ReplyDelete