மூன்றாவது கேள்வி: ஓம் அகதீஸ்வராய நமஹ! எல்லா பெரியவங்களுக்கும் வணக்கன். எப்படி கேட்பது என்று தெரியவில்லை, எங்க தொடங்குவது என்பது புரியல. முன்னர் அய்யா சொன்னாங்க, இனி பிறப்பெடுத்தாலும் உன்னையே நாடி வரும் மனம் வேண்டும் என்று. அப்படி ஒரு பெரியவர் மதுரையில் பழங்காநத்தம் அருகில் காசி விஸ்வநாதன், விசாலாட்ச்சி அம்மையார் ஆலயத்தை பராமரிச்சிட்டு வராங்க. அவங்க பெயர் கிருஷ்ணையா. அவங்க வந்து பதஞ்சலி மகா முனிவர வந்து, குருவா ஏத்துக்கிட்டு, அவரை நாடி வரக்கூடிய நல்ல ஆத்மாக்களுக்கு யோகத்தை பயிற்றுவிக்கிறாங்க. அப்படி பயின்று வரக்கூடிய ஒரு சீடரின் பெயர் சிவஞானம். அவருக்கு வந்து, ஒரு பெரியவர் அழைத்துச் சென்று, "இந்த இடத்தில் கோவில் கட்டு" என்று சொல்லிட்டுப் போயிட்டாங்க. அந்த இடம் வந்து மதுரைக்கு அருகில், வேலூர் அருகில் அரிட்டாப்பட்டி. அங்க வந்து ஈஸ்வர ஆலயம். அந்த இடத்தைப் பற்றி வரலாறு என்ன சொல்லறாங்கன்ன, ஒரு மகரிஷிக்கு அம்மை அப்பனே காட்சி கொடுத்து, நானே உன்னுடைய தாய் தந்தை என்று அருளாசி கொடுத்ததாகச் சொல்லறாங்க. அந்த கோவில் கட்டக் கூடிய பணிக்குத் தேவையான செல்வம் கிடைப்பது என்பது மிகக் கடினமாக இருக்கிறது. அத எப்ப, எப்படி கட்டி முடிப்பாங்க? எப்படி நடக்கும். அது க்ரிஷ்ணய்யவினுடைய தலைமையில் தான் நடக்கும் என்று விஸ்வாமித்ரா நாடில வந்ததாகச் சொன்னாங்க. தற்போது பதஞ்சலி மகா முனிவருடைய நாடில வேறு விஷயங்கள் வருகிறது. அந்த கிருஷ்ணையாவினுடைய தலைமையில யோகம் பயிலும் மாணவர்களுக்கு ஆசி கிடைக்கவும், கோவில் கட்டுகிற பணி நல்லபடியாக நடக்கணும். அது கிருஷ்ணையா தலைமையில் நடந்தால் மிகச் சிறப்பு. இன்று சுயநலமில்லாம, மாணவர்களுக்கு நல்ல விஷயங்களை கற்றுக் கொடுத்து, நல வழி செல்வதற்கான நல்ல விஷயங்களை போதிக்கிறாங்க. நல்லோர்கள் நல்ல படியாக வாழ்ந்தால், அவர் வழி செல்லும் மாணவர்களும் நல்ல வழியில் செல்வார்கள். இப்படிக்கு, அந்த காசி விஸ்வநாதர், விசாலாக்ஷி அம்மையார் கோவில், நல்ல படியாக கட்டி முடிக்கவும், அவர் கீழ் பயிலும் மாணவர்கள் நல்ல படியாக முன்னேறவும், அய்யா நல அருளாசி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
அகத்தியர் பதில்:- இறைவனின் கருணையை கொண்டு, இயம்புவது யாதென்றால், இகுதப்ப, ஆன்மா லயிக்கின்ற இடம் ஆலயமாகும். மனிதன், மனதிற்குள், ஒவ்வொரு மனிதனும் தத்தம் மனதிற்குள் ஆலயத்தை எழுப்புவதும், மனமாகிய கருவறையிலே, தூய இறையை அமர்த்தி, அன்றாடம் அன்பால் பூசை செய்வதையுமே, இறைவன் விரும்புவது. இருப்பினும், எடுத்த எடுப்பிலேயே, இது போன்ற தத்துவார்த்த விஷயங்களை கூறினால், அது பலனை தராது என்பதால் தான், புற வழிபாடுகளும், புற பூசைகளும், முன்னோர்களான மகான்களால் தான் வைக்கப் பட்டு வருகின்றன. இகுதப்ப, பல் வேறு ஆலயங்களிலே, பல் வேறு கால கட்டங்களில் கட்டப்பட்டு, அது காலம் கடந்து நிற்கிறது, சில சிதிலம் அடைந்து விடுகிறது. இவை அனைத்திற்குமே, பல்வேறு விதமான சூட்ச்சுமா காரணங்கள் இருக்கிறது. இகுதப்ப, இம்மகன் எழுப்பிய வினாவின் அடிப்படையிலே, இகுதப்ப ஆலயம் சிறப்புடன் வளர, யாம் இறைவன் அருளால், நல்லாசிகள் கூறுகிறோம். எந்த ஒரு ஆலயமும், மெய்யாக மெய்யாக வளர, மெய் அன்பர்கள் ஒன்று பட்டால் போதும். அங்கே அருள் இணைப்பு இருந்தால் போதும். பொருள் இணைப்பு மிகப் பெரிய விஷயம் அல்ல. இறைவன கருணையால், இனிதே நடக்கும். இந்த தமிழ் மண்ணில் உள்ள மூத்தோனுக்கு தலை சிறந்த ஆலயங்கள். அங்கெல்லாம் தொடர்புடைய மனிதர்கள் சென்று, இயன்ற வழிபாடுகள் செய்து, பணியை துவக்க, நலம் நடக்கும். நல்லாசிகள்.
