​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 19 March 2023

சித்தன் அருள் - 1307 - பொதுவாக்கு - 10


91. வணக்கம் ஐயா, நான் தமிழன். கடந்த சில ஆண்டுகளாக இங்கு வாழும் இந்து தமிழர்களுக்கு எதிராக பல இன்னல்கள் அரசாங்கத்தால் கொடுக்கபடுகின்றது. அரசு பணி, உயர்கல்வி முதலிய அனைத்து அரசு சலுகைகளும் இந்து தமிழர்களுக்கு கிடைப்பதில்லை. மதம் மாறினால் தான் இந்நாட்டில் வாழ முடியும் என மறைமுகமாக தாக்குதல் நடத்த படுகின்றது. இதனால் பெரிய எண்ணிக்கையில் நம் மக்கள் மதம் மாறுகின்றனர். அப்படி மாறியவர்களை இனம் மாற்றமும் கட்டாயபடுத்தி செய்கின்றனர். இங்குள்ள தமிழ் பள்ளியையும் அழிக்கின்றனர். அகத்தியர் பெருமானிடம் இதற்கான காரணத்தையும் எங்களின் எதிர்காலத்தை பற்றியும் தயவு செய்து ஐயா கேட்டு சொல்ல பெரிதும் வேண்டுகின்றேன். நன்றி! ஐயா. ஓம் அகத்தீசாய நம.

அப்பனே! எது என்று கூற. மாந்திரீகமப்பா! அவ் மாந்த்ரீகத்தால், அனைத்தும் சீரழிந்து கொண்டு இருக்கின்றது. ஆனால், எவை என்று அறிய! அறிய! யானும் அங்கேதான் இருக்கின்றேன் அப்பனே! மாந்திரீகத்தில் நுழைந்து, என்னையும் வழிபடுகின்றான் அப்பனே! என் பெயரை சொல்லியே, மாந்த்ரீகம் நடத்துகின்றான் அப்பனே! நிச்சயம் தண்டனைகள் உண்டு. பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது முன்னோர் வாக்கு, நிச்சயம் யான் பார்த்துக் கொள்ளுகின்றேன்! அதனால் தான், இறைவனை வணங்கினால், ஒன்றும் செய்யப் போவதில்லை என்று, ஆனால் அவன் மூளையே, மாறிவிடுகின்றது. அதனால் தான் பொறுத்திருக்கச் சொல். யான் இருக்கின்றேன்! யான் எல்லாம் அங்கு திரிந்து கொண்டே இருக்கின்றேன். எப்படி மக்களை திருத்துவது என்பது கூட. ஆனால், என் பெயரை சொல்லித்தான் வருகின்றார்கள் அப்பனே! எதை என்று அறிய! அறிய! நிச்சயம் நான் பார்ப்பேன் அப்பனே! இனி வரும் காலங்களில், உண்மையானவர் யார், பொய்யர்கள் யார் என்பதை நிச்சயம் யான் காண்பிப்பேன் அப்பனே. யான் இருக்கின்றேன் அப்பனே! ஏன் கவலை?
 
92. தன் தாய் (இந்தியா) நாட்டிலிருந்து  வெறொரு நாட்டில் வசிக்கும் மக்கள் (பணி நிமித்தமாக) பாவம் செய்தவர்களா? கர்ம வினை  தீர்பதற்காக அங்கு  வாழ்கிறார்களா? 

அப்பனே! நிச்சயம் இல்லையப்பா! எங்கு பார்த்தாலும், யான் இருக்கின்றேன். அப்பொழுது, எது என்று அறிய! அறிய! இவை எல்லாம் பொய் பேச்சுக்களப்பா! 

தன் பெற்றோர்களின் இறுதி சடங்கிற்கும் வராத பிள்ளைகள் (வெளிநாட்டில் வசிப்பதால்) பற்றி உங்களு டைய எண்ணம் அகத்தியரே ?

அப்பனே! அது கர்மா இல்லையப்பா! பணமப்பா! பணத்தை தேடி செல்கின்றான் அப்பனே! அதனால், மாயையை தேடி செல்லும் பொழுது, இவை எல்லாம் அவனுக்கு ஞாபகத்தில் வராது என்பேன். அப்பனே! எதற்காக வெளிநாடு செல்லுகின்றான் என்றால்,  பணம், பணம், பணம்.

