திரு.ஹனுமந்ததாசன் ஸ்வாமிகளின், முக தரிசனத்துக்காக அவர் படத்தை வெளியிட்ட பொழுது, நிறைய பேர் கருத்து தெரிவித்திருந்தனர். அதில், ஒருவர், "சுகம் தரும் சுந்தரகாண்டம்" என்கிற பெயரை உச்சரித்திருந்தார். அதை கேட்டதும், அந்த புத்தகத்தை, அவர் உருவாக்கிய பொழுது நடந்த ஒரு சில நிகழ்ச்சிகளை திரு.கார்த்திகேயன் அவர்களிடம் தெரிவித்திருந்தார். அதை அடியேனிடம் தெரிவித்த பொழுது, பின்னர் எப்போதேனும் ஒரு முறை நேரம் வரும் பொழுது தெரிவிக்கலாம் என்று ஒதுக்கி வைத்திருந்தேன். இத்தனை வருடங்களாக மனதை விட்டு விலகி இருந்த அந்த நிகழ்ச்சி இப்போது தெரிவிக்கப்படவேண்டும் என்பது அகத்திய பெருமானின் விருப்பம் போல. விளக்கியது அனைத்தும் அப்படியே மனக்கண் முன் விரிந்தது. ஒவ்வொரு வார்த்தையும், என் நண்பர் கொட்டியது நினைவுக்கு வர, அதை அப்படியே உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
இனி கார்த்திகேயன் அவர்களின் நண்பரின் பார்வையில் இருந்து இதை பார்ப்போம்.
தினமும் அதிகாலை ப்ரஹ்மமுகூர்த்தத்தில் எழுந்து உடலையும், மனதையும் சுத்தி செய்து கொண்டு, த்யானம் ஜபம் போன்றவை செய்து அகத்திய பெருமானை அடிபணிந்து, ஆராதித்து வந்த பொழுது ஒரு நாள் ஏனோ ஒரு வினோதமான எண்ணம் தோன்றியது. அதை அகத்தியரிடமே கேட்டு அருள் பெறலாமே என்று, பூசை அறையில் இருந்த நாடியை எடுத்து வேண்டுதலை கொடுத்த பின் அகத்தியர் பதிலுக்காக காத்திருந்தேன்.
கேட்டது இது ஒன்று தான்.
"ஏற்கனவே இதை கேட்டுவிட்டேன். நேரம் வரும் போது, அருளுகிறேன் என்றீர்கள். காலமும் கடந்து கொண்டிருக்கிறது. எத்தனையோ பேர் ஸ்ரீராமனின் சரிதத்தை எழுதியிருக்கிறார்கள். தாங்கள் அருள் புரிந்து, அடியேனும் அவர் காதையை எழுதி வெளியிட உதவி செய்யக் கூடாதா?" என்றேன்.
"அவசர புத்தி உனக்கெதற்கு? நேரம் நெருங்கி விட்டது. நானே அதை பற்றி உன்னிடம் கூறலாமென்றிருந்தேன். நீயே கேட்டுவிட்டாய். வரும் குருவாரத்தன்று, ப்ரம்ம முகூர்த்தத்தில், இறைவன் அருளால் அதை தொடங்கலாம். இறைவனே உத்தரவு கொடுத்துவிட்டார். யாம் சொல்லச்சொல்ல, கேட்டு எழுதி வா. தினமும் சொல்வதை பதிவு செய்யும் முன் மூத்தோனையும் வணங்கி, வாயு புத்திரனையும் வணங்கி அருள் பெற வேண்டும். இவர்கள் இருவரின் அருளுடன், இனிதே அனைத்தும் நிறைவேறும். எமது ஆசிகள் உரித்தாகுக" என்று அகத்திய பெருமான் கூறிய பொழுது, என்னாலேயே என் கண்களை நம்ப முடியவில்லை. நாடியை அதன் இடத்தில் வைத்துவிட்டு சாஷ்டாங்கமாக கீழே விழுந்து அகத்தியரை வணங்கி, நன்றியை கூறினேன்.
அறையை விட்டு வெளியே வந்ததும் அந்த அதிகாலை நேரத்திலேயே, உடலெங்கும் வியர்த்துவிட்டது. அத்தனை சந்தோஷ படபடப்பு.