நான்காவது கேள்வி:- சூலகிரில வரதராஜ சுவாமி கோயில் இருக்கு. அர்ஜுனன் பிரதிஷ்டை பண்ணின சுவாமி அது. அபயஹச்தம் அது. (ஆனால் கோவில் அதிகமாக வளர்ச்சி அடையவில்லை.)
அகத்தியரின் பதில்:- இறைவன் கருணையாலே, அனைத்து பிராண சம்பவங்கள் நடந்தது உண்மை. தக்க காலத்தில், வலிவும், பொலிவும், அகுதப்ப சூழல் உருவாகும். ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஒரு ஆலயம் வளர்ச்சி பெறுவது என்பது மனிதர் நோக்கிலே இருப்பது அல்ல. பெருவாரியான ஆட்கள் ஒரு ஆலயத்தை நோக்கி படை எடுத்தால் என்ன ஆகும்? அங்கு வெறும் வியாபாரம் தான் இருக்கும். இறை அம்சம் இருக்குமா? எனவே, ஒரு ஆலயம் அத்தனை எளிதாக பலரின் பார்வைக்கு வரவில்லை, பலரும் அவரை எண்ணிக் கூட பார்க்கவில்லை என்றால், சிலர் மட்டும் செல்கிறார்கள் என்றால், அதனால் அந்த ஆலயத்திற்கு குறை ஒன்றும் அல்ல. தொடர்ந்து, அந்தந்த காலத்தில், எந்தெந்த ஆத்மாக்கள், அந்த ஆலயத்தோடு தொடர்புடையவர்களோ, அவர்கள் வந்து தொண்டினை தொடர்வார்கள். சிறப்பாக அனைத்தும் நடக்கும். நல்லாசிகள்.
ஐந்தாவது கேள்வி:- மீண்டும் மீண்டும் கேட்கிறேனே என்று அவை என்னை மன்னித்தருள வேண்டும். சுயநலமற்று, மனித நேயத்தோடு, தமிழ் சார்ந்த, தமிழ் மக்களுக்காக, தமிழை வளர்த்த, அதற்காக சங்கம் ஏற்ப்படுத்திய, தமிழ் மொழிக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கின்ற, தமிழ் இறையனார் எம்பெருமானும், முருகவேளும், தமிழ் என்று எப்பொழுதும் ஒலித்து, அதற்கே ஆட்சி என்று கொடுத்த இந்த தருணத்திலே நாம் கேட்பது, காவிரியை கொடுத்த அகத்தியர், கர்நாடகத்திலே கொடுத்தாலும், தமிழ் மக்களுக்கு சென்று பலன் அளிக்கிறது என்று ஒருவாறாக கூறாமல், என்று இந்த காவிரி பிரச்சினை, பொதுவாக தீர்க்கப்படும் என்று வேண்டி உங்களிடம் மன்றாடி கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தில் பிறந்தவனோ, கர்நாடகத்திலே பிறந்தவனோ, உலகத்தில் இருக்கின்ற அனைவருமே அருந்தக்கூடிய, அந்த கங்கை நதியே இங்கு காவிரியாக வந்து அனைவரும் பெறுவதற்கு தகுதி இருக்கும் பொழுது, ஒருவருக்கொருவர், சமாதானமின்றி, சண்டையிட்டுக் கொள்வது என்று முடியும் என்று வேண்டி பொதுநலக் கருத்தோடு நான் கேட்டுக் கொள்கிறேன்.
அகத்தியர் பதில்:- இறைவனின் கருணையை கொண்டு இயம்புகிறோம் அப்பா. மனிதர்கள் இருக்கும் வரையிலும், மனிதர்க்குள்ளே, பிரச்சினைகளும், அமைப்புகளும், எக்குதப்ப சிக்கல்களும் இருந்து கொண்டுதான் இருக்கும். காரணம் காலம் தோறும் மாறலாம். ஆனால், மனிதர்களிடையே பகைமையும், கருத்து வேறுபாடுகளும் இருந்து கொண்டேதான் இருக்கும். எனவே. மனிதருக்குள், தனிமனித ஒழுக்கம், தனி மனித பண்பாடு, வளராதவரை, இதை எதனாலும், யாராலும் ஏற்க முடியாது. இது மனித ரீதியான பார்வை. விதியும், கர்மாவும் எப்படி அமைக்கப்பட்டிருக்கிறதோ, அப்படித்தான் மனித மனம் செல்லும். இருந்தும், நாங்கள் இறையிடம் பிரார்த்தனை வைத்து, என்றும் சமாதான லோகம் இருக்க வேண்டும் என்று அன்றாடம் தவம் செய்து கொண்டு தான் இருக்கிறோம். இகுதப்ப, இங்குள்ள மனிதர்களும், அங்குள்ள மனிதர்களும், எல்லா மனிதர்களும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். இந்த உலகம் மட்டுமல்லாது, அனைத்தும் இறைவனால், படைக்கப்பட்டது. எனவே, இதில் யாரும் ஆண்டானும் இல்லை, யாரும் அடிமையும் இல்லை. எல்லோருக்கும், எல்லாம் பொது என்கிற ஒரு உணர்வு, ஒவ்வொரு தனிமனித மனதிலும் வரவேண்டும். அப்படி வருவது கடினம் என்றாலும், வர வேண்டும், வர வேண்டும் என்று எப்பொழுதுமே இறையிடம் வரம் வேண்ட, அகுதப்ப வரம் வரவேண்டும் என்று யாமும் நல்லாசி கூறுகிறோம்.
சித்தன் அருள் ................. தொடரும்!