93. மனிதர்களுக்கு அவர்கள் உடலில் எத்தனையோ விதமான நோய்கள் உள்ளது. அப்பா! தோல் சம்பந்தமான தேமல் போன்ற நோய்கள் எந்த விதமான கர்மாவினால் வருகிறது. அதற்கு ஏதேனும் மருந்து அருள வேண்டும்!

அப்பனே, நிச்சயம் சொல்லுகின்றேன் அப்பனே! அப்பனே, புற்று மண்ணை நீரில் இட்டு நீராட நிச்சயம் குணமாகும். அது மட்டுமல்லாமல், காசி தன்னில் அதிக அளவு நீராடி, அப்பனே அது மட்டுமல்லாமல், பல பல புனித நதிகளிலும் நீராட இவை வராது என்பேன் அப்பனே. அப்பொழுதெல்லாம், எப்படியாவது நடந்து சென்று நீராடி விடுவார்கள் அப்பனே. ஆனால், இப்பொழுது, அப்படி இல்லை அப்பா!  ஏன் என்றால், பணம்தான் இறைவன் என்று மனிதன் திரிந்து கொண்டிருக்கின்றான் அப்பா. நிச்சயம் அது சாத்தியமாகாது என்பேன் அப்பனே! 

94. சித்தர்கள் கூற்றுப்படி தமிழ் புத்தாண்டு எப்பொழுது தொடங்குகிறது? சித்திரையிலா? தை மாதத்திலா?

அப்பனே, எதை என்று அறிய! அறிய! முதலில், எங்களுக்குரிய மாதம் என்பதாலே, எங்கள் பெயரை சொல்லி தொடங்குகிறது என்பேன். அவ்வளவுதான்.

95. பெரியவர்கள் சாபத்தை பெற்றாலும் கர்மா பாதிக்குமா ?

அப்பனே, நிச்சயம், எவை என்று அறிய! அறிய! எவை என்று உணர! உணர! அப்பனே! இவை அனைவருக்குமே தெரியுமென்பேன். ஒரு மனதை, நல்லோர் மனதை காயப்படுத்தக் கூடாது என்பேன். 

96. கர்மக்கணக்கில், மிச்சம் மீதி உள்ள பாவங்களை ஒருவன் தெரிந்து கொள்வது எப்படி? அந்த பாவங்களில் இருந்து விடுபட நாம் செய்ய வேண்டிய வழி முறைகள் என்ன?

அப்பனே, ஏதும் வேண்டாமப்பா! எங்களை நாடி வாருங்கள், யாங்கள் சொல்லுகின்றோம் அப்பா!

97. துஷ்டசக்திகள் தீயசக்தீகள் மனிதர் மனதில் துவேசங்களையும், துஷ்ட எண்ணகளையும் , போட்டி, பொறாமை, காமம்,குரோதங்களையும் ஏற்படுத்தி மனிதர்களிடையே ஒற்றுமையை சீர்குலைத்து மனகிலேசத்தை உண்டாக்கி இறைவன் திருவடியை அடையவிடாமல் தடுக்கின்றன இதில் இருந்து விடுபட்டு மனிதர்கள் இறைவனை அடைய குருநாதர் வழி காட்ட வேண்டும்.

அப்பனே! துஷ்ட தேவதைகளும் எங்களிடத்தில் வந்து முறையிட்டுக் கொண்டே இருக்கின்றது. இவன்தன் எனக்கு தீங்கு செய்துவிட்டான். அகத்திய மாமுனிவரே யாங்கள், எப்படியாவது இவந்தனுக்கு தீங்கு செய்ய வேண்டும் என்று.  அப்பொழுது அனைவரும் என்னிடத்தில் கேட்டால், யாருக்குத்தான் யான் உதவி செய்வது? ஒரு எல்லைக்குத்தான் பின், எவை என்று அறிய! அறிய! யாங்கள் உதவி செய்து விடுவோம் அப்பனே. அனைவருக்குமே யாங்கள் பொது!  

