அகத்தியப் பெருமான் உரைத்த "ஸ்ரீராம சரிதம்" மிக நன்றாகவே வளர்ந்து வந்தது. எந்த சூழ்நிலைகளை விலக்கவேண்டும், எதை சுட்டிக்காட்டி போதனை செய்யவேண்டும் என தீர்மானித்து, அகத்தியப் பெருமானே, ஒரு மாணாக்கனை வழி நடத்தி சென்றதை நினைத்தாலே உடல் புல்லரிக்கும். தெளியாத விஷயத்தைப் பற்றி கேட்கும் முன்னரே, அதற்கான விளக்கத்தையும், உடனேயே தந்து விடுவார். அற்புதமான ஆசிரியர் அவர்.
அந்த வார வியாழக்கிழமை அன்று ப்ரம்ம முகூர்த்தத்தில் எழுந்து உடலையும், மனதையும் சுத்தப்படுத்திக் கொண்டு, மூத்தோனையும், அனுமனையும் வணங்கி காத்திருந்தேன். அகத்திய பெருமான், நாடியில் வந்து கூறலானார்.
"ஒரு மனிதனின், வாழ்க்கை என்பது பலவிதமான சிந்தனைகளால் உருவாக்கப்பட்ட, சூழ்நிலைகளின் புற அழுத்தங்களை கொண்டது. அதன் நெளிவு, சுளிவுகளை தெரிந்து கொண்டால் ஒழிய, ஒரு மனிதனால் கரை ஏறுவது என்பது, முடியாத காரியம். "எல்லையில்லா பரம்பொருள்" என்று இறைவனை பற்றி கூறினால், அது எப்படிப்பட்ட உணர்வு அல்லது நிலை என்பதை உணர, அதுவாகவே மாறிவிடவேண்டும். இதை விவரிப்பது என்பது எங்கள் கையிலும் இல்லை. உணர வைக்க இறைவன் நினைத்தால் ஒழிய அது நடக்காது. எல்லோரும், அந்த நிலைக்கு வரவேண்டும் என்று நினைத்துதான், "புண்ணிய செயல்களை செய்யுங்கள், தர்மம் செய்யுங்கள், பற்றை அகற்றுங்கள், விதிக்கப்பட்ட கடமையை செய்யுங்கள், த்யானம் செய்யுங்கள், சித்தம் நிலைக்க வையுங்கள், அனைத்தும் இறைவன் செயல் என்றிருங்கள்" என்று கூறுகிறேன். எத்தனை பெரிய மகானாக இருந்தாலும், உடல் வலிமை பெற்றிருந்தாலும், ஒரு செயலால், பிறர் நிலை என்னவாகும் என்று ஒரு மணித்துளி யோசிக்காமல் செயல்பட்டால், லங்காபுரியை தீ வைத்து பின்னர் மனதளவில் அவஸ்தைப்பட்ட அனுமனின் நிலை தான், மனிதர்களுக்கும். இது எம் சேய்களுக்கு யாம் உரைக்கும் செய்தி" என்று பொதுவாக வாக்கை கூறிவிட்டு, சுந்தரகாண்டத்துக்குள் நுழைந்தார்.
"பரீட்ச்சையில் தோல்வி அடைந்தவர்கள், பதவியை இழந்தவர்கள், விதியினால் கஷ்டப்படுபவர்கள், அஷ்டம குரு, அஷ்டமச்சனி இருக்கிறவர்கள், சனி திசையில் ராகு புக்தி, கேது புக்தி நடக்கிறவர்கள், சூரிய தசையில் கேது, ராகு, சனி புக்தி நடக்கிறவர்கள், நொந்து போன உள்ளத்தோடு வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாமா, என்ற விரக்தியில் நடமாடுபவர்கள், தோல்விகளை தவிர வேறு ஏதும் அறியாத வியாபாரிகள், தொழில் அதிபர்கள், அத்தனை பேர்களும் 55 முதல் 57 வரை உள்ள சர்கங்களை விடாப்பிடியாக தினம் மூன்று தடவை பாராயணம் செய்து பார்த்தால், துன்பம், தோல்வி, பயம், விரக்தி அத்தனையும் தவிடு பொடியாகிவிடும். இது நிரந்தர உண்மை" என்ற தகவலை அளித்தார்.