மனம் இருப்பு கொள்ளவில்லை. அங்கும், இங்கும், குறுக்கவும், நெடுக்கவுமாக நடந்து யோசிக்கலானேன். இத்தனை பாக்கியம் யாருக்கு கிடைக்கும். எத்தனை வருட வேண்டுதல். அகத்திய பெருமான் உரைக்கிறேன் என்று விட்டாரே. அவர் என்ன சொல்கிறாரோ, அதுவே எழுதப்படவேண்டும். ஏன்? எப்படி? எதற்கு என்ற கேள்விகளெல்லாம் தேவை இல்லை. நான் ஏதாவது கேட்கப்போக, அவர் கோபத்தில் இனி உரைக்கமாட்டேன் என்று கூறிவிட்டால்? இனிமேல் ரொம்பவுமே பொறுமையாக இருக்க வேண்டும். அகத்தியரே ஸ்ரீராமரின் சரிதத்தை உரைக்கிறார் என்றால், மற்ற சித்தர்கள் நிச்சயமாக அதை கேட்க வருவார்கள். ஆதலால், அவர் ஸ்ரீராமரின் சரிதத்தை உரைப்பதை பூசை அறையிலே வைத்து எழுத வேண்டும். எழுதி முடித்து, நிறைவு பெற்ற பின் தான், மூன்றாவது மனிதரே அறிய வேண்டும். எல்லோருக்கும் இது ஒரு ஆச்சரிய பரிசாக இருக்க வேண்டும், என்றெல்லாம் மனதுள் எண்ணங்கள் ஓடியது.
வியாழக்கிழமைக்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்க, அகத்திய பெருமான் பல கோவில் சன்னதிக்கும் என்னை விரட்டி வைத்து, இறைவனின் அருளை பெற்று வரச் சொன்னார். எங்கும், எல்லா கோவில்களிலும் மிகுந்த மரியாதை, உபசரிப்பு. எத்தனை கூட்டமிருந்தாலும், யாரேனும் ஒருவர் என்னை அடையாளம் கண்டு கொண்டு, தனியே அழைத்து சென்று இறைவனின் தரிசனத்தை என் மனம் திருப்தி அடையும் வரை பெற்று தந்தனர். நடப்பதை கண்டு எனக்கே ஆச்சரியமாக இருந்தது.
"நம்மையும் விரட்டிவிட்டு, போகும் இடத்திலெங்கும், முன் ஏற்பாட்டை செய்து வைத்திருக்கிறாரே, அகத்திய பெருமான்" என்று மனதுள் நினைத்துக் கொண்டேன். செல்லும் இடமெங்கும் இறைவனின் தரிசனம் கிடைக்க, கிடைக்க, உடலெங்கும் பூரிப்பு, மனமெங்கும் பரவசம்.
நனைந்த காகிதமாக மனமும், உடலும் மென்மையான நிலையில் புதனன்று வீடு சேர்ந்து, பூசை அறையில் புகுந்து அகத்தியப் பெருமானுக்கு நன்றி சொல்லி, "நாளை காலை ப்ரம்ம முகூர்த்தத்தில் உங்கள் வாக்கில் ஸ்ரீ ராமனின் சரிதத்தை கூறி, அடியேனுக்கு எழுதுகிற பாக்கியத்தை அருளுங்கள்" என்று பிரார்த்தனையை வைத்து விட்டு,
எப்பொழுது ப்ரம்ம முகூர்த்த வேளை வரும் என்று, படுக்கையில் படுத்தபடி யோசனையில் இருந்தேன்.
நடுவில் "நல்லோருக்குப் பெய்யும் மழை" என சம்பந்தமே இல்லாமல் ஒரு வாக்கியம் யோசனையில் வந்து போனது. இது என்ன இப்படி ஒரு யோசனை. இதன் அர்த்தம் என்ன? என்று நீண்ட நேரம் யோசிக்கும் பொழுதே, என்னை அறியாமல் உறங்கிப் போனேன்.
நாம் என்ன வேண்டுமானாலும் யோசிக்கலாம், எதிர் பார்க்கலாம். ஆனால் எந்த நிகழ்ச்சிகளின் முடிவு எப்படி இருக்கவேண்டும் என்பதை இறைவனும், சித்தர்களும்தான் தீர்மானிப்பார்கள். நாம் எதிர்பார்ப்பது போல் அல்லாமல் வேறு விதமாக இருந்தால், அதற்கும் ஒரு காரணம் இருக்கும், என்று மனித மனம் ஒரு பொழுதும் ஒப்புக் கொள்ளாது.
இறை வழியில் தெளிவாக செல்பவர்கள் இதை நன்றாக அறிந்தவர்கள். தொடக்க நிலையில் இருப்பவர்கள் அவர்கள் எதிர் பார்ப்பதுபோல் இல்லாமல் நிகழ்ச்சிகள் நடந்தால், இது என்ன இறைவன் அருள் என்று அசந்து போவார்கள். அத்துடன் முயற்சியையும் கைவிட்டுவிடுவார்கள். அது ஒரு குறிப்பிட்ட சோதனை காலம் என்பதை உணர்வதில்லை.
ஆனால், அகத்தியப் பெருமானோ, ஒரு திடமான தீர்மானத்தில் இருந்தார் என்று, மறுநாள் காலை ப்ரம்ம முகூர்த்தத்தில், நாடியில் வந்து பேசிய பொழுது தான் உணர்ந்தேன்.
சித்தன் அருள்................. தொடரும்!