98. தற்போது இளம் வயதினருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுக்கின்றன் இதற்கு கர்மா தான் காரணமா இருதயத்தை பலமாக வைப்பதற்கு சித்த மருத்துவம் கூறுங்கள் அப்பா

அப்பனே! எதை என்று கூற! அனைத்தும், கர்மா மேலேயே பழியை சுமத்திவிடுங்கள் அப்பனே. எதை என்று அறிய! அறிய! உணவுகள்தான் என்பேன், அப்பனே! அதை மாற்றிக்கொள்ளுங்கள் அப்பனே. பல வாக்குகளிலும் சொல்லிவிட்டேன் அப்பனே! 

99. தூமகேது வரும்போதெல்லாம் உலகில் பெரும் நிகழ்ச்சிகள் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் பச்சை நிற வால் நட்சத்திரம் வந்து சென்றதே! இதனால், இந்தியாவில்/உலகில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா?

அப்பனே! எது என்று கூற! அப்பனே! சிவப்பு நிறமும் வந்து விட்டு சென்றது. யாராவது அதை கேட்டார்களா என்ன. சிவப்பு நிறம் வந்தாலே அழிவு என்பது. ஆனால், பச்சை நிறத்தில், இறைவன் சற்று விட்டு வைத்துள்ளான், அவ்வளவுதான்.

100. தங்களின் அடியவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து, பழனி முருகரின் பிரசாதம் சேர்த்து வைத்து, மிகப்பெரிய நோயினால் வாடும் மனிதர்களுக்கு, அதை கொடுத்து அவர்கள் நோய், நொடி, வேதனை அகல ஒரு சமூகப்பணி செய்திட உங்கள் ஆசிர்வாதம் வேண்டும்!

அப்பனே! எதை என்று அறிய! அறிய! அப்பனே! நிச்சயம் யானே சொல்லுகின்றேன் அப்பனே! அதற்கு யானே இணைத்து என்னென்ன செய்ய வேண்டும் என்பது ஓரிடத்தில், அதாவது, ஓதிமலை அடிவாரத்தில் சொல்லுகின்றேன்! அப்பனே! 

101. வரும் குரு பெயர்ச்சி/சித்திரை மாதத்தில் இருந்து உலகத்தில் இறை அருளால் பெரும் மாற்றங்கள் நிகழ உள்ளது என்றும் இது சித்தர்களின் மூலம் ஸ்திரமான இறை அடியவர்களுக்கு தரிசனங்கள் (ஒளி ரூபமாக) மூலம் உணர்த்தப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் பக்தி மார்க்கத்தில் உள்ள இறை அடியவர்கள்  தங்களை எப்படி தயார் படுத்த வேண்டும் (வழிபாட்டு முறைகள் தான தருமங்கள்) என்று அகத்தீசர் அறிவுறுத்த வேண்டுகின்றோம்.

அப்பனே! எதை என்று அறிய! அறிய! அப்பனே! நிச்சயம், யாங்கள் மாற்றிக் கொண்டேதான் வருகின்றோம் அப்பனே. ஆனால், அப்பனே ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். அப்பனே! பல குரு பெயர்ச்சிகள் நடந்து விட்டது அப்பா! ஆனால், சாதித்தது தான் என்ன. பல சனிப் பெயர்ச்சிகள் நடந்ததப்பா. சாதித்து விட்டதுபோல் எண்ணங்கள் அப்பனே! ஒன்றை சொல்லுகின்றேன் அப்பனே! அண்ணாமலையைப் போய் பார், அப்பனே! சாதுக்கள் கை ஏந்தி நிற்கின்றார்கள் அப்பனே! அவந்தனுக்கும் கூட குரு பெயர்ச்சியும் வருகின்றது, சனி பெயர்சியும் வருகின்றது, ராகு-கேது பெயர்சிகளும் வருகின்றது. ஆனால், அப்படித்தான் இருக்கின்றான் அப்பனே! ஏன்? யாராவது யோசித்தீர்களா? இல்லை. அப்பனே. அப்பனே, நிச்சயம், குருவானவன் திருச்செந்தூருக்கு செல்லுகின்றான் அப்பனே! அதனால், அப்பனே, செந்தூருக்கு என்றால், எதை யான் சொல்ல, எதை என்று உணர்த்தி, உணர்த்தி, முருகன் இல்லத்திற்கு செல்லுகின்றான் அப்பனே! முருகன் இல்லங்கள், அதாவது எங்கெங்கு முருகன் திருத்தலங்கள் இருக்கின்றதோ அங்கெல்லாம் திரிந்து கொண்டிருந்தால் அப்பனே நல்வாழ்க்கை அமையும் என்பேன். ஆனால், தெரியாமல் சுற்றுகிறான் அப்பனே! அப்பனே! ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள், முருகன் இல்லத்திற்கு செல்லுகின்றான் அப்பனே! 

