​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 2 January 2017

சித்தன் அருள் - 554 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!

புத்தாண்டு - 2017

வணக்கம் அகத்தியர் அடியவர்களே! இந்த புத்தாண்டு உங்கள் வாழ்வில் அனைத்து அருளையும் வழங்கட்டும் என்று அகத்தியப் பெருமான், இறைவனிடம் வேண்டுதலை சமப்பித்துள்ளேன். அனைவரும் அதை அவர்களிடமிருந்து பெற்று சந்தோஷமாக, அமைதியாக, மேலும் அவர்கள் அருள் கிடைக்கும்படியான வளர்ச்சியை பெறவும் வாழ்த்துகிறேன். இந்த ஆண்டின் இனி வரும் ஒவ்வொரு நாட்களும், வினாடியும் அகத்தியர் அருளுடன் வந்து சேரட்டும்.

அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இகுதொப்ப யாங்கள் அடிக்கடி கூறுவதுபோல், உண்ணுகின்ற உணவு அல்லது பருகுகின்ற மோரிலே உப்பின் தன்மை அதிகமாகிவிட்டால், அந்த அதிகமாக உள்ள உப்பை மட்டும் பிரித்தெடுப்பது கடினம். ஆனால், அதற்கு பதிலாக சிறிது நீரை சேர்த்தோ அல்லது சிறிது மோரை சேர்த்தோ அந்த உப்பை சரி செய்வது போல, ஒரு மனிதன், கர்ப்ப கோடி காலம்  எடுத்து சேர்த்த பாவத்தை மட்டும், அவனை விட்டு பிரிப்பது என்பது கடினம். ஆனால் அதற்கு பதிலாக, புதிதாக பாவம் செய்யாமலும், அதாவது புதிதாக உப்பை சேர்க்காமலும், சிறிது நீரையோ, மோரையோ சேர்ப்பதுபோல, புண்ணியத்தை அதிகமாக சேர்த்துக் கொண்டு வந்தால், அகுதொப்ப அந்த உப்பின் தன்மை சமத்துவம் பெறுவது போல, அந்த பாவத்தினால் வரக்கூடிய விளைவுகள் அவன் தாங்கக்கூடிய வண்ணம் இருக்கும். நன்றாக கவனிக்க வேண்டும். பாவம் இங்கே குறைவதில்லை. பாவம் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் சேர்த்த மோரின் அளவு அதிகமானதால், உப்பின் தன்மை தெரியாதது போல, சேர்த்து வைத்த புண்ணியத்தின் பயனாக, அல்லது சேர்க்கின்ற புண்ணியத்தின் பயனாக, பாவத்தின் தாக்கம், அவன் தாங்கும் வண்ணம் அமைந்துவிடுகிறது. அவ்வளவே. இந்த கருத்தை மனதில் கொண்டு, எம்மை நாடுகின்ற ஒவ்வொரு மனிதனும், (அப்படியென்றால் நாடாத மனிதன் செயல்படவேண்டாமா என்று வினவ வேண்டாம்) யாராக இருந்தாலும், அப்படி ஒரு மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால், வாழ்க்கை என்றும் உயர்வாக, இனிமையாக, திருப்தியாக, சந்தோஷமாக, சாந்தியாக இருக்கும். ஆசிகள்!