இதுவரை அவர் விவரித்ததை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு வந்த எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. ஒரு மனிதனின் வாழ்க்கையில் உள்ள அத்தனை பிரச்சினைகளையும் தாண்டி வர உபாயங்களை இறை இத்தனை எளிதாக ஒரு காண்டத்துக்குள் வைத்து, தன் அருளையும் வழங்கியுள்ளதே. இதை விட மிகப்பெரிய பாக்கியம் மனிதனுக்கு எங்கே கிடைக்கப் போகிறது?
"ஆம்! அதுவே இறைவனின் எண்ணம் என்று முன்னரே யாம் உரைத்தோமே. சுந்தரகாண்டத்தின் எந்த ஸ்லோகத்தை, எவன், எந்த நல்ல ஒரு விஷயத்துக்காக வாசித்தாலும், அப்படி பாராயணம் பண்ணுகிற நேரத்தில், அவன், தான் அறிந்தோ, அறியாமலோ, அந்த இறையாக மாறிவிடமுடியும், இறையை உணர முடியும்" என்கிற சூட்சுமத்தையும் வெளிப்படுத்தினார்.
"மேலும், ஒருமுறை உணர்ந்துவிட்டால், பின் இந்த புவியில் அவனுக்கு என வேண்டியது ஒன்றும் இருக்காது, இல்லை என்பதே உண்மை. மனம் எதையும் வேண்டாது." என்றார்.
"58, 59 சர்கங்களை பாராயணம் செய்கிறவர்களுக்கு, இதுவரை செய்த பாபங்களுக்கு எல்லாம் விமோசனம் கிடைக்கும். எதிரிகளை பற்றிய பயம் விலகும். தெய்வ அனுகூலம் நெருங்கி வரும். தடங்கல்கள் ஒவ்வொன்றாக மறையும். சனிதோஷம் விலகும். ராகு, கேதுவினால் ஏற்படும் நோய்கள், கெடுதல்கள் இருக்கிற இடத்தை விட்டு ஒழியும். செய்வினை பலமற்றுப் போகும். தரித்திரம் விலகும். நின்று போன சுபகாரியங்கள் மறுபடியும் நடக்கும். தோல்வி வெற்றியாக மாறும். பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்கள்" என்றார் அகத்தியப் பெருமான்.
"வாழ்க்கையில் சில முக்கியமான முடிவை எடுக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருப்பவர்களும், நேர்மையாகச் செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களும், வில்லங்கம் இல்லாமல் செயல்பட 60, 61 சர்கங்களை படித்துவிட்டு துணிந்து செயலில் இறங்கலாம். சந்தோஷமாகவே எல்லாம் நடக்கும். சூரியனோடு, கேது உள்ள ஜாதக ராசிக்காரர்கள், சந்திரனோடு ராகு இருக்கும் பொழுது பிறந்தவர்கள், முக்கியமான முடிவை குடும்பத்திற்கும், பணிபுரியும் இடத்திற்கும் சொல்லக்கூடிய பொறுப்பில் இருப்பவர்கள், சந்திர திசையில் கேது புக்தி, சூரிய தசையில் ராகு புக்தி நடக்கிறவர்களுக்கும் மேற் கூறிய சர்கங்கள், மறுமலர்ச்சியையும், ஊட்டத்தையும் கொடுக்கும், நல்வழியைக் காட்டும், மனதில் நிம்மதி, சந்தோஷத்தைக் கொடுக்கும்" என்றார்.
இத்துடன் அன்றைய வகுப்பை நிறுத்திக்கொண்டு அகத்திய பெருமான் விடை பெற்றார்.
நானும், அமைதியாக த்யானத்தில் அமர்ந்தேன்.
சித்தன் அருள்................. தொடரும்.