102. விதியென்பது கர்மவினை படி தானே அமைகிறது, அப்படியிருக்க அது எப்படி தடை ஆகிறது

அப்பனே! விதி! மதி! இதை பற்றி எடுத்துரைக்க, இன்னும் நேரங்களும் ஆகிவிடும் என்பேன் அப்பனே! நிச்சயம் இதனைப்பற்றி ஒரு திருத்தலத்தில், எடுத்துரைக்கின்றேன் அப்பனே! விதியின் பாதையும் கூட பிரம்மன், மதியின் பாதையும் கூட யாங்கள்! அனைத்தும் அறிந்தவன் யான்! அப்பனே, ஆனாலும் முதல்வரிடம் (பிரம்மா) கேட்டுத்தான், அதாவது, அனுமதி பெற்றிட்டுத்தான் சொல்ல வேண்டும் என்பேன். நானே முந்திக் கொண்டாலும் "அகத்திய மாமுனிவரே எந்தனுக்கு இட்ட வேலை இப்படி, என கோபித்துக் கொள்வான்!"  

103. சைனஸ் , மூக்கில் இருக்கும் காற்று பைகளில் நீர் கோர்த்துக் கொள்ளுதல், அதனால் வரும் அலர்ஜி, மூக்கடைப்பு, காய்ச்சல்  இவற்றிற்கு தீர்வு அருளுமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.

அறிந்து! அறிந்து! அனைத்தும் சொல்லிவிட்டேன்! இதைத்தான் மீண்டும், மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே! மிளகு, ஜீரகம், மஞ்சள், அப்பனே! அது மட்டுமில்லாமல், கரிசலாங்கண்ணி அப்பனே! இன்னும் எது என்று அறிய, கிராம்பு, அது மட்டுமல்லாமல் கற்பூரவல்லி என்னும் மூலிகையும் இருக்கின்றது அப்பனே! இதை எல்லாம் (கஷாயமாக) பயன் படுத்தினால் போதுமப்பா! ஆனால் யாரும் பயன்படுத்துவது இல்லை. ஆனால், மீண்டும், மீண்டும், எது என்று கூற, வந்து கேட்கின்றார்கள் அப்பனே. அப்பனே! புதிதாக கேளுங்கள்.

104. எலும்பு முறிவு, ஜவ்வு கிழிதல் குணமாக, நரம்பு எலும்பு வலுவாக, பாதிப்பு குணமாக மருந்து அருள் இறைஞ்சுகிறோம்.

அப்பனே! எது என்று கூற, உடம்பிற்கு எது என்று கூற, ஒரே மூலிகை, முருங்கைதானப்பா. அதை எடுத்துக் கொண்டாலே நன்றுதானப்பா. அவை மட்டுமல்லாமல், அப்பனே! நடந்து கொண்டே இருக்க வேண்டும் அப்பனே. இவை எல்லாம் செய்து கொண்டிருந்தார்கள் அன்று, ஆனால், யாரப்பா இப்பொழுது நடக்கிறார்கள். அனைத்தும், மாறிவிட்டது அப்பனே! அன்றைய தினத்தில், காடுகளும், மலைகளும் ஏறிச்சென்று இறைவனை எப்படி தரிசிக்கலாம் என்று எண்ணுவார்கள் அப்பா! அவர்களுக்கு ஒரு வியாதியும் வராது. இப்பொழுதெல்லாம், இருக்கும் இடத்தில் இருந்து எல்லாம் தெரிய வேண்டும் என்று எண்ணுகின்றானே, அதனால் தான் மனிதன் முட்டாள் என்பது எங்கள் கருத்து. அது மட்டுமில்லாமல், இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே, கர்மத்தையும் அழகாக சம்பாதித்து கொள்கின்றான் மனிதன்.

105.இந்த நாட்டில் வருடா வருடம்  காணாமல்  போகும் குழந்தைகள் பெண்கள் அதிகரித்து வருகிறது. ஏதேனும் செய்யுமாறு வேண்டுகிறோம்.

