​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 25 November 2013

அகத்தியர் தெளிவுபடுத்துகிறார் - இறை அனுபவம்!


நம்மில் பலருக்கும் பல நிலைகளில் இறை அனுபவம், இறை தரிசனம் என்பவை கிடைத்திருக்கும். அகத்திய பெருமான் கூற்றுப்படி நாம் இது வரை வாழ்ந்த வாழ்க்கையில் ஏதோ ஒரு நொடியில் இறையுடன் கலந்து இருந்திருக்கிறோம், ஆனால் நாம் அனுபவித்தது இறைவனை, அது தான் இறைவன் நிலை என்று உணருவதில்லை என்கிறார்.  எப்படி? 

உதாரணமாக, சர்க்கரை இனிக்கும் என்று பிறர் சொன்னால், நாம் ஆம் என்போம். ஏன்? நம்முள் எப்படிப்பட்டது இனிப்பு என்றும், சர்க்கரை என்று சொல்லக்கூடிய அந்த வஸ்துவின் சுவை எப்படி இருக்கும் என்றும் ஒரு முன் பதிவு (அனுபவம் எனலாம்) இருக்கிறது.

ஆனால், இறைவன் என்பவன் எல்லாவற்றையும் கடந்து நிற்பவன், அவன் நம் உணர்வுகளுக்குள் எப்படி இருப்பான் என்று, நமக்கு ஒரு முன் அனுபவத்தை, இப்படித்தான் இருக்கும் என்ற நிலையை ஒரு போதும் பதித்ததில்லை. ஆனால் அகத்திய பெருமானோ நீங்கள் அனைவரும் இறைவனை, அந்த நிலையை ஒரு முறையேனும் உணர்ந்திருக்கிறீர்கள் என்கிறார்.

ஒரு மனிதனுக்கு இரண்டு தேகங்கள் உண்டு. ஒன்று ஸ்தூல உடம்பு - நம் பௌதீக உடம்பு, இரண்டு - சூக்ஷும உடம்பு.

ஸ்தூல உடம்பில் உணர்வுகளால் தூண்டப்பட்டு நிற்கும் நிலையில், அது சூக்ஷும உடம்பில் பதிவு செய்யப்படும். சூக்ஷும உடல் முடிகிறவரை அந்த நிலையை எட்டப்பார்க்கும் அல்லது பதிவு செய்து கொள்ளும்.

ஒரு மனிதன் கோயிலிலோ, சமாதியிலோ, த்யானத்திலோ இறைவனை, பெரியவர்களை நினைத்து, ஆழ் நிலையில் சென்று ஆனந்தப்பட்டு அதிலும் ஒரு உயர் நிலையில் செல்லும் போது "உடல் உருகி, உள் உருகி, பேரானந்தத்தில் பௌதீக உடலின் உணர்வழிந்து, எங்கு இருக்கிறோம் என்று பிரித்தறியாத நிலையில், அவனது சூக்ஷும சரீரம் அந்த நேரத்தில் அவன் த்யானிக்கும் அந்த இறை, மகான் போன்றவர்களின் ஆத்ம நிலையுடன் ஒன்றி பிணைந்து நிற்கும். அந்த நிமிடம் அது உணருகிற நிலை தான் இறைவன். ஏனென்றால், இறை சக்தியுடன் பிணைந்து நிற்கும் நிலையில் அவன் ஆத்மா, இறையாக மாறிவிடுகிறது. இது ஒரு வினாடியில் நடந்து விடுகிற நிகழ்ச்சியாயினும், என்ன நடந்தது என்பதை அந்த ஒருவனால் பௌதீக உடலால், அறிவால் வேறு படுத்தி பார்க்க முடியவில்லை. சித்தர்களாகிய எங்களுக்கே ஒருவன் எத்தனை முறை இறை அனுபூதியில் ஒன்றி இருந்திருக்கிறான், எத்தனை தூரம் அந்த ஆத்மா சுத்தம் அடைந்துள்ளது என்பதை பகுத்தறிய முடியும்.

ஒவ்வொரு முறையும் த்யானத்தில் ஆத்மாவும், உடலும் சுத்தம் அடைகிற பொழுது பெரியவர்கள் தொடர்பு மிக எளிதாகும். இதனால் தான் த்யான வழியில் செல்வதை, நீண்ட த்யானத்தை சித்தர்கள் அறிவுறுத்துகிறார்கள் என்பது புரிகிறது.

அப்படி ஒரு நிலையை இனி அடையும் போது இனியேனும் ஒரு மன தெளிவுடன் இருப்போம்,

நன்றியை அகத்திய பெருமானின் திருப்பாதத்தில் சமர்ப்பிக்கிறேன்!

கார்த்திகேயன்!