​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 23 October 2020

சித்தன் அருள் - 952 - ஆலயங்களும் விநோதமும் - ஸ்ரீ அனந்தபுரா கோவில், காசர்கோடு, கேரளா!


திவாகர முனிவர் பல காலம் ஸ்ரீமன் நாராயணனை குறித்து தவமிருந்தார். அவரின் தவத்தில் மனமிரங்கி, நாராயணர் ஆதிசேஷன் மேல் பள்ளிகொண்டு காட்சியளித்து என்ன வரம் வேண்டும் என்றார்.

"தங்களின் இந்த அனந்தசயன உருவத்தில் ஒரு விக்கிரகம் செய்து நித்திய பூசைகள் செய்துவர அருளவேண்டும்" என்றார்.

"அப்படியே ஆகட்டும்" என அருளிய இறைவன், அனந்தசயன ரூபத்தில் ஒரு விக்கிரகத்தை அளித்தார்.

அதை வைத்து நித்ய பூசைகள் செய்து வந்தார். ஒரு சிறுவன் அவருக்கு பூசைகளுக்கு பூ பறிக்க, உதவி செய்ய என வந்தான். நித்ய பூசைகள் நல்லபடியாக நடந்து அந்த இடம் செழிப்புறவே, விதியின் வலிமையால், திவாகர முனிவர் இறுமாப்புற்றார்.

இதை அறிந்த இறைவன் அவரின் மனநிலையை மாற்றும் எண்ணத்துடன் திருவிளையாடல் புரிய எண்ணம் கொண்டார்.

ஒருநாள் பூசையின் பொழுது, அவர் ஜபத்திற்காக நீர் எடுத்துவைத்த பாத்திரத்தை, சிறுவன் விளையாட்டாக தட்டிவிடவே, இறுமாப்பில் இருந்த முனிவருக்கு கோபம் வந்தது.

வேகமாக எழுந்து வந்து அந்த சிறுவனை அடிக்கப் போகவே, அவன் ஓடிச்சென்று, மண்மேட்டில் தோன்றிய ஒரு குகைக்குள் பூப்பிளந்து மறைந்து போனான். திடீரென்று தோன்றிய குகையை கண்டதும், அதிசயித்த முனிவர் ஒரு அசரீரியால் நிறுத்தப்பட்டார்.

"முனிவரே! யாமே சிறுவனாக உம்மிடம் வந்தோம். உம் செருக்கை சுட்டிக்காட்டி திருத்திட எண்ணினோம். இனி என்னை தரிசிக்க வேண்டுமாயின் "அனந்தன் காட்டிற்கு" வருக" என்றார் இறைவன்.

நடந்த விஷயங்களை உணர்ந்து மிக வருந்திய முனிவர், அனந்தன் காடு எங்கிருக்கிறது என்றறியாமல், அந்த குகைக்குள் புகுவதுதான் சரி என தீர்மானித்து, உள்ளே புகுந்தார்.

குகையை விட்டு வெளியே வந்தது, அனந்தன்காடு என்கிற இடத்தில்.

அந்த அனந்தன் காடு என்கிற இடம்தான் இன்றைய "திருவனந்தபுரம்".

சரி! இங்கு நாம் தெரிந்துகொள்ள என்ன இருக்கிறது.

  • அனந்தபுரா கோவில், இன்றைய திருவனந்தபுர அனந்த பத்மநாபா சுவாமி கோவிலின் மூலஸ்தானம்.
  • சிறுவனும், முனிவரும் புகுந்து மறைந்த குகை இன்றளவும் அங்கு உள்ளது.
  • முனிவர் குகைக்குள் மறைந்த உடன், அவர் பூசித்து வந்த அனந்தசயன நாராயணர் விக்கிரகத்தை, நீர் சூழ்ந்து குளம் உருவானது. பின்னர் அங்கு ஒரு கோவில் உருவாக்கப்பட்டது.
  • இந்த கோவில் குளத்தில் 70 ஆண்டுகளுக்கு முன் ஒரு முதலை வந்தது. அது இன்றளவும் அங்குள்ளது.
  • அந்த முதலை, சுத்த சைவம்.
  • கோவிலிலிருந்து இரண்டு நேரம் கொடுக்கப்படும் சோற்று உருண்டையை மட்டும்தான் உண்ணும்.
  • யாரையும் தொந்தரவு செய்வதோ, அராஜகம் பண்ணுவதோ கிடையாது.
  • மிகுந்த சாந்த ஸ்வரூபம். அது உறையும் குளத்தில் நிறைய மீன்கள் இருக்கிறது. ஆனால் அது ஒரு மீனைக்கூட தின்றதில்லை என்கிறார்கள்.
  • அந்த கோவிலில் பூஜை செய்யும் பூஜாரியின் வார்த்தைக்கு மிகவும் கட்டுப்பட்டது என்பது ஆச்சரியமான விஷயம்.
  • கோவில் பூஜாரி, அந்த குளத்தில்தான் தினமும் இருவேளை ஸ்நானம் செய்கிறார்.
  • பூஜாரி கொடுக்கும் உணவை உண்டுவிட்டு, அந்த குகைக்குள் புகுந்து காவல் காக்கிறது.
 
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...............தொடரும்!