வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
இன்றைய மஹாசிவராத்திரி அன்று எல்லோரும் இறையருள் பெற்று நலமாய் வாழ பிரார்த்திக்கிறேன். ஓம் நமசிவாய!
திரு.தேவராஜன் என்கிற அகத்தியர் அடியவர், நம் குருநாதர், கோடகநல்லூர் பெருமாள் பெயரில், ஒரு பாடல் தொகுப்பை இசை தட்டாக வெளியிட்டுள்ளார். மிக சிறப்பாக வந்துள்ள அந்த பாடல்களை, கோடகநல்லூர் பெருமாள் சன்னதியில் சமர்ப்பித்தபின், சென்னை தியாகராஜ நகரில் உள்ள அகத்தியர் ஆலயத்திலும் குருவின் பாதங்களில் சமர்ப்பித்து வெளியிட்டிருக்கிறார்.
இசை தட்டில் வெளியிட்ட ஐந்து பாடல்களையும், அடியேனுக்கு அனுப்பித்தந்து, அனைத்து அடியவர்களும் கேட்டு பயனுற, அகத்தியப்பெருமானின் சித்தன் அருள் வலைப்பூவில் வெளியிட கேட்டுக்கொண்டுள்ளார். முதல் பாடலை வீடியோவாக உருமாற்றி கீழே தருகிறேன். பாடல் வரிகள் கீழே தரப்பட்டுள்ளது.
பாடல்: உம்மை தேடி சென்ற வழிகள்
பாடியவர்:D.பிரவீன் சக்ரவர்த்தி
இசை:R.தேவராஜன்
இயற்றியது-திரு.அக்னிலிங்கம்
குருவுக்கு தக்ஷிணையாக பாடலை சமர்ப்பித்த திரு: R.தேவராஜன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை சமர்ப்பித்து, பாடிய திரு.பிரவீன் சக்ரவர்த்தி மேலும் இதுபோல் நிறைய பாடல்களை குருவின் மீது இயற்றி/பாடி வெளியிட வேண்டும் என வாழ்த்துகிறேன். நீங்களும் பாடலை கேட்டு, அவருக்கு உங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன்.
உம்மை தேடிக் சென்ற வழிகள் என்னை
அழைத்து சென்றது ஆண்டவனிடம்
குரு தக்ஷிணை கொடுக்க உம்மை
ஓடித் தேடிய அப்பொழுது
"நல்லது செய்ய பழக
வாய்ப்பளித்தது இறைவன் என்றீர்!"
அவனுக்கு நன்றி கூறு
அதுவே குருதக்ஷிணை ஆகும்
இறையே அனுமதிக்கா எதுவும்
எங்கள் தட்சிணையாகாதென்றீர்.
மனமது செம்மையானால்
மந்திரம் செபிக்கவேண்டா!
மனமது செம்மையாகிட
ஆசைகளை அறுமீன்காள் என்றீர்
கரையேரா ஆசைகள் எல்லாம்
வாசனையாய் மாறுமென்று
கடவுளை நாடிச்செல்ல
கடத்திவிட மறுத்ததேனோ!
உங்களின் தரிசனம் கூட
நியாயமாய் மறுக்கப்பட
இருமுறை சன்னதி வந்தும்
கதைவடைத்தது அது ஏனோ!
அனுபவமே நான்தான் என்று
ஆதியில் இறையே உரைக்க
அனுபவம் தேடிச்சென்று
இறையை கண்டு கொண்டேன்.
மேலான தர்மங்கள் மனிதருக்கு உரைத்திட
இறைவன் அனுமதிதான் என்றும் தேவை என்றீர்
மனிதருக்கு புரியும் விதமாய்
மனதினை மாற்றியமைக்க
குருவருள்தான் என்றும் வேண்டும் அய்யா!
இனியுள்ள வாழ்க்கையில்
குரு உம்மை அடிபணிந்து
உம் திருப்பாதம் சிரசில் ஏந்தி
மகிழ்ந்திட வாய்ப்பளிப்பீர்!
சித்தன் அருள்............தொடரும்!
