​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 31 January 2017

சித்தன் அருள் - 581 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!

அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு


உடலின் ஏற்ற, மாற்றங்கள் ஆன்மாவைப் பாதிப்பதில்லை. ஆனாலும் கூட, இந்த உலகிலே ஆன்மாவைப் பார்க்கின்றவர்கள் யாருமில்லை. உடலைப் பார்த்துதான் எடை போடுவார்கள், மதிப்பீடு தருவார்கள். அப்படி ஆன்மா உயர்வாகவும், உடல் பிறரால் மதிக்கப்படாமல் இருக்கப்பட வேண்டும் என்கிற நிலைக்கு ஒரு ஆன்மா தள்ளப்பட வேண்டுமென்றால் அதற்கு ஏற்றாற்போல் பாவ, புண்ணியங்கள் இருக்க வேண்டும். அஃதொப்ப சில மகான்களும், ஞானிகளும் விரும்பியே, பிறர் தன்னை மதிக்கக்கூடாது என்பதற்காக, அழகற்ற தேகத்தைப் பெறுவதும் உண்டு. அஷ்டாவக்ரர் அப்படித்தான். அஷ்ட வக்ரம் எனப்படும் எட்டு விதமான கோணல்களோடு கூடிய உடம்பைப் பெற்ற பிறவியெடுத்தார். அவரைப் பார்ப்பவர்கள் எல்லாம் ஏளனம் செய்தார்கள். அது குறித்து அவர் வருத்தப்படவில்லை. ஏனென்றால் இந்த ஆன்மா பயணம் செய்வதற்கு ஏதோ ஒரு உடல் என்ற அளவில் மட்டும்தான் அதை நினைத்தார். தேகம் அழகாக இருக்க வேண்டும் என்பதை விட ஆரோக்யமாக இருக்க வேண்டும் என்பதில்தான் மனிதன் கவனம் செலுத்த வேண்டும். தேகத்தை விட ஆன்மா அழகாக இருப்பதே மனிதனுக்கு ஏற்புடையது.  ஆன்மாவிற்கு அழகு எது? என்றால் தர்மமும், சத்தியமும்தான். அதை மட்டும் ஒரு மனிதன் வளர்த்துக் கொண்டால் போதும். இஃதொப்ப நிலையிலே இந்த தேகத்திற்கு ஏற்படக்கூடிய வயோதிகம், இளமை, அழகு அனைத்துமே தேகத்தோடு முடிந்து விடுகிறது. ஆன்மாவை அணுவளவும் பாதிப்பதில்லை.