வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
ஒரு மனிதன் தான் வாழும் காலத்தில், கெட்ட கர்மாக்களை அனுபவித்து கழிக்கவோ, குறைத்துக்கொள்ளவோ அகத்தியப்பெருமான் கூறும் வழி, புண்ணியத்தை செய்! நல்ல கர்மாவை சேர்த்துக்கொள் என்பதே. புண்ணியத்தை செய்யா விடினும், கெடுதல்களை பிறருக்கு செய்யாதே என கூறுகின்றார். இதன் எளிய அர்த்தம் அமைதியாக, மிக எளிமையாக வாழ்ந்தாலே, மனிதனுக்கு அவன் எழுதி வாங்கி வந்த கர்மாக்களை எப்படி கரைப்பது என சித்தர்கள் தெரிவிப்பார்கள். ஆயினும், மனிதன் வாழும் பொழுது இல்லாத ஆட்டம் எல்லாம் ஆடிவிட்டு இறுதி காலகட்டத்தில் புத்தி விழித்துக்கொள்ள, உடலும் ஒத்துழைக்காமல் தான் செய்ததவறுகளை உணராமல், கரைக்க வழி தேடுவான். அவன் உடலை விட்டு உயிர் பிரியும் சமயத்தில் அந்த ஆத்மாவிற்கு ஏதாவது ஒரு வாசல் தேவைப்படுகிறது.
அகத்தியப்பெருமான் இயற்றிய கர்மகாண்டத்தில் பிராணன், உடலில் இருக்கும் துவாரங்கள் வழியாக வெளியேறுவதாக கூறியுள்ளார். அவ்வகையில் எந்தெந்த வாசல் வழியாக உடலில் இருந்து உயிர் பிரிந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? நம்முடைய பாவங்களுக்கும், புண்ணியங்களுக்கு ஏற்றவாறு தான் நம்முடைய ஜீவன் பிரியுமாம். அப்படி பார்க்கும் பொழுது
- பாவங்களை அதிகமாக செய்தவர்களுக்கு, அவர்களது இறுதி நேரத்தில் உயிர், மலவாசல் வழியாக நேரடியாக நரகத்திற்குச் சென்று விடுமாம். மறுபிறவியிலும் இவர்கள் படாதபாடு படவேண்டி இருக்குமாம்.
- அது போல் பாவங்களை தெரிந்தே செய்பவர்களுக்கு அவர்கள் இறக்கும் தருவாயில் சிறுநீர் கழிக்கும் இடத்தில் இருந்து உயிர் பிரிந்து விடும். மறுபிறவியில் அவர்கள் பலரிடமும் அவமானப்பட நேரிடும்.
- புண்ணியம் குறைவாகவும், பாவம் அதிகமாகவும் செய்தவர்களுக்கு அவர்கள் இறக்கும் தருவாயில் ஆத்மாவானது நாபிக்கமலம் வழியே பிரியுமாம். இவர்கள் மறுபிறவியில் ஊனமுற்றவர்களாக, தீராத நோயுடனும் கஷ்டப்பட வேண்டியது தான்.
- எவ்வளவு புண்ணியம் செய்திருக்கிறார்களோ அதே போல அதே அளவிற்கு பாவம் செய்தவர்கள் இறக்கும் தருவாயில் அவர்களுடைய ஆத்மா வாய் வழியே சென்று விடுமாம். இப்படியான உயிர்களுக்கு மறுபிறவியில் சாப்பாட்டுக்கு அலையும் மனிதர்களாக பிறப்பார்கள்.
- அதிகம் பாவத்தை செய்யாதவர்கள் இறக்கும் தருவாயில் மூக்கு துவாரம் வழியாக ஆத்மாக்கள் பிரிந்து விடும். இதனால் அவர்களின் மறு பிறவியில் நறுமணத்தை அதிகம் விரும்புபவர்களாக பிறப்பார்கள்.
- மிக சிறிதளவே பாவம் செய்தவர்கள் இறக்கும் நேரத்தில் காதுகள் வழியாக அவர்களுடைய உயிர் பிரியும். இதனால் அவர்களுடைய மறு பிறவியில் நிறைய விஷயங்களை காதால் கேட்டு கற்றுக்கொள்வதற்கு விரும்புவார்கள். மேலும் முக்தி கிடைக்க போராடுவார்கள்..
- புண்ணியம் செய்தவர்கள் கண்கள் வழியாக உயிர் பிரிய நேரிடும். இவர்களுடைய மறுபிறவியில் அறிவும், செல்வமும் கொண்டு உயர்வான வாழ்க்கையை வாழ்வார்கள். மேலும் பயபக்தியுடன், மோட்சத்தை தேடி, பழி பாவத்திற்கு அஞ்சி, நல்லபடியாக வாழ்வார்கள்.
- அது போல் பக்தி நெறியில் வாழ்ந்து எந்த உயிருக்கும் தீங்கு இழைக்காத உயிர்கள் சாகும் நேரத்தில் சுழுமுனை நாடி வழியாக உயிரை மேலே எழுப்பி பிரம்மாண்ட வழியை திறந்து மண்டை ஓட்டு வழியாக ஒளிமயமான ரூபத்தில் செல்லுமாம். இந்த உயிர்கள் மீண்டும் பிறவிகள் எடுக்காது.
ஆகவே, வாழும் காலத்தில் நல்லது செய்து வாழ வேண்டும் என அகத்தியப்பெருமான் கூறுகிறார்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்...........தொடரும்!
