வணக்கம்!
ஸ்ரீ அகத்தியர் சித்தர் அருளால் நடக்கிற விஷயங்களில், அவர் மனித குலத்தின் மேன்மைக்காக, ஒரு தபஸ்வி என்பதையும் விட்டுவிட்டு, இறைவனிடம் நம் தவறுகளை மன்னிக்க எத்தனை போராட்டங்களை சந்திக்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம். ஒரு சில நிகழ்ச்சிகளில் சில விஷயங்கள் மறைக்கபடலாம், சூட்ச்சுமமாக சில உரைக்க படலாம். இப்படி அவர் செய்வதுகூட மனித குலத்தில் பிறந்த எவருமே ச்ரமங்களை அனுபவிக்கக்கூடாது என்கிற எண்ணத்தில் தான். ஏன் என்றால் அவரவர் கர்மா, ச்ரமங்களை கொடுத்துதான் தவறுகளை செய்யவைக்கும்.
மலை கோயில் பற்றிய விஷயங்களை பகிர்ந்து கொண்ட பின், பலரும் அந்த கோயில் எங்கு இருக்கிறது? எப்படி போக வேண்டும் என்று விசாரிக்க தொடங்கினர். எனக்கோ, இவர்கள் விசாரிப்பில் எங்கோ ஒரு தவறு உள்ளதே என்று தோன்ற, அந்த கோவில் இருக்கும் கிராமத்தின் பெயரை சொல்லாமல் மறைத்தேன். ஏதோ ஒரு உந்துதலில், யாராவது வீரமாக அங்கே போய் இரவு தங்கி, ஏதாவது ஏடா கூடமாக நடந்து விட கூடாதே! அந்த பயம் என்னை சூழ்ந்தது. பிறகு யாரிடமாவது அந்த நிகழ்ச்சியை பற்றி பகிர்ந்து கொண்டால் கூட, "ஈரோட்டையும்" விட்டு விட்டேன். இப்படி சொல்லப்போக, கேட்பவர் மிக ஆனந்தமான மன நிலையை அடைவதை பல முறை பார்த்திருக்கிறேன்.
நான் சந்தித்த மனிதர்கள், பல விதம். ஒரு விஷயத்தை சொல்லும் போது அவர்கள் எடுத்துக் கொள்கிற விதம் பல கோணங்களில் இருந்தது. இந்த உலகத்தில் தான் வித்யாசமானதை தேடுபவர்களும் இருக்கிறார்களே. ஆகவே நான் சந்திக்கிறவர்களை பல நிலைகளில் அடுக்க தொடங்கினேன்.
ஆன்மீக வழியில் அதை எடுத்துக்கொண்டவர்கள். அத்துடன் திருப்தி அடைந்தவர்கள்.
சித்தர் விளையாட்டுக்களை அனுபவிக்க நினைக்கிறவர்கள்.
அப்படிப்பட்ட கோயிலை பார்க்க நினைக்கிறவர்கள் ஆனால் போதிய தகவல் இல்லாததால் மனதுக்குள் நிகழ்ச்சியை ஒதுக்கி வைத்து என்றேனும் ஒருநாள் இறை அருள் இருந்தால் பார்க்கலாம் என்று அமைதியானவர்கள்.
அப்படிப்பட்ட கோயிலை பார்க்க நினைக்கிறவர்கள். இருப்பினும் போதிய தகவல் இல்லாததால் நாமே கண்டுபிடிப்போமே என்று இறங்குபவர்கள். இப்படிப்பட்டவர்கள் ஒன்று போதிய தகவலை கொடுக்காததால், அவர்கள் அகந்தையை கிளறிவிட்ட வகை, இரண்டு, முயற்சி செய்வோமே. நமக்கு இறை அருள் இருக்கிறதா? என்று தன்னையே சோதித்து கொள்பவர்கள்.
இந்த நான்காவது வகையினர் (ஒன்றாம் வகையில் பட்டவர்கள்) மிக ஆபத்தானவர்கள் என்று புரிந்து கொண்டேன். சொல்லாமல் கொள்ளாமல் எங்காவது தேடி போய் ஆபத்தை விலைக்கு வாங்கி வந்து ச்ரமங்களை அனுபவிப்பார்கள். நான்கு (இரண்டாம்) வகையினர், தன்னையே சோதனைக்கு உட்படுத்திக்கொள்வதால், இறைவன் நிறைய சோதனைகளை தருவார் ஆனால் முடிவு சுபமாக இருக்கும். இந்த வகையினரின் நிகழ்ச்சிகளில் இறை அருள், சித்தர் விளையாட்டு, பாதுகாப்பு எல்லாமே உறுதி செய்யப்படும். அதற்காக தவறு செய்தால், கூட நிற்பார்கள் என்று நினைக்க கூடாது. என்ன செய்தாலும், இது உங்கள் உத்தரவு, நான் வெறும் ஒரு கருவி. இதன் பலன்கள் உங்களையே வந்து சேரும். நான் எதுவும் செய்யவில்லை, என்கிற எண்ணங்களுடன் வாழ்ந்து வந்தால் சித்தர்கள் அருள் சின்ன சின்ன விஷயங்களில் கூட, நினைத்ததும் உள்ளங்கை நெல்லிக்கனியாக இருப்பதை உணரலாம்.
இப்படித்தான், ஒரு முறை ஒரு நபரை குடும்ப நிகழ்ச்சியில் சந்திக்க நேர்ந்தது. மலைகோயிலை பற்றி நிறைய விஷயங்களை சொன்னேன். முன்னரே இடம், வழி இவைகளை யாருக்கும் சொல்லக்கூடாது என்று தீர்மானித்திருந்ததினால், அதை வெளியிடவில்லை.
பொறுமையாக எதுவும் பேசாமல் அத்தனையும் கேட்டுகொண்டிருந்த "அவன்" அனைத்தையும் உள்ளுக்குள் க்ரகித்துக்கொள்கிறான் என்று எனக்கு புரியவில்லை. எல்லோரையும் போல், சொல்லி முடித்ததும்,
"அந்த கோவில் எங்கு இருக்கிறது?" என்றான்.
"அதை சொல்லுவதில்லை என்று தீர்மானித்திருக்கிறேன்" என்றேன்.
"சரி! இதுவரை சொன்னதுக்கு நன்றி!" என்று உடனே கூறி விடை பெற்றான்.
சற்று ஆச்சரியமாக இருந்தது. பொதுவாகவே இப்படிப்பட்ட விஷயங்களை பேசினால் மற்றவர்கள், மிகுந்த ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டிருப்பார்கள். இன்னும் ஏதாவது விஷயங்கள் வெளியே வருமா என்று ஆர்வத்துடன் காத்திருப்பார்கள்.அல்லது நிறைய கேள்விகளை கேட்பார்கள். இவன் முக பாவத்தில் ஒரு மாற்றமும் இல்லை. ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டான். சொல்ல முடியாது என்று சொன்ன உடன் "சரி" என்று சென்று விட்டான்.
"சரி" இவனும் மற்றவர்களை போல் நிகழ்ச்சிகளை கேட்பதில் மட்டும் விருப்பம் உள்ளவன் போல் என்று தீர்மானித்தேன். பிறகு அவனை ஒருபோதும் நேரில் சந்திக்கவில்லை. சில வருடங்கள் சென்றது.
ஒரு நாள் காலையில் வந்திருந்த சிலருக்கு நாடி வாசித்துக் கொண்டிருக்கையில், இரண்டு நண்பர்கள் வந்து, "அவன்" சொல்லி அனுப்பியிருக்கிறான், அவனால் வர முடியவில்லை. அகத்தியரிடம் ஒரு சில விஷயங்களை நாடி மூலம் கேட்டு பதிலை பெற்று தரவேண்டும் என்று வேண்டிக்கொண்டனர்.
"சரி! அமருங்கள்! உங்களுக்கு முன்னரே வந்திருக்கும் அத்தனை பேருக்கும் நாடி வாசித்த பின் அவனுக்கு வாசிக்கிறேன்" என்று கூறி அமர சொன்னேன்.
அவன் நேரம் .......... அன்று காலையில் வந்து அமர்ந்த அவர்களை அன்று இரவு ஒன்பது மணிக்கு தான் அழைக்க முடிந்தது.
நாடியை வாசிக்க தொடங்கினேன். அவர் சொன்ன விஷயங்கள் அத்தனையும் அதிர்ச்சி தருவதாக இருந்தது!
சித்தனருள்......... தொடரும்!