அகத்தியப் பெருமான் அருள் வாக்கு
ஒருவனுக்கு அதிக செல்வம், ஒருவனுக்கு குறைந்த செல்வம், ஒருவனுக்கு செல்வமற்ற நிலை, இவ்வாறு இருப்பதன் காரணம் - இறைவனுக்கு எந்த பேதமுமில்லை. அவனவன் செய்த பாவ, புண்ணியத்தின் பலன்தான் காரணம். புண்ணியத்தின் பலனாக கிடைத்த செல்வத்தை வைத்து மேலும் புண்ணியத்தை சேர்க்காமல், பாவத்தை சேர்த்துக் கொண்டால், பிறகு எத்தனை பிறவிகள் எடுத்தாலும் செல்வம் என்பது அவனுக்கு கிட்டாப் பொருளாகவே போய்விடும். அதை உணர்ந்து, "பலருக்கு கிடைக்காத வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது. எத்தனையோ மாந்தன், நல்ல கல்வி கற்றும், பணியில்லாமல் அலையும் பொழுது, நமக்கு நல்ல பணியை இறைவன் தந்திருக்கிறான். அந்த பணியை, செவ்வென, நேர்மையாக செய்து, அதன் மூலம் கிடைக்கும் தனத்தை, நமக்கும் பயன்படுத்திக் கொள்வோம், நம்மை சார்ந்தவர்களுக்கும் பயன்படுத்துவோம்" என்று எண்ண வேண்டும். அதனை விட்டு விட்டு, "இந்த தனம் எனக்காக இறைவன் தந்தது. நான் உழைத்து ஈட்டியது. இதை எதற்காக பிறருக்கு தரவேண்டும்? அவனவன் தலையெழுத்து, விதி, அவன் கஷ்டப்படவேண்டும் என்று இருக்கிறது" என்றெல்லாம் எண்ணி ஒருவன் சும்மாயிருந்தால், வாளாயிருந்தால் அவனுக்கு காலப்போக்கில், சேமிப்பு இருக்கும் வரை நல்ல வாய்ப்பு இருக்கும், அதன் பிறகு குறைந்து விடும். எனவே, ஒரு மனிதன் இறை வழிபாடு செய்கிறானோ இல்லையோ, தன்னுடைய உடலில் உள்ள அணுவில் எல்லாம், தர்ம சிந்தனை பரவும்படி செய்ய வேண்டும். "தர்மத்தை செய்" என்று சொல்லி செய்தால் கூட தர்மத்திற்கு ஒரு களங்கம்தான். ஒரு மனிதன் சுவாசிப்பது போல, அன்னம் ஏற்பது போல, செயல்களை செய்வது போல, தர்மம் என்பது இயல்பாக இருக்க வேண்டும்.