அப்பனே! எது என்று அறிய! அறிய! அப்படி இல்லையப்பா! யாங்கள், காப்பாற்றிக் கொண்டேதான் இருக்கின்றோம் அப்பா! எங்கு சேர்க்க வேண்டுமோ, அங்கே சேர்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். எங்களுக்கும் கருணை உள்ளதப்பா. 

106. மக்களை நசுக்காத, நாட்டு வளங்களையும், மக்களையும் கொள்ளை அடிக்காமல் நாட்டு நலனுக்காக  பாடுபடும் உண்மையான நல்ல தலைவர்களை தருமாறு வேண்டுகிறோம்.

அப்பனே! எது என்று அறிய! அறிய! அப்பனே! முதலில் மனிதனை திருத்த வேண்டும்! அதாவது எவ் மனிதனை என்றால், கீழ் தரமான எண்ணங்கள் உள்ள மனிதனை. திருத்த வேண்டும். இப்படி கீழிலிருந்து மேல் நோக்கி சென்றால் தான் அனைத்தும் செய்ய முடியும். இப்பொழுது அதைப் போலத்தான் செய்து கொண்டிருக்கின்றோம், சற்று பொறுத்து இருக்க.

107. உத்தராயண காலத்தில் உயிர் துறப்போர்க்கு மறுபிறவி இல்லை என்பது  கலியுகத்தில் எல்லோர்க்கும் சாத்தியமா ஐயா!

அப்பனே! தெரியாமலே கேட்கின்றேன் அப்பனே! கொலை செய்து விடுகின்றான் அப்பனே! நீ கேட்டாயே, அவ் நேரத்திலே இறந்து விடுகின்றான் அப்பனே! எப்படி அப்பா! இதெல்லாம், நியாயமாகும், தர்மமாகும். 

108. தஷ்ணாயனம் பற்றியும் கூறுங்கள் ஐயா!

அப்பனே! இதனைப்பற்றி யான் நிச்சயம் குறிப்பிடுகின்றேன் அப்பனே! மனிதனின் எண்ணங்களை நல் எண்ணங்களாக மாற்றம் அடையச்செய்து பிற உயிர்களையும், தன் போல் நினைத்து தான தர்மங்களை செய்துவர அப்பனே! இதனைப்பற்றி விவரமாக குறிப்பிடுகின்றேன் அப்பனே! இல்லை என்று யான் சொல்லவில்லை. 

109. கிராமங்களில், கருப்ப ஸ்வாமிக்கு பூஜை என்பது பல விதமாக செய்யப்படுகிறது. அநேகமாக உயிர் பாலி கொடுக்கிறார்கள். சரியான பூஜை எப்படி செய்ய வேண்டும்?

அப்பனே! இதை பற்றியும் யான் சொல்லிவிட்டேன் அப்பனே. அன்பை செலுத்துங்கள் அப்பனே! அவன்தன் ஏதோ ஒரு ரூபத்தில், மனதில் புகுந்து சொல்வான் அப்பனே! இவ்வளவுதான் அப்பனே! ஒன்றுமே இல்லை. ஆனால், மனதில் அழுக்குகளை வைத்துக்கொண்டு இதனை செய்தால், ஒன்றும் தெரியாமல் போய்விடும், பாபத்தை சம்பாதித்துக் கொள்வாய் அப்பனே! ஒரு மண்டலம் முன்பிருந்தே, இதை இப்படி செய்யலாமா? யான் தவறு செய்கிறேனா? என்று மனதில் எண்ணி எண்ணி அவனிடத்தில் முறையிட்டுக் கொண்டிருந்தால், அதாவது, எங்கு நீ தவறு செய்கின்றாயோ அவன் இருப்பிடத்திற்கே சென்று, சென்று நல் முறையாக தியானங்கள் செய்து கொண்டிருந்தால்,  நிச்சயம் உன்னுள் அறிய வைப்பான்.

110. மூளை/மன வளர்ச்சி உடைய குழந்தைகள் எந்த கர்மாவினால் பிறக்கிறார்கள்? அதிலிருந்து விடுபட்டு பிற குழந்தைகள் போல் வாழ பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்.

அப்பனே! இல்லையப்பா! இவை எல்லாம் கர்மா இல்லையப்பா! மனித ஜென்மங்கள் தானப்பா. அதாவது திருமணம் செய்யும் பொழுது, ஒருவருக்கொருவர் உந்தனுக்கு, எனக்கு பிடிக்கவில்லை, பின் உந்தனுக்கு அவந்தனுக்கு பிடிக்கவில்லை. பொறாமைகள், போட்டிகள், இவ்வளவு சம்பாதித்து வைத்துளாய், பணங்கள் எங்கே, நகைகள் எங்கே? அப்பனே! இப்படியெல்லாம் இருந்தால், அப்பனே, மூன்று மாதத்தில், ஒரு குழந்தைக்கு, அனைத்தும், கேட்கத் தெரியும் என்பேன் அப்பனே! அதாவது இவ்வாறுதான் நடை பெற்றுக் கொண்டு இருக்கின்றது. இவை எல்லாம் யாராலும் கணிக்க முடியாது என்பேன் அப்பனே. இப்பொழுது யார் தவறு செய்கின்றான் என்று தெரியுமா? அதனால்தான், சித்தர்கள், மனிதர்களை காரி துப்புகின்றார்கள் அப்பனே. அப்பனே நீயும் கெடுவதில்லை, மற்றவர்கள் வாழ்வையும் கெடுத்து வருகின்றாயே, பின் உன் வாழ்வு எப்படி நன்றாக இருக்கும்? யோசித்தாயா? மீண்டும் குழந்தை பிறந்துவிட்டால், அய்யய்யோ! இப்படி பிறந்துவிட்டதே யாங்கள் திருத்தலத்துக்கு சென்றாலும் ஒன்றும் ஆகவில்லையே! முதலில் நீ என்ன செய்தாய் அப்பனே! அதனால், திருமணங்கள் செய்தால் சந்தோஷமாக வாழ முடியும் என்றால் செய்து கொள்ளுங்கள், இல்லை என்றால், பைத்தியக்காரனாக திரிந்து கொள்ளுங்கள் அப்பனே! அப்படி பிறந்த குழந்தைகளை, நிச்சயம் நாங்கள் சாதாரணமாக மாற்றி விடுகின்றோம், கவலையை விடு. அதனால் தான் குழந்தையின் மூன்று மாதத்திலிருந்து  மனத்துள்ளே, ராமாயணம், மகாபாரதம் உரைத்து, பலப்பல திருத்தலங்களுக்கு எல்லாம் அழைத்து செல்லுங்கள் என்று கூறிக் கொண்டிருக்கின்றோம். ஒரு குழந்தை அப்படி சென்று கொண்டிருந்தால் அப்பனே! அவன் இளவயதிலேயே  ஞானி ஆகிவிடுவான் அப்பனே! அனைத்தும்  இறை பாதையில் தெரியும். ஆனால், இப்பொழுது அப்படி இல்லையப்பா! பொழுது போக்குகளாக எதை எதையோ செய்துவிட்டு, கேட்கின்ற குழந்தைகள், அப்படியே ஆகின்றது!

111. சித்தர் பெருமக்களின் சமீபமும், அதனால் ஏற்படும் தேக மாற்றங்களையும் அடியேங்கள் உணர்ந்து கொள்வது எவ்வாறு இருக்கும்?

அப்பனே! எவை என்று அறிய! அறிய! குறைகள் இல்லை! அவனிடம், பாபங்கள் நசிக்கின்ற பாபநாசனிடத்தில் செல்லச் சொல் அப்பனே! இதற்கு உரைக்கின்றேன் நிறைவாக! எங்கள் மார்கத்தில் வந்தாலே அதை உணர முடியும்.

112. சித்தர் மார்கத்தில் இருக்கும் சராசரி மனிதர்கள், விதியின் படி எல்லாம் நடக்கும் என்று உணர்வதால், நித்திய வாழ்க்கை எவ்வாறு வாழ வேண்டும்?

அந்த வழியில் நடந்தால் யாங்கள் அருகிருந்து வழிகாட்டுகிறோம்.

அகத்தியர் அடியவர்களே! அகத்தியரின் பொதுவாக்கு நிறைவு பெற்றது. மீண்டும் அடுத்த முறை தெரிவிக்கிறேன்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment