​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 4 November 2020

சித்தன் அருள் - 955 - அந்தநாள் >> இந்த வருடம் - 2020 - கோடகநல்லூர்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

வருடா வருடம், அகத்தியப்பெருமான் ஒரு குறிப்பிட்ட முகூர்த்தத்தில் பெருமாளுக்கும், தாயாருக்கும் அபிஷேக/பூஜை, செய்கிற அந்தநாள் >> இந்த வருடம் - 2020 - கோடகநல்லூர் நீளா பூமி தேவி சமேத பிரஹன்மாதவர் கோவிலில், பெருமாள்  அருளினால் மிக சிறப்பாக நடந்தது, என பல வழிகளில் வந்த தகவல்கள் படி புரிந்து கொள்ள முடிந்தது.  அடியேனால் ஒரு சிறு உழவாரப்பணியையும் செய்ய முடியவில்லை என்பது மிக நிதர்சனமாக, சில விஷயங்களை உணர்த்தியது. சில நாட்கள் பின் செல்வோம்.

அக்டோபர்  மாதம் முதலே, கோடகநல்லூரை பற்றி யோசிக்கத்தொடங்கினேன் என்பது உண்மை. ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கும் முன், எப்பொழுதும் அகத்தியப்பெருமானிடம் உத்தரவு கேட்பது அடியேனின் வழக்கம். ஆனால் இம்முறை, எப்பொழுது கேட்டாலும், கை உயர்த்தி ஆசிர்வதிப்பது மட்டுமே தெரியுமே தவிர, மௌனம்தான் நிலவியது. ஒரு சில நாட்களில் சில உண்மைகள் புரியத் தொடங்கியது. ஆம்! அபிஷேக பூஜை நடக்கும், அகத்தியர் அடியவர்கள் பங்கு பெறுவர், ஆயினும், அடியேனுக்கு அனுமதி இல்லை என்று உணர்ந்தேன்.

அகத்தியர் எப்பொழுதுமே ஒரு தனி வழியை தொடருவார். அதை பல முறை உணர்ந்திருக்கிறேன். கோடகநல்லூர் பூஜை என்பது, அவருக்கு மிக முக்கியமான ஒன்று, ஆனால், அதை நடத்துகிற அடியவர்களை மாற்றிக் கொண்டே இருப்பார். இங்கு, இன்று அடுத்த தலைமுறையை, அவர் நடத்தும் அபிஷேக பூசைக்குள் நுழைத்து, அவர்களுக்கும் வளர வாய்ப்பளிக்க விரும்புகிறார் என தோன்றியது.

இதை மனதில் வைத்துதான், "சித்தன் அருளில்" யாரோ கோடகநல்லூர் அபிஷேக பூசையை பற்றி கேட்டவுடன், அடியேனால் வர முடியும் என்று தோன்றவில்லை, எல்லையில் பிரச்சினைகள் இருக்கிறது; தமிழ் நாட்டில் வசிக்கும் அகத்தியர் அடியவர்கள் ஒன்று கூடி நடத்தலாம் என்று, பதில் கூறினேன். அதற்கு ஏற்றார் போல், அடியேனை சுற்றி இருந்தவர்கள் அனைவரும் விலகி சென்றனர். 

இந்த வருடம், அபிஷேக பூஜையை செய்ய வேண்டும் என்கிற ஆசையை, அடியேன் மனதிலிருந்து அறுத்தேன். அமைதியானேன். 

இனி, பூஜையை நடத்திக் கொள்ள வேண்டியது, உங்கள் கையில் உள்ளது என்று, நம் குருநாதரிடம் மானசீகமாக கூறிவிட்டு மேலும் அமைதியானேன்.

இரு வாரமாயிற்று! குருநாதரிடம் இருந்து  எந்த தகவலும் இல்லை. பூஜை அறையில் அவரை பார்க்கும் பொழுது "ஓம் அம் அகத்தீசாய நமக!" என்கிற ஜபம் மட்டும்தான்.

ஒரு நாள் த்யானத்தில் அமர வேண்டும் என்கிற எண்ணம் வந்தது. அமைதியாக பூசை அறையில் அமர்ந்து, த்யானத்தில் நுழைந்த பொழுது, "என் சேயவள் கேட்பாள்! உனக்கு சொல்லித் தந்த பூஜை முறையை சொல்லிக்கொடு! அபிஷேக பூஜைகள் அன்று நடக்கும்! நான் பார்த்துக் கொள்கிறேன்!" என்றார்.

"உத்தரவு!" என்கிற ஒரு பதிலை கூறி, தியானத்தை நிறுத்திக் கொண்டேன்.

யார் கேட்பார்கள்? என் சேயவளாக வரப்போவது யார் என்று கூட தெரியாமல், அமைதியாக காத்திருந்தேன்.

ஒரு வாரத்தில், குருநாதர் கிளப்பிவிட்ட "சேயவளாக" திருமதி லட்சுமி என்பவர், பூசைக்கான முறைகளை கேட்டு ஈமெயில் போட்டிருந்தார். பூஜைக்கான விஷயங்களை தெரிவித்தால், தான் ஏற்று, சிரம் மேற்கொண்டு தாத்தாவின் அருளால் (அகத்தியரை தாத்தா என்றழைப்பாராம்) செய்ய முடியும் என்றார்.

