​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 7 March 2013

சித்தன் அருள் - 114


[வணக்கம் அகத்தியர் அடியவர்களே!  இத்தனை நாட்களாக சித்தன் அருள் தொடரை நாம் அனைவரும் வாசித்து வந்துள்ளோம்.  மனித மனது சிலவேளை நல்ல விஷயங்களை மறந்து விடும் குணமுடையது.  எத்தனை தான் யோசித்தாலும், தக்க நேரத்தில் நினைவுக்கு வராது.  ஆதலால், இதுவரை எழுதியதிலிருந்து நல்ல விஷயங்களை மட்டும் தொகுத்து மறுபடியும் உங்கள் முன் தரலாமா என்று ஒரு யோசனை வந்தது. உங்கள் மேலான பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.  பதில் சொல்லுங்கள்! சித்தன் அருளை தொடருவோம்!] 

ஜீவ நாடி வழி தமிழ் மொழியில் எழுத்து வடிவாக வந்து பலருக்கும் வழிகாட்டிய அகத்தியர் பிரச்சினைகளுக்கு மட்டும் தான் வழி சொல்வார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  சில நேரங்களில் அதிகம் வெளியே தெரியாத பல மகான்களை பற்றியும், சித்த மார்கத்தில் சென்று வெற்றி கண்டு வெளி உலகறியாத சித்தர்களையும் பற்றியும் கூறுவார் என்று ஒரு முறை ஏற்பட்ட அனுபவம் மூலம் அறிந்துகொண்டேன்.

அப்படி ஒருநாள், காலை த்யானம், பூசை, பிரார்த்தனை எல்லாம் முடிந்த பின் பூசை அறையை விட்டு வெளியே வந்து பார்க்க, அன்று நாடி படிக்க வேண்டிக்கொண்டு  யாருமே வரவில்லை.  "பரவயில்லையே! நமக்கு இன்று விடுமுறை தான், நிம்மதியாக இருக்கலாம்" என்று நினைத்தேன்.

பொதுவாகவே அகத்தியர் நாடி என்னிடம் வந்த பின்னர் அமைதியாக எந்த செயலும் இன்றி மௌனமாய் அமர்ந்தது என்பது மிகக் குறைவு.  காலை நேர பூசை, த்யானம் போன்ற நேரம் தவிர, யாராவது ஒருவர் வந்து நாடி வாசிக்க சொல்ல, அவர்களுக்கு நாடியில் வரும் விஷயங்களை, உள்வாங்கி சொல்லும் போது, அது அப்படியே எனக்குள் ஒரு புது அவதாரம் எடுக்கும்.  எனக்கே அந்த நிகழ்ச்சி நடப்பது போல் உணருவேன்.  இதனால் மன உளைச்சல், மன வருத்தம் போன்றவை பட்ட நிமிடங்கள் தான் அதிகம்.  ஏனோ, எல்லோரையும் ஒரே கோணத்தில் பார்ப்பதால் வந்த வினையோ என்னவோ.

இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு நேர் எதிர் விதமாக அன்று அமைந்ததை கண்டு சந்தோஷப்பட்டு, உலக நடப்புகளை அறிந்து கொள்ளலாம் என்று நாளிதழை புரட்டினேன்.  சிறிது நேரம் வாசித்தும் மனம் எதிலும் ஒன்றாமல், சும்மாவேனும் அகத்தியர் நாடியை புரட்டுவோம், அகத்தியர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமே என்ற நப்பாசையில் நாடியை எடுத்து முறையாக பிரார்த்தனை செய்த பின் "ஏதேனும் சொல்கிறாரா?" என்று பார்த்தேன்.

எதிர் பார்த்தது போலவே, அகத்தியர் நாடியில் வந்து, அதிகம் வெளி உலகறியாத ஒரு சித்த புருஷரை பற்றி கூறினார்.  அதை பார்ப்போம் இன்று.

அவனுக்கு ஒரு பதிமூன்று வயதிருக்கும்!  அன்று வீட்டில் ஏற்பட்ட ஒரு வாக்கு வாதம் காரணமாக கோபமடைந்து வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டான்.  கால் போன போக்கில், கட்டுப்பாடின்றி, மனம் அலைந்தபடி எங்கெங்கோ நடந்து சென்ற அவனிடம் அடுத்த நேர பசிக்கு கூட ஏதேனும் வாங்கி சாப்பிட காசு இல்லாத நிலை.

பசி வயிற்றை கிள்ள என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு டீ கடை முன் யாரேனும் ஏதேனும் சாப்பிட தருவார்களா என்று எதிர் பார்த்து நின்றான்.  யாரும் அவனை கண்டு கொள்வதாக தெரியவில்லை.  இரவும் வெகு வேகமாக பரவத்தொடங்கிய நேரம். வீட்டுக்கும் திரும்பி போக மனம் ஒப்பவில்லை.  ஒன்றும் சாப்பிட கிடைக்காத அசதியில் கண் அயர்ந்தான்.  இரவு மணி பத்தை நெருங்கியது.

யாரோ தன்னை தட்டி எழுப்புவதை உணர்ந்து எழுந்தவன், தன முன்னே ஒரு சாது நிற்பதை கண்டான்.  

மிகுந்த கனிவுடன் அந்த சாது அவனிடம் சில பழங்களை கொடுத்து சாப்பிட சொல்லி, தானே சென்று அருகிலிருந்த கடையிலிருந்து "டீ" வாங்கி கொடுத்தார்.  அப்பொழுது இருந்த பசிக்கு அந்த சாதுவுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கூட தோன்றாமல் அவசர அவசரமாக சாப்பிட்டான்.

அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை பொறுமையாக இருந்த அவர்

"ஏன்பா! நீ என் கூட மலைக்கு வருகிறாயா?" என்றார்.

பசி அகன்ற சந்தோஷத்தில் அந்த பையன் "சரி" என்று தலையாட்டினான்.

அவனையும் அழைத்துக் கொண்டு அவர் மலையை நோக்கி நடக்கத்தொடங்கினார்.

அவர்கள் சென்று சேர்ந்த இடம், திருநெல்வேலிக்கு அருகே இருக்கும் "நம்பி மலை".

மலையின் மேலே ஒரு நீரோடையின் அருகில் இருந்த ஒரு மரத்தடியில் அவனை அமரச்செய்து, மந்திர உபதேசம் செய்து விட்டு,

"நான் திரும்பி வரும் வரை, நீ இந்த மந்திரத்தை ஜெபித்துக்கொண்டு த்யானத்தில் இரு.  பசித்தால் இந்த பச்சிலைகளை உண்ணு.  தேவை ஏற்படும் போது இந்த ஊற்றிலிருந்து நீரை குடித்துக்கொள்" என்று கூறி செல்லத்தொடங்கினார்.

சட்டென்று நினைவு வந்தவனாக "நீங்கள் எப்போது திரும்பி வருவீர்கள்?" என்றான்.

"நான் நிச்சயமாக உன்னை வந்து சந்திப்பேன்" என்று கூறி சென்றார் அவர்.  அவனுக்கு தெரியாது அவர் திரும்பி வர வெகு நாட்களாகும் என்று.

அவர் சொன்னபடியே த்யானத்தில் அமர்ந்து, அவர் சொல்லிப்போன மந்திரத்தை ஜெபித்துக்கொண்டிருந்தான்.  அவர் வருவதாக காணேம்.  இருட்டும், நடு இரவு நேரமும் சேர்ந்த தருணத்தில் வன விலங்குகளின் மிக ஆக்ரோஷமான சப்தங்கள் அவனை உலுக்கியது.  கண்ணை திறந்து பார்க்க நிலா வெளிச்சத்தில் உயரமாக வளர்ந்த மரங்களின் நிழல்கள் கூட அவனை பயமுறுத்த, ஒரு மனிதர் கூட அருகில் இல்லாததை உணர்ந்த அவன் தன்னை காப்பாற்ற யாராவது வரமாட்டார்களா என்று நினைத்து "இனி! அவர் சொன்ன மந்திரம் ஒன்று தான் நம்மை காப்பாற்றும்" என்று தீர்மானித்து கண்ணை இருக்க மூடிக்கொண்டு மந்திரத்தை ஜெபித்தபடி வெளியுலக நினைவை மறக்க எத்தனித்தான்.

மந்திர ஜெபம் மேலும் மேலும் தொடர, அவனுள் புது தைரியம் பிறந்தது.  ஒரு நிலையில் உடல் மிக மென்மையாக மாற, மிக வேகமாக உற்சாகமானான்.  மந்திரத்தை தொடர்ந்தபடி இருந்தான்.

அந்த சாது திரும்பி வரவே இல்லை.

இரவு முதல் ஜாமத்தை நெருங்க, திடீரென ஒரு வெளிச்சம் அவன் முன் தோன்றியது.  அசரீரியாக வார்த்தைகள் அதிலிருந்து அவனுக்கு உத்தரவாக வந்தது.

"இன்று முதல் நீ நம்பிமலை சித்தன் என்று அழைக்கப் படுவாய்.  உன்னில் சித்தத் தன்மை உருவெடுக்கும்.  இந்தக் காட்டில் வந்து இறைவனை வழிபட வரும் அனைவருக்கும் இங்கு உலவும் மிருகங்களிடமிருந்து பாதுகாப்பு அளித்து தொண்டு செய்வாய்" என்றது.

அந்த நிமிடம் முதல் அவனுக்குள் உடல் ரீதியாக பல மாற்றங்கள் உருவாகத்தொடங்கியது.  அனைத்தையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தவன், அவன் சுவாச முறையில் யாரோ உள்ளுக்குள் புகுந்து நிறைய மாற்றங்களை செய்வதை உணர்ந்தான்.  அது, அந்த நிமிடம் அவன் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக இருந்தது.  அன்று முதல் அவன் சித்தனாக மாறினான்.

அந்த சித்தன் தன் தவ வலிமையினால், பின்னர் தனக்கு சித்தத் தன்மையை அருளியது காலங்கிநாதர்  சித்தர்  என்பதை உணர்ந்து, அவரை குருவாக ஏற்றுக்கொண்டு இன்றும் நம்பி மலையில் உலா வருகிறான்.  தன் தபோ வலிமையினால் நம்பி மலையை வற்றாத செல்வ வளமுடைய, செழிப்பான மலையாக மாற்றி, அங்கிருக்கும் மிருகங்களின், மிருகத் தன்மையை கட்டுப் படுத்தி, நம்பிமலை பெருமாளை வழிபட வரும் பக்தர்களை, மலை ஏற தொடங்குவது முதல், தரிசனம் செய்து கீழே வந்து சேரும் வரை, அரூபமாக கூட நின்று காக்கின்றார்.

இந்த நிகழ்ச்சியை அகத்தியர் உரைத்த போது ஒரு விஷயம் தெள்ளத் தெளிவாக புரிந்தது.  சித்தன் என்பவன் எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் உதயமாகலாம்.  நாம் எந்த மலைக்கு சென்றாலும், அங்கேயும் அரூபமாக ஒரு சித்தபெருமான் இருந்து நமக்கு அருள காத்திருப்பார்.  நாம் தான் அதை புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.

சித்தன் அருள்........... தொடரும்!