பூஜை முறைகளின் வழிகள் அர்ச்சகருக்கு தெரியும் என்றாலும், நாம் ஓடி ஓடி வாங்க வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு.

அனைத்தையும் ஒரு ஈமெயிலில் தட்டச்சு செய்து தெரிவித்தேன். முதலில், அர்ச்சகர் ஒத்துக் கொள்ள வேண்டும். ஆதலால் அவரிடம் முதலில் பேசவேண்டும். பின்னர் பிற ஏற்பாடுகள், என்றேன்.

அனைத்தையும் படித்துவிட்டு "செய்கிறேன்" என்றார்.

அடியேனின் மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்தேன்!

இனி, அவர் செயல். பொறுமையாக அமர்ந்து வேடிக்கை பார்ப்பதே நம் வேலை என்று உணர்ந்தேன்.

அபிஷேக பூஜையை ஏற்று நடத்திய திருமதி லட்சுமியின் வார்த்தைகளில் இனி கேட்போம்.

ஓம் ஸ்ரீ அகத்திய பெருமான் திருவடிகளே போற்றி!

நான் வருடா வருடம், கோடகநல்லூரில், அகத்தியப் பெருமான், பெருமாளுக்கும் தாயாருக்கும் நடத்தும் அபிஷேக பூஜையில் கலந்து கொள்வேன். 

இந்த வருடம், 29.10.2020 அன்று நடந்த அபிஷேகத்திற்காக இரண்டு மாதங்கள் முன்பாகவே இரயிலில் டிக்கெட் பதிவு செய்ய முயன்றேன். அபிஷேகம் நடக்கும் நாள் 29.10.2020. ஆதலால், வழக்கம் போல் 28.10.2020 அன்று பதிவு செய்தால், பூஜை அன்று கோடகநல்லூரில் இருந்துவிடலாம் என்று ஒரு எண்ணம். முன்பதிவு செய்ய முயன்ற பொழுது, கிடைக்க வில்லை. தொடர்ந்து 26, 27 மற்றும் 28 தேதிகளில் டிக்கெட் இல்லை. ஆகவே 24.10.2020 அன்று தான் கிடைத்தது. நான்கு நாட்கள் முன்னதாகவே செல்வதால் நம்பிமலை, திருக்குறுங்குடி சென்று பெருமாளை தரிசித்து விட்டு பின்பு புதன்கிழமை கோடகநல்லூர் செல்லலாம் என்றிருந்தேன்.

ஆனால் சித்தன் அருளில், இங்கு நிலவும் அசாதாரண சூழ்நிலையால் இம்முறை நடக்குமா என்று தெரியவில்லை என்று தெரிவித்திருந்தார். மிகவும் கவலையாக இருந்தது. ஆகவே நான் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது கேரளாவில் நிலவும் சூழ்நிலையால் வர இயலாது என்று தெரிவித்தார். நான் தமிழகத்தில் இருப்பதால் பூஜைக்கான ஏற்பாடுகள் செய்வதற்கு அவரின் வழிநடத்தலை வேண்டினேன்.

என்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்ற விவரங்கள் தெரிவிக்கப்பட்டது. 

அதில் கூறியபடி, அர்ச்சகரை தொடர்பு கொண்ட பொழுது  அவர் செய்யலாம் எனறு கூறினார். 

அப்பொழுது தான் உயிர் வந்தது. ஆனால் வெளிப்பிரகாரத்தில் வைத்து செய்ய முடியாது என்றும், உள்ளேயே சுவாமி சன்னதிக்கு முன் வைத்து செய்வதாக கூறினார். 

எப்படியோ பெருமாளுக்கு அபிஷேகம் நடக்க வேண்டும் அதுதான் எல்லோருடைய ஆசை, வேண்டுதல். ஒவ்வொருவராக நாங்கள் ஏற்பாடுகள் செய்ய தொடங்கினோம். எங்கள் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் நண்பர்கள் உதவியுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

திடீரென்று அர்ச்சகர் ஒரு வாரம் முன்பு தொலைபேசியில் அழைத்து, அவருக்கும், அவருடன் கோவிலில் பணிபுரியும் 10 பேருக்கும் "கொரோனா ஆய்வு" செய்திருப்பதாகவும், அதன் முடிவு இரண்டு நாட்களில் தெரியும் என்றும், அதில் தொற்று உறுதி செய்யப்பட்டால், தான் 14 நாட்கள் வெளியில் வரமுடியாது என்றும் கூறினார். 

எனக்கு தூக்கி வாரி போட்டது. அர்ச்சகர் வராவிட்டால் கோவில் திறக்க முடியாது. அபிஷேகம் எவ்வாறு செய்வது?

இது என்ன புது சோதனை என்ற எண்ணம் மனதுள் வந்தது. தாத்தாவிடம்தான் வேண்டிக்கொண்டு, பிரார்த்தனையை சமர்பித்தேன்.

சித்தன் அருள்............ தொடரும